Sunday 28 February 2016

டாலர் Note(d)..

#நோட்டு_அடித்ததை_நோட்டம்_விட்டோம்

டாலஸ் நகரில் நண்பர் சவுந்தரிடம் இந்த ஊரில் சுற்றிப்பார்க்க முக்கியமான இடங்கள் என்னென்ன? எனக் கேட்டபோது அமெரிக்க டாலர் நோட்டு ப்ரிண்ட் பண்ற ப்ரஸ் இங்க தான் இருக்கு பார்க்குறிங்களா என்றார். கண்கள் விரிய அங்க எல்லாம் பப்ளிக் அலவ் பண்றாங்களா என்றோம் வியப்புடன்.! ஆம் என்றவர் அன்று காலையே நண்பர் நந்தாவுடன் எங்களை அனுப்பி வைத்தார். தீபாவளி பட்டாசை கையில் கொடுத்துவிட்டு சத்தமில்லாம வெடிங்க என்று சொல்வது போல வாசலில் இருந்த செக்யூரிட்டி முக்கியமாக உள்ளே காமிரா செல்போனுக்கு அனுமதி இல்லை என்றார்.. கட்டிடத்தின் நான்கு புறமும் இரும்பு வேலிகளில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்க மெயின் பில்டிங்கிற்கும் ரிசப்ஷனுக்கும் இடையே ஒரு சேப்பாக்கம் கிரவுண்ட்டே கட்டலாம்.

ரிசப்ஷன் மெட்டல் ஸ்கேனர் எங்களை கற்பழித்து புனிதமானவர்கள் என சான்றிதழ் அளிக்க உள்ளே அனுமதிக்கப் பட்டோம். உள்ளே சென்று ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்ற 35 விநாடி பேட்டரி கார் வந்தது.. வெளுத்த வெள்ளரிப்பழ நிறத்தில் போலீஸ்  சீருடையில் ஒரு பெண்மணி கண்ணிலேயே சிரித்து வரவேற்று வண்டியேற்றினார். 5 நிமிட பிரயாணம் மெயின் பில்டிங் உள்ளே மீண்டும் மெட்டல் யாக குண்டத்தில் இறங்கி எங்களை நிரூபித்து உள்ளே நுழைந்தோம்.. முதலில் இருந்தது இன்பர்மேஷன் சென்டர்.. அங்கு டாலர்கள் பற்றிய  அச்சிடப்பட்ட அழகிய ப்ரவுஷர்களாக இருந்தன அவை இலவசம் தான். எடுத்துக் கொண்டோம். 
அடுத்து டாலர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் ரூபாய் நோட்டுகளின் பிளாக்குகள் டாலரில் உள்ள வாட்டர் மார்க்குகள் டாலர் நோட்டின் சீரியல் எண்கள் இவற்றின் மாதிரிகளை கண்டோம்.. சிலவற்றை ஐபேடுகளில் டச் செய்து நாமே பார்க்கும் வசதி இருந்தது.. அடுத்து டாலர் நோட்டு பற்றிய விநோத செய்திகள் அரங்கு.

அமெரிக்காவில் மட்டுமே டாலர் நோட்டை கிழித்து தந்தாலும் செல்லும்.. ஒரு மாடு விவசாயியின் 6000 டாலர்களை தின்றுவிட அந்த மாட்டை வெட்டி அதன் வயிற்றில் இருந்த் நோட்டுகளை சரிபார்த்து அந்த விவசாயிக்கு 5000 டாலர்களை திருப்பித் தந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது.. தீ விபத்தில் பாதி எரிந்த நோட்டுகள், முழுதும் கருகியவை, கரையான் அரித்த நோட்டுகள், மழை வெள்ளத்தில் ஊறிய நோட்டுகள் இப்படி எந்த நிலையில் பணம் தந்தாலும் அதற்கு நிகரான டாலராக மாற்றித் தருகிறார்கள். அவர்கள் பணம் எந்நிலையிலும் மதிப்பு மாறாத பணம் அடுத்து டாலர் ப்ரிண்ட்டிங் செய்யும் ப்ரஸ்.. இங்கு நுழைபவர்களுக்கு ஒரு வாக்கி டாக்கி தரப்படுகிறது அதில் ஆங்கிலம் ஸ்பானிஷ் சீனம்  முதலான 8 மொழிகளில் அறிவிப்பு வரும். குறிப்பிட்ட இடத்தில் போய் நின்று அங்கு அறிவிப்பு பலகையில் உள்ள எண்ணை வாக்கி டாக்கியில் அழுத்தினால் அந்த இடத்தைப் பற்றிய அறிவிப்பை வாக்கி டாக்கியில் கேட்கலாம்.

டாலர் ப்ரிண்ட் செய்யும் இடத்தை கழுகுப் பார்வையில் பார்க்கும் படி ஏற்பாடு..புல்லட் ஃப்ரூப் கண்ணாடிகள் வழியாக துல்லியமாக தெரிந்தது. உலகின் மதிப்பு மிக்க பணம் அங்கு ஷீட் ஷீட்டாக ப்ரிண்ட் ஆகி தனித் தனியாக கட் செய்து மிஷின் மூலம் கட்டுகளாகியது. ஒரு இடத்தில் இருந்த சிறிய குவியலில் நீங்கள் பார்க்கும் குவியல் 16 மில்லியன் என எழுதியிருந்தனர். லட்சகணக்கில் அடிக்கும் கட்சி போஸ்டர்கள் போல பணம் அச்சடிக்கப்பட்டு அதை குவியல் குவியலாக அடுக்கியிருந்தனர்.. அமெரிக்காவில் இரண்டு இடங்களில் மட்டுமே டாலர் அச்சிடப்படுகிறதாம் ஒன்று வாஷிங்டன் இன்னொன்று டாலஸ்.. பலவிதமான வாட்டர் மார்க் நுணுக்கமான எண்கள் குறியீடுகள் எல்லாம் ஒவ்வொரு செக்ஷனில் பூர்த்தியாக இறுதியில் கட்டுகளாகிறது.

பிறகு டாலர் பற்றி ஒரு திரைப்பட காட்சியையும் பார்த்து விட்டு.. வெளியேறினால் டாலர் ஷாப்.. வித விதமான கீ செயின்கள், போஸ்டர்கள், டேபிள் வெயிட்டுகள், பொம்மைகள் எல்லாம் டாலர் படம் போட்டு ஒரு புறம் ப்ரிண்ட் ஆன டாலர் ஷீட் கூட விற்றார்கள்.. ஞாபகத்துக்கு ஒரு போஸ்டர் மட்டும் வாங்கினேன்.. இந்த இடத்தை பற்றி ஃபேஸ்புக்கில் எழுதப் போவதால் சில புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் செக்யூரிட்டி அதிகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர் கஞ்சா கருப்புவை பார்த்த வீனஸ் வில்லியம்ஸ் பார்வையில் என்னை பார்த்து அதோ தூரத்தில் (சுமார் 2கி.மீ) இருக்கும் நுழைவு வாயிலில் போட்டோ எடுத்துக் கொள் என்றார் வெகு அலட்சியமாக.. கண்ணால் சிரித்த கண்ணழகி மெரிலின் தான் ஐடியா சொன்னார் கூகுளில் போட்டோ கிடைக்கும் என்று அவர் சொன்னதன்படி எடுத்து பதிவிட்டு உள்ளேன்..அவருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை  டாலர் பற்றி எழுத உதவி செய்த அவருக்கு அடுத்த முறை மீனாட்சி அம்மன் கோவில் டாலரை நேரில் பரிசளிக்க அந்த மீனாட்சி அருள வேண்டும்.

