Tuesday, 8 April 2025

🍯 யூடியூப் ரிவ்யூஸ்

#வேற_லெவல்

தமிழ்நாடு முழுவதும் சின்ன சந்துகளில், தெரு திருப்பங்களில், சாலையோரங்களில், ஹைவேஸ்களில், ஏராளமான உணவகங்கள் ‘லொகேட்’ ஆகியிருக்கின்றன! அந்தக் கடைகளின் ‘ஆம்பியன்ஸ்’ செமையாக இருக்கிறது! எல்லா கடைகளிலும் சோறும் & குழம்பும் விதவிதமாக கிடைக்கின்றன!

கிட்டத்தட்ட 25 முதல் 100 வருட பாரம்பரியம் இருப்பதாக அனைத்து ஓட்டல் காரர்களுமே சொல்கிறார்கள்! 20 அயிட்டங்களுடன் (உணவு வகைகள் தாங்க) அன் லிமிடெட் சைவச் சாப்பாடு கிடைக்கிறது! 2 வகை சாம்பார், 2 வகை வத்தக் குழம்பு, 2வகை பொரிச்ச குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் எல்லாமே பிரமாதமாக இருக்கிறது!

பாகற்காய் கசக்கிறது! பாயாசம் இனிக்கிறது! இவையெல்லாம் ஜஸ்ட் ₹250க்கே கிடைக்கிறது! பிளாட்பாரங்களில் ₹50க்கு 5 வகை சாதங்கள் கிடைக்கிறது! ₹10 கூடுதலாக தந்தால் ஒரு அவிச்ச முட்டையும் கிடைக்கிறது! இந்தக் கடைகளையெல்லாம் ஒரு அக்காவோ, அம்மாவோ, அத்தையோ, பாட்டியோ நடத்துகிறார்கள்!

இதில் மட்டும் 100 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கே கிடைத்துள்ளது பெருமையாகும்! அசைவ உணவுகள் அனைத்துமே ‘அல்டிமேட்’டாக இருக்கின்றன! கறிகள் ‘டெண்டராகவும்’ ஜுஸியாகவும் வெந்து இருக்கிறது! டேஸ்ட் எல்லாம் ‘தட்டிக் காயப் போடுது! பிரியாணிகள் ‘கொலமாஸாக’ இருக்கிறது.

அதிகாலை 5 மணிக்கே இட்லியும் குடல் குழம்பும் கிடைக்கிற கடைகள் மொத்தம் 96 இருக்கின்றன! அதில் தொண்ணூற்றி ஐந்தே முக்கால் கடைகள் ஈரோட்டிலேயே இருக்கின்றன! அந்தக் குடல் கறியின் டெக்ச்சரே நமது நாக்கில் ரப்ச்சர் உண்டாக்குகிறது! அந்தக் குழம்பின் ஃப்ளேவரை நம் கண்ணில் நுகரமுடிகிறது!

ஒரு அன்லிமிடெட் சாப்பாடுக்கு ₹700 முதல் ₹1000 வரை வாங்கிக் கொண்டு படுக்கும் பாய் போல தலைவாழை இலை விரித்து அதில் நடப்பன, பறப்பன, நீந்துவன, ஊர்வன என எல்லா அசைவ வகை உணவுகளிலும் தலா 4 வகைகளை சமைத்து இலைமீது சமமாக படுக்கப்போடும் சமத்துவபுரமான மெஸ்களும், தோப்புகளும்..

கொங்கு மண்டலம் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன! தடுக்கி விழுந்தால் நாட்டுக் கோழி விருந்துக்கடைகளிலும் தடுமாறி விழுந்தால் குடில் போன்ற தாபாக்களிலும் விழலாம்! சூரியன் உதிக்கும் முன் அதிகாலை 4 மணிக்கு சுடச்சுட ஆயிலில் பொரிச்ச ஆயுள் தராத புரோட்டாவும் மட்டன் குழம்பும் கிடைக்கின்றன!

மதுரையிலும் சேலத்திலும் அர்னால்டு போன்ற ஜிம் பாடியில் யாரையேனும் பார்த்தால் 99% அவர் புரோட்டா மாஸ்டராக இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! தினமும் அவ்வளவு புரோட்டா மாவு பிசைஞ்சு, புரோட்டா வீசுனா எவரும் அர்னால்டு போன்ற பாடி ஆகிடலாம்! அடுத்து இரவு தள்ளுவண்டிக் கடைகள்!

