மதுரையில் ஒரு ஃபேமஸான புரோட்டா கடையில் உங்க கடை சால்னா பத்தி கேள்விப்பட்டு தான் இங்க வந்திருக்கோம் என்றார் ஒருவர். அவரும் அவரது 4 நண்பர்களும் ஆவலுடன் அங்கு அமர்ந்திருந்தனர். சரி எங்கேயாவது திருச்சி பக்கமிருந்து வந்திருப்பார்கள்னு நினைச்சா அவங்க வந்திருப்பது காசர்கோட்டில் இருந்து! முதல் நாள் மதியமே கிளம்பி விட்டார்களாம்.
வடிவேலு பாவனாவிடம் கேட்பது போல அப்படி உனக்கு இந்த மதுரையில் பிடிச்சது எது செல்லம்னு? கேட்டதுக்கு ஐந்தாறு கடைகளின் பேரைச் சொல்லி அங்க சால்னா சாப்பிடத்தான் இந்த டூரே வந்திருக்கோம் என்றனர் கோரஸாக. காலணா செலவழிக்கவே கணக்குப் பார்க்கும் காலத்தில் ஒரு புறாவுக்காக போரா? மாதிரி சால்னாவுக்கு ஒரு டூரா? என எண்ணினேன்.
உடனே வீடு வந்து சால்னாவை பத்தி கூகுளில் தேடினால், சாரி புரோட்டாக்கு கூட விக்கி பீடியா இருக்கு, சால்னாவுக்கு அப்படி ஏதும் இல்லை என்றது. நான் சில விநாடிகள் விக்கித்து நின்றேன். சால்னாவை ருசிக்கக் கிளம்பி ஒரு க்ரூப் டூரே வந்திருக்காங்க அந்த சால்னா பத்தி விக்கியில் எழுதாட்டி என்ன? நான் எழுதலைன்னா இந்த ஹிஸ்டரி நம்மை ஃபர்கிவ்வாதல்லவா..
இதோ கூகுள் செய்யாது சால்னா பற்றி நான் தேடித் தேடி தொகுத்தவை👇🏿
“சால்னா” என்றால் சளசளன்னு தண்ணீர் போல இருக்கும் குழம்பு என்று அர்த்தம். சல்னா என்ற வேற்று மொழிச் சொல்லில் இருந்து உருவானதே சால்னா. மதறாஸ் துறைமுகம் மெட்ராஸ் தமிழுக்கு தந்த பல சொற்களை தந்துள்ளது. ஜாமீன், ரசீது, நாஷ்டா, கஷ்மாலம், பேஜார் போன்ற சொற்கள் எல்லாமே அங்கிருந்து சென்னைக்கு கரையேறிய வார்த்தைகள் தான்.
இந்த சால்னா கிடைக்கும் ரோட்டோரக் கடைகள் பிளாட்பார கடைகள் என்று அழைக்கப்படும் முன்பு சால்னாக் கடைகள் என்றே அழைக்கப்பட்டன. கூலித் தொழிலாளர்கள், கை ரிக்ஷாக்காரர்கள், பழம், காய்கறி விற்பவர்கள் போன்ற எளிய பாட்டாளிகளின் உணவாக இருந்தது தான் சால்னா. அன்று மதறாஸில் ஆப்பம் இட்லி, தோசை கடைகளில் சாம்பார், சட்னி கிடையாது.
ஆப்பம்/ இடியாப்பம் பாயா தான் அன்னிக்கு ஃபேமஸ். தினமும் இட்லி, தோசைக்கு பாயா வாங்கி சாப்பிடவும் முடியாது. இதுக்காகவே அன்னைக்கு பாயா போல தண்ணியா செய்து தந்தது தான் சால்னா குழம்பு. கிட்டத்தட்ட கறிக் குழம்பு போல மசாலா பொருட்கள் சேர்த்து போனா போவுதுன்னு மிச்ச மீதி எலும்புகள் போட்டு செய்யும் அசைவ சால்னா படு ஹிட்டடித்தது.
சூடான இட்லி, தோசைக்கு சளசளன்னு ரசம் போல தரும் காரசாரமான சால்னாவை எளிய மக்கள் இட்லியில் குழைத்து அமிர்தம் போல சாப்பிடத் துவங்கினர். மதறாஸ் பட்டணத்தை கட்டிப் போட்ட சால்னா, புரோட்டாவின் அறிமுகத்துக்குப் பின்னரே வேற லெவலுக்கு சென்றது. குருமா, கெட்டிக் குழம்புன்னு அதன் கன்ஸிஸ்டன்சியும் கூடியது. மெல்ல மெல்ல சால்னா..