ஃப்ரிஸ்கோ சென்னை கஃபே...

இந்த அமெரிக்க பயணத்தில் கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் கால் பதித்துவிட்டோம்.. எந்த மாநிலத்திலும் இல்லாத அனுபவம் டெக்ஸாஸ் மாநிலத்தில்..! அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றான இங்கு இரட்டை நகரங்கள்.. டாலஸ் மற்றும் ஃபோர்ட்வொர்த் இந்த இரட்டை நகரில் கெளபாயின் பேரல் கன்னின் இரட்டைக் குழல் போல செயல்பட்டு வருகிறது சென்னை கஃபே மற்றும் மால்குடி ரெஸ்ட்டாரெண்டுகள்.. அமெரிக்காவின் பிற மாநிலங்களில் ஏதாவது ஒரு இந்திய உணவுக்கடை தான் பிரபலமாக இருக்கும்.. ஆனால் டாலஸில் அப்படி இல்லை. இங்கு ஏற்கனவே மதுரை தட்டுக்கடை பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால் சென்னை கஃபே போன பின்பு தான் டாலசில் ஆரம்பிக்கப்பட்ட  முதல் தமிழக உணவகம் இது என அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று ஃபிரான்ச்சைஸ் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது சென்னை கஃபே.. இவர்களின் இன்னொரு கடை தான் ப்யூர் வெஜ் ரெஸ்ட்டாரண்ட் ஆன மால்குடி கார்டன்.. ஈரோடு மகேஷுக்காக ஒரு வேளை அசைவம் துறக்க முடிவெடுத்தோம்.. Tennyson Pkwy அருகே Plano என்னுமிடத்தில் இருந்தது.. மால்குடி கார்டன்.. இங்கு தான் முதலில் அசைவம்/ சைவம் இரண்டுமுள்ள சென்னை கஃபே துவங்கியதாம்.. ஜஸ்ட் லைக் தட் என அசுவாரஸ்யமாக கடையில் நுழைந்து படு அலட்சியமாக அங்குள்ள பஃபே கவுன்ட்டரை நோட்டமிட்டோம்.

கைக்குத்தல் அரிசி காய்கறி சாதம், வெஜ் புலாவ், கம்பங்கூழ், பருப்புருண்டைக் குழம்பு, பீன்ஸ் பொரியல், நவதானியங்களில் செய்த பனீர் கூட்டு, மிளகு ரசம், கேட்டால் நம்ம ஊரு வெள்ளைச் சோறு, பழங்கள் மற்றும் குதிரை வாலி அரிசி பாயாசம்.. இது தான் மெனு.. போதாத குறைக்கு விருந்தினரான எங்களுக்கு மசால் தோசையும் பூரியும் செய்து தருவதாக சொன்னார்கள். தீவிர அசைவர்களாக சசியும் கிறிஸ்டோபரும் அம்மாவை கண்ட அமைச்சர்கள் போல கொஞ்சம் வெள்ளை சாதம் ரசம் அப்பளத்துடன் ஓரு டேபிளில் பதுங்கிக் கொண்டார்கள்.. எதையும் தாங்கும் இதயமும் இன்னும் வீங்கும் உறுதியும் உள்ள நான் களத்தில் இறங்கினேன்.. முதலில் அந்த கைக்குத்தல் அரிசி காய்கறி சாதம்.. வாவ் சூப்பரோ சூப்பர்.

சைவ பிரியாணி போல அமர்க்களம்.. புலாவும் மிகுந்த சுவை.. கம்பங்கூழை தவிர்த்திட பார்த்தேன்.. நாகரீகம் கருதி சின்ன கப்பில் இரு ஸ்பூன் அளவு எடுத்து வந்தேன்.. ஆனால் 10 நிமிடத்திற்கு பின் யாரைப் பற்றியும் கருதாதுஅநாகரிகமாக டம்ளர் டம்ளராக மொண்டு குடித்தேன்.. தயிருடன் கலந்து அலாதி சுவையில் இருந்தது.. பிறகு பருப்பு உருண்டைக் குழம்பு வத்தக் குழம்பு போல அட்டகாசப் படுத்தியது. ரசம் மிகப்பிரமாதம்.. ஓரங்கட்டி மறைந்த சசியும் கிறிஸ்டோவும் அவர்களை விட அதி தீவிர அசைவனான நான் என்ன செய்கிறேன் என என்னைப் பார்க்க வந்தார்கள்.. மேசையில்  நான் சைவ ராஜ்கிரண் போல சாப்பிட்ட ஸ்டைலை கண்டு சிலையாகினர்.. அந்த உணவின் அருமை பெருமைகளை ஏப்பப் பின்னணி இசையுடன் அவர்களுக்கு நான் சொல்ல.. அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கடை இன்னும் இரண்டு ராஜ்கிரண்களை பார்த்தது..

கம்பன் இருந்திருந்தால் "வெங்கியுடன் மூவரானோம்" எனப் பாடியிருக்கலாம். கடைசியாக குதிரைவாலி பாயாசம் சாப்பிட்டு குதிரை சக்தியுடன் சுற்றப்போனோம்.. அன்று இரவு ஃப்ரிஸ்கோ என்னுமிடத்தில் இருக்கும் சென்னை கஃபே போக வேண்டும் என்றார்கள்.. பெரிய கடை.. வாசலிலேயே பூச்செண்டு தந்து வரவேற்றார்கள்... முதலில் ஓட்டலைச் சுற்றிக் காட்டினார்கள். அவர்களது சமையலறைக்கு போனோம்...
பெரிய கடை, சுகாதாரமான சூழல், ஹை டெக் இயந்திரங்கள் நாசியைத் துளைக்கும் உணவுகளின் வாசனை.. உடனே சாப்பிடும் ஆவலை அடக்கிக் கொண்டு மெல்ல அங்கிருந்து அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உணவக அரங்கில் வந்து அமர்ந்தோம்..  விருந்துக்கு ஒவ்வொரு தமிழ்க் குடும்பமாக வந்து சேர.. சரியாக இரவு 8 மணிக்கு துவங்கியது அந்த பிரசித்தி பெற்ற டின்னர்.. எங்களது நீளமான டேபிளை ஒரு ஃபேஷன் ஷோ ரேம்ப்பாக (Ramp)கற்பனை செய்து கொள்ளுங்கள்..

