பதிவிட்ட டிவிட்டுறள்கள்....
#டிவிட்டுறள் - 1
குடி இனிது புகை இனிது என்பர் குடிமக்கள்
வெகுகாலம் வாழா தவர்.
#டிவிட்டுறள் - 2
கிணற்றில் விழுந்த கல்லைப்போல் மூழ்கடிக்கும்
சினத்தில் உதிர்த்த சொல்.
#டிவிட்டுறள் - 3
முதுகுக்கு பின்நின்று பேசுதல் எந்நாளும்
கொலையினும் கொடிய செயல்.
#டிவிட்டுறள் - 4
ஆத்திரத்தில் எடுக்கும் முடிவது;தந்திடுமே
ஆறாத புண்ணின் வலி.
#டிவிட்டுறள் - 5
நட்புக்கு கடனளித்து செய்கின்ற உதவி
அன்றே மறத்தல் நலம்.
#டிவிட்டுறள் - 6
முன்சென்று கேட்கும் மன்னிப்பு உன்வாழ்வில்
பின்னின்று உயர்த்தி விடும்.
#டிவிட்டுறள் - 7
பிறர்க்குதவும் நற்குணமும் பெருஞ்செல்வம்;அச்செல்வம்
மானிடர்க்கு எல்லாம் தேவை.
#டிவிட்டுறள் - 8
பெருங் கள்வனையும் நம்பலாம்; நம்பாதே
துரோகம் செய்த நட்பை.
#டிவிட்டுறள் - 9
கோபம் அடக்கக் கற்பவர் தம்வாழ்வில்
சோகம் விலகிடுமே சிறப்பு.
#டிவிட்டுறள் - 10
விட்டுக் கொடுத்து வாழ்கின்ற தெப்போதும்
கெட்டழிந்து போவ தில்லை.
#டிவிட்டுறள் - 11
பிறர்பற்றி பழிபேசும் குணமிருப்பின்;வெறுத்திடுவாள்
பெற்றத் தாயும் உனை.
#டிவிட்டுறள் - 12
முகத்தில் புன்னகையும் அகத்தில் நற்குணமும்
நிகரில்லா செல்வம் உனக்கு.
#டிவிட்டுறள் - 13
சோம்பலில் தள்ளிவைத்த பணிகள் எப்போதும்
சோகத்தை அள்ளித் தரும்.
#டிவிட்டுறள் - 14
பொருத்தம் இல்லா வார்த்தை உதிர்ப்பின்
வருத்தம் வாசல் வரும்.
#டிவிட்டுறள் - 15
போதையில் செலுத்திடும் வாகனம்;விரைந்து
சேர்த்திடும் இறைவ னடிக்கு.
#டிவிட்டுறள் -16
பூக்கும் காய்க்கும் செடிகளில் எந்நாளும்
பூக்காதே வெள்ளிப் பணம்.
#டிவிட்டுறள் - 17
சீட்பெல்ட் அணியாது செல்கின்ற பயணம்
சீட்தருமே எமன் உலகிற்கு.
#டிவிட்டுறள் - 18
பொன்சேமிக்க மறப்பினும் குற்றமில்லை பெருங்குற்றம்
மின்சேமிக்க மறப்பது இன்று.
#டிவிட்டுறள் - 19
உலகம் தகித்து கொதிப்பது தடுக்க
மரங்கள் வளர்ப்ப தறிவு.
#டிவிட்டுறள் - 20
நன்னூல்கள் படிக்காது வாழ்கின்ற வாழ்வு
நல்லறிவை மறைத்து விடும்.
#டிவிட்டுறள் - 21
பல்சரோ ஹோண்டாவோ உனதெனினும்;எந்நாளும்
ஹெல்மெட்டே காக்கும் தலை.
#டிவிட்டுறள் - 22
முதலை வாய்க்குள் சென்றார்போல் திரும்பாதே
உறவிற்கு கொடுத்த கடன்.
