Sunday, 3 January 2016

19. குத்து விளக்கெரிய...

#ஆண்டாள்_பெருமை

திருப்பாவை முழுவதும் ஆண்டாள் ஒவ்வொருவரையும் தூக்கத்திலிருந்து எழ்ந்துரு அஞ்சலி எழ்ந்துருன்னு அஞ்சலி பாப்பாவை எழுப்புவது போல் கத்தாமல் அழகுத் தமிழில் பாடி எழுப்புகிறார். ஆண்டாளின் தேன் தமிழுக்கு மயங்கி தினமும் எழுகிறார்கள். ஆனால் இன்று ஏகாந்தமாக இருக்கும் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்ப வேண்டும் அவர்கள் ஒரு சுகமான சுகந்தமான உறக்கத்தில் இருப்பதாக வர்ணிக்கிறார்.

அவர்கள் தூங்கும் அறையை பாருங்கள்.. கொஞ்சம் பிரைவசியாக இருக்கிறார்கள் வெளிச்சம் வேறு.. எட்டிப் பார்ப்பது அநாகரீகம் தான் ஆனால் எழுப்ப வேண்டுமே.. அதோ குத்து விளக்குகள் நின்றெரியும் உறுத்தாத வெளிச்சம்,யானை தந்தத்தில் செய்த டபுள் காட் கட்டில்,மேலே அன்னப்பறவையின் சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு எல்லாம் நிரம்பிய மென் மெத்தை, அழகிய வெண்ணிற திரைச்சீலைகள், ஊடுருவும் மார்கழிக் குளிர்.

இத்தனைக்கும் நடுவே கொத்து கொத்தாய் நறுமண மலர்களை சூடிக் கொண்டுள்ள நப்பின்னை படுத்திருக்க இருக்கிற மென்மெத்தை போதாது என அவள் மார்பகங்களில் தலை சாய்த்து உறங்கும் கண்ணா! நீவாய் திறந்து பேச மாட்டாயா.. அழகிய பெரிய மையிட்ட விழிகளுடைய நப்பின்னையே நீயாவது உன் கணவனின் பிரிவை சிறிது நேரம் பொறுக்கலாமே.. அவனை எழுப்பிவிடு.

நீ இப்படி இருப்பது நியாயமும் இல்லை நல்ல குணமும் இல்லை.. குளிர், மெல்லிய ஒளி, தந்தக்கட்டில், கொத்து மலரின் நறுமணம், இலவம் பஞ்சு, இளம்பெண் நெஞ்சு ஆஹா.. கண்ணன் தூங்குவது போல இப்படி ஒரு சுகமான தூக்கத்திலிருந்து நாமெல்லாம் எழுந்திருப்பதே கஷ்டம். அதையும் மீறி எழும்பியது ஆண்டாளின் பாசுர இனிமையில் என்பதே உண்மை.

மார்கழி 19 ஆம் நாள் பாடல்...

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

Saturday, 2 January 2016

18.உந்து மதகளிற்றன்...

18. உந்து மதகளிற்றன்

#ஆண்டாள்_பெருமை

அழகானப் பெண்ணைப் பெண் வர்ணிக்கும் போது எப்படி இருக்கும்? ஆண் கவிஞர்களை விட அழகிய உவமையோடு பெண் கவிஞர்கள் இன்னொரு பெண்ணை பாராட்டுவதெல்லாம் அரிதினும் அரிது.. அதுவும் இன்னொருத்தி அழகு என்றெல்லாம் அவ்வளவு எளிதில் புகழ மாட்டார்கள்.. ஆனால் ஆண்டாள் இந்தப்பாடலில் நந்தகோபரின் மருமகளை எழுப்புகிறார் இப்படி.

மதங் கொண்ட யானையை மோதித் தள்ளும் ஆற்றலும் போரில் பின் வாங்காத வலிமை மிகு தோளும் உடைய  நந்தகோபன் மருமகளே.. நப்பின்னையே.. நறுமணம் மிகுந்த கூந்தல் காரியே வந்து கதவைத் திற.. கோழிகள் கூவி பொழுது புலர்ந்துவிட்டது மல்லிகைப்பூ கொடி பந்தலாக படர்ந்திருக்க அதற்குள் வசிக்கும் குயில்கள் பல முறை கூவிவிட்டன.

