10 நோற்றுச் சுவர்க்கம்..
வார்த்தை தவறிவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும். “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா “என்று பாரதி பாடுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆண்டாள் பாடி விட்டார். தமிழ் ஒரு செறிவான செழுமையான செம்மொழி.
இதிலுள்ள சொற்களில் ஒரு எழுத்து இல்லை ஒரு துணைக் கால், அல்லது ஒரு மூன்று சுழி எழுத்து அவ்வளவு ஏன் சொற்களுக்கு நடுவே வரும் நிறுத்தற் குறியை எடுத்தால் கூட அதன் அர்த்தம் மாறிவிடும்.
இன்றைக்கும் பல அரசியல்வாதிகள் மேடைகளில் வாய் குழறிப் பேசி அது மீம்ஸ் விடியோக்களாக வைரல் ஆகி வருவதை நாம் அறிவோம். ஆனால் இராமயண காலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ஆம்! அன்று எமதர்மனை மனமுருக வேண்டித் தவமிருந்த கும்பகர்ணன் வரத்தை தன் வாய் தவறிக் கேட்டு தூக்கத்தையே வரமாக பெற்றானாம். அதன் பின் அவன் வாழ்நாள் முழுவதும் தூங்கியே கழிந்ததாம்.
அவனை எழுப்புவது என்பது ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வாங்குவது போல அரிது. அப்படிப்பட்ட கும்பகர்ணனிடம் இருந்து பெரும்தூக்கத்தை நீயும் கடனாக வாங்கி தூங்குகிறாயோ என்று ஐயம் எழுப்புகிறார் ஆண்டாள்!
ஆம் நல்லத் தூக்கம் என்பது வரம்,ஆனால் அதையே கும்பகர்ணன் பெறுவது போல் பெற்றால் அது நீ பெறுகின்ற பெரும் சாபம், சொர்க்கம் செல்வதற்காக விரதமிருக்கும் பெண்ணே நீ இப்படி ஆழ்ந்து உறங்கலாமா?
நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நம் நாராயணனை வந்து பாடிட மூடிக் கிடக்கும் உன் வாசலை திறந்துவிடு, அல்லது உன் வாய் திறந்தாவது ஒரு சொல் சொல்லிவிடு. அவனைப் போற்றிப் பறை பெறவேண்டும் என்றால் அதற்கு உன் அறை திறக்கவேண்டுமல்லவா!
இப்படியா நீ கும்பகர்ணனுடன் போட்டி போட்டுத் தூங்குவது? வா.. வந்துக் கதவைத் திற என்கிறார். ஆண்டாள் இப்படி இன் தமிழில் பாடி எழுப்பினால் அந்த கும்பகர்ணனே கூட எளிதாக தூக்கத்திலிருந்து எழுந்து வருவான் போலத் தோன்றுகிறது!
மார்கழி 10 ஆம் நாள் பாடல்..
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment