Saturday 31 May 2014

பந்திக்கு முந்துங்க...

ஒரு சாப்பாட்டு சரித்திரம்..!

நல்ல ரசனை என்பது ஒருவரின் உணவிலிருந்து தான் தொடங்குகிறது.! நல்ல உணவுப் பிரியர்கள் பல துறைகளில் ரசனை மிக்கவராய் இருப்பார்கள் என்பார்கள்..! நானும் ஓர் சாப்பாட்டுப் பிரியன்.. எனது தந்தையின் தொழிலும் ஓட்டல் தொழிலே என் தம்பியும் இந்தத் தொழிலில் தான் உள்ளார்.. எனக்கும் அதில் ஆர்வமுண்டு..!

ஆனால் என் தொழில் அவ்வாறு அமைய வில்லை.. ஆனால் ஊர் ஊராக சுற்றி பிறகு உலகம் முழுவதும் சுற்றி வித விதமான உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் உணவு ரசனைக்கு மதுரை வாழ்க்கையும் ஒரு மிக முக்கிய காரணம்..! அப்போதே நல்ல உணவுகள் பற்றி எழுத வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை அது இப்போது நனவாகியுள்ளது..!

தமிழகத்தின் சிறந்த உணவுக் கடைகள் & அங்கு கிடைக்கும் உணவுகளின் சிறப்பு பற்றி எழுதப்போறேன்னு சொன்னதும் ஆதரிச்ச நண்பர்களுக்கு முதலில் நன்றி.. அதே நேரம் இதப் பத்தி நிறைய பேரு எழுதி இருக்காங்க..அவங்க எழுதாததை நீங்க என்ன புதுசா எழுதப் போறிங்கன்னு கேட்பவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்..!

காதல் பொது தான் அதை கதையா வச்சுகிட்டு நிறைய பேரு படம் எடுக்கலியா.! சாப்பாடும் அப்படித் தான் என்னுடைய கோணத்துல நான் ருசித்த உணவுகளை என்னுடைய ரசனைய உங்க கிட்ட பரிமாறப் போறேன்... இதுக்கு முன்னாடி எழுதினவங்க அவங்க அனுபவத்தை எழுதி இருப்பாங்க..அதுக்கு இன்னொரு முகம் இருக்கலாமில்லையா.! 

அது தான் இந்த சாப்பாட்டு சரித்திரம்! இந்த கூகுள் காலத்திலயும் எந்த ஊருக்கு போனாலும் "நல்ல சாப்பாட்டுக் கடை எங்க இருக்கு"ன்னு சக மனுஷனை தான் கேக்குறோம் அதை கூகுளில் தேடுவதில்லை.. ஏன்னா சாப்பாடு மட்டும் தான் மனிதன் சக மனிதன் பேச்சை நம்பி போகிற இடம்.. அப்படி நான் போன இடத்துக்கெல்லாம் உங்களையும் கூட்டிட்டு போறேன்.. 

இங்க கிடைக்குற சாப்பாடெல்லாம் சரியான நேரத்துக்கு போகலைன்னா தீர்ந்திடும்... சீக்கிரமா வாங்க போகலாம்... ஏன்னா பந்திக்கு முந்தணுமில்ல...!



டிவிட்டுறள்கள்...!

பதிவிட்ட டிவிட்டுறள்கள்....

#டிவிட்டுறள் - 1

குடி இனிது புகை இனிது என்பர் குடிமக்கள்

வெகுகாலம் வாழா தவர்.

#டிவிட்டுறள் - 2

கிணற்றில் விழுந்த கல்லைப்போல் மூழ்கடிக்கும்

சினத்தில் உதிர்த்த சொல்.

#டிவிட்டுறள் - 3

முதுகுக்கு பின்நின்று பேசுதல் எந்நாளும்

கொலையினும் கொடிய செயல்.

#டிவிட்டுறள் - 4

ஆத்திரத்தில் எடுக்கும் முடிவது;தந்திடுமே

ஆறாத புண்ணின் வலி.

#டிவிட்டுறள் - 5

நட்புக்கு கடனளித்து செய்கின்ற உதவி

அன்றே மறத்தல் நலம்.

#டிவிட்டுறள் - 6

முன்சென்று கேட்கும் மன்னிப்பு உன்வாழ்வில்

பின்னின்று உயர்த்தி விடும்.

 #டிவிட்டுறள் - 7

பிறர்க்குதவும் நற்குணமும் பெருஞ்செல்வம்;அச்செல்வம்

மானிடர்க்கு எல்லாம் தேவை.

 #டிவிட்டுறள் - 8

பெருங் கள்வனையும் நம்பலாம்; நம்பாதே

துரோகம் செய்த நட்பை.

#டிவிட்டுறள் - 9

கோபம் அடக்கக் கற்பவர் தம்வாழ்வில்

சோகம் விலகிடுமே சிறப்பு.

#டிவிட்டுறள் - 10

விட்டுக் கொடுத்து வாழ்கின்ற தெப்போதும்

கெட்டழிந்து போவ தில்லை.

#டிவிட்டுறள் - 11

பிறர்பற்றி பழிபேசும் குணமிருப்பின்;வெறுத்திடுவாள்

பெற்றத் தாயும் உனை.

#டிவிட்டுறள் - 12

முகத்தில் புன்னகையும் அகத்தில் நற்குணமும்

நிகரில்லா செல்வம் உனக்கு.

#டிவிட்டுறள் - 13

சோம்பலில் தள்ளிவைத்த பணிகள் எப்போதும்

சோகத்தை அள்ளித் தரும்.

#டிவிட்டுறள் - 14

பொருத்தம் இல்லா வார்த்தை உதிர்ப்பின் 

வருத்தம் வாசல் வரும்.

#டிவிட்டுறள் - 15

போதையில் செலுத்திடும் வாகனம்;விரைந்து

சேர்த்திடும் இறைவ னடிக்கு.

#டிவிட்டுறள் -16

பூக்கும் காய்க்கும் செடிகளில் எந்நாளும்

பூக்காதே வெள்ளிப் பணம்.

#டிவிட்டுறள் - 17

சீட்பெல்ட் அணியாது செல்கின்ற பயணம் 

சீட்தருமே எமன் உலகிற்கு.

#டிவிட்டுறள் - 18

பொன்சேமிக்க மறப்பினும் குற்றமில்லை பெருங்குற்றம்

மின்சேமிக்க மறப்பது இன்று.

 #டிவிட்டுறள் - 19

உலகம் தகித்து கொதிப்பது தடுக்க 

மரங்கள் வளர்ப்ப தறிவு.

#டிவிட்டுறள் - 20

நன்னூல்கள் படிக்காது வாழ்கின்ற வாழ்வு

நல்லறிவை மறைத்து விடும்.

#டிவிட்டுறள் - 21

பல்சரோ ஹோண்டாவோ உனதெனினும்;எந்நாளும்

ஹெல்மெட்டே காக்கும் தலை.

#டிவிட்டுறள் - 22

முதலை வாய்க்குள் சென்றார்போல் திரும்பாதே

உறவிற்கு கொடுத்த கடன்.

 #டிவிட்டுறள் - 23

மின்சிக்கனம் என்றும் உடனிருந்தால் மின்வெட்டை

காணலாம் கல் வெட்டில்.

#டிவிட்டுறள் - 24.

சீரியல்பேய் பிடித்தாட்டும் மாந்தர் தம்வாழ்வு

சீரழிந்து சிதறி விடும்.

#டிவிட்டுறள் - 25

பிறர்க்கு கண்மூடி ஜாமீனேற்பின்; நமக்கு

ஜாமீன் நாளை வரும்.

#டிவிட்டுறள் - 26

எல்லா விளக்கும் விளக்கல்ல சிறப்பான

சி.எப்.எல் விளக்கே விளக்கு.

#டிவிட்டுறள் - 27

மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால

நலம் வளர்ப்போரெனச் சொல்.

#டிவிட்டுறள் - 28

மனைவி சொல்லே நலமென்பார்;அவர்வாழ்வு

சிறக்குமே சிக்கல் இன்றி.

#டிவிட்டுறள் - 29

சிக்னலை மதியாதோர் வாகனம் என்றென்றும்

சிக்கலை சேர்த்து விடும்.

#டிவிட்டுறள் - 30

ஏழையின் பசிதீர்க்க பேசுகின்ற பொய்யுனக்கு

ஏற்றத்தை தந்து விடும்.

#டிவிட்டுறள் - 31

முறையின்றி முளைத்திட்ட முகநூல் நட்பு

துயரத்தில் முடிந்து விடும்.

#டிவிட்டுறள் - 32

வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை

கட்டிப் போட்டு விடும்.

#டிவிட்டுறள் - 33

தாய்மொழியில் படிப்பதன் சிறப்பு எந்நாளும்

தாய்ப்பால் குடிப்பதற்கு இணை.

#டிவிட்டுறள் - 34

சிரித்த முகத்தோடு பழகுவோர் என்றும்

சிறப்பாய் வாழ்வது உறுதி.

#டிவிட்டுறள் - 35

மிஸ்டுகால் தருவது லவ்வரெனில்; விரைந்து

டாப்-அப் செய்யெனப் பொருள்.

#டிவிட்டுறள் - 36

மூத்தோர் சொல்கேட்டு வாழ்கின்ற வாழ்க்கை

முன்னேற்றம் தருமே நமக்கு.

#டிவிட்டுறள் - 37

எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்

நிலத்தடி மண் வளத்தை.

#டிவிட்டுறள் - 38

மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்

மரங்களை அழிப்பதன் பரிசு.

#டிவிட்டுறள் - 39

உள்ளுக்குள் விஷம் வைத்து;நாவினிக்க

பேசுவார் நட்பை விலக்கு.

#டிவிட்டுறள் - 40

சம்சாரமிழந்த முதியவன் போல் தள்ளாடும்

மின்சாரம் சேமிக்காதோர் வாழ்வு.

#டிவிட்டுறள் - 41

எரிபொருள் சிக்கனம் மறந்தால்;எதிர்காலம்

ஏமாற்றம் தந்து விடும்.

#டிவிட்டுறள் - 42

சாலைவிதி எல்லாம் மதித்திடுவோர் தலைவிதி

இன்பத்தால் எழுதப் படும்.

#டிவிட்டுறள் - 43

ஐந்தறிவு என்பது யாதெனில் ; ஒருவன்

சினத்தோடு செய்யும் செயல்.

#டிவிட்டுறள் - 44

தன்மொழி நேசிக்கா மனிதன் இவ்வுலகில்

கண்விழி அற்றவன் ஆவான்.

#டிவிட்டுறள் - 45

நம்மொழி நலமாய் வெகுகாலம் வாழ்ந்திட

அம்மொழியில் பேசுவ தழகு.

#டிவிட்டுறள் - 46

அலுவலில் உறங்கும் ஒருவன் எந்நாளும்

அடைவதில்லை வெற்றிப் படி.

#டிவிட்டுறள் - 47

சிக்னலை மதியாதோர் வாகனம் என்றும்

சிக்கலை சேர்த்து விடும்.

#டிவிட்டுறள் - 48 

புத்தகம் படிப்பது பரவசம் அஃதென்றும்

காட்டிடுமே புது உலகு.

#டிவிட்டுறள் - 49

தேவையின்றி பயன்படுத்தும் மின்சாரம் குறைப்பது

தேனாய் இனித்து விடும்.

#டிவிட்டுறள் - 50

மொழியே தன்னுயிரென வாழ்வோர் என்றென்றும்

இழிவாய் போனது இல்லை.

#டிவிட்டுறள் - 51

பொறாமைக் கண்கொண்டு பார்த்தால் நல்லவை

நான்கும் தெரியா துனக்கு.

#டிவிட்டுறள் - 52

அஞ்சாதவர்க்கு சாவென்பது ஓர்முறை;அஞ்சுவோர்

வாழ்வில் தினந்தினம் சாவு.

#டிவிட்டுறள் - 53

பன்மொழி அறிஞனாய் இருந்தாலும் பழித்திடுவார்

தாய்மொழி தெரியா தவனை.

#டிவிட்டுறள் - 54

பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை

நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.

#டிவிட்டுறள் - 55

தாய்மொழியில் பிழையாய் எழுதுவது என்றும்

பெற்றத்தாயை உதைப்பது போல்.

#டிவிட்டுறள் - 56

வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே

விழுதுகள் வீழுகின்ற மரம்.

#டிவிட்டுறள் - 57

நூலறிவின்றி பெறுகின்ற பட்டம் எப்போதும்

நூல் அறுந்த பட்டம்.

#டிவிட்டுறள் - 58

கண்கூசும் வாகன விளக்கொளி நம்வாழ்வை

இருளில் தள்ளி விடும்.

#டிவிட்டுறள் - 59

பிறமொழியை கற்பது தவறில்லை எப்போதும்

தாய்மொழியில் கற்பது இனிது.

#டிவிட்டுறள் - 60

மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்

வளர்த்து செழிக்க விடல்.

#டிவிட்டுறள் - 61

முகத்துக்கு நேராக உண்மையைச் சொல்பவர்

முகநூலில் கிடைப்ப தரிது.

#டிவிட்டுறள் - 62

பெரியோர்க்கு தந்திடும் மதிப்பு எந்நாளும்

பெருமையைத் தரும் நமக்கு.

#டிவிட்டுறள் - 63

மிதவேகமாய் செலுத்திடும் வாகனத்தில் எப்போதும்

இதமாக அமைந்திடும் பயணம்.

#டிவிட்டுறள் - 64

பிறமொழி ஆதிக்கம் எந்நாளும் நம்மொழியின்

அழகை அழித்து விடும்.

#டிவிட்டுறள் - 65

மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி

சாய்ப்பதும் ஒன்றான செயல்.

#டிவிட்டுறள் - 66

புத்தகமே உயிர்த் தோழன் என்பாருக்கு

புவி எங்குமே சிறப்பு.

#டிவிட்டுறள் -67

மெய்யான காதல் மணக்குமே;நெய்யோடு

சேர்ந்த சோற்றைப் போல்.

#டிவிட்டுறள் - 68

பண்பும் பணிவும் உடனிருந்தால்;எப்போதும்

பறித்திடலாம் வெற்றிக் கனி.

#டிவிட்டுறள் - 69

பண்டிதனாக படிப்பது நன்று அதனினும்

பண்படப் படித்தல் நன்று.

#டிவிட்டுறள் - 70

சாட்டிலே செய்கின்ற சேட்டைகள் பின்னாளில்

சாட்டையாய் மாறி விடும்.

#டிவிட்டுறள் - 71

நண்பனின் துன்பத்தில் நாம்செய்யும் உதவி

நட்பை செழிக்க விடும்.

#டிவிட்டுறள் - 72

பிறர்க்குதவ பணமில்லாத போதும் உதவுகின்ற

மனம் இருப்பது சிறப்பு.

#டிவிட்டுறள் - 73

வருங்காலம் உணராது வீணாக்கும் தண்ணீர்

உலகுக்கு செய்யும் துரோகம்.

#டிவிட்டுறள் - 74

புத்தகம் படிப்பது அருந்தவம் படிக்காதோர்

உயிர் வாழும் சவம்.

#டிவிட்டுறள் - 75

குண்டுபல்பு எரிகின்ற வீடு உலகத்தின்

பசுமையை எரித்து விடும்.


#டிவிட்டுறள் -76

பள்ளியிலும் கற்காத நற்பாடங்கள் பல

புத்தக வாசிப்பு தரும்.

#டிவிட்டுறள் -77

குறைவாய் பயன்படுத்தும் மின்சாரம் நாட்டிற்கு

நிறைவாய் வளத்தை தரும்.

#டிவிட்டுறள் - 78

ஈசிஆர் செல்கின்ற காதலெல்லாம் சிலநாளில்

ஈசியாய் கழன்று விடும்.

#டிவிட்டுறள் -79

லைக்குக்கு எழுதும் பதிவெல்லாம் முகநூலில் 

வெகுகாலம் நிலைக் காது.

#டிவிட்டுறள் - 80

பிறரை எழுதத்தூண்டும் எழுத்தே முகனூலில்

நல் எழுத்து ஆகும்.

#டிவிட்டுறள் - 81

தாய்மொழியை பாதுகாத்து வைப்பதே எதிர்கால

தலைமுறைக்குச் செய்யும் சேவை.

#டிவிட்டுறள் -82

நன்னூல்கள் நம் வாழ்வில் என்றென்றும்

கற்றதை மெருகு ஏற்றும்.

#டிவிட்டுறள் - 83

துளித்துளியாய் சேமிக்கும் தண்ணீரும் பின்னாளில்

துடைத்திடும் நம் கண்ணீர்.

#டிவிட்டுறள் -84

மழைநீர் சேமிக்கா மனிதவாழ்வு எப்போதும்

மகிழ்வாய் இருப்ப தில்லை.

#டிவிட்டுறள் - 85

மழைநீர் சேமிப்பு தொட்டியில்லா இல்லம்

மண்ணுள்ள பாலை நிலம்.

#டிவிட்டுறள் - 86

நீருக்கு விலைவைத்த உலகம் பின்னாளில்

போர் வந்தே கெடும்.

#டிவிட்டுறள் - 87

நுகத்தடியில்லா வண்டி போலாகும் வாழ்வு

நிலத்தடி நீர்வளம் இன்றி.

#டிவிட்டுறள் - 88

ஆற்றில் அள்ளும் மணல் பின்னாளில்

சோற்றில் வந்து விழும்.

#டிவிட்டுறள் - 89

அரிசி விளைந்த நிலமெல்லாம் வீடானாலங்கு 

அழிவு வந்து தங்கும்.

#டிவிட்டுறள் - 90

வறுமையிலும் வற்றாத நேர்மை உள்ளோருக்கு

வாழ்வினில் சேரும் பெருமை.

#டிவிட்டுறள் - 91

மெய்யை எளிதில் நம்பா உலகமிது

பொய்யை எளிதில் நம்பும்.

#டிவிட்டுறள் - 92

கல்வியை விற்பவர் இவ்வுலகின் அறிவுப்

பயிரிடை விளைந்த களைகள்.


#டிவிட்டுறள் - 93

விலைக்கு கல்வியை விற்பது கொலைக்கு

ஈடான செயல் ஆகும்.


#டிவிட்டுறள் - 94

துயரில் உதவும் நண்பன் உனக்கு

நேரில் வந்த தெய்வம்.


#டிவிட்டுறள் - 95

காட்டைக் காடாய் கருதாது வாழ்ந்தால் 

வீட்டுக்கு வரும் விலங்கு.


 #டிவிட்டுறள் - 96

போனால் வராத காலத்தை போற்றிப்

பேணுதல் நல் அறிவு.


#டிவிட்டுறள் - 97

கோபத்தால் நன்மை ஏதுமில்லை படுவோர்க்கு

பாபமே தொடர்ந்து வரும்.


#டிவிட்டுறள் - 98

இடவலமாய் தலையாட்டா தலைவன் வாழ்வு

தடம்மாறி போவது இல்லை.


#டிவிட்டுறள் - 99

இல்லறத்தில் நல்ல புரிதல் இருந்தாலது

கல்லறை வரை இனிது.


#டிவிட்டுறள் - 100

உணவளித்த நிலத்தில் கட்டிடும் வீடென்றும்

உலகை ஆக்கிடும் சுடுகாடு.


#டிவிட்டுறள் - 101

காட்டு விலங்கின் வாழ்விடமழிப்பது நாட்டு

மக்களின் நற்செயல் இல்லை.


#டிவிட்டுறள் -102

ஆராய்ந்து எடுக்கும் முடிவானது ஆதாய

வெற்றி தரும் நமக்கு.


#டிவிட்டுறள் - 103

சுற்றம் சுட்டிக்காட்டா குற்றத்தை தயங்காது

சுட்டுவது நல் நட்பு.


#டிவிட்டுறள் - 104

போராசை மிகுந்தவர் எந்நாளும் இவ்வுலகில்

பேராசை மிக்கவர் ஆவார்.


#டிவிட்டுறள் -105

உள்ளத்தில் நல்லெண்ணம் இருப்பின் வாழ்க்கை

பள்ளத்தில் என்றும் விழாது.


#டிவிட்டுறள் - 106

உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசுபவர்

உலகத்தின் பேரழகர் ஆவர்.


#டிவிட்டுறள் - 107

இறப்பிற்குப்பின் தரும் கண்தானம் நம்முடைய

பிறப்பிற்கு தரும் சிறப்பு.


#டிவிட்டுறள் - 108

உடல்தானம் தந்து உதவுவோர் எல்லாம்

உலகில் பிறந்த தெய்வம்.


#டிவிட்டுறள் - 109

கடையேழு வள்ளல்களும் ஈடில்லை ; குருதியைக்

கொடை தரும் நபர்க்கு.


#டிவிட்டுறள் - 110

மாற்று எரிபொருளுக்கு மாறாத வாழ்வு

தோற்று அழிந்து விடும்.


#டிவிட்டுறள் - 111

வறியவர் கல்விக்கு செய்கின்ற உதவி

நம்மை பெரியவர் ஆக்கிவிடும்.


#டிவிட்டுறள் - 112

மரங்கள் நட்டு வளர்ப்போரே இப்புவிக்கு

அறங்கள் செய்யும் மனிதர்.


#டிவிட்டுறள் - 113

பெருநகர் வாழ்வில் கரைந்து போனது

பெருமை குணங்கள் பல.


#டிவிட்டுறள் - 114

உறவுகள் எதிர்பார்த்து உதவும்  எந்நாளும்

எதிர்பாராது உதவுவது நட்பு.


#டிவிட்டுறள் - 115

மாறிவரும் உலகிற்கேற்ப மாறாத வணிகம்

தேறி விடுதல் அரிது.


#டிவிட்டுறள் - 116

பொருளுக்குத் தக்க விலைவைக்கும் வணிகம்

அருள் பெற்று வளரும்.


#டிவிட்டுறள் - 117

சொன்ன சொல் தவறாத மனிதர்க்கெல்லாம்

சொர்க்கத்து வாழ்வு கிட்டும்.


