27. கூடாரை வெல்லும்..
#பாவை_மொழி
திருப்பாவை நோன்பிற்கும், ரமலான் நோன்பிற்கும் ஓர்ஒற்றுமையிருக்கிறது! நாங்கள் நெய், பால், இதெல்லாம் உண்ண மாட்டோம், தலையில் பூச்சூட மாட்டோம், கண்ணுக்கு மையிட மாட்டோம், எங்களைஅலங்கரித்துக் கொள்ள மாட்டோம் என்றெல்லாம் இந்த பாவை நோன்பைதுவக்கும் போது 2வது பாசுரத்தில் சூளுரைத்த ஆண்டாள்..
நோன்பு துவங்கி 27 ஆவது நாளில் தான் கூறிய விரதத்தை விடச்சொல்கிறார் எப்படி? தட்டு நிறைய பால் சோறிட்டு அதிலே கரண்டிகரண்டியாய் நெய்யை விட்டு அந்தப் பாலும் நெய்யும் முழங்கை வழியேசறுக்குப் பலகையில் சரிவது போல வழிய வழிய சாப்பிட வேண்டுமாம். பாலும் வேண்டாம் நெய்யும் வேண்டாம் என்றவர் இப்போது இரண்டையும்ஒன்றாகவே சாப்பிடச் சொல்கிறார்.
அது மட்டுமா! கண்களில் மை தீட்டக்கூடாது, அலங்காரம் செய்து கொள்ளக்கூடாதென்று சொன்னவர் இந்த உணவை சாப்பிடப் போகும் முன்என்னென்ன ஆடை ஆபரணங்கள் அணியவேண்டும் என ஒருபட்டியலிடுகிறார். கைகளில் தங்கவளைகள், இரு தோள்களிலும் கைவங்கிகள், தங்கப்பூ போன்ற பெரிய தோடுகள், அதற்கு மாட்டல்கள், காலணிகள், இன்னும் பல நகைகள்..
அதுக்கு மேட்ச்சா உயர்ந்த ஆடைகள் இப்படி நகைக் கடை மாடல் போலஅலங்கரித்து வந்து அதன் பிறகே அந்த பால் சோறை அனைவரும் ஒன்றாகக்கூடி சாப்பிட வேண்டுமாம்! இவை அனைத்தும் எதிரிகளை வெல்லும்கோவிந்தனைப் பற்றி பாடி பயனைடைந்து நாங்கள் பெறும் பரிசுகள்என்கிறார். மார்கழி முதல்நாளில் துவக்கிய இந்தப் பாவை நோன்பை 27ஆம்நாளில்..
அனைவரும் விரும்பிய உணவுகளை உண்டு, புதிய ஆடை ஆபரணங்கள்அணிந்து கொண்டாடுவோம் என்று நம் ஆண்டாள் பாடியதற்கும் ரமலான்நோன்பிற்கும் இந்த இடத்திலும் ஓர் ஒற்றுமை வருகிறது! ஆம்! இதே போலத்தான் அவர்களும் புனித நோன்பிருந்து ரமலான் மாதத்தின் 27வது நாளைபுனித மிக்க இரவு எனும் ‘லைத்துல் கதர்’ விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
அன்று புத்தாடை உடுத்துவதும் வித விதமான பண்டங்களை உண்பதும்அவர்கள் வழக்கம். பாவை நோன்பு கூட மார்கழி மாத மதி நிறைந்த நாளில்துவங்குகிறது. ரமலான் பிறை தெரிந்ததும் நிறைகிறது. நிலவின் வளர்பிறைதேய்பிறையை ஒட்டியே இவ்விரு நோன்புகளும் மனிதர்களால்கொண்டாடப்படுகின்றன!
வைணவமோ, இஸ்லாமோ நோன்பிருப்பதே மாண்பு என்பதை பாங்குஓதுவதிலும், பாசுரம் பாடுவதிலும் அறிந்து கொள்ளலாம் என உணர்த்துகிறதுஆண்டாளின் இந்தப் பாசுரம்.
மார்கழி 27 ஆம் நாள் பாடல்...
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.





No comments:
Post a Comment