6. புள்ளும் சிலம்பின.
பறவைகள் இடும் சப்தத்தை புள்ளும் சிலம்பின என்கிறார் ஆண்டாள். இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம். இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.!
சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிந்து சாம்பல் ஆகட்டும் என்று சாபமிட்டுவிட்டு அடடா இப்படி கண் மூடித் தனமாக சாபமிட்டு விட்டேனே என வருந்தி இந்தத் தீ யார் யாரையெல்லாம் மெதுவாகப் போய் பற்ற வேண்டும் என..
திருத்தி ஒரு பட்டியல் தருவார் முதியவர்கள், ஊனமுற்றோர், குழந்தைகள், நோயுற்றவர்கள் என நீளும் அந்த பட்டியலில் இவர்களையெல்லாம் “பையவே சென்று பற்றிடுக என அக்னி பகவானுக்கு ஆணையிட்டு இருப்பார்.
இன்றும் மதுரையில் மெதுவாக என்பது “பைய போ” என்றே பேச்சு வழக்கில் உள்ளது.. சிலப்பதிகாரத் தமிழ், திருப்பாவைத் தமிழ் இவையெல்லாம் தென் தமிழகத்தில் இன்றும் பேசப்படுவது நம் தமிழ் மொழியின் சிறப்பு.
இன்றைய பாசுரத்திற்கு வருவோம்.. எழுந்திருங்கள் பெண் பிள்ளைகளே பறவைகள் கீச்சிடும் அதிகாலையில் கோவிலின் வெண்சங்கு முழங்கும் ஒலி உங்களுக்கு கேட்கவில்லையா.? கண்ணன் பூதகியிடம் பால் குடித்துஅவளைக் கொன்றது,
சகடனை காலால் நிறுத்திக் கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என தான் சேர்ந்த கட்சியின் தலைவரை வஞ்சனையின்றி புகழும் நாஞ்சில் சம்பத் போல கண்ணனின் பெருமைகளைப் புகழ்ந்து இறுதியில் இப்படி முடிக்கிறார்.
நமது மனதில் நாரணனை நினைத்து சங்கின் நாதம் போல முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம். அதை கேட்கவாவது எழுந்து வாருங்கள் என்கிறார்ஆண்டாள்.
அரவம் என்றால் சப்தம் என்றும் பாம்பு என்றும் இரு பொருளுண்டு, அரவத்தின் மீது துயில் கொண்டிருக்கும் அரியின் நாமத்தை உச்சரிக்கும் அரவத்தைக் கேட்கப் போகவில்லை என்றாலும்.. நாம் ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்க எவ்வளவு அதிகாலையிலும் அரவத்தோடும் ஆர்வத்தோடும் எழுந்து வரலாம்.
மார்கழி 6ம் நாள் பாடல்...
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!
#திருப்பாவை
#ஆண்டாள்
#மார்கழி
#ஶ்ரீவில்லிப்புத்தூர்
#பாவை_நோன்பு
இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…

No comments:
Post a Comment