பந்தை தாங்கிய கைபோல் கச்சிதமாய் விரலழகு கொண்டவளே.. 
உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம் உன் செந்தாமரைக் கைகளில் வளையல் குலுங்க மகிழ்வோடு வந்து கதவைத்திற.

முகத்தை அல்லது விழிகளை தாமரை மலருக்கு ஒப்பிடுவார்கள் ஆனால் ஆண்டாள் தாமரை போன்ற கைகள் என்கிறார்..பந்தார் விரலி என்கிறார் மணம் வீசும் கூந்தல் என்கிறார் கூந்தலுக்கு மணம் இருக்கிறதோ இல்லையோ ஆண்டாளுக்கு வஞ்சனையின்றி இன்னொரு பெண்ணை போற்றுகின்ற மனம் இருக்கிறது.

ஆனால் இந்த நப்பின்னை பற்றி பாசுரங்களில் மட்டுமே வருகிறது.. ஒரு வேளை கிருஷ்ணனை காதலித்த முறைப் பெண் கேரக்டரா அல்லது இந்த எபிசோடு ஆழ்வார்கள் காலத்தில் மட்டும் இருந்து பின் நீக்கப்பட்டதா என்பதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

இந்த 18ஆம் நாள் பாடலின் இன்னொரு விசேஷம் இது இராமானுஜருக்கு மிகப் பிடித்த பாசுரம். இராமானுஜரே தீவிர திருப்பாவை விசிறி எவரும் அவரை இராமானுஜர் என்றழைப்பதை விட திருப்பாவை ஜீயர் என்று அழைப்பதையே அவர் மிக விரும்பினார். இன்றும்  இந்தப் பாடலை மட்டும் கோவில்களில் இரு முறை பாடுவது வழக்கம்.. ஆண்டாளின் தமிழை இரு முறையல்ல கோடி முறை பாடினாலும் கேட்டாலும் திகட்டவே திகட்டாது.

மார்கழி 18 ஆம் நாள் பாடல்...

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Friday, 1 January 2016

17. அம்பரமே தண்ணீரே...

நிச்சயிக்கப்பட்ட அத்தை மகள் திருமணத்திற்கு முன் நம் வீடு வரும் போது எடுத்தவுடன் அத்தானை கேட்காமல் மாமா சவுக்கியமா அத்தை சவுக்கியமா நாத்தனார் சவுக்கியமா என பைபாசில் பிரயாணித்து அத்தான் என்னும் ஊருக்கு வருவதற்குள் வெட்கம் பிடிங்கித்தின்னும். அதுவும் அவர்கள் சரி சரி இதுக்கு தானே இவ்வளவு சுத்தி வந்தே..எனக் கேட்கும் போது..

அங்கே கையும் களவுமாய் பிடிபட்ட நிலை ஏற்படும் இருப்பினும் அதெல்லாம் சுகமான வலி.. இங்கும் ஆண்டாள் ஒவ்வொருவராக எழுப்பி கடைசியில் கண்ணன் என்கிறார்.. அதிலும் நந்தகோபா எழுந்திரு யசோதா எழுந்திரு என எல்லாரையும் எழுப்பி கண்ணனை மட்டும் பலராமா அப்படியே உன் தம்பி கண்ணனையும் எழுப்பு என்கிறார் நாணம் ததும்ப.. அதுமட்டுமின்றி..

உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர் இம்மூன்றும் மனிதனுக்கு அவசியம் வேண்டும் என உலகில் முதன் முதலில் சொன்னவர் ஆண்டாளாகத் தான் இருக்க வேண்டும்.இதைக் கேட்ட ஆண்டாள் இருக்க இடம் மட்டும் ஏன் கேட்கவில்லை..? உலகில் சொந்தமாக சில சதுர அடிகள் நிலம் கிடைப்பதை விட உலகத்தை ஓங்கி தன் திருவடிகளால் அளந்த நாராயணன் காலுக்கு கீழ் ஒரிடம் கிடைத்தால் அதுவே அவருக்கு போதும்.

