Friday 27 June 2014

தீனா - ஜூலை

தீனா "கொரலு"

எமனை கண்டுக்கினவன் ஆரு.? பட்ச்ச மன்சங்க சொன்னத வச்சு அவுரு இப்டித்தான் இருப்பாருன்னு ஓசிச்சு வச்சேன் ஆனா இப்ப நேராவே கண்டுக்கினேன்.. அட ஆமா நைனா.! அத்து ஆருன்னு தெரிமா?ஆள கொல்லுற அம்பு கணக்கா கண்ணால லுக்கு வுட்டு நம்மளை கொல்ற பொண்ணுதான் எமன்..! உமன் தான்பா எமன்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தகையணங்குறுத்தல் : குறள் எண் : 1083 ]


தீனா "கொரலு"

உன் மூஞ்சியில இர்க்குற சிரிப்பையும்.. உன் மன்சுக்குள்ளாற இர்க்குற சந்தோஸ்த்தையும் கொல்றதுக்கு ஒரு வழி கீது! அது இன்னான்றியா!அதான் நைனா நீ ஒண்டி காண்டானேன்னு வய்யி இத்தெல்லாம் அப்டியே புட்டுக்கும்.. இந்த மேறி ஒரு கொலையை உன் கோவத்த தவிர வேற எந்த பகையுமே செய்ய மிடியாதுப்பா.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வெகுளாமை : குறள் எண் : 304 ]


தீனா "கொரலு"

நம்ம மன்சு தான் நம்மளுக்கு நல்ல தோஸ்த்து.. ஒர்த்தரோட நெஞ்சே அவருக்கு ஒறவா இல்லாங்காட்டி மத்தவங்கோ ஒறவில்லாம போறது ஒண்ணியும் பெர்ய விஸ்யமே கெடியாத்து...! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நெஞ்சோடுபுலத்தல் : குறள் எண் : 1300 ]


தீனா "கொரலு"

அன்பான வழியில நட்ந்துக்கிற மன்சனோட ஒடம்பு தான் மெய்யாலுமே உசுரு இர்க்குற ஒடம்பு.. அன்புன்னா இன்னான்னே தெர்யாத ஜனத்தோட ஒடம்பு.. எலும்ப போத்திக்கினு இருக்குற தோலு தான்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புத்தோல் போர்த்த உடம்பு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : அன்புடைமை : குறள் எண் : 80 ]


தீனா "கொரலு"

ஒண்ணுமே இல்லாதவன ஒரு பொருளா கூட மதிக்க முடியாதவன.. மதிக்க வக்கிறது எது தெரிமா? துட்டு தான்.. ! அந்தய துட்டு கய்ல இர்ந்தா அத்து மாதிரி மன்சனை மதிக்க வக்கிற ஒரு விஸ்யம் இந்த ஒலகத்துல வேற ஒண்ணியும் கெடியாத்து..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.

[ பொருட்பால் : அதிகாரம் : பொருள் செயல்வகை : குறள் எண் : 751 ]


தீனா "கொரலு"

தமாசு இன்னான்னா.! எந்த கண்ணால பாத்து எனுக்கு காதல் வந்திச்சோ அதே கண்ணு தான் என் ஆளை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ அவுர நென்ச்சி நான் எப்படி பேஜாராவுறனோ அத்தே மேறி அதுவும் ஏங்கி ஏங்கி பொட்டுத் தூக்கம் கூட தூங்காமகீது..! இதுவும் நல்லது தான்..! குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்

தாஅம் இதற்பட் டது.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : கண் விதுப்பழிதல் : குறள் எண் : 1176 ]


தீனா "கொரலு"

மன்சால ஒண்ணு சேராத மன்சங்க ரெண்டு பேரு சேந்து வாழ்ற வாழ்க்க எப்டி இர்க்கும் தெரிமா..! ஒரு சின்ன குடிச வூட்டுக்குள்ள ஒரு பாம்போட இர்ந்தது கணக்கா ஒவ்வொரு செகண்டும் பயந்துகினே பேஜாரா வாழணுமாம்..! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போடு உடனுறைந் தற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : உட்பகை : குறள் எண் : 890 ]


தீனா "கொரலு"

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயர் நட்பு.

இதுக்கு இன்னா அர்த்தம்ன்னா... குத்தமில்லாத மன்சனோட சினேகிதத்த நீ மர்ந்திடவே கூடாத்து..அத்தே நேர்த்துல நீகஸ்டத்துல இர்க்க சொல்லோ உன் கூட கில்லியா நின்னான் பாரு அவுனோட சினேகிதத்தை எப்யுமே வுட்றவே கூடாத்து..! சோக்கா கீது இல்லப்பா..

[ அறத்துப்பால் : அதிகாரம் : செய்நன்றியறிதல் : குறள் எண் : 106]


தீனா "கொரலு"

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 

வீழ்வார் அளிக்கும் அளி.

இதுக்கு இன்னா அர்த்தம்ன்னா... காதலிச்சுகினு இர்க்கவங்கோ கரீட்டான நேரத்துல மீட் பண்ணி ஒர்த்தருக்கு ஒர்த்தரு அன்பா பேஸ்றது உலகத்துல இர்க்குற மன்சாளுக்கு வானம் மழய கொட்த்து காப்பாத்தாறா மேறி இர்க்குமாம்.. சோக்கா கீது இல்லப்பா..!

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தனிப்படர் மிகுதி  : குறள் எண் : 1192 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா...இந்த பொண்ணுகீறாளே அவுளோட சரியாத மாரை மர்ச்சினுகீதே முந்தானை அது எப்டி இர்க்கு தெரிமா.? ஆள கொல்ற மதம் புட்ச்ச யானையோட கண்ணை கவசம் போட்டு மர்ச்சது கணக்கா என் லவ்வு ஃபிலிங்கை மறக்க உட்டுருது.. அத்து மட்டும் இல்லின்னா என் ஆசய கண்ட்ரோல் பண்ணவே மிடியாது..! கரீட்டா சொன்னாக்கா...

"மதயானைகண்ண மறைக்க முகமூடி.. அவ முந்தான என் ஆசைக்கு போட்ட மூடி"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்

படாஅ முலை மேல் துகில்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : தகையணங்குறுத்தல் : குறள் எண் : 1087 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா...நல்ல தண்ணியா இர்ந்தாலும் அத்து எந்தமேறி நெல்த்துல சேருதோ அந்தய நெல்த்தோட தன்மய்க்கு ஏத்தா மேறி மாறிடும் அத்தே மேறி தான் மன்சனும் அவன் யாரோட சேந்துகினானோ அந்த ஜனத்தோட அறிவு தான் அவுனுக்கும் வரும்! கரீட்டா சொன்னாக்கா

"நெலத்துக்கு ஏத்தா மேறி தண்ணி மாறும்.. இனத்துக்கு ஏத்தா மேறி அறிவு மாறும்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்துஇயல்பது ஆகும் அறிவு.

[ பொருட்பால் : அதிகாரம் : சிற்றினம் சேராமை : குறள் எண் : 452 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா... படச்ச கடவுளு மேல வச்சிக்கிற ஆசய மட்யும் நீ கப்புன்னு புட்ச்சுக்கினு இர்க்கணும்.. மத்த ஆசயெல்லாம் ஒழிக்கணும்ன்னு நென்ச்சியானா இந்த கடவுள் மேல வக்கிற ஒரு ஆசய மட்டும் வுட்டுறவே கூடாத்து.. கரீட்டா சொன்னாக்கா...

"ஆண்டவன் மேல ஆசவய்யி.. மத்ததெல்லாம் தூரவய்யி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : துறவு : குறள் எண் : 350 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..அல்லாத்தையும் வுட உம்மேல தான் அம்மாம் காதலாக்கீரேன்னு தெர்யாம காதலிகிட்ட சொல்லிட்டேன்பா.. இப்ப அவ இன்னா கேக்குறான்னா அல்லாத்தையும் வுட அப்டின்னியே அப்டின்னா உனுக்கு எத்தினி பேரு இர்க்கா சொல்லு சொல்லுன்னு கேட்டு எம்மேல கோவமாகீரா.. ஒரே பேஜாருபா.. .! கரீட்டா சொன்னாக்கா...

"அல்லாத்தவுடன்னு சொன்னதா குத்தம்.. ஆருன்னு கேட்டு போடுறா சத்தம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி நுணுக்கம் : குறள் எண் : 1314 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா.. உன்யோட எதிரி மூஞ்சியில கரியப் பூஸ்னும்ன்னு நெனிக்கிறியா..? அப்ப நீ செய்ய வேண்டியது ஒன்யே ஒண்ணு தான்.. நல்லா ஒழச்சு நெறியா துட்ட சம்பாதிச்சிகினே இரு நீ துட்டை சேக்க சேக்க உன் எதிரியோட திமிரு அழிஞ்சிப்பூடும்..! கரீட்டா சொன்னா

"நெறியா சம்பாதிக்குற துட்டு.. உன் எதிரிக்கு வய்க்கிற கொட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செய்க பொருளைச் செறுநர் செறுக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில்.

[ பொருட்பால் : அதிகாரம் : பொருள் செயல்வகை : குறள் எண் : 759 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா.. ஒரு நாட்டுக்கு மந்திரியா இர்க்கவரு எப்படி இர்க்கணும் தெரிமா? ஆட்சியில இர்க்குறவருக்கு நான் ரொம்பய நாளாவே தோஸ்த்துன்னு நென்ச்சுகிட்டு கெட்டதாவே செய்க்கூடாததெல்லாம் செஞ்சா அத்து அவருக்கு கேடாத்தான் மிடியும்..! கரீட்டா சொன்னாக்கா..