அந்த மேடையில் மட்டன், சிக்கன், ஃபிஷ், முட்டை போன்ற பல அழகிகள் ஒய்யாரமாக பலப்பல கெட்டப்புகளில் வந்து நாக்கு சப்புக்கொட்ட எங்கள் வயிற்றுக்குள் போனார்கள்.. கொத்து பரோட்டா சிக்கன், நெத்திலி மீன் ஃப்ரை, மட்டன் சுக்கா, எல்லாமே டாப்.. நிச்சயம் இரண்டொரு வெள்ளைக் காரர்கள் அங்கு இல்லாவிட்டால் நம்ம ஊரு தான் என நம்பியிருப்போம்.. சுவை அப்படியே அள்ளியது. இவர்கள் இன்னொரு கடை ஃபிரான்ச்சைஸ் கொடுத்தது எப்படி என்பதை இவர்களின் தரமும் ருசியும் சொன்னது.. அநேகமாக அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கிளை துவக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.. இவ்வளவு ஏன்? பாஸ் நீங்க ஏன் நம்ம சென்னையிலேயே ஒரு பத்து பிரான்ச் போடக்கூடாது.. சத்தியமா அந்தத் தகுதி சென்னை கஃபேவுக்கு இருக்கு.!

சென்னை கஃபேயில் சாப்பிடும் அனைவருக்கும் "அறுசுவையின் அனுபவம்" உத்திரவாதம்.. வாழ்த்துகள் இதன் உரிமையாளர்களுக்கும் இங்கு அழைத்துச் சென்ற நண்பர்களுக்கும் 

டாலஸ் தட்டுக்கடை..

இன்னிக்கு நாம இந்தியன் ரெஸ்ட்டாரண்ட் போறோம் என்றார்கள் டெக்ஸாஸ் தமிழ்  நண்பர்கள்.. ஏற்கனவே அமெரிக்காவில் பல ஊர்களில் இந்திய ரெஸ்ட்டாரண்டுகள் போன அனுபவம் இந்த பயணத்திலேயே உண்டு. சப்பாத்தி, நான் ரொட்டி, ஒரு தால், தட்டைப்பயிர் க்ரேவி, ஒரு பனீர் க்ரேவி, சிக்கன் குழம்பு, தந்தூரி சிக்கன் அப்புறம் வெறும் வெள்ளைச் சோறு.. பிறகு எல்லாமே அமெரிக்க வகையான உணவுகள்.

இது தான் பெரும்பாலான அமெரிக்க இந்திய ரெஸ்ட்டாரண்டுகளின் மெனு.
வழக்கம் போல ஒரு இந்திய ரெஸ்ட்டாரண்ட் என நினைத்துக் கொண்டு கிளம்பினோம். 15 நிமிட கார் பயணத்தில் வந்தது உணவகம்.. காரை விட்டு இறங்கி கடை பெயரை பார்த்ததும் எங்களை மறந்து உற்சாகமானோம் டேஸ்ட் ஆஃப் இந்தியா, இந்தியன் மசாலா, ஃப்ளேவர் ஆஃப் பாரத், கோஹினூர் இப்படி வழக்கம் போல இருக்கும் பெயர்கள்

அது போலில்லாமல் கடையின் பெயரே அசத்தியது.. "மதுரை தட்டுக்கடை" இது தான் ரெஸ்ட்டாரண்ட்டின் பெயர்.. உள்ளே நுழைந்ததும் கரகாட்டக்காரன் முதல் மின்சாரக்கண்ணா வரை.. சுவரெங்கும் தமிழ் சினிமா போஸ்டர்கள்.. பெரிய டிவியில் இனிமையான தமிழ்ப்பாடல்கள்..புதன் கிழமை இரவே பெருங்கூட்டம் இருந்தது. பொதுவாக அமெரிக்காவில் இது போன்ற கூட்டத்தை சனி ஞாயிறுகளில் மட்டுமே பார்க்க முடியும். 

அதிலேயே கடையின் மகத்துவம் லேசாக புரிந்தது.. மெனு அயிட்டங்கள் பார்த்ததும் ஆனந்தக் கூத்தாடினோம்.. கறி தோசை, முட்டை தோசை, கைமா இட்லி, மீன் குழம்பு, ஈரல்குழம்பு, சுக்காவருவல், பிரியாணி, முட்டை கலக்கி ஆஹா.. ஆஹா.. சங்கத் தமிழ் மதுரையின் அத்தனை சிறப்பான வெரைட்டிகளும் அணி வகுத்து நின்றன. சைவ வகைகளில் இட்லி, கல் தோசை, புரோட்டா, சப்பாத்தி, மசால் தோசை, போன்ற உணவுகளும் சாம்பார் & 3 வித சட்னிகளோடு தயாராக இருந்தன.

மாயா பஜார் ரங்காராவை போல சாப்பிடத் தயாரானோம்.. சசி இடுப்பு பெல்ட்டை கொஞ்சம்  லூசாக்கிக் கொண்டான். ஆர்டர் செய்த உணவுகளை சுடச்சுட பறிமாறினார்கள்.. ஆஹா.. அப்படியே நம்ம மதுரை சுவை.அதிலும் நாங்கள் கேட்க கேட்க ஃப்ரெஷ்ஷாக மீன் பொரிப்பது ஆம்லேட் ஆப்பாயில் தருவது என சேவையும்.. கடந்த 3 நாட்களாக அடக்கமாகி இருந்த நாக்கினை மீண்டும் உயிர்தெழச் செய்தார்கள்

இந்த தோசை மைந்தர்கள்.. அதிலும் இட்லி கறிக்குழம்பு, கலக்கி ஆகா பாராட்ட வார்த்தைகளே இல்லை.. இன்னும் 3 நாட்கள் இங்கு தான் சாப்பாடு நிச்சயம் இதுவரை அமெரிக்காவில் இழந்த என் உடல் எடையை இந்த மூன்று நாட்களிலேயே பெற்று ஊர் திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.. நிச்சயம் அது நடக்கும்.. டாப்டென் பாணியில் சொன்னால் டாலஸ் தட்டுக்கடை..சுவையில் ஹிட்டுக்கடை.. வாழ்த்துகள்.!

கலிஃபோர்னியா - சாக்ரமெண்டோ..

#கலிஃபோர்னியக்_களிப்பு

டாலஸ் நகரில் பிரியா விடை பெற்றுக்கொண்டு கலிஃபோர்னியா கிளம்பினோம்.. அதாவது பரபர ஞாயிறு நிகழ்ச்சி..அங்கு மதியம் 2 மணிக்கு எங்கள் ஷோ.. இந்தப் பயணத்திலேயே இது தான் உள் நாட்டில் பயணித்த நீண்ட விமானப்பயணம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சென்னையில் இருந்து குவைத் போகும் அதே கால அளவு.. காலை 10மணிக்கு விமானம் நாங்கள் போவதற்கே மதியம் 2மணிஆகிவிடும்.. பிறகு எப்படி.?

இந்த இடத்தில் அமெரிக்காவின் ஐந்து நேர மண்டலங்கள் நினைவுக்கு வந்தது.. கலிஃபோர்னியாவில் பசிபிக் நேரம்.! டெக்ஸாஸ் நேரத்துக்கும் அதற்கும் 2 மணிநேர வித்தியாசம் அதாவது நாங்கள் அங்கு இறங்கும் போது அந்த ஊரில் மணி 12 என்றார்கள்.. விமானத்தில் நன்கு உறங்கினோம். கலிஃபோர்னியாவின் சாக்ரமெண்டோ நகரில் எங்கள் நிகழ்ச்சி. நண்பர் சுஃபி என்கிற சுப்பையா விமான நிலையம் வந்திருந்தார்.

இரண்டுமணி நேரத்தில் சாப்பிட்டு குளித்து கிளம்ப வேண்டும் என்பதால் முதலில் குளியல் பிறகு சாப்பாடு என முடிவெடுத்து விமான நிலையத்தில் இருந்து கிளம்பினோம்.. நீண்ட அந்த பயணத்தில் எங்கள் பசி வென்றிட கார் ஓட்டல் மயிலாப்பூரில் நின்றது.. அருமையான ஒரு சைவச் சாப்பாடு.. மேங்கோ லஸ்ஸி சாப்பிட்டு கிளம்பினோம்... இங்கும் க்ளைமேட் மிக அருமை லேசான ஈரக்காற்றுடன் ஊரே ஏ.சி.போட்டது போல இருந்தது.

நாங்கள் சுஃபி சார் வீட்டுக்கு போனது குளித்து உடை மாற்றிக் கிளம்பியது இதெல்லாம் ஃபார்வேர்டு செய்தது போல வேக வேகமான சினிமா காட்சி போல கற்பனை செய்து கொள்ளுங்கள். காரில் இப்போது விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம் ஃபார்வேர்டு ஸ்டாப்... அந்த அரங்கம் ஒரு அழகிய சர்ச்சின் ஆடிட்டோரியம்.. சாக்ரமெண்டோ சிறிய ஊர் நமது மக்கள்  300 பேர் வந்திருந்தனர். சரியாக நிகழ்ச்சி 2:30 மணிக்கு துவங்கியது.

எங்கள் முதல் அமெரிக்கப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சி இது. இதையும் வெற்றிகரமாக முடித்தால் நூற்றுக்கு நூறு வெற்றி வசமாகும்.. இறைவனை பிரார்த்தித்த படியே நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.. இறைவன் எங்களை கை விடவில்லை.. அவன் சாக்ரமெண்டா மக்களாக மாறி எங்களுக்கு அருள் பாலித்தான்.. நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ஒரே கைத்தட்டல் அள்ளியது. அருமையான ரசிகர்கள் எங்களுக்கே நேரம் போனது தெரியவில்லை.

நினைவுப்பரிசு பொன்னாடை சம்பிரதாயங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத சம்பிரதாயமான போட்டோ மற்றும் செல்ஃபி சம்பிரதாயங்கள் தொடங்கி நீண்டன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சாக்ரமெண்டோ தலைவர் மார்க் என்கிற மாணிக்கவேல் சுஃபி சுரேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் எங்கள் கைகளைப் பிடித்து குலுக்கி ஆரத்தழுவி பாராட்டினர்.எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி..!

அதுதானே வேண்டும். மறு நாள் சுஃபியின் துணைவியார் அர்ச்சனா கை வண்ண சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு அவர் பிக்னிக் பேகில் பேக் செய்து தந்த லெமன் சாதம்,  தயிர் சாதம், உருளைக்கிழங்கு காரக்கறி, சிப்ஸ் ஊறுகாய் அப்பளம் உள்ளிட்ட சைடு டிஷ்கள் வாட்டர் பாட்டில்கள் சகிதம் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். உலகப்புகழ் பெற்ற கோல்டன் பிரிட்ஜில் நின்றது எங்கள் கார்.

ஏற்ற இறக்கங்கள் மிகுந்த சான்பிரான்சிஸ்கோ நகரம் மிக மிக அழகு. வாழ்வின் மேடு பள்ளங்கள் போல சரேல் சரேலென ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படகுத்துறை ஃபேஸ்புக் தலைமையகம் எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு.. மாலை 6 மணிக்கு சாக்ரமெண்டோ வந்து ஓய்வு எடுத்தோம். மறுநாள் காலை இந்தியா புறப்பட்டோம் சுஃபி வழியனுப்பினார் விமான நிலையத்தில் பார்ப்பதெல்லாம் எங்களுக்கு மங்கலாக தெரிந்தது.!

ஆம் எங்கள் விழிகளில் நீர்த் திரையிட்டு இருந்தது.. 28 நாட்கள் இந்தப் பயணம் மின்னல் வேகத்தில் தொடங்கியதும் முடிந்ததும் தெரியவில்லை.. விமான நிலையத்திலிருந்து எல்லா தமிழ்ச்சங்கத் தலைவர்களிடமும் போனில் பேசி பிரியா விடை பெற்றுக்கொண்டு.. நூறு சதவீத வெற்றியுடன் எங்கள் முதல் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்தோம்..எங்கள் பயணக் களைப்பையும் மீறி ஒரு வெற்றிக் களிப்பு எங்கள் முகங்களில் தெரிந்தது...

ஆம் இது கலிஃபோர்னியக் களிப்பு..!

டெக்ஸாஸ் - டாலஸ்..

#டாலடித்த_டாலஸ்_வெற்றி

மினியாபொலிசில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்தின் டாலஸ் நகருக்கு கிளம்பினோம். கெளபாய் சிட்டி என அழைக்கப்படும் டாலசும் இரட்டை நகரங்கள் அமைந்த ஊர்.. ஒன்று டாலஸ் இன்னொன்று ஃபோர்ட் வொர்த்.. அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய மாநிலம் டெக்ஸாஸ் முதலிடம் நியூஜெர்சிக்கு. டெக்ஸாசில் 2kk மீடியா சார்பில் நண்பர் சவுந்தர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அவர் தான் வரவேற்றார்.

டாலஸ் அப்படியே நம்ம சென்னை 21 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.. இந்த கிளைமேட் நம்ம ஊர்க்காரர்களுக்கு மிக மிகப் பிடிக்கும்.. இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் அதிகம் தமிழர்கள் ஏன் இங்கு வசிக்கிறார்கள் என்று. 20 நாட்களுக்குப் பின் எனக்கு வியர்த்தது இந்த ஊரில் தான்.! இந்த ஊருக்கு வந்த பிறகு ஜெர்கினை மடித்து பெட்டியில் கடாசி பூட்டி விட்டோம்.