மார்கழி 17 ஆம் நாள் பாடல்...

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த
உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

Wednesday, 30 December 2015

16. நாயகனாய் நின்ற...

#ஆண்டாள்_பெருமை

பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்களது செக்யூரிட்டிகளுக்கு நாம் பெரும் மரியாதை தருவோம் கிட்டத்தட்ட அந்த வி.ஐ.பி.யாகவே அவரும் பிகு செய்வார். இந்த பூசாரிகள் வரமளித்தால் தான் நீங்கள் கடவுளையே காண முடியும். இவ்வளவு ஏன் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாட்ச்மேன் காலில் விழுந்து அனுமதி கேட்ட எத்தனையோ பேர் இன்று மிகப் பெரிய பிரபலங்கள் ஆகியிருக்கின்றனர்.

இந்தப் பாடலில் விழித்தெழுந்த பெண்கள் நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு வந்து வாயில் காப்போனிடம் கேட்கிறார்கள் எங்கள் நாயகன் நந்தகோபனின் கொடி பறக்கும் தோரண வாயிலை காவல் காப்போனே ஆயர்குலப் பெண்கள் எங்களுக்கு வேண்டியதை தருவேன் என நேற்றே சொன்னார் மாய மணிவண்ணர் அவரை எழுப்ப வந்துள்ளோம்.

நோன்பிருந்து நீராடி தூய்மையாக வந்துள்ளோம் நாங்கள் வந்த இந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு அழகிய இம் மணிக்கதவின் தாழ்ப்பாளை திறந்துவிடு.. இந்த காலத்தில் இவ்வளவு இளம்பெண்கள் கூட்டமாகப் போனால் இப்படியெல்லாம் பாட வேண்டாம் வாட்ச்மேனே வாயில்  ஜொள்ளு விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான்.

ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளை காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இவை இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.. இன்று மேகம் முகில் போன்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கில் உள்ளன.

இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையைக்  குறிப்பிடுகிறார். நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது. ஆண்டாள் எழுதிய தமிழ் நென்னலில் மட்டுமன்று என்றும் கன்னல்.

மார்கழி 16 ஆம் நாள் பாடல்...

நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

15. எல்லே இளம்கிளியே...

#ஆண்டாள்_பெருமை

இதற்கு முன் வந்த 14 பாடல்களில் கோபியரை எழுப்பிய ஆண்டாள் இந்த 15 வது பாடலிலிருந்து அவர்களோடு உரையாடுகிறார். ஒருவரின் குணநலன்கள் பற்றி அறிந்து நெடுநாள் பழகிய இருவர் பேசும் பேச்சில் நக்கலும் நையாண்டியும் தொனிக்கும் அல்லவா.. "நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத்தெரியும் இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் மகனே"என்று கவுண்டமணி சொல்வது போல.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை நாம் கவனிப்பதில்லை நிறைய சானல்களில் ரிமோட்டை தேட வைப்பது சுவாரஸ்மில்லாத பேச்சுகள் தான்.. ஆண்டாளின் இந்த பாசுரத்தின் விளக்கத்தை மட்டும் வட்டார வழக்கான சென்னைத் தமிழில் இருவர் பேசிக் கொள்வதைப் போல பார்க்கலாமா எளியவர்களின் மொழியில் படிக்கஒரு சுவாரஸ்யம் கிடைக்கும்

எயுப்புறவங்கோ : இந்தாம்மே கிளி கணக்கா இர்க்குற பொண்ணே ! எம்மாநேர்ந்தான் தூங்கிகினு இர்ப்ப?

படுத்துனு இர்க்கற பொண்ணு : ஏ.. இன்னா அல்லாரும் கீச் கீச்னு கொரல் வுடுறீங்க? கம்முனு கிடங்கோ தோ வந்துரேன்....

