Sunday, 24 August 2025

பாகுபலி அரண்மனை 🗡️

”உதய்பூர்”- 2



உதய்பூர் Fairmont ஓட்டல் பாகுபலி அரண்மனை போல பரந்து விரிந்து பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. அதன் பின்னே தெரிந்த மலைத் தொடருக்கும் தற்போது பாகுபலி ஹில்ஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்பதை மறுநாள் அறிந்தேன். அரண்மனை வாசலின் எதிரேயிருந்த தூணின் உச்சியில் நான்கு சிங்கங்கள் கம்பீரமாக நின்று ஜொலித்தன.

அலங்கார உடையணிந்த அழகிய ராஜபுத்திரிகள் எங்களை வரவேற்றனர். இசைக் கலைஞர்கள் வாசித்த பாரம்பரியமான இசைக்கு இருபது அழகிய நடனப் பெண்கள் நாங்கள் உள்ளே வரும் போது எங்களுக்கு இரு புறமும் துள்ளலாக நடனம் ஆடியபடியே கூடவே வந்தனர்.. சில நொடிகள் எங்களுக்கே கொஞ்சம் கூச்சமாகத் தான் இருந்தது.

தமிழ் சினிமாக்களில் நம் ஹீரோக்கள் எல்லாம் “எஜமான் காலடி மண்ணெடுத்து, நீ பொட்டு வச்ச தங்கக் குடம்., நீ எந்த ஊரு நான் எந்த ஊரு, தல போல வருமா” பாடல்களுக்கு டான்ஸர்களுக்கு நடுவே நடந்து வருவது எவ்வளவு கடினம் என்றும் நமது நிஜ வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் பலவித வேறுபாடுகள் உள்ளது என்றும் உணர்ந்த தருணம் அது.

அடுத்து அழகிய 10 பெண்கள் சுயம்வரத்தில் மாலையிடுவது போல் நமக்கு மாலை அணிவித்து அந்த கூச்சத்தை இன்னும் கொஞ்சம் கூட்டினர். அடுத்த 10 பேர் நமது நெற்றியில் திலகமிட்டு நம் தலையில் கீரிடம் போல ராஜஸ்தான் தலைப் பாகை அணிவிக்க ஒரு அரசரைப் போன்ற பெருமிதம் வந்தது என்னவோ உண்மை.. மொத்தத்தில் அங்கு நடந்ததெல்லாம்..

நம்ம வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே “மை மம்மி ஆட, மை ஃபாதர் வாசிக்க, என் பிரதர் அதை ரசிக்க” என்று அது போல அந்தக் குழுவினரின் வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. வரவேற்பு ஹாலுக்குள் நுழைந்தோம்.. கொடுத்த கட்டணம் அதற்கே சரி என்பது போல அத்தனை அலங்காரம்! விளக்குகள், சோஃபாக்கள், திவான்கள் எல்லாமே கலைநயமிக்க பேரழகு.

அதியற்புத சுவையில் எலுமிச்சை, நன்னாரி, ரோஜா இதழ்கள் சேர்த்த வெல்கம் டிரிங் ஜில்லென இனித்தது. ஹாலில் இருந்த சோபாவில் மன்னிக்கவும்.. அரியணையில் அமர்ந்தோம்.. என்பதை விட அமர வைக்கப்பட்டோம். அவர்களுக்கு மட்டும் தமிழ் தெரிந்திருந்தால் நமது கைகளைத் தட்டி ‘யாரங்கே’ என்று கூப்பிட்டால் நிச்சயம் 4 பேர் ஓடி வந்திருப்பார்கள்.

ரெஜிஸ்டிரேஷன் நேரம் முடிந்துவிட்டதால். தற்காலிகமாக எங்களுக்கு QR Code உள்ள ஒரு ரிஸ்ட் பேண்ட் தரப்பட்டது. அங்குள்ள அத்தனை அலிபாபா குகைகளும் அந்த QR கோட் இருந்தால் தான் எங்களுக்குத் திறக்கும். அறைகளை முன்பே புக்கிங் செய்துவிட்டதால் பெட்டிகள் அறைக்கு போய்விட்டன. மொத்தம் ஒன்பது தளங்களைக் கொண்ட அரண்மனை அது!

தங்க நிற லிஃப்டில் ஏறி புஷ்பக விமானப் பயணம் போல 7வது மாடியிலுள்ள ரிசப்ஷனுக்குப் போனது, அங்கிருந்து எங்கள் அறைக்கு போனது எல்லாவற்றையும் கொஞ்சம் வேகமாக ஓட்டிவிடுவோம். மணி அப்போது 7:45 இரவு ஒன்பது மணிக்கு மாடியில் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இரவு விருந்து என்றார்கள். அறைக்கு சென்று தயாரானோம்.

அற்புதமான அந்த அறையின் அழகை அடுத்த எபிசோடில் பார்ப்போம். மாடியில் நடைபெறவுள்ள விதவிதமான நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரலை அழகாக பிரிண்ட் செய்து வைத்திருந்தனர். பலூன் ஷோ, ட்ரோன் ஷோ, சிதார் & டிரம்ஸ் இசை, பாப் & சினிமா பாடல்கள் என அந்த நிகழ்ச்சி நிரல் நிரம்பி வழிய எங்கள் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.

பார்ட்டியில் கருப்பு & சில்வர் நிற டிரஸ் கோட் என ஏற்கனவே தெரியும். உடைகள் மாற்றி அந்த மாடிக்குச் சென்றோம்! வாவ் அதை மாடி என்று சொல்லக்கூடாது.. அரண்மனையின் உப்பரிகை என்றே சொல்லவேண்டும். நடுவில் பெரிய நீரூற்று அதன் இரு புறமும் அழகிய பளிங்கு மண்டபங்கள். எங்கும் அழகிய விளக்குகளில் அலங்காரம், 300 நபர்கள் அமரலாம்.

இமயம் முதல் குமரி.. அட இருங் பாய்.. அம்பானி வீட்டுத் திருமணம் முதல் அரியலூரில் திருமணம் நடத்துபவர் வரை எல்லா ஈவண்ட் மேனேஜர்களும் அங்கே குவிந்திருந்தனர். இங்கே நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகள் வெட்டிங் துறைக்கு முற்றிலும் புதியது என்பதால் எல்லார் முகத்திலும் பரபரப்பும், அளவு கடந்த மகிழ்ச்சியும், ஆர்வமும் தெரிந்தது.

விதவிதமான ஸ்டார்டர் வகை உணவுகளை தட்டிலேந்தி உலா வரும் 50 நபர்கள், 4 மதுக் கூடங்கள், 6 பஃபே கவுண்ட்டர்கள், அமர்ந்து சாப்பிட 2 கவுண்ட்டர்கள், ஹுக்கா புகைக்க இரண்டு, ஜுஸ் & ஐஸ்க்ரீமிற்கு தலா 2 கவுண்ட்டர்கள்.. அடடா! இந்திர லோகம் இப்படித்தான் இருக்கும் என்றால் நம்பலாம். அந்த உப்பரிகையெங்கும் காற்றில் உற்சாகமும் கலந்திருந்தது…

கலை நிகழ்ச்சிகள் துவங்கின.. வாவ் ‼️

ரசிப்போம்…

No comments:

Post a Comment