#டிவிட்டுறள் - 23
மின்சிக்கனம் என்றும் உடனிருந்தால் மின்வெட்டை
காணலாம் கல் வெட்டில்.
#டிவிட்டுறள் - 24.
சீரியல்பேய் பிடித்தாட்டும் மாந்தர் தம்வாழ்வு
சீரழிந்து சிதறி விடும்.
#டிவிட்டுறள் - 25
பிறர்க்கு கண்மூடி ஜாமீனேற்பின்; நமக்கு
ஜாமீன் நாளை வரும்.
#டிவிட்டுறள் - 26
எல்லா விளக்கும் விளக்கல்ல சிறப்பான
சி.எப்.எல் விளக்கே விளக்கு.
#டிவிட்டுறள் - 27
மரம் வளர்ப்போர் அனைவரும் எதிர்கால
நலம் வளர்ப்போரெனச் சொல்.
#டிவிட்டுறள் - 28
மனைவி சொல்லே நலமென்பார்;அவர்வாழ்வு
சிறக்குமே சிக்கல் இன்றி.
#டிவிட்டுறள் - 29
சிக்னலை மதியாதோர் வாகனம் என்றென்றும்
சிக்கலை சேர்த்து விடும்.
#டிவிட்டுறள் - 30
ஏழையின் பசிதீர்க்க பேசுகின்ற பொய்யுனக்கு
ஏற்றத்தை தந்து விடும்.
#டிவிட்டுறள் - 31
முறையின்றி முளைத்திட்ட முகநூல் நட்பு
துயரத்தில் முடிந்து விடும்.
#டிவிட்டுறள் - 32
வெட்டிச் சாய்த்த மரங்கள் வளமையை
கட்டிப் போட்டு விடும்.
#டிவிட்டுறள் - 33
தாய்மொழியில் படிப்பதன் சிறப்பு எந்நாளும்
தாய்ப்பால் குடிப்பதற்கு இணை.
#டிவிட்டுறள் - 34
சிரித்த முகத்தோடு பழகுவோர் என்றும்
சிறப்பாய் வாழ்வது உறுதி.
#டிவிட்டுறள் - 35
மிஸ்டுகால் தருவது லவ்வரெனில்; விரைந்து
டாப்-அப் செய்யெனப் பொருள்.
#டிவிட்டுறள் - 36
மூத்தோர் சொல்கேட்டு வாழ்கின்ற வாழ்க்கை
முன்னேற்றம் தருமே நமக்கு.
#டிவிட்டுறள் - 37
எறியும் பாலிதீன் குப்பைகள் எரித்திடும்
நிலத்தடி மண் வளத்தை.
#டிவிட்டுறள் - 38
மழையின்றி உழவின்றி உலகம் வாடுதல்
மரங்களை அழிப்பதன் பரிசு.
#டிவிட்டுறள் - 39
உள்ளுக்குள் விஷம் வைத்து;நாவினிக்க
பேசுவார் நட்பை விலக்கு.
#டிவிட்டுறள் - 40
சம்சாரமிழந்த முதியவன் போல் தள்ளாடும்
மின்சாரம் சேமிக்காதோர் வாழ்வு.
#டிவிட்டுறள் - 41
எரிபொருள் சிக்கனம் மறந்தால்;எதிர்காலம்
ஏமாற்றம் தந்து விடும்.
#டிவிட்டுறள் - 42
சாலைவிதி எல்லாம் மதித்திடுவோர் தலைவிதி
இன்பத்தால் எழுதப் படும்.
#டிவிட்டுறள் - 43
ஐந்தறிவு என்பது யாதெனில் ; ஒருவன்
சினத்தோடு செய்யும் செயல்.
#டிவிட்டுறள் - 44
தன்மொழி நேசிக்கா மனிதன் இவ்வுலகில்
கண்விழி அற்றவன் ஆவான்.
#டிவிட்டுறள் - 45
நம்மொழி நலமாய் வெகுகாலம் வாழ்ந்திட
அம்மொழியில் பேசுவ தழகு.
