Thursday, 6 February 2025

🫕 உணவு ஜோடிகள்

#ஆஹா_என்னப்_பொருத்தம்

வெளிநாட்டு ஆண் அல்லது பெண் நமது இந்தியர்களை திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடிகளை நாம் வியந்து பார்ப்போம் அல்லவா! அப்படி உணவுகளிலும் வித்யாச ஜோடிகளைப் பற்றித் தான் இந்தப் பதிவே! தமிழர்களின் உணவு ரசனை எத்தகைய சிறப்பானது என்பதற்கு ஒரு சோறு பதம் தான் இந்தப் பதிவு..!

☕️ டீ - மிக்ஸர் - முறுக்கு 🥨

தமிழ்நாட்டு டீக்கடைகளை வித்யாசமான உணவு ரசனைகளின் ஊற்று எனலாம்! இங்கு தான் பலப்பல புது காம்போக்கள் உருவாகின்றன! உணவுகள் பற்றிய விஞ்ஞானத்தில் தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான எடிசன்கள் பிறந்து இருக்கின்றனர் என்றால் அது மிகையில்லாதது! நம்ம ஊரு டீக்கடை பலகார வகைகளே அதற்குச் சான்றாகும்!

டீக்கடை பலகாரங்கள் பற்றி வேறு பதிவில் பார்ப்போம்! இப்போ வித்யாச காம்போ! க்ளாஸில் சூடான டீ வாங்கி அதில் கைப்பிடி மிக்ஸரை அள்ளிப் போட்டு குடிக்கும் அந்த யோசனை முதலில் யாருக்கு வந்ததுனு சரித்திர சான்றுகள் ஏதுமில்லை! டீ&மிக்ஸரா கேட்க ஒரு மாதிரியா இருந்தாலும் நல்ல ருசியான காம்போ இது!

பொடி மிக்ஸரா இல்லாம கொஞ்சம் மோட்டாவான மிக்ஸர் அதில் உள்ள நிலக்கடலை பருப்பு, கடலை பருப்பு சகிதம் தேயிலையின் மணமும், இனிப்பும் மிக்ஸரின் காரமும் நமது நாவில் இணையும் போது அட! சொல்ல வைக்கும்! பின்னே மனைவி அமெரிக்காவா இருந்தாலும் அவளும் பெண் தானே! டீயில் மிக்ஸருக்கு பதில்..

காராபூந்தி, காராசேவு போட்டு ருசிப்பவர்களும் இருக்கிறார்கள்! மதுரையில் தேன் குழல் போல இருக்கும் அரிசி முறுக்கை ஒரு நொறுக் நொறுக்கி டீயில் போட்டு குடிப்பார்கள்.சுருள் சேவு, பட்டை சேவு போட்டுக் குடிக்கும் பழக்கமும் பாண்டிய நாட்டின் வழக்கமாகும்! அசட்டு இனிப்பான அச்சு முறுக்கு, இனிப்பு சேவு போட்டு..

டீ குடிப்பவர்களும் ஏராளம்! டீ மட்டுமின்றி பாலில் இதை போட்டுக் குடிப்பவர்களும் உண்டு! டீ க்ளாஸில் மேலாகப் போட்ட மிக்ஸரை முதலில் டீயோடு மொறு மொறுன்னே ருசிப்பார்கள்! டீ குடித்து முடிக்கும் போது மிக்ஸர் டீயில் நன்கு ஊறியிருக்கும். அதை லாவகமாக ஒரு ஆஃப்பாயிலை வாயில் கவிழ்ப்பது போல..

க்ளாசோடு வாயில் கவிழ்த்துவிட்டு பெருமிதத்துடன் தங்கள் உதடுகளை துடைக்கும் ஸ்டைல் தென் தமிழகத்திற்கே உரித்தான ஸ்டைலாகும்! இந்த டீ - மிக்ஸர் - முறுக்கு காம்போவை தென் தமிழ்நாட்டின் டீக்கடை மரபுன்னு கூட சொல்லலாம்!

🌮 பூரி - சாம்பார் - சட்னி 🥘

சேர்த்த ஜோடி சேட்டு வீட்டுப் பொண்ணா இருந்தாலும் எப்படி இரு மனங்கள் கலந்ததோ அப்படி வட இந்திய தென் இந்திய சமையல் கலையும் சங்கமித்த இடம் தான் இந்த பூரி - சாம்பார் - சட்னி! வட இந்தியாவிலேயே பூரி சப்பாத்திக்கு தால் செய்யும் பழக்கம் உண்டு இதனால் பூரி சாம்பார் காம்போவில் பெரிய வித்யாசம் இல்லை!

ஆனா பூரிக்கு சட்னி ஒரு வித்யாசமான இணை! பூரி, சப்பாத்தி, ஏன் புரோட்டாவுக்கு கூட சட்னி தொட்டுகிட்டது நாங்க தான்னு கோவை மக்கள் காலரை தூக்கிவிட்டுக்குறாங்க! ஆனா அந்தப் பெருமை நெல்லைக்கு தானாம்! அங்கு சைவப்பிள்ளை உணவு மெஸ்கள் அதிகம்! பொடி தோசை வகைகளின் தாய்வீடும் இதுவே!

இந்திய சுதந்திரத்திற்கு முன்பே பூரிக்கு கிழங்கு கிடையாது என கடை வாசலில் போர்டு தொங்குமாம். மேலும் நெல்லையில் வித விதமான அற்புத ருசியில் சொதிகள் கிடைக்கும்! அதுவே பூரி சப்பாத்திக்கு அல்டிமேட்டாக இருக்கும்! தேங்காய் பால் சொதி இல்லாத போது வந்த சப்ஸ்டிட்யூட் தான் தேங்காய் சட்னி!

மதுரை ஓட்டல்களில் பூரி மசாலா தீர்ந்துவிட்டால் பூரிக்கு மசால் இல்லிங்க சாம்பார் சட்னிதான்னு சொல்லியே பரிமாறுவார்கள்! பெரியார் பஸ் ஸ்டண்ட் அசோக், KBS & துளசிராம், ஜங்ஷன் கற்பகம், அரசரடி கெளரி கிருஷ்ணா, மனோரமா போன்றவை எல்லாம் பூரி சட்னி சாம்பாருக்காகவே புகழ் பெற்ற கடைகளாகும்!

🫕 ரவா உப்புமா - ரசம் 🍲

என்னங்க சொல்றிங்கன்னு சிலர் அதிர்ச்சியாகலாம்! சுடச்சுட குழைவா செய்த ரவா உப்புமாவை தட்டில் போட்டு நடுவே குழி பன்ணி 3 கரண்டி தக்காளி ரசத்தை ஊத்தி சாப்பிட்டா.. அடடா! தேவலோகத்தில் அதுதான் அமிர்தம்னு சொன்னா உடனே நம்பி விடுவிங்க! அதைச் சூடா சாப்பிடணும் என்பதுதான் முக்கிய விதி!

ரசம் அல்லது ரசமண்டி வைத்து சாப்பிடும் ரசிகர்களும் உண்டு! இதில் தக்காளி ரசம், பருப்பு ரசம் போன்றவை தான் உப்புமாவிற்கு நல்ல காம்போ! பூண்டு, மிளகு ரசம் அவ்வளவா செட்டாகாது இல்ல அதுக்கு தகுந்தாற் போல சேர்மானங்களை உப்புமாவில் குறைக்கணும்! மாயவரத்தில் காளியாகுடி ஓட்டல் அந்தக் காலத்தில் ஃபேமஸ்!

அங்கே மதிய உணவு தீர்ந்து போய் மாலை 4 மணிக்கு டிபன் ஆரம்பிக்கும் போது சூடான கிச்சடி செய்வார்கள்! கிச்சடி வேகமாக செய்துவிடலாம்! அன்று கிரைண்டர் இல்லாததால் சட்னி அரைக்கத் தான் சிறிது தாமதமாகும்! எனவே அவர்கள் கிச்சடிக்கு மதிய உணவில் மீதமான ரசத்தை ரவா கிச்சடியோடு பரிமாறுவார்கள்!

இந்த காம்போ படு ஹிட்டடிக்க கிச்சடி & ரசத்திற்கு ரசிகர்கள் பெருக கிச்சடிக்காகவே அண்டா அண்டாவாக ரசத்தை தயாரித்து பரிமாறினார்கள்! இதுவே ரவா உப்புமா & ரசம் காம்போ உருவான கதை! அளவான புளிப்புடன் இனிப்பான தக்காளியில் செய்த சூடான ரசமும் கொதிக்கும் உப்புமாவும் ஒரு ரசனையான காம்போ!

🍛 பிற வித்யாச காம்போக்கள்🧆

அடை தோசைக்கு அவியல், சொதி எல்லாம் பக்கா காம்போன்னா கூட மோர்க்குழம்பு இன்னும் பிரமாதமா இருக்கும்! அதே போல இடியாப்பம் & ஆப்பத்திற்கு பால் பாயாசம் செமையா இருக்கும்! இட்லி, தோசைக்கு குருமா, தோசை & தேங்காய் பால், பிரட் & வெஜிடபிள் குருமா இதெல்லாம் கூட சிறந்த காம்போக்கள் தான்!

குலாப் ஜாமூன் ஜீராவில் சப்பாத்தியை பிய்த்து போட்டு ஊற வைத்து சாப்பிட்டால் பிறகு அதற்கு மயங்கி விடுவீர்கள்! தயிர்சாதம் & வத்தக் குழம்பு போல, பருப்பு சாதம் & பூண்டுக் குழம்பும் ஒரு பிரமாதமான இணையாகும்! அட நாமெல்லாம் பாயாசத்தில் அப்பளத்தை போட்டு நொறுக்கி குழைத்து சாப்பிட்ட மறத்தமிழர் வம்சமல்லவா!

உங்களது வித்யாசமான உணவுக் காம்போவை கமெண்ட்டவும்💖

No comments:

Post a Comment