"ராஜாவோட தோஸ்த்துன்னாலும் நல்லது செஞ்சா மந்திரி.. இல்லாட்டி நீ எந்திரி"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

[ பொருட்பால் : அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல் : குறள் எண் : 700 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..! காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கின வாழ்க்க எப்டி தெரிமா இர்க்கணும்.? பெர்சான கோவமும் சிர்சான சண்டயும் அதுக்கப்றம் சமாதான்மும் இத்தெல்லாம் இர்ந்தா தான் நல்லா இர்க்கும்.! அப்டி இல்லின்னா வாழ்க்க ரொம்ப பயுத்து அழுகுன பழமாவோ, இல்ல முத்தாத பிஞ்சு காயாவோ பிர்யோஜன்மில்லாம பூடும்.! கரீட்டா சொல்லணும்ன்னா..

"அப்பப்ப கா ஊட்டுக்காதா காதலு.. அழுகுன பழமா புட்டுக்கும்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி : குறள் எண் : 1306 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..! மன்சனோட தலயெழ்த்து கீதே அத்த மாத்தவே மிடியாது.! தலயெழ்த்த கெலிச்சி காட்றேன்னு சொல்லி நாம எத்தாவது வேற வழிய நெனிச்சாலும் இல்ல போனாலும் அந்த வழில அல்லாம் அந்த விதி தான் மின்னாடி வந்து நிக்கும்.. ஏன்னா உன் விதி அம்மாம் இஸ்ட்ராங்கானது..! கரீட்டா சொல்லணும்ன்னா...

"விதிய மாத்த நெனிக்கிறது ராங்கு... எப்யும் விதி தான் ஸ்ட்ராங்கு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : ஊழ் : குறள் எண் : 380 ]


தீனா "கொரலு"

வண்க்கம்ப்பா..! சோத்த துண்றத வுடொ துண்ண சோறு ஜீர்ணமா ஆவுறது சொகம்..! அத்தே மேறி காதல்ல கட்டிலு மேல குஜாலா இர்க்கறத வுடொ அதுக்கு மின்னாடி செல்லமா சண்ட போட்டுகினு ஊடால பேசாம இர்க்குறது பெர்ய சொகம்..! கரீட்டா சொல்லணும்ன்னா...

"சோறு செமிச்சாசொகம்.. குஜாலுக்கு செல்ல சண்ட சுகம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உணலினும் உண்டது அறலினிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை: குறள் எண் : 1326 ]

Tuesday 24 June 2014

கண்ணதாசன் - விஸ்வநாதன்.!

இரு சிகரங்கள்..!

நட்புக்கு இலக்கணம் என்ற பட்டியலில் கட்டாயம் இடம் பிடித்து இருக்கும் இரு பெயர்கள் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் & கவியரசு கண்ணதாசன்.! தமிழ்த்திரையுலகின் இசை வரலாற்று ஜாம்பவான்கள் இருவருக்கும ஒரே நாளில் பிறந்தநாள் என்பது கூடுதல் சிறப்பு.!

இருவரும் சேர்ந்து கொடுத்த இசை ஆறு இன்னும் வற்றாது காலம் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது..! இவர்கள் இருவரும் பல பாடல்களுக்கு இசையமைத்தது, பாடல் எழுதியது எல்லாம் மிகுந்த சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்டது..!

போனால் போகட்டும் போடா என்று கவிஞர் எழுதிய போது மெல்லிசை மன்னர் அது மரியாதையாக இல்லையே என்று சொல்ல அப்ப அதை நீ மரியாதையா பாடு என்று கவிஞர் சொன்னவுடன் போங்க வாங்கன்னு பாடிப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்களாம்..!

ஆனால் அந்தப்பாட்டு பாமரனையும் எளிதில் முணுமுணுக்க வைத்தது..! காரணம் அந்த போடா என்ற வார்த்தை..! அதன் பிறகு போடா பாடல்கள் பல எழுதி அவையும் வெற்றி பெற்றன. அண்ணன் என்னடா தம்பி  என்னடா பாடல் கவிஞர் சகோதரனிடம் உதவி கேட்டு தராத போது உதித்த பாடல்..!

அதே போல் புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே என்ற வரிகள் MSV அவர்கள் பள்ளிக்கு செல்லாது நாடக கொட்டகைக்கு வெளியே நின்று பாடல் கேட்ட பள்ளிப் பருவத்தை வைத்து எழுதப்பட்டது.! கண்ணதாசன் இக்கட்டான அரசியல் சூழலில் இருந்த போது எழுதப்பட்டது தான்  யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க பாடல்..!

இயக்குனர் ஶ்ரீதர் காதலிக்க நேரமில்லை பாடத்துக்கு ட்யூன் தாமதமானதால் மெல்லிசை மன்னரைப்பார்த்து "விஸ்வநாதன் வேலை சீக்கிரம் வேணும்ப்பா" என்று சொல்ல அங்கிருந்த கவிஞர் சட்டென்று அந்த வார்த்தையையே முதல் வரியாக்கி "விஸ்வநாதன் வேலை வேணும்" பாடலை எழுதினாராம்..! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது..!

மலர்ந்தும் மலராத பாடலில் கவிஞரின் வரியா? மெல்லிசை மன்னரின் இசையா? எது அழகு? என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை..! அவை இரட்டைகிளவி போல் சேர்ந்தே இருந்தன.! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாடல் இன்னொரு ரசனையான உதாரணம்.! இந்தப் பாடலுக்கான காட்சியமைப்பு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் யோசனை..!

கம்போஸிங் செய்யும் போது கவிஞரும் மெல்லிசை மன்னரும் சேர்ந்து ட்யூன் போடுவதை பல முறை பார்த்த கே.பி. அவர்கள் படத்திலும் நாயகன் நாயகிக்கு அது போல சிச்சுவேஷன் வைத்துவிட கவிஞர் அதை மிகவும் ரசித்து பாராட்டி பாடல் எழுதினாராம்..! இந்த இரு இமயங்களைப் பற்றி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கிறது.. இது சிறுதுளி தான்..!

இந்த இருவருக்கும் இன்று பிறந்தநாள்.. இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வதற்கு நாம் ஏதோ புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.!ஆயிரக்கணக்கான பாடல்களில் இசையாக எம்.எஸ்.வியும் வரியாக கண்ணதாசனும் காலம் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.! இருப்பார்கள்..! 

இந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும் போது எங்கோ வானொலியில் இருந்து மிதந்து வந்து செவிகளுக்குள் நுழைகிறது அப்பாடல் "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்" "சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்".. உண்மைதானே..!

Thursday 5 June 2014

திருப்தி..

பரமசிவனும் பார்வதியும் இன்றைய பூலோகத்தில் வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார்கள்.. ஒரே ஒரு கண்டிஷன் பார்வதியை அழவைக்கக்கூடாது..கேட்டதை வாங்கித்தர வேண்டும்.. சட்டென சிவன் சங்கர் ஆனார்...பார்வதி உமா ஆனார்.. பார்ப்பதற்கு டைடல் பார்க்கில் பணிபுரியும் ஒரு இளம் தம்பதி போல தோற்றம்.. சென்னைக்கு வந்தனர்.!

OMR ரோட்டில் புகழ் பெற்ற கன்ஸ்ட் ரக்ஷன் நிறுவனம் கட்டிதந்த குடியிருப்பில் 12 வது மாடியில் ஒரு 3BHK சொகுசு ப்ளாட் வாங்கினார்கள், வீட்டுக்குள் கைலாயம் போல் க்ளைமேட் இருக்க O General AC பொருத்தப்பட்டது.. வீட்டின் ஒவ்வொரு அறையும் ரசனையோடு இண்டீரியர் செய்யப்பட்டது.. 

காஸ்ட்லியான விளக்குகள் பொருத்தப்பட்டது... ஹாலில் ஷாண்ட்லியர் தொங்க விடப்பட்டது.. லேட்டஸ்ட் ஸ்டைலில் மாடுலர் கிச்சன் அமைக்கப்பட்டது.. டபுள்டோர் ரெஃப்ரிஜிரேட்டர், ஃபுல்லி ஆட்டோமெடிக் வாஷிங் மெஷின் வாங்கினார்கள், எந்த மின் தடையையும் சமாளிக்கும் நவீன இன்வெட்டர்கள் பொருத்தினார்கள்..!

போஷ்க் கம்பெனியின் அதிநவீன டிஜிட்டல் சவுண்ட் ஹோம் தியேட்டருடன் 54 இன்ச் மெகா LCD டிவி பொருத்தப்பட்டது.. இன்னும் கேபிளா..? டிஷ் ஆண்ட்டெனாவா என்று மட்டும் தான் முடிவு செய்யவேண்டும்.. சங்கரின் போக்குவரத்திற்கு நவீன C கிளாஸ் பென்ஸ் ஒன்றும் உமாவிற்கு ஒரு ஹூண்டாய் I 20 யும் வாங்கினார்கள்..!

தேவையானது எல்லாம் வாங்கி குவித்தார்கள்.. பட்ஜெட் கிட்டத்தட்ட 3 கோடியை தாண்டியது சங்கருக்கு (சிவன்) பணம் பெரிதல்ல உமாவின் (பார்வதி) சந்தோஷமே முக்கியம் உமா சொன்னாள் "சங்கர் இன்னும் கேபிள் கனெக்ஷன் வரலையே", அதற்கு சங்கர் "இல்லம்மா கேபிள் வேணாம் டிஷ் வாங்கலாம் HD கிளாரிட்டி கிடைக்கும்"என்றான்..! 

