ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...
லதா பேரழகி..! காண்பவரை அசத்தும் அழகு மிகுந்தவள்.. அவ்வளவாக வசதி இல்லாத குடும்பம் அவளுக்கு தாய் இல்லை..தந்தை மட்டுமே வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் லதாவின் தந்தையும் மிகுந்த பாசத்துடன் அவளை வளர்த்தார்..!
ஒரு நல்ல இடத்தில் அவளை திருமணம் செய்து கொடுப்பது அவர் வாழ்வின் லட்சியம்.. அவர் தீவிரமாக மாப்பிள்ளை தேடும் வேளையில் தான் அந்த துயரச்சம்பவம் நடந்தது.! ஒரு சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்..லதா மிகுந்த துயர் அடைந்தாள்...
இவ்வுலகில் அவள் இனி தனி மரம்.. தந்தையின் பிரிவு தாளாமல் அழுது புலம்பினாள் எல்லா காரியமும் முடிந்து 3 நாட்கள் ஆனா பின்பும் அவள் துக்கம் குறையவில்லை.. லதாவின் கல்லூரித் தோழி மட்டுமே துணைக்கு இருந்து அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது துக்கம் விசாரிக்க லதாவின் தந்தை வேலை பார்க்கும் கம்பெனி முதலாளி வந்திருப்பதாக.. வந்தது முதலாளியின் இள வயது மகன்.. அழுது கொண்டிருந்த லதாவை அவன் பார்த்ததும் சற்று பிரமித்துப் போனான்.. அவள் அழகு அவனை திணற அடித்தது..!
சம்பிரதாயமாக அவளை விசாரித்து விட்டு.. உங்க அப்பாவுக்கு கம்பெனியில் இருந்து வரும் பணம் எல்லாம் முறைப்படி வந்துவிடும்..கவலை வேண்டாம் வேறு உதவி எதுன்னாலும் தயங்காமல் கேளுங்க" என்று சொல்லி கிளம்பப் போகும் போது தயக்கத்துடன் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமா என்று கேட்டான்..! சொல்லுங்க என்றாள் லதா..
"எனக்கு இன்னும் திருமணம் ஆகலை.. உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி நானே உங்களை திருமணம் செஞ்சுக்கிறேன்" இந்த துக்கத்துலயும் உங்க அழகு என்னை கவர்ந்திடுச்சு அதான் என் விருப்பத்தை சொல்லிட்டேன்", என்றான்..!
லதாவுக்கு கோபம் வந்தது "என்ன ஸார் பேசறிங்க துக்க வீட்டுல பேசுற பேச்சா இது".?என்றாள்... "சாரிங்க நான் இப்படி கேட்டது தப்பு தான்", என்று வேகமாக கிளம்பி போய் விட்டான்.. லதாவின் தோழி இப்போது லதாவிடம் வந்தாள்..
"ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா உன் துக்கத்துல பங்கெடுத்துகிட்டவர் வாழ்க்கையிலயும் பங்கெடுத்துகலாமான்னு எவ்வளவு கண்ணியமா கேட்டார்.. இப்படி கோபமா பேசிட்டியே... அவர் கேட்டதுல என்னடி தப்பு ", என்றாள்.
"இல்லடி இந்த துக்கத்துலேயும் நீங்க அழகா இருக்கேன்னு சொன்னாரே இதப் போயி அழகுன்னா... நான் அழாமல் இருக்கும் போது பாத்திருந்தா என்ன சொல்லியிருப்பாரு..? அந்த கோபம் தான்", என்றாள் லதா.
நீதி : அழகானவள் தான் அழகு என்பதை எந்த சமயத்திலும் மறக்கமாட்டாள்..!
ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...
ஒரு மிகப்பெரும் செல்வந்தர் கையில் விலையுயர்ந்த வைரமோதிரம் அணிந்திருந்தார்.. அந்த மோதிரத்தில் உள்ள கற்கள் எல்லாம் உயர்ரக ஜாதிக்கற்கள்.! விருந்து ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது அந்த மோதிரத்திலிருந்து ஒரு கல் கழன்று விழுந்துவிட்டது.. அவரும் அதை கவனிக்காமல் வீடு திரும்பிவிட்டார்.. கீழே விழுந்த கல்லை யாரும் கவனிக்கவில்லை.!
அந்த கல் பலரால் மிதிபட்டது அதன் மீது குப்பைகள் கொட்டப்பட்டது.. அதை வாரி ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் போட்டார் அங்கு உள்ள கழிவுகளுக்கு மத்தியில் வருத்தத்துடன் இருந்தது அந்த வைரக்கல்! நான் எவ்வளவு உயர்ந்தவன் என் ரகமென்ன, என் விலையென்ன, என் ஜாதி என்ன, என் அந்தஸ்து என்ன, இப்படி குப்பைக்குள் கிடக்கிறேனே",என்று..!
அப்போது குப்பையை கிளறி இரை தேட வந்தது ஒரு கோழி..! கோழியை பார்த்ததும் வைரக்கல்லுக்கு சந்தோஷம் இந்த கோழியின் கண்ணில் பட்டுவிட்டால் இந்த துர்நாற்றம் பிடித்த குப்பைத்தொட்டியிலிருந்து விடுதலை கிடைத்து விடும்.. இறைவா இந்த கோழியின் கண்ணில் என்னை பார்க்குமாறு செய் என வேண்டிக் கொண்டது..!