#டிவிட்டுறள் - 46
அலுவலில் உறங்கும் ஒருவன் எந்நாளும்
அடைவதில்லை வெற்றிப் படி.
#டிவிட்டுறள் - 47
சிக்னலை மதியாதோர் வாகனம் என்றும்
சிக்கலை சேர்த்து விடும்.
#டிவிட்டுறள் - 48
புத்தகம் படிப்பது பரவசம் அஃதென்றும்
காட்டிடுமே புது உலகு.
#டிவிட்டுறள் - 49
தேவையின்றி பயன்படுத்தும் மின்சாரம் குறைப்பது
தேனாய் இனித்து விடும்.
#டிவிட்டுறள் - 50
மொழியே தன்னுயிரென வாழ்வோர் என்றென்றும்
இழிவாய் போனது இல்லை.
#டிவிட்டுறள் - 51
பொறாமைக் கண்கொண்டு பார்த்தால் நல்லவை
நான்கும் தெரியா துனக்கு.
#டிவிட்டுறள் - 52
அஞ்சாதவர்க்கு சாவென்பது ஓர்முறை;அஞ்சுவோர்
வாழ்வில் தினந்தினம் சாவு.
#டிவிட்டுறள் - 53
பன்மொழி அறிஞனாய் இருந்தாலும் பழித்திடுவார்
தாய்மொழி தெரியா தவனை.
#டிவிட்டுறள் - 54
பிள்ளையை போற்றி வளர்ப்பதும் மரங்களை
நீருற்றி வளர்ப்பதும் ஒன்று.
#டிவிட்டுறள் - 55
தாய்மொழியில் பிழையாய் எழுதுவது என்றும்
பெற்றத்தாயை உதைப்பது போல்.
#டிவிட்டுறள் - 56
வீழுகின்ற மரங்கள் வேண்டாம்; வேண்டுமே
விழுதுகள் வீழுகின்ற மரம்.
#டிவிட்டுறள் - 57
நூலறிவின்றி பெறுகின்ற பட்டம் எப்போதும்
நூல் அறுந்த பட்டம்.
#டிவிட்டுறள் - 58
கண்கூசும் வாகன விளக்கொளி நம்வாழ்வை
இருளில் தள்ளி விடும்.
#டிவிட்டுறள் - 59
பிறமொழியை கற்பது தவறில்லை எப்போதும்
தாய்மொழியில் கற்பது இனிது.
#டிவிட்டுறள் - 60
மனிதர் நம்கடமை இவ்வுலகில் மரம்
வளர்த்து செழிக்க விடல்.
#டிவிட்டுறள் - 61
முகத்துக்கு நேராக உண்மையைச் சொல்பவர்
முகநூலில் கிடைப்ப தரிது.
#டிவிட்டுறள் - 62
பெரியோர்க்கு தந்திடும் மதிப்பு எந்நாளும்
பெருமையைத் தரும் நமக்கு.
#டிவிட்டுறள் - 63
மிதவேகமாய் செலுத்திடும் வாகனத்தில் எப்போதும்
இதமாக அமைந்திடும் பயணம்.
#டிவிட்டுறள் - 64
பிறமொழி ஆதிக்கம் எந்நாளும் நம்மொழியின்
அழகை அழித்து விடும்.
#டிவிட்டுறள் - 65
மரம்வெட்டி சாய்ப்பதும் மனிதர் உயிர்வெட்டி
சாய்ப்பதும் ஒன்றான செயல்.
#டிவிட்டுறள் - 66
புத்தகமே உயிர்த் தோழன் என்பாருக்கு
புவி எங்குமே சிறப்பு.
#டிவிட்டுறள் -67
மெய்யான காதல் மணக்குமே;நெய்யோடு
சேர்ந்த சோற்றைப் போல்.
#டிவிட்டுறள் - 68
பண்பும் பணிவும் உடனிருந்தால்;எப்போதும்
பறித்திடலாம் வெற்றிக் கனி.