உமாவும் சரி என ஒப்புக்கொள்ள அடுத்த 3 மணி நேரத்தில் அதுவும் பொருத்தப்பட்டது.. வீடெல்லாம் தேவையானது நிரம்பி இருக்க சிவனான சங்கருக்கு ஒரு பெருமிதம்.. உமா டிவியை ஆன் செய்த போது அவள் கேலக்ஸி 5 மொபைல் ஓம் நமச்சிவாயா என்ற காலர் ட்யூனில் சிணுங்கியது.. டிஸ்ப்ளேவில் நகைக்கடை காரரின் எண் ஒளிர்ந்தது..!

பேசினாள்..பேசிவிட்டு சங்கரிடம் திரும்பி டியர்" போன வாரம் நாம ஆர்டர் கொடுத்த வைர நெக்லஸ் ரெடியாம் போய் வாங்கிட்டு வரலாமா என்றாள்.. உடனே சங்கர் ஓ.. குட் இதுக்கு ஏன் நீ அலையறம்மா கடை பக்கத்துல தானே வெளியே வெயில் பொளக்குது நீ டிவி பாத்துட்டு இரு நான் போய் வாங்கிட்டு வரேன் என்றான்..!

ஓ..ரொம்ப தேங்ஸ்ப்பா.. உங்களுக்கு ஒண்ணும் சிரமமில்லையே என உமா கேட்க என்னம்மா இது உனக்கு செய்யாம யாருக்கு செய்வேன் நீ என்னில் பாதியல்லவா.. நீ ஒரு சொட்டு கண்ணீர் சிந்துனா எனக்கு பொறுக்காது.. நீ நல்லா டிவி பாத்துட்டு ஹாயா இரு நான் இப்ப வந்துடுறேன் என்று கூறி கிளம்பி போனான் சங்கர்...!

வைரநெக்லஸ் வாங்கிக் கொண்டு சங்கர் வீடு திரும்பிய போது உமா ஓ வென்று அழுது கொண்டிருந்தாள்.. சங்கர் பதறிப்போனான்.. "என்னம்மா ஆச்சு என்ன பிரச்சனை" என்று கேட்க உமா அழுது கொண்டே கேட்டாள் "நீங்க எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி தரேன்னு சொல்லிதானே பூலோகம் கூட்டிட்டு வந்தீங்க"

ஆமா அதுக்கு என்ன இப்ப நீ கேட்டு நான் எது வாங்கி தரலை..? என சங்கர் கேட்டவுடன் உமா.."எல்லாமே வாங்கித் தந்திங்களா பொய் சொல்லாம சொல்லுங்க".. என்றாள்.. அடடா இப்ப உனக்கு என்ன பிரச்சனை..? இந்த வீட்டுல இல்லாத வசதி என்ன இருக்கு..? ஒண்ணு இருக்கு சொல்லவா தோ அந்த டிவில (திருவிளையாடல் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்) நல்லாஆஆஆஆஆ பாருங்க...!!

சங்கர் திரும்பி பார்க்க டிவியில் ஓடிக் கொண்டிருந்தது #டேபிள்மேட்_வாங்கிட்டிங்களா விளம்பரம்..!

குருஜி - ஜூன்

ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு காட்டில் நரியும் பூனையும் சந்தித்துக் கொண்டன.. நரி பூனையிடம் தன்னைப் பற்றிய பில்டப்புகளை அள்ளி விட்டது.. "பூனையே நான் மிகுந்த தந்திரசாலி பகைவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும்" அநேகமாக இதை நூலாக எழுதி அடுத்த மாதம் வெளியிடலாம் என்றிருக்கிறேன்.. சரி உனக்கு எத்தனை வழிகள் தெரியும் என்றது..!

பூனை அலட்டிக்கொள்ளாமல்"நரியாரே உங்களைப்போல நான் பெரிய தந்திரசாலி இல்லை.. எனக்கு ஆயிரம் வழிகள் தெரியாது.. எனக்கு தெரிந்து ஒருவழி தான் அந்த ஒரு வழியை வைத்துதான் இதுவரை பல முறை தப்பித்துள்ளேன்.. அந்த ஒரு வழியைத் தவிர வேறு வழி எனக்கு சிறந்ததாக தெரியவில்லை"..." என்வழி - ஒரே வழி "என்று பஞ்சியது..!

அட முட்டாள் பூனையே ஒரே ஒரு வழியை வைத்துக் கொண்டு எப்படி பகைவர்களிடம் இருந்து உயிர் பிழைப்பாய்..? இந்த கேள்வியை நரி கேட்ட போது வேட்டை நாய்களின் குரைக்கும் சப்தமும் அதன் பின்னே வேடர்கள் ஓடிவரும் சத்தமும் கேட்டது.. ஆபத்தை புரிந்து கொண்ட பூனை அருகில் இருந்த மரத்திற்கு தாவி வேகமாக உச்சிக்கு சென்றது.!

ஆயிரம் வழிகள் தெரிந்த நரி எந்த வழியை உபயோகிப்பது என்று குழம்பி .. யோசனை வருவதற்குள் வேட்டை நாய்களால் சூழப்பட்டு வேடர்களிடம் பிடிபட்டது..!

நீதி : சந்தேகத்திற்குரிய நூறு வழிகளை விட பத்திரமான ஒரு வழி சிறந்தது..


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

மாலை நேரம்.! இரு வேடர்கள் பேசிக்கொண்டு போனார்கள்.. அதில் ஒருவன் "நாளை நாம் வேட்டைக்கு வரும் போது ஆமையை பிடிக்க வேண்டும்.. காட்டு ஆமைக்கறி சாப்பிட்டு வெகு நாளாயிற்று என என் மனைவி ஆசைப்பட்டு கேட்டாள்" என்றான்.! "ஆமாப்பா ஆமைக்கறி செமயா இருக்கும் கட்டாயம் நாம நாளை ஆமை பிடிக்கிறோம்" இது இன்னொருவன்.!

இவர்கள் பேச்சை புதருக்குள் ஒளிந்திருந்த ஆமை ஒன்று கேட்டது.. அதற்கு உயிர் பயம் ஏற்பட்டது.. நம்மால் வேகமாக ஓடவும் முடியாது.. ஒளிந்து கொண்டாலும் முதுகு ஓடு நம் இருப்பிடத்தை காட்டி கொடுத்து விடும்.. எப்படி தப்பிப்பது என்று யோசிக்கும் போது நண்பன் கொக்குவின் ஞாபகம் வந்தது.. கொக்கு வசிக்கும் மரம் அருகே சென்றது ஆமை..!

மாலை நேரம் என்பதால் ஸ்னாக்ஸாக ஃபிஷ் பஜ்ஜி சாப்பிட்டு விட்டு அப்போது தான் கூடு திரும்பியிருந்தது கொக்கு.! ஆமையை பார்த்ததும் குட் ஈவினிங் ஆமை மச்சி ஹவ் ஆர் யூ என்றது கொக்கு.! என்னப்பா எல்லார் மாதிரி நீயும் குட் ஈவினிங் ஸ்டேட்டஸ் போடுற.. நாளைக்கு எனக்கு குட்மார்னிங்கே கிடையாது அது தெரியுமா உனக்கு என்றது ஆமை.!

என்னப்பா பிரச்சனை..? ஆமை விளக்கி கூற.. இப்ப என்ன செய்யலாம் என்றது கொக்கு.! எப்படியாவது நாளைக்கு காலையில என்னை இந்த இடத்துல இருந்து தூக்கிட்டு போய் நீங்க மீன் சாப்பிடுற குளத்துகிட்ட பாதுகாப்பா இறக்கி விடு நண்பா அது போதும் என்றது ஆமை..! அது சரி நண்பா.?உன்னை எப்படி நான் தூக்குவது அது கஷ்டமில்லையா..?

ஆமை ஒரு யோசனை சொன்னது "நண்பா நீயும் இன்னொரு கொக்கு நண்பனும்  ஒரு கனமான நீள குச்சியின் இரு முனைகளை ஆளுக்கொருவராக பிடித்துக் கொள்ளுங்கள் குச்சியின் நடுப்புறத்தை நான் கவ்விக்கொள்கிறேன்.. அப்போது என்னை தூக்கி பறந்து விடுங்கள் இருவர் சேர்ந்து என்னை தூக்குவதால் சிரமமும் இருக்காது..ஓகேவா" என்றது..!

ஓகே டன் என்று கொக்கும் ஒப்புக் கொண்டது..! மறுநாள் அதே போல ஆமை ஒரு கம்பை எடுத்து வர அதன் இரு முனைகளை இரு கொக்குகள் அலகில் கவ்விக்கொள்ள ஆமை நடுவில் கவ்விக் கொள்ள ஆமையை தூக்கி கொண்டு பறந்தன..! இந்த காட்சி வேட்டைக்கு வந்து கொண்டிருந்த அந்த வேடர்கள் கண்ணில் பட அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம்..!

அட இந்த பறவைகளை பாரேன்..ஒரு ஆமையையே தூக்கிப் பறக்க கற்றுக் கொண்டனவே.. ஒரு குச்சி அதை இரு புறம் பறவைகள் பிடிக்க நடுப்புறத்தை ஆமை பிடிக்க இப்படி ஒரு அறிவு.. இப்படி ஒரு யோசனை எப்படி வந்திருக்கும் புத்திசாலி கொக்குகள் தான்.! என்று வியப்பின் உச்சத்தில் உரக்க பேச இது வானத்தில் இருந்த ஆமை காதில் விழுந்தது..!

