சுந்தராபுரி என்னும் நாட்டை சுந்தரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். கல்வி கேள்விகளில் சிறந்தவனான அம்மன்னன் சிறந்த புலமையும் பெற்றவன் ஆவான். சுந்தரவர்மன் அறிவில் மட்டுமல்ல அழகிலும் மன்மதன்.
அவனை திருமணம் செய்து கொள்ள பல நாட்டு இளவரசிகள் விரும்பி போட்டி போட்டனர். சுந்தரவர்மனுக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். அவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் ராஜகுமாரியாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவளும் கல்வியில் சிறந்தவளாக, ஏன் அவனை விட மிகுந்த புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று விரும்பினான். பல தேசங்களில் தேடியும் அவன் எதிர்பார்த்த அளவு அறிவிற் சிறந்த அரசகுமாரிகள் ஒருவரும் கிடைக்கவேயில்லை.
பல நாடுளில் இந்தத் தேடல் நடந்தது. சுந்தராபுரிக்கு அருகில் இந்திராபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அங்கே வீரபாகு என்னும் தச்சர் வசித்து வந்தார். வீரபாகுவின் வீடு ஊரின் நடுவே இருந்த குருகுலம் ஒன்றின் பக்கத்தில் இருந்தது.
வீரபாகுவிற்கு ஒரே மகள், அவள் பெயர் இந்திரா, மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் அவளால் ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க இயலவில்லை. ஆனால் அவளுக்கு கல்வியின் மீது தீராக் காதல் இருந்தது. அதிகம் படிக்க ஆசைப்பட்டாள்
அவளது வீடு, குருகுலம் பக்கம் அமைந்தது அவளுக்கு மிகவும் வசதியாக இருந்தது! வீட்டில் தந்தை வீரபாகு செய்யும் தச்சு வேலைக்கு உதவிக் கொண்டே பக்கத்தில் குரு குலத்தில் நடத்தும் பாடங்களை தன் காதால் கேட்டே கற்று வந்தாள்.
அந்த குருகுலத்தில் பெரிய செல்வந்தர்கள், பிரபுக்கள், அமைச்சர்களின் பிள்ளைகள் படித்து வந்தனர். அடிக்கடி அவர்களுக்கு அங்கு தேர்வு நடக்கும். பரமானந்தர் என்பவர் தான் அந்த குருகுலத்தின் தலைமை ஆசிரியர் ஆவார்.
ஒரு முறை அந்த குருகுலத்தில் படிக்கும் மாணவர்களை அயல் தேசத்தில் இருந்து வந்த அறிஞர் ஒருவர் கடினமான தேர்வுகளை வைத்து சோதித்தார் அதற்கு பதில் கூற முடியாமல் அம்மாணவர்கள் திணறிப் போய் நின்றனர்.
அதை பக்கத்து வீட்டிலிருந்து கவனித்து வந்த இந்திரா அந்த அறிஞரிடம் போய் ஐயா இந்தக் கேள்விகளுக்கு நான் பதில் கூறட்டுமா என்று பணிவுடன் கேட்டாள். இந்திராவை பார்த்த பரமானந்தர் அம்மா தச்சன் மகளான உன்னால் முடியுமா?
இந்த குருகுலத்தில் பல ஆண்டுகளாக படிக்கும் பெரும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளே இங்கு பதில் தெரியாமல் திணறும் போது நீ எப்படி விடையளிப்பாய் என்றார் அவநம்பிக்கையாய். வெளிநாட்டு அறிஞர் இதைக் கேட்டதும்..
பரமானந்தரே யாரையும் குறைவாக எண்ணாதீர்கள் அந்தப் பெண்ணுக்கு ஒரு வாய்ப்பளிப்போமே என்றார். அவரும் தலை அசைக்க அத்தனை கேள்விகளுக்கும் தயங்காது அழகாக பதிலளித்தாள் இந்திரா. அனைவரும் வியந்தனர்!
எப்படியம்மா இதெல்லாம் உனக்குத் தெரியும் என்று கேட்ட போது ஐயா நான் தினமும் என் வீட்டிலிருந்து பாடங்களை காதால் கேட்டே கற்றுக் கொண்டேன் என்றாள். அயல் தேசத்து அறிஞர் அம்மா நீ இன்னும் வாழ்வில் உயர்வாய் என்றார்.
அடுத்த வாரமே அந்த அறிஞர் சுந்தராபுரிக்கு விஜயம் செய்தார். அங்கு சுந்தரவர்மனை சந்தித்து சகலமும் அறிந்தவர் சுந்தரனை மணக்கப் பொருத்தமானவள் இந்திராவே என்று கணித்து நடந்ததை அவனிடம் சொன்னார்.
சுந்தரவர்மனும் இந்திராபுரிக்கு நேரில் சென்று இந்திராவின் குடும்பத்தினரை சந்தித்து அவளை மணமுடித்து சுந்தராபுரிக்குத் திரும்பினான். பிள்ளைகளே கல்வியே சிறப்பு கல்வியால் வாழ்வில் மிகப் பெரும் உயரத்தை அடையலாம்.
இதுவே இக்கதையின் நீதி.. சரிதானே குழந்தைகளே 📕📖📚
No comments:
Post a Comment