டாலஸில் முழுதாக மூன்று நாட்கள் இருந்தோம். டாலஸில் நண்பர் சவுந்தர் வீட்டில் தங்கினோம்.. அருகிலேயே நண்பர் கேசவன் நண்பர் நந்தா என முப்பெரும் தளபதிகள் எங்களை ஓடி ஓடி கவனித்துக் கொண்டனர். கேசவன் திண்டுக்கல் சின்னாளப்பட்டிக் காரர் அவரது மனைவி லேகா அவரது தங்கை சீதா அவரது கணவன் சதீஷ்.. எல்லாரும் அதே ஊர்.. கேசவனின் தம்பியும் அதே ஊர் மொத்த குடும்பமே இப்ப அமெரிக்காவில்.

அதே போல நந்தா வீட்டில் மகேஷ் தங்கிக் கொண்டார்.. சவுந்தர் மனைவி ராஜி கொஞ்சம் மிட்சேல் ஓபாமா சாயலில் இருந்தார்.. ஹேர் ஸ்டைலும் அசப்பில் அவர் போலவே இருந்தது..பெரிய நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருந்தாலும் நாங்கள் விளையாட்டாக அவரை கலாய்த்ததை ஸ்பொர்டிவாக எடுத்துக் கொண்டார்..  அருமையாக சமைத்தும் போட்டார்.
இத்தனை பேர் இருந்ததால் அங்கு எங்களுக்கு பொழுது நன்றாக போனது.

அந்த வீட்டில் ப்ரேக் பாஸ்ட் இந்த வீட்டில் லஞ்ச் இன்னொரு வீட்டில் டின்னர் என நான்கைந்து தெருவுக்குள் இருந்ததால் ஈசியாக இருந்தது. ஆனால் டாலஸில் எங்களுக்கு சாப்பாட்டு பிரச்சனையே இல்லை ஏனெனில் அங்கு சென்னை கஃபே மற்றும் மதுரை தட்டுக்கடை இருந்தது. அப்படியே நம்ம மதுரை ஸ்டைலில் இட்லி கொத்து பரோட்டா தோசை, மதியம் சாப்பாடு மீன் குழம்பு மட்டன் சிக்கன் என வெரைட்டியாக தந்தார்கள்.

சுத்த சைவத்திற்கும் ஒரு கிளை இருந்தது இந்தக் கடைகளைபற்றி எல்லாம்
தனிப்பதிவாக போட்டு இருக்கேன்.. டாலஸில் டாலர் அச்சடிக்கும் பிரஸ்.. மற்றும் கெளபாய் சிட்டி மெழுகுச் சிலை கண்காட்சி இங்கெல்லாம் போனதை தனித்தனி பதிவாகத் தான் போட வேண்டும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. நிகழ்ச்சி நடைபெறும் ஹாலுக்கு சென்றோம் சரியாக 4மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம்.. மேடையில் நிகழ்ச்சி தொடங்கியது.

இங்கும் பழகிவிட்ட அதே வெற்றி ஃபார்மூலாவைத் தொடர சிரிப்பொலியும் கரவொலியும் அடங்க நேரமானது..வழக்கம் போல எங்களை கவுரவப் படுத்தினார்கள் பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசுகளோடு இங்கிருந்து ஒரு இரும்புப் பெண்மணியை சந்திக்க போனோம் அது பற்றியும் அடுத்து ஒரு தனிப்பதிவில்.. நண்பர் சவுந்தர் உள்ளிட்ட அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி இப்பயணத்தின் ஐந்தாவது சூப்பர் டூப்பர் வெற்றியில் எங்கள் முகங்கள் ஜொலி ஜொலித்தன ஏனெனில் இது டாலடித்த டாலஸ் வெற்றி அல்லவா.!

விஸ்கான்சின் - மேடிசன்..

#விஸ்கான்சினிலும்_வெற்றி

முதலில் விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி.. ஏனெனில் இச் சங்கம் துவங்கி நீண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் இவர்கள் ஏற்பாடு செய்த முதல் நிகழ்ச்சியே எங்கள் நிகழ்ச்சி தான். அதனால் எங்களுக்கு பொறுப்பு கொஞ்சம் கூடுதல்..ஏனெனில் மற்ற இடங்களில் நிகழ்ச்சி செய்வதை விட இங்கு சூப்பர் டூப்பராக ஹிட் தர வேண்டும்.. இவங்க ஏற்பாடு செஞ்சா அந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.. நம்பி குடும்பத்துடன் போகலாம்.

அப்படி நினைக்க வைக்கும்படி நிகழ்ச்சி இருக்கவேண்டும். அப்போது தான் இவர்கள் அடுத்து வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது உறுப்பினர்கள் நம்பி வருவார்கள். இங்கு நாங்கள் கட்டாயம் 100 மதிப்பெண்கள் பெறவேண்டிய மாணவன் நிலையில் இருந்தோம்..அப்ப கோச்சிங் தரமாக வேண்டும் அல்லவா! அந்த பணியை நண்பர் இளங்கோ எடுத்துக் கொண்டார். தினசரி எங்களுக்கு அலாரம் அவரது அழைப்பு தான்.

அமெரிக்கா கிளம்புவதற்கு 1 மாதத்திற்கு முன் பேச ஆரம்பித்தவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார் அமெரிக்க பயணம் முழுவதும் எங்களுடன் அதிகம் பேசியவர் இளங்கோ மட்டுமே.. நண்பர் சசி கூட "எங்கள் மனைவி பிள்ளைகளிடம் கூட நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதில்லை என்பார் வேடிக்கையாக.. ஆனால் இளங்கோவிடம்  ஒரு நல்ல குணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அருமையான குணம்.

அவர் ஊர் நிகழ்ச்சி என்றில்லாமல் எல்லா ஊர் நிகழ்ச்சிக்கும் எங்களை ஊக்குவித்தார். அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு கடின உழைப்பில் அவர்கள் ஊர் தமிழ்ச்சங்கம் உருவானது, நாங்கள் எப்படி நிகழ்ச்சி தரவேண்டும் எங்களிடம் அவர்களது எதிர்பார்ப்பு என்ன..? இந்த எல்லா விஷயங்களையும் சொல்லி எங்களை தயார் படுத்தி இருந்தார். இந்த பயணத்தில் சாலைவழியாக பயணித்துச் சென்று நிகழ்ச்சி செய்த ஒரே ஊர் விஸ்கான்சின் தான்..அங்குள்ள மேடிசன் நகரில் எங்கள் நிகழ்ச்சி.