அங்கே இட்லி கறிக் குழம்பு, சப்பாத்தி குருமா, முட்டை தோசை, எஸன்ஸ் தோசைகள் லட்சகணக்கிலும், புரோட்டா & சால்னா, ஆம்லெட், ஆஃபாயில் கோடிக்கணக்கிலும் விற்பனையாகின்றன! சேலைகளில் கூட இத்தனை ரகங்கள் இல்லை தோசைகளில் 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கிறது!

அதற்கு 5 முதல் 8 சட்னிகள் தரப்படுகிறது! முட்டை / கறி தோசையே 22 வகைகளில் கிடைக்கிறது! மூளையோடு முட்டை மசாலா, மட்டன் மாங்காவோடு ஈரல், குடல் ஃப்ரையுடன் பிச்சு போட்ட கோழின்னு சாப்பிடுபவர்களின் தட்டு ஓவியர்களின் பேலட் பலகையில் கலைந்து கிடக்கும் வண்ணங்கள் போல காட்சியளிக்கிறது!

கடைகளில் விதவிதமான காம்போக்கள் கலந்து காணப்படுகின்றன! அவையெல்லாம் இங்கே ‘மஸ்ட் டிரை’ உணவாகவோ அல்லது அந்தக் கடையின் ‘சிக்னேச்சர்’ டிஷ்ஷாகவோ இருக்கிறது! திண்டுக்கல்லின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் ஒரு பிரியாணிக் கடை இருக்கிறது! எல்லாருமே 50 வருடப் பாரம்பரியத்தை கடந்து இருக்கிறார்கள்!

அநேகமா திண்டுக்கல் பூட்டை வாங்காத கடைகள் இந்த பிரியாணிக் கடைகளாகவே இருக்கலாம்! ஏன்னா எந்நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடைகளுக்கு கதவுகளே இல்லை! கிராமத்து சந்தைகளில் அமைந்துள்ள சாப்பாட்டுக் கடைகளில் சந்தைக்கே வராதவர்களும் அங்கே வந்து சாப்பாட்டுக்கு காத்திருக்கின்றனர்!

காலை 6 மணி அய்யர் கடை, படி இட்லி அய்யங்கார் கடை, கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை, சவுராஷ்டிரா பொங்கல் கடை, செட்டியார் வடைக்கடை, ஆசீர்வாதம் வடைக் கடை, ஈவினிங் பஷீர் பாய் பிரியாணிக் கடைன்னு சில மணி நேரக் கடைகளிலும் கூட்டம் சாதி, மதங்களை மறந்து சமத்துவமாய் நிற்கிறது!

கென்யாவின் மாஸிமாரா காடுகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கில் இடம் பெயரும் காட்டு மாடுகள் போல மதுரையில் இருந்து நத்தம் சென்று பொரிச்ச புரோட்டா சாப்பிடுபவர்களும் சேலத்திலிருந்து ஓமலூர் சென்று களி & கறி சாப்பிடுபவர்களும் திண்டுக்கல் சென்று பிரியாணி சாப்பிடுபவர்களும் பெருகிவிட்டனர்!

இட்லி, பணியாரம், ஆப்பம், இடியாப்பம் துவங்கி உப்புமாவுக்கு கூட சிறந்த உணவுகள் ரிவ்யூ யூடியூபெங்கும் கொட்டிக் கிடக்கின்றன! வடை, பஜ்ஜி, சாட் அயிட்டங்களுக்கு கூட அமர்க்களமான ரிவ்யூ வீடியோக்கள் உலா வருகின்றன! களி & கறிக்குழம்பு, சோறு & மீன் குழம்பு, பிரியாணி & சிக்கன் குழம்புன்னு..

உலகத்தின் எல்லா கடைகளிலும் சாப்பிடும் ரிவ்யூவர்கள் சொல்லும் ஒரே யூனிஃபார்ம் வார்த்தை.. டேஸ்ட் ‘வேற லெவலில்’ இருக்கிறது! இங்கே உணவு ரிவ்யூ என்பதே பெரும் க்யூவில் இருக்கிறது! ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்லமுடியும்….

சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்று நேரம் ஒதுக்கி இந்த யூ டியூப் சானல்களை பார்த்து அந்த ஓட்டல்களுக்கு நேரில் ஆய்வுக்கு போனால் அபாரதமே பல கோடிகள் நம் அரசுக்கு வரலாம்! அப்போது தெரியும் இந்தக் கடைகளின் தரம் “வேற லெவல்” என்பது!

