Wednesday 30 December 2015

16. நாயகனாய் நின்ற...

#ஆண்டாள்_பெருமை

பெரிய மனிதர்களை சந்திக்கச் செல்லும் போது அவர்களது செக்யூரிட்டிகளுக்கு நாம் பெரும் மரியாதை தருவோம் கிட்டத்தட்ட அந்த வி.ஐ.பி.யாகவே அவரும் பிகு செய்வார். இந்த பூசாரிகள் வரமளித்தால் தான் நீங்கள் கடவுளையே காண முடியும். இவ்வளவு ஏன் ஏ.வி.எம் ஸ்டுடியோ வாட்ச்மேன் காலில் விழுந்து அனுமதி கேட்ட எத்தனையோ பேர் இன்று மிகப் பெரிய பிரபலங்கள் ஆகியிருக்கின்றனர்.

இந்தப் பாடலில் விழித்தெழுந்த பெண்கள் நந்தகோபனின் மாளிகை வாசலுக்கு வந்து வாயில் காப்போனிடம் கேட்கிறார்கள் எங்கள் நாயகன் நந்தகோபனின் கொடி பறக்கும் தோரண வாயிலை காவல் காப்போனே ஆயர்குலப் பெண்கள் எங்களுக்கு வேண்டியதை தருவேன் என நேற்றே சொன்னார் மாய மணிவண்ணர் அவரை எழுப்ப வந்துள்ளோம்.

நோன்பிருந்து நீராடி தூய்மையாக வந்துள்ளோம் நாங்கள் வந்த இந்த நல்ல காரியம் நிறைவேற எங்களை உள்ளே சென்று பாட விடு அழகிய இம் மணிக்கதவின் தாழ்ப்பாளை திறந்துவிடு.. இந்த காலத்தில் இவ்வளவு இளம்பெண்கள் கூட்டமாகப் போனால் இப்படியெல்லாம் பாட வேண்டாம் வாட்ச்மேனே வாயில்  ஜொள்ளு விட்டு கதவுகளைத் திறந்து இருப்பான்.

ஆண்டாளின் பாடல்களில் தமிழில் அருகி மறைந்த பல தமிழ் வார்த்தைகளை காணலாம். உதாரணமாக கொண்மூ, எழினி என்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இவை இரண்டுமே மேகத்தை குறிக்கும் தமிழ்ச் சொற்கள்.. இன்று மேகம் முகில் போன்ற வார்த்தைகள் மட்டுமே வழக்கில் உள்ளன.

இந்தப் பாடலிலும் நென்னல் என்ற வார்த்தையைக்  குறிப்பிடுகிறார். நென்னல் என்றால் நேற்று என அர்த்தம், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையிலும் இந்த வார்த்தை வருகிறது. ஆண்டாள் எழுதிய தமிழ் நென்னலில் மட்டுமன்று என்றும் கன்னல்.

மார்கழி 16 ஆம் நாள் பாடல்...

நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய
கோயில்காப் பானே கொடித்தோன்றும்
தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

15. எல்லே இளம்கிளியே...

#ஆண்டாள்_பெருமை

இதற்கு முன் வந்த 14 பாடல்களில் கோபியரை எழுப்பிய ஆண்டாள் இந்த 15 வது பாடலிலிருந்து அவர்களோடு உரையாடுகிறார். ஒருவரின் குணநலன்கள் பற்றி அறிந்து நெடுநாள் பழகிய இருவர் பேசும் பேச்சில் நக்கலும் நையாண்டியும் தொனிக்கும் அல்லவா.. "நீ யாருன்னு எனக்குத் தெரியும் நான் யாருன்னு உனக்குத்தெரியும் இந்த டகால்டி வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம் மகனே"என்று கவுண்டமணி சொல்வது போல.

பொதுவாக இருவர் பேசிக் கொண்டிருப்பதை நாம் கவனிப்பதில்லை நிறைய சானல்களில் ரிமோட்டை தேட வைப்பது சுவாரஸ்மில்லாத பேச்சுகள் தான்.. ஆண்டாளின் இந்த பாசுரத்தின் விளக்கத்தை மட்டும் வட்டார வழக்கான சென்னைத் தமிழில் இருவர் பேசிக் கொள்வதைப் போல பார்க்கலாமா எளியவர்களின் மொழியில் படிக்கஒரு சுவாரஸ்யம் கிடைக்கும்

எயுப்புறவங்கோ : இந்தாம்மே கிளி கணக்கா இர்க்குற பொண்ணே ! எம்மாநேர்ந்தான் தூங்கிகினு இர்ப்ப?

படுத்துனு இர்க்கற பொண்ணு : ஏ.. இன்னா அல்லாரும் கீச் கீச்னு கொரல் வுடுறீங்க? கம்முனு கிடங்கோ தோ வந்துரேன்....

எயுப்புறவங்கோ : நீ மெய்யாலுமே படா கில்லாடி தாம்மே நீ இன்னா பேசுவேன்னு எங்க அல்லாருக்கும் மின்னாடியே தெர்யும்.. வுன் வாய்ல இர்ந்து இன்னா வரும்ன்னும் தெர்யும்..

படுத்துனு இர்க்குற பொண்ணு : ஆரு நானா கில்லாடி.... நீங்க தாம்மே படா கில்லாடிங்கோ!  உங்க அல்லாரையும் கண்டுகினு தான் நான் கத்துகினு இருக்கேன்.....

எயுப்புறவங்கோ : தோடா... எயுந்து வராம பட்த்துகினே சொம்மா பேசிகினே இர்க்கே! சுகுரா எயுந்துரும்மே! விர்தம் இர்க்குறத வுட அப்டி உனுக்கு இன்னா பெர்ய வேல கீது?.

படுத்துனு இர்க்குற பொண்ணு : அல்லாரும் வந்துகினாங்களா?

எயுப்புறவங்கோ : அக்காங் ! அல்லாரும் வந்துகினாங்கோ!வோணும்ன்னா நீயே வந்து கரீட்டா கீதான்னு எண்ணிக்கோ....

மதுரா புரியில பெர்ய ஆனையவே பூன மேறி மிறிச்சி கொன்னவரு... எதுக்குரவன் நெஞ்சுல இர்க்குற மஞ்சா சோத்த எட்த்து அவன் ஆணவத்த உண்டுல்லைன்னு ஆக்குனபரு..அவர பத்தியே பாடினு இர்ப்போம் எயுந்து வா கண்ணு.. 

சென்னைத்தமிழ் பேசுபவர்கள் ஆண்டாளைப் படித்தால் இப்படித்தான் பேசுவார்களா எனக் கேட்டால் இல்லை அவர்கள் நல்ல தமிழுக்கு மாறி விடுவார்கள் என்பேன்.. ஏனெனில் பக்தியில் தமிழ் வளர்த்த தங்கத் தாரகை இதய தெய்வம் புரட்சித்தலைவி நிரந்தர முதல்வர் எங்கள் அம்மா ஆண்டாள் அருளிய பாசுரங்கள் அப்படி.

மார்கழி 15ஆம் நாள் பாடல்...

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

Tuesday 29 December 2015

14. உங்கள் புழக்கடை...

#ஆண்டாள்_பெருமை

லேட்டஸ்ட் பாத்ரூம் ஃபிட்டிங் சார் கிட்டத்தட்ட 20 இலட்சம் செலவாச்சு ஒரு ஸ்டீம் பாத் & மல்டி ஷவர் சேம்பர் பிக்ஸ் பண்ணியிருக்கேன் வாட்டர் பிரஷர்ல தெறிக்கும் பாருங்க அதுல குளிக்கிறதே தனி சுகம் பைப் எல்லாம் ஜாகுவார் கம்பெனி.. குழந்தைகளுக்கு ரிவால்விங் பாத்டப் கூட ஒண்ணு இருக்கு.. இது இன்றைய வசதி படைத்தவர்களின் குளியலறை.

ஆனால் 20இலட்சமல்ல 20 கோடி கொடுத்தாலும் கிட்டாத நேச்சுரல் பாத் ரூம் ஆண்டாள் காலத்தில் பாருங்களேன் வீட்டு பின் புறத்தில் அமைந்துள்ள குளம் அங்கு செந்தாமரைகள் மலர்ந்தும் அல்லிகள் மொட்டாகவும் காணப்படுகிறது. மார்கழி என்பதால் நிச்சயம் சில்லென்ற நீர்  இப்படி ஒரு குளத்துக் குளியல் மல்டி ஷவர் தருமா.? அந்த பெண்ணை எழுப்புகிறார்..

பெண்ணே காலையில் சூரியன் உதித்து தாமரை மலர்ந்து அல்லி மூடி விட்டது வெண்ணிறப் பற்கள் மின்ன காவியணிந்த துறவிகள் அவர்களின் ஆன்மிகக் கடனான சங்கு முழங்க கிளம்பிவிட்டனர். உங்களையெல்லாம் நானே வந்து எழுப்புவேன் என ஜம்பமாக வாயாடிவிட்டு நீயே இப்படி தூங்கலாமா? இப்படி உறங்க உனக்கு வெட்கமாக இல்லை.. எழுந்து வா

நீளக்கைகள் இரண்டில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கும் தாமரைக் கண்ணனை அவரின் அழகை அவர் பெருமையை வாயாரப்பாடலாம் வா.
மலர் மலர்வதை வாய் திறப்பு எனவும் மொட்டு மூடிக்கொள்வதை வாய் மூடி எனவும் ரசனையோடு ஆண்டாள் விளக்கியிருப்பதை பாருங்கள்.

இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின்னும் மனிதர்கள் திறந்த வாய் மூட மறந்து திளைத்துக் கிடக்கிறார்கள் ஆண்டாளின் தமிழ் குளத்தில்.

மார்கழி 14 ஆம் நாள் பாடல்...

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

Sunday 27 December 2015

13. புள்ளின்வாய்க் கீண்டானை...

#ஆண்டாள்_பெருமை

சரக்கிருக்கு ரபபப்பப்பா... முறுக்கிருக்கு ரபபப்பப்பா... இந்த வரிகள் ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்ல பாடலிலும், சரக்கிருக்கு.. முறுக்கிருக்கு.. எனக்கெதுக்கு மனக் கவலை.. இந்த வரிகள் புதுச்சேரி கச்சேரி எக்கசக்க பார்ட்டி ஒண்ணு புடிச்சேன் பாடலிலும் வரும்.. முதல் பாடல் அபூர்வ சகோதரர்கள் படம் இரண்டாவது சிங்கார வேலன் படம்.

இரண்டுமே கமல் படம் இரண்டையும் எழுதியவர் கவிஞர் வாலி.. நான் கூட இவ்வளவு பெரிய கவிஞர் வாலிக்கு இந்த இருவரிகளை விட நல்ல வரிகள் அவர் கற்பனையில் வரவில்லையா என நினைத்ததுண்டு.. ஆண்டாளின் பாசுரம் படித்த பின்பு அதற்கு விளக்கம் கிடைத்தது.. ஆண்டாளும் ஒரே வார்த்தையை வேறு வேறு பாசுரங்களில் பயன்படுத்தியுள்ளார்.. அது மார்கழி 6ஆம் நாள் பாடல்.

6 ஆம் நாள் பாசுரத்தின் முதல் அடியில் புள்ளும் சிலம்பினகாண் என்னும் அதே வார்த்தையை 13 ஆம் நாள் பாசுரத்தின் 5 வது வரியில் அப்படியே உபயோகிக்கிறார்.. கொக்கின் வடிவெடுத்து வந்த அசுரன் பகாசூரனின் வாயைப் பிளந்தவன்.. ராவணனின் பத்துத் தலைகளை கிள்ளியெறிந்தவன் அவன் புகழ்பாடி மற்ற பெண்கள் எல்லாம் நோன்பிருக்க சென்று விட்டனர்.

வெள்ளி முளைக்க வியாழன் மறைய கூட்டில் இருக்கும் பறவைகளும் சப்தம் எழும்புகின்றன போதரிக் கண்ணுடைய பெண்ணே.. போதரிக் கண் என்றால் வண்டமர்ந்த தாமரைப்பூ போன்ற கண்களாம்.. கரு விழிகளை வண்டாகவும் கண்ணை தாமரையாகவும் உவமைப் படுத்துகிறார் ஆண்டாள். இம் மார்கழி நன்னாளில் எங்களோடு வந்து குளிரக்குளிர குளிக்காமல் ஏன் இப்படி..

பள்ளி கொண்டு உறங்குகிறாய்.? நீ உறங்குகிறாயா அல்லது கள்ளத்தனமாக உறக்கம் வருவது போல நடிக்கிறாயா.? எங்களுடன் வந்து சேர்ந்து கொள் எம்பாவாய்.. என செல்லமாகவும் உறங்குபவளை அதட்டுகிறார் ஆண்டாள். ஆண்டாளின் திருப்பாவை ஒரு டூ-இன்- ஒன் அதில் தான் இராமாயணம் மகாபாரதம் இரண்டையும் ஒன்றாகப் படிக்கலாம்.

மார்கழி 13 ஆம் நாள் பாடல்...

புள்ளின்வாய்க் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

10. நோற்றுச் சுவர்க்கம்...

#ஆண்டாள்_பெருமை

ஆமா இவரு பெரிய பணக்காரரு அம்பானிக்கே கடன் கொடுத்தவரு மாதிரி பேசறாரு.. பொதுவாக நாம் கிண்டலாக பேசும் போது ஒப்பீடு இது போல மிகைப்படுத்தலாக இருக்கும்.. அதாவது அவரே பெரியவர் அதை விடவா நீ பெரியவன் என்னும் தொனியில் கூறுவோம்.. அதிகாலை எழும்பாமல் உறங்கிக் கிடக்கும் பெண்ணிற்கு ஆண்டாளும் ஒரு ஒப்பீடு தருகிறார்.

சொர்க்கம் புகவேண்டும் என்பதற்காக விரதம் இருக்கின்ற பெண்ணே.. நீ கதவைத்தான் திறக்கவில்லை ஒரு குரல் கொடுத்தாவது பதில் பேசலாமே.! நறுமண துளசியை மாலையாய் அணிந்திருக்கும் நாராயணன் பெருமையை ஊர் மெச்ச போற்றித் துதித்தால் அவர் பேரின்பத்தை நமக்கு பரிசாகத் தருவார்.. அதை விட்டுவிட்டு சிற்றின்பமான இந்த உறக்கம் தேவையா.?

அன்று யமனிடம் வாய் தவறி வரம் கேட்டு தூக்கத்தை வரமாக பெற்றானே கும்பகர்ணன் அவனிடம் நீ தூக்கத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டாயா.? உனக்கும் அவனுக்கும் போட்டியா? அல்லது அவன் உன்னிடம் தோற்று விட்டானா.? எல்லையற்ற உன் சோம்பலை துறந்துவிடு வா வந்து இவ்வாசல் கதவை திறந்துவிடு.. என உறங்குபவளை கும்பகர்ணனோடு ஒப்பிடுகிறார்.

எனக்கென்னவோ ஆண்டாள் பாடினால் கும்பகர்ணனே எழுந்து வந்து விடுவான் என்றே தோன்றுகிறது.

மார்கழி 10 ஆம் நாள் பாடல்...

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

9. தூமணி மாடத்து...

#ஆண்டாள்_பெருமை

பாலுமகேந்திரா, பி.சி.ஶ்ரீராம், சந்தோஷ்சிவன், மணிகண்டன் போன்ற புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்கள் படமாக்கும் காட்சிகள் கலைநயம் மிக்கதாக இருக்கும். அதற்கு முக்கியக் காரணம் காட்சிக்கேற்ற அழகான லைட்டிங்.! இயற்கையாகவோ செயற்கையாகவோ வரும் ஒளியின் மூலம் அந்தக் காட்சியை மெருகு ஏற்றுவார்கள். ஆண்டாளும் ஒரு ஒளிப்பதிவாளர் தான்.

ஆண்டாள் இப்பாடலில் நம் கண்முன்னே படமாக லைட்டிங் அமைக்கிறார்
ப்படி (வைட் ஆங்கிளில்)ஒரு வீடு அந்த அதிகாலை இருளில் வீட்டில் ஒரு அழகான விளக்கு மாடம் அங்கு மணிகளுடன் வெண்ணிற திரைச்சீலைகள் அசைகின்றன அதனைச் சுற்றி அலங்காரமான விளக்குகள் எரிகின்றன. 

மணம் கமழும் சாம்பிராணிப் புகை பரவிக்கிடக்க காமிரா பார்வேர்டில் ஜூம் ஆகிறது. இலவம் பஞ்சுமெத்தையில் உறங்கிக் கொண்டு இருக்கிறாள் ஒருத்தி. அப்படியே இந்த காட்சியைக் கற்பனை செய்து பார்த்தால் அடடா ஒரு மணிரத்னம் படம் போலவோ ஷங்கர் படம் போலவோ இருக்கிறதா..!!

ஆண்டாள் ரசனை ராணி.. அவளது அழகியல் மிகுந்த பார்வை பாசுரங்களின் பல இடத்தில் பிரதிபலிக்கும்.. வார்த்தைகளிலேயே இந்தக் காட்சியை அமைத்த அவள் திறனைப் பாருங்கள் வளமானகற்பனை, ஆழ்ந்த ரசனை, கண்ணன் மேல் கொண்ட அளவிலாக் காதல் அத்தனையும் விளங்கும்.

இங்கே இந்த காட்சியை நிறுத்திவிட்டு அடுத்த ஷாட் அப்படியே கதவிற்கு இந்தப்பக்கம் நாம் மாற்றுவோம்... அங்கே தினமும் இந்த வீட்டிற்கு வரும் அப் பெண்ணின் தோழிகள் கதவுக்கு வெளியில் இருந்து இவளை கூப்பிட்டு எழுப்புகிறார்கள். மாமன் மகளே என்ன உறக்கம்? மணிக்கதவை திறந்துவிடு
அட மாமியே நீ உன் மகளை எழுப்ப மாட்டாயா.?

உன் மகள் என்ன பேசா மடந்தையா? செவித்திறன் அற்றவளா? மயங்கிக் கிடக்கிறாளா? யாராவது அவளை மந்திரத்தால் மயக்கிவிட்டார்களா? மாயவர்களுக்கு எல்லாம் பெரிய மாயன், மாதவன்,வைகுந்தன் என்று அவன் பல நாமங்களை சொல்லிப்பாடுவோம் அவளை சீக்கிரம் எழுப்பு... ஆண்டாள் இது போல கூப்பிட்டு நம்மை எழுப்பினால் அதற்காகவே தூங்கலாம் போல.

மார்கழி 9 ஆம் நாள் பாடல்...

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

8. கீழ்வானம் வெள்ளென்று...

#ஆண்டாள்_பெருமை

தன்னை வணங்குபவனை அருள்வது கடவுளின் குணம். ஆனால் நம்மை வா வா என்றழைத்து அருளும் கடவுள் இருக்கிறாரா.! கண்ணன் இருக்கிறான் என்கிறார் ஆண்டாள். கண்ணன் ஆ வென்று வாய் பிளந்த போது அவரது அன்னைக்கு அன்று உலகில் உள்ள எல்லாமும் தெரிந்தது..  அது தான் உலகின் முதல் கூகுள்.. காட்டியது நம் கோகுல்..

நம் வேண்டுதலுக்கு ஏற்றபடி திருவிளையாடல் தருமி சொல்வது போல எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி... என அதை ஆராய்ந்து நம்மை ஆ வென்று அழைத்து ஆட்கொள்வான் ஆயர்குலக் கண்ணன்.. ஆ வென்றால் பசுக்கள் என்றும் அர்த்தம் அந்தப் பசுக்கள் பாலைப் பொழிவது போல அவன் பக்தர்களுக்கு அன்பைப் பொழிவான்.

அவனைச் சேவிக்க என்ன செய்ய வேண்டும் உறங்கும் பெண்ணே..? பார் கீழ் வானம் விடிந்துவிட்டது எருமைகள் புல்வெளியில் பரந்து மேய்கின்றன.. பாவை விரதம் இருக்கின்ற இடத்திற்கு பலர் போய்விட்டனர் சிலர் அங்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உன் வீட்டு வாசலில் நிற்கின்றோம் நீ எழுந்து வா..

குதிரையாக உருமாறி வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்தவன் சாணுகன் முஷ்டிகன் என்ற இருமல்லர்களை வீழ்த்தியவன் தேவாதி தேவன் அவன் அவனை சேவிப்போம் அப்போது தான் அவன் வா வென்று அழைத்து நம்மை அருள்வான் என்கிறார்.. கண்னனின் அருள் வருகிறதோ இல்லையோ ஆண்டாள் ஆ வென்றால் கண்ணனே வருவான் போல.

மார்கழிப் 8ஆம் நாள் பாடல்...

கீழ்வானம் வெள்ளென்று எருமைசிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ளபிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

6. புள்ளும் சிலம்பின...

#ஆண்டாள்_பெருமை

சங்கு ஊதிட்டாங்க என்றால் இப்போது கதை முடிஞ்சது ஆள் காலி என்று தான் அர்த்தமாகிறது.. சங்கில் ஊற்றி வாயில் பால் ஊற்றினால் பிறப்பு சங்கூதி வாயில் பால் ஊற்றினால் இறப்பு என ரைமிங்காக ஸ்டேட்டஸ் போடுகிறோம் ஆனால் பெருமாளுக்கு சங்கு ஓர் அடையாளம் ஓர் ஆயுதம். 

பொதுவாக நாஸ்டால்ஜியா நினைவுகளில் நமது இளம் பிராயத்தில் காலை 6 மணிச்சங்கு மதியம் 12 மணிச் சங்கு என சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எதையும் தொடங்கும் போது ஒலிக்கும் சப்தம்.

அப்போது ஏன் இறப்புக்கு ஊதவேண்டும்? அது முடிவல்லவா?இல்லை இறப்பு மனிதர்களுக்கு மறுமையின் தொடக்கம் அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் அமர வாழ்வின் தொடக்கம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம் இப்படி பிறப்பு இறப்பு ஆலயம் போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை 

அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம். அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலில் இருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்த நாளின் நல்ல தொடக்கமாக அமைய அந்த சப்தம் உன் காதுகளில் விழவில்லையா.?

என கேட்டு ஆரம்பிக்கிறார்.. அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி இவர்களுக்கு அம்மா புகழ்.. ஆண்டாளுக்கு அரியின் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..?

நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது சகடனை காலால் நிறுத்திக்கொன்றது பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதயதெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்... மனதில் நாரணனை நினைத்து

முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காகவாவது எழுந்து வா என்கிறார்.

பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள். ஆனால் ஆண்டாள் அரி என்னும் சப்தம் காதுகளில் விழுந்தால் போதும் என்கிறார்.. அவருக்கு அதுவே போதும்.

பின்குறிப்பு:

பாடல்களில் அரி என்று உச்சரிக்காமல் ஆபாசமாக உச்சரித்து அதற்கும் பீப் போட்டு சாங்கு பாடி தனக்கே சங்கு ஊதிக் கொண்டவர்களின் சங்கொலி பற்றி இதில் நான் குறிப்பிடவில்லை.

மார்கழி 6ம் நாள் பாடல்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

12. கனைத்து இளம்...

#ஆண்டாள்_பெருமை

நாட்டில் பாலும் தேனும் ஆறாக ஓடுகிறது என்னும் சொற்றொடரை சுபிட்சத்திற்கும் செழிப்பிற்கும் உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆண்டாள் வீட்டுச் சுபிட்சத்திற்கு இதை ஒப்பிடுகிறார்.. போகிற போக்கில் தாய்ப்பாசம், பேரன்பு இவையெல்லாம் மிருகங்களுக்கும் உண்டு என அழகாக சித்தரிக்கும் அவரது கற்பனையைப் பாருங்கள்..

தங்கள் கன்றுகளின் குரல் கேட்ட எருமைகள் தாய்ப்பாசம் பொங்க தம் கன்றுகளை நினைத்து தம் மடியில் இருந்த பாலை யாரும் கறப்பதற்கு முன் தாமாகவே சுரக்கின்றன.. அப்படி சுரந்த பால் வீடெங்கும் வெள்ளமென ஓடி வீடே பால் சகதியாக உள்ளது.. இத்தனை பால் தரும் செழிப்பான மாடுகள் பல வைத்திருக்கும் செல்வந்தனின் தங்கையே..

மார்கழி மாதம் பெய்யும் அதிகாலை பனியின் துகள்கள் எங்கள் தலைமீது படிந்திருக்க நாங்கள் உன் வீட்டருகே வந்து உனக்காக நிற்கின்றோம்.. இராவணனை வதம் செய்த இராமன் பேர் பாடுகிறோம் நீயும் வந்து வாய் திறந்து பாடு.. வா கதவைத்திற.. உனக்கு ஏனிந்த பெரு உறக்கம்.. நீ இப்படி உறங்குவது அக்கம் பக்கத்திலிருப்போர்க்கு எல்லாம் தெரிந்துவிட்டது எழுந்து வா பெண்ணே..

இந்த வர்ணனையைப் படித்ததும் ஒரு பால் பண்ணைக்குள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது அல்லவா! பால் மணம் கூட மூக்கில் உணர முடிகிறது.. இது பாலின் மணம் மட்டும் அல்ல ஆண்டாள் கண்ணன் பால் கொண்ட காதலின் மணம்.. ஆம் அது கறந்த பாலைப் போல் அவ்வளவு புனிதமானது.

மார்கழி 12ஆம் நாள் பாடல்..

கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்
அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

11. கற்றுக் கறவை...

#ஆண்டாள்_பெருமை

இடையோ இல்லை.. இருந்தால் முல்லைக் கொடிபோல் மெல்ல அசையும்.. என எம்.ஜி.ஆர் படப் பாடலையும், உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக் கண்ணல்லவா இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா.. மின்னல் இடை அல்லவா..! சிவாஜிப் பட பாடலையும் கேட்டிருப்போம்.

இஞ்சி இடுப்பழகி, ஒல்லிக் குச்சி உடம்புக்காரி,போன்ற தமிழ்த் திரைப்படப் பாடல்களில் சொல்லப்படும் உவமைகள் போல ஆண்டாள் தன் பாடலில் இடை பற்றி குறிப்பிடுகிறார். ஆண்டாளின் உவமையில் அவளது இடை பாம்பின் படம் போல என்கிறார். சரேலென விரியும் போது தான் அது தெரியும் அதற்கு முன் அது இருக்கிறதா என்பதே தெரியாது என்கிறார். எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்.

கன்றுகளோடு கறவைப் பசுக்களும் கூட்டமாக நிற்க பாலைக் கறந்து கொண்டிருக்கும் ஆயர் குலத்தினர் பாலைக் கறப்பதிலும் தம்மை எதிர்க்கும் பகைவர் குல வேரை அறுப்பதிலும் வல்லவர்கள் அக்குலத்தில் பிறந்த தங்கக் கொடியே..புற்றிலிருக்கும் பாம்பின் படம் போன்ற அல்குல் உடைய மெல்லிடையாளே.. மயில் போன்ற பெண்ணே.. 

உன் தோழியர் யாவரும் உன் வீட்டு வாசல் வந்து கார் முகில் வண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம்..எதற்கும் அசராமல் உனக்கு ஏனிந்த உறக்கம்? செல்வச் சீமான் பெற்ற செல்லப்பெண்ணே நீ அசையாமல் படுத்துறங்கும் நோக்கமென்ன? எழுந்திடுவாய் எம்பாவாய் என அழைக்கிறார்.

அல்குல் என்றால் பெண்ணின் பிறப்புறுப்பு அது தான் நாகத்தின் விரித்த படம் போல இருக்கும் இன்றைய உரையாசிரியர்கள் நாகரிகம் கருதி அல்குலை இடையாக்கி விட்டார்கள் என்ற கருத்தும் இருக்கிறது.. எப்படியோ இரண்டிற்கும் அந்த உவமை அழகாகப் பொருந்துகிறதே!

அரவமின்றி உறங்கும் பெண்ணிற்கு அந்த அரவம் விரிக்கும் படத்தையே உவமையாகச் சொன்ன ஆண்டாளின் பாசுரம் பக்தி இலக்கியத்தின் மகுடி... இதற்கு மயங்காத பாம்புகள் ஏது.! (அரவம் = பாம்பு & ஓசை)

மார்கழி 11ஆம் நாள் பாடல்...

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

7.கீசு கீசு என்று...

#ஆண்டாள்_பெருமை

தயிர் சப்தம் போடுமா?போடும் அது தான் தயிரரவம் என்கிறார் ஆண்டாள்.. அரவம் என்றால் பெருஞ் சப்தம் பேரொலி என்னும் அர்த்தமும் உண்டு. ஆண்டாளின் அழகிய வர்ணனையைக்  கேளுங்கள்.. அதிகாலையில் வாசனைக் கூந்தலுடைய ஆயர்குலப் பெண்கள் மத்தினால் தயிர்கடைய தயிரரவம் எழும்புகிறது.

இந்த ஒரு சப்தத்திற்கு துணையாக இன்னும் சில இசைகளை  இதனோடு இணைக்கிறார் ஒரு இசைஞானி போல ஆண்டாள்.. ஆனை சாத்தான் குருவிகளின் கீச்சென்ற பேச்சு தயிர்கடையும் போது அசையும் பெண்களின் மீதிருந்து கலகலவென ஒலிக்கும் கழுத்துத் தாலியும் காசுமாலையும் ஒன்றொடு ஒன்று மோதும் சத்தம்.. 

இத்தனை ஒலிகளுடன் நாங்கள் கேசவனைப் பற்றி பாடும் பாட்டு இத்தனையுமா உன் காதுகளில் விழவில்லை? அல்லது கேட்டும் கேட்காதது போல இருக்குறாயா! அடி பேய்ப்பெண்ணே எழுந்திரு என்கிறார்.. உண்மையில் பேய்ப் பெண் ஆண்டாள் தான்.. கண்ணனை பேய் போல நினைத்து துதிக்க அவர் ஒருவரின்றி யாரால் முடியும்..!

மார்கழி 7ஆம் நாள் பாடல்..

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

5. மாயனை மன்னு...

#ஆண்டாள்_பெருமை

நாளைய வரலாறே.. இளஞ்சிங்கமே, புதுமை விரும்பியே, மாவீரனே, வாழும் வள்ளுவரே, இப்படி எல்லாம் பல அரசியல் தலைவர்களுக்கு அடைமொழி கொடுத்து அவர்களது தொண்டர்கள் போஸ்டர்கள் பேனர்கள் அடித்திருப்பதை பார்த்திருப்போம்.

இதற்கும் முன்னோடி ஆண்டாள் தான். தன் தானைத் தலைவன் கண்ணனுக்கு பாசுரத்தில் அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள் மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணிவிளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு..முத்தாய்ப்பாக கூறுகிறார்...

தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.. எப்படி ஒரு கற்பனை பாருங்கள் தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்திருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

ஆனால் எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன்பேரை சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார். இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில்..

தன் தலைவன் கண்ணனால் நம் பாவங்கள் பஸ்பமாகும் பொசுங்கும் பொடிப் பொடியாகிவிடும்  என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. தனக்கு அதுவே போதும் என்கிறார் பதவியை எதிர்பாராத அப்பாவித் தொண்டரான ஆண்டாள்.

மார்கழி 5 ஆம் நாள் பாடல்..

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

4. ஆழிமழைக் கண்ணா...

#ஆண்டாள்_பெருமை

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது ஆண்டாள் வாழ்ந்த காலத்திலும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி. எந்த ரமணனும் இல்லாத காலத்திலும் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்த பாடல்.. 

கருமை நிற கண்ணனை மேகமாக உருவகப்படுத்துகிறார் ஆண்டாள். மழைக் கடவுளான வருணா நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார்.

இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் என்னும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.  மார்கழியிலும் அக் காலத்தில் மழை இருந்திருக்கிறது என்பது இன்றைய சென்னை வாசிகளுக்கு திகிலூட்டும் சேதி.

மார்கழி 4 ஆம் நாள் பாடல்...

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

3. ஓங்கி உலகளந்த...

#ஆண்டாள்_பெருமை

சினிமாவில் மாண்டாஜ் ஷாட்டுகள் என்னும் ஒரு வகை உண்டு.. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வெவ்வேறு காட்சிகள் ஆனால் அனைத்தும் அது தொடர்பானவை. உதாரணமாக முதல்வன் திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜுன் இருந்துவிட்ட பின் நாடெங்கும் வெவ்வேறு ஊர்களில் மக்கள் அவரது ஆட்சியின் சிறப்பைப் பற்றி டிவியில் கூறுவார்கள். இது மாண்டாஜில் ஒரு வகை.

பாலுமகேந்திரா மணிரத்னம் படங்களில் மாண்டாஜ் காட்சிகள் பாடலில் இடம் பெறும் கலைஞன் படத்தில் வரும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா பாடல் மாண்டாஜுக்கு நல்ல உதாரணம்.இந்த மாண்டாஜ் உத்தியை ஆண்டாளும் கையாள்கிறார். 

ஓங்கி இவ்வுலகை அளந்த பெருமாளை வணங்கி குளித்து விரதம் இருக்கிறார்கள் பெண்கள் அவரை வணங்குவதால் என்னவெல்லாம் நடக்கும்? அப்படியே ஷாட்டை இங்க கட் பண்ணா.. நாட்டில் தீயவை அழிகிறது மாதம் மும்மாரி பொழிகிறது நெல்கள் செழிப்பாக வளர்கிறது.. அந்த வயல்களிடையே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன.. அதன் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகிறது..

மடி நிறைய பால் நிறைந்திருக்கும் பசுக்கள் கறப்பதற்கு முன் தானாகவே கொடுத்த வள்ளல் போல பாலை சுரக்கிறது.. எங்கும் செல்வம் செழிக்கிறது. இத்தனயும் மார்கழி விரதத்தின் மகிமைகள் என்கிறார் இயக்குநர் இமயம் ஆண்டாள்.

மார்கழி 3 ஆம் நாள் பாடல்...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.




2. வையத்து வாழ்வீர்காள்...

#ஆண்டாள்_பெருமை

Universal என்னும் வார்த்தைக்கு உலகெங்கும் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் அக்கறையை உதாரணமாகச் சொல்லலாம்.பெண்கள் மேக்கப் போட உடை மாற்றி கிளம்ப ஆகும் நேரம் இதையெல்லாம் கிண்டலடித்து துணுக்குகள் படித்திருப்போம்.

இன்று பல வீடுகளிகளில் அழகு சாதனப் பொருட்கள் அத்யாவசியப் பொருட்களாகி விட்டன. மாதம் சில பல ஆயிரங்கள் அதற்குச் செலவும் ஆகிறது. ஆனால் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு அதன் பின் கண்ணில் மையிட்டுக் கொள்வதில்லை தலையில் பூச்சூடிக் கொள்வதில்லை என எந்தப் பெண்ணும் சொல்வாளோ..!!

பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைபிடிக்கும் ஆண்டாள் சொல்கிறார். நெய் உண்ணோம் பால் உண்ணோம் என சாப்பாடும் விஷயத்தில் மட்டும் விரதம் இருப்பது பெரிதல்ல.தீய சொற்கள் பேசாதிருப்பது பெரிதல்ல.. தான தருமங்கள் செய்வது பெரிதல்ல.. 

செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பது பெரிதல்ல
பெண்ணின் இயல்பான அலங்கரிக்கும் குணத்தையும் அந்த மாலவனுக்கு அர்ப்பணிப்பது தான் பெரிது.. அதுவே இந்நோன்பின் நோக்கம் என்னும் போது கண்ணன் மேல் ஆண்டாள் கொண்ட அளவிலா நேசம் புரியும்.

மார்கழி 2ஆம் நாள் பாடல் :

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே 
நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் 
முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் 
சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் 
ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமாற் எண்ணி 
உகந்தேலோர் எம்பாவாய்.

1. மார்கழித் திங்கள்..

#ஆண்டாள்_பெருமை

ஒரே வார்த்தையில் பல விஷயங்களை  சொல்லிவிடுவார்கள் சிலர். ஆண்டாளும் அப்படியே நிலா சூரியன் மேகம் மூன்றுமே கண்ணன் ஒருவனே என்கிறார்.. கார்மேக வண்ணமும் சூரியன் போல சூடும் நிலா போல் குளிர்ச்சியும் ஒன்றாக உடையவன் என்கிறார்.. மார்கழி மாதத்து நிறை நிலா நன்னாளில் நீராடச் செல்வோம் 

ஆயர்குல செல்வப் பெண்களே கூரான வேலினால் கொடுமையை அழிக்கும் நந்தகோபனும் அழகிய கண்ணுள்ள யசோதையும் வளர்த்த இளம் சிங்கம் கார்மேகவண்ண சூரிய சந்திரன் போல முகமுடைய கண்ணன் நமக்கு பறை தந்து அருள்வான் உலகமே அவனை புகழும்படி பாடிடுவோம் வாருங்கள்.

இந்தப் பாடலில் ஏரார்ந்த கண்ணி என்று அழகான கண் உடையவள் என யசோதையையும் வர்ணிக்கிறார்.. உலகில் மாமியாரின் அழகை வர்ணித்த ஒரே பெண் ஆண்டாளாகத் தான் இருக்க முடியும்.. சரிதானே!

மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ 
நேரிழையீர்
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்
சிறுமீர்காள்
 கூர்வேல் கொடுந்தொழிலன் 
நந்தகோ பன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை 
இளம் சிங்கம்
 கார்மேனி செங்கண் கதிர்மதியம் 
போல் முகத்தான் 
நாரா யணனே நமக்கே 
பறை தருவான்
 பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


Sunday 20 December 2015

T3

#தோழா_தோழி_திருவிழா

T 3 என சுருங்க அழைக்கப்படும் இவ்விழாவிற்கான அழைப்பு முதலில் ஷாஜகான் ஸார் பதிவில் நண்பர்களுக்கு பொதுவில் வைக்கப்பட்டிருந்தது.. ஏற்கனவே இருமுறை அவரை சந்திக்க இருந்து அது முடியவில்லை.. இம்முறை அவரை சந்திக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது அதனால்  நிச்சயம் ஒருநாளாவது அங்கு போவது என முடிவெடுத்து இருந்தேன்.

இடையில் பெருமழையால் சென்னையில் பல வேலைகள் தள்ளிப்போக 2 நாட்களும் போகும் சூழல் ஏற்பட்டது.. நான் முகநூலில் குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் நான் ராஜா மகள் நிச்சயம் 2 நாளும் வரவேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார்.. நிச்சயம் 2 நாட்களும் வருகிறேன் என உத்திரவாதம் அவருக்கு தந்துவிட்டேன். ஆனால் அதற்கும் வினை வந்தது.

நிகழ்ச்சிக்கு சரியாக 4 தினங்களுக்கு முன் புதிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு 16,17 &18 ஆகிய மூன்று தினங்களும் எனக்கு படபிடிப்பு கொஞ்சம் படபடப்பும் வந்தது.லதா அருணாச்சலம் அங்கு போகிறார் எனத்தெரிந்ததும் ராஜாமகளிடம் நான் 18 ஆம் தேதி வரமுடியாது ஆனால் நிச்சயம் 19 ஆம் தேதி வருகிறேன் எனத் தகவல் சொல்லச் சொன்னேன்.

எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது 18 ஆம் தேதி மதியமே படபிடிப்பு முடிய உடனே கிளம்பிவிட்டேன். சரியாக மாலை 5 மணிக்கு மண்டபத்தை நெருங்க ஷான் கருப்பசாமியும் ஶ்ரீதர் சுப்ரமணியமும் ஒரு கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தார்கள் உங்களைப்பத்தி தான்பேசிகிட்டு இருந்தோம் கரெக்டா வர்றீங்க என்றார்ஷான் சேர்ந்தே மண்டபத்திற்குள் நுழைந்தோம். மேடையில் ஷாஜகான் ஸார் பேசிக்கொண்டிருந்தார்.

பிரபா சுப்ரமணியன் தேநீருடன் வரவேற்றார்.. ஆதித்யா ஆதித்யா, கார்த்திக் புகழேந்தி, தமிழ் அரசி, லதா அருணாச்சலம், மரியா சிவானந்தம் என அறிந்த முகங்களும் பல அறியாத முகங்களும் இருந்தனர்.. ராஜாமகள் மேடையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.. அவருக்கு உதவியாக அவரது குடும்பத்தினரும்.. மாலை ஞானி அவர்களின் பரிட்சார்த்தா குழுவினரின் நாடகம் இருப்பதாக அறிவித்து விட்டு ஷாஜகான் ஸார் மேடையிலிருந்து கீழிறங்கி

என்னைப் பார்த்ததும் விழிகள் விரிய புன்னகைத்தார்.. விரைந்து அவரை தழுவி கை குலுக்கிக் கொண்டேன்.. வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்றார்.. வாங்க சாப்பிட போகலாம் என்னும் குரலுக்கு திரும்பினால் ராஜாமகள்.! குருவை வணங்கினோம் பிரமாதமான சுண்டல் வாழைக்காய் பஜ்ஜி டீ என எளிய சுவையான சிற்றுண்டி.. இங்கு பரிமாறிய உணவுகளை தனிப்பதிவாக போட உத்தேசம்..ஆகவே வாங்க ஞானி ஸார் நாடகம் பார்க்க போலாம்.

வரும்...

Thursday 10 December 2015

பாரதிக்கு

#பாரதிக்கு_சமர்ப்பணம்

செந்தமிழ்நாடெனும் போதினிலே- மழை வெள்ளமும் பாயுது வீட்டினிலே- எங்கள் அமைச்சர்கள் யாவர்க்கும் பேச்சும் இல்லே- பெருமூச்சும் பிறக்குது மக்கள் மூக்கினிலே..

சோகம் நிறைந்த தமிழ்நாடு- வீண் விளம்பரம்  நிறைந்த தமிழ்நாடு- நிலவினில் கண்டிடும் குழிகளைப் போல் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழ்நாடு..

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்க் கண்டதோர் வையை பொருனைநதி- மணல் வாரி எடுத்து பின் வெள்ளத்திலே நன்கு மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு..

முத்தமிழ் பின்தள்ளி நல் ஆங்கிலத்தில் கல்விச் சாலைகள் கொண்ட தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டோ அத்தனையும் விற்று கல்வி வியாபாரமான தமிழ்நாடு...

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று மீனவர் வருவதை எதிர்பார்த்திருந்து அண்டை நாட்டிடம் அவர் மாட்டியதும் ஒரு கடிதம் எழுதுகின்ற தமிழ்நாடு...

வள்ளுவன் சிலப்பதி காரமென்று-மணியாரம் படைத்த தமிழ்நாடு
இதை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வெட்டி ஜம்பம் அடிக்கும் தமிழ்நாடு...

சிங்கள நாட்டுக்கு கச்சத்தீவையுமே தாரையும் வார்த்த தமிழ்நாடு
புலிக்கொடி மீன்கொடி பறந்த இந்நாட்டினில் கட்சிக் கொடிகள் பறக்கவிட்ட திருநாடு..

ஏரிகள் எல்லாம் ஆக்ரமிப்பு அதை கேட்கவும் தைரியம் எழவும் இல்லை பிறர் வெள்ளத்து நிவாரணப் பொருட்களிலும் நன்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் தமிழ்நாடு. 

<{புதிய பாரதி}>