#டிவிட்டுறள் - 69
பண்டிதனாக படிப்பது நன்று அதனினும்
பண்படப் படித்தல் நன்று.
#டிவிட்டுறள் - 70
சாட்டிலே செய்கின்ற சேட்டைகள் பின்னாளில்
சாட்டையாய் மாறி விடும்.
#டிவிட்டுறள் - 71
நண்பனின் துன்பத்தில் நாம்செய்யும் உதவி
நட்பை செழிக்க விடும்.
#டிவிட்டுறள் - 72
பிறர்க்குதவ பணமில்லாத போதும் உதவுகின்ற
மனம் இருப்பது சிறப்பு.
#டிவிட்டுறள் - 73
வருங்காலம் உணராது வீணாக்கும் தண்ணீர்
உலகுக்கு செய்யும் துரோகம்.
#டிவிட்டுறள் - 74
புத்தகம் படிப்பது அருந்தவம் படிக்காதோர்
உயிர் வாழும் சவம்.
#டிவிட்டுறள் - 75
குண்டுபல்பு எரிகின்ற வீடு உலகத்தின்
பசுமையை எரித்து விடும்.
#டிவிட்டுறள் -76
பள்ளியிலும் கற்காத நற்பாடங்கள் பல
புத்தக வாசிப்பு தரும்.
#டிவிட்டுறள் -77
குறைவாய் பயன்படுத்தும் மின்சாரம் நாட்டிற்கு
நிறைவாய் வளத்தை தரும்.
#டிவிட்டுறள் - 78
ஈசிஆர் செல்கின்ற காதலெல்லாம் சிலநாளில்
ஈசியாய் கழன்று விடும்.
#டிவிட்டுறள் -79
லைக்குக்கு எழுதும் பதிவெல்லாம் முகநூலில்
வெகுகாலம் நிலைக் காது.
#டிவிட்டுறள் - 80
பிறரை எழுதத்தூண்டும் எழுத்தே முகனூலில்
நல் எழுத்து ஆகும்.
#டிவிட்டுறள் - 81
தாய்மொழியை பாதுகாத்து வைப்பதே எதிர்கால
தலைமுறைக்குச் செய்யும் சேவை.
#டிவிட்டுறள் -82
நன்னூல்கள் நம் வாழ்வில் என்றென்றும்
கற்றதை மெருகு ஏற்றும்.
#டிவிட்டுறள் - 83
துளித்துளியாய் சேமிக்கும் தண்ணீரும் பின்னாளில்
துடைத்திடும் நம் கண்ணீர்.
#டிவிட்டுறள் -84
மழைநீர் சேமிக்கா மனிதவாழ்வு எப்போதும்
மகிழ்வாய் இருப்ப தில்லை.
#டிவிட்டுறள் - 85
மழைநீர் சேமிப்பு தொட்டியில்லா இல்லம்
மண்ணுள்ள பாலை நிலம்.
#டிவிட்டுறள் - 86
நீருக்கு விலைவைத்த உலகம் பின்னாளில்
போர் வந்தே கெடும்.
#டிவிட்டுறள் - 87
நுகத்தடியில்லா வண்டி போலாகும் வாழ்வு
நிலத்தடி நீர்வளம் இன்றி.
#டிவிட்டுறள் - 88
ஆற்றில் அள்ளும் மணல் பின்னாளில்
சோற்றில் வந்து விழும்.
#டிவிட்டுறள் - 89
அரிசி விளைந்த நிலமெல்லாம் வீடானாலங்கு
அழிவு வந்து தங்கும்.
#டிவிட்டுறள் - 90
வறுமையிலும் வற்றாத நேர்மை உள்ளோருக்கு
வாழ்வினில் சேரும் பெருமை.
#டிவிட்டுறள் - 91
மெய்யை எளிதில் நம்பா உலகமிது
பொய்யை எளிதில் நம்பும்.
#டிவிட்டுறள் - 92
கல்வியை விற்பவர் இவ்வுலகின் அறிவுப்
பயிரிடை விளைந்த களைகள்.