"அந்த ஐடியா என்னோடது" என்று அவசரத்தில் ஆமை வாய் திறக்க குச்சியின் பிடியை விட்டு நேராக வேடர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஓடு சிதற விழுந்து இறந்தது..!

நீதி : சாதுர்யமாக இரு.. சாதுர்யம் பேசாதே..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

உங்களுக்கு ஹடயோகம் பற்றித் தெரியுமா.? நீரின் மீது நடந்து செல்லும் சக்தி தான் ஹடயோகம் எனப்படும்.. ஒரு அயல் நாட்டுத் துறவி 20 ஆண்டுகள் கடினப் பயிற்சி எடுத்து இந்த ஹடயோகத்தை கற்றுக்கொண்டார்..! இப்போது அவரால் தரையில் நடப்பது போல சர்வ சாதாரணமாக தண்ணீரில் நடக்க முடியும்.. அவர் ஒரு முறை நம் நாட்டுக்கு வந்தார்..!

இந்தியாவில் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்தார்..! அந்த துறவி ராம கிருஷ்ணரிடம் "நான் 20 ஆண்டுகள் பாடுபட்டு ஹடயோகத்தை கற்றுக் கொண்டேன்... என் இந்த சக்தியால் இந்தியாவின் பெரிய நதியான கங்கை நதி மீது எளிதில் நடந்து போய் அக்கரையை அடைந்து விடுவேன்", என்றார் பெருமிதமாக..!

நாலணா கொடுத்தால் எந்தப் படகோட்டியும் உங்களைக் கொண்டு போய் அக்கரையில் விடுவானே..! இதற்காகவா 20 ஆண்டுகளை வீணடித்தீர்கள் என்றார் பரமஹம்சர்.. அந்தத் துறவி வெட்கி தலை குனிந்தார்..!

நீதி : உண்மையான ஞானம் இது போன்ற சக்திகளை விரும்பாது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்..

காட்டில் கொம்புள்ள கலைமான் ஒன்று இருந்தது... ஒரு நாள் அது அழகான குட்டி ஒன்றை ஈன்றது.. பிறந்த அந்த குட்டியை கண்ணும் கருத்துமாக மிகவும் பாதுகாப்பாக வளர்த்தது.. கொடிய மிருகங்களிடம் இருந்து அதை பாதுகாப்பது தானே சவால்..! குட்டியும் வளர்ந்தது..!

பயமறியாது துள்ளித்திரிந்த அக்குட்டிமானுக்கு தினசரி அறிவுரை சொல்லும் தாய்மான்..! சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களின் குணநலன்கள், அவை தாக்கும் முறை, அதில் இருந்து எப்படி ஓடி தப்புவது.. இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுத்தது தாய்மான்..!

ஒரு நாள் ஓநாயிடம் இருந்து தப்புவது பற்றிய பேச்சு வந்தது.. அப்போது குட்டி மான் கேட்டது.. அம்மா உனக்கு நாய் உடலை விட பெரிய உடல், அதை விட வேகமாய் ஓடுகிறாய், தலையில் நீள கொம்புகளும் உள்ளது அப்புறம் ஏன் அதைக்கண்டு பயம்.?

தாய்மான், "மகனே நீ சொல்வதெல்லாம் சரிதான்.. நான் ஓநாயை விட நீ சொன்ன அத்தனை தகுதியும் உடையவன் தான்.. ஆனால் என்ன செய்ய ஒற்றை ஓநாய் குரைத்தாலும் குலை நடுங்கி ஓடும் குணமும் இருக்கிறதே.. அது எப்படி மாறும் என்றது..!

நீதி : எந்த தகுதி இருந்தாலும் கோழைக்கு தைரியம் வராது..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஒரு அரசியல்வாதி இருந்தார்.. அசகாய சூரர் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியில் இருப்பார்..! பணம் சம்பாதிப்பது மட்டுமேஅவரது குறிக்கோள்.. எல்லா நெளிவு சுளிவுகளும் தெரிந்தவர்.. இனிக்க இனிக்க பேசுவார் உள்ளுக்குள் விஷம் இருக்கும் அது அரசியல்வாதிகளுக்கு பிரத்யேக குணம் அல்லவா..! 

ஒரு வெளிநாட்டு நிறுவனம் தொழிற்சாலை கட்ட இவர் உதவியை அணுகியது.. அவர்கள் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள்.. பெரும் தொகை கமிஷன் தருவதாக சொன்னார்கள். சிக்கல் என்னவென்றால் அவர்கள் சொன்ன இடத்தில் 5000 ஏக்கரில் 4000 ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டார்கள் அதில் 1000 ஏக்கர் ஒரு பெரும் தொழிலதிபருடையது.!

அவர் அதை விலைக்கு தர மறுத்துவிட்டார்.. எனவே அரசியல்வாதியை அணுகினார்கள்..! அந்த தொழிலதிபரை அரசியல்வாதி நன்கு அறிவார்.. நான் இதை முடித்து தருகிறேன் என வெளிநாட்டு நிறுவனத்திடம் உறுதியளித்துவிட்டு தொழிலதிபரை சந்திக்க சென்றார்.. அவரும் செல்வாக்கு உடையவர் என்பதால் மிரட்டியெல்லாம் பணிய வைக்க முடியாது...!

ஆகவே, இனிதாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள முடிவுசெய்தார் அரசியல்வாதி..! தொழிலதிபரை சந்தித்தார்.. வேறு சில விஷயங்களை பேசிவிட்டு மெதுவாக விஷயத்தை சொன்னார்.. அந்த தொழிலதிபரோ இல்லை என்னால் அந்த இடத்தை தர முடியாது என்று மறுக்க.. சரி நீங்க எதிர்பார்க்காத தொகை வாங்கித்தரவா என்றார்..!

தொழிலதிபர் அதை மறுக்க.. சரி உங்கள் தொழிலுக்கு அரசியல் ரீதியாக எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்து கொள்கிறேன் என்று நமக்குள் எழுதாத ஒப்பந்தம் போடுவோம்.. உங்க தொழிலில் நானும் ஒரு பங்குதாரரா இருக்கேன் அப்ப ஓகேவா என்றார்.. தொழிலதிபர் சற்று யோசித்து.. சரி அப்ப அதை சட்டப்படி எழுதிதாங்க என்றார்..!

சட்டப்படியா ஏன் எம்மேல நம்பிக்கையில்லையா.? என அரசியல்வாதி கேட்க.. தொழிலதிபர்.. அய்யா! அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை கட்சி மாறிடுறிங்க.! நாளைக்கு ஆட்சிக்கு வர்றவங்க அந்தத் தொழிற்சாலையை மூடணும்ன்னா அப்ப அந்த கட்சிக்கு மாறிப் போன நீங்க அதுக்கு சாதகமா பேசுவிங்க உங்களை எப்படி நம்புறது.?என்றார்..!

அப்ப உங்க முடிவுதான் என்ன? அரசியல்வாதி,.. சட்டப்படி எழுதி பத்திரம் போடுங்க அப்புறம் பேசலாம் என அதிபர் கூற.. பத்திரமெல்லாம் எதுக்கு என் வாக்குல நம்பிக்கையில்லையா என்றார் அரசியல்வாதி.. குபீரென சிரித்த தொழிலதிபர் இதை வாக்குன்னு நம்ப நான் என்ன கேனையனா என்றார்..! அரசியல்வாதி தலைகுனிந்து வீடு திரும்பினார்..!

நீதி : நம்புவதற்கு முன் கட்டாயம் சோதிக்க வேண்டும்..!


ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ஹரி பூட்டு சாவிகள் விற்பனை செய்பவன்.. எல்லாவிதமான சாவிகளுக்கும் அவை தொலைந்தால் டூப்ளிகேட் சாவி செய்து தரும் சேவையும் அவனிடம் உண்டு.. ஆனால் இந்த தொழிலில் வரும் லாபத்தில் அவனுக்கு திருப்தி இல்லை.. இன்னும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.. நிறைய பணம் இருக்க வேண்டும் என்பது அவனது ஆசை..!

ரவி..பிரபலத் திருடன் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய வங்கியை கொள்ளையடித்து தப்பியவன்... கடந்த வருடம் தான் கைதானான்.. இந்த வழக்கில் பிடிபடாத நான்கு வருடங்களில் பெருந்தொகையை தான் உல்லாச வாழ்க்கைக்கு செலவிட்டதாக நீதிமன்றத்தை நம்ப வைத்தான்..! 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றான்..!

ஆனால் அவன் கொள்ளையடித்த பெரும் பணத்தை நம்பிக்கையானவர்களிடம் தந்து வைத்துள்ளான்.. ஒருநாள்... சிறைக்கு அவனை பார்க்க வந்த ஒரு உறவினர் மூலம் தான் பணம் கொடுத்து வைத்த நபர்கள் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு வேறு ஊருக்கு போகப் போகிறார்கள் என்பதை அறிந்து சிறையிலிருந்து தப்ப திட்டமிட்டான்..!

அவனை பார்க்க வந்த அதே உறவினனை திரும்பு வரவழைத்து நீ உடல்நிலை சரியில்லாதது போல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு சிறைக்கு தகவல் அனுப்பு.. நான் உன்னை பார்க்க வரும் போது தப்பிவிடுகிறேன் என்று திட்டத்தை சொன்னான்.. அதே போல் அவனும் செய்ய... ரவி நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றான்...!

