7.கீசு கீசு என்று...
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வரும் பாடல்களில் சில தனித் துவங்கள் இருக்கும். அதற்குக் காரணம் பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும் அவர் சேர்க்கும் சில பின்னிணைப்பு ஒலி வடிவங்கள் இதற்கு நிறைய பாடல்களை உதாரணம் கூறலாம்.
கருத்தம்மா படத்தில் “பச்சக்கிளி பாடும் ஊரு” பாடலில் வரும் கோழி, ஆடு, மாடு சப்தங்கள் ஒரு உதாரணம்.. இசைப் புயல் ரஹ்மான் என்றால், இசைச் சுனாமி ஆண்டாள். ஆம் தனது பாசுரங்களில் எழுத்திலேயே சவுண்ட் எஞ்சினியர் ஆனவர்.
ஒரு அதிகாலையை சூரியன் எழுவது, சேவல் கூவுவது, கோலம் போடுவது.. இப்படி காட்சியாகக் காட்டலாம் இதெல்லாம் விஷுவல், ஆனால் ஆண்டாள் சவுண்ட் எஃபெக்டில் அதிகாலையை விவரிக்கிறார். இப் பாசுரத்தில் அவர் கோத்த இசை ஒலிகளைக் கேளுங்கள்.
ஆண்டாள் காலத்து விடியலே பல சப்தங்கள் கலந்து ரசனையோடு விடிகிறது. கீசு கீசுவென ஆனைச் சாத்தான் குருவிகள் கத்த, வாசமிகு கூந்தலுள்ள ஆயர் பெண்கள் தயிரை கடைகிறார்கள். மண் சட்டியில் அதைக் கடையும்போது எழும் சப்தத்தை பேரரவம் என்கிறார்.
பஞ்சாப் அரியானா பகுதிகளில் இன்றும் லஸ்ஸி கடைகளில் வாஷிங் மெஷின் வைத்து லஸ்ஸி கடையும் போது ஒரு இரைச்சல் கேட்கும். தயிர் கடையும் போது பேரிரைச்சல் எனில் ஆயர்பாடியின் அபாரமான பால்வளத்தை அறியலாம்.
தயிர் கடையும் மத்தை ஆச்சியர் முன்னும் பின்னும் இழுக்கும் போது அப்பெண்களின் உடல் அசைய அவர்கள் அணிந்துள்ள அணிகலன்களான கலகலவென ஒலிக்கும் கழுத்துத் தாலியும், காசுமாலையும் ஒன்றொடு ஒன்று மோதும் சத்தம்..
இவற்றோடு கேசவனின் புகழை நாங்கள் பெருங்குரலெடுத்து பாடி வருகிறோம்.. இத்தனை சப்தங்களுமா உன் காதில் விழவில்லை? இல்லை கேட்டும் கேட்காதது போல படுத்துக் கொண்டு இருக்கின்றாயா பேய்ப் பெண்ணே (ஆண்டாள் காலத்து பக்கி)
இவ்வளவு சத்தங்களிலும் தூங்குகிறாய் என்றால் நீ மனுஷியே இல்லை பேய் தான் இப்படித் தூங்கும்.. என கோபமாகச் சொல்கிறார்.. ஆனால் நிஜத்தில் பேய்ப் பெண் ஆண்டாள் தான். கண்ணன் மேல் ப்ரியம் கொண்டு பேய் போலத் திரிந்தவள் அவள் தானே.!
மார்கழி 7ஆம் நாள் பாடல்..
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.
#திருப்பாவை
#ஆண்டாள்
#மார்கழி
#ஶ்ரீவில்லிப்புத்தூர்
#பாவை_நோன்பு
இதன் ஒலி வடிவத்தை உமா மகியின் “பேச்சு வாக்குல” யூடியூப் சானலில் கேட்கலாம். அதன் லிங்க் கீழே கமெண்ட்டில்…

No comments:
Post a Comment