 #டிவிட்டுறள் - 118

உழைப்பால் சேர்த்த பணம் உனக்கு

என்றும் உயர்வைத் தரும்.


#டிவிட்டுறள் - 119

பணத்தால் வாங்க முடியாத பொருளையும்

குணத்தால் வாங்க முடியும்.


#டிவிட்டுறள் - 120

பொறுமையாய் செய்யும் செயல் எல்லாம்

பெருமை தரும் நமக்கு.


#டிவிட்டுறள் - 121

அனுபவங்கள் கற்பிக்கும் பாடம் போல்

ஆசானும் கற்பிப்பது இல்லை.


#டிவிட்டுறள் - 122

குழந்தைகள் முன்நாம் செய்யும் தவறுகள்

பிழையாய் அவரினை வளர்க்கும்.


#டிவிட்டுறள் - 123

கோபத்தின் உச்சத்தில் உதிர்க்கும் வார்த்தை

பாவத்தின் வாசலில் விடும்.


#டிவிட்டுறள் - 124

காதலில் களவென்பது உள்ளத்தை கவர்வதேயன்றி

உடலைக் கவர்வது இல்லை.


#டிவிட்டுறள் - 125

பதறாது செய்கின்ற செயலெல்லாம் நமக்கு

சிதறாது வெற்றியைத் தரும்.


#டிவிட்டுறள் - 126

துணிவோடு வாழ்வது பெரிதெனினும் வாழ்க்கை

பணிவோடு வாழ்வது நலம்.


#டிவிட்டுறள் - 127

உள்ளத்தை மகிழ்வாய் வைத்துக் கொள்வதே

உலகத்தில் இன்ப வாழ்வு.


#டிவிட்டுறள் - 128

போதுமென்ற மனமிருக்கும் மனித வாழ்வு

போற்றி புகழப் படும்.


#டிவிட்டுறள் - 129

அஞ்சாது பொய்யுரைத்து வாழ்பவர் நெஞ்சம்

அஞ்சியஞ்சி சாகும் தினம்.


#டிவிட்டுறள் - 130

நம்பியவர்க்கு செய்யும் துரோகம் நம்வாழ்வில்

நன்மையை நீக்கி விடும்.


#டிவிட்டுறள் - 131

ஆடைக்குள் புகுந்த தேளாய் உறுத்தட்டும்

அடுத்தவர் பொருள் நமக்கு.


#டிவிட்டுறள் - 132

மனிதன் நற்பெயர் எடுப்பதொன்றே இவ்வுலகில்

மங்காது இருக்கும் செல்வம்.


#டிவிட்டுறள் - 133

பணிந்து வாழ்வோர்க்கு துன்பம் இல்லையென

துணிந்து சொல்லி விடு.


#டிவிட்டுறள் - 134

தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனிதன்

தனித்து விடப் படுவான்.


#டிவிட்டுறள் - 135

செய்த உதவியை பிறரிடம் சொல்லாது

மனதிற்குள் வைப்பது அழகு.


#டிவிட்டுறள் - 136

பெண்ணைச் சமமாய் நடத்தி மதிப்போரே

அழகில் சிறந்த ஆண்.


#டிவிட்டுறள் - 137

பொய்யைக் காக்கும் செயலுன்னை பெரும் 

பொய்யர் ஆக்கி விடும்.


#டிவிட்டுறள் - 138

ஏற்றத் தாழ்வு பார்த்திட்ட நட்பென்றும்

ஏற்றம் பெற்றது இல்லை.


#டிவிட்டுறள் - 139

விலை கொடுத்து வாங்கிய புகழுனக்கு 

விரைந்து மறைந்து விடும்.


#டிவிட்டுறள் - 140

நண்பனின் தவறினை சொல்லாத நட்பு

நலங்கள் புரிவது இல்லை.



Friday 23 May 2014

அன்பு சிவனுக்கு..!

ருத்ர தாண்டவம்..

முகநூலில் எவ்வளவோ செய்திகள் நம்பும் படி உலா வந்து பிறகு அது வதந்தி என தெரியும்..! அது போல இந்த செய்தியும் இருக்காதா என்று என் மனம் ஏங்குகிறது... அன்பு சிவம் அண்ணே... நீங்க இதை படிச்சிகிட்டு தானே இருக்கிங்க..? சொல்லுங்கண்ணே...!

முதன் முதலில் கடந்த ஆண்டு சுபஶ்ரீ மோகன் ஏற்பாடு செய்த முகநூல் சந்திப்பில் தான் அறிமுகமானிங்க.. அதன் பிறகு நட்பு அழைப்பு நான் அனுப்பி நட்பானோம்.. பிறகு தமிழ் அரசி புத்தக வெளியீட்டு விழா, புத்தக கண்காட்சி என பல முறை உங்களை சந்தித்ததுண்டு..!

ரொம்ப சோகமான விஷயம் நான் சந்தித்த முகநூல் நண்பர்களில் உங்களுடன் மட்டும் தான் நான் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை... வாங்கண்ணே இப்ப போட்டோ எடுத்துக்கலாம்.. உங்கள் கவிதைகளால் எங்களை பல முறை தாலாட்டியுள்ளீர்கள்...!

இப்போ நீங்க தூங்கிகிட்டு இருக்கிங்க யார் தாலாட்டுவது..! முகநூலில்  ரசனையான கமெண்ட் செல்லமான வம்பிழுப்பு என மிக மிக நாசூக்காக உங்களை வெளிப்படுத்தி கொண்ட நீங்கள் இப்படி நாசூக்காக எங்களை பிரிந்து போனது ஏன்.?

செல்லியின் பதிவு பார்த்து இன்னும் ஒரு அதிர்ச்சி.. அவரைப்போலவே நானும் 3 மணிக்கு எழுந்துவிட்டேன் மெத்தையில் இருந்த செல்போன் கீழே விழ கையில் எடுத்ததும் அனிச்சையாக ஃபேஸ்புக் தேட ஆனந்த் ராமின்  பதிவில் இந்த துயரச் செய்தி..!

நான் கனவா என்றெல்லாம் கூட கிள்ளிப்பார்த்து கொண்டேன்... அப்போது தொலைந்த தூக்கமே.. ஏதோ வெறி பிடித்தது போல உங்கள் டைம் லைனுக்கு போய் உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.. சத்தமில்லாமல் அழுகிறேன் 6 மணி வரை இப்படி ...

என்னையும் அறியாமல் அதற்கு பின் கண்ணயர்ந்து.. 8 மணிக்கு விழித்தேன்.. இந்த விழிப்பு தான் மனிதன் உயிர் வாழ்வதை உணர்த்துவது.. இதையும் கூட ஒரு துயரக் கவிதையாக எழுதி சென்று விட்டு இருக்கிங்கன்னு இப்போ தான் புரியுது..!

குற்றாலம் முகனூல் சந்திப்புக்கு காரில் போகும் போது உள்பெட்டியில் வந்து அடடா நானும் வரமுடியலை ஐ மிஸ் தி ப்ரொக்ராம் என்சாய்ன்னு ஒரு செய்தி.. ஆனா இப்ப நாங்க இல்ல உங்களை மிஸ் பண்ணிட்டோம்.. அன்பு அண்ணே..!

ரத்தமும் சதையுமாக உலக வாழ்வில் உடலாக இருந்த நீங்கள் இன்று காலப் பெரு வெளியில் அரூபமாக கலந்து விட்டீர்கள்.. இது வரை எங்களுக்கு அன்பு சிவனாக மென் கவிதை தந்த நீங்கள்.. இன்று பிரிவு என்ற ருத்ர தாண்டவத்தை ஆடி தந்துள்ளீர்கள்..!


உங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு திராணி இல்லண்ணே.. அந்த கடவுள் அதை தர வேண்டுகிறேன்.. உங்கள் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்..!

நீங்கள் என்றும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள்..! மறக்க முடியாதுண்ணே.. "தம்பி வெங்கடேஷ் ஆறுமுகம் சுவற்றில் (wall) கலகலப்புக்கு பஞ்சமில்லை என்று எழுதினிங்க ஞாபகம் இருக்கா... இன்னிக்கு அது களையிழந்து கிடக்குண்ணே :-(

Saturday 17 May 2014

டெலி ஷாப்பிங் அரசியல்..!

தேர்தலில் வெற்றி பெறாத கட்சிகளுக்காக ஒரு டெலி ஷாப்பிங் நெட்வொர்க் துவங்கினால் எந்தெந்த கட்சிக்கு என்ன பொருட்கள் விற்கலாம்.. ஜாலியா ஒரு கற்பனை..

எலக்ஷன் ரன்னர்ஸ்.காம்

மல்டி பர்ப்பஸ் கை"க்குட்டைகள் : காங்கிரசுக்காகவே இத்தாலியிலிருந்து தருவிக்கப்பட்ட கைக்குட்டைகள்.. முக்காடு போல தலையில் போட்டுக் கொள்ளலாம், நீரை உறிஞ்சும் அற்புத ஃபார்முலாவில் தயாரானது என்பதால் பெருகும் கண்ணீரை ஈரம் தெரியாமல் ஒற்றி எடுக்கலாம், அசடு வழிந்தால் துடைத்துக் கொள்ளலாம், முகத்தில் கட்டிக் கொண்டு தொகுதிகளுக்குள் தைரியமாக நடமாடலாம்.. இரு புறமும் எலாஸ்டிக் இருப்பதால் நன்கு இழுத்து குடிசைகளுக்குள் கீழே விரித்து அமர்ந்து கொள்ளலாம்.. காவி,வெள்ளை,பச்சை ஆகிய மூவர்ணங்களிலும் கிடைக்கிறது.. இந்த மல்டி பர்ப்பஸ் கைக்குட்டைகளை உடனே பெற 44 44 44 44 என்ற எண்ணுக்கு மிஸ்டு"கால் கொடுங்கள்...

ஆத்மி டிஜிட்டல் ப்ரூம் : அர்விந்து & கோவினருக்காக தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் விளக்குமாறுகள்..! 48 நாளில் பிய்ந்து விடமால் நீண்ட காலம் உழைக்கும் வகையில் உறுதியான பைபர் இழைகளால் தயாரிக்கப்பட்டது.. யாராவது நம்மை தாக்கினால் இதனால் தடுக்கும் அதி நவீன ரப்பர் ப்ரூப் உள்ளது.. எதை எறிந்தாலும் தடுத்து விடும்.. அடிபடாமல் ஜெயிக்க உதவும் இந்த ஹை-டெக் விளக்குமாறுகளை உடனே நீங்கள் பெறுவதற்கு யாருக்கும் போன் செய்யவோ டெலிவரி சார்ஜ்ஜோ தரத் தேவையில்லை.... எல்லா ரயில்களிலும் ஆட்டோ நிலையங்களிலும் வாங்கலாம் அன்னா என்ற பெயர் உள்ளவர்களுக்கு 40% தள்ளுபடி உண்டு..!

சன் பிராண்ட் மேஜிக் பென் : கழகத்தினருக்காகவே கண்டு பிடிக்கப்பட்ட கலக்கல் பேனா.. விதவிதமான கடிதங்கள் எழுதக்கூடிய அற்புதப் பேனா.. கடிதம், கதை வசனம், வாழ்த்து, அறிக்கை, போன்றவற்றை, நெஞ்சை உருக்கும் அளவிற்கு எழுதும் புரொக்ராம் செய்யப்பட்ட பேனா... தண்ணீரில் தூக்கி எறிந்தாலும் உழைக்கும் வாட்டர்ஃப்ரூப் பேனா..! அதீத மெமரி சிப் பொருத்தப்பட்டுள்ள பேனா..ஆகவே எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்காது.. ஒரு முறை இங்க் போட்டுவிட்டாலும் போடாவிட்டாலும் எதைப்பற்றியும் கவலைப்படாது அடுத்த 5 ஆண்டுகளுக்கு எழுதும் மேஜிக் பேனா..நீண்ட அனுபவம் பெற்ற கம்பெனியின் தயாரிப்பு என்பதால் நம்பி வாங்கலாம்.. எந்தத் தோல்வியையும் அனாசயமாக தாங்கும் இந்த ஸ்ட்ராங்கான அற்புதப் பேனாவை நீங்கள் உடனே பெற 00 00 00 00 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுங்கள்...

முரசு கூலிங்கிளாஸ்கள் : கேப்டன் அணிக்காக தயாரான.. ஹை கூல் கிளாஸ்கள்.. சிவந்த கண்களை மட்டுமின்றி கண்ணீரையும் மறைக்கும் டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டுள்ளது.. 14 விதமாக இதனை அணிந்து கொள்ளலாம்.. எவ்வளவு கோபம் இருந்தாலும் பிறருக்கு தெரியாது... இதற்குள் இருக்கும் மினி உள்புற ஸ்கிரீனில் வேட்பாளர் பெயர், தொகுதி பெயர் டிஸ்ப்ளே ஆவதால் எந்த தொகுதியிலும் யாருடைய உதவியும் இன்றி பெயரைச் சொல்லி அசத்தலாம்... கையை வேகமாக ஓங்கினால் இதில் உள்ள சென்சார்கள் விழித்து அலாரம் அடிப்பதால் கீழே உள்ளவர் அடி படாமல் நகர்ந்து கொள்ளலாம்.. அடிப்பது அலாரம் மட்டுமே என்பது அணியினருக்கு ஆறுதல் தரும்.. ஆண்கள் அணியும் கண்ணாடிக்கு ஒரு பெண் அணியும் கண்ணாடி இலவசம் என்பதால்.. அண்ணியாருக்கும் பயன்படும்.. அதிக கூலிங் இருப்பதால் கோபத்தையும் கண்ட்ரோல் செய்யும் கன்ணாடி இது..இந்த கூலிங்கிளாசை நீங்கள் உடனே பெற 14 00 14 00 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்..!

டைகர் ஹெல்த்தி டானிக் : புரட்சி அண்ணன்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட டானிக்.. யாழ்ப்பாணக் காடுகளிலிருக்கும் அரிய வகை மூலிகைகளால் தயாரான டானிக்.. இரண்டு ஸ்பூன் குடித்தால் மணிக்கு 10 கிலோமீட்டர்கள் மைலேஜ் கொடுப்பதால் புத்துணர்வோடு நடக்கலாம்.. எந்த சோகத்தையும் ஜீரணமாக்கும் சக்தி வாய்ந்தது.. உணர்ச்சிவசப்படாமல் சாப்பிட வேண்டியது முக்கியம்.. உலக சரித்திரங்கள், கிரேக்க புராணங்கள், கியூபா புரட்சி, ருவாண்டா எழுச்சி போன்ற உலக சரித்திரங்களை இதை குடித்துவிட்டு படித்தால் சுலபமாக மனப்பாடமாகி விடும்...உலகெங்கும் கிடைக்கும் இந்த டானிக் விருதுநகரில் மட்டும் கிடைக்காது... பல முறை மிஸ் ஆனதால் இதனை யாருக்கும் மிஸ்டுகால் கொடுக்காமல் நடந்து வந்தே வாங்கிக் கொள்ளலாம்.! எல்லா பம்பரக் கடைகளிலும் கிடைக்கும்..!

ரெட் பிகி பேங்க் : தோழர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட டெக்னிக்கல் உண்டியல்கள்.. பீரோ போன்ற வடிவமைப்பில் இருக்கும்.. இது பணம் சேர்க்கும் உண்டியல் அல்ல..  இதில் உள்ள லேசர் ஒளி சிவப்பு நிறத்தில் அடிக்கும்... எந்த கட்சி ஆதரவு தருகிறதோ அந்த கட்சி ஆபிசின் கதவில் அடித்தால் அப்போது அது பச்சையாக மாறிவிடும்.. இதனால் கதவடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.. தமிழகத்தில் பெண்களுக்கு முன்பு பிடித்த இந்த உண்டியல்.. மேற்கு வங்க பெண்களுக்கு எப்போதும் பிடிக்கவே பிடிக்காது... இது கையிலிருப்பது அடுத்த தேர்தலுக்கு நிதி வசூலிக்க என்று பிறர் நினைத்துக் கொண்டிருக்க கூட்டணி யார் முடிவு செய்வது என்பதை இந்த பிகி பேங்க் தீர்மானிக்கும்.. இந்த லேசர் பிகி பேங்கை நீங்கள் உடனே பெற 19 19 19 19 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் தராமல் டயல் செய்து பேசவும்..!







Sunday 11 May 2014

குற்றாலக் குளியல் புராணம்..!

குற்றாலக் குளியல் புராணம்...!

குற்றால அருவிகளில் குளிப்பது எப்படி...? ஏய்யா குளிக்கக் கூடவா சொல்லித்தருவாங்கன்னு கேக்குறிங்களா..! ஆமாங்க அருவிகளில் குளிப்பது ஒரு கலை..! ஏதோ இந்த முகநூல் மீட்டுக்கு போய்ட்டு குளிச்சி கண்டுபிடிச்சு பீத்திக்கறதுக்காக சொல்லலை.

எனக்கும் குற்றாலத்திற்கும் 20 ஆண்டுகள் தொடர்பு இதில் கடந்த ஆண்டு சீசனுக்கு மட்டுமே நான் இங்கு வரவில்லை எப்படி பார்த்தாலும் வருடத்திற்கு 5 அல்லது 6 முறை நான் போகும் இடம்.. கிட்டத்தட்ட 100 முறை வந்திருப்பேன் நூற்றுக்கணக்கான முறை எல்லா அருவிகளிலும் குளித்த அனுபவம் எனக்குண்டு..!

குற்றாலக் குளியல் பற்றி முன்பே முகநூலில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு.. ஆனால் சந்தர்ப்பம் இப்போது தான் கிடைத்தது.. நான் அருவிக் குளியல் காதலன்.. குறைந்தது 3 மணிநேரம் குளித்து கை கால்கள் வெளுத்து தோல் சுருங்கும் அளவுக்கு குளிப்பவன்.. இங்கு அதுக்கு ஊறல் குளியல் எனப் பெயர்.. 

என் இரு கண்களையும் கட்டிவிட்டு குற்றாலம் அருவிகளில் குளிக்கச் சொன்னால் அங்குள்ள பாறைகளை கைகளால் தொட்டு அது எந்த அருவி என்று என்னால் சொல்லமுடியும் அந்தளவிற்கு ரசித்து குளித்தவன்...! 

இன்றும் நான் சொல்லியபடி போய் குளித்தவர்கள் என்னிடம் அந்த அனுபவம் எவ்வளவு இனிமையானதாக மறக்க முடியாததாக இருந்தது எனக்கூறும்போது மீண்டும் நானே குளித்தது போல இருக்கும்.. அப்படி என்னய்யா இருக்கு அந்த குளியலில்ன்னு கேக்கறிங்களா..? அதுக்கு தான் நான் வழி காட்டப்போறேன்...! 

என்னது வழியா அருவியில எங்கய்யா வழி இருக்குன்னா கேக்குறிங்க..! யெஸ் மெயினருவியில் ஆர்ச் முடியும் இடத்துக்கு பின்னால அருவியில தண்ணிக் கொட்டுற இடத்தில் பின்புறம் நகர்ந்து ஒரு யூ டர்ன் அடித்தா ஒரு குழிவான உள்வாங்கிய பாறைச்சுவர் வரும் அதுக்கிட்ட போகணும்..! அதாவது...

நீங்க அருவிக்கு உள்ள இருப்பிங்க கொஞ்சம் கூட தண்ணி உங்க மேல படாது நீங்க தேவைன்னா தலையை நீட்டி குளிக்கலாம்... இங்கு தான் தண்ணியின் வேகம் மற்ற பகுதிகளை விட அதிகமா விழும்...அதாவது தலையை நீட்டினா தட தட வேகத்தில் அருவித்தண்ணி தலையில விழுகும் ஆசை தீர குளிச்சிட்டு...

தலையை பின்னுக்கு இழுத்துகிட்டா தண்ணியே விழுகாது நீங்க வெளியே உங்களுக்கு முன்னால குளிக்கிறவங்களை பார்க்கலாம் நிறுத்தி நிதானமா மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்திகிட்டு குளிக்கலாம்....!

அந்த பாறைகளில் கடவுள் சிற்பங்கள் குட்டி குட்டி சிலைகளாக இருக்கும் அழகையும் காணலாம் கிட்டத்தட்ட 7 சிலைகள் என்பது ஞாபகம்...இங்க போய் குளிக்குறவங்க 10 நிமிசத்துல குளிச்சது போதும்ன்னு வந்துட்டா ஒரு ராஜ்ஜியத்தை எழுதித் தருகிறேன்... 

அது மட்டுமில்ல எந்த அருவியா இருந்தாலும் செய்ய வேண்டியது முடிந்த அளவு தண்ணீர் விழும் இடத்திற்கு பின்புறமுள்ள பாறை அருகில் சென்று குளிப்பது சுகானுபவம்.. 

மெயினருவியில் குளிக்க போறவங்க இல்ல இது பத்தி தெரியாதவங்க ஒரு முறை குளிச்சுட்டு வந்து சொல்லுங்க... நான் சொன்னது உண்மையா இல்லியான்னு... ஓகே வாங்க அடுத்து ஐந்தருவிக்கு போகலாம்...

நாளை..ஐந்தருவி


குற்றாலக் குளியல் புராணம்...! Part - 2

Welcome back to ஐந்தருவி...

ஐந்தருவி...பொதிகை மலை மகள் தலைவிரித்து அந்தக் கூந்தல் 5 கிளைகளாக பிரிந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு தோற்றம்.. உலகிலேயே பெண்களுக்கு முதன் முதலாக 60% இடஒதுக்கிடூ தந்தது ஐந்தருவி தான்!!!!! ஆம் 5 கிளைகளில் 3 பெண்கள் குளிக்க..!

4 வது அருவியும் 5 வது அருவியும் ஆண்களுக்கு..! 5 வது அருவியை நம் வீட்டு ஷவர் குளியலுக்கு ஒப்பிடலாம்..! 4 வது அருவி தான் ஆக்ரோஷமானது.. 3 அருவிகள் பெண்களுக்கா.? என்ற ஆதங்கத்தில் பொங்கும் ஆணாதிக்க சிந்தனை அருவி அது..!