அது எதிர்பார்த்தது போலவே கோழி குப்பையை கிளற கிளற மேலிருக்கும் கழிவுகள் நீக்கப்பட்டு பளீரென மின்னியது வைரக்கல்.. திடீர் பிரகாசத்தை கண்டு கோழி பின் வாங்க வைரக்கல் கூறியது "கோழியே நான் விலையுயர்ந்த வைரம், மிகுந்த ராசியுடையவன், உயர் ஜாதி என்னை உன் சொந்தமாக்கிக் கொள்.. உனக்கு இது நல்ல சந்தர்ப்பம் என்றது"
கோழி அமைதியாகச் சொன்னது எனக்கு ஒரு சிறு புழுவோ, சிறு அரிசியோ, கிடைத்தால் பசியாறுவேன்.. உன்னை வைத்து என்ன செய்வது..? நீ மனிதர்கள் கண்ணில் பட்டால் பயனாவாய்... உன்னால் எனக்கு பயனில்லை.. எனக்கு பசிக்குது டோண்ட் டிஸ்டர்ப் என்றபடி குப்பையை கிளற தொடங்கியது..!
நீதி : தகுதியிள்ளவர் பயனில்லாத இடத்தில் இருப்பது எந்தப் பயனையும் தராது..!
ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...
காட்டில் ஒருநாள் யானையை வேட்டையாட வெட்டிவைத்த பள்ளத்தில் ஒரு ஓநாய் விழுந்து விட்டது..! எம்பி குதித்து பார்த்தும் தப்பிக்க வழியில்லாத ஓநாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்தது..அந்த குரல் கேட்டு சிறிய யானை ஒன்று வந்து பள்ளத்தில் எட்டிப் பார்த்தது..!
ஓநாய் நண்பனே.. பள்ளத்தில் உன்னை யாரும் தள்ளிவிட்டார்களா? அல்லது தவறி விழுந்து விட்டாயா.? எனக் கேட்டது யானை. சட்டென யோசித்த ஓநாய் யானையண்ணே.! என்னை யாரும் தள்ளியும் விடலை தவறியும் விழுகலை நானா தான் குதிச்சேன் என்றது..!
நீயாக குதித்தாயா..! ஏன் என்றது யானை', அதற்கு ஓநாய் "இது போல பள்ளத்தில் தானாக வந்து எந்த மிருகம் குதிக்கிறதோ அந்த மிருகத்துக்கு அபூர்வ சக்தி கிடைக்குமாம் இரு முனிவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன், உடனே குதித்து விட்டேன் என்றது.!
அப்படியா அபூர்வ சக்தி ஏதும் உனக்கு கிடைத்ததா.? யானை கேட்க.. இல்லை அதுக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகுமாம் உனக்கும் அது வேண்டுமானல் நீயும் குதியேன் என்றது ஓநாய்..எதுவும் யோசிக்காது மறுபேச்சின்றி யானையும் அக்குழிக்குள் குதித்தது..!
ஒரு மணிநேரம் ஆயிற்று...! என்ன ஓநாயே ஒன்றும் நடக்க வில்லையே என யானை கேட்க அது தான் எனக்கும் தெரியவில்லை ஒன்று செய் நீ சற்று அமர்ந்து கொள் நான் உன் முதுகில் ஏறி வெளியே போய் அந்த முனிவர்களை கேட்டு வருகிறேன்" என்றது ஓநாய்..!
நீ வெளியேறிவிட்டால் நான் எப்படி மேலே வருவது என யானை கேட்க அதெல்லாம் நான் உதவுகிறேன் நீ இப்போது உதவு என்றது ஓநாய்.. அதன் பேச்சை நம்பி குனிந்த யானையின் முதுகில் தாவி அது நிமிர்ந்ததும் பள்ளத்தை விட்டு வெளியே குதித்தது ஓநாய்..!
ஓநாய்"சரிப்பா நான் கிளம்புறேன் என்று யானையிடம் சொல்ல.. நண்பா உதவிக்கு ஆள் அழைத்து வருவாயல்லவா என்று யானை கேட்க.. முட்டாள் யானையே உன்னை எப்படி காப்பாற்றுவது இதை நீ குதிப்பதற்கு முன் யோசித்திருக்கணும் என்று கூறி ஓடி மறைந்தது.!
நீதி : எதிலும் இறங்குவதற்கு முன் ஏறும் வழியை யோசிக்கவேண்டும்..!
ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...
ஒரு நத்தை தினமும் இரை தேட செல்கையில் ஒரு கூட்டுப்புழுவை பார்க்கும்... அந்த புழுவின் வால் மட்டும் துடிக்கும் ஆனால் வேறெங்கும் நகராது.. நத்தை சொன்னது "ஏய் புழுவே நானே மிக மெதுவாக ஊர்பவன் ஆனால் நீ என்னிலும் சோம்பேறியாய் இருக்கியே"
என்னைப்பார் எவ்வளவு அழகான ஓடுகள்.! மெதுவாக போனாலும் தினமும் என் உணவை நானே தேடுகிறேன்.. ஆபத்து வந்தால் உடலை ஓடுக்குள் சுருக்கிக் கொள்கிறேன்..! மழைக் காலங்களில் மரத்தில் வசிக்கிறேன்.. நீ வாலை மட்டும் ஆட்டுகிறாய் இது ஒரு பிழைப்பா.?
கூட்டுப்புழு அமைதியாக இருந்தது... சில வாரங்களுக்கு பிறகு நத்தை அவ்வழியே செல்ல "ஹாய் நத்தை சார்" என்ற குரல் கேட்டது திரும்பினால் அழகிய வண்ணத்துப் பூச்சி..நத்தை யோசிக்க.."என்னைத் தெரியலையா நத்தை சார் நான் தான் கூட்டுப்புழு" என்றது..!
