Saturday, 27 December 2014

திருவெம்பாவை - பைங்குவளைக்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

கரிய நிறத்து குவளை மலர்களும் செந்நிறத்து தாமரை மலர்களும்

நிறைந்த இக்குளத்தில் சிறு உடலை உடைய வண்டுகள் செய்யும்

பேரொலி நிரம்பியுள்ளது! தம்முடைய பாவங்களை நீக்க வேண்டும்

என நினைப்பவர்கள் வந்து மூழ்கிட எம் அம்மையப்பனைப் போல்

காட்சியளிக்கிறது இந்நீர்நிலை! இதில் குதித்து நீந்தி நீராடி நாம்

அணிந்து இருக்கும் சங்குகள் சலசலக்க அத்தோடு இணைந்து நம் 

சிலம்புகள் ஆரவாரிக்க நம் மார்பகங்கள் பூரித்து விம்ம அத்தோடு

இக்குளத்து நீரும் பூரித்து பொங்கி அலையடித்து மேலும் பெருக

தாமரை மலர் நிறைந்த இக்குளத்தில் நீராடுவோம் எம்பாவாய்.

பாடல்: 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர். மலம்-அழுக்கு (பாவம்)


Friday, 26 December 2014

திருவெம்பாவை - ஆர்த்த பிறவி...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

ஆரவாரம் செய்யும் பிறவித் துன்பமது நீங்க நாம் ஆரவாரித்து

வழிபடும் தீர்த்தனவன்;தில்லை சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடும்

கூத்தனவன்;இவ்விண்ணையும் மண்ணையும் நம் அனைவரையும்

காத்தும், படைத்தும், கவர்ந்தும் விளையாடல்கள் புரிபவனவன்

அவன் புகழைப் பேசியும், கை வளைகள் ஒலிக்கவும், மேகலைகள்

குலுங்கி ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும்

மலர்கள் நிறைந்த இக்குளத்தில் ஈசனின் பொற்பாதங்களை நாம்

வாழ்த்திக் கொண்டே நீராடி மகிழ்வோம் எம்பாவாய்.

பாடல்: 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 
குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.

Thursday, 25 December 2014

திருவெம்பாவை - மொய்யார் தடம்

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

குளத்தில் வண்டுகள் மொய்க்கின்றது அதில் கைகளால்

குடைந்து குடைந்து நீராடும் போதே உன் திருவடிகளைப்

பாடி, வழி வழியாக வந்த அடியவர்களாகிய நாங்கள் வாழ்வு

பெற்றோம்.ஆக்கிரமிக்கும் செந்தீயைப் போல் சிவந்த சிவனே

திருநீறு பூசும் திருநீலனே, சிற்றிடையும் பரந்த மைவிழியும்

கொண்ட பார்வதியின் கணவனே! ஐயனே நீ ஆட் கொண்டு

அருளும் திருவிளையாடலில் மெய் மறந்து ரசிக்கும் அடியார்

போல் நாங்களும் ரசித்து மெய் மறந்து விட்டோம் எங்களைத்

தளர்வுறாமல் காத்திடுவாய் எம்பாவாய்.

பாடல்: 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

Wednesday, 24 December 2014

திருவெம்பாவை - பாதாளம்

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

பாதாளங்கள் ஏழிற்கும் கீழே சென்று சொல்வதற்கு எட்டா

வகையில் ஈசனின் மலர் பாதங்கள் உள்ளன; சிவனின் ஜடா

முடி மலர்கள் நிறைந்தது அவரது பொருட்கள் எல்லாமுமே

எல்லாவற்றின் எல்லை கடந்தும் இருக்கிறது அவன் மாதொரு

பாகன்; அவனது திருவுருவங்கள் ஒன்றிரண்டல்ல! வேதங்கள்

முதலாக விண்ணவரும் மண்ணவரும் துதிக்கின்ற போதும் எந்த

ஒருவராலும் இவனே சிவன் என சொல்லப்பட முடியாதவன் ஒரே

துணைவன்,தொண்டர் உள்ளத்தில் இருப்பவன்; சிவாலயப் பணி

புரியும் குற்றமற்ற குலப் பெண்களே! சிவனுக்கு ஊர் ஏது?பேரேது?