ஒரு நேரத்தில் அதிக பட்சமாக 12 பேர் நின்று குளிக்கும் குகை போன்ற அமைப்புள்ள அருவி  இந்த அருவியில் நேராக நின்று குளிப்பதை விட பக்கவாட்டில் நின்று குளிப்பது சுகம்.. நன்கு முன்னேறி ஒரு 2 அடி உயரம் பாறையில் ஏறினால் ஒரு பொந்து போல குழிவு இருக்கும்..!

அங்கு நின்று குளிப்பது மல்டி ஷவர் என்று தற்போது பணக்கார வீடுகளில் பிரபலமாகி இருக்கும் சொகுசான ஒரு ஷவரில் குளிப்பது போன்ற அனுபவத்தை அளிக்கும்.. நம் உடல் மீது தண்ணீர் சிதறல்கள் நாலாபுறமும் பீய்ச்சி அடிக்கும் அந்த சுகம்..அடடா..! 

பெண்கள் பக்கத்து அருவிகளில் ஒரு முறை குளித்ததுண்டு...! தினமலர் வாசகர் சுற்றுலாவில் இரவு 2 மணிக்கு தினமலர் முருகராஜ் சார், நான், பாலா, சிவா,சசி,பாஸ்கர் சகிதம் போய்குளித்தோம்.. இரவு நேரங்களில் பெண்கள் இல்லாத போது அங்கு குளிக்கலாம்..!

சென்னைக்கு போக விமான டிக்கெட் கையில் இருக்க அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுப்பார்களா..! அதே போலத்தான் 4 வது கிளை அருவியின் வேகத்தில் குளித்து விட்டு பெண்கள் பகுதி அருவியில் குளித்தது பூச்செண்டால் அடித்தது போல இருந்தது..!

2 நிமிடம் தான் மீண்டும் ஆண்கள் பகுதிக்கு வந்து விட்டோம்..! மீண்டும் அந்த ஆக்ரோஷத் தாக்குதல் மல்டி ஷவர் என அனுபவித்தோம்..இந்த வேகம் எல்லாம் நன்கு தண்ணீர் வரும் போது மட்டுமே..! குறைவாக தண்ணீர் வரும் காலத்தில் இந்த அனுபவம் கிடைக்காது..!

ஆக்ரோஷமான தண்ணீர் தாக்குதல்,ஷவர் அனுபவம்...இதெல்லாம் சரி.. உருட்டுக்கட்டை தாக்குதல் குளியல் தெரியுமா... அதுக்கு நாம செண்பகா அருவி போகணும், கிட்டத்தட்ட5 கிமீ மலை ஏறணும்.. ரெடியா இருங்க நாளைக்கு அங்கதான் போகப் போறோம்...!

நாளை...செண்பகா அருவி


குற்றாலக் குளியல் புராணம்...! Part - 3

ஓகே செண்பகா அருவி போக ரெடியா.. துண்டு,சோப்பு, ஷாம்பு, வாட்டர் பாட்டில்,ஸ்னாகஸ் எல்லாம் எடுத்துகிட்டிங்களா.! பாலிதீன் பைகள் வேண்டாமே! சிகரெட் குடிக்கிறவங்களே ஒரு அரை நாள் அதை தியாகம் செஞ்சிடுங்க,வாங்க போகலாம் செண்பகா அருவிக்கு..!

செண்பகா அருவி மெயினருவியின் தலைக்கு மேலே இருக்கும் அருவி.. செண்பக மரங்கள் அடர்ந்த இடத்தில இருப்பதால் இதற்கு செண்பகா அருவி எனப்பெயர்.. மலை மீது 3 கிமீ தூரம் ஏறவேண்டும்.. சிற்றருவி செல்லும் பாதையில் ஏறி சிற்றருவி கட்டணம் வசூலிக்கும்...

இடத்திற்கு பக்கவாட்டு பாதையில் நுழைந்து செல்ல வேண்டும்..அந்த பாதையின் ஆரம்பத்திலேயே மேலே போக அனுமதி இல்லை என்ற அறிவிப்பு இருக்கும் ஆனால் யாரும் உங்களைத் தடுக்க மாட்டார்கள்... அங்கிருந்துசில இடங்களில் செங்குத்தாகவும் ஏறும் 

சற்று கரடு முரடான பாதை..2 இடங்களில் படிக்கட்டுகள் ஏறவேண்டும் இதெல்லாம் ஒரு கி.மீ தூரத்திற்கு மட்டுமே.!பிறகு சமதளம் தான்..செண்பகாருவியில் இருந்து ஓடி வரும் நீர் ஒரு பெரிய தடாகம் போல் தேங்கி இருக்கும் இங்கு ஆனந்தமாகக் குளிக்கலாம்..!

இந்த தடாகம் தான்...அருவியாக மெயினருவியில் கொட்டுகிறது.. மேலே பாதுகாப்பாக நின்று கீழே மெயினருவியை பார்க்கும் வசதியும் உண்டு.. இதையெல்லாம் தாண்டி தான் செண்பகா அருவி..! 6அடி அகலத்தில் பால் போன்ற நீர் மொத்தமாக விழும் அருவி..!

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து அவ்வளவு கனத்தில் நீர் விழுவதே எப்படி இருக்கும் என யோசித்து பார்க்கவும்.. அந்த நீரின் வேகம் தாங்க முடியாது தான் அங்கு ஒரு ஆழமான தடாகம் உருவாகி உள்ளது.. நீர் நிறைந்த அந்த தடாகம் மிக அபாயகரமானது.. 

பாறைகள் நிறைந்த ஆழ்பகுதி அது ஒரு பெரிய காட்டெருமையே போய் சொருகிக் கொள்ளும் அளவிற்கு பாறை இடுக்குள் உள்ள தடாகம் அது.. அங்கு அந்த ஊர்க்காரர்கள் அனாசயமாக குதித்து குளிப்பார்கள். அருவியின் பக்கவாட்டு பாறைகளில் ஏறி சுமார்.....

20 அடி உயரத்தில் இருந்து பல்டி அடித்து குளிப்பார்கள் அவர்களுக்கெல்லாம் எங்கு பாறை இருக்கும் எனத் தெரியும் என்னதான் நீச்சல் தெரிந்தாலும் அருவி நீர் விழும் இடத்தில் குதித்து விடக்கூடாது உள்ளே இழுத்துவிட்டுவிடும்.. சரி ரொம்ப பயமுறுத்திவிட்டேன்..

இதெல்லாம் குதித்து குளிப்பவர்களுக்கு தான்.! தலை முழுக்க வழிய வழிய எண்ணெய் தேய்த்து இருந்தாலும் ஒரு நிமிடம் இந்த அருவியில் தலை வைத்தால் விளம்பரங்களில் வரும் பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும்..அவ்வளவு வேகம்.. அலாதி சுகமான குளியல்..

இந்த அருவியில் நீங்கள் தலைநிமிர்ந்து குளிக்க முடியாது.. அம்மா முன் நிற்கும் அமைச்சர்கள் போல் பணிந்து தான் குளிக்க வேண்டும்..அவ்வளவு வேகம் உருட்டுக்கட்டை அடி போல்.. இங்கு 10 நிமிடம் குளித்தால் உடல் வலி நூலாகப் பறந்துவிடும்..!

கவனமாக கம்பியைப்பிடித்து நின்று குளிப்பதும்..இடுப்பாடை இறுக்கமாக இருப்பதும் நல்லது இல்லாவிட்டால் அருவி வில்லன் உருவி விட்டு மானத்தை கப்பலேற்றிவிடுவான்.. ஷார்ட்ஸ் அணிந்தாலும் உள்ளே உள்ளாடை அணிய மறக்க வேண்டாம்..! 

பெண்கள் குளிக்க தனிப்பகுதி இருக்கின்றது ஆனால் பெண்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும்.. பெண்களை அழைத்துச் செல்பவர்கள் ஒரு குழுவாக இருப்பது நலம்.. ஆணும் பெண்ணும் மட்டும் செல்வது.... நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்கவும்..!

அரைமணிநேரக் குளியலுக்கு பின் செண்பகா தேவி அம்மனை தரிசித்துவிட்டு திரும்பலாம் காலை 7 மணிக்குள் கிளம்பிப் போய் மதிய உணவுக்கு திரும்புதல் நல்லது.. மதியம் கிளம்பாதீர்கள் இந்த ஆனந்தம் கிடைக்காது.. ஆபத்தானதும் கூட..!

வழியெங்கும் கொய்யாப்பழம், மாங்காய், கடலை, ஏன் ஆம்லெட்டுகள் கூட கிடைக்கும் கையில் உணவு எடுத்து செல்வது தான் சிறந்தது..தயவு செய்து காகிதத்தில் கட்டி எடுத்து செல்லவும் அல்லது கொண்டு செல்லும் ஸ்னாக்ஸ் கவர்களை திரும்ப எடுத்து வந்துவிடவும்..

இறங்குவதற்குள் களைத்து விட்டால் அப்படியே சிற்றருவியில் ஒரு குளியல் போட்டு ஃபிரெஷ்ஷாக இறங்கிவிடலாம்.. ஆனால் சிற்றருவி குளியல் எல்லாம் அருவிக் குளியலில் சேராது..அது பம்பு செட்டில் குளித்தது போலத்தான்.. ஆனால் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

சிற்றருவியில் குளிக்கமட்டும் 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. கட்டண குளியலறையில் குளித்தது போல இருக்கும்..புலியருவியும் இப்படித்தான்.. பாருங்க பேசிகிட்டே கீழே வந்துட்டோம்.. போய் சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்க நாளைக்கு..

பழைய குற்றாலம் போகலாம்...


குற்றாலக் குளியல் புராணம்...! Part - 4

பழைய குற்றாலம் குற்றாலத்திலிருந்து பாபநாசம் போகும் வழியில் இருக்கிறது..! இது தான் தற்போதுள்ள மெயின் அருவிக்கு முன்பு இருந்த குற்றாலம்.. பழைய சிவாஜி படம் ஒன்றில் இதன் அழகை காணலாம்... காமராஜர் ஆட்சிக்காலத்தில் சீசன் இல்லாத போது..

பாறைகளை தகர்த்து சமமாக்கி இந்த அருவியை பின்னுக்கு தள்ளிவிட்டார்கள்.. நல்ல சீசனில் தண்ணீர் வரத்து இருக்கும் போது மட்டுமே இங்கு ஆனந்தமாக குளிக்க முடியும்.. சுளீர்,சுளீர் என சாட்டை அடி விழுந்தது போல தண்ணீர் விழும்..! 

மெயினருவி செண்பகா அருவியில் குளிப்பதற்கும் இங்கு குளிப்பதற்கும் வேறுபாடு உண்டு.. வயதானவர்கள் குளிக்க ஏற்ற இடம்..அருவிக் குளியல் ரசிகர்கள் ஒரு முறை குளிக்கலாம்.. இங்கும் பாறை அருகில் நின்று குளித்தால் சுகமாக இருக்கும்.. சரி நண்பர்களே..

