Saturday, 27 December 2025

14 பாவை மொழி

14. உங்கள் புழக்கடை..





தமிழகத்தில் தாமரை அதிகம் மலர்ந்தது திருப்பாவையில் தான். பாசுரங்கள் எங்கும் செந்தாமரை, போதரி, கமலம், பங்கயம் என தாமரைகளை பல பெயர்களில் மலர விட்டு இருப்பார் ஆண்டாள்.. கமலக் கண்ணனைப் பாடும் போது கமலத்தை பாடாமல் இருக்க முடியுமா.? 


அதைத் தனது “தமிழிசை”யால் இனிமையாக மனமுருகப் பாடி இப்பாசுரத்தில் காவிக் கொடியையும் பறக்க விட்டிருக்கிறார் ஆண்டாள் எனும் தமிழிசை. ஆண்டாள் காலத்தில் வீட்டுக்கு பின் புறத்தில் குளம் அமைந்துள்ளது  


அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி மாதத்து சில்லென்ற நீர்.. ஆஹா வீட்டுக்கு வீடு நேச்சுரல் பாத்டப் இருந்த காலம் அது அந்த உறங்கும் பெண்ணை எழுப்புகிறார்..


பெண்ணே காலையில் சூரியன் உதிக்க தாமரை மலர்ந்து அல்லி கண் மூடி விட்டது, அதோ தமது வெண்ணிறப் பற்கள் மின்ன காவி அணிந்த துறவிகள் அவர்களின் ஆன்மிகக் கடனான சங்கினை முழங்க கிளம்பிவிட்டனர். 


உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்கு வெட்கமாக இல்லை. எழுந்து வா நீளக் கைகள் இரண்டில் சங்கும் சக்கரமும் தரித்திருப்பாரே.. 


நம் தாமரைக் கண்ணனை அவரின் அழகை, அவர் பெருமையை வாயாரப்பாடலாம் வா.. மலர் மலர்வதை வாய் திறப்பு எனவும் மொட்டு மூடுவதை வாய் மூடி எனவும் ரசனையோடு ஆண்டாள் விளக்கியிருப்பதை பாருங்கள்.


இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் மனிதர்கள் திறந்த வாயுடன் ஆவலுடன் வரிசையில் ஏன் நிற்கிறார்கள்? தமிழிசையால் ஆண்டாள் நன்கு பிசைந்தே தந்தாலும் முகஞ்சுளிக்காமல் அந்தப் பாசுர கேக்கினை உண்பதற்கே..


மார்கழி 14 ஆம் நாள் பாடல்...


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.


No comments:

Post a Comment