அவனை கைவிலங்கிட்டு போலீஸ் அழைத்து சென்றது.. மருத்துவமனை போகும் வழியில் ரவி சந்தர்ப்பம் பார்த்து சாமர்த்தியமாக தப்பிவிட்டான்..போலீஸ் விரட்டியது.. ரவிக்கு கைவிலங்கோடு ஓடுவது கடினமாக இருந்தது.. இந்த வாய்ப்பில் மாட்டினால் இனி அவ்வளவு தான் என்ற உத்வேகம் அவனை செலுத்தியதால் புது சக்தியுடன் ஓடி மறைந்தான்..!

விரட்டி வந்த போலீசார் இவன் எங்கே போனான் என்று தெரியாது குழம்பி தலைமை நிலையத்துக்கு தகவல் அனுப்பினார்கள்.. போக்குவரத்து உஷார் படுத்தப்பட்டது.. பேருந்து ரயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டன.. 5 நிமிடத்திற்கு ஒருமுறை டிவியில் ரவியின் புகைப்படத்தோடு செய்தி வந்துகொண்டே இருந்தது..!

பூட்டுக்கடையில் அமர்ந்திருந்த ஹரியும் டிவியில் அதை பார்த்தான்.. இரவு 9 மணி கடையை மூடப்போகும் போது ஒரு நபர் வேகமாக கடைக்குள் புகுந்து கதவை மூடினார்.. அது தப்பி ஓடிய ரவி..! ஹரி பதட்டமானான் முதலில் யாரோ திருடன் என்று நினைத்தான்.. பிறகு தான் டிவியில் பார்த்த ரவியின் முகம் நினைவுக்கு வர... அவசரமாக செல்போனை எடுத்தான்.!

செல்போனை பாய்ந்து பிடிங்கினான் ரவி.! நண்பா இரு என்னை காட்டி கொடுத்தால் உனக்கு என்ன பெருசா கிடைக்கப் போகுது.? ஆனால் எனக்கு உதவி செஞ்சா உனக்கு பெரும் பணம் கிடைக்கும் என்ன சொல்கிறாய்.? என்றான் பணம் என்றவுடன் சபலப்பட்ட ஹரி என்ன உதவி.? என்றான்...!

பூட்டு சாவிக்கடைக்கு எதுக்கு வந்தேன்.. இந்த விலங்கை கழட்டு அந்த உதவி போதும் என ரவி சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் அதை கழட்டி விட்டான் ஹரி.. ரொம்ப நன்றி நண்பா நான் வர்றேன் என ரவி கிளம்ப முற்பட எனக்கு பணம் எப்ப தருவே என ஆவலுடன் கேட்டான் ஹரி..! பணமா.! உனக்கா.! எதுக்கு.? என ரவி அலட்சியமாக கேட்டான்..!

அதிர்ந்து போன ஹரி "விலங்கை கழட்டினால் தருவேன்னு நீ தானே சொன்னே..? என்றான் நண்பா நீ இந்த உதவி செஞ்சது போலீசுக்கு தெரிஞ்சா நீயும் உள்ள தான் போகணும்.. நான் இப்ப நினைச்சா கூட உன்னை கட்டிப்போட்டுட்டு இங்க இருக்குற காசை கொள்ளையடிக்க முடியும் அப்படி செய்யாததே நான் உனக்கு செஞ்ச பேருதவி.. புரியுதா..!

இதை தைரியமிருந்தா வெளிய சொல்லிப்பாரேன்..! உன்னால என்னை ஒண்ணுஞ் செய்ய முடியாது.. வரட்டுமா என்று சொல்லி கதவை திறந்து வெளியேறினான் ரவி.!

நீதி : கெட்டவனுக்கு பலனை எதிர்பார்த்து செய்யும் சேவை பலன் தராது..!

ஜென்வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...

ரவி கடின உழைப்பாளி.. நேரத்தை வீணடிப்பது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..! காலை 5 மணிக்கே எழுந்துவிடுவார் டாய்லட் போகும் போதே பேப்பர் படிப்பார், ஜிம்மில் ஓடிக் கொண்டே டிவி பார்ப்பார், குளிக்கும் போதே பல் துலக்குவார், உணவு அருந்தும் போது படித்துகொண்டே ஹெட்போனில் இசை கேட்பார்.. அவருக்கு ஒவ்வொரு மணித்துளியும் முக்கியம்.. அத்தனையும் பணம்.. நேரத்தை யாரும் வீணடித்தால் அவரால் தாங்கிக்கொள்ள முடியாது..வாழ்க்கையில் அப்படி ஓடிக்கொண்டிருந்தார்.!

ஒருநாள் தனது அலுவலகத்தில் தனது மொபைலை சார்ஜ் போட்டுவிட்டு லேப்டாபில் மும்முரமாக மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார்.. செல்போன் ஒலித்தது பிளக்கிலிருந்து சார்ஜை உருவினால் அதற்கு சில வினாடிகள் தாமதமாகுமே என்று அப்படியே அதை கழற்றாமல் பேசினார்..அப்போது திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தத்தினால் அவரது கையிலிருந்த செல்போன் வெடித்து விட்டது ஒரு விரலும் காதும் துண்டாகி விட்டது.. அலுவலகமே பரபரப்பாகி அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தது..!

அதோ..அங்கே பூங்காவில் நீண்டநேரம் அமர்ந்திருப்பது யார் தெரிகிறதா.? நம் ரவியே தான்.! இப்போதெல்லாம் பூங்காவில் வந்து அமர்கிறார்..பூக்களை ரசிக்கிறார்..தன் ஒரு காதால் பறவையின் குரல்களை கேட்கிறார்.. நேரம் பொன்னானது என்றால் மெலிதாக ஒரு அலட்சிய சிரிப்பு சிரிக்கிறார்.. அவ்வப்போது கேமிராவை எடுத்துக்கொண்டு வனப்பகுதிக்கு செல்கிறார்.. மணிக்கணக்கில் காத்திருந்து உயிரினங்களை புகைப்படம் எடுக்கிறார்.. எதையும் நிதானமாக அணுகுகிறார்..செய்ய வேண்டிய வேலையை மட்டும் செய்கிறார்.. இப்போதெல்லாம் அவர் ஒரு வேலை செய்யும் போது இன்னொரு வேலை செய்வதே இல்லை.. வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்..!

நீதி : நேரம் பொன்னானது தான் ஆனால் வாழ்க்கை அதை விட பொன்னானது..!


நீதிக்கதை - 2

காட்டில் புதிய அரசு பதவியேற்றது.. ஆப் கி பார் சிங்கம் சர்க்கார் என்று தேர்தல் கோஷமிட்ட சிங்கராஜா முடி சூடிக்கொண்டார்..! புலி, யானை, கரடி,சிறுத்தை போன்ற அமைச்சர் பெருமக்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்..! காட்டு நலத்திட்டங்கள் இயற்றப்பட்டன.. விலங்குகள் சொந்தத்தொழில் செய்ய அரசு உதவி உண்டு என்று அறிவிக்கப்பட்டது..!

கேரட் பண்ணை அமைக்க லோன் கேட்டது முயல், டான்ஸ் ஸ்கூலுக்கு லோன் கேட்டது மயில், கன்சல்டண்ட் ஏஜென்சிக்கு நரி லோன் கேட்க, ஹேண்டிகிராப்ட் பள்ளிக்கு தூக்கனாங்குருவியும், ஸ்போக்கன் கோர்சுக்கு கிளியும், பாட்டு கிளாசுக்கு குயிலும் லோன் கேட்க.. "எனக்கு ப்யூட்டி பார்லர் அமைக்க லோன் வேண்டும்"என சத்தமாக ஒரு குரல்..!

கேட்டது ஒரு தவளை.! "நீ எதற்கு ப்யூட்டி பார்லரை தேர்ந்தெடுத்தாய்"அமைச்சர் புலி கேட்க.."காடு முன்பு போல் தூய்மையாக இல்லை, காட்டுக்கருகே உள்ள வீடுகள், தொழிற்சாலை கழிவுகளால் பாதிப்பு, பாலிதீன் குப்பைகளால் பாதிப்பு இப்படி பல பாதிப்புகளால் வனச்சூழலே மாறி விட்டது.. வாட்டர் பொல்யூஷனும் இருக்கு..!

விலங்குகளின் தோலில் 10 விதமான ஸ்கின் பிராப்ளம் வந்து எல்லா விலங்கும் அழகிழந்து விட்டன.. அவர்களுக்கு பேஷியல் செய்து அரோமாதெரபி செய்து முகத்தை ப்ளீச் செய்து அவர்களை கொழுக் மொழுக் என ஹன்சிகா போல அழகு படுத்ததான் என்றது தவளை..!

சிங்கம்"தவளையே உன்னை நீ நன்றாக பார் நீயே அவலட்சணமாக சொறி பிடித்த தோலுடன் சொர சொரவென்று இருக்கிறாய் உன்னையே அழகுபடுத்திக் கொள்ள முடியாத நீ பிறரை எப்படி அழகு படுத்துவாய்..உன் மீது யாருக்கும் நம்பிக்கை வராது போய் உனக்கு பொருத்தமான தொழிலை தேடு.. இப்போதைக்கு உன் லோன் கேன்சல்", என்றது..!

நீதி : நம் தகுதியை யோசிக்காமல் பேசக்கூடாது..


