Monday, 15 December 2025

1. பாவை மொழி

1. மார்கழித் திங்கள்…




நேற்றைய இரவு வீசிய குளிரை நீங்கள் அனுபவித்து இருந்தால் தெரியும். இன்று மார்கழி மாதம் துவக்கம் என்பதற்கு நேற்றே குளிர் கட்டியம் கூறிவிட்டது. ஆம்! குளிரான மார்கழியின் அதிகாலைப் பொழுது.


நாமெல்லாம் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்தாலும் கூட படுக்கையிலிருந்து எழ மனமில்லாது சுகமாகப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடக்கிறோம். சிலருக்கு இந்த அதிகாலையின் குளிர் நீரில் குளிக்கப் பிடிக்காது. 


ஆனால் அந்த நடுக்கத்தை பொறுத்துக் கொண்டு குளித்துப் பாருங்களேன், பரவசமாக இருக்கும்! குளிர் நீரில் குளித்துப் பழகினால் அந்த நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருக்கும். மார்கழி அதிகாலையில் குளிர் நீரில் குளிப்பது பரம சுகம்! 


நூறு ஏசிகளின் காற்று நம் உடல் தழுவுவது போல நம் நரம்பு மண்டலத்தை சிலீரிட வைக்கும் அந்தப் புத்துணர்வை குளித்துப் பார்த்துதான் அனுபவிக்க முடியும். இதைத் தான் முன்னோர்கள் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்வார்கள்! 


நம்மில் பலர் வெந்நீரில் குளித்து அந்த அனுபவத்தையே பொசுக்குகிறார்கள். மார்கழி மாதத்தின் முதல் தேதி, மதி நிறைந்த நன்னாளின் அதிகாலையில் சில்லென்ற குளத்து நீரில் வந்து நீராட பெண்களை அழைக்கிறார் ஆண்டாள். 


குளிர்மிகு அதிகாலை, நிலவு தன் பணி முடிந்து ஓய்வுக்கு போகின்ற வேளை, இன்றைய கவிஞர்கள் பாடும் குளிர் நிலவே, ஈர நிலாவே என்பதெல்லாம், மார்கழி அதிகாலை நிலவு தான். குளிரை விலக்கி கதிரவன் பணிக்கு வரும்முன்.. 


தண்ணெழில் பொழிந்து விடை பெறும் நேரம், எப்பேர்ப்பட்ட சுறுசுறுப்பானவர்களும் சுகமாய் மயங்கிக் கிடக்கும் இவ்வேளையில் ஏன் இன்னும் சுகமான உறக்கம்? ஏனிந்த பெரும் தயக்கம்?  எழுந்து வாருங்கள், செல்வச் சிறுமிகளே! 


நம் நாராயணன் நமக்கெல்லாம் அருள்தர காத்திருக்கும் போது இந்த அரைத் துக்கம் தகுமா? நம் கார்மேக வண்ணன் சூரியன் போல வெப்பமும்,  நிலா போல் குளுமையும் ஒன்றாக உடையவன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீராடி..


அந்த மாயக்காரனை நினைப்போம், கடுங்குளிரை மறப்போம்! மார்கழி மாதத்து நிறைமதி நன்னாளில் நீராடச் செல்வோம். ஆயர்குல செல்வப் பெண்களே! கூரான வேல் ஏந்தி நமக்கு வரும் கொடும் துன்பத்தை அழிக்கும் நந்தகோபனும்..


அழகிய விழிகளுடைய யசோதையும் வளர்த்த இளஞ்சிங்கம் கண்ணன். அவனே நமக்கு பறை தந்து அருள்வான். அதற்கு முன் இந்த தூக்கம் பைசா பெறாத ஒன்றாகும். தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள். இவ்வுலகமே அவனை புகழும்படி.. 


பாடிடுவோம் வாருங்கள், என்றழைக்கிறார் ஆண்டாள். அவர் அழைத்தால் அந்தக் கண்ணனே ஓடி வரும்போது, ஆயர்குலப் பெண்கள் வர மாட்டார்களா என்ன! ஆண்டாள் வசித்த திருவில்லிப்புத்தூர் தென் தமிழகத்தில் ஓர் சிறிய ஊர்.


ஆனால் அந்த ஊரையே ஆயர்பாடியாகவும், அங்குள்ள சிறுமிகளை ஆயர் குலச் சிறுமிகளாகவும் எண்ணி பாவை நோன்பை துவக்கி வைத்தவர் ஆண்டாள். ஆம்! தமிழகத்தில் ஆயர் குலப் பெண்களின் முதல் மேயர் நம் ஆண்டாள் தான்! 


இன்று மார்கழி முதல் நாள்! பயணிப்போம் அடுத்த 30 நாட்களும்.!


மார்கழி 1ஆம் நாள் பாடல்..


மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.



No comments:

Post a Comment