Sunday, 6 April 2025

🍩 வடைக்காலம்

🍩 இது ஒரு வடைக் காலம் 🍩

மெதுவடை, உளுந்துவடை என்றும் செல்லமாக ஓட்டை வடை என்றும் அழைக்கப்படும் உளுந்தவடையைப் பற்றியே இப்பதிவு! கன்னடத்தில் உதின்ன வடே, தெலுங்கில் கரேலு, மலையாளத்தில் உளுனுவடா என்று அழைக்கப்படும் திராவிடப் பலகாரம் இந்த வடை! வட இந்தியாவில் பலப்பல வடை இந்தியர்கள் இருந்தாலும் இது தென்னிந்தியா அளவுக்கு அங்கு புகழிலும், புழக்கத்திலும் நஹிஹே!

இது நம்ம பிரவுடு கன்னடிகா உணவாகும்! பொதுவா உளுந்தில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு கர்நாடகா தனித்துவம் வாய்ந்தது. கர்நாடகாவின் மாதுர் பகுதியில் இது தோன்றியது (மாதுர் வடா இன்றும் ஃபேமஸ்) வரதராஜ முதலியார், மஸ்தான், பாட்ஷா இவர்களுக்கு முன்பே மும்பை வரை சென்று அங்கு கோலோச்சிய தென்னகத்து டான் தான் இந்த வடை நாயகன் & பாட்ஷா இரண்டுமே!

ஆரம்பகாலங்களில் (200 ஆண்டுகளுக்கு முன்பு) உளுந்து வடைகள் வைத்து செய்யப்பட்ட வடா பாவ் உளுந்தம் பருப்பு விலை ஏற்றத்தாலும், ஊற வைக்கும் நேரம் மிச்சம் என்பதாலும் வடா உருளைக் கிழங்குக்கு மாறியது! உளுந்து, உருளைக் கிழங்காக மாறினாலும் வடா என்னும் அந்தப் பெயர் மட்டும் மாறவேஇல்லை

இன்றைக்கும் மும்பையில் தினமும் சில கோடி ரூபாய்கள் டர்ன் ஓவர் கொடுக்கும் வணிகம் வடா பாவ் விற்பனையில் நடைபெறுகிறது! வெங்கடேஷ் கோலி வடா பாவ் என்னும் ஒரு நிறுவனமே ஆண்டுக்கு 200கோடி டர்ன் ஓவர் எடுக்கிறது! வாயைப் பிளக்காதீர்கள் அதில் 2 வடைகளை வைத்துவிடலாம்! டோர் லாக்! இப்படி மராத்தியர்களின் வாழ்வில் ஒன்றாகிப் போனது வடாபாவ்!

மகாராஷ்டிராவில் வடா பாவ் ராஜ்ஜியத்தை நிறுவிய மெதுவடை தமிழ்நாட்டுக்குள் உடுப்பி ஓட்டல்கள் வழியாக நுழைந்தது! பெயரில் மெது இருந்தாலும் அதிவேகமாக உணவு ரசனை மிகுந்த தமிழர்களின் வாய் வழியாக நுழைந்து அவர்கள் இதயத்தில் இடம் பிடித்தது! இது தமிழ்நாட்டிற்குள் வந்து கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிறது!

இட்லி, பொங்கல், உப்புமா, கிச்சடி என நம் எல்லா டிஃபன்களுக்கும் மியூச்சுவல் ஃபிரெண்டாக இருப்பது மெதுவடையே! அதிலும் புள்ளி வைத்தால் கோலம் என்ன கோலாகலமே போடும் தமிழர்கள் இதில் சாம்பார் வடை, ரசவடை, தயிர் & மோர்க்குழம்பு வடை, வடை கறி என்று பல அவதாரங்களை தமிழக கைப்பக்குவத்தில் உருவாக்கினர்.

பெரிய ஓட்டல்களில் மட்டுமே கிடைத்த இந்த வடை ரோட்டுக்கு வந்தது! பொதுவா ரோட்டுக்கு வந்துட்டான்னு சொன்னா அவன் தோத்துட்டான்னு அர்த்தம்! ஆனால் சாலையோர கடைகளுக்கு வந்த பின்பு தான் வென்றது மெதுவடை! கமல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பே தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது மெதுவடை!

இன்றும் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாலையோரக் கடைகளில் மட்டும் தினசரி தயாரிக்கும் வடைகளின் எண்ணிக்கை நிச்சயம் 2 இலட்சத்தை தாண்டும்! இந்தளவு எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு வடை சுட தற்போது போட்டிக்கு சிலர் வந்துவிடாலும் முதன் முதலில் இந்த சாதனையைச் செய்தவன் நம்ம மெதுவடையே!

எலந்தைப் பழம் முதல் மாம்பழம் வரையான சைஸில் மக்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப ₹1 முதல் ₹12 வரை வடைகள் இன்றும் மதுரையில் உண்டு! கர்நாடகாவில் மட்டுமே சாலையோரக் கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உளுந்துடன் எந்தவித மாவையும் கலப்படம் செய்யாமல் அற்புதமாக வடை சுட்டுத் தருகிறார்கள்!