சுற்றுச்சூழல் - டிவிட்டுறள்கள்

#இன்று_உலக_சுற்று_சூழல்_தினம் JUNE 5

மீள் பதிவாக சுற்றுசுழல் பற்றி எழுதிய டிவிட்டுறள்கள் ...மரங்கள் வளர்ப்போம் வனங்களை காப்போம் நீர் ஆதாரத்தை  முறைப்படுத்துவோம் வன விலங்குகளை வாழ வைப்போம்


#டிவிட்டுறள் - 27

மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால

நலம் வளர்ப்போரெனச் சொல்.


#டிவிட்டுறள் - 32

வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை

கட்டிப் போட்டு விடும்.


#டிவிட்டுறள் - 37

எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்

நிலத்தடி மண் வளத்தை.


#டிவிட்டுறள் - 38

மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்

மரங்களை அழிப்பதன் பரிசு.


#டிவிட்டுறள் - 54

பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை

நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.


#டிவிட்டுறள் - 56

வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே

விழுதுகள் வீழுகின்ற மரம்.


#டிவிட்டுறள் - 60

மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்

வளர்த்து செழிக்க விடல்.


#டிவிட்டுறள் - 65

மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி

சாய்ப்பதும் ஒன்றான செயல்.




Wednesday 4 June 2014

ஒரு துளி காமம்...

நீ உதடு குவித்து ஊதும் அழகை

காண்பதற்கென்றே திரும்பத் திரும்ப

முன்னால் வந்து விழுகிறது உன் 

கற்றைக்கூந்தல்.!


ஒரு குடை க்குள் இருவரும் 

இருந்த போது

வந்த மழை வரம்

நின்ற மழை சாபம்..!


நான் தேநீர் அருந்திய அதே கோப்பையில்

நீயும் அருந்துகிறாய்... அட இதுவும் முத்தம் தான்.!


முத்தத்தை நெற்றியோடு நிறுத்திக்

கொள்ளலாம் என்ற என் முடிவு 

ஒவ்வொரு முறையும் வெற்றி 

பெறுவதே இல்லை.!


என் அருகில் அமர்ந்து கொண்டு

எந்த இனிப்பு உங்களுக்கு பிடிக்கும்

என்று கேட்கிறாய்.... இது உனக்கு 

அபத்தமாக தெரியவில்லை..?


உன்னுடனான எந்த போட்டியிலும்

வெற்றியோ தோல்வியோ... நான் 

நிச்சயிக்கும் ஒரே பரிசு..!முத்தம்.


உன் பத்து விரலிலும் காயாத மருதாணி 

இருந்ததால் தடை இருக்காதென நான்

துணிச்சலுடன் முத்தமிட முனைந்தேன்

இப்போது என் முகமெல்லாம் மருதாணி.


உன் வீடு செல்ல நீ ஏறும் பேருந்தை

மிகத்தாமதமாக ஓட்டி வந்த ஒட்டுனர்

தான் எனக்கான காதல் தெய்வம்..!


மழை வரும் அடையாளம்.. மாடியில் 

உலர்ந்த துணிகளோடு உன்னையும் 

காணவில்லை..!


உன்னை மறக்க முயன்று 

உன்னையே நினைத்துக்

கொண்டிருக்கிறேன்..!

ஒரு துளி காதல்.

உன் தோளில் வந்தமர்ந்தது ஒரு

முட்டாள் வண்ணத்துப் பூச்சி தேன் 

உன் இதழிலல்லவா இருக்கிறது..!


நீ வெட்கப்பட்டாய்

பூக்களுக்கு 

பாடம் புரிந்தது..!


பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கும்

உன்னை ஏன் கைது செய்யக் கூடாது.

அந்தக் கண்கள்..!


உன் பல்லிடுக்கில் மாட்டிக் 

கொண்ட என் மீசை முடி

மோட்சத்திற்கு போனது.


உன் முகத்தில் பரு

ரோஜாவில் முள்.!


இரு கைகளில் காபி கோப்பையைப் பிடித்து

அருந்தும் போதெல்லாம் உன்னை முத்தமிட்டது

நினைவுக்கு வருகிறது..!


சிறுவயதில் தட்டாம்பூச்சி வாலில் 

நூல் கட்டி துன்புறுத்தியவனை 

இறந்து கிடக்கும் பட்டாம்பூச்சிக்கு

அழ வைத்துவிடுகிறது காதல்.


நீ இருக்கும் போது எனக்கு புரையேறினால்

உன் கண்ணில் கோபம் தெரிவது ஏன்.?


நான் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு

உதடு பிதுக்கி இல்லை என்கிறாய்

இந்த அழகுக்காகவே இது போல 

நிறைய கேள்விகள தயார் செய்ய வேண்டும்..


உன் கொலுசில் இருந்து ஒரு முத்து 

உதிர்ந்து விட்டது என்கிறாய்..தவறு

அது இறந்து விட்டது..!


சோப்பு நுரை குமிழிகளை ஊதி விளையாடுகிறாய்

உன் உதட்டருகே ஒவ்வொரு முறை வரும் போதும்

அந்த வட்டக்கம்பி சொர்க்கத்தை தரிசிக்கிறது..!


அலைபேசியில் நீ அழைத்தால் உன் எண்ணுக்கு

என்ன பெயர் கொடுக்கலாம்.. ரோஜா, தென்றல்,

செல்லம், ஹனி, குட்டிமா, புஜ்ஜி, சிந்தனை நீண்டு

கொண்டிருக்க அலைபேசி ஒலிக்கிறது.. திரையில்

உன் எண்..! எண்ணத்தில் உன் எண்களெல்லாம்

பதிந்திருக்க எப்பெயரும் வேண்டாம் என முடிவெடுத்தேன்.


சூரியன் உதித்த போது பூமியில் ஒரு

நிலா கோலமிட்டுக்கொண்டிருக்கும் 

அதிசயத்தை இன்று தான் பார்க்கிறேன்.


வானவில்

எப்போது

கருப்பானது?

அவள் புருவங்கள்!


ம்ம் என்ற சொல் உதிர்த்து சம்மதம் தெரிவித்த 

பின் வேறு எதுவும் பேசமுடியாது அவள் இதழ்கள்

என்னிதழ்களால் சிறைபிடிக்கப்பட்டது..


டிஷ் ஆன்டெனாவாக அவள் அழகை

ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது

காதோரத்து ஒற்றை ரோஜாப்பூ.


கோப்பை நிறைய தேநீர் தந்து 

உபசரிக்கிறாய்.. ததும்ப ததும்ப 

அருகில் நீயும் இருக்க... நான் 

எதைப்பருக.!?


உன் காதோரம் சுருண்டிருப்பது

குழல் அல்ல என்னை சுருட்டிய சுழல்.!


இதயத் திருட்டுக்கு 

நேச நீதிமன்றத்தின்

தண்டனை.. காதல்..!


மீன்களும் வலைவீசும் என்பதை

அவள் விழிகளை பார்த்தபின்பு

அறிந்துகொள்ளலாம்.


உன்னைக் காணவில்லை என்றேன்

உன்னைத் தான் காணவில்லை என்றாள்

இரண்டுமே சரிதான்.! நானும் நீயும் ஒன்றல்லவா.!


உன் மேலுதட்டுக்கு 

மேலே மீசையாய்

அரும்பியிருக்கும்

வியர்வை முத்துக்கள்

கோர்த்து ஒரு மாலை 

செய்து தருவாயா..!


உன்னைப் பிரிந்து வேலைக்காக வேறு ஊர் போவதை 

சொன்னவுடன் கண்ணீருடன் இழுத்தணைத்து முத்தமிட்டாய்

நான் அந்த வேலையில் சேரவே இல்லை.


ரூபாய் நோட்டைக் இதழில் கவ்விக்கொண்டு

கைப்பையில் சில்லறை தேடிக் கொண்டு

இருக்கிறாய் எனக்கு அந்த ரூபாய் மேல்

பொறாமை வருகிறது..


தொலைபேசி வழியாக குடியேறிவிட்டது

என் செவிகளுக்குள் உன் குரல்..


என்ன ஆச்சரியம்..! உன்னை புகைப்படம் 

எடுக்கும் போதெல்லாம் காமிரா சிரிக்கிறது.!



நீ கழற்றி வைத்துப்போன

காதணிகள் கதறி அழுகின்றன..!



என் உடைக்குள் புகுந்த 

எறும்பாக உறுத்துகிறது

உன் மெளனம்..!



விரைகிற பேருந்தின் சன்னலோர இருக்கை.. என் தோள் மீது 

தலை சாய்த்து சலனமின்றி உறங்குகிறாய்.... உன் நாசியின்

சூடான மூச்சுக்காற்று என் சட்டையை ஊடுருவி என் நெஞ்சில் 

சுடுகிறது..ஒரு கையால் என் ஒரு கையைச் சுற்றிக் கொண்டு நீ 

தரும் அழுத்தத்திலேயே... நான் உன்னிடம் பாதுகாப்பாய் 

இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்துகிறாய்... சன்னல் 

காற்றில் கூந்தல் பாம்புகள் எழுந்தாடிக் கொண்டிருக்கிறது.. 

அனிச்சையாய் உன் கரம் விலகும் ஆடையை சரி செய்து 

கொண்டிருக்கிறதுமூடிக்கிடக்கும் இமையின் அழகையும் நாசி 

நூனியின் குங்குமச்சிவப்பையும்  ரசித்துக் கொண்டிருக்கிறேன்.. 