{குறிஞ்சி பூத்தாற் போல சில நல்ல கடைகளும் இந்தப் பட்டியலில் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாக இருக்கின்றன}

Sunday, 6 April 2025

🍩 வடைக்காலம்

🍩 இது ஒரு வடைக் காலம் 🍩

மெதுவடை, உளுந்துவடை என்றும் செல்லமாக ஓட்டை வடை என்றும் அழைக்கப்படும் உளுந்தவடையைப் பற்றியே இப்பதிவு! கன்னடத்தில் உதின்ன வடே, தெலுங்கில் கரேலு, மலையாளத்தில் உளுனுவடா என்று அழைக்கப்படும் திராவிடப் பலகாரம் இந்த வடை! வட இந்தியாவில் பலப்பல வடை இந்தியர்கள் இருந்தாலும் இது தென்னிந்தியா அளவுக்கு அங்கு புகழிலும், புழக்கத்திலும் நஹிஹே!

இது நம்ம பிரவுடு கன்னடிகா உணவாகும்! பொதுவா உளுந்தில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு கர்நாடகா தனித்துவம் வாய்ந்தது. கர்நாடகாவின் மாதுர் பகுதியில் இது தோன்றியது (மாதுர் வடா இன்றும் ஃபேமஸ்) வரதராஜ முதலியார், மஸ்தான், பாட்ஷா இவர்களுக்கு முன்பே மும்பை வரை சென்று அங்கு கோலோச்சிய தென்னகத்து டான் தான் இந்த வடை நாயகன் & பாட்ஷா இரண்டுமே!

ஆரம்பகாலங்களில் (200 ஆண்டுகளுக்கு முன்பு) உளுந்து வடைகள் வைத்து செய்யப்பட்ட வடா பாவ் உளுந்தம் பருப்பு விலை ஏற்றத்தாலும், ஊற வைக்கும் நேரம் மிச்சம் என்பதாலும் வடா உருளைக் கிழங்குக்கு மாறியது! உளுந்து, உருளைக் கிழங்காக மாறினாலும் வடா என்னும் அந்தப் பெயர் மட்டும் மாறவேஇல்லை

இன்றைக்கும் மும்பையில் தினமும் சில கோடி ரூபாய்கள் டர்ன் ஓவர் கொடுக்கும் வணிகம் வடா பாவ் விற்பனையில் நடைபெறுகிறது! வெங்கடேஷ் கோலி வடா பாவ் என்னும் ஒரு நிறுவனமே ஆண்டுக்கு 200கோடி டர்ன் ஓவர் எடுக்கிறது! வாயைப் பிளக்காதீர்கள் அதில் 2 வடைகளை வைத்துவிடலாம்! டோர் லாக்! இப்படி மராத்தியர்களின் வாழ்வில் ஒன்றாகிப் போனது வடாபாவ்!

மகாராஷ்டிராவில் வடா பாவ் ராஜ்ஜியத்தை நிறுவிய மெதுவடை தமிழ்நாட்டுக்குள் உடுப்பி ஓட்டல்கள் வழியாக நுழைந்தது! பெயரில் மெது இருந்தாலும் அதிவேகமாக உணவு ரசனை மிகுந்த தமிழர்களின் வாய் வழியாக நுழைந்து அவர்கள் இதயத்தில் இடம் பிடித்தது! இது தமிழ்நாட்டிற்குள் வந்து கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிறது!

இட்லி, பொங்கல், உப்புமா, கிச்சடி என நம் எல்லா டிஃபன்களுக்கும் மியூச்சுவல் ஃபிரெண்டாக இருப்பது மெதுவடையே! அதிலும் புள்ளி வைத்தால் கோலம் என்ன கோலாகலமே போடும் தமிழர்கள் இதில் சாம்பார் வடை, ரசவடை, தயிர் & மோர்க்குழம்பு வடை, வடை கறி என்று பல அவதாரங்களை தமிழக கைப்பக்குவத்தில் உருவாக்கினர்.

பெரிய ஓட்டல்களில் மட்டுமே கிடைத்த இந்த வடை ரோட்டுக்கு வந்தது! பொதுவா ரோட்டுக்கு வந்துட்டான்னு சொன்னா அவன் தோத்துட்டான்னு அர்த்தம்! ஆனால் சாலையோர கடைகளுக்கு வந்த பின்பு தான் வென்றது மெதுவடை! கமல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பே தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது மெதுவடை!