எயுப்புறவங்கோ : நீ மெய்யாலுமே படா கில்லாடி தாம்மே நீ இன்னா பேசுவேன்னு எங்க அல்லாருக்கும் மின்னாடியே தெர்யும்.. வுன் வாய்ல இர்ந்து இன்னா வரும்ன்னும் தெர்யும்..

படுத்துனு இர்க்குற பொண்ணு : ஆரு நானா கில்லாடி.... நீங்க தாம்மே படா கில்லாடிங்கோ!  உங்க அல்லாரையும் கண்டுகினு தான் நான் கத்துகினு இருக்கேன்.....

எயுப்புறவங்கோ : தோடா... எயுந்து வராம பட்த்துகினே சொம்மா பேசிகினே இர்க்கே! சுகுரா எயுந்துரும்மே! விர்தம் இர்க்குறத வுட அப்டி உனுக்கு இன்னா பெர்ய வேல கீது?.

படுத்துனு இர்க்குற பொண்ணு : அல்லாரும் வந்துகினாங்களா?

எயுப்புறவங்கோ : அக்காங் ! அல்லாரும் வந்துகினாங்கோ!வோணும்ன்னா நீயே வந்து கரீட்டா கீதான்னு எண்ணிக்கோ....

மதுரா புரியில பெர்ய ஆனையவே பூன மேறி மிறிச்சி கொன்னவரு... எதுக்குரவன் நெஞ்சுல இர்க்குற மஞ்சா சோத்த எட்த்து அவன் ஆணவத்த உண்டுல்லைன்னு ஆக்குனபரு..அவர பத்தியே பாடினு இர்ப்போம் எயுந்து வா கண்ணு.. 

சென்னைத்தமிழ் பேசுபவர்கள் ஆண்டாளைப் படித்தால் இப்படித்தான் பேசுவார்களா எனக் கேட்டால் இல்லை அவர்கள் நல்ல தமிழுக்கு மாறி விடுவார்கள் என்பேன்.. ஏனெனில் பக்தியில் தமிழ் வளர்த்த தங்கத் தாரகை இதய தெய்வம் புரட்சித்தலைவி நிரந்தர முதல்வர் எங்கள் அம்மா ஆண்டாள் அருளிய பாசுரங்கள் அப்படி.

மார்கழி 15ஆம் நாள் பாடல்...

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

Tuesday, 29 December 2015

14. உங்கள் புழக்கடை...

#ஆண்டாள்_பெருமை

லேட்டஸ்ட் பாத்ரூம் ஃபிட்டிங் சார் கிட்டத்தட்ட 20 இலட்சம் செலவாச்சு ஒரு ஸ்டீம் பாத் & மல்டி ஷவர் சேம்பர் பிக்ஸ் பண்ணியிருக்கேன் வாட்டர் பிரஷர்ல தெறிக்கும் பாருங்க அதுல குளிக்கிறதே தனி சுகம் பைப் எல்லாம் ஜாகுவார் கம்பெனி.. குழந்தைகளுக்கு ரிவால்விங் பாத்டப் கூட ஒண்ணு இருக்கு.. இது இன்றைய வசதி படைத்தவர்களின் குளியலறை.

ஆனால் 20இலட்சமல்ல 20 கோடி கொடுத்தாலும் கிட்டாத நேச்சுரல் பாத் ரூம் ஆண்டாள் காலத்தில் பாருங்களேன் வீட்டு பின் புறத்தில் அமைந்துள்ள குளம் அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி என்பதால் நிச்சயம் சில்லென்ற நீர்  இப்படி ஒரு குளத்துக் குளியல் மல்டி ஷவர் தருமா.? அந்த பெண்ணை எழுப்புகிறார்..

