Tuesday, 6 January 2015

கி.பி2214

கி.பி.2214..

சென்னை பரபரப்பாக விடிந்திருந்தது ரோபோ கான்ஸ்டபிள்கள் போக்குவரத்து சிக்னல்களாகவே செயல் பட்டுக்கொண்டிருந்தனர்.. இன்றைக்கு சாலைப் போக்குவரத்து தினம்..! வான் வெளி போக்குவரத்து தடை செய்யப்பட்ட நாள்... மக்களும் தங்கள் ஹெலி டாக்சிகளை Road Modeக்கு மாற்றி இருந்தார்கள்..

எல்லோரும் பரபரப்பாக ஆவலாக சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களின் முகத்தில் மிகப் பெரும் ஆச்சர்யம் பொங்கிக் கொண்டிருந்தது.. இதயம், மூளை, கை, கால் போன்ற மாற்று உடல் உறுப்புகள் விற்கும் அரசு மெடிக்கல்களில் புதிய கண்கள் வாங்கி பொருத்திக் கொள்வதில் பெரும் கூட்டம் நின்றிருந்தது..!

எல்லோரும் எதையோ பார்க்க போகும் பரபரப்பு அந்த நகரின் காற்றில் கலந்திருந்தது... "நீ பார்த்துட்டியா? நிஜம் தானா? எப்படி இருந்தது? தொட்டு பார்த்தாயா? தொட அனுமதித்தார்களா? இப்படியான கேள்விகள் தான் ஒருவருக்கு ஒருவர் உதடுகள் உச்சரித்த வார்த்தைகளாக இருந்தது..!

21 ஆம் நூற்றாண்டின் அரிய பொருள் ஒன்றை பொது மக்கள் பார்வைக்கு அரசு அருங்காட்சியத்தில் வைத்து இருப்பதை தான் அவர்கள் அப்படி பேசிக் கொண்டிருந்தனர்.. இன்று தான் கடைசி தினம் அதை பார்வையிட.. பொது மக்கள் கூட்டம் கூட்டமாக அருங்காட்சியகம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்...!

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் சாலைக்கு 2 கி.மீக்கு முன்பே போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.. எங்கும் இராணுவ வீரர்கள் தலைகள் தான் ஹை டெக் லேசர் துப்பாக்கிகளுடன் ரோந்து வந்து கொண்டிருந்தனர். வானில் ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தது..ஏலியன் ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டு வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

அந்தப்பகுதி முழுவதும் பாதுகாப்பு, பாதுகாப்பு, பாதுகாப்பு... அருங்காட்சியத்திற்கு ஒரு கி.மீக்கு முன்பே மக்கள் கூட்டம் நீநீநீநீநீநீநீநீண்ட வரிசையில் காத்திருந்தது.. அனைவரின் முகத்திலும் விவரிக்க முடியாத உணர்வுகள்.. மெல்ல காய்கறிப் புழு போல் கூட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.. பார்த்தவர்கள் எதிர்புறம் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அவர்கள் முகங்களில் நம்ப முடியாத பரவசம்.!

அந்த பொருள் அணுகுண்டால் கூட சிதைக்க முடியாத சிலிக்கான்ஃபுரூப் கண்ணாடி கூண்டில் வைக்கப்பட்டிருந்தது.. கண்ணை உறுத்தாத அதே நேரம் பிரகாசமான விளக்கொளியில் பளீரென தென்பட்டது அப்பொருள்..ஒவ்வொரு பார்வையாளருக்கும் 5 வினாடிகள் மட்டுமே பார்வை நேரம்.. !

பார்வையாளர் நின்று பார்க்க உயரமான ஒரு மேடை.. அதில் ஒருவர் தான் நிற்கமுடியும் கை குழந்தைகள் உள்ளவர்கள் மட்டும் குழந்தையோடு நிற்க அனுமதி.. அதோ அந்த பெண்மணி தன் 2 வயது குழந்தையோடு நின்று சொல்லிக் கொண்டிருந்தாள்.."அதோ பார்.. அது தான் நம் முன்னோர்கள் உண்டு உயிர் வாழ்ந்த பொருள்" என்று.. 

அந்த ஒளி வெள்ளத்தில் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் தெரிந்தது.. #ஒரு_கைப்பிடி_அரிசி...