இன்றும் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாலையோரக் கடைகளில் மட்டும் தினசரி தயாரிக்கும் வடைகளின் எண்ணிக்கை நிச்சயம் 2 இலட்சத்தை தாண்டும்! இந்தளவு எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு வடை சுட தற்போது போட்டிக்கு சிலர் வந்துவிடாலும் முதன் முதலில் இந்த சாதனையைச் செய்தவன் நம்ம மெதுவடையே!

எலந்தைப் பழம் முதல் மாம்பழம் வரையான சைஸில் மக்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப ₹1 முதல் ₹12 வரை வடைகள் இன்றும் மதுரையில் உண்டு! கர்நாடகாவில் மட்டுமே சாலையோரக் கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உளுந்துடன் எந்தவித மாவையும் கலப்படம் செய்யாமல் அற்புதமாக வடை சுட்டுத் தருகிறார்கள்!

தமிழ்நாட்டில் எல்லாம் அசால்டாக மைதா, கார்ன், அரிசி மாவுகளை உளுந்துடன் கலந்து விடுவார்கள்! இது உளுந்துவடை பரம்பரைக்கு செய்யும் குலத் துரோகமாகும்! FTV மாடல்கள் போல கர்நாடக வடைகளை எல்லாம் பார்த்தவுடன் பிடித்துவிடும்! அந்த அளவுக்கு பஞ்சு போன்ற மென்மையும், மொறு மொறுப்பும் கலந்திருக்கும்!

நம்ம ஊரில் அப்படித் தேடினால் கூட கிடைக்காது! சில கர்நாடகக் கடைகளில் எல்லாம் ஹாலோ மெதுவடை கிடைக்கும்! வடை பார்க்க buffயாக இருக்கும் உட்புறம் அதிக மாவு இருக்காது! கடித்தால் வடகம் போல நாவில் கரையும்! மெதுவடை என்றால் அந்த மாவில் நிச்சயம் வெங்காயம், மிளகு, பச்சை மிளகாய் இருக்கவேண்டும்!

அதிலும் சின்ன வெங்காயம் இருப்பது சாலச் சிறந்தது பெங்களூரில் வெஜிடபிள் மெதுவடை என்னும் ஒரு வகை இருக்கிறது! சன்னமாக வெட்டப்பட்ட,இஞ்சி, தேங்காய் துண்டுகள், கேரட், கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டு அட்டகாசமாக டோநட் அளவில் இருக்கும்! நித்தியானந்தா ஆசிரம் இருக்கும் பிடதியில் இதை ருசித்துள்ளேன்.

பொதுவா இந்த மெதுவடைக்கு தேங்காய் சட்னி தான் சிறந்த காம்பினேஷன் என்றாலும் தக்காளி வெங்காயம் கார சட்னி, இஞ்சி மிளகாய் சட்னி, மல்லி புதினா சட்னி என பலவகை சட்னிகளை ஜோடியாக தந்த பெருமை மதுரைக்கு உண்டு! திண்டுக்கல் மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு கார குருமாவை கண்டுபிடித்து தந்துள்ளனர்.

அரைத்துவிட்ட சாம்பார், கோசுமல்லி, கொத்சு போன்ற குழம்பு வகைகள் இதற்கு சிறந்த ஜோடிகளாகும்! இதில் ஸ்பெசல் உளுந்து வடைன்னு ஒண்ணு இருக்கு உளுந்து மாவை கொஞ்சம் நறநறப்பா இறுக்கமா அரைச்சு வெஜிடபிள்ஸ் போட்டு அதிரசம் மாதிரி அகலமாக தட்டி மசால் வடை போன்ற ஸ்டெக்ச்சரில் போடுவாங்க!

அதை சூடாக ருசிப்பது தெய்வ லெவல்! கேரளாவில் பெரிய ஓட்டல்களில் வடை நன்றாக இருக்கும், சாலைக்கடைகளில் அதில் மைதா மாவைக் கலந்து சேட்டன்கள் சேட்டை செய்திருப்பார்கள்! ஒரு முறை ஆந்திராவில் மெதுவடையை கண்டதும் திகிலானேன் ஒரே ஒரு வடைக்குள் கரையோரத்தில் படுத்திருக்கும் முதலைகள் போல..