நத்தை ஆச்சரியப்பட வண்ணத்து பூச்சி தொடர்ந்து சொன்னது.. "நீங்க பாவம் நத்தை சார் மெதுவா ஊர்ந்து போறதும் இந்த ஓட்டுக்குள்ள இருந்து உடம்பை நீட்டுறதும் சுருக்குறதும் இதை தவிர உங்கள் வாழ்க்கையில பெருசா என்ன இருக்கு..! ஆனா என்னை பாருங்க...
சுதந்திரமா சுற்றி பறக்குறேன், அழகழகான பூக்களில் போய் உட்காருகிறேன், டெய்லி ஸ்வீட்டான தேன் சாப்பிடுறேன், மகரந்த சேர்க்கைன்னு ஒரு சேவையை இந்த பூமிக்கு செய்யுறேன்.. எல்லோரும் என்னை ரசிக்கும் படி அழகா இருக்கேன்..!
இப்ப சொல்லுங்க இப்ப யாருடைய பிழைப்பு உசத்தி..! என்று சொல்லி பறந்தது.. நத்தை தலை குனிந்தது..!
நீதி : யாரையும் குறைவாக எண்ணக் கூடாது..அவரவர் சிறப்பு பெரும் காலம் வரும்..!
ஜெ.வெ.
ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...
ரவியும் அவனது மனைவியும் ஆடம்பரமாக செலவு செய்வதில் வல்லவர்கள்.. சேமிப்பு என்பதே கிடையாது.. போதாத குறைக்கு ஊர் முழுவதும் கடன்..ரவிக்கு கடன் தந்து விட்டால் அவ்வளவு தான் திரும்ப வாங்குவது பூனைத் தும்பிக்கை..! (குதிரை கொம்பு பழசு)
அந்தக் கடனை வசூலிக்க வரும் யாருக்கும் இது வரை பணம் திரும்பக் கொடுத்ததில்லை.. அடிக்கடி வீடு மாறுவது மொபைல் மாற்றுவது இவற்றில் எல்லாம் ரவி கில்லாடி.. அவன் மனைவி எதில் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் கணவனின் இந்த பிராடுக்கு பக்காத் துணை.
ஒரு நாள் ரவி வீட்டில் தன் புத்தம் புதிய பைக்கில் வந்து இறங்கினான்.. அது சமீபக் கடனில் வாங்கிய லேட்டஸ்ட் பைக்.. அந்த பைக்கை காம்பவுண்ட்டுக்குள் நிறுத்துகையில் தெரு முனையில் ரவிக்கு இந்த பைக் வாங்கக் கடன் கொடுத்தவர் நுழைவதை பார்த்தான்..!
அவருக்கு கடந்த மாதமே பணம் திருப்பித் தருவதாக வாக்களித்து இருந்தான்.. இந்தாளுக்கு எப்படி நம்ம வீடு தெரிஞ்சது?அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு வேகமாக வீட்டிற்கு ஓடினான்,மனைவியிடம் விவரம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் மறைந்து கொண்டான்.!
கடன்காரர் வந்து கதவை தட்டினார்.. கூலாக கதவை திறந்த ரவியின் மனைவி யாரு நீங்க என்ன விஷயம் என்றாள்.. "ரவி சார் இல்லிங்களா மேடம்". அவரா வெளியே போயிருக்காரே" "இல்லிங்க மேடம் இந்த தெரு முனையில தான் என் பிரண்டு வீடு..!
நான் வீட்டுக்குள்ள அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தேன் அப்ப ரவி ஸார் பைக்ல வந்ததை நான் பாத்தனே" என்றார்..வீட்டிற்குள் உள்ளே ஒளிந்து இருந்த ரவி இதைக் கேட்டு திடுக்கிட்டான் ஆகா வசமா மாட்டிக்கிட்டோமே நம்ம மனைவி இனி எப்படி சமாளிப்பா என்று பதறினான்..!
"அட இல்லிங்க ஸார் அவர் காலையில போனவர் நீங்க அவரை மாதிரியே வேற யாரையோ பார்த்து இருப்பிங்க"என்று சிக்ஸர் அடித்தாள்.? "அப்ப வாசல்ல நிக்குற பைக்கு "இது கடன் காரரின் பவுன்சர்..சற்று திடுக்கிட்டாள் ரவி மனைவி...
"அந்த டேபிளில்பாருங்க ஹெல்மெட் இருக்கே"அடுத்த பவுன்சர்.. பொறுப்பில்லாது தான் மட்டும் ஒளிந்து கொண்டு ஹெல்மெட்டை ஒளிக்காத கணவனை நினைத்து எரிச்சலுற்றாள்.. சட்டென ஆமா சார் இந்த ஹெல்மெட் அவருது தான்..வாசலிலுள்ள பைக்கும் அவருதுதான்.
ஆனா அவரு என் ஸ்கூட்டிய எடுத்துகிட்டு இல்ல வெளியே போயிருக்கிறாரு..! என்று கடன் காரர் வீசிய 2 பவுன்சர்களிலும் 2 சிக்ஸர்கள் அடித்தாள்..ரவியே மிரண்டு போனான்.. சரிங்க நான் வந்ததா சார் கிட்ட சொல்லுங்க என்று கடன் காரர் கிளம்பினார்..!
அவர் சென்றதும் மறைந்திருந்த ரவி ஓடி வந்து மனைவியை கட்டிக் கொண்டான்.. சூப்பரா சமாளிச்சே.. இந்த ஹெல்மெட் மேட்டர்ல கொஞ்சம் பயந்துட்டேன்..என்றவனை பார்த்து "நான் புத்திச்சாலித்தனமா இல்லாம இருந்தா மாட்டி இருப்பிங்க"
"போயி வேற வீடு பாருங்க இந்தாளுக்கு வீடு தெரிஞ்சு போச்சு சீக்கிரம் மாறிடணும்" என்றாள்..! உன்னை மாதிரி புத்திசாலி பொண்டாட்டி இருக்குற வரைக்கும் எத்தனை பேர வேணா ஏமாத்தி எவ்வளவு கடன் வேணும்ன்னாலும் வாங்கலாம் என்றான் ரவி..!
மீண்டும் கதவு தட்டப்பட்டது.. சற்று திடுக்கிட்ட மனைவி சைகை காட்ட மீண்டும் ஒளிந்து கொண்டான் ரவி.. கதவை திறந்தால் நின்றது அந்த பிளாட் வாட்ச்மேன்.. என்னப்பா என்றாள்.. அம்மா யாரோ ஒருத்தர் ஐயாவோட பிரண்டாம்" இப்ப கூட வந்திருந்தாரே.!
ஆமாப்பா.. சார் பிரண்டு தான் ஏன் அவருக்கு என்னா..? அப்படா சார் பிரண்டு தானா இப்ப தான்மா நிம்மதி..! ஏன் உனக்கு என்னா நிம்மதி.? என்றவளிடம் "அம்மா ஐயா ஏதோ அவசரத்துல பைக் சாவிய வண்டியிலயே வச்சுட்டாரு போல..
அவரு பைக்கு கிட்ட வந்து அதை பார்த்தாரு சிரிச்சுகிட்டே வண்டிய ஓட்டிகிட்டு போய்ட்டாரு.. நான் திருடனோன்னு நினைச்சேன்.. நீங்க சார் பிரண்டுன்னு சொல்லி என் வயித்துல பாலை வாத்திங்க.. என்றபோது ரவி மனைவி முகத்தில் கொசுவாடவில்லை..!
நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு..!
ஜெ.வெ.
ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்..
ஆட்டோ... கைத்தட்டி அழைத்தான் ஹரி,போக வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு அமர்ந்தான். இன்னும் 10 நாளில் அவனது தங்கை திருமணம், பணப்பற்றாக்குறைக்கு தான் இப்போது ஒருவரை பார்த்து விட்டு வருகிறான்..! அவரும் கை விரித்து விட்டார்..!
ஆத்திரமாக வந்தது அவனுக்கு..பேசாம எங்கயாவது கொள்ளையடிச்சிடலாமா என்று கூட யோசித்தான்.. தற்செயலாக ஆட்டோ சீட்டின் பின் பகுதியில் கை வைக்க ஒரு சிறிய பேக் தட்டுப்பட்டது.. மெல்ல அதை எடுத்தான் கனமாக இருந்தது..! மெதுவாக அதை திறந்தான்..
உள்ளே புது 1000 ரூபாய் கட்டு 3 இருந்தது கிட்டத்தட்ட 3 இலட்சம்..ஹரியின் தேவையே 2 லட்சம் தான்... இப்போது கையில் 3 லட்சம்..! நம் மீது இரக்கம் கொண்டு கடவுளாக பார்த்து தான் நமக்கு இப்படி ஒரு உதவி செய்து இருக்கிறார்..! என்று நினைத்தான்.
மனசாட்சி சொன்னது இது யார் பணமோ போய் காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவோம்.. ஆனால் ஹரி தான் வென்றான்.. மெல்ல அந்த பையை எடுத்து மறைத்துக் கொண்டு ஆட்டோவை நிறுத்த சொன்னான்..பேரம் பேசாது பணம் தந்துவிட்டு இறங்கினான்..!
அங்கிருந்து ஒரு பஸ் பிடித்து வேறு ஒரு இடம் போய் மீண்டும் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்..(முன் ஜாக்கிரதை) பணம் கிடைச்சதாங்க என்று கேட்ட மனைவியிடம் கிடைச்சது என்று மட்டும் சொல்லி பணத்தை அவளிடம் தந்தான்..!
பணத்தை வாங்கிய ஹரியின் மனைவி.. "என்னங்க 3 லட்சம் இருக்கு 2 லட்சம் தானே தேவை என்றாள்.."இங்க பாரு உன் கழுத்துல காதுல பேருக்கு கூட தங்கமில்ல உனக்கும் ஏதாவது வாங்கிக்க தங்கமா இருந்தா நாளைக்கு உதவும்"என்றான் ஹரி..!
நகை என்றதும் மனைவிக்கு மகிழ்ச்சி..அன்று மாலையே நகைக்கடைக்கு கிளம்பினார்கள் தேவையானதை ஆசை தீர தேர்ந்தெடுத்து வாங்கினார்கள்.. பிறகு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்ப... வீட்டு வாசலில் போலீஸ் வாகனம் நின்று கொண்டிருந்தது..!
ஹரிக்கு லேசாக உதறலெடுத்தது..நீங்க தானே மிஸ்டர் ஹரி.. என்றார் அந்த அதிகாரி ஆ..ஆ.ஆமா சார் என்ன ஸார் எ..எ.. எதுவும் பிரச்சனையா..? என்றவனை மேலும் கீழும் பார்த்த அதிகாரி வாங்க வீட்டுக்குள்ள போயி பேசுவோம் என்றார்..!
வீட்டை திறந்ததும் உடன் வந்த போலீசார் வீட்டிற்குள் சோதன போட ஆரம்பித்தார்கள் என்ன சார் இது"என்றவனிடம் அதிகாரி சொன்னார் நகைக் கடையில நீங்க கொடுத்தது எல்லாம் கள்ளநோட்டு..அதான் உங்களை விசாரிக்க வந்து இருக்கோம்..!
நீதி : பிறர் பொருளை தனதாக்க நினைப்பது பெரும் துன்பத்தை தரும்...
ஜெ.வெ.
ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்..
