Thursday, 1 January 2026

20 பாவை மொழி

20. முப்பத்து மூவர்..






“திருப்பாவையில் பஞ்ச் டயலாக்”


“நான் சொல்றதை தான் செய்வேன்.. செய்யறதை தான் சொல்வேன்”


“ஒரு தடவை முடிவு பண்ணிட்டா எம் பேச்ச நானே கேக்க மாட்டேன்”


“நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” 


இவை அனைத்தையும் விட ஒரு அருமையான பஞ்ச் டயலாக்கை ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் வைக்கிறார்.


கடந்த பாசுரத்தில் கட்டிலில் நப்பின்னையின் மார்பில் தலை வைத்து ரொமாண்டிக்காக உறங்குகிறான் கண்ணன் என்றவர். அப்படி ஒரு சுகமான தூக்கத்தில் அந்த ஒரு பாட்டுக்கே எழுந்துவிட்டால் நன்றாக இருக்குமா? ஆகவே இந்தப் பாடல் அவர்களை எழுப்பும் 2வது பாடல்.. 


இந்தப் பாடலில் அவர் கண்ணனின் வீர தீர பராக்ரமத்தை சொல்லி ஆரம்பிக்கிறார். இதன் உள் குத்து, “இவ்வளவு வீரமுள்ள ஆளு நீ ஒரு பொண்ணு மார்ல சாஞ்சிகிட்டு தூங்கிட்டு இருக்கியேய்யா” என உசுப்பிவிடத்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பிரச்சனை என்றால் யாரும் சொல்லாமல் அங்க வருகின்ற வீரா..


ஓழுக்கத்தில நீ கில்லி, துணிச்சலா நீ அடிப்ப சொல்லின்னு ஆரம்பிச்சு, வைக்குறார் பாருங்க ஒரு பஞ்ச்.. "உன் பேரைக்கேட்டாலே எதிரிகளுக்கு காய்ச்சல் வரும் தூயவனே" அடடா என்னா ஒரு பஞ்ச் டயலாக் இது! இப்படி பஞ்ச்சாக சொல்லிவிட்டு சில வர்ணனைகளை அப்படியே..


நப்பின்னைக்குச் சொல்கிறார், செப்புக் கவச வடிவில் மென் மார்பும், செவ்விதழ்களும் அழகிய வளைவான சிறு இடையும் உள்ள நப்பின்னையே! நீ எழுந்து நோன்பிற்குரிய விசிறியையும் கண்ணாடியையும் உன் அத்தானிடம் தந்து அதை எங்களுக்கு தரச்செய்ய அவரை எழுப்புவாயாக, எங்களை மார்கழி நீராட விடுவாயாக என்கிறார். 


இந்தப் பாசுரத்தில் கப்பம், செப்பம், வெப்பம் என்று அடுக்குமொழியிலும் அந்தக் காலத்து லேடி டி.ஆராக எழுதியிருக்கிறார். ஒன்று நிச்சயம் பாசுரத்தில் பஞ்ச் டயலாக் எல்லாம் இருப்பது தெரிஞ்சா சினிமாக் காரர்கள் பாசுரத்தின் பக்கம் பாய்ந்து விடும் அபாயம் இருக்கிறது! 


யார் கண்டது ஒருவேளை அவர் காலத்தில் சினிமா கண்டு பிடிக்கப்பட்டு இருந்திருந்தால் அதிலும் தன் வெற்றிக் கொடியை பறக்கவிட்டிருப்பார் நம் ஆண்டாள்.


மார்கழி 20 ஆம் நாள் பாடல்....


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

 


No comments:

Post a Comment