வெளியே மழை வரலாம் என வீசும் குளிர்க் காற்று கட்டியம் 

கூறுகிறது.. மெல்ல அரை விழி திறந்து சினேகமாய் புன்னகைத்து 

மீண்டும் உறங்குகிறாய்.. பிறிதொரு நாளில் உன்னொரு தோளில் 

நான் தூங்க நேரிட்டாலும் உன் நேசத்தை நீ உணர்த்தியது போல் 

நான் உணர்த்த முடியுமா..? தெரியவில்லை..!



Monday 2 June 2014

கலைஞருக்கு...

உயிர்மெய் எழுத்தின் முதல் எழுத்து க"என்பது தமிழுக்கு பெருமை

கழகத்தின் உயிர் மெய் நீ என்பது உலகறிந்த உண்மை..! தலை

வெற்றியை குளித்தலை"யில் கண்ட தலைவன் நீ.. பல போராட்டங்களுக்கு 

தலை" தந்து வெற்றி தந்தவன் நீ..! பெரியார் பல்கலைக்கழகம் வரும் 

முன்பே பல்கலையும் அங்கு கற்ற கழகம் நீ.. அண்ணாவின் உடன் பிறவா 

தம்பி நீ... உடன் பிறப்பே என்று நீ அழைக்கும் ஒரு மந்திரச் சொல்லே 

உலகத்தின் உற்சாக பானம் என்பார்.. அந்த உறவு முறை சொல்லிலேயே

இரும்புக்கம்பியையும் வளைத்திடும் வல்லவன் நீ.. உன் பேனா தலை குனிந்த

போதெல்லாம் தமிழ் தலை நிமிர்ந்திருக்கிறது.. கர கர குரலில் உன் பேச்சு

கரகரப்ரியா ராகம் கேட்ட இசைப் பிரியனாய் தொண்டர்களை ஆக்கியிருக்கிறது..

சோதனைகளை கண்டு சோர்ந்ததில்லை சாதனை செய்ததும் ஆர்ப்பரித்ததில்லை

ஃபினிக்ஸ் என்ற பறவையினம் இல்லாதிருந்தால் அழிவிலிருந்து எழுச்சிக்கு 

உன்னை தான் உலகம் உதாரணம் காட்டியிருக்கும்.. சேற்றை வாரி இறைத்தாலும்

சந்தனம் பூசினாலும் ஒரே இன்முகம் காட்ட உன்னால் தான் முடியும்.. இருபதாம் 

நூற்றாண்டிலும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் இந்திய அரசியல் வரலாறு

உன் பேர் இல்லாது எழுதப் பட்டிருக்காது.. முதுமையிலும் உழைப்பு, நக்கல் 

நையாண்டி, சிலேடை என நீ என்றும் இளைஞனாகவே இருக்கிறாய்.. உலகிலேயே

ஓய்வுக்கு ஓய்வளித்தவன் நீ தான் என்பதை எந்த ஆய்வும் இன்றி சொல்லலாம்...

பழித்தாலும், துதித்தாலும், பதவி இருந்தாலும், போனாலும் செய்திகளின் நாயகன் நீ.!

உன் அரசியல் எதிரிகளும் ஒப்புக் கொள்ளும் அளப்பரிய ஆற்றல் பெற்றவன் நீ.. 

துயர் எனும் இருள் சூழும் போது இரவு வந்தால் தானே பகல் வரும் என்று எதையும்

சாதாரணமாக கடக்கும் சூரன் நீ.. கழகத்தின் சூரியன் நீ.. சில அரசியல் காரணங்களுக்கு

நீ விமர்சிக்கப்பட்டாலும் தமிழகம் விமரிசையாக கொண்டாடும் தலைவர்களுள் ஒருவன் நீ.!

தள்ளாத வயதில் நினைவுகள் தவறுமாம்.. உனக்கு மட்டும் இது பொருந்தாது... 

எல்லோருக்கும் மெமரி மைனஸ்... ஆனால் உனக்கு அது மெமரி ப்ளஸ்

அகவை 91 என்பது உலகுக்கு ஆனால் உனக்கு அது 19.. எத்துணை சிக்கல் என்றாலும் 

கதிரவனுக்கு முன் கரையும் பனித் துளியாய் அதை கரைத்துவிடும் சக்தி பெற்றவன் நீ

ஆற்றல் மிக்க இளைஞனே.. கழகத்தின் தலைவனே.. கலைஞர் எனும் ஒருவனே... 

கலைஞர் என்றால் கழகம்... கழகம் என்றால் கலைஞர் இதைத் தவிர வேறென்ன..!

முத்தமிழே உனை வந்து வாழ்த்தும் போது... என் வாழ்த்து அதற்கு ஈடாகுமா..!

பறக்கும் விமானத்தை கீழிருந்து பார்ப்பது போல இங்கிருந்தே பார்த்து வியக்கிறேன் ..!



Sunday 1 June 2014

தீனா - ஜுன்

தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

எப்படி துண்ணா ஒடம்புக்கு நல்லது தெரிமாபா..? நீ துண்ண சோறு நல்யா ஜீர்ணமா ஆக சொல்லோ அத்த தெரிஞ்சுகினு அப்பால துண்ணுறத தேவயா அளவா துண்ணியினா உன் ஒடம்புக்கும் நல்லது உனுக்கு ஆயுசும் கெட்டி..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பசிச்சதுக்கு அப்புறம் அளவா துண்ணு.. நீ பல வர்சம் வாழ்ந்திடு கண்ணு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

[ பொருட்பால் : அதிகாரம் : மருந்து : குறள் எண் : 943 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

புர்சன் பொஞ்சாதி 2 பேரும் கட்டில்ல சந்தோஸ்மா இர்க்குறதுக்கு மின்னாடி சின்யதா ஒரு சண்ட போட்றது ஒரு சொகம் தான்..ஆனா அந்த கோவம் எப்டி இர்க்கணும் தெரிமா?துண்ற சோத்துல போட்ற உப்பு மேறி அள்வோட தான் இர்க்கணும்.. அத்து அள்வுக்கு மீறுனா உன் சந்தோசம் நெறியா உப்பு போட்யா மேறி கர்ச்சிடும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"ஊடலு அள்வா போட்ற உப்பு.. அளவு அதிகமான அது தப்பு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புலவி : குறள் எண் : 1302 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா..

அன்பா பண்பா ஒழுக்கமா ரீஜண்டா இருக்குறவரு கொணம் இன்னா மேறி இர்க்கும் தெரிமா.? அவ்ரோட பழகுனவங்க விஷத்த கொட்த்து இத்த துண்ணுபான்னாலும் அத்த தன் கண்ணாலேயே புர்ஞ்சுகினு வோணான்னு சொல்யாம சந்தோஸ்மா வாங்கி துண்ணுடுவாங்களாம்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நம்புனவன் நஞ்சே கொட்த்தாலும்... நல்லவனுக்கு அது நன்னாரி சர்பத்து"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

[ பொருட்பால் : அதிகாரம் : கண்ணோட்டம் : குறள் எண் : 580 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

எனுக்கு தும்மலு வர்ற மேறி இர்ந்து அப்டியே அத்து வர்றாம நின்னு போச்சே! ஒருவேள என் ஆளு என்னிய நெனிக்கிறா மேறி ஆக்ட் கொட்த்து நெனிக்காம போய்ட்டானோன்னு டவுட்டாகீது.. இல்லின்னா தும்மலு வந்துர்க்குமே.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"தும்மலு வந்து அடங்குது.. அத்த நென்ச்சு மன்சு மடங்குது"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்

சினைப்பது போன்று கெடும்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நினைந்தவர் புலம்பல் : குறள் எண் : 1203 ]


தீனா "கொரலு"....

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒல்கத்துல யாரோட துட்ட ரொம்ப நல்யா மதிப்பாங்க தெரிமா? அகங்காரம் புட்ச்ச குணம், காண்டு, ஈனத்தனமான செய்கை இத்தெல்லாம் இல்யாத நல்ல மன்சன் துட்டு கீதே அத்து தான் அல்லாரும் மதிக்கிற துட்டு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"கெட்ட கொணம் இல்யாதவன் துட்டு... ஒலகம் மதிக்கும் அதை தொட்டு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

[ பொருட்பால் : அதிகாரம் : குற்றம் கடிதல் : குறள் எண் : 431 ]


தீனா "கொரலு"....

வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

பொண்ணு சொல்றா, "அவரு என்ன வுட்டு பிர்ஞ்சி இர்ந்த அல்லா நாளயும் சொவத்தில கோடு போட்டு வச்சி.. அவுர நென்ச்சிகினே அத்த தடவி தடவி என் விரலெல்லாம் தேஞ்சுட்ச்சு.! அவுரு வர்வாரா மாட்டாரான்னு வர்ற வழிய பாத்து பாத்து கண்ணு ரெண்டும் அயகெல்லாம் கெட்டு ஒளியில்லாம பூட்ச்சு..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பிர்ஞ்சு போனவர நென்ச்சி... "சொவத்தை தடவி விரலு தேயுது... வழிய பாத்து கண்ணு காயுது" குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : அவர்வயின் விதும்பல் : குறள் எண் : 1261 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

வொர்த்தன அழிவு வர்றாம காத்துகினு இர்க்குற கருவி அவுனோட அறிவு தான்..அத்து மட்யுமில்ல அவுனோட எதிரி உள்ய வந்து பூந்து அத்த அழிக்க மிடியாத கோட்டை கணக்கா காத்துகினு இர்க்குறதும் அத்தே அறிவு தான்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அழியாம காக்குற அறிவு கோட்டை.. அத மீறி எவனும் செய்யமிடியாது சேட்டை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்கல் ஆகா அரண்.