Monday, 5 January 2015

தீனா-2015

"தீனா கொரலு"

ஒரு பொண்ண லவ்வு உட்டு அப்பால அத்த பிர்ஞ்சு போயி மன்சு பூரா பேஜாராயி இர்க்க சொல்லோ.. சில பேர் நம்மள பாத்து சிர்ச்சிகினே போவாங்கோ.. அந்த தத்திங்க ஆருக்கும் லவ்வுன்னா இன்னான்னும் தெர்யாது.. பிரிஞ்சு இர்க்குற வேதனயும் பிரியாது..! "லவ் பண்ணாதான் தெரியும் சிறப்பு.. லவ் பண்ணாதவனுக்கு அல்லாமே சிரிப்பு... " குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம்பட்ட தாம்படா ஆறு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நாணுத்துறவுரைத்தல் : குறள் எண் : 1140 ]


'"தீனா கொரலு"

நம்ம வூட்டுக்கு விர்ந்தாளிங்கோ வர் சொல்லோ வூட்ல இர்க்க நாஷ்டாவை பர்ஸ்ட்டு அவுங்களுக்கு துண்ணக் கொட்த்து மிச்சம் இர்ந்தா தான் நாம துண்ணணுமாம்! அப்டியா பட்டவன் அவன் சொந்த நெலத்துல விதையே போடலின்னாலும் கூடொ நல்லாவே இர்ப்பானாம்.! "விர்ந்தாளி துண்ணனும் பர்ஸ்ட்டு.. அப்டி நென்ச்சா வாழ்க்க பெஸ்ட்டு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : விருந்தோம்பல் : குறள் எண் : 85 ]


"தீனா கொரலு"

நம்ம கிட்ட கீற பவரு இன்னான்னு தெர்ஞ்சுக்காம டக்குன்னு பீலாகி அவசர அவசரமா ஒரு வேலைய செய் சொல்லோ.. அந்த வேலை ஒயுங்கா மிடியாம பாதிலயே நின்னுபோயி அபீட் ஆனவங்க தான் ஜாஸ்தி.! "பலம் தெர்யாம இறங்காத.. பாதியில வுட்டுட்டு கிறங்காத" .. சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்.

[ பொருட்பால் : அதிகாரம் : வலியறிதல் : குறள் எண் : 473 ]




Sunday, 4 January 2015

பேஸ்புக் தொழில்கள்.

முகனூலும் எதிர்கால தொழில் வாய்ப்பும்..

#ப்யூச்சர்_பேஸ்புக்_ஜாப்ஸ்_டாட்காம்

எந்நேரமும் இங்கிருந்து செய்த தொழிலை விட்டுவிட்டு பரிதவிக்கும் பதிவர்களே கவலை வேண்டாம் எதிர்காலத்தில் இதை விட்டு விடமாலேயே இங்கிருந்து கை நிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு.. வாருங்கள் எங்கள் ப்யூச்சர் பேஸ்புக் ஜாப்ஸ் டாட் காமிற்கு.. வாழ்க்கை வசமாகும் எதிர்காலம் வசந்தமாகும்.

நேம் சேஞ்சர்ஸ்..ஜாப்1 : உங்கள் ராசிக்கேற்ற நியூமராலஜிப் படி ஃபேக் ஐடிக்கு பெயர் வைத்து தரப்படும்.. படித்தவுடன் குபீரென சிரித்து ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அக்சப்ட் செய்யும் அளவிற்கு பெயர் சூட்டப்படும்.. கோணப்புளியங்காய், குவார்ட்டரு தான் மேட்டரு போன்ற பல ஹிட்டான பெயர்கள் இவர்கள் வைத்ததே..முகநூல் மக்களின் நம்பிக்கை பெற்ற கைராசி நிறுவனம் எழுத்து ஒன்றிற்கு 50ரூபாய் கட்டணம்.. தற்சமயம் ஒரு ஐடி நேமுக்கு ஒரு ஐடி நேம் இலவசம் முந்துங்கள் உங்கள் பெயர் மாற்றத்திற்கு..இச்சலுகை எங்கள் மூளையில் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.. தயவு செய்து எங்களிடமாவது உண்மைத் தகவல் கொடுப்பது அவசியம்.