பெண்ணே காலையில் சூரியன் உதித்து தாமரை மலர்ந்து அல்லி மூடி விட்டது வெண்ணிறப் பற்கள் மின்ன காவியணிந்த துறவிகள் அவர்களின் ஆன்மிகக் கடனான சங்கு முழங்க கிளம்பிவிட்டனர். உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்கு வெட்கமாக இல்லை.. எழுந்து வா

நீளக்கைகள் இரண்டில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கும் தாமரைக் கண்ணனை அவரின் அழகை அவர் பெருமையை வாயாரப்பாடலாம் வா.
மலர் மலர்வதை வாய் திறப்பு எனவும் மொட்டு மூடிக்கொள்வதை வாய் மூடி எனவும் ரசனையோடு ஆண்டாள் விளக்கியிருப்பதை பாருங்கள்.

இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் மனிதர்கள் திறந்த வாய் மூட மறந்து திளைத்துக் கிடக்கிறார்கள் ஆண்டாளின் தமிழ் குளத்தில்.

மார்கழி 14 ஆம் நாள் பாடல்...

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

Sunday, 27 December 2015

13. புள்ளின்வாய்க் கீண்டானை...

#ஆண்டாள்_பெருமை

சரக்கிருக்கு ரபபப்பப்பா... முறுக்கிருக்கு ரபபப்பப்பா... இந்த வரிகள் ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்ல பாடலிலும், சரக்கிருக்கு.. முறுக்கிருக்கு.. எனக்கெதுக்கு மனக் கவலை.. இந்த வரிகள் புதுச்சேரி கச்சேரி எக்கசக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன் பாடலிலும் வரும்.. முதல் பாடல் அபூர்வ சகோதரர்கள் படம் இரண்டாவது சிங்கார வேலன் படம்.

இரண்டுமே கமல் படம் இரண்டையும் எழுதியவர் கவிஞர் வாலி.. நான் கூட இவ்வளவு பெரிய கவிஞர் வாலிக்கு இந்த இருவரிகளை விட நல்ல வரிகள் அவர் கற்பனையில் வரவில்லையா என நினைத்ததுண்டு.. ஆண்டாளின் பாசுரம் படித்த பின்பு அதற்கு விளக்கம் கிடைத்தது.. ஆண்டாளும் ஒரே வார்த்தையை வேறு வேறு பாசுரங்களில் பயன்படுத்தியுள்ளார்.. அது மார்கழி 6ஆம் நாள் பாடல்.

6 ஆம் நாள் பாசுரத்தின் முதல் அடியில் புள்ளும் சிலம்பினகாண் என்னும் அதே வார்த்தையை 13 ஆம் நாள் பாசுரத்தின் 5 வது வரியில் அப்படியே உபயோகிக்கிறார்.. கொக்கின் வடிவெடுத்து வந்த அசுரன் பகாசூரனின் வாயைப் பிளந்தவன்.. ராவணனின் பத்துத் தலைகளை கிள்ளியெறிந்தவன் அவன் புகழ்பாடி மற்ற பெண்கள் எல்லாம் நோன்பிருக்க சென்று விட்டனர்.

வெள்ளி முளைக்க வியாழன் மறைய கூட்டில் இருக்கும் பறவைகளும் சப்தம் எழும்புகின்றன போதரிக் கண்ணுடைய பெண்ணே.. போதரிக் கண் என்றால் வண்டமர்ந்த தாமரைப்பூ போன்ற கண்களாம்.. கரு விழிகளை வண்டாகவும் கண்ணை தாமரையாகவும் உவமைப் படுத்துகிறார் ஆண்டாள். இம் மார்கழி நன்னாளில் எங்களோடு வந்து குளிரக்குளிர குளிக்காமல் ஏன் இப்படி..

பள்ளி கொண்டு உறங்குகிறாய்.? நீ உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறக்கம் வருவது போல நடிக்கிறாயா.? எங்களுடன் வந்து சேர்ந்து கொள் எம்பாவாய்.. என செல்லமாகவும் உறங்குபவளை அதட்டுகிறார் ஆண்டாள். ஆண்டாளின் திருப்பாவை ஒரு டூ-இன்- ஒன் அதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம்.

மார்கழி 13 ஆம் நாள் பாடல்...

புள்ளின்வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.