பேராசை பிடித்த குதிரை வியாபாரி ஒருவன் இருந்தான்.. அவன் ஒரு நாள் குதிரைச் சந்தைக்குப் போய் குதிரைகளை விற்று விட்டு வீடு திரும்பும் போது.. அவனை பின் தொடர்ந்தது எங்கிருந்தோ தப்பி ஓடி வந்த குதிரை ஒன்று.! குதிரை வியாபாரி.....
இந்தகுதிரை யாருடையதோ ஊர் எல்லையை தாண்டிய பின்னும் இக்குதிரை நம் பின் வந்தால் இதை எப்படியாவது நம் வீட்டுக்கு கொண்டு போய்விடலாம் என்று நினைத்தான்.! அதே போல குதிரையும் அவனை எல்லையை தாண்டியும் பின் தொடர்ந்தது..!
சந்தோஷமடைந்த அவன் தன் யுக்திகளால் அதற்கு கடிவாளமிட்டு தன்னுடைய குதிரைகளை விற்ற பணம் உட்பட எல்லா பொருட்களையும் அதன் மீது ஏற்றினான்.. அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கன் குதிரையை பார்த்து ஐயா, இந்த குதிரை விலை என்ன என்றான்..!
மனதிற்குள் குதூகலமடைந்த வியாபாரி..பேராசையுடன் பெரும் விலை சொன்னான்.. அதை கேட்ட வழிப்போக்கன்.. "ஐயா நான் அருகிலிருக்கும் ஊருக்கு தான் போகிறேன் என் மாமா அங்கு பெரும் செல்வந்தர்.. அவரிடம் நீ கேட்ட தொகையை வாங்கித் தருகிறேன் என்றான்.!
அந்த ஊர் தான் குதிரை வியாபாரி ஊர்.. "சரி அங்கு வந்து பணம் தா.. ஆனால் அங்கு வந்த பின் விலையில் ஒரு பைசா கூட குறைக்கமாட்டேன் சம்மதமா என்றான்" வியாபாரி. வழிப்போக்கனும் சரி எனச் சொல்ல.. வியாபாரிக்கு மனதிற்குள் பெரும் மகிழ்ச்சி..!
ஓசியில் கிடைத்த இந்த குதிரை யாருடையதோ ஆனால் நமக்கு பெரும் லாபம்.. என்று எண்ணினான்.. சிறிது நேரத்தில் சற்று ஓய்வுக்காக ஒரு ஆற்றங்கரையில் நின்றார்கள்.. குதிரையை கரையில் ஒரு கல்லில் கட்டிவிட்டு ஆற்றில் சுகமாக குளித்தான் வியாபாரி..!
குளித்து விட்டு வந்து பார்க்கும் போது நின்ற குதிரையின் நிழலில் அசந்து தூங்கிக் கொண்டு இருந்தான் வழிப்போக்கன்..! பேராசை பிடித்த வியாபாரிக்கு இப்போது ஒரு யோசனை உதித்தது.. மெல்ல குதிரையை அவிழ்த்துவிட்டு வழிப்போக்கனை எழுப்பினான்...!
எழுந்த வழிப்போக்கன்.. போகலாமா ஐயா என்றான்.. அதெல்லாம் போகலாம் அதற்கு முன் குதிரை விலையில் ஒரு மாற்றம் என்றான் வியாபாரி.! எதற்கு ஐயா இந்த திடீர் மாற்றம்.. நான் உனக்கு குதிரையின் விலை தான் சொன்னேன் குதிரையின் நிழலுக்கு அல்ல...! ஆகவே
அதை பயன்படுத்தியதற்காக அதற்கும் ஒரு விலை நீ தர வேண்டும் என்றான் வியாபாரி..! கோபமடைந்த வழிப்போக்கன் ஐயா.. இது அநியாயம் குதிரை நிழலுக்கு விலை என்பது இது வரை நான் கேள்விப்படாதது..நீங்கள் என்னை ஏமாற்றுகிறீர்கள் என்று சத்தம் போட...
உன்னை போன்ற கயவனுக்கு என் குதிரை விற்பனைக்கு அல்ல.. மரியாதையாக குதிரை நிழலுக்கு பணம் தா என வியாபாரி கூச்சலிட அவர்களுக்குள் சண்டை நடந்தது... இந்த இடை வெளியில் அந்தக் குதிரை வியாபாரியின் பொருளுடன் காட்டுக்குள் ஓடி மறைந்தது..!
நீதி : பேராசை இருப்பதையும் பறித்துவிடும்..!
ஜென் வெங்கி
ஜென் வெங்கி வழங்கும்.. குருஜியின் நீதிக்கதைகள்...
ரவி புத்திசாலி மாணவன்.. மிக மிக நன்றாகப் படிப்பான்..ஹரி சுமாராக படிப்பான் ஆனால் கடும் உழைப்பாளி.. ரவிக்கு மருத்துவகல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்பது லட்சியம்.. எனவே படிப்பு படிப்பு.. என கவனம் சிதறாது படித்தான்.. பலன்..! மாநிலத்தில் முதலிடம்..!
ஹரி ப்ளஸ்டூ பெயில்..! ரவி சொன்னான் "நண்பா கல்வி தான் உயர்ந்தது.. நீ இப்படி படிக்காமல் போனதற்கு பின்னாளில் வருந்துவாய்., படிப்பு இன்றி நீ வாழ்க்கையில் உயரவே முடியாது..நான் மருத்துவகல்லூரி சீட் கிடைத்ததும் டவுனுக்கு போய்விடுவேன்.. வரட்டுமா..