ஆறேழு சிவப்பு மிளகாய்கள் பொதிந்து கிடந்தன! “பின்னால்” வரும் விளைவுகள் என் கண்களிலேயே (தெ)எரிந்தது! உளுந்துவடை சூடாகவே சாப்பிட வேண்டிய ஒரு பொருளாகும்! அதை லேசாக சட்னியில் ஊறவிட்டு சூடு ஆறும்முன் சாப்பிடவேண்டும்! நம்ம திண்டுக்கல் குருமாவுடன் சூடான வடைகள் சாப்பிடுவது என்றால்..

அசால்டாக 1 டஜன் வடைகள் சாப்பிட்ட காலமெல்லாம் கண் முன் வந்து போகிறது! யானைக்கல் ஆசீர்வாதம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர், பெரியார் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வாசல் கேபிஎஸ் எதிரில், முனிச்சாலை, மேலமாசி/ வடக்கு மாசி வீதி சந்திப்பு என வடைகளை நாங்கள் வேட்டையாடி விளையாடியது எல்லாம் பரவசமே!

இந்த உளுந்திலேயே போண்டா, சீயம், கார போண்டா என மரு வைத்து மெதுவடை வகைகள் மதுரை பக்கம் கிடைக்கும்! சூடானஇட்லி/ சூடான குழைவான கிச்சடி/ சூடான உப்புமா/சூடான நெய் வெண் பொங்கலோடு, சூடான சாம்பாரில் ஊறிய மெதுவடையை சூடாகவே சாப்பிடுவதை நினைத்தாலே.. ஆஹா இதல்லவோ…🍩

Saturday, 5 April 2025

♠️♥️சூதாட்டம்

20 - 20

ஐபில் தொடர் என்பது ஒரு அப்பட்டமான அம்யூஸ்மெண்ட் & எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வாகும்! டாஸ், முதல் பேட்டிங், சேஸிங் இங்கு ஆடுகின்ற ஆட்டங்கள், ப்ளேயர்களுக்குள் நடக்கும் ஈகோக்கள், கேப்டன்கள் மாற்றம், அணி பயிற்சியாளர்களின் ஆக்டிங் ஆலோசனைகள், அணி உரிமையாளர்களின் நடத்தை..

கருத்து மோதல்கள், பேட்டிகள், மக்களிடம் பரப்பப்படும் செய்திகள், சோஷியல் மீடியா சப்போர்ட் என மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் அத்தனையும் பக்காவாக கதை, திரைக்கதை, வசனம் என திட்டமிட்டு எழுதப்பட்டவை! இந்தியாவில் IPL ஒரு பணம் காய்ச்சி மரம்! இந்த 18 ஆண்டுகளில் அது செழித்து வளர்ந்துள்ளது!

டிரீம்11, போக்கோ, சுபி போன்ற இணைய சூதாட்ட வணிகர்கள் தான் இப்போது ஐபிஎல்லின் மெயின் ஸ்பான்ஸர்கள்! எந்த ஐபிஎல்லை சூதாட்டம் என்றார்களோ இப்போது அதை சூதாட்ட கார்ப்பரேட்டுகள் தான் இதை கட்டி ஆளுகின்றனர்! இதன் ஆணிவேரை தேடினால் அகப்படும் நபர்கள் நாம் ஆச்சரியப்படும் அளவு புதியவர்கள் இல்லை!

இந்த ஆட்டம் உங்களை அடிமையாக்கலாம், இதில் நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம் பொறுப்புடன் விளையாடுங்கள் என்ற அறிவிப்பு வேறு! நாங்க ஏண்டா நடுராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும்? இதை இப்போ மின்னல் வேகத்தில் சொல்கின்றனர்! வாய்ஸை fast forward செய்த ஸ்பீடில் சொல்கிறார்கள் (suppi)

சூதாட்டம் மட்டுமின்றி இதன் வணிகம் மாநில வாரியாக விளம்பர தாரர்களை குறி வைத்து இழுக்கிறது! வறுத்த கடலை முதல் வாட்ச் வரை 4 வருடங்களுக்கு முன்பு தமிழக அளவில் டிவியில் வரும் விளம்பரங்கள் இப்போ IPL ஆட்டங்களிலும் வருகிறது! அந்தளவிற்கு IPL இந்தியாவில் மிக ஆழமாக வேர்விட்டு வளர்ந்து இருக்கிறது!

