Friday, 2 January 2026

21 பாவை மொழி

  21. ஏற்ற கலங்கள்..





பாசுரங்கள் முழுவதும் பசுக்களை வள்ளல்கள் என்று ஆண்டாள் விளிக்கிறார். இயக்குநர். விசு படத்தின் எல்லா படங்களிலும் தவறாமல் வரும் ஆஸ்தான நடிகர்கள் போல பல பாசுரங்களில் யாராவது அதிகாலையில் எங்காவது பாலை கறந்து கொண்டு இருப்பார்கள் அல்லது பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்.


செல்வம் தரும் பால் வளம் மிக்க பசுக்கள் அடிக்கடி வந்து போகும்! தன் கன்றின் குரல் கேட்ட பாசத்தில் தானாகப் பாலைப் பொழியும் மாடுகள், எருமைகள், கன்றுகள் வீட்டை பால் சகதியாக்கும்! இப்படிப் பெரும் பால் வளத்தையும், பசு & எருமைகளையும் திருப்பாவையின் ஆஸ்தான பாத்திரங்களாக பாசுரமெங்கும் காணலாம்.


இந்தப் பாத்திரங்களில் வரும் பசுக்களின் பாலை பாத்திரம் வைத்து கறக்கும் போது அந்தப் பால் பாத்திரத்தில் அதி வேகமாய் வீழ்ந்து அடுப்பில் பொங்குவது போல எதிர்த்து பொங்குகிறது என்கிறார்! {நியூட்டனின் விதி} கடந்த இரு நாட்களாக பாடிய பாசுரங்களுக்கு  கண்ணன் சிறிதும் செவி சாய்க்கவில்லை! அப்போது என்ன செய்ய?


சடாரென சரணாகதி தானே! இதோ ஆண்டாள் உருகிப் பாடுகிறார்.. பசுக்களிடம் இருந்து கலத்தில் கறக்கும் பாலானது அடுப்பில் பொங்குவது போல் வீழ்ந்து பொங்குகிறது, அவ்வளவு பால் தரும் வளமான பல பசுக்கள் வைத்திருக்கும் நந்தகோபரின் மைந்தனே, உலகைக் காக்கும் பெரிய மனிதனே, அவதாரப் புருஷனே..


ஒளியின் வடிவே நீ உறங்கலாமா உன் பலமறிந்த எதிரிகளே உன்னை நன்கறிந்து உன்னுடன் மோத அஞ்சி உன் வாசலில் வந்து உனக்காக காத்திருப்பது போல அடியவர்கள் நாங்களும் உன் வாசலில் வந்து உன்னைப் புகழ்ந்து பாட காத்து நிற்க நீ உறங்குதல் நியாயமா? நீ எழுந்து எமக்கு அருள் புரியாவிட்டால் எமக்கு யார் அருள் புரிவார்? 


உன் உறக்கத்தைக் களைந்து எழுந்து வா மன்னா.. என் ஆசைக் கண்ணா என்கிறார். கோபமாய், தாபமாய், செல்லமாய், காதலாய், ஊடலாய் கண்ணனைப் பாடுபவர் ஆண்டாள். அவன் எதற்கும் மசியவில்லை என்றால் தன் ஊடலை மறந்து தயக்கமின்றி, சிறிதும் யோசிக்காமல் சடாரென்று அவனது பாதங்களில் விழுந்துவிடுவாள். 


அவள் ஆதாயத்திற்காகவும் பதவிக்காகவும் அரசியல்வாதிகள் போல் காலில் விழுபவள் அல்ல! கண்ணன் மேல் காதலில் விழுந்தவள்❤️❤️


மார்கழி 21 ஆம் நாள் பாடல்...


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப 

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் 

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் 

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் 

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய் 

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் 

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே 

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

 









No comments:

Post a Comment