19. குத்து விளக்கெரிய..
இவ்வுலகிலேயே மக்களை தூக்கத்திலிருந்து எந்திரிக்கச் சொல்லி அதிக விழிப்புணர்வை ஊட்டியது ஆண்டாளாகத் தான் இருக்கும். நீங்கள் தூங்கியது போதும் விழித்து எழுங்கள். என்னும் முழக்கத்தை திருப்பாவை முழுவதும் முழங்கிக் கொண்டே இருக்கிறார் போராளி ஆண்டாள்!
அப்படித் தூங்குவது போல தூங்கினால் ஆண்டாள் நம்மை அழகுத் தமிழில் பாடி எழுப்புவார் என்று எண்ணி கூட பலர் தூங்கியிருக்கலாம். இன்றைய தினம் நப்பின்னையையும் அவளோடு ஆனந்தமாக உறங்கிக் கிடக்கும் கண்ணனையும் எழுப்புகிறார். அவர்கள் தூங்கும் அறையை பாருங்கள்..
வாசல் நிலை விளக்குகள் நின்றெரியும் உறுத்தாத ஒளி யானை தந்தத்தில் செய்த டபுள் காட் கட்டில்,மேலே அன்னப் பறவையின் சிறகு, இலவம் பஞ்சு, செம்பஞ்சு எல்லாம் நிரம்பிய மென் மெத்தை, அழகிய வெண் திரைச் சீலைகள், சுகமாகச் சில்லிடும் மார்கழிக் குளிர் இத்தனைக்கும் நடுவே,
கொத்தான நறுமண மலர்களை சூடிய நப்பின்னை படுத்து உறங்க இத்தனை மென்மெத்தைகள் இருந்தும் போதாது என அவள் மார்பகங்களில் தலை சாய்த்து உறங்கும் கண்ணா! நீவாய் திறந்து பேசு, அழகிய மையிட்ட பெரிய விழிகளை உடைய நப்பின்னையே, நீயாவது கண் விழி..
உன் கணவனை விட்டு விலகி எழுந்திரு அவனது அணைப்பில் இருந்து விலகு அவனது பிரிவை சிறிது நேரம் கூட நீ பொறுக்கமாட்டாயா?அவனை எழுப்பிவிடு நீ இப்படி இருப்பது நியாயமும் இல்லை அது நல்ல குணமும் இல்லை சில்லென்ற குளிர், மெல்லிய ஒளி, தந்தக் கட்டில்..
கொத்து மலரின் நறுமணம், இலவம் பஞ்சு, இளம்பெண் நெஞ்சு ஆஹா, கண்ணன் தூங்குவது போல இப்படி ஒரு சுகமான தூக்கத்திலிருந்து நாமெல்லாம் எழுந்திருப்பதே கஷ்டம். அதையும் மீறி மனிதர்கள் அன்று எழும்பியது ஆண்டாளின் பாசுரத் தமிழால் என்பதே உண்மை.
மார்கழி 19 ஆம் நாள் பாடல்...
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.



No comments:
Post a Comment