Tuesday, 14 October 2025

அக்பரும் பிரியாணியும்

மாமன்னர் அக்பர் வித விதமாக உணவுகள் உண்ணுவதிலும் மிக ரசனை மிக்கவர். தினசரி அசைவ உணவு, அதிலும் புதுப் புது ரெசிபிக்கள் கண்டு பிடிக்க 11 பேர் கொண்ட குழுவாக பலப்பல குழுக்கள் வேலை பார்த்தார்களாம்.

வார இதழ்களோடு இலவசமாகத் தரும் 16பக்க ரெசிபி புத்தகம் போல 10 வருடங்கள் கொடுத்தால் எத்தனை புத்தகம் வருமோ அதைவிட 10 மடங்கு அதிக ரெசிபிக்கள் கண்டுபிடித்தும் அவரது உணவுப்பசி அடங்கவில்லையாம்.!

அரண்மனை தலைமை சமையல்காரர் கொஞ்சம் ஆடிப்போய் என்னா நாக்குய்யா இந்தாளுக்கு என்று சலித்துக் கொள்ளும் அளவுக்கு அக்பரது உணவு ரசனை இருந்ததாம். சமையல்காரர் ஆப்கானின் காபூல் நகரை சேர்ந்தவர்.

அவருக்கு லீவில் சொந்த ஊர் போக ஆசை, வாக்கப்பட்டு வந்த பெண் கூட வருடத்தில் 3 முறையாவது அம்மா வீட்டுக்கு போகலாம். ஆனால் இவர் வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.. கிட்டத்தட்ட வனவாசம் மாதிரி சமையலறை வாசம்.

வருடா வருடம் வரும் ரம்ஜான், பக்ரீத் லீவுகள் கூட சாங்ஷன் ஆகவில்லை. ஒரு நாள் அக்பரிடமிருந்து ஒரு உத்தரவு. இது வரை நான் ருசிக்காத அளவுக்கு ஒரு ருசியான உணவை சமைத்தால் 13 வருட போனசுடன் 6 மாதம் விடுமுறை.!

அப்படி இல்லாவிட்டால் 5 ஆண்டு ஜெயில் சமையல்காரருக்கு ஜெயில் ஒன்றும் பெரிதாக பயமுறுத்தும் தண்டனை அல்ல. (ஆல்ரெடி13 வருஷம் அது தானே) 13 வருட போனஸ் 6 மாத விடுமுறை என்ற அறிவிப்பு தான் அவரை குஷியாக்கியது.

இரவு பகல் பாராது வெறி பிடித்தது போல் புதுசு புதுசாக சமைத்து அனுப்பத் துவங்கினார். ஆனால் அக்பரோ இது போன வாரம் செய்த மீன் வறுவல் மாதிரி இருக்கு, இது போன ரம்ஜான் அன்று சாப்பிட்ட சுக்கா மாதிரி இருக்கு.

இந்த சிக்கன் தான் எப்பவும் சாப்பிடுறனே, இது என்ன மூளை ரோஸ்ட் கொழ கொழன்னு, பீஃப் வால் சூப், கூல் சூப் போல ஆறியிருக்குன்னு கமெண்ட்ஸ் போட்டுக் கொண்டிருந்தாரே ஒழிய அவரிடமிருந்து ஒரு லைக்ஸ் கூட விழவே இல்லை.

இந்தக் கொடுமையை யாரிடமும் ஷேர் செய்ய முடியாத சமையல்காரர் மனதிற்குள் தன் புலம்பல் ஸ்டேட்டஸ்களை டர்ன் ஆஃப் நோட்டிபிகேஷனில் வைத்து புலம்பிக் கொண்டு இருந்தார் திடீரென தான் அந்த சோகச் செய்தி வந்தது.

இன்று மதிய உணவில் தான் எதிர்பார்த்த புதிய உணவு வகை சமைக்காவிட்டால் சமையல்காரரை உடனே சிறையில் அடைத்துவிடு என அக்பர் உத்தரவிட்டு இருப்பதாக. சமையல் காரர் விரக்தி அடைந்தார், இனி இருப்பது 3 மணி நேரம்..

மனம் போன போக்கில் சமைக்க துவங்கினார். வெட்டிய கறியை கொதிக்கும் சோற்றில் போட்டு அரைத்த மசாலா கலவையை கொட்டிக் கிளறி பாத்திரத்தை நன்றாக மூடி வைத்து விட்டார். நன்றாக வெந்ததும் அந்த அடுப்பிலுள்ள..

தீயைக் குறைக்க எரியும் விறகுகளை வெளியே எடுத்தவர் ஏதோ நினைப்பில் அதை மூடி வைத்த தட்டுக்கு மேல் வைத்து விட்டு அமர்ந்துவிட்டார். 1மணி நேரம் ஆயிற்று. மன்னருக்கு பரிமாறும் பணியாளர்கள் அங்கே வந்து வியந்தார்கள்.