இதன் வணிகம் ஆதார கிரிக்கெட் ஆட்டத்தின் விதிகளையே மாற்றி பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது! ஸ்டார்டிஜிக் டைம், இம்பாக்ட் ப்ளேயர், வைடு பால் ரிவ்யூ, ஆடிக் கொண்டிருக்கும் வீரரை வெளியே அனுப்புவது போன்ற பல புதிய விதிகளை உருவாக்கியது IPL தான்! ஆட்டத்தின் சுவாரஸ்யத்திற்கு இங்கு எதுவும் நடக்கலாம்!

டென்னிஸில் மிக்ஸ்டு டபுள்ஸ் எனும் ஆண் & பெண் இரட்டையர் ஆட்டம் போல நாளை மிக்ஸ்டு லெவன்ஸ் அணிகள் வரலாம். ஆண் பெண் ஜோடி ஓபனர்களாக வரலாம்! ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தால் 10 ரன்கள் போனஸ் தரலாம்! ஆண்கள் வீசும் பந்தில் பெண் பேட்டர் சிக்ஸ் அடித்தால் அதற்கு 8 ரன்கள் தரலாம்!

செஸ் ஆட்டத்தில் ஒருபுறமிருக்கும் சிப்பாய் வெட்டுப்படாமல் எதிர் புறம் ராஜாவின் வரிசையைத் தொட்டுவிட்டால் மீண்டும் ஏற்கனவே வெட்டப்பட்ட பவர் உள்ள ஒரு காயை திரும்ப கொண்டு வருவது போல பவர் ப்ளேவில் ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்றால் அவுட் ஆன ப்ளேயரை ஒரு முறை திரும்ப அழைத்துக் கொள்ளலாம்!

மெய்டன் ஓவர்கள் வீசினால் 4 ரன்கள் போனஸ், பந்து மிடில் ஸ்டம்பை வீழ்த்தினால் 2 ரன்கள் போனஸ், ஒற்றைக் கை கேட்சுக்கு 3 ரன்கள் போனஸ் இப்படி எது வேண்டுமானாலும் நாளை நடக்கலாம்! மேன் ஆஃப் தி மேட்ச், உமன் ஆஃப் தி மேட்ச் பரிசுடன் ஜுவல்லரிகள் தரும் பிரேஸ்லெட், நெக்லஸ், செயின், பரிசாக வழங்கப்படலாம்!

சிக்ஸ் அடித்தால் சில்க் சாரி என்று உமன் பேட்டர்களுக்கு பட்டுப் புடவைகளை கூட பரிசாக வழங்கலாம்! டிவி ஆடியன்ஸுக்கு கேள்வி கேட்டு பரிசுகள் வழங்கும் நம் பண்டைய காலத்து சானல் பண்பாடும் காலங்காலமாக நடைமுறையில் உள்ளதால் பெண்கள் சீரியலைத் துறந்து விட்டு கிரிக்கெட் பார்த்து கதறிக் கதறி அழுது மகிழலாம்!

நான் இங்கு எழுதிய கற்பனைகளை காட்டிலும் வேறு ஐடியாக்களும் நாளை இதில் வரலாம்! அந்தளவுக்கு கிரிக்கெட்டை மாற்றுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை! ஒரு விளையாட்டு வணிகமானால் ப்ளேயர்களை விட ஓனர்கள் தான் அதனை தங்கள் விருப்பத்திற்கு ஆட்டுவிப்பார்கள்! இங்கே முதல் பேட்டிங், சேஸிங் விஷயமே அல்ல!

20 ஓவர்களும் இவர்களுக்கு டர்ன் ஓவர்களே! திட்டமிட்டு அதை செயல்படுத்துகிறார்கள்! பார்வையாளர்களான நாம் அதை ரசிக்க வேண்டுமே ஒழிய, IPLஐ தூக்கி தலையில் வைத்து கொண்டாடுவதோ அல்லது அந்த ஆட்ட நுணுக்கங்களை ஆராய்வதோ, மெனக்கெட்டு இந்த நாடகங்களை சிலாகிப்பதோ நம் கிட்னிக்கு டேஞ்சரானது👹

மஹான் கவுண்டமணி “பெரிய இடத்து மாப்பிள்ளை” படத்தில் ஜெயராமிடம் சொல்வாரே.. நீ டிரைவர்.. டிரைவர்.. டிரைவர்..

அதே போலத் தான் ஐபிஎல்லுக்கும் சொல்லலாம்.. நீ சூதாடி.. சூதாடி.. சூதாடி.. ♠️ ♥️ ♣️ ♦️

அம்புட்டுதேங்ங்… 💔