இன்னும் தேனருவி, பேயருவி, புது அருவி, கும்பாருட்டி அருவி, அகத்தியர் அருவி, பால் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி எனப்பல அருவிகள் இங்கு உண்டு.. ஆனால் குற்றாலம் என்றால் 6 அருவிகள் முக்கியம் அவை....

மெயினருவி,ஐந்தருவி,செண்பகா அருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி இந்த 6 தான் நீங்கள் முதலில் போக வேண்டிய அருவிகள்... இதில் சற்று அபாயகரமானது செண்பகா அருவி..மற்றவற்றில் எந்த பயமும் இல்லை.. இனி குளிப்பவர்களுக்கு சில டிப்ஸ்..

எந்த அருவியிலும் உணவு உண்டவுடன் குளிக்கக்கூடாது.. அதற்காக பட்டினி கிடக்கவும் வேண்டாம் மயக்கம் வரும்.. முதல் குளியலே எண்ணை தேய்த்து குளித்துவிடவும்... அல்லது கடைசி நாள் எண்ணை தேய்க்கலாம்... அடிக்கடி எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது..!

தயவு செய்து மசாஜ் செய்யாதீர்கள்.. அங்கு செய்யப்படும் மசாஜ் முறையானது அல்ல நரம்புகள் சுருண்டு கொள்ள வாய்ப்பு உண்டு...அருவியே நமக்கு மசாஜ் செய்து விட்டுவிடும்.. கையில் பாலிதீன் ஜிப் லாக் பைகள் வைத்துக்கொள்ளவும்.. உங்கள் மொபைல், கேமிரா, பணம் போன்றவற்றை நனையாமல் அது பாதுகாக்கும்... 

யாராவது ஒருவர் உடமைகளை காத்து இருக்க மற்றவர்கள் போய் குளித்து வருதல் நலம்... வெறும் துண்டு உடைகள் என்றால் பிரச்சனை இல்லை.. அருவியில் குளிக்கும் போது மூச்சு விட சிரமப் பட்டால் இரு கைகளையும் நல்ல வெயில் நேரத்தில் கண் கூசாது இருக்க வைப்பது போல நெற்றியில் வைத்துக் கொள்ளவும்... இப்படி நின்றால் 3 மணிநேரம் கூட நிற்கலாம்...!

எக்காரணம் கொண்டும் மது அருந்தி குளிக்கக் கூடாது..மது நரம்பை முறுக்கேற்றி இருக்கும் அச்சமயம் குளிப்பது மிக மிக ஆபத்தானது.. மூச்சுத் திணறல் கழுத்து எலும்பு உடைதல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்பு அதிகம்... ஆனால் நிறைய பேர் மது அருந்திவிட்டு தான் குளிக்கிறார்கள்.. அப்படி குளிப்பதாக இருந்தால்...

வேகம் அதிகமான நீரில் தலை வைக்க வேண்டாம்..அல்லது இப்படி செய்யுங்கள் நன்கு 1 மணி நேரம் குளித்த பின்பு மது அருந்தவும் பிறகு உணவு அதன் பிறகு 3 மணி நேர ஓய்வு பின் மீண்டும் இதேபோல தொடருங்கள்... எனவே மது அருந்தாமல் ஒரு முறை குளித்து பார்க்கவும்..!

நிறைய துண்டுகள் ஷார்ட்ஸ் எடுத்து வைத்து கொள்ளுங்கள், பெண்களுக்கு நைட்டிகள் மிகச்சிறந்தது.. தற்போது உள்ள நைட் பேண்ட் டாப்ஸும் கூட பெஸ்ட் தான்.. அருவியில் குளிக்கும் போது கொஞ்சம் அருவித் தண்ணீரை குடித்து விடுங்கள் ஜுரம் வராது..!

குளித்தவுடன் கப கப என பசிக்கும் பாருங்கள்..அப்போது சாப்பிட வேண்டும்.. குற்றாலத்தில் நல்ல உணவகங்கள் ஏதுமில்லை.. குறிஞ்சி ஓட்டல் எதிரில் உடுப்பி அக்ஷயா கொஞ்சம் நன்றாக இருக்கும்.. பெரிய உணவகங்களில் விலை அதிகம் சுவையும் இருக்காது..!

முடிந்தால் செங்கோட்டை அருகே பார்டர் கடையில் நாட்டுக்கோழி, காடைரோஸ்ட் பரோட்டா பிரமாதமாக இருக்கும் ஒரு பிடி பிடிக்கலாம்..சைவப்பிரியர்கள் தென்காசி விஸ்வனாதரை தரிசித்து விட்டு தென்காசியில் நல்ல உணவு சாப்பிடலாம்.. அங்கு நல்ல கடைகள் உண்டு..!

தென்காசி வெறும் 6 கி.மீ தான் குற்றாலத்திலிருந்து.. நல்ல சமையல்காரர் கிடைத்தால் கூட்டிச்செல்வது நல்லது.. அதுதான் மிகச்சிறந்தது..ஒரு சனி ஞாயிறு இரு தினங்கள் போதும் இவையெல்லாம் சுற்றிப்பார்க்க.. ஆனால் வார நாட்களில் செல்வது பெஸ்ட்.. வார இறுதியில் கூட்டம் அதிகம்..!

முடிந்தால் மெயினருவியிலும், ஐந்தருவியிலும் இரவு நேரக் குளியல் ஒன்று போடுங்கள் திவ்யமாக இருக்கும்..! குடும்பத்தோடு ஒரு குதுகல குளியலுக்கு குற்றாலம் வாருங்கள் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைத்ததை உணர்வீர்கள்...!

நிறைந்தது...

Wednesday 7 May 2014

அரசியல் வானிலை..!

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நாள் முதல் தமிழகத்தில் மழை... இதையும் அரசியலாக்கி அரசியல் கட்சிகள் கருத்து கூறினால்... ( ஒரு கற்பனை ) 

அரசியல் வானிலை..!

திமுக : சுட்டெரிக்கும் கோடையின் வெப்பத்தை தாங்க முடியாத எதிரிகள் சூரியனுக்கு பயந்து மழையோடு கூட்டணி வைத்து இருக்கிறார்கள்..! இது தற்காலிகமனதே என்றாலும் இம்மழை சூரியனின் புகழை தடுக்கச் செய்த ஓர் ஆரியச் சதியாக இருக்குமோ..? என்றும் ஓர் ஐயம் எழுகிறது..ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறையாது..மழையை ஏற்காது..!

அதிமுக :புரட்சித் தலைவி அவர்கள் எளிமையாய் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரம் இல்லாமல் வாக்கு சேகரித்ததை பலர் விமர்சித்ததை நாட்டு மக்கள் அறிவர்..அவ்வாறு அம்மா ஹெலிகாப்டரில் சென்ற போது கலைந்த மேகங்கள் தாம் இன்று... அம்மாவின் ஆணைப்படி ஒன்று கூடி மழையாக பெய்கிறது..அம்மாவின் ஹெலிகாப்டர் பயணம் நாட்டு நன்மைக்கே.! 40ம் நமதே.!

பா.ஜ.க : காங்கிரஸ் ஆட்சியிலே இயற்கையே கோமாளித்தனமாகத் தான் வருமோ என்ற ஐயம் எழுகிறது.. இந்த மழை ஏன் பாகிஸ்தானின் சதியாக இருக்கக்கூடாது..? இதுவரை எல்லையில் இந்தியாவின் இறையாண்மைக்கு விடுத்த சவால்... இப்போது ஏன் இயற்கைக்கு விடுத்த சவாலாக மாறியுள்ளது..? மோடி ஆட்சிக்கு வந்தால் தான் இந்த சவாலுக்கு பதிலடி தரப்படும்..!

காங்கிரஸ் : அக்னி நட்சத்திரம் என்றால் வெயில் தான் அடிக்கும் என்று எதிர்பார்த்து இருக்கும் போது மழை பெய்தது போல்... மோடி அலை தான் என நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் காங் பேரியக்கம் ஆட்சியை பிடிக்கும் என்பது இம்மழை மூலம் நிரூபணமாகிறது.. அடுத்த பிரதமர் ராகுல் தான் என்பதற்கு இந்த கோடை மழையை விட சாட்சி வேறென்ன வேண்டும்..!

தேமுதிக : மக்களே..இந்த மழை ஏன் இதுக்கு முன்னால வரலை..? திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செஞ்சி மழைக்கே அது புடிக்காம தான் கண்ட நேரத்துல பெய்யுது..அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.. இதை அப்படியும் எடுத்துக்கலாம்..இல்ல கேப்டனின் அனல் கக்கும் பிரசாரத்தை தாங்க முடியாமத் தான் குளிர்ச்சியா மழை பெய்யுதுன்னும் எடுத்துக்கலாம்..கரெக்டா மக்களே..!

ஆம் ஆத்மி : நாட்டில் காங் ஆண்டாலும் சரி பாஜக ஆண்டாலும் சரி இது போல் கேலிக் கூத்தாகத்தான் இயற்கை இருக்கும்.. இதற்கு மாற்று ஆம் ஆத்மியே.. ஒரு வாய்ப்பு தாருங்கள் மழைக் காலத்தில் மழையும் வெயில் காலத்தில் வெயிலும் அடிக்க ஆம் ஆத்மி பாடுபடும்... நாங்கள் துடைப்பம் கொண்டு உங்கள் துயர் துடைப்போம்.!

கம்யூனிஸ்ட் : இயற்கையும் உழைக்கும் வர்க்கமும் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் என்பதை ஓயாது பெய்த இம்மழை உலகுக்கு உணர்த்தியுள்ளது..! கம்யூனிஸ்ட் தனித்து நின்றதை கேலி பேசியவர்கள் இந்த தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றி அடைந்ததும் அதை உணர்வார்கள்..! இந்த மழைக்கு சதி எதுவும் சார்பில்லை ஆனால் மதச்சார்பின்மை தான் தேசத்தின் தேவை .. அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்..!

Thursday 1 May 2014

சினிமா - இனிமா

நமது தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற காட்சிகள் சில..

க்ளைமாக்ஸ் நம்பர் - 1
அரசியல்வாதி வில்லன் என்றால் கட்டாயம் 50 சுமோக்கள் 20 லாரிகள் 4 பெரிய கண்ட்டெயினர்கள் பறக்கும்..இந்த வண்டிகளுக்கெல்லாம் டீசல் போட்டு ஆட்களுக்கு சம்பளம் போட்டால் பில்கேட்ஸ் கூட ஒரே ஆண்டில் திவாலாகி விடுவார்..! அத்தனை வண்டியும் ஹீரோ காரை ஒன்றும் செய்யாது ஆனால் எல்லா வண்டியையும் ஹீரோ கவிழ்த்து விடுவார்..ஆனால் கடைசியாக வில்லன் வண்டி ஒரு பொட்டல் வெளியில் போய் தான் நிற்கும்..! கண்டிப்பாக அங்கு அய்யனார் சிலை சூலாயுதம், வேலாயுதம் எல்லாம் நட்டு..