உற்றார் யார்? மற்றார் யார்? அப்படிப்பட்டவனை பாட வழியின்றி

இருக்கின்றோம் எம்பாவாய்.

பாடல்: 10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலு
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;

கோது - குற்றம்; பரிசு - வழி.



Tuesday, 23 December 2014

திருவெம்பாவை - முன்னைப் பழம்பொருட்...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

பழம்பொருட்களுக்கெல்லாம் பழம்பொருளாக இருக்கும் 

பரம்பொருளான முதல்வனே! இப்போதுள்ள புதுமைகள்

அனைத்திற்கும் புதுமையான புதுமைச் சித்தனே! உன்னை

எங்கள் பிரானாகப் பெற்று நேர்த்தியுடன் வணங்கும் அடியார் 

நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம், 

அவர்களிடமே நட்பாவோம், அத்தகையவரையே நாங்கள் 

மணந்து கொள்வோம்,அவர்கள் சொற்படியே நடந்து அவர்க்கு

அடியவராய் பணி செய்வோம் இவ்வாறே எங்களுக்கு எம் ஈசன் 

அருள் செய்தால் எங்களுக்கு எந்த ஒருக் குறையும் இல்லை..

என்கிறோம் எம்பாவாய்.

பாடல்: 09

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை


Monday, 22 December 2014

திருவெம்பாவை - கோழி சிலம்ப...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

(தோழியர்)

கோழி கூவிட அதோடு இணைந்து சிறு பறவைகளும் கீச்சிட

இசைக்கருவிகள் இசைக்க வெண் சங்கு எங்கும் முழங்கிட

ஒப்பில்லா பரஞ்சோதியாம் சிவனையும் ஒப்பில்லா அவர்தம்

பெருங்கருணையையும் ஒப்பற்ற மேன்மையான சிவநெறிப்

பொருட்களையும் பாடினோம் அது உனக்கு கேட்கவில்லையா?

அப்படி என்ன இங்கு பொல்லாத உறக்கம்? சொல்லிவிடு அந்தத்

திருமாலைப் போல் பள்ளிக் கொண்டு இருக்கின்றாயே இதுவா

உன் பக்திக்கு அழகு? ஊழிகள் யாவும் தொடங்கி அழியாது 

நிற்கும் எம் அர்த்தநாரியைப் பாடிட எழுந்து வா எம்பாவாய்.

 பாடல்: 08 

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

Sunday, 21 December 2014

திருவெம்பாவை - அன்னே இவையுஞ்சில..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

(தோழியர்)

பெண்ணே இதுவும் உன் குணங்களில் ஒன்றா? விண்ணுலக

தேவர்கள் பலர் நினைத்திடும் அரியவரான செம்பொருளாம்

ஈசனை நினைவூட்டும் சின்னங்களின் பேரைக் கேட்டவுடன்

சிவ சிவ எனச்சொல்லுவாய்.! தென்னாடுடைய சிவனே என்ற

வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள் தீயிலிட்ட மெழுகாய்

உருகிடுவாய்.. எம்பெருமானை நாங்கள் என் மன்னா! இனிய

அமுதம் போன்றவனே என பலவாறும் பாடித் துதிக்கின்றோம்

ஆனால் நீ உணர்வற்று இன்னும் தூங்குகிறாயே கடும் நெஞ்சம்

உடையவள் போல் அசைவற்று கிடக்கின்றாயே இத்தூக்கத்தின்

தன்மை தான் என்ன.! எழுந்து வா எம்பாவாய்.

பாடல்: 07 

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.