15 ஆண்டுகள்..ரவி MBBS முடித்து MS முடித்து லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மருத்துவ பட்டங்கள் பெற்று மிகச்சிறந்த மருத்துவனாக பேர் பெற்றான்.ஆனால் அவனது மருத்துவ கல்லூரி பேராசிரியர் கனவு தான் நிறைவேறவில்லை..!
இந்நிலையில் ரவிக்கு அந்த ஊரில் புதிதாக துவங்க உள்ள மருத்துவ கல்லூரியின் முதல்வராக முடியுமா எனக்கேட்டு ஒரு அழைப்பு வந்தது.. அழைத்தவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனத்தினர்.. அவர்களது குழுமத்தின் கல்லுரியே இது..!
எதையும் தரமாக செய்யும் நிறுவனம் அது.. ஆகவே அந்த பணியில் சேர சென்றான்.. அந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ரவியை வரவேற்று சேர்மனிடம் அழைத்து சென்றார்.. சேர்மனை பார்த்த ரவி வியப்பும் திகைப்பும் அடைந்தான்..அது ப்ளஸ்டூ பெயிலான நம் ஹரி.!
நீ,,,.ஹரி...நீங்க ஹரி.. சாரி.. அடடே என்ன ரவி.. நான் எப்பவுமே உன் ஹரி தான்... புரியுது என்னடா சேர்மன் சீட்டுல இவன்னுதானே யோசிக்கிற சொல்றேன்.. ப்ளஸ்டூ பெயிலானதும் அப்பாவோட ஹார்பர் வேலைக்கு போனேன்.. 6 மாசத்துல நெளிவு சுளிவு கத்துகிட்டேன்..!
அப்போ சில காண்டிராக்ட் கிடைச்சது ஆனா கையில பணம் இல்ல.. அப்பாவுக்கு ஹார்பர்ல ஒரு விபத்தாகி இறந்துட்டார்... அதுல நஷ்ட ஈடா பணம் வந்தது அத வச்சி காண்டிராக்ட் எடுத்தேன்.. அப்பா உயிர கொடுத்து கிடைச்ச காசில்லியா வெறியோட உழைச்சேன்..!
4 வருஷத்துல ஒரு கப்பல் வாங்கினேன்..அதுக்கு பிறகு முன்னேற்றம் தான் இன்னிக்கு 103 நாடுகளில் எங்க நிறுவனம் இருக்கு.. ஏராளமான தொழில்கள் செய்யறேன்... நான் அதிகம் படிக்கலை ஆத்ம திருப்திக்காக கல்விப்பணியில இறங்கி இருக்கேன்..
மெடிக்கல் காலேஜ்ன்ன உடனே நீ தான் ஞாபகத்துக்கு வந்தே.. ஸ்கூல் படிக்கும் போதே உன் திறமை எனக்கு தெரியும்... நான் தான் உன்னை இந்த பதவிக்கு பொருத்தமா இருப்பேன்னு சிபாரிசு செஞ்சேன்.. இங்க பொறுப்பு ஏத்துக்க உனக்கு சம்மதம் தானே ரவி..?
படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில உயர்ந்தது.. தோல்வி ரொம்பவும் தாழ்ந்ததுன்னு நினைச்சேன்... உழைப்பு அது எல்லாத்தையும் விட உயர்ந்ததுன்னு இப்ப தெரியுது.. எனக்கு கிடைச்ச வெற்றி ஒரே ஒரு டாக்டரை தான் உருவாக்கி இருக்கு...!
ஆனா உன் தோல்வி ஆயிரக்கணக்கான டாக்டர்களை உருவாக்கப் போகுது...! என்னை மாதிரி நூற்றுக்கணக்கான டாக்டர்களுக்கு வேலை தரப்போகுது...! என்ன மன்னிச்சுடு ஹரி" என்ற ரவியை நட்புடன் தழுவிக் கொண்டான் ஹரி..!
நீதி : உயர்வும் தாழ்வும் செயற்கையான வேறுபாடுகள் ... ஜென்வெங்கி..
ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்...
ஒரு ஊரில் நண்பர்கள் இருவர் இருந்தனர்.. ஒருவன் பெயர் ரவி.. இன்னொருவன் ஹரி.. இருவரும் ஒரு நாள் ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. அப்போது நீரில் கட்டை போல ஒன்று மிதந்து வந்ததை கண்டனர்..உடனே ஹரி ஆற்றில் இறங்கப்போனான்!
பதறிப்போன ரவி "நண்பா சற்று நில்.! அது மரக்கட்டையாக இல்லாமல் முதலையாக இருந்தால்" வேண்டாம் ஆபத்து என்று ஹரியைத் தடுத்தான்.. அதற்கு ஹரி "ரவி நன்றாகப் பார் அது அசைவற்று கிடக்கிறது அது கட்டைதான் முதலை இல்லை என்றான்"..!
"இல்லை ஹரி முதலைகளும் இப்படித்தான் அசைவற்று கிடக்கும் இதை நம்பி அருகில் சென்றால் ஆளை விழுங்கி விடும் அதன் இரை பிடிக்கும் யுக்தி அது என்றான் ரவி.. "ரவி இது மரம் தான் முதலை இல்லை நான் நம்பவே மாட்டேன் "என்றான் ஹரி..!
எப்படி அவ்வளவு உறுதியாக இது மரம் என்கிறாய் ஹரி..! "அது தான் அசைவற்று கிடக்கிறதே முதலையாக இருந்தால் அசையுமே ரவி" என்று முன்பு சொன்னதையே திரும்பச் சொன்னான்... சரி இரு நான் உனக்கு இது மரமா முதலையா என்று நிரூபிக்கிறேன்"...