தமிழ்நாட்டின் தென் பகுதிக்குள் அடியெடித்து வைத்தது. கொங்கு நாட்டில் தண்ணிக் குழம்புன்னும், மதுரையில் ஆடு & கோழி ரசம் என்றும் மரு வைக்காமல் உலவிய குழம்பு முறை தான் மரு வைத்து சால்னா என்ற பேரில் உலவுகிறது என்ற சூட்சுமம் மக்களுக்குப் புரிந்துவிட, சால்னாவின் பொற்காலம் துவங்கியது. அதிலும் தென் மாவட்டங்கள் ஜொலித்தன.
இட்லிக்கு பல சட்னிகள் தந்தது போல புரோட்டாவுக்கு 4 சால்னா, 5 சால்னா தர ஆரம்பித்தனர். தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, கிராம்பு, மிளகு, சோம்பு, ஏலக்காய் போட்டு அரைத்து வைக்கும் சைவ சால்னாக்கள் மணம் வீசி மக்கள் மனங்களை வென்றன. புரோட்டாவை விட சால்னா குடிக்கும் மக்கள் பெருகினர். எக்ஸ்டிரா சால்னா ஒரு கப் ஐந்து ரூபாய்னு விற்றனர்!
இதில் ஆச்சரியம் அன்னிக்கு ஒரு புரோட்டாவே 2 ரூபாய் தான். பச்சை மிளகாய் சால்னா, முந்திரி சால்னா, ஒயிட் சால்னா, எண்ணெய் சால்னா, தேங்காய் சால்னா, சால்னா, நிலக்கடலை சால்னா இப்படி சால்னாக்கள் தசாவதாரத்துடன் விஸ்வரூபமும் எடுத்து நின்றது. போட்டி அதிகரிக்க அசைவ எலும்பு சால்னாக்கள் களமிறங்கின. கோழி உதிரிகள், மட்டன்..
எலும்புகள் போட்ட சால்னாக்கள் சைவ சால்னா விலைக்கே விற்றனர். மட்டன் சுக்கா, நாட்டுக் கோழி, ஈரல் போன்ற குழம்புகள் ஒன் பை திரீ கூட தந்தனர். கொத்து புரோட்டா அறிமுகமானது! அதில் ஊற்றி கொத்தவே தனித்தனி சால்னாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொத்து புரோட்டாவில் உள்ள சால்னாவும் அதுக்கு தரும் சால்னாவும் ருசியில் தனித்துவமானவை.
அசைவக் கடைகளில் சால்னா சக்கை போடு போடுவதைக் கண்டு சைவக் கடைகளும் சால்னா தயாரித்தன. மல்லி புதினா சால்னா, ப்ளைன் சால்னா, அரைச்ச காய் சால்னா (காய்களை வேக வைத்து அரைப்பது) காளான் சால்னா, வெங்காய சால்னா, தக்காளி பொட்டுக்கடலை சால்னா, நெய் சால்னான்னு சைவத்திலும் சால்னாவின் கொடி பறக்கத் துவங்கியது.
பொரிச்ச புரோட்டா, பன் பரோட்டா, அல்வா பரோட்டா, நூடுல்ஸ் புரோட்டா, பர்கர் புரோட்டான்னு இன்று அதற்கும் தனி சால்னாக்கள் வந்துவிட்டன. சென்னைத் தமிழில் யாரையாவது திட்டினால் கூட “பேமானி! ஓங்கி அட்ச்சேன்னா தவட சால்னா உட்டுக்கும் என்ற வழக்கு இருந்தது. இவ்வளவு ஏன் 1968இல் வந்த பொம்மலாட்டம் படத்தில் மனோரமா பாடுவார்..
{வா வாத்யாரே வூட்டாண்ட.. பாடல்}
நைனா உன் நெனப்பாலே நான்
நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சப் பார்த்தேன்
சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயாக்கடை இடியாப்பம் நான்
பாயாக்கறியும் நீயாச்சு
இப்படி சால்னாவின் கதை ருசியானது தான். உங்களுக்கு தெரிந்த சால்னா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் பகிருங்கள் அதையும் சேர்த்து விக்கி பீடியாவில் பதிவேற்றம் செய்யலாம். இன்னிக்கு வீட்டில் இரவு உணவு தோசையும் நெய் சால்னாவும் தான் 💖