[ பொருட்பால் : அதிகாரம் : அறிவுடைமை : குறள் எண் :421 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

இந்த ஆசப்பட்ற மன்சுகீதே அதுக்கு வெக்கங்குற தாப்பாள போட்டு ஒரு கதவு கணக்கா பூட்டி வைக்க சொல்லோ.. அவுரு மேல நான் வச்சிக்கீற காதலு ஒரு கோடாலி மேறி ஆகி அந்த கதவயே ஒட்ச்சு போட்டுறுத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"வெக்கம் தான் மன கதவுக்கு தாப்பா...காதலு அத ஒடச்சுடுது போப்பா"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : நிறையழிதல் : குறள் எண் :1251 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஒர்த்தன் உண்மிய பத்தி பெர்சா பேஸ்லனாலும்.. உண்மிக்கு ஒத்து வர்றாத வேலயே செஞ்சாலும்..அவன் இன்னொர்த்தன பத்தி கோள் சொல்யாம ராங்கா பேஸாத்து வாழ்றவனா இர்ந்தா ஒலகம் அவனை நல்யவன்னு சொல்லும்.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அடுத்தவனை சொல்லாத கோளு.. அப்பத்தான் நீ உலகத்துக்கேத்த ஆளு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம்கூறான் என்றல் இனிது.

[ அறத்துப்பால் : அதிகாரம் : புறங்கூறாமை : குறள் எண் :181 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

காதலிக்கிறவங்கோ ரெண்ட்யு பேரும் ஒரு அளவா கோச்சிக்கினு பேசாமயே இர்ந்து.. அப்றம் சமாதான்மா போய் கட்டில்ல ஒண்யா சேர்றது கீதே.. அடாடாடாடா.. அத்து மேறி ஒரு சொகம் ஒல்கத்துல எத்யுமே கெடியாத்து...! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"லைட்டா இர்க்கணும் ஊடலு.. பிரைட்டா இருக்கும் காதலு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : ஊடலுவகை : குறள் எண் :1330 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

உன்னால ஒர்த்தன் ஊருக்குள்ள வெக்கப்பட்டு தலிய குனிஞ்சி நிக்குறான்னா அத்த நென்ச்சி நீ வெட்கப்பட்யே ஆவுணும்.! அப்டி நீ வெக்கபடாம இர்ந்தின்னா ஒல்கத்துல நாயம்ன்னு ஒண்ணு கீதே அது உன்னாண்ட இர்ந்து வெக்கப்பட்டுகினு போய்டும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"மனுசனுக்கு வோணும் வெக்கம்..இல்லாட்டி நாயம் வராது உம்பக்கம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பிறர்நாணத் தக்கது தான் நாணா னாயின்

அறம்நாணத் தக்கது உடைத்து.

[ பொருட்பால் : அதிகாரம் : நாணுடைமை : குறள் எண் : 1018 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

மன்சால நென்ச்சுனு இர்க்குறவரை பிர்ஞ்சு இர்க்க சொல்லோ..என்யோட அயகான தோளு ரெண்ட்யும் அயகெல்லாம் கொர்ஞ்சி அப்டியே இள்ச்சி போச்சு..! இளச்சு அசிங்கமா போன உன்னாண்ட ஏன் இர்க்குணும்ன்னு.. என் கய் வளயலு அல்லாம் கயண்டு கீய உயுந்துர்ச்சு.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா... 

"அவுர நென்ச்சு மெலியுது தோளு.. கய் வளயலும் கழலுது கேளு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்

தொல்கவின் வாடிய தோள்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : உறுப்பு நலன் அழிதல் : குறள் எண் :1234 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

ஊர்ல நல்யா மதிப்பும் மர்யாதியுமா வாழ்ந்துனுகீற மன்சன் வாய தொர்ந்து பேஸ் கூடாத்த வார்த்திய பேஸ்னா.. அத்து வரிக்கும் அவுரு மேல வச்சிர்ந்த அல்லா மர்யாதியும் அப்டியே அம்பேலாய்டும்..அப்றம் ஒரு ஆளு கூட அவுர மதிக்காது.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"நல்லத பேஸ்னா உனுக்கு சிறப்பு.. இல்லாட்டி நீ கால் செர்ப்பு"

சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : பயன்இல சொல்லாமை : குறள் எண் :195 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

கண்ணுல மய்ய வய்க்க சொல்லோ அந்த மய்ய வெக்கிற குச்சிய கண்ணுக்கு தெர்யாது.. அத்தே மேறி தான் என்ன வுட்டு பிர்ஞ்சி போனவரு திரும்ப என்னாண்ட வர் சொல்லோ அவுரு பிர்ஞ்சு போன தப்பு எனக்கு தெர்யறதில்ல.. சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா..

"மை வய்க்கிற குச்சி கண்ணுக்கு தெர்யாது..காதலன் செஞ்ச குத்தம் பொண்ணுக்கு தெர்யாது"

குஜாலா சொல்லிகீரார்பா "தல"

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட விடத்து.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சி விதும்பல் : குறள் எண் :1285 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நாட்ட ஆண்டுகினு இர்க்க ராஜாவா இர்ந்தாலும் அவுரு ஏதாவது தப்பு செய் சொல்லோ... "தோ பாரு நீசெய்றது ஏதும் சரியில்ல..ராங்கு பண்ணா அப்றம் அல்லாமே ராங்காவே பூடும்ன்னு" சொல்ல நாலு பெர்ய மன்சனுங்க வோணும்.! அப்டி சொல்ல ஆருமே இல்லின்னா எதிரியே இல்லாட்டி கூடொ அவரு கெட்டயிஞ்சுருவாரு.! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.

"நல்லத சொல்ற பெருசு.. அவரு இல்லாட்டி நீ தருசு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.

[ பொருட்பால் : அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல் :குறள் எண்:448 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

என் மன்சுல நென்ச்சிகினு இர்க்குறபரு என் கண்ணுக்குள்ளயும் கீறாரு.! கண்ண இமய்க்க சொல்லோ அவுரு மூஞ்சி மறயுமேன்னு பீலாகி நான் கண்ண இமிக்கமேயே இருக்கேன்.. இது எனுக்கு சந்தோஸ்மா இர்ந்தாலும் அது தெரியாம.. இந்த புள்ள இப்படி கீதே.. அத்தும் மேல உனுக்கு அன்பே கெடியாதான்னு அவுர ஊர்ல அல்லாரும் திட்டுறாங்க ! 
சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா.. 

"என்கண்ண இமிச்சா நீ அங்க இல்ல.. உன்ன ஊரு திட்டுது இன்னா சொல்ல"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ்வூர்.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : காதற் சிறப்புரைத்தல் : குறள் எண் : 1129 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

வாய் தொர்ந்து பொய்யே சொல்யாம உண்மியா ஒர்த்தரு வாழறாருன்னா அத்த வுட ஜபர்தஸ்து வேற எத்துவும் கெடியாது.. அப்டி வாழ சொல்லோ அவுருக்கு தெர்யாமலேயே அல்லா புண்ணியமும் தானா வந்து சேரும்..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"பொய் சொல்லாத வீணா.. புண்ணியம் வரும் தானா"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.

[ அறத்துப்பால் : அதிகாரம் : வாய்மை : குறள் எண் 296 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு கர்த்தில்ல காதல்...

காதலி சொல்றா..! "இந்த சாய்ங்கால நேரம் கீதே... அது அப்டியே காதலனோட குஜாலா பேசிகினு இர்ந்தப்போ சோக்கா தெர்ஞ்சது.. இப்ப அவுரை பிர்ஞ்சி இர்க்க சொல்லோ அத்தே சாய்ங்கால நேரம் எப்டி கீதுன்னா.. என்னிய உசுரோட துண்ணுற வேல் கணக்கா கொல்லுது..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"அவுரு இர்ந்தா சாய்ங்காலம்.. அவுரு இல்லாட்டி உசுர சாய்க்கிற காலம்"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.

[ இன்பத்துபால் : அதிகாரம் : பொழுது கண்டு இரங்கல் : குறள் எண் :1221 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

நாட்டை ஆள்ற ராஜாவே உனுக்கு தோஸ்த்து ஆவணும்ன்னு தேடி வந்து தோஸ்த்தா இர்ந்தாலும்.. நீ ஒரு சோம்பேறியா இர்க்க சொல்லோ.. அந்த ராஜாவோட உனுக்கு கிட்ச்ச ஒறவுக்கு ஒரு சின்ய பிரியோஜ்னம் கூட கெடியாத்து..! சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"ராஜா உன் தோஸ்த்துன்னாலும்.. சோம்பேறியா இர்ந்தா நீ கூஜா

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது

[ பொருட்பால் : அதிகாரம் : மடி இன்மை : குறள் எண் : 606 ]


தீனா "கொரலு" 

அல்லாத்துக்கும் வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா...

இந்த முளவுட்ட செடி கீதே அத்த பாத்தவுட்னே சொல்லலாம் இது எந்த மேறி நெல்த்துல முள்ச்சதுன்னு... அத்தே மேறி தான் மன்சன் வாய தொர்ந்து பேசற வாய் பேச்ச வச்சி அவன் பொர்ந்த பொறப்பயும் அவன் வம்சித்தயும் ஈசியா கண்டுக்லாம்..! 

சுர்க்கமா பிரிறா மேறி சொன்னா...

"நெல்த்த வச்சு செடிய சொல்லு.. பேச்ச வச்சு குடிய சொல்லு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

[ பொருட்பால்: அதிகாரம்: குடிமை : குறள் எண் - 959 ]