இருக்கும் க்ளைமாக்ஸ் சண்டையில் வில்லன் ஹீரோவை உருட்டுக்கட்டை, கடப்பாரை, சம்மட்டி, இரும்புகம்பி இவற்றால் அடித்து துவம்சம் செய்வார்.. கிறிஸ் கெயில் அடித்த சிக்ஸர் போல அவர் அடித்த அடியில் கண்டிப்பாக எலும்புகள் பல்டி அடித்து மல்டி ப்ராக்ஸர் ஆகியிருக்கும் ஆனால் ஹீரோ ரத்தம் சொட்ட சொட்ட மண்ணில் விழுந்து விடுவார்..ஹீரோ வாங்கிய அடிக்கு நகரத்தின் ஸ்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலே எழுந்து நிற்க ஆறுமாதம் ஆகும்..! இவ்வளவு அடி வாங்கிய..

ஆள் கோமாவுக்கு கூட போகலாம் ஆனால் கதாநாயகி அப்போதும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று நம்பும் காங்கிரஸ் தலைவர்கள் போல் அதீத நம்பிக்கையுடன் ஹீரோ பெயரை சொல்லி கத்துவார்.. கதாநாயகியின் அவலக்குரல் கேட்டதும் பட்டென்று கண் விழிப்பார்..(விசில் பறக்கும்) எழுந்து வந்து வில்லன் எப்படி எல்லாம் அடித்தாரோ அதே போல் ஹீரோ வில்லனை திருப்பி அடிப்பார்.. இந்த நேரத்தில்..

வானம் இருண்டு மின்னல் வெட்டி இடி இடித்து மழை பெய்யும்.. ஆனால் அதே அடியை வாங்கும் வில்லன் மயங்கிவிடுவார் அல்லது இறந்து விடுவார்... அடி வாங்காது முழு பலத்துடன் வில்லனிடம் அடி வாங்கிய ஹீரோ மட்டும் எழுந்து வருவாராம்..! ஆனால் அடி வாங்கி பலவீனமாக எழுந்து வந்து ஹீரோ அடிக்கும் அடியில் வில்லன் எழுந்து வர மாட்டாராம்..!  (என்னய்யா சொல்ல வரீங்க) இதில் வெட்ட வரும் அருவாளை கையில் தடுப்பது கடப்பாரையை வளைப்பது போன்ற லாஜிக் இல்லா சிரிப்பு மேஜிக்குகள் நடக்கும்.!

க்ளைமாக்ஸ் நம்பர் - 2

தீவிரவாத கும்பல் தலைவன் தான் வில்லன் என்றால் மிகப்பெரிய மலைகளுக்கு நடுவே தான் அவர் இருப்பிடம் இருக்கும்.. வாட்ச் டவரில் எல்லாம் ஆட்கள் இருப்பார்கள்.. ஆனால் இவர்களை பின்னால் வந்து வாயை பொத்தி அவர்கள் தலையை சுளுக்கு எடுப்பது போல ஹீரோ திருப்புவார் அவர்களும் வெறித்த பார்வையோடு அறுந்து விழுந்த கரண்ட் கம்பி போல கீழே விழுவார்கள்..ஹீரோ கையில் ஒரு ரிவால்வர் இருக்கும்.. 

சத்தியமாக அதில் ஆறு குண்டுகள் தான் ஆனால் அந்த ரீல் முழுவதும் அவர் சுட்டுக் கொண்டே இருப்பார்..! (அதான் அதுல ரீல் இருக்கேன்னு சொல்றிங்களா.! அதுவும் சரிதான்) அவர் சுடும் ஒற்றை குண்டு உயரத்தில் இருந்த ஆட்களை எல்லாம் வீழ்த்தும் ஆனால் வில்லன் ஆட்கள் கையில் மெஷின் கன் வைத்து சுடுவார்கள் கரெக்டா போலீஸ் துப்பாக்கி சூடு மாதிரி கால்கிட்ட தான் சுடுவாங்க ஹீரோ ஓடியே தப்பிப்பார்..

உசேன் போல்ட் ஓடியிருந்தா கூட கட்டாயம் 10 குண்டுகள் பட்டிருக்கும் ஆனா ஹீரோவுக்கு ஒரு குண்டு கூட மேல படாது .. அப்படி ஹீரோ மேல குண்டு பட்டா கை புஜத்தில் தான் குண்டு படும் சுட்டவன் டாக்டருக்கு படிச்சவன் போல ஊசி போட்ட மாதிரி அங்க தான் சுடுவான்... இதைவிட காமெடி வீசியெறியும் வெடிகுண்டை ஜாண்ட்டி ரோட்ஸ் மாதிரி கேட்ச் பிடிச்சி திருப்பி வீசுவாங்க அதை இதுவரை எந்த வில்லனும் 

திருப்பி அதை பிடிச்சதே இல்லை.. ஒரு வேளை அவங்களுக்கு கோச் நம்ம இந்தியாக்காராரா இருந்து இருக்கலாம்..! கடைசியில வில்லன் ஹெலிகாப்டர்ல ஏறி கிளம்ப ஹீரோ பைக் அல்லது குதிரையில போயோ அல்லது தாவி தாவி ஓடியோ ஹெலிகாப்டரோட அடிப்பக்க கம்பிய பாய்ஞ்சு பிடிச்சுடுவாரு.. அந்த கம்பியே ஹீரோ தொங்கதான் அங்க வச்சு இருக்காங்களான்னு ஏரோநாட்டிக்ஸ் படிச்ச யாராவது சொன்னா புண்ணியமா போகும்..!

பார்ட்டி சாங்ஸ் - 1

கதாநாயகி அல்லது இரண்டாவது கதாநாயகி அல்லது அவர்களது தோழி இவங்க யாருக்காவது பிறந்தநாள் பார்ட்டி நடக்கும்... கட்டாயம் அங்கே ஒரு பியானோ இருக்கும்..! நம்ம ஹீரோ வந்தவுடனே அங்க போயி வாசிப்பார்.. ஆனால் படத்துல அவர் மெக்கானிக்.. மெக்கானிக்குக்கு எப்படி பியானோ வாசிக்கத் தெரியும்ன்னு அறிவா யோசிக்கக் கூடாது அவரு மெக்கானிக்கு அப்படிங்கறதாலே எல்லா மெக்கானிசமும் தெரிஞ்சு இருக்கலாம் இல்லியா..! இப்படித்தான் நினைக்கணும்.. ஏன் சில நேரங்களில்..

சாக்ஸபோன், வயலின், கிடார் இதெல்லாம் கூட ஹீரோ வாசிக்கலாம்..இளையராஜா, ரஹ்மானுக்கே இதெல்லாம் வாசிக்க தெரியுமான்னு தெரியலை..ஆனா இது வரை ஹீரோ ஒரு நாதஸ்வரமோ, ஒரு மிருதங்கமோ, ஒரு ஜால்ராவோ வாசிக்கிறா மாதிரி எந்த இயக்குனரும் வித்யாசமா யோசிக்கலை.. பார்ட்டி நடக்கும் ஹாலில் கதாநாயகியின் அப்பா ஹீரோ பாக்கும் போது விறைப்பாவும் அவர் பாக்காத போது சிரிச்சா மாதிரியும் அவரு மூஞ்சியை வச்சுக்குவாரு.. இவன் யாரு எதுக்கு நம்ம பொண்ணு பிறந்த நாளைக்கு வந்து 

பாடுறான் இதெல்லாம் அவரு கேக்கவே மாட்டாரு..பார்ட்டியில் எல்லாரும் காஸ்ட்லியான கிப்ட் தருவாங்க ஹீரோ ஒரு ரோஜா செடியோ ஒத்தை ரோஜாவோ தந்து (செண்ட்டிமெண்ட்டாம்) போனஸா ஒரு அபத்த வசனமும் பேசுவாரு "இந்த ரோஜா அழகு தான் ஆனா அந்த முள்ளு தான் அதை பாதுகாக்குது நான் அந்த முள்ளு நீ தான் அந்த ரோஜா" ஹீரோயினும் கண்ணீர் மல்க (நமக்கும் கண்ணீர் வரும்) அதை வாங்கிக்குவாரு..இதுல 2வது கதாநாயகி இருந்தா அவங்க மட்டும் ஹீரோ ஹீரோயினை சைட் அடிக்கிற இந்த காட்சிய பாத்துடுவாங்க அப்புறம் அதிர்ச்சி அடைவாங்க..வேகமா ஓடிப்போயி பெட்டுல விழுந்து அழுவாங்க..! (நாமும்தான்)

பார்ட்டி சாங்ஸ் - 2

பணக்கார அப்பா அனேகமா அவர் தான் வில்லன் தன் ஒரே செல்ல மகளுக்கு தன் பார்ட்னரோட மகனை மாப்பிள்ளையா பாத்து நிச்சயம் பண்ணியிருப்பாரு அனேகமா இவரும் ஒரு வில்லன்.. (நான் கேக்குறேன் அந்த பார்ட்னருக்கும் பெண்குழந்தை இருந்தா என்ன பண்ணி இருப்பாங்க..!)அதை மகள் பிறந்தநாள் பார்ட்டியில சர்ப்ரைசா சொல்ல நினைச்சு இருப்பாரு ஹீரோயினும் இதே பார்ட்டியில தான் தன்

காதலனை அப்பா கிட்ட அறிமுகப் படுத்தலாம்னு நினைச்சு அவரை வரச் சொல்லி இருப்பாங்க.. ஹீரோவும் வருவாரு..இந்த பார்ட்டி வாஸ்துப்படி ஒரு பெரிய புல்வெளில சீரியல் செட் விளக்கெல்லாம் மாட்டி தான் நடக்கும்.. சர்வர்கள் கையில் டிரே ஏந்தி குறுக்கே மறுக்கே நடந்து கொண்டிருப்பார்கள் கேக் வெட்ட போகும்போது "டியர் பிரண்ட்ஸ்ன்னு"ஓசியில சரக்கடிக்க வந்தவங்களை எல்லாம் கூப்புட்டு.. 

விஷயத்தை சொல்வாரு.. ஹீரோ ஹீரோயின் இருவரும் ஷாக்காவாங்க..!எல்லாரும் கைத்தட்டுவாங்க ஹீரோயின் இது எனக்கு தெரியாதுன்றா மாதிரி ஹீரோவை பாக்க அவரும் கண்ணாலேயே புரிஞ்சுகிட்டேன்ன்னு ஜாடை காட்டுவது.. இப்படியே பேசிக்கிட்டு இருந்தா சரக்கு அடிக்க முடியாதுன்னு பொறுக்க மாட்டாத ஒருத்தர் இந்த சந்தோசத்தை கொண்டாட யாராவது பாடலாமேன்னு ஒரு..