கும்மி குரூப்ஸ்..ஜாப்2 : யாராவது இரண்டு கோஷ்டிகளில் பதிவுச் சண்டை நடக்கும் போது உங்கள் பக்கம் பலவீனம் ஆகிறதா.! கவலை வேண்டாம் கும்மி குரூப்சில் இணையுங்கள்.. எதற்கும் அசராத, சூடு சொரணை கொஞ்சமும் அற்ற 11பேர் கொண்ட பல குழுக்கள் எங்களிடம் உள்ளது.. உங்கள் பதிவுகளில் வந்து பதிலடி கொடுத்து பின்னூட்டத்திலும் பித்தலாட்டம் ஆடி தங்கள் கமெண்ட்டால் கதி கலக்கி எதிரணியை கும்மி எடுப்பதில் வல்லவர்கள்.. எவ்வளவு மானக்கேடாக திட்டினாலும் அடிதடிக்கு மட்டும் போகா மாட்டார்கள் என்பது தனிச்சிறப்பு.. தினசரி சண்டைக்கு 1மணி நேரத்துக்கு500ரூபாய் கட்டணம் மாதசந்தா வருடசந்தா சலுகைகளுமுண்டு!

லைக் ரெய்னர்ஸ் ஜாப்3 : மிக குறைந்த நாளில் நீங்கள் அதிக லைக் பெற்று பேஸ்புக் பிரபலமாக வேண்டுமா? லைக் ரெய்னர்ஸ் இருக்க கவலை ஏன்.! இன்று செவ்வாய்க் கிழமை என்று கூட பதிவிட வேண்டாம் இன்று அல்லது இ என்று பதிவிட்டாலே லைக் மழை பொழிவார்கள்.. லைக் ஒன்றுக்கு 5 ரூபாய் கட்டணம் ஆயிரம் லைக்குக்கு மேல் கேட்பவருக்கு ஒரு லைக் 4ரூபாய் மட்டுமே.. இனி லைக் வாங்க பிராபளம் இல்லை இனி பிரபலம் நீங்கள் வானமே எல்லை.!

சாட் ரிவெஞ்சர்ஸ் ஜாப்4 : உங்கள் எதிரிகளை அமைதியாக பழிவாங்க ஏற்படுத்தப்பட்ட சீக்ரெட் ஏஜெண்ட்ஸ் அணி இது.. குறிப்பிட்ட நபரை கைகாட்டி விட்டால் அவரிடம் நட்பு கொண்டு அவரை சாட்டுக்கு வர வழைத்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நாறடிப்பது எங்கள் தலையாய பணி.. இதற்காக ஃபேக் ஐடி இல்லாது ரியல் மகளிர்க் குழுக்கள் வைத்து இயங்குவது எங்கள் தனிச்சிறப்பு.. மசியாத சில உறுதியான எதிரிகளுக்கு நாங்களே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தருவோம்.. நீங்கள் காட்டும் ஆளை பொறுத்து கட்டணம் முடிவு செய்யப்படும் கஷ்டமான வேலை என்பதால் கட்டணத்தில் எந்த தள்ளுபடியும் இல்லை. இது கறார் விலைக்கடை.!

இது போல இன்னும் 60 தொழில்கள் உள்ளன தெரிந்து கொள்ள விரும்பினால் 10ஆயிரம் ரூபாய் எனக்கு டிமாண்ட் டிராஃப்ட் அனுப்பி தெரிந்து கொள்ளவும்.

Saturday, 3 January 2015

திருவெம்பாவை - போற்றி...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

முதலாக இருக்கும் உன் மலர்ப் பாதம் அருள் தரட்டும்! போற்றி!

முடிவாக இருக்கும் உன் செம்மலர் திருவடிகள் அருள் தரட்டும்! போற்றி!

எல்லா உயிர்க்கும் தோற்றம் தந்த உன் பொற்பாதங்களுக்கு! போற்றி!

எல்லா உயிர்க்கும் இன்பமாகும் உன் கழலடி கால்களுக்கு! போற்றி!

எல்லா உயிர்க்கும் இறுதியாக இருக்கும் உன்னிரு பாதங்களுக்கு! போற்றி

நாரணனும் நான்முகனும் காணாத உன் தாமரை பாதங்களுக்கு! போற்றி!

நாங்கள் உய்வுறுமாறு எம்மை ஆட் கொண்டருளும் பொன் மலரடிகளுக்கு! போற்றி

போற்றி போற்றி மார்கழி நீராடுவோம் எம்பாவாய்.


பாடல்: 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.
 (மாணிக்க வாசகர் அருளியது)


நிறைந்தது..

குடியானவனின் குமுறல்..