தமிழ்நாட்டில் எல்லாம் அசால்டாக மைதா, கார்ன், அரிசி மாவுகளை உளுந்துடன் கலந்து விடுவார்கள்! இது உளுந்துவடை பரம்பரைக்கு செய்யும் குலத் துரோகமாகும்! FTV மாடல்கள் போல கர்நாடக வடைகளை எல்லாம் பார்த்தவுடன் பிடித்துவிடும்! அந்த அளவுக்கு பஞ்சு போன்ற மென்மையும், மொறு மொறுப்பும் கலந்திருக்கும்!

நம்ம ஊரில் அப்படித் தேடினால் கூட கிடைக்காது! சில கர்நாடகக் கடைகளில் எல்லாம் ஹாலோ மெதுவடை கிடைக்கும்! வடை பார்க்க buffயாக இருக்கும் உட்புறம் அதிக மாவு இருக்காது! கடித்தால் வடகம் போல நாவில் கரையும்! மெதுவடை என்றால் அந்த மாவில் நிச்சயம் வெங்காயம், மிளகு, பச்சை மிளகாய் இருக்கவேண்டும்!

அதிலும் சின்ன வெங்காயம் இருப்பது சாலச் சிறந்தது பெங்களூரில் வெஜிடபிள் மெதுவடை என்னும் ஒரு வகை இருக்கிறது! சன்னமாக வெட்டப்பட்ட,இஞ்சி, தேங்காய் துண்டுகள், கேரட், கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டு அட்டகாசமாக டோநட் அளவில் இருக்கும்! நித்தியானந்தா ஆசிரம் இருக்கும் பிடதியில் இதை ருசித்துள்ளேன்.

பொதுவா இந்த மெதுவடைக்கு தேங்காய் சட்னி தான் சிறந்த காம்பினேஷன் என்றாலும் தக்காளி வெங்காயம் கார சட்னி, இஞ்சி மிளகாய் சட்னி, மல்லி புதினா சட்னி என பலவகை சட்னிகளை ஜோடியாக தந்த பெருமை மதுரைக்கு உண்டு! திண்டுக்கல் மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு கார குருமாவை கண்டுபிடித்து தந்துள்ளனர்.

அரைத்துவிட்ட சாம்பார், கோசுமல்லி, கொத்சு போன்ற குழம்பு வகைகள் இதற்கு சிறந்த ஜோடிகளாகும்! இதில் ஸ்பெசல் உளுந்து வடைன்னு ஒண்ணு இருக்கு உளுந்து மாவை கொஞ்சம் நறநறப்பா இறுக்கமா அரைச்சு வெஜிடபிள்ஸ் போட்டு அதிரசம் மாதிரி அகலமாக தட்டி மசால் வடை போன்ற ஸ்டெக்ச்சரில் போடுவாங்க!

அதை சூடாக ருசிப்பது தெய்வ லெவல்! கேரளாவில் பெரிய ஓட்டல்களில் வடை நன்றாக இருக்கும், சாலைக்கடைகளில் அதில் மைதா மாவைக் கலந்து சேட்டன்கள் சேட்டை செய்திருப்பார்கள்! ஒரு முறை ஆந்திராவில் மெதுவடையை கண்டதும் திகிலானேன் ஒரே ஒரு வடைக்குள் கரையோரத்தில் படுத்திருக்கும் முதலைகள் போல..

ஆறேழு சிவப்பு மிளகாய்கள் பொதிந்து கிடந்தன! “பின்னால்” வரும் விளைவுகள் என் கண்களிலேயே (தெ)எரிந்தது! உளுந்துவடை சூடாகவே சாப்பிட வேண்டிய ஒரு பொருளாகும்! அதை லேசாக சட்னியில் ஊறவிட்டு சூடு ஆறும்முன் சாப்பிடவேண்டும்! நம்ம திண்டுக்கல் குருமாவுடன் சூடான வடைகள் சாப்பிடுவது என்றால்..

அசால்டாக 1 டஜன் வடைகள் சாப்பிட்ட காலமெல்லாம் கண் முன் வந்து போகிறது! யானைக்கல் ஆசீர்வாதம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர், பெரியார் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வாசல் கேபிஎஸ் எதிரில், முனிச்சாலை, மேலமாசி/ வடக்கு மாசி வீதி சந்திப்பு என வடைகளை நாங்கள் வேட்டையாடி விளையாடியது எல்லாம் பரவசமே!

இந்த உளுந்திலேயே போண்டா, சீயம், கார போண்டா என மரு வைத்து மெதுவடை வகைகள் மதுரை பக்கம் கிடைக்கும்! சூடானஇட்லி/ சூடான குழைவான கிச்சடி/ சூடான உப்புமா/சூடான நெய் வெண் பொங்கலோடு, சூடான சாம்பாரில் ஊறிய மெதுவடையை சூடாகவே சாப்பிடுவதை நினைத்தாலே.. ஆஹா இதல்லவோ…🍩

No comments:

Post a Comment