பிட்டப் போட கரெக்டா மைக்கு நம்ம ஹீரோ கைக்கு வரும்.. எல்லா சோகத்தையும் எலுமிச்சம் பழமா புழிஞ்சு ஹீரோ பாட பார்ட்டியில எல்லாம் ஜோடி ஜோடியா ஆடுவாங்க.. அப்ப நிச்சயம் பண்ண மாப்பிள்ளை ஹீரோயினை ஆடக் கூப்பிடுவாரு.. (ஏய்யா ஹீரோ நீதானே பாடுற யாரும் ஆட முடியாத படி கஷ்டமா பாடலாமில்ல) ஹீரோயினும் அம்மாவை கண்ட அமைச்சர் போல பம்மி பம்மி போய் அவருடன் ஆடுவார் 

கண்களில் நீர் துளிக்கும்.. ஹீரோ அந்த பாட்டுல இவதான் என் காதலி காத்திருந்தவன் நானு கொண்டு போறது நீ அப்படின்னு அர்த்தம் வர்ற மாதிரி எல்லாம் பாடுவாரு படம் பாக்குற பச்ச புள்ளைக்கு கூட இது தெரியும்.. ஆனா பார்ட்டியில இது ஹீரோ ஹீரோயின் இருவருக்கு மட்டும் தான் புரியும்..! அமெரிக்க ரிடன் மாப்பிள்ளைக்கு கூட தெரியாது...அது சரி எல்லோரும் மது மயக்கத்தில் இருக்க எப்படி புரியும் என்கிறீர்களா அதுவும் சரிதான்..!

சினிமா - இனிமா (PART 2)

பில்டப் வசனங்கள்..

இது பெரிய ஹீரோ படங்களில் மட்டுமே இருக்கும்.. இந்த வசனத்தை ஹீரோவோட அப்பா அம்மாவோ அல்லது அவரது வளர்ப்பு தந்தையோ இல்ல அந்த ஊர் பெரியவரோ பேசுறா மாதிரி வரும்... அப்படி பேசுறவரு முன்னாள் கதாநாயகனா இருந்து தற்போதைய குணச்சித்திர நடிகரா இருப்பது இன்னும் பெட்டர்.. 

வில்லனுக்கு முன்னாடியோ அல்லது அவனது ஆட்களுக்கு மத்தியிலோ 

"அவன் ஒண்ணும் வீட்டுல இருக்குற எலி இல்லடா.. காட்டுல இருக்குற புலி"  

"அவன் யாரு தெரியுமாடா...! நீங்க செஞ்சா தகராறு.. அவன் செஞ்சா அது வரலாறு" 

"நிச்சயமா அவன் வருவாண்டா இதுக்கெல்லாம் லட்சியமா பதில் தருவாண்டா"

இந்த டயலாக்கை எல்லாம் நல்லா உத்து கவனிச்சா இது ஹீரோ பேசுற பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கும் பேசுறது ஒரு பெருசு அப்படிங்கறதால இது பில்டப் வகையில சேரும்..! இதுல பெரிய விஷயம் இதை அவர் பேசப்பேச ஹீரோவை வித விதமான ஆங்கிளில் 48 பிரேமில் ஸ்லோமோஷனாக நடந்து வர விட்டு.. தலையை கோதவிட்டு.. 

கூலிங்கிளாசை மாட்டவிட்டு.. காட்டுவார்கள்.. கட்டாயம் பின்னணி இசையாக காது கிழியும்படி கொம்பு ஊதும் சத்தமோ கேரளா ஜெண்டா மேளமோ ஒலிக்கும்..வந்த பின்னாடி இதே மாதிரி அவரு பஞ்ச் பேசுவாரு.. என்ன நமக்கு தான் காது பஞ்சராகும்..(அதான் ஆயிடுச்சேன்றிங்களா)

ஏலம் எடுக்க வாறீகளா..

அதாவது ஏலம் எடுக்கும் காட்சி.. இதுல ஹீரோ ஏலம் எடுக்கறாருன்னா ஏலம் எடுக்குற நேரத்துக்குள்ள அவரை அங்க வரவிடாம வழியில தடுத்து நிறுத்து சண்டையெல்லாம் நடக்கும்..ஆனா ஹீரோ சார்பா ஒருத்தரு அங்க ஏற்கனவே இருப்பாரு..அது கட்டாயம் அந்த பட காமெடியனாக இருப்பாரு..ஏல அதிகாரிகள் அடிக்கடி வாட்ச்சை பார்க்க.. 

கட் பண்ணா அங்க ஹீரோ சண்டை போட மாறி மாறி இத காமிச்சது பாத்து அலுத்து போயி வில்லனே ஆபிசர்சை பாத்து  என்னா சார் நேரம் முடிய இன்ன்னும் 10 வினாடி தானே இருக்கு ஏலத்தை எனக்கே கொடுங்கன்னு கேக்க.. காமெடியன் அந்த 10 வினாடி முடியணும்ன்னு சொல்ல ஏல அதிகாரிங்க வாட்சை பாத்துகிட்டே மணியை எடுக்கப் போக 

1..2..3..4..5..6..7..8..9.. கரெக்டா 9 வினாடி 60வது மைக்ரோசெகண்டில் ஹீரோ எண்ட் ரி ஆகி மீதி 40 மைக்ரோ செகண்டில் கையெழுத்து போட ஏலம் அவருக்கு போக கரெக்டா காமிரா சரியான நேரத்தை காட்டும் கடிகாரத்தை ப்ரேமில் காட்டும்.. இதுல சில படத்துல 2 லட்ச ரூபா இடத்தை வில்லன் 10 லட்சம்ன்னு கேக்க ஏலம் எடுக்க வந்தவங்க..

வாயடைச்சு போக ஏல அதிகாரி 10 லட்சம் ஒரு தரம்... 10 லட்சம் ரெண்டுதரம்.. எனச்சொல்ல ஆரம்பிக்க இந்த ரெண்டுதரம் சொன்னவுடனே... ஒரு குரல் "இருபது லட்சம்" என்று வர அனைவரும் திரும்பிப் பார்க்க ஹீரோ ஆய்..ஊய்..ஹேய் .. ஹேய்...அப்படின்னு பேக்கிரவுண்ட் மியூசிக்கில் நடந்துவந்து ஏலத்தை வெல்வார்.. 

என்னாங்க இது 2 லட்சம் இடத்தை 20 லட்சம் கொடுத்து வாங்கிட்டிங்க அப்படின்னு காமெடியன் கேக்க அது என் பூர்விக வீடு அதான் பணம் பிரச்சனை இல்லை என்பார்.. ஆனா இவரே இன்னொரு படத்தில் வில்லன் ஏலம் எடுக்கும் போது அதிக விலைக்கு ஏற்றிவிட்டு விட்டு ஒரு கட்டத்தில் ஏலம் கேட்பதை நிறுத்திவிடுவார்..!

ஆனா அப்ப வில்லனுக்கு நஷ்டம்ன்னு காட்டுவாங்க.. ஒரே கஷ்டமப்பா...

ஓர் இந்தியனின் குமுறல்..!

ஓர் இந்தியனின் குமுறல்..


உழைத்து சிவந்த கரங்களுக்கான தினம் இன்றுரத்தம் சிதறிவிடிந்திருக்கிறது...

தண்டவாளம் ஏறிவந்த சதியொன்று பாதுகாப்புவண்டவாளத்தினை பறைசாற்றி

இருக்கிறது.. பிழை செங்கோட்டைமீதா.?செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மீதா.?

எனக் கேட்டால் பாதுகாப்பை கோட்டை விட்ட அனைவரின் மீதும் தான்....

இறந்தஉயிர் சம்பவத்திற்கு சற்று முன் முகத்தைக்கழுவிஇருக்கலாம்,பல் துலக்கி 

இருக்கலாம், ஏன் தன் கடைசிகோப்பை தேநீரைக்கூட அருந்தியிருக்கலாம் 

அப்போது தெரிந்து இருக்காது அவரைவரவேற்க எமன் காத்திருப்பான் என்று....

இறந்த உயிர்களின் சொந்தங்கள் கதறிக் கொண்டிருக்கஇங்கு வந்தும் ஆதாயம் 

தேடுகின்றன மதவாத பிணந்தின்னிகழுகுகள் சில.. மோடியா,லேடியா,டாடியா என

இதிலும் அரசியல் பூசுபவர்களே கேடிகள்..கோழைத்தனம் மிகுந்தபேடிகள்..எந்த 

பயங்கரவாதமும் மனித உயிர்களை கொல்லமுடியும் ஆனால் எந்த மனங்களையும் 

வெல்லமுடியாது..பலியான உயிர்களுக்கு அரசு வழங்கும்இழப்பீடு இன்னும் வேதனை

ரத்தமும் சதையுமான உயிருக்கு கரன்சி காகிதங்கள் ஈடாகுமாஅதனால் பலி வாங்கிய 

உயிர்களை திருப்பித் தரமுடியுமா.. இன்னும் எத்தனை முறை தான் இழப்பீடு வழங்கிக் 

கொண்டிருக்கும் நம் அரசாங்கம்.?விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.! 

சம்பவம்நடந்த பிறகு தான் பாடம் கற்றுக் கொள்வோம் என்ற நிலை நீடித்தால் இது

போல சதிகள் தேசத்திற்கு பாடம் புகட்டிக் கொண்டே இருக்கும்.. செவ்வாயில்

மனிதன்  உயிர் வாழலாமா என ஆராய்ச்சிக்கு செலவு செய்யும் தேசம் அதற்கு 

முன் பூமியில் மனிதன் உயிர் வாழ உத்திரவாதம் தரட்டும் மத்திய அரசா?மாநில

அரசா என்று மாறி மாறி பந்துகள் எறிபவர்களே தெரிந்து கொள்ளுங்கள்..வெறி

பிடித்த தீவிரவாதிகளின் சதிவேலைச்செயல்களால் அப்பாவிகள் உயிரிழப்பதை 

தடுக்காத எந்த அரசாங்கமும் குற்றவாளிகளே..நமக்கும் ஒரு கடமை இருக்கிறது

நண்பர்களே நாம் அனைவரும் மத இன உணர்வு கடந்து இந்தியனாய் தீவிரவாதத்திற்கு 

எதிராக கைக் கோர்க்க வேண்டிய தருணம் இது..எந்த வெடிகுண்டாலும் சிதைக்க 

முடியாதது ஒன்று இருக்கிறது அது தான் மனிதம்...! அந்த புனிதம் கண்டு அலறி

ஓடட்டும் பயங்கரவாதம்... ஜெய்ஹிந்த்..!



அந்த வீட்டுச்சுவற்றுக்குள்ளிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் 

செடியின் இலைகள் காற்றில் சலசலத்ததும் தூசு பறக்கிறது

வாகனங்கள் வெளியேற்றும் புகை அந்த தாவரத்தின் மூச்சை

அழுத்துகிறது வெடித்து கருகிப் போன தோல் போல நோய்

வந்த இலைகள் பெருநகரத்து மாசுக்களை தாங்கி அசைகிறது

என்றோ உயிருடன் இருந்த ஒரு சிட்டுக்குருவியின் எச்சத்தில்

முளைத்த செடி இன்று தன் வாழ்வின் மிச்சத்தில் அவதிப் படுகிறது

மின்சார ரயில் கடந்து போகும் தட தடக்கும் அதிர்வில் சுவர்

மேலும் பிளவுறுகிறது.. செடியின் உயிர் வேரோடு சரியுமா?

அல்லது மாசுக்களால் தான் நாசமாகுமா? விடை தெரியாது

விழிக்கிறது நகரத்தில் தனித்திருக்கும் வாழ்ந்து கெட்ட வீடு..!