என்று சொல்லிவிட்டு ரவி அருகில் தரையில் விழுந்து இருந்த நீண்ட மரக்கிளையை எடுத்து அந்த கட்டை மீது குத்த அது விருட் என்று தண்ணீருக்குள் நீந்தி மறைந்தது..! இப்போது ரவி ஹரியிடம்"நண்பா மரம் என்றாயே பார்த்தாயா அது முதலை ஒப்புக் கொள்கிறாயா"என்றான்!
அதிசயம் தான் என்றான் ஹரி..! எது அதிசயம் ஹரி முதலையா என்று ரவி கேட்க.. ஹரி நிதானமாக சொன்னான் "என் வாழ்வில் முதன் முறையாக ஒரு மரக்கட்டை நீந்திச் செல்வதை இப்போது தான் பார்க்கிறேன் என்றான்..!
நீதி : சிலர் வாழ்வில் பாடங்கள் கற்பதே இல்லை (அ) பட்டாலும் புத்தி வராது..!
ஜென் வெங்கி வழங்கும்..குருஜியின் நீதிக்கதைகள்...
ஒரு மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார் கோடிக்கணக்கான பணம், ஏராளமான தொழிற்சாலைகள் என உலகம் முழுவதும் சொத்து இருந்தது..! அவர் தன் சொந்த கிராமத்திற்கு சென்று வெகு காலம் ஆகிவிட்ட படியால் அங்கு போய் வர தயாரானார்..!
தனது புத்தம் புது BMW காரில் ஏறி புறப்பட்டார்..அங்கு சாலையோர வயலில் ஒரு விவசாயி மண் வெட்டிக் கொண்டிருந்தார். அவரது உடலில் வியர்வை ஆறாக ஓடியது,அருகிலிருக்கும் மரத்தில் அவரது மதிய உணவு ஒரு பித்தளை தூக்குவாளியில் தொங்கிக் கொண்டிருந்தது..!
தொழிலதிபருக்கு சட்டென ஒரு ஏக்கப் பெருமூச்சு.. அட..! இந்த விவசாயிக்கு தான் என்ன வாழ்க்கை... தினமும் உழைக்கிறான்.. கிடைக்கும் வருமானத்தில் கூழோ, கஞ்சியோ குடிக்கிறான்.. உடல் உழைப்பு இருப்பதால் ஆரோக்கியமாகவும் இருக்கிறான்..!
நம்மைப் போல இன்கம்டாக்ஸ், மார்க்கெட்டிங் போட்டி, பங்குசந்தை, அந்நியச் செலவாணி, அரசியல் களவாணி, இப்படி எந்த பிரச்சனையும் இல்லை.. இதெல்லாம் என்ன பிழைப்பு..? இவரைப் போல விவசாயி ஆவது நிம்மதி.. அது தான் நல்ல பிழைப்பு என எண்ணினார்..!
இவரது கப்பல் போன்ற கார் தன் வயலுக்கு அருகே நின்றதால் அந்த விவசாயி யாராக இருக்கும் எனப் பார்க்க கார் அருகே வந்தார்..!கார் கதவை திறந்து இறங்கிய தொழிலதிபர் பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொண்டார்.. உடனே அந்த விவசாயி..
ஐயா.. நம்ம ஊர்காரரா போயிட்டிங்க பெரிய முதலாளி ஏகப்பட்ட தொழில்ன்னு சொல்றிங்க உங்க பேக்டரியில எனக்கு ஒரு வேலை கிடைக்குமா என்றார்.! ஏன் இப்ப நீங்க சந்தோஷமா தானே இருக்கிங்க என்று வியப்புடன் கேட்டார் அதிபர்..!
எங்கங்கய்யா தினமும் மாடா உழைக்கிறேன், அரைவயிறு கூழோ கஞ்சியோ கிடைக்குது மழை பொய்ச்சுடுச்சு... ரத்தமெல்லாம் வியர்வையா போயி என்ன பிரயோசனம்..? அய்யா ஒரு வேலை தந்திங்கன்னா டவுனு பக்கம் போயி குடியேறிக்கலாம்..!
நெதமும் அரிசி சோறு சாப்பிட்டு பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கலாம் டவுன் வேலைன்னா வூட்டுல எல்லாரும் ரொம்ப சந்தோஷப் படுவாங்க..என்ன மாதிரி கஷ்ட ஜீவனக்காரன் வயக்காட்டுல உழைக்கிறது எல்லாம் ஒரு பொழைப்பா என்றார்..!
நீதி : இக்கரை அக்கரை இரண்டுமே பச்சையில்லை..!
ஜென் வெங்கி
குருஜியின் நீதிக்கதைகள்...
ஒரு ஊரில் ரவி என்பவனும் ஹரி என்பவனும் வசித்தனர்.. இருவரும் நல்ல நண்பர்கள் இதில் ரவி எப்போதும் உண்மை தான் பேசுவான்.. ஹரி அப்படியே நேரெதிர் குணம்.! வாயைத் திறந்தால் பொய் தான்.. ஆனால் இந்த குணத்தால் அவர்களது நட்பில் பிரச்சினை இல்லை.!
ஒரு முறை இருவரும் ஒரு காட்டிற்கு சுற்றுலா சென்றார்கள்.. அந்தக்காட்டில் இருவரும் வழி மாறி சென்றபோது..அங்கே சில விந்தையான மனிதர்களை பார்த்தார்கள்.. அவர்கள் அனைவரும் மனித உடலில் தவளை தலையை பொருத்தியது போல இருந்தனர்..!
அவர்களது சருமமும் தவளைகளின் சருமம் போல் சொரசொரப்பாகவும் அருவெறுக்கும்படி இருந்தது.. ஆண்,பெண்,சிறு குழந்தைகள் எல்லோரும் தவளைகள் போல குதித்து குதித்து நடந்தனர்..அவர்களின் மேலிருந்து மெல்லிய துர்நாற்றமும் அடித்தது..!
