கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி மிகுந்த வசதி படைத்த பெரும் முதலாளிகள் வசிக்கும் பகுதி. ஆனால் அங்கே ஒரு தெருவில் சின்ன கிராமங்களில் புகழ் பெற்ற மருத்துவர்கள் அல்லது குறி சொல்பவர்களை பார்க்க பெருங் கூட்டமே கூடியிருக்குமே அது போல ஒரு கூட்டம் நாற்காலிகள் போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே வளர்மதி மெஸ்ஸில் சாப்பிடக் காத்திருப்பவர்கள். அந்தத் தெரு நெடுக கார்களும், பைக்குகளும் வரிசையாக நிற்க மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். சட்டென பார்த்தால் பெரிய நடிகரின் புதுப்பட ரிலீஸ் அன்று முதல் காட்சிக்கு வந்து காத்திருப்பது போல கூட்டம்.
பொதுவா உணவுக்கு மக்கள் காத்திருந்து சாப்பிடுவது கடையின் உணவில், தரத்தில் ஒர்த் இருந்தால் மட்டுமே நிகழும். அப்படி என்ன தான் இங்கே இருக்கு பார்க்கலாம் என்று 67வது நபராக நானும் கூட்டத்தில் ஐக்கியமானேன். மணி 2 ஆக 10 நிமிடம் இருந்தது. 2:20க்கு தான் என்னை உள்ளே சாப்பிட அழைத்தனர்.
கடையின் பரபரப்பில் போய் அமர்ந்ததும் வாழை இலை விரித்து, தண்ணீர் வைத்து, உணவு ஆர்டர் எடுக்க வெறும் 2 நிமிடம் தான். இந்த வேகம் தான் அவர்களது பலம். பக்கத்து டேபிளில் பரிமாறப்பட்ட பிரியாணியை பார்த்ததுமே தெளிவாகத் தெரிந்து விட்டது இது பிரியாணிக்கான கடை அல்ல என்பது.
வெள்ளைச் சோறு, கறிக்குழம்பு இரண்டுமே இதில் தான் நாங்க பெஸ்ட்னு வாசனை மூலம் சொன்னது. நம்ம டிரைவர் அண்ணனை எச்சரித்தும் தலைகீழாகத் தான் குதிப்பேன்னு மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தார் முதல் வாய் வைத்த மறு நொடி என்னை பரிதாபமாக பார்த்தார், பிரியாணி அவ்வளவு பிரமாதமாக இல்லை!
ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு அந்த பிரியாணியை நாங்க 4 பேர் ஷேர் செய்து உதவினோம். அசைவ சாப்பாடு சொன்னதும் வெள்ளைச் சோறு சூடாக பரிமாறி மூன்று கிண்ணங்களில் குழம்பு வைத்தனர். முறையே M - NK - F என்று கருப்பு மார்க்கரால் அதில் எழுதியிருந்தது. (மட்டன் - நாட்டுக்கோழி - மீன்)
இது தான் அந்த இனிஷியலுக்கு காரணம் என்பது உள்ளங்கை கோலா உருண்டையாக விளங்கியது. சூடான கோலா உருண்டை கிரிஸ்பியாக இருந்தது. நல்ல பக்குவமாக செய்த சமையல். குழம்பு வகைகள் அனைத்துமே ருசியில் குறைவில்லை. சோற்றுடன் பிசைந்து சாப்பிட தரமாகவே இருந்தது.
நாங்கள் நால்வர் மட்டன் சுக்கா, பிச்சு போட்ட நாட்டுக் கோழி, மாந்தல் மீன் வறுவல், ஆம்லெட், என்று ஆளுக்கொரு ஆர்டர் செய்து அதை பகிர்ந்துண்டோம். அனைத்துமே பிரமாதமாக இருந்தன. அந்த ருசிக்கு முக்கிய காரணம் அவர்கள் சேர்க்கும் தனித்துவமான மசாலா தான் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது.
அவர்கள் தாயார் பார்த்து பார்த்து நேர்த்தியான மூலப் பொருட்களை வாங்கி உலர்த்தி அரைத்து தயாரிக்கும் மசாலா என்று பின்னர் விசாரித்து அறிந்து கொண்டோம். மாந்தல் மீன் எல்லாம் அல்வா போல அவ்வளவு பிரமாதமான கார சாரத்துடன் இருந்தது. மட்டன் மற்றும் நாட்டுக்கோழியும் மிகப் பிரமாதம்.
சிவப்பு சிந்தாமணி மிளகாய், மிளகு, பச்சை மிளகாய் இந்த மூன்றையும் இவர்கள் பக்குவமாக பயன்படுத்தி இருக்கும் விதத்தில் தான் மட்டன், சிக்கன், மீன் மூன்றையும் தனித்த ருசியில் தரமுடிகிறது. மஞ்சள், மல்லி, சீரகம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய்னு எல்லா மசாலாவையும் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.
கறிக்குழம்புகளை விட எனக்கு அவர்களின் ரசம் மிக மிகப் பிடித்திருந்தது. ஆம்லெட்டுடன் சாப்பிட அதகளமாக இருந்தது. கேசரி போல ஒரு ஸ்வீட் தந்தனர் அதுவும் அருமை. தயிர் சோறு வாங்காமல் சிங்கம் புலி சொல்வது போல சோறு, சோறு, சோறு, ரசம், ரசம், ரசம் என்றே எனது சாப்பாட்டை முடித்தேன்.
நான்கு பேருக்கு சேர்த்து பில் தொகை ரூ.1948/- வந்தது. வளர்மதி மெஸ் அசைவ உணவுகளுக்கு அவர்களது மசாலா பொருட்கள் தான் பின்புலமாக இருக்கின்றது என்பதே உண்மை. பிரியாணி 50 மார்க் தான். புரோட்டா நல்லா இருக்கும்னு சொன்னாங்க அடுத்த முறை அதை முயற்சிக்கலாம்னு இருக்கேன்.
இங்கே சாப்பிடப் போறேன்னு சொன்ன பதிவிலேயே சிலர் இது ஓவர் ஹைப் கடைங்க, இப்ப முன்ன மாதிரி இல்ல, அநியாய விலைங்க இப்படி எல்லாம் கமெண்ட் போட்டு இருந்ததை மீறித் தான் போனேன். எனக்கு இங்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ரேஸ் கோர்ஸில் அமைந்தாலும் ருசியில் நிதானமாகவே செல்கிறது.
ஏவ்வ்வ்வ்வ்






No comments:
Post a Comment