




#இராஜஸ்தானின்_சோலைவனம்
இராஜஸ்தான்னாலே பாலைவனம் தானே! அதென்னய்யா சோலைவனம்? இது உன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இல்ல ‘வளக்கணங்கள்’ போல உச்சரிப்பு மிஸ்டேக்கா? என்று நீங்க கேட்குறது எனக்கும் கேட்குது. ஆம் சோலைவனமே தான்.
எங்கு பார்த்தாலும் ஏரிகள், பச்சைப் பசேல்னு மரங்கள், ஊரைச் சுற்றி வேலி போல அமைந்துள்ள ஆரவல்லி மலைத் தொடர்கள்னு அழகான ஊர் தான் இராஜஸ்தானின் உதய்பூர். ராஜபுத்திரர்களின் மேவார் சாம்ராஜ்ய தலைநகரம் இதுதான்.
ஆகவே எங்கு பார்த்தாலும் அழகிய பிரம்மாண்டமான அரண்மனைகள் இங்கு ஏராளம். இன்றைக்கு இந்தியாவின் டாப்5 வெட்டிங் டெஸ்டினேஷனில் உதய்பூரும் ஒன்று. ராஜா வீட்டு கல்யாணம் மாதிரி திருமணத்தை இங்கே நடத்தலாம்.
அதுக்காகவே மன்னர் உதய்சிங் மஹா’ராணா கட்டிய அழகிய பல அரண்மனைகளை வீணா’ போகாமல் திருமணங்கள் நடத்த வாடகைக்குத் தருகிறார்கள். மணமகன், மணமகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இங்கு வந்தாலே போதும்.
சீரும் சிறப்புமாக க்ராண்டியராக ஒரு திருமணம் நடத்த சகல வசதிகளும் இங்குண்டு. இங்குள்ள அரண்மனைகளையும், அதில் நடைபெறும் திருமணங்களை எத்தனை விமரிசையாக நடத்தலாம் என்பது பற்றியும் அறிய ஒரு ஈவண்ட் நடந்தது.
இந்தியா முழுவதும் உள்ள ஈவண்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதில் ஒருவராக நாங்களும் கலந்து கொண்டோம். ஆகஸ்ட் 1,2 &3 ஆகிய மூன்று தினங்களும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் ஏற்பாடு செய்த ஈவண்ட் இது!
நாங்கள் கோவையில் இருந்து மும்பை பிறகு அங்கிருந்து உதய்பூர் என இரு விமானங்களில் சென்றோம். இதில் மும்பையில் 6 மணி நேரம் காத்திருந்த பின்பே உதய்பூர் விமானம். மும்பை அனுபவத்தை தனியாக எழுதவுள்ளேன்.
அதனால இப்போ உதய்பூர் போவோமா! உதய்பூரில் வந்து இறங்கிய போது மாலை 6மணி. அங்கிருந்து நாங்கள் தங்க வேண்டிய Fairmont ஓட்டல் ஒரு மணிநேர கார் பயணம். இது தான் உதய்பூரிலுள்ள மிகுந்த காஸ்ட்லியான 5 ஸ்டார் ஓட்டல்.
தினசரி வாடகை (12 மணி நேரத்திற்கு) 30 ஆயிரம் முதல் 1 இலட்சம் வரை. அந்த அறைகளை நம்ம ஊரு பஸ்ஸில் வந்து பேனா விற்பவர்கள் சொல்வாங்களே நம்ம “கம்பெனி விளம்பரத்துக்காக” நம்ம “கம்பெனி விளம்பரத்துக்காகன்னு..
அது போல அவங்க கம்பெனி விளம்பரத்துக்காக எங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு தந்திருந்தார்கள். நீச்சல் குளத்துடன் அறை, மூன்று வேளை உணவு, ஊர் சுற்ற வசதி, கலை நிகழ்ச்சிகள் கட்டணம் அத்தனையும் இதில் அடங்கும்.
இதற்குப் பிறகும் பசுபதி எடுறா வண்டியைன்னு சொல்லாம இருந்தா நாம என்ன பெரிய நாட்டாமை?! உதய்பூர் ஏர்போர்ட், ஸ்டார் பக்ஸ் கடை இல்லாத நம்ம தூத்துக்குடி ஏர்போர்ட் போல சிறியது. எங்களை அழைத்து செல்ல ஒரு கார் வந்தது.