என்ன இது அடுப்பில் உள்ள எரிந்த விறகுகள் பாத்திரத்தின் மேல் இருக்கே?! சரி எதோ புதுவித சமையல் போலும் என நினைத்து ஐயா உணவு தயாரா? சமையல்காரர் இப்போது தான் சுயநினைவுக்கு வந்தார். திரும்பி பார்த்து திடுக்கிட்டார்.

அடுப்பின் மேலுள்ள பாத்திரத்தின் மீது விறகு! அய்யய்யோ இப்படி செய்து விட்டேனே என அதிர்ந்து, சரி நமக்கு ஜெயில் நிச்சயம் இவர்கள் முன் காட்டிக் கொள்ளக் கூடாது என்று ஆம் நண்பர்களே மன்னருக்கு உணவு தயார் எடுத்துச் செல்லவும்..

நான் சற்று ஓய்வில் என் அறைக்கு போகிறேன் என அவர் அறைக்கு திரும்பிய 15வது நிமிடம் அவர் அறை வாசலில் திபு திபுவென 15 வீரர்கள், உடனே அழைத்து (இழுத்து) வரச் சொல்லி மன்னரிடம் இருந்து அழைப்பு என்று..

நடுநடுங்கி பதறியபடி கிளம்பினார், மன்னர் அறை நெருங்க நெருங்க அக்பர் கர்ஜிக்கும் குரல் காதில் விழுந்தது. என்ன சமையலடா இது..எங்கே அந்த சமையல்காரன்? ராஸ்கல் இப்படி பண்ணிட்டானே, அவனை நான் சும்மா விடமாட்டேன்..

இதைக் கேட்ட சமையல்காரருக்கு இன்னும் உதறலெடுத்தது மன்னரின் அறைக்குள் நுழைந்ததும் "ஹொசூர் இந்தப் பாவியை" என்று குரலெடுக்க ஆவேசமாக ஓடி வந்து அவரைத் தழுவிக் கொண்ட அக்பரை கண்டு குழம்பினார்..

அவனது கன்னங்களில் முத்தமிட்டு அவன் கைகுலுக்கி அவன் தோளில் அறைந்து அக்பர் சிறு பிள்ளை போல குதூகலத்தில் இருந்தார். அவரது உதடுகள் வாரேஹ் வா, அச்சா, சப்பாஷ் பல்லே, பலேஹ் என்று உச்சரித்துக் கொண்டே இருந்தது.

எப்படியடா இப்படி ஒரு சமையல் செய்தாய்! உண்மையில் நீ கலைஞனடா, அற்புதம்! இதுதான் நான் சாப்பிட்டதிலேயே சிறந்த உணவு. இனி இது தான் நம் அரச உணவும் என்றார் குஷியுடன். சமையல்காரர் இன்னும் குழம்பித்தான் இருந்தார்.

“ஏய் என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே” என்ற டயலாக் உலகில் அந்த சமையல்காரருக்கு தான் முதலில் தோன்றியிருக்கும் போல! அப்போது தான் உணர்ந்தார் அந்த அறையெங்கும் இதுவரை அவரே அறிந்திராத ஒரு வாசனை!

அனைவரின் மனம் விரும்பும் வகையில் கும்மென்று மசாலா மணம் வீசியது. நம்பமுடியாமல் டைனிங் டேபிளை பார்த்தார். அந்த உணவினை கிட்டத்தட்ட மொத்த மன்னர் குடும்பமே ராஜ்கிரண் ஸ்டைலில் ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிருந்தனர்.

இப்போது அவருக்கு ஒரு தெம்பு வர “ஷாஹென்ஷா என் புது உணவு எப்படி.? நன்றாக இருந்ததா? என்றார்.

நன்றாகவா.. அற்புதம் ஏதோ பாத்திரத்திற்கு அடியிலும் பாத்திரத்திற்கு மேலும் நெருப்பு மூட்டி சமைத்தாயாமே பணியாளர்கள் சொன்னார்கள் இன்று நம் அரண்மனையில் இரவுக்கும் இதே உணவு செய்து தா.

நாளை முதல் உனக்கு ஓராண்டு விடுமுறை! இந்த அக்பரின் அன்புப் பரிசாக 26 வருட போனஸ்! உன் ஊருக்கு போய்வா என்றார். இதைக் கேட்டு அகமகிழ்ந்த சமையல்காரரும் ஆனந்தமாக மன்னரை வணங்கி விடைபெற்றார்.

நண்பர்களே! சிரத்தையின்றி ஏனோ தானோ என்று குருட்டாம் போக்கில் அந்த சமையல்காரர் செய்த உணவு தான்..

#தம்_பிரியாணி

No comments:

Post a Comment