பயணத்திற்கு முன் இந்த பனி பற்றி.. சிகாகோ பனி, டெட்ராய்ட் பனி, மிசவுரி பனி, இதெல்லாம் எலந்தப்பழம் ஆனா பெரிய அன்னாசிப்பழம் மின்னசோட்டா பனி என்றார்கள்.. இது நான்கும் போய் பார்த்து அனுபவித்து விட்டோம்... இப்போ விஸ்கான்சின் பனி என்ன பெருசா இருக்கப் போகுது என நினைத்து கிளம்பினோம்.. எங்களுக்கு பலாப்பழம் காத்திருப்பது தெரியாமல்.. அதிகாலைப் பயணம் காரில் மினியாபொலிஸ் நகரிலிருந்து..

ஏனெனில் முதல் நாள் மினியாபொலிஸ் நகரில் எங்கள் நிகழ்ச்சி அது முடிந்து வந்து உறங்கவே 1 மணி ஆகிவிட்டது வெறும் 4 மணிநேர ஓய்வு தான்.. அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு விஸ்கான்சின் நிகழ்ச்சி அலாரம் வைத்து எழவேண்டிய அவசியமில்லை அதுதான் இளங்கோ இருக்கிறாரே. மிகச்சரியாக அதிகாலை 4:30க்கு எழுப்பி விட்டார். பரபரவென தயாரானோம் அந்தப் பனியில் அதிகாலை குளிக்க நடுங்கி கிளம்பினோம்.

மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த சிவானந்தம் சார் கார் ஓட்ட மற்ற நண்பர்கள் சுந்தரமூர்த்தி, சச்சிதானந்தம் எங்களுடன் இணைந்து கொள்ள கார் கிளம்பியது. அங்கிருந்து 300 மைல் தூரம்.. கிட்டத்தட்ட சென்னை - மதுரை தூரம் 5 மணிநேரப் பிரயாணம்.. குளிர் என்றால் அப்படி ஒரு குளிர்.. இடையில் மழை கூட பெய்தது பனிக் காலத்தில் நல்ல வெயில் அடித்தால் அது பேட் வெதர் என்கிறார்கள். நல்ல வெயிலுக்கு பின் குளிர் ஏறுமாம்.

காருக்கு வெளியே மைனஸ் 7 முதல் 10 வரை குளிர் அடுத்த 3 நாட்களுக்கு மைனஸ் 3 என்றது வானிலை அறிக்கை.. அலட்சியமாகத்தான் போனோம் ஆனால் அது மைனஸ் 18 வரை போனது. கார் நேராக விஸ்கான்சின் சங்கத்தலைவர் மனோ வீட்டிற்கு சென்றது.. பிரம்மாண்டமான புத்தம் புதிய அழகான வீடு.. சகல வசதிகளும் நிறைந்த அவ்வீட்டில் எதாவது குறை இருக்கா குறை இருந்தா சொல்லுங்கன்னு எங்களிடம் மனோ கேட்டார். 

அவர் எங்க கிட்ட அப்படி கேட்டது தான் குறையாக இருந்ததே ஒழிய வேறு எதுவும் குறை இல்லை.. அங்கு அருமையானதொரு குளியல் போட்டு புத்துணர்வுடன் தயாராகி அடுத்த அரைமணியில் புரவலர் டாக்டர் பாலச்சந்திரன் வீட்டிற்கு கிளம்பினோம்அவர் அங்கு 40 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர். அவரது வீட்டில் தான் உணவு.. அற்புதமான தமிழக சைவ அசைவ உணவுகளுடன் ஒரு பஃபே விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒரு பிடி பிடித்தோம் வயிறு நிறைந்தது.. கிளம்பும் போது எல்லாருக்கும் ஒரு நினைவு பரிசு அளித்தார்.. இந்த இடத்தில் ஒன்று இந்த பயணத்தில் மக்கள் அதிகம் எங்களுக்கு பரிசளித்தது மேடிசனில் தான்.. அந்தக் கைராசி டாக்டர் பாலச்சந்திரனுடையது என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். அங்கிருந்து விழா நடைபெறும் அரங்கிற்கு புறப்பட்டோம். நேரடியாக எங்கள் நிகழ்ச்சி தான் மதியம் 2:30 க்கு ஆரம்பித்தது நிகழ்ச்சி.

சசியின் பளீர் சிரிப்பு வெடிகள், கிறிஸ்டோபரின் கலாய்ப்பு, ஈரோடு மகேஷின் கலகலப்பு, இவை அப்படியே ஜிவ்வென்று நிகழ்ச்சியை மேலே தூக்கி செல்ல வழக்கம் போல எனது பணியும் அதில் எளிதானது.. ஆனால் இளங்கோ மட்டும் பிரசவ வார்டுக்கு வெளியே நிற்கும் கணவன் போல பரபரப்பாக அலைந்து கொண்டே இருந்தார்..அவ்வப்போது வந்து நிகழ்ச்சி அடடா சூப்பர், பிரமாதம், அருமை என எங்களை பாராட்டி விட்டும் செல்வார்.

மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி முடிவில் எங்களுக்கு நினைவுப்பரிசும் பொன்னாடையும் அணிவித்து கவுரவித்தார்கள்.. நடிகர் சத்யராஜ் அவர்களின் உடன் பிறந்த தங்கையான ரூபா மேடம் இங்கு தான் வசிக்கிறார்கள்.. அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்தோம். இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை பார்த்து வெகு நாளாகிறது என பலர் சொல்ல மனோ ஸார் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் முகத்திலும் பெருமிதம்.

அதன்பின் இரண்டு நாட்கள் அங்கே தங்கி சுற்றிப்பார்த்து விட்டு பலர் அளித்த பரிசுப் பொருட்களை சுமந்து கொண்டு இருந்தபோது மீண்டும் டாக்டர் பாலச்சந்திரன் வந்து குளிர் தாங்கும் நீளக் கோட்டுகளை மயிலுக்கு போர்வை தந்த பேகன் போல தந்துவிட்டு போனார்.. மனோ அவர்கள் கிப்ஃட் பர்ச்சேஸ் கார்டுகளை பரிசு வழங்கினார்.. திருவாரூர் புதுமணத் தம்பதியர் சாக்லேட் பரிசளித்தனர்.. திக்குமுக்காடி கிளம்பினோம்.

மீண்டும் மின்னசோட்டா பயணம் இளங்கோ தான் எங்களைக் காரில் அழைத்து போக வேண்டும்.. கிளம்பினோம்.. மீண்டும் 5 மணிநேரப் பயணம். மனம் நிறைய மகிழ்வுடன் பேசிக்கொண்டு வந்தார் இளங்கோ.. அடடா ஒன்று சொல்ல மறந்து விட்டேன் அன்னைக்கு நிகழ்ச்சியன்று முடிவில் எங்கள் நிகழ்ச்சி எப்படி இருந்தது என சசி மேடையில் இருந்து கேட்க அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் இடைவிடாது கைத்தட்டினர்.. 

