2. வையத்து வாழ்வீர்காள்...
பொதுவாக உலக அழகிப் பட்டங்கள் இந்தியாவிற்கு கிட்டும் போதெல்லாம் இதன் பின்னணியில் இருக்கும் உலகளாவிய அழகு சாதனப் பொருட்களின் வணிகம் குறித்து விவாதிக்கப்படும். சித்தூர் ராணி பத்மினியின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட அலாவுதீன் கில்ஜியே அலாவுதீன் கிளர்ச்சியாகி இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்னும் செய்தி தீவிர வரலாறு படிக்காதவர்கள் கூட தீபிகா படுகோனேவுக்காகவாவது படித்து அறிந்து இருப்பார்கள்!
இந்தியா அழகிகளின் தேசம்! எந்த அழகு சாதனமும் இன்றியே இங்கு அழகிகள் அதிகம், நூர்ஜஹானின் அழகில் ஒரு சதவீதம் கொண்ட தாஜ்மஹாலே அதற்கு சாட்சி. இந்தியாவை ஆண்ட பலப்பல பாரசீக மன்னர்களின் இந்திய மனைவிகளும், அந்தப்புர ராணிகளும் கூட இப்பட்டியலில் உண்டு. தம்மை அலங்கரித்துக் கொள்வதில் உலகப் பெண்களுக்கு எல்லாம் முன்னோடி நம் இந்தியப் பெண்கள், கஸ்தூரி மஞ்சளும், சந்தனமும், பயத்தம் மாவும் தடவிக் குளித்து..
செம்பருத்தி கலந்த சிகைக்காயைத் தலைக்கு தடவி குளித்து பின்பு அகிலும், சாம்பிராணியும் தூபமிட்டு புகை எழும்ப சிகையை காயவைத்து, வாசனைத் திரவியங்களும், எண்ணெயும் தடவி தலை சீவி, கண்ணுக்கு மையிட்டு, நெற்றியில் மணக்கும் சந்தன குங்கும திலகமிட்டு, நறுமண மலர் சூடி, பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா என ஒரு நீயா நானா நடத்தி கோட்டு கோபிக்கு பதில் கோபக்கார நக்கீரரை நடுவராக்கிப் பார்த்தவர்கள் நாம்.
இப்படி அலங்காரம் செய்வதில் நாட்டமுள்ள பெண்கள் அதை வேண்டாம் எனச் சொன்னால் டிசம்பரில் அடிக்கிற புயல் தினமும் அல்லவா அடிக்கும்! அடித்துவிட்டு போகட்டும் எங்களை அந்த மாயக் கண்ணன் எனும் புயல் தாக்கட்டும் அதற்காக எதையும் தியாகம் செய்வோம் என்கிறார் ஆண்டாள். கண்களில் மையிட்டுக் கொள்வதில்லை, தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்த இந்தியப் பெண்ணாவது சொல்வாளா? ஆனால் ஆண்டாள் சொல்கிறார்.
பாவை நோன்பு என்னும் விரதத்தை கடை பிடிக்கும் பெண்களாகிய நாங்கள் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என உண்ணவிரதம் இருப்பது பெரிதல்ல.. தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதும் பெரிதல்ல.. பெண்களின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்கிறார் நம்ாண்டாள், கண்ணா நாங்கள் இதை ஏதோ கடமைக்குச் செய்யவில்லை..
மனமுவந்து உனக்காகச் செய்கிறோம். எம் வாழ்வில் இந்தப் பிறவி எடுத்து வந்த சூழலில் உலகத் துன்பங்களில் இருந்து எம்மை காப்பாய் பரமா என்று பாடுகிறார். சரி, பரமன் என்பது பரமசிவன் அல்லவா இதில் கண்ணன் எங்கு வருகிறார்? இங்கே பரந்தாமனயே பரமன் என்கிறார் நம் ஆண்டாள்! கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் மட்டுமல்ல, எந்த ஒப்பனையும் செய்யாமலேயே நம் இந்தியப் பெண்கள் எல்லாரும் பேரழகிகள் என்பதையும் இப்பாசுரத்தில் நமக்குப் புரிய வைக்கிறார் ஆண்டாள்.
மார்கழி 2ஆம் நாள் பாடல் :
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடிநெய்யுண்ணோம்
பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு
எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்செய்யா
தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment