Friday 30 December 2016

காட்டுக்குள் கரன்ஸி..

ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என முழங்கி காட்டில் ஆட்சியைப் பிடித்து இருந்த சிங்கராஜாவின் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியிருந்தன.. இந்த 2 ஆண்டில் ராஜா செல்லாத வெளிகாடுகளே இல்லை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஏன் அண்டார்டிகா வரை எல்லா கண்டங்களிலும் உள்ள காடுகளுக்கு போய் விட்டு வந்திருந்தது.. அண்டார்டிகாவில் ஏது காடு? என மீடியாக்கள்...



கேள்வி கேட்ட போது காடில்லாத அங்கு பெங்குவின், சீல், வால்ரஸ், பனிக்கரடிகள் எப்படி வாழ்கின்றன என பார்த்து வரவே அங்கு சென்றேன் எனக்கூறி அனைவரது வாயையும் அடைத்தது. சிங்கத்தின் நெருங்கிய நண்பரான கஜேந்திர அதானியும் (யானை) சீட்டா அம்பானியும் எல்லா பயணங்களிலும் உடன் சென்று ஆதாயம் அடைந்தது காட்டில் மற்ற மிருகங்களுக்கு அறவே பிடிக்கவில்லை.

மேலும் "ஸ்வச் கானகா" திட்டத்தில் காட்டை சுத்தமாக்குவேன் என்று கூறியது.. மேக் இன் ஃபாரஸ்ட் என முழங்கியது எல்லாம் அதிருப்தியாளர்களை திருப்தி படுத்தவில்லை.! இந்நிலையில் பக்கத்து காடான பாகிஸ்ஃபாரஸ்ட்டில் இருந்து வரும் ஊடுருவலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் முறியடிக்க அதில் கொஞ்சம் பாராட்டுகள் கிடைக்க இனி அதிரடி தான் என்னும் முடிவுக்கு வந்தது சிங்கம்.!

தற்செயலாக நாட்டில் வரும் செய்தித்தாள்களை படிக்க நாட்டில் பழைய கரன்சிகள் செல்லாது என்றும் கேஷ்லெஸ் எகானாமி வரப்போகிறது என்றும் தெரிந்தது.. சட்டென சிங்கத்திற்கு ஒரு ஐடியா பளிச்சிட்டது .. மனிதர்களுக்கு கேஷ்லெஸ் என்னும் போது மிருகங்களுக்கு ஏன் கரன்சி வரக்கூடாது.. இதைச் சொன்னதும் கஜேந்திராவும், சீட்டாவும் ஆஹா பிரமாதம் ஜி என்று ஜிங்ஜாக்கின.

அடுத்த நாள் கானகத்தின் தேசிய நாளிதழான காட்டு முரசு பத்திரிக்கையின் தலைப்பு செய்தி.."காட்டுக்குள் கரன்சி வருகிறது" வரும் ஜனவரி 31 க்குள் எல்லா மிருகங்களும் இனி காட்டில் கரன்சி வைத்து தான் எல்லா காரியங்களும் செய்ய வேண்டும் இதற்காக கானகமெங்கும் கேஷ் வெண்டிங் மெஷின்கள் (ஏடிஎம் போல) அமைக்கப்படும் என அரசர் சிங்கம் அதிகார பூர்வ அறிவிப்பு.. இதை படித்ததும் காடெங்கும் மிருகங்கள் சல சலத்தன.

காட்டுக்குள் கரன்சி புழக்கத்தில் வரும் என சிங்கராஜா அறிவித்து விட்டது.. இதுவரை கரன்சியே வைத்து இருக்காத மிருகங்களுக்கு எந்த வகையில் கரன்சி அளிப்பது.. ஒரு மிருகத்துக்கு எவ்வளவு கரன்சி கொடுப்பது..  அதை வைத்து அவை என்னென்ன செய்யலாம் இதற்கு ஏதேனும் விதிகள்.. சட்டங்கள் உண்டா.? இது போன்ற டிரில்லியன் டாலர் கேள்விகள் எல்லா காட்டு மிருகங்களுக்குள் எழுந்தன.!

காட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான கஜேந்திர அதானி, சீட்டா அம்பானி, நரி மல்லையா போன்றவர்களும் காட்டின் பொருளாதார மேதைகளும், நிதி அமைச்சர் புலி ஜேட்லி தலைமையில் ஓன்று கூடினர்.. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விதிகள் இதோ..



💵 காட்டுக் கரன்சியின் பெயர் ஜங்கிள் நோட் 💵

💵 ஒரு ஜங்கிள் நோட் இந்திய ரூபாய்க்கு 50 ரூபாய் மதிப்பு 💵

💵 ஒவ்வொரு விலங்கும் எவ்வளவு தாவர / மாமிச உணவுகள் ஒரு வேளைக்கு சாப்பிடுமோ அதன் எடைக்கு தகுந்தபடி 1கிலோ தாவர உணவுக்கு 5 ஜங்கிள் நோட் 1கிலோ மாமிச உணவுக்கு 10 ஜங்கிள் நோட் என விலை நிர்ணயித்து 3 வேளைக்கு எவ்வளவு வருகிறது என கணக்கிட்டு அந்தந்த மிருகங்களுக்கு ஏற்ப 1 மாதத்திற்கு தேவைப் படும் உணவுக்கான கரன்சி இலவசமாக  முதலில் வழங்கப்படும்.💵

💵 மிருகங்கள் மேய்ச்சலுக்கு போகும் இடங்களிலும் வேட்டையாடும் பகுதிகளிலும் நீர் அருந்தும் கரைகளிலும் டோல்கேட் அமைக்கப்படும்  அங்கு நுழையும் மிருகங்கள் உரிய கட்டணம் செலுத்திவிட்டுதான் நீர் அருந்தவோ,வேட்டைக்கோ மேய்ச்சலுக்கோ போக முடியும் 💵

💵 மாத பாஸ் செலுத்தியும் உணவு அருந்தலாம் ஒரே நாளில் மல்டி என்ட்ரி பாஸ் வசதியும் உண்டு 💵

💵 செலுத்தும் தொகைக்கு 20% சேவை வரி உண்டு.. இந்த வரி வசூலித்து அந்த வரிப்பணத்தில் கானகமெங்கும் புல் விளைச்சல் புரதம் மிகுந்த மாமிசத்திற்கான விலங்குகள் வளர்த்தல் ஆகிய பணிகளுக்கு அரசு செலவிடும் 💵

💵 மாமிசம் சாப்பிடும் விலங்குகள் புல் மரம் வளர்க்கும் பணியிலும் தாவரம் சாப்பிடும் விலங்குகள் மாமிசத்திற்கான விலங்குகள் வளர்க்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படும்.. இவை இரண்டும் அரசுப் பணிகளாகும் அதற்கேற்ற ஊதியமும் உண்டு 💵

💵 காடுகள் முழுவதும் டோல்கேட் மற்றும் கேஷ் வெண்டிங் மிஷின்கள் வைக்கும் காண்டிராக்ட் கஜேந்திர அதானிக்கும் புல் வளர்ப்பு மாமிச விலங்குகள் வளர்ப்பு காண்டிராக்ட் சீட்டா அம்பானிக்கும்.. நீர் சப்ளை காண்டிராக்ட்  நரி மல்லையாவுக்கும் வழங்கப்படும் 💵

💵 ஒழுங்காக வரி கட்டும் மிருகங்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் மற்றும் ஆஃபர் கூப்பன்கள் வழங்கப்படும். 💵

💵 கரன்சிகளை அச்சடிக்கும் உரிமை  ரிசர்வ் பேங்க் ஆப் பாரஸ்ட்டுக்கு வழங்கப்படும் 💵

💵 அந்நியக் காடுகளிலிருந்து வரும் கரன்சி முதலீட்டுக்கும் சலுகைகள் உண்டு 💵

💵 வங்கிகளில் அதானி, அம்பானி, மல்லையாக்களுக்கு மிக மிக மிக தாராளமாகவும் சாதாரண விலங்குகளுக்கு கடும் கெடுபிடியுடனும் லோன்கள் வழங்கப்படும் 💵

💵 மிருகங்கள் அனைத்திற்கும் "காடார்" கார்டு வழங்கப்படும்.. இதற்கான டெண்டரும் அதானி குழுமத்திற்கே 💵

💵 விலங்குகளின் கால் நகங்கள் தோலில் உள்ள புள்ளிகள் வரிகள் பயோ மெட்ரிக் முறையில் சேமிக்கும் டெண்டர் அம்பானிக்கு 💵

💵 மாதந்தோறும் கரன்சி அப்டேட்டுகளை சிங்க ராஜா ஃபாரஸ்ட் எஃப் எம் 456.8 இல் சிங்கி பாத்தில் உரையாடுவார் 💵

💵 ஜங்கிள் நோட் ரோஸ்மில்க் பிங்க் கலரில் அச்சிடப்படும் 1 ரூபாய் முதல் அதிகபட்சம்100 ரூபாய் மதிப்பு வரை ஜங்கிள் நோட் வரும் 💵

அப்போது கரன்சியில் யார் படம் போடுவது என குழப்பம் வந்தது இந்த கொரில்லாவின் படம் போடலாமே என்ற குரல் கூரையிலிருந்து ஒலித்தது.. எல்லாரும் மேலே பார்க்க ரிசர்வ் பேங்க் ஆஃப் பாரஸ்ட்டின் கவர்னர் உராங் படேல் ஒருகையால் தொங்கிக் கொண்டே சொன்னார்.. மீண்டும் மிருகங்கள் மத்தியில் சலசலப்பு.. கவர்னர் உராங் படேல் காட்டுக் கரன்சியான ஜங்கிள் நோட்டில் கொரில்லா படம் போட வேண்டும் என்றதற்கு பலத்த எதிர்ப்பு.. 



உராங் படேல் ரிசர்வ் பேங்க் ஆஃப் ஃபாரஸ்ட்டின் கவர்னர் என்பதால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் உறவினர் படத்தை கரன்சியில் போட வேண்டும் எனச் சொல்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என பல மிருகங்கள் கண்டனக் குரல் எழுப்பின.அதற்கு பதில் நம் ராஜா படத்தையே கரன்சியில் போடலாமே என கொழுத்த காண்டிராக்ட் கிடைத்ததற்கு கூலியாய் பிளிறியது அதானி யானை.. கவர்னர் உராங் படேல் உட்பக்கமாக கையை வளைத்து விலாவை சொறிந்து கொண்டே சொன்னது..

நண்பர்களே நான் கரன்சியில் கொரில்லா படம் போடச்சொன்னது அவர் என் உறவினர் என்பதற்காக அல்ல மிருகங்களில் இருந்து பிறந்த மனித இனத்திற்கு
முன்னோடி என்பதாலும் நம் இனத்திலிருந்து உருவாகி ஆறாம் அறிவு பெற்றவன் மனிதன் என்பதை நினைவுறுத்தும் வகையிலும் தான் அதைச் சொன்னேன்.. என்றது.. புலி ஜெட்லி இப்போது பேசியது நண்பர்களே உராங்காரின் எண்ணத்தை சொல்லி விட்டார்., நான் என்ன நினைக்கிறேன் என்றால் மனிதர்கள் பல்வேறு நாடுகளில் உபயோகிக்கும் கரன்சியில் மிருகங்கள் படம் போட்டிருக்கிறார்கள்.

நாம் ஏன் நம் கரன்சியில் ஒரு மனிதனின் படத்தை போடக்கூடாது என்றது.. ஆஹா அற்புதமான யோசனை என கர்ஜித்தது சிங்கம்.. காட்டின் ராஜா சிங்கமே பாராட்டியபின் யாராவது மறுப்பு சொல்வார்களா என்ன.! அனைத்து மிருகங்களும் ராஜாவின் தேர்வு சூப்பர் என கோஷ்டி கானத்தில் ஒப்புதல் அளித்தது.. சரி யாருடைய படம் போடலாம் என கேட்க மகாத்மா காந்தி என்றது மான். ஆங்... ஏற்கனவே நாட்டுக்குள் போட்டாச்சு போட்டாச்சு என வடிவேலு பாணியில் புலி சொல்ல மண்டேலா என்றது கரடி சேகுவாரா என்றது சிறுத்தை நேதாஜி என்றது யானை இப்படி ஆளாளுக்கு ஒருவரின் பேர் சொல்ல கடைசியில் திருவுள சீட்டு போட்டுப் பார்க்க முடிவு செய்தன.. 

அனைவரும் சொன்ன பேர்களை எழுதி சீட்டுக் குலுக்கி.. ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து சீட்டெடுக்க..சீட்டில் யார் பெயர் வந்திருக்கிறது அதுவும் கானகத்தில் முதன் முதலில் வரப்போகும் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த உன்னத மனிதர் யார் என அனைத்து மிருகங்களும் ஆவலுடனும் பரபரப்புடனும் காத்துக்கொண்டிருக்க சிங்கம் அந்த சீட்டை வாங்கி படித்துவிட்டு மெல்ல புன்னகைத்தபடி.. மாக்களே நம் காட்டுக் கரன்சியில் இடம் பெறப் போகும் அந்த நபர் யார் தெரியுமா.? 

சொல்லுங்கள் ராசாவே என அனைத்து மிருகங்களும் கோரஸாக கேட்க அந்த பெருமைக்குரிய நபர் மோடி தான் என்றது சிங்கம்.. காட்டு விலங்குகள் அனைத்தும் அதிர்ச்சியில் மூர்ச்சையாக கடைசியாக சிங்கமும் மூர்ச்சையடைந்தது.!



நிறைந்தது.


Tuesday 20 December 2016

புள்ளும் சிலம்பின 6

#எமை_ஆண்டாள்

பெருமாளுக்கு சங்கு ஓர் ஆயுதம் ஓர் அடையாளம். நமது நாஸ்டால்ஜியா நினைவுகளில் இளம் பிராயத்தில் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6மணி சங்கு என குறிப்பிட்ட நேரங்களில் சங்கொலிப்பதை கேட்டு இருப்போம்.. இதில் ஆலைகளில் இழுந்து எழும்பும் சங்கொலியும் உண்டு.. சங்கொலி என்பது எந்த நல்லவை தொடங்கும் போதும் கெட்டவை முடியும் போதும் ஒலிக்கும் சப்தம்.! 

பிறப்பு, இறப்பு, ஆலயம், போர் என வாழ்வில் சங்கொலிக்காத இடமே இல்லை.. கண்ணனால் அது பாஞ்சஜன்யமாய் பாரதப் போரில் முழங்கியதை இங்கு நினைவு கூர்வோம்.. அதோ அந்தச் சங்கு கருடனின் தலைவனானப் பெருமாள் கோவிலிலிருந்து பேரொலியாய் ஒலிக்கிறது.. அது அந்நாளின் நல்ல தொடக்கமாக அமைய ஒலிக்கிறதே அந்த சப்தம் உங்கள் காதுகளில் விழவில்லையா?எனக் கேட்டு ஆரம்பிக்கிறார் ஆண்டாள்..



அந்த சங்கொலியோடு பறவைகள் சிலம்பும் சப்தமும் பேரரவமாய் ஒலிக்கிறது என்கிறார்.இன்றும் மதுரைத் தமிழில் சலம்புவது என்றால் சத்தம் இடுவது என அர்த்தம்.. இந்த சிலம்புவது தான் சலம்புவதாக மருவியிருக்கும் என்று எண்ணுகிறேன்.ஒரு விஷயத்தில் இன்றைய தமிழக அமைச்சர்களுக்கு ஆண்டாள் முன்னோடி... அவர்களுக்கு சின்னம்மா புகழ்.. 

ஆண்டாளுக்கு ஶ்ரீகிருஷ்ணன் புகழ்.. அவன் புகழ் பாடாது அவர் வாய் ஓயாது.. பறவைகள் சிலம்ப சங்கதிர ஒலி கேட்டு எழுந்திருக்காத பிள்ளைகளா.. உங்களுக்கு தெரியுமா..? நம் பெருமான் பூதகியிடம் பால் குடித்து கொன்றது, சகடனை காலால் நிறுத்திக்கொன்றது, பாம்பின் மேல் உறங்கியது என.. அவர் காலத்து மாண்பு மிகு இதய தெய்வம் தங்கத்தாரகை போல கிருஷ்ணரின் பெருமைகளைச் சொல்லி இறுதியில் இப்படி முடிக்கிறார்...

மனதில் நாரணனை நினைத்து முனிவர்களும் யோகிகளும் அரி என்று உச்சரிக்கும் பேரொலியைக் கேட்டால் அது நம் காது வழியே மனதிற்குள் சென்று நம்மை குளிரச் செய்யுமாம் அதை கேட்பதற்காக வாவது எழுந்து வாருங்கள் என்கிறார். பொதுவாக அதிகாலையில் அரி என உச்சரிப்பது நலம் விளைவிக்கும் என்பார்கள். ஆனால் அரி என்னும் சப்தம் நம் காதுகளில் விழுந்தாலே போதும் என்கிறார் 
கண்ணனின் மீது காதலில் விழுந்த ஆண்டாள்.!



மார்கழி 6ம் நாள் பாடல்...

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

Monday 19 December 2016

மாயனை மன்னு 5

இ#எமை_ஆண்டாள்

இன்றைய அரசியல்வாதிகள் படிக்கக் கூடாத பாசுரம் இந்த 5 ஆம் நாள் பாசுரம்.! ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்.. சீறும் புலியே, எங்கள் அன்னையே, அடுத்த நம்பிக்கையே  எங்கள் குலவிளக்கே, அஞ்சாநெஞ்சரே, இளைய சிங்கமே, புதிய புரட்சியே, என்று அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் தொண்டர்கள் அடைமொழி கொடுத்து பிளக்ஸ், போஸ்டர், பேனர்கள் வைப்பதை பார்த்து இருப்போம்.

இதன் முன்னோடி ஆண்டாள் தான்.. அவரது மனங்கவர்ந்த தலைவன் கண்ணனுக்கு அவர் தரும் அடை மொழிகளைப் பாருங்கள்.. மாயனே, வடமதுரை மைந்தனே, யமுனைத் துறைவனே, ஆயர்குல அணி விளக்கே, என்றெல்லாம் விளித்து விட்டு முத்தாய்ப்பாக கூறுகிறார்.. தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனே என்று அதாவது கண்ணனைப் பெற்றதால் அவரது தாயின் வயிறு பரிசுத்தம் அடைந்ததாம்.! என்ன ஒரு அபாரமான கற்பனை பாருங்கள்.



தற்போதைய தமிழகத்தில் ஆண்டாள் அரசியல்வாதியாக  இருந்து இருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைக்காக அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன் இந்தப் பாசுரம் அரசியல்வாதிகள் கண்ணில் பட்டு விட்டால் தங்கள் தலைவனை/தலைவியை இதே போல தாயைக் குடல் விளக்கம் செய்த குலக்கொழுந்தே என அழைக்கும் அபாயம் இருக்கிறதல்லவா.

எவரும்  தூய மனதோடு மலர் தூவி கண்ணன் பேரைச் சொல்லி பூஜிப்பதே போதும் அப்படிச் செய்தாலே நாம் செய்த செய்ய நினைக்கிற கேடுகள் எல்லாம் தீயினால் தூசாகும் என்கிறார். இந்தத் தீயினால் தூசாகும் என்னும் தொனியில் தன் தலைவனால் நம் பாவங்கள் பஸ்பமாகி பொசுங்கும் என பிறருக்கு உத்திரவாதம் அளிக்கிறார்.. அவருக்கு அதுவே போதும் ஏனெனில்.. 

ஆண்டாள் எந்தப் பதவியையும் நலனையும் எதிர்பாராத திருமாலின் அப்பாவித் தொண்டர்.. அவருக்கு மாலவனின் மலரடிகளே போதும்.


மார்கழி 5 ஆம் நாள் பாடல் :

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

Sunday 18 December 2016

ஆழி மழைக்கண்ணா 4

#எமை_ஆண்டாள்

வில் வீரர்கள் படை என அக்காலத்தில் எல்லா அரசர்களிடமும் ஒரு படை இருந்தது.. துப்பாக்கிகள் பீரங்கிகள் இவை கண்டுபிடிக்கப்படும் முன் போர் வீரர்கள் அஞ்சியது யானைப் படைக்கு.. மதங் கொண்ட யானை போல அவை நிலம் அதிர ஓடி வரும் காட்சியை பார்த்தாலே பீதியில் ஓடிவிடுவார்களாம்.. அலெக்ஸாண்டர் முதல் ஆங்கிலேயர்கள் வரை அனைவரையும் நடுங்கவைத்தது  நம் நாட்டு யானைப்படை.!

இதெல்லாம் வெளிநாட்டு எதிரிகளுக்கு.. உள்நாட்டில் நமது மன்னர்களுக்குள் போர் நடக்கும் போது அந்த யானைப்படையையும் நடுங்க வைக்க உருவாக்கப்பட்டது தான் வில் வீரர்கள் படை தரையில் அமர்ந்த படி முதல் வரிசை அதன் பின் முழங்காலிட்ட படி 2வது வரிசை பிறகு சராசரி உயரத்தில் நிற்பவர்கள் 3வது வரிசை நெடு நெடுவென உயரம் உள்ளோர் 4 வது வரிசை என 4 நிலைகள்.

விளையாட்டரங்க கேலரி போல முன் நிற்கும் இந்தப் படை பொழியும் அம்பு மழை ஓடி வரும் யானைகளை பதம் பார்க்கும்.. காட்டில் வேட்டையாடும் போது துள்ளி ஓடும் மானின் வேகத்தையும் மீறி அதனை சரியாகப் போய் துளைக்கிறது என்றால் அந்த அம்பின் வேகத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். ஒரு அம்பே அப்படி என்றால் சரம் சரமாக நான்கு வித நிலைகளில் சீறி வரும் அம்புகள்.!!! 

ஆம்..அவை வில்லில் இருந்து விடுபடும் ஓசை ஆலைச் சங்கொலி போல எதிரொலிக்குமாம் அந்த நாண்கள் அதிரும் ஓசை கேட்டாலே யானைகளுக்கு கிலியாகிவிடுமாம்.. இனி பாசுரத்திற்கு வருவோம் இந்த அம்பு பொழிதலை ஆண்டாள் கண்ணனின் சாரங்கத்தை வைத்து வான் மழைக்கு உவமானம் தருகிறார். ரமணனாக அக்காலத்தில் ஆண்டாள் வாசித்த வானிலை அறிக்கை தான் இந்தப் பாசுரம்.



வருண பகவானை ஆழி மழைக் கண்ணா என விளித்து.. நீ கடலுக்குள் நுழைந்து நிறைய நீரை எடுத்துக் கொண்டு பெரும் ஒலியுடன் மேலெழுந்து மேகமாக மாறி மின்னல் ஒளிர அம்பு போல் சரம் சரமாய் மாலவன் அடியவர்களுக்கு  அருள்வது போல மழையை பொழிவாயாக என்கிறார். இதில் பெருமாளின் சங்கினை இடியாகவும் அவரது சக்கரத்தின் ஒளியை மின்னலாகவும் அவரது சாரங்கம் எனும் வில் அம்பை மழையாகவும் ரசனையோடு உவமைப் படுத்துகிறார்.

கடல் நீர் ஆவியாகி மேகத்தில் சேர்ந்து மழையாகப் பொழிகிறது என்பது இன்றைய அறிவியல் மனிதர்களான நமக்கெல்லாம் தெரியும்.. ஆனால் இது அக்காலத்திலேயே ஆண்டாளுக்கும் தெரிந்திருக்கிறது என்பது தான் வியப்பான செய்தி. அவர் பக்தி மார்க்கத்தை பரப்பிய மெய்ஞானி மட்டுமல்ல இயற்கை அறிவியல் தெரிந்த விஞ்ஞானி. நம் பக்தி இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் ஆராயப்படவேண்டும்.!



மார்கழி 4 ஆம் நாள் பாடல்..

ஆழிமழைக்கண்ணா!ஒன்று நீ கைகரவேல்;

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியம் தோளுடைய பற்பநா பன்கையில்

ஆழி போல் மின்னி,வலம்புரி போல நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்

வாழ உலகினில் பெய்திடாய்,நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.







Saturday 17 December 2016

ஓங்கி உலகளந்த 3

#எமை_ஆண்டாள்

தேசம் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டும்.? திடீரென கரன்சி செல்லாது என அறிவித்து கேஷ்லெஸ் எகானமி, டிஜிட்டல் பரிவர்த்தனை, கருப்புப்பணம் ஒழிப்பு, டிமோனிடேஷன் என்றெல்லாம் அறிவித்தால் சுபிட்சம் கிடைக்குமா? ஆண்டாள் இப்படிக் கண் "மோடி" த்தனமாக சிந்திக்காமல் ஒரு நாடு சுபிட்சம் பெற ஒரு பட்டியல் தருகிறார்.. எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி!

இதோ ஆண்டாளின் சுபிட்சப் பட்டியல்... நாட்டில் தீயவை அழிய வேண்டும், பின்பு மாதம் மும்மாரி மழை பொழிய வேண்டும், அதனால் நெல்கள் செழிப்பாக வளரவேண்டும் அந்த வயல்களின் ஊடே ஓடும் கால்வாயில் மீன்கள் துள்ளி விளையாட வேண்டும் அந்த கரைகளில் பூத்திருக்கும் கருங்குவளை மலர்களில் பொறி வண்டுகள் தேன் குடிக்க வேண்டும்.. இதெல்லாம் வெளியே.!

அடுத்து வீட்டின் உள்ளே.! வள்ளல்கள் மட்டுமே தன்னிடம் பொருள் பெற வந்திருப்பவரின் முகக்குறிப்பை வைத்தே அவரது தேவைகளை அறிந்து உதவுவார்களாம்.. அதே போல நாம் கறப்பதற்குள் தானாகவே மடியிலிருந்து பாலைப் பொழியும் பால் வளம்மிக்க வீட்டுப் பசுக்களை வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் என்று வள்ளல்களுக்கு நிகராக கூறியிருக்கும் அவரது உவமை அழகியல் நம்மை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

மாதம் மும்மாரி மழை, அதனால் செழிக்கும் வேளாண்மை, மீன் வளம் இருப்பதால் மீன்பிடி தொழில், வண்டுகள் தேன் உண்பதால் ஏற்படும் மகரந்த சேர்க்கை, விவசாயம் தொழில் என்பதால் அதற்குதவும் கால்நடைகள், அவற்றால் கிடைக்கும் பால் பொருட்கள் இவை அனைத்துமே செழிப்பாக இருந்தால் எந்நாடும் செழிக்கும். இவை எல்லாம் அடிப்படைத் தொழில்கள் என்பது தேசப் பொருளாதாரம்.

பக்தி பாசுரம் தான் என்றாலும் ஆண்டாளின் தொழில் சார்ந்த பொருளாதார அறிவு நம்மை வியக்கவைக்கிறது. இவை எல்லாம் ஒரு நாட்டில் நடந்திட பொருளாதார நிபுணர்கள் திட்ட அறிக்கை தருவார்கள்.. ஆண்டாள் என்ன அறிக்கை தருகிறார் தெரியுமா! இவையெல்லாம் நாம் பெற அதிகாலையில் எழுந்து குளித்து நோன்பிருந்து உலகளந்த பெருமாளின் பேரை பாடிக் கொண்டு இருந்தாலே போதுமாம்.. அதன்பிறகு எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் எழுந்து வாருங்கள் என்கிறார்...

 சி.எம் யார்.? சின்னம்மா யார்.? என ஆண்டாளுக்குத் தெரியாதா என்ன.!

மார்கழி 3 ஆம் நாள் பாடல்...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.

Thursday 15 December 2016

வையத்து வாழ்வீர்காள்2

#எமை_ஆண்டாள்

உலகில் தன்னை அலங்கரித்துக் கொள்ளாத பெண் இருந்தால் அது எட்டாவது உலக அதிசயம்.. தன்னை அழகுப் படுத்திக் கொள்ள விரும்பாத பெண்கள் யாரேனும் உண்டா! அதுவும் அதிகாலை மார்கழி நீராடிய பின்பு கண்ணுக்கு மை எழுத மாட்டோம் கூந்தலில் பூச்சூட மாட்டோம் என்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் பாசுரங்களில் சில முரண்கள் இருக்கின்றன.. ஒரு பாசுரத்தில் பால் சோறில் முழங்கை வழியே நெய் வழிய சாப்பிடுவோம் எனச்சொல்லும் ஆண்டாள் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல இந்த இரண்டாம் நாள் பாசுரத்தில் பாலுண்ணோம் நெய்யுண்ணோம் என்கிறார்.!

பால்,நெய் உண்ணாமல் இருந்து, தீயச் சொற்களை பேசாது, தான தருமங்கள் செய்து, செய்யக் கூடாததை செய்யாமல் இருந்து, இப்படி கடைபிடிக்கும் பாவை நோன்பில் பெண்ணின் இயல்பான உடன் பிறந்த குணமான அலங்கரிக்கும் குணத்தையும் மாதவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்கிறார் ஆண்டாள். 

மேக்கப் இல்லாத முகத்தை விட மேக்கப் இல்லாத மனமே முக்கியம் என்கிறார் அர்ப்பணிப்புக்கு இதை விட ஓர் நல்ல உதாரணம் இருக்க முடியுமா? கண்ணனின் அருளை மட்டுமே வேண்டும் ஆண்டாளின் அர்ப்பணிப்பு எல்லையில்லாதது. 

மார்கழி 2ஆம் நாள் பாடல்:

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே 
நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் 
முடியோம் செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் 
சென்றோதோம் 
ஐயமும் பிச்சையும் 
ஆந்தனையும் கைகாட்டி
 உய்யுமாற் எண்ணி 
உகந்தேலோர் எம்பாவாய்.

மார்கழித் திங்கள்...1

#எமை_ஆண்டாள்

பொதுவாக ஆண்டாள் பாசுரங்களில் இயற்கை குறித்த அறிவியல் பார்வை இருப்பது பெரும் வியப்பு.!! அவர் வான சாஸ்திரம் தெரிந்தவரோ என்னும் பிரமிப்பை ஏற்படுத்தும். மார்கழி பிறக்கும் போது பெரும்பாலும் பவுர்ணமி தினமோ அல்லது பவுர்ணமி முடிந்து ஒரிரு தினங்களோ முடிந்திருக்கும் அதைத்தான் முதல் பாடலில் மதி நிறைந்த நன்னாள் எனத் துல்லியமாக குறிப்பிட்டு இருப்பார்..

இன்னொரு பாசுரத்தில் கடல் நீர் ஆவியாகி மழை பொழிவதை ஆண்டாள் எழுதிய விதம் ஆச்சரியம்..அதை அப்பாடல் வரும் நாளில் பிறகு பார்க்கலாம். ஆயர்பாடியின் தலைவனை கூர் வேல் கொடுந் தொழிலன் என விளித்திருக்கிறார்.. அவன் இடையர் குல தலைவன் மாடுகள் வைத்து தொழில் புரிகிறவன் அதே நேரத்தில் தன் இனத்திற்கு ஒரு துயர் வந்தால் வேலெடுத்து போர் புரிபவனும் கூட என்னும் அர்த்தத்தில் கூறியிருப்பது அழகு..

போகிற போக்கில் ஏரார்ந்த கண்ணி என யசோதையை அழகிய கண் உடையவள் என்கிறார்... ஒரு பெண்ணின் அழகை ஒரு பெண்ணே போற்றுதல் அரிது ஆண்டாள் அப்பெருமையையும் பெறுகிறார்... குளிர்மிகு மார்கழியில் அதிகாலைப் பனியில் நீராடச் செல்ல உடல் நடுநடுங்கும் ஆனால் ஆண்டாளின் தமிழ் ஒரு ஹீட்டர்.! அந்தத் தமிழ் வெப்பம் படிப்பவர்க்குள் பரவி ஆயர்குலச் சிறுமிகளோடு சில்லென்ற நீரில் மார்கழிக் குளியல் போட்ட ஒரு பேரானந்த அனுபவத்தை அனைவருக்கும் தந்துவிடுகிறது.. ஆம் அதுதான் ஆண்டாள்..! அவள் தமிழால் நமை ஆண்டாள்..!


மார்கழி 1ஆம் நாள் பாடல்..

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.