எங்களுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் மல்கியது மெல்ல அதை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டோம்.அப்போது இன்னொருவரும் யாரும் அறியாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அது இளங்கோ தான் என நாங்கள் சொல்லவும் வேண்டுமா.. விஸ்கான்சின் வெற்றிக்கு காரணம் நாங்கள் மட்டுமல்ல தலைவர் மனோ, டாக்டர் பாலச்சந்திரன், தேசிகன், கார்னிலியஸ் இவர்கள் அனைவருமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். 

இன்னும் பல வெற்றிகளை அவர்கள் பெற்று இடையறாத தமிழ்ப்பணிகள் பல ஆற்றி சிறக்க எங்கள் குழு சார்பில் மனதார வாழ்த்துகிறோம். வாழ்க தமிழ்..!

மின்னசோட்டா - மினியாபொலிஸ்..

#குளிர்ந்த_மினியாபொலிசில்_மிளிர்ந்த_வெற்றி

அலபாமாவில் இருந்து மீண்டும் டெட்ராய்ட் வந்து அங்கிருந்து மினியாபொலிஸ் போக இரண்டு விமானங்கள் மாற வேண்டும். இந்த பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு 15 விமான நிலையங்களில் கால் பதித்து இருப்போம். பிற மாநிலங்களில் எலந்தைப்பழம் கொய்யாப்பழம் அளவில் இதுவரை நாங்க பார்த்த பனிப் பொழிவு மினியாபொலிசில் அன்னாசிப்பழ சைஸ் என பீதியை ஏற்படுத்தினார்கள் போய் இறங்கினோம்.. அடங்கப்பா..

ஏர்போர்ட் பார்க்கிங் பில்டிங்கே பிரம்மாண்ட ஃப்ரீசராக இருந்தது.. குளிர் வாட்டியது.. பெட்டிகளை வண்டியில் ஏற்றிய அந்த சில நிமிடங்களிலேயே க்ளவுசை மீறி கை விறைத்தது..வாயில் குபு குபு வென புகை பறக்க வண்டியில் ஓடிப் போய் ஏறி அங்கிருந்து வெளியேறினோம்.. வெளியே நட்டுவைத்த ஆல்ப்ஸ் போல ஆங்காங்கே குட்டிப் பனி மலைகள் இருந்தன.. தெருவோரம் அள்ளிய பனியை எவரெஸ்ட்டுகளாகக் கொட்டியிருந்தனர்.

இதற்கிடையே பளீர் வெண்மையில் சமதளம் தெரிந்தது அநேகமாக ஐஸ் ஹாக்கி மைதானமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம் அதுதான் சாலை என்றார்கள்..  அந்த ஐஸ் ரோட்டில் எங்களை அழைத்து சென்றார் சிவானந்தம் சார். 40 நிமிடப்பயணம்.. ஊரே உஜாலாவுக்கு மாறியிருக்க நாங்கள் குளிரில் நாறியிருந்தோம்.. ஒரு வழியாக கார் ஹீட்டரில் வெப்பக் காற்று முன்பை விட நன்கு வேலை செய்ய கொஞ்சம் உயிர் வந்து குளிர் பெருமூச்சு விட்டோம்.

அமெரிக்காவின் உச்சியில் இருக்கும் மினியாபொலிஸ் அதிக குளிர் மிகுந்த நகரம் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கிறது.. செயின்ட்பால் மற்றும் மினியாபொலிஸ் இரண்டும் இரட்டை நகரங்கள்.. ஒரு பாலம் தான் இதை பிரிக்கிறது.. மின்னசோட்டாவில்  மட்டும் 20 ஆயிரம் ஏரிகள் இருக்கிறதாம். இந்த ஊருக்கு டென் தவுசண்ட் லேக் சிட்டி என்று பெயர்.. யாரோ ஒரு கணக்குத் தெரியாத அமெரிக்க குமாரசாமி பேர் வைத்திருக்கலாம்.

தஞ்சாவூர்க்காரரான சிவானந்தம் ஸார் வீடு.. வழக்கம் போல அருமையான தமிழ்க் குடும்ப உபசரிப்பு விருந்தோம்பல் அவரது துணைவியார் ப்ரியா அவரும் தஞ்சாவூர். அமெரிக்காவில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயிலும் அவரது பிள்ளைகள் ஆதவன்&ஆதித்யா இருவரும் கை கூப்பி வணக்கம் என வரவேற்று எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். மினியாபொலிஸ் தமிழ்ச் சங்கத் தலைவி ராணி மேடம் வந்தார்கள்... சிக்கன் தந்தார்கள்.. பின் சென்றார்கள்... அவ்வளவு தான்..!

எப்படி நிகழ்ச்சி பண்ணுவிங்க? எவ்ளோ நேரம் ஆகும்? நிகழ்ச்சி எப்படி இருக்கும்? இப்படி எதுவுமே கேள்வி இல்லை.. எங்கள் ஊர் தமிழர்கள் எல்லாம் சேர்ந்து சங்கமம் என்னும் பெயரில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றம் பண்ணப் போறோம்.. எல்லாரும் கடந்த 2 மாதமா ப்ராக்டிஸ் பண்றாங்க ஒரு மணிநேரம் அந்த நிகழ்ச்சி நடக்கும் அதற்குப்பின் உங்க நிகழ்ச்சி தான் என சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.

எங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.! அல்லது இதற்கு முன் நிகழ்ச்சி நடந்த 3 இடங்களில் இருந்து வந்த ரிசல்ட்.. அல்லது கலைஞர்களை அவங்க போக்கில் சுதந்திரமா விட்டுடுவோம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவது அவங்க பொறுப்பு இந்த மூன்றில் மூன்றாவது தான் காரணமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். மினியாபொலிசில் முழுதாக 2 நாட்கள் இருந்தது.முதல் நாள் மால் ஆஃப் அமெரிக்காவிற்கு அழைத்துப்போனார்கள்.. அருமையாக இருந்தது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சி.. மாலை அரங்கிற்கு சென்றோம்..வாயடைத்து நின்றோம்.. உள்ளூர் தமிழர்கள் நிகழ்ச்சியை பள்ளிகளில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகள் லெவலில் இருக்கும் என அலட்சியமாக நினைத்திருந்தோம்.. ஆனால் தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கூத்து, குறவன் குறத்தி, வில்லுப்பாட்டு, புலியாட்டம், கும்மி கோலாட்டம் என எல்லா நடனங்களையும் பிரமாதமாக ஆடினார்கள். 