இவர்களை சூழ்ந்து கொண்ட அந்த தவளை மனிதர்கள்..எங்கள் இடத்தில் அத்துமீறி நுழைந்தால் தண்டனை உண்டு..வாருங்கள் எங்கள் தலைவனை சந்திக்க என்று இருவரையும் இழுத்து போனார்கள்.. அவர்கள் தலைவன் இவர்கள் இருவரையும் பார்த்தான்..!
மனிதர்களே..உங்களுக்கு ஒரு வாய்ப்பு..! எங்கள் தவளை தேசத்தை பற்றியும், எங்கள் மக்களை பற்றியும் எங்கள் அழகைப் பற்றியும் உண்மையாக என்ன நினைக்கிறீர்கள் என்று சொன்னால் அந்த உண்மைக்கு பரிசாக உங்களை விடுவித்து விடுவேன் என்றான்..!
பொய்யன் ஹரி.. "தன்னிகரில்லா தவளை அரசரே..! உலகிலேயே சிறந்த நாடு இந்த தவளை நாடு..நீங்கள் அனைவரும் அழகாக இருக்கிறீர்கள்.. உங்கள் சீரிய ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்கின்றனர்.! உங்கள் மீது வீசும் நறுமணம் எந்த பூவிலும் இல்லை"என்றான்.!
தவளை அரசனுக்கு மிக்க மகிழ்வாக இருந்தது.. சபாஷ்..நீ கூறியது எல்லாம் எங்களை கவர்ந்து விட்டது..உனக்கு பொன்னும் பொருளும் பரிசாகத் தர உத்தரவிடுகிறேன்.. என்று கூறிவிட்டு ரவியிடம் திரும்பி... சரி நீ என்ன நினைக்கிறாய்..? என்று கேட்டான்..!
பொய் சொன்ன ஹரிக்கே இவ்வளவு பொன்னும் பொருளும் என்றால் நாம் பேசும் உண்மைக்கு..! என்று எண்ணியபடி.. அரசே நீங்கள் அனைவரும் சொறித் தவளை போலவே இருக்கிறீர்கள், அவலட்சணமான அழகும், துர்நாற்றமடிக்கும் உடலும் சகிக்கவில்லை..!
தவளைகளுக்கெல்லாம் தவளையாக நீங்கள் ஆட்சி நடத்துகிறீர்கள்..என்றான் ரவி..! கடுங்கோபம் அடைந்த தவளைஅரசன்.. யாரங்கே... நம் குலத்தை இழிவாக பேசிய இவனை நையப் புடைத்து கொன்று காட்டின் எல்லையில் புதைத்து விடுங்கள் என்று கத்தினான்..!
பிறகு ஹரி அந்த அரசனை சமாதானப் படுத்தி எனக்கு தர வேண்டிய பரிசுக்கு பதிலாக என் நண்பனை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டு ஒரு வழியாக இருவரும் வீடு திரும்பினர்.!
நீதி : உண்மையை கேட்கும் தகுதியில்லாதவரிடம் உண்மை பேசக்கூடாது..!
ஜென் வெங்கி
குருஜியின் நீதிக்கதைகள்...
இரண்டு அடுத்தடுத்த வீடுகளின் இருபக்கமும் காலி இடம் இருந்தது.. இதில் வலது புற காலியிடம் அந்த ஊர் அரசியல்வாதிக்கு சொந்தமானது.. இடது புற காலியிடம் அதை ஒட்டி இருந்த வீட்டுக்காரருக்கு சொந்தமானது.. அந்த வீட்டுக்காரர் பரம சாது...பெயர் ராமு..
அந்த ராமுவின்அடுத்த வீட்டுக்காரர் பெயர் தாமு... அவர் தினமும் தன் வீட்டுக் குப்பைகளை அந்த காலியிடத்தில் கொட்டிவந்தார்.. அவரிடம் நம் ராமு எவ்வளவோ முறை பேசியும் கெஞ்சிப் பார்த்தும் அவர் அதை மதிக்கவுமில்லை, குப்பை கொட்டுவதை நிறுத்தவுமில்லை.!
ஒருநாள் தாமு வீட்டில் ஒரு விசேஷம்..! அந்த விசேஷத்தில் விருந்து சாப்பிட்டவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கொண்டு வந்து ராமுவின் காலியிடத்தில் கொட்டிவிட்டார்.! ராமு சாதுவாக இருப்பினும் இந்தச் செயல் அவருக்கு கடுங்கோபத்தை உண்டாக்கியது..!
நேராக தாமு வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார்.. என்னை என்ன கிள்ளுகீரையாக நினைத்தீரா? என் இடத்தில் குப்பையை கொட்டுகிறீரே..எங்கே தைரியமிருந்தால் உங்க வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் அரசியல்வாதி இடத்தில் கொட்ட வேண்டியது தானே என்றார்.!
தாமு அமைதியாக சொன்னார்.. ராமு சார் நானும் அப்படி நினைப்பதுண்டு ஆனால் அது அரசியல்வாதியின் இடம் அவர் நினைத்தால் என்னை இந்த வீட்டை விட்டே காலி செய்து விடுவார்.. அவரோடு மோதும் திராணி எனக்கில்லை..நீங்கள் சாது அதிக பட்சமாக இந்த மாதிரி வந்து கேள்விதான் கேப்பிங்க.. உங்களை சமாளிப்பது எனக்கு சுலபம் என்றார்..!
நீதி : செயலாகும் இடத்தில் தான் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்..!
ஜென் வெங்கி