ஆத்துல மண்ணள்ளி அதை சுரண்டியாச்சு..
விளையிற நெலமெல்லாம் வீடாக போச்சு... 
ஏரி கம்மா குளமெல்லாம் ஆக்ரமிப்பாச்சு...
தோண்டி வச்ச கிணறு கூடகாணாம போச்சு..
பாறை கூட பளிங்குன்னதும் வெடிய வச்சாச்சு..
மலையக்கூட சில்லுசில்லா பேத்தெடுத்தச்சு
சேத்துல தான் காலை வைக்கும் வேலையும் 
போச்சு..திங்க சோறில்ல எங்களுக்கு தெருவில் 
நின்னாச்சு.. வெள்ளைக்கார முதலாளியை அழைச்சு 
வந்தாச்சு..சின்ன சின்ன பொழப்பு கூட முடங்கியே 
போச்சு..கடனை உடன வாங்கிறதே வேலையாயிடுச்சு..
இப்ப எதுவுமில்ல எங்க கிட்ட எல்லாமே போச்சு.. 
கள்ளப்பணம் கறுப்புப்பணம் எங்கதான் போச்சு..கேட்டு 
கேட்டு அலுத்துட்டோம்யா விட்றானா மூச்சு.. அவன் ஓட்டு
கேக்க வந்தப்பல்லாம் இனிச்சது பேச்சு..கோவணத்துக்கு 
மாத்தில்லய்யா சொன்னதென்னாச்சு.. நாங்க வாழ என்ன 
வழியின்னு கேள்வி கேட்டாச்சு..அது செவிடன் காதில் ஊதி
புட்ட சங்காக ஆச்சு.. ஊழலில்லா ஆட்சின்னதும் சிரிப்பு 
வந்திருச்சி.. ஒண்ணு மட்டும் நிச்சயமா தெரிஞ்சியே போச்சு..
நாங்க ரோசத்தோட வாழுவது முடிஞ்சே போச்சு.. எங்க 
மிச்ச மீதி வாய்க்கரிசிக்கு மீத்தேன் வந்தாச்சு.

Friday, 2 January 2015

திருவெம்பாவை - உங்கையிற் பிள்ளை..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

உன் கைக்குழந்தை உன்னுடைய சொல் கேட்டு அடங்கியிருக்கும்

என்ற பழமொழி உண்மையாகக்கூடாது என பயந்து ஈசனே உன்னை

ஒன்று கேட்கிறோம், சிவனன்பர் ஒருவரின் தோளில் தான் எங்கள்

மார்புகள் சாயவேண்டும் உன் அன்பில்லாதவர் எமக்கு வேண்டாம்.

பிற வேலைகள் செய்யாது எங்களது கைகள் சிவனுக்கு மட்டுமே 

தொண்டு செய்ய வேண்டும்.இரவும் பகலும் எம் கண்கள் வேறெதுவும் 

காணாமல் உன்னையே தரிசித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

எங்கள் கோமானே இந்த வரங்களை மட்டும் நீ எங்களுக்குப் பரிசாக

அருளிவிடு பிறகு சூரியன் எத்திசையில் உதித்தாலும் எங்களுக்கு 

கவலை ஏதும் இல்லை என்கிறோம் எம்பாவாய்.

பாடல்: 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 

கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.


Thursday, 1 January 2015

திருவெம்பாவை - அண்ணாமலையான்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

அண்ணாமலையானின் பாதங்களின் ஒளி அவனைத் தொழும்

வானவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் ஒளிர்வதை விட

அதிகமாய் பிரகாசிக்கிறது. எப்படி சூரியன் உதித்ததும் வானில்

நட்சத்திரங்கள் தெரிவதில்லையோ அதைப்போல ஒப்பில்லா

ஒளியாக அது விளங்குகிறது. ஆணாய் பெண்ணாய் அர்த்தநாரியாய்

மின்னும் ஒளிபோல் விண்ணுக்கும் மண்ணுக்கும் எழுந்து நின்று

இவை அனைத்திற்கும் வேறாகவும் நிற்கும் அவனை, கண்ணிலேயே 

அமுதம் போல குடித்திடும் அழகுடைய சிவனை, அவன் பாதங்களை

பாடி இந்த மலர்க்குளத்தில் பாய்ந்து நீராடுவோம் எம்பாவாய்.

பாடல்: 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;

பிறங்கொளி - மின்னும் ஒளி.