அதிகாலை எழுந்தது விமானம் ஏறி, மும்பை வந்தது, மெட் ரோவில் மும்பையை சுற்றியது, மீண்டும் உதய்பூர் விமானம் என உடல் சோர்வாக இருந்தாலும் மனம் ஏனோ உற்சாகத்தில் இருந்தது. உதய்பூர் சாலையில் எங்கள் கார் விரைந்தது.
வெளியே பார்த்த காட்சிகளில் உதய்பூர் அப்படி ஒன்றும் ராஜாக்கள் வாழ்ந்த ஊர் போல தெரியவில்லை. கருமாத்தூர், கண்டரமாணிக்கம் போன்ற சிற்றூர்கள் போல இருந்தது. இது அரசப்பட்டின்னு பார்த்தா ஆண்டிப்பட்டியா இல்ல இருக்கு!
அந்த நகர அமைப்பு நம்ம மதுரை மேலூர் போலவே இருந்தது சிட்டிக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்ட கடை அந்த ஊர் டாஸ்மாக் தான். வரிசையாக 3 கடைகள் அதன்பின் 100 அடியில் இன்னும் 3 கடைகள்! எல்லாரும் நல்லா கவனிங்க..
என்னடா 6 டாஸ்மாக் கடை இருப்பதை எல்லாம் இப்பதிவில் சொல்லியாகணுமான்னு கேட்குறிங்க இல்லியா? அடுத்த 35 நிமிட பிரயாணத்தில் நாங்கள் பார்த்த டாஸ்மாக் கடைகள் 87 அதாவது எங்கள் கண்ணில் பட்டு நான் எண்ணிய கடைகள்.
உதய்பூரில் அரண்மனைகளும், ஏரிகளும் தானே அதிகம்னு படிச்சோம்! என்ன இத்தனை ஒயின் ஷாப் இருக்கு? உதய் பூரில் தண்ணீர் வசதி அதிகம்னு சொன்னது இதைத் தானோ என்று டாஸ்மாக்கினுள் நுழையாமலேயே கிறுகிறுத்தது.
டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். அரேஜி நிம்பள் உதய்பூர் மே படா படா தண்ணி வண்டி ஆத்மி நெறைய இர்க்காங்ளா ஹை என்றதும் sir I know english என்றார் அந்த டிரைவர். அவர் பெங்காலியாம்.. அவர் சொன்ன விவரங்கள் இதுதான்..
நம்ம தமிழ்நாடு & பாண்டிச்சேரி பார்டர் போல உதய்பூர் நமது பிதாமகரின் மாநிலமான குஜராத் பார்டரில் அமைந்துள்ள்து. குஜராத்தில் பூரண மதுவிலக்கு இருப்பதால் பூரா பயலும் கூட்டம் கூட்டமா குடிக்க வருவது இந்த உதய்பூருக்கு தான்.
அதுதான் இங்கே கடைகள் அதிகம்! உதய்பூருக்கு தினசரி அபார வருமானம் குஜராத் குடிகாரர்களால் வருகிறது என்றார். அகமதாபாத்தே அங்கிருந்து 150 மைல் தூரம் தான். இப்போது கவனித்தால் சாலையில் நிறைய குஜராத் கார்கள் தெரிந்தன.
உதய்பூர் வந்து தங்கி குடித்து போதை தெளிந்த பின்பு ஊர் திரும்புபவர்களும் உண்டு. குஜராத் மாப்பிள்ளைகளுக்கு அம்புட்டு வெறி.. ஏனோ நீரின்றி அமையாது உலகுன்னு எழுதிய வள்ளுவன் வாக்கு என் நினைவுக்கு வந்து போனது.
எனது கடைசி 20 நிமிட பயணத்தில் மின்சார வசதியில்லாத சில ஊர்களையும் பார்க்க முடிந்தது. ஒரு வழியாக மொத்த மின்சாரத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல தூரத்தில் ஜொலி ஜொலித்தது Fairmont 5 ஸ்டார் ஓட்டல் அரண்மனை..
நுழைவோம்…
No comments:
Post a Comment