#டிவிட்டுறள் - 93
விலைக்கு கல்வியை விற்பது கொலைக்கு
ஈடான செயல் ஆகும்.
#டிவிட்டுறள் - 94
துயரில் உதவும் நண்பன் உனக்கு
நேரில் வந்த தெய்வம்.
#டிவிட்டுறள் - 95
காட்டைக் காடாய் கருதாது வாழ்ந்தால்
வீட்டுக்கு வரும் விலங்கு.
#டிவிட்டுறள் - 96
போனால் வராத காலத்தை போற்றிப்
பேணுதல் நல் அறிவு.
#டிவிட்டுறள் - 97
கோபத்தால் நன்மை ஏதுமில்லை படுவோர்க்கு
பாபமே தொடர்ந்து வரும்.
#டிவிட்டுறள் - 98
இடவலமாய் தலையாட்டா தலைவன் வாழ்வு
தடம்மாறி போவது இல்லை.
#டிவிட்டுறள் - 99
இல்லறத்தில் நல்ல புரிதல் இருந்தாலது
கல்லறை வரை இனிது.
#டிவிட்டுறள் - 100
உணவளித்த நிலத்தில் கட்டிடும் வீடென்றும்
உலகை ஆக்கிடும் சுடுகாடு.
#டிவிட்டுறள் - 101
காட்டு விலங்கின் வாழ்விடமழிப்பது நாட்டு
மக்களின் நற்செயல் இல்லை.
#டிவிட்டுறள் -102
ஆராய்ந்து எடுக்கும் முடிவானது ஆதாய
வெற்றி தரும் நமக்கு.
#டிவிட்டுறள் - 103
சுற்றம் சுட்டிக்காட்டா குற்றத்தை தயங்காது
சுட்டுவது நல் நட்பு.
#டிவிட்டுறள் - 104
போராசை மிகுந்தவர் எந்நாளும் இவ்வுலகில்
பேராசை மிக்கவர் ஆவார்.
#டிவிட்டுறள் -105
உள்ளத்தில் நல்லெண்ணம் இருப்பின் வாழ்க்கை
பள்ளத்தில் என்றும் விழாது.
#டிவிட்டுறள் - 106
உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசுபவர்
உலகத்தின் பேரழகர் ஆவர்.
#டிவிட்டுறள் - 107
இறப்பிற்குப்பின் தரும் கண்தானம் நம்முடைய
பிறப்பிற்கு தரும் சிறப்பு.
#டிவிட்டுறள் - 108
உடல்தானம் தந்து உதவுவோர் எல்லாம்
உலகில் பிறந்த தெய்வம்.
#டிவிட்டுறள் - 109
கடையேழு வள்ளல்களும் ஈடில்லை ; குருதியைக்
கொடை தரும் நபர்க்கு.
#டிவிட்டுறள் - 110
மாற்று எரிபொருளுக்கு மாறாத வாழ்வு
தோற்று அழிந்து விடும்.
#டிவிட்டுறள் - 111
வறியவர் கல்விக்கு செய்கின்ற உதவி
நம்மை பெரியவர் ஆக்கிவிடும்.
#டிவிட்டுறள் - 112
மரங்கள் நட்டு வளர்ப்போரே இப்புவிக்கு
அறங்கள் செய்யும் மனிதர்.
#டிவிட்டுறள் - 113
பெருநகர் வாழ்வில் கரைந்து போனது
பெருமை குணங்கள் பல.
#டிவிட்டுறள் - 114
உறவுகள் எதிர்பார்த்து உதவும் எந்நாளும்
எதிர்பாராது உதவுவது நட்பு.
#டிவிட்டுறள் - 115
மாறிவரும் உலகிற்கேற்ப மாறாத வணிகம்
தேறி விடுதல் அரிது.
#டிவிட்டுறள் - 116
பொருளுக்குத் தக்க விலைவைக்கும் வணிகம்
அருள் பெற்று வளரும்.
#டிவிட்டுறள் - 117
சொன்ன சொல் தவறாத மனிதர்க்கெல்லாம்
சொர்க்கத்து வாழ்வு கிட்டும்.
#டிவிட்டுறள் - 118
உழைப்பால் சேர்த்த பணம் உனக்கு
என்றும் உயர்வைத் தரும்.
#டிவிட்டுறள் - 119
பணத்தால் வாங்க முடியாத பொருளையும்
குணத்தால் வாங்க முடியும்.
#டிவிட்டுறள் - 120
பொறுமையாய் செய்யும் செயல் எல்லாம்
பெருமை தரும் நமக்கு.
#டிவிட்டுறள் - 121
அனுபவங்கள் கற்பிக்கும் பாடம் போல்
ஆசானும் கற்பிப்பது இல்லை.
#டிவிட்டுறள் - 122
குழந்தைகள் முன்நாம் செய்யும் தவறுகள்
பிழையாய் அவரினை வளர்க்கும்.
#டிவிட்டுறள் - 123
கோபத்தின் உச்சத்தில் உதிர்க்கும் வார்த்தை
பாவத்தின் வாசலில் விடும்.
#டிவிட்டுறள் - 124
காதலில் களவென்பது உள்ளத்தை கவர்வதேயன்றி
உடலைக் கவர்வது இல்லை.
#டிவிட்டுறள் - 125
பதறாது செய்கின்ற செயலெல்லாம் நமக்கு
சிதறாது வெற்றியைத் தரும்.
#டிவிட்டுறள் - 126
துணிவோடு வாழ்வது பெரிதெனினும் வாழ்க்கை
பணிவோடு வாழ்வது நலம்.
#டிவிட்டுறள் - 127
உள்ளத்தை மகிழ்வாய் வைத்துக் கொள்வதே
உலகத்தில் இன்ப வாழ்வு.
#டிவிட்டுறள் - 128
போதுமென்ற மனமிருக்கும் மனித வாழ்வு
போற்றி புகழப் படும்.
#டிவிட்டுறள் - 129
அஞ்சாது பொய்யுரைத்து வாழ்பவர் நெஞ்சம்
அஞ்சியஞ்சி சாகும் தினம்.
#டிவிட்டுறள் - 130
நம்பியவர்க்கு செய்யும் துரோகம் நம்வாழ்வில்
நன்மையை நீக்கி விடும்.
#டிவிட்டுறள் - 131
ஆடைக்குள் புகுந்த தேளாய் உறுத்தட்டும்
அடுத்தவர் பொருள் நமக்கு.
#டிவிட்டுறள் - 132
மனிதன் நற்பெயர் எடுப்பதொன்றே இவ்வுலகில்
மங்காது இருக்கும் செல்வம்.
#டிவிட்டுறள் - 133
பணிந்து வாழ்வோர்க்கு துன்பம் இல்லையென
துணிந்து சொல்லி விடு.
#டிவிட்டுறள் - 134
தன்னைப் பற்றியே சிந்திக்கும் மனிதன்
தனித்து விடப் படுவான்.
#டிவிட்டுறள் - 135
செய்த உதவியை பிறரிடம் சொல்லாது
மனதிற்குள் வைப்பது அழகு.
#டிவிட்டுறள் - 136
பெண்ணைச் சமமாய் நடத்தி மதிப்போரே
அழகில் சிறந்த ஆண்.
#டிவிட்டுறள் - 137
பொய்யைக் காக்கும் செயலுன்னை பெரும்
பொய்யர் ஆக்கி விடும்.
#டிவிட்டுறள் - 138
ஏற்றத் தாழ்வு பார்த்திட்ட நட்பென்றும்
ஏற்றம் பெற்றது இல்லை.
#டிவிட்டுறள் - 139
விலை கொடுத்து வாங்கிய புகழுனக்கு
விரைந்து மறைந்து விடும்.
#டிவிட்டுறள் - 140
நண்பனின் தவறினை சொல்லாத நட்பு
நலங்கள் புரிவது இல்லை.