அவர்கள் எல்லாரும் அங்குள்ள ஐ.டி மற்றும் வங்கிகளில் உயர் பதவிகளில் பணிபுரியும் தமிழர்கள்.. ஆனால் தமிழகத்தில் உள்ள தொழில்முறை கலைஞர்களுக்கு இணையாக ஆடி அசத்தினார்கள்..எங்களுக்கு ஏதோ தமிழக அரசு நடத்தும் பொங்கல் விழா போல இருந்தது அந்தளவு அற்புதம். அங்குள்ள அத்தனை தமிழர்களையும் இதற்காக நாங்கள் பாதம் பணிந்து பாராட்டுகின்றோம். மண்ணின் பாரம்பரியத்தை கடல் கடந்தும் போற்றுகின்ற உங்கள் அத்தனை பேருக்கும் தாயகத்தின் வணக்கங்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கமம் எனப் பெயரிட்டதற்கு பொருத்தமாய் அந்த நிகழ்ச்சியோடு எங்கள் நிகழ்ச்சியும் கலந்தது.. இப்போது தான் எங்களுக்கு கவலை அதிகரித்தது. உள்ளூர்காரர்களை விட கைத்தட்டல் வாங்க வேண்டுமே என்று.. வழக்கம் போல சசி ஆரம்பித்து கிறிஸ்டோபரும் நானும் அதைத் தொடர இங்கும் ஈரோடு மகேஷ் மெருகேற்ற இரண்டுமணிநேரம் போனது தெரியாமல் நிறைவுற்றது. இங்கும் பொன்னாடை நினைவுப்பரிசு வழங்கப்பட போட்டோ வைபவங்கள் தொடர அவசர அவசரமாக கிளம்பினோம்.ஏனெனில் அடுத்த நாள் மதியமே மேடிசன் நகரில் நிகழ்ச்சி.

சிவானந்தம் சார் சச்சிதானந்தம் ஸார் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் பாராட்ட இப்போதும் ராணி மேடம் அந்த ஊர் க்ளைமேட் போல கூலாக மேடிசன் போய்ட்டு பத்திரமா வாங்க திரும்பிப் போகும் போது இங்க ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன் அப்போ நிறைய பேசிக்கலாம் என்று கூறிவிட்டு வழியனுப்பினார். அவர் முகத்தில் தெரிந்த திருப்தியே எங்களுக்கு அவர் நினைப்பதை சொல்லிவிட்டது.
இப்பயணத்தில் தொடர்ந்து  நான்காவது நிகழ்ச்சியும் சக்ஸஸ்.!ஆம்.! குளிர்ந்த மினியாபொலிசில் மிளிர்ந்த வெற்றி.

அலபாமா - பர்மிங்காம்..

#அலபாமாவில்_அசத்தல்_வெற்றி

மிசெளரியில் இருந்து அட்லான்டா போய் அங்கிருந்து அலபாமாவில் உள்ள பர்மிங்காம் நகரில் எங்கள் நிகழ்ச்சி.. இரண்டு விமானங்கள் மாற வேண்டும் இந்த பயணத்தில் மிகச்சவாலாக இருந்தது ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிகள் தான் ஏனெனில் சனிக்கிழமை நிகழ்ச்சி முடிந்த மறு நாளே கிளம்பணும். உதாரணமாக முதல் நாள் மதுரை அடுத்த நாள் அங்கிருந்து சென்னை இது போல இருக்கும். சில நேரம் சென்னை to குவைத் தூரமும் இருக்கும்.

போய் இறங்கியவுடன் பரபரப்பாக தயாராகி மின்னல் வேகத்தில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் பழகிவிட்டிருந்தது பர்மிங்காம் போய் இறங்கியதும் அன்பே வா எம்.ஜி.ஆர் போல ஆடத்தோன்றியது.. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு பனியே இல்லாது கொடைக்கானல் குளிரில் ஒரு ஊர்.. முதலில் ஜெர்கின் கையுறைகளை கழட்டி எறிந்ததிலேயே பாதி களைப்பு ஓடி விட்டது.. மதுரையின் மைந்தன் அன்பு அண்ணன் சாம்பியன் எங்களை வரவேற்றார்.

சாம்பியன் அண்ணன் கிறிஸ்டோபரின் உறவினர் இந்தியா வந்தபோது எல்லாம் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் எங்கள் முகத்து களைப்பு பார்த்து அவர் அதிர்ந்து போனார்.. என்னங்கடா இப்படி டயர்டாகி வந்து நிக்குறிங்க.? நிகழ்ச்சி பண்ணிடுவிங்களா என்றார் அக்கறையுடன். நாங்கள் அங்கு போய் இறங்கியது காலை 11:30 க்கு நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு.. பண்ணிடுவோம் அண்ணே என்றோம்.. சரி வாங்கடான்னாரு.

காரில் சுகமான பயணம் பர்மிங்காம் நகரம் சுற்றிலும் மலை சூழ்ந்த நகரம் அப்படியே கொடைக்கானல் ஃபீலிங் அமைதியான ஊரும் கூட ஆண்டு முழுவதும் வெயிலோ பனியோ எப்போதும் கடுமையாக இல்லாத ஒரு தட்பவெப்பம் கொண்ட ஊர்.. தமிழர்கள் 60 குடும்பங்கள் இருக்கிறார்கள். அண்ணன் வீட்டில் அண்ணி வரவேற்றார்கள் அவர்களையும் முன்பே தெரியும் பரபரவென குளித்துவிட்டு வந்தால் மீன் குழம்பு சிக்கன் ரசம் தயிர் மோர்க்குழம்பு என அருமையான மதுரைச் சாப்பாடு.

வயிறார சாப்பிட்டதும் தூக்கம் கண்ணை கட்டியது.. அலறிப் புடைத்து குளிர்ந்த நீரில் மீண்டும் ஒரு முறை முகம் கழுவிக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் லைப்ரரி அரங்கிற்கு கிளம்பினோம். 60 குடும்பங்கள் தான் மிகச்சிறிய கூட்டம் நாங்கள் போனதும் நிகழ்ச்சி துவங்கியது சில குடும்பங்கள் 180 கி.மீ தூரத்திலிருந்து வேறு வந்து சேர்ந்தனர்.. அவர்கள் வந்த பின்பு சரியாக மதியம் 2:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

மற்ற ஊருக்கும் இங்கும் ஒரு வித்யாசம் சிறிய அரங்கம் என்பதால் கிட்டத் தட்ட பார்வையாளர்கள் அருகில் நின்றபடி தான் நிகழ்ச்சி நடந்தது.. அற்புதமான ரசிகர்கள் அவர்கள் ரசிப்புத் தன்மை அபாரமாக இருந்ததால் எங்கள் வேலை சுளுவானது.. இந்த ஊரிலும் ஈரோடு மகேஷ் எங்களுடன் வரவில்லை.. 3 மணிநேரம் கல கலவென முடிந்தது.. சாக்லெட் பொக்கே என்னும் இனிப்பும் கொத்தும் நினைவுப் பரிசும் வழங்கினார்கள்.

பிறகு அனைவரும் எங்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வெகு விரைவில் வீடு திரும்பி ஓய்வெடுத்தோம்.மறுநாள் அலபாமா பல்கலைக் கழகம் சிட்டியிலுள்ள மால் எல்லாம் பார்த்துவிட்டு.. இந்திய ரெஸ்டாரெண்ட்  ஒன்றில் மதிய உணவு.. அன்றிரவு நண்பர் சார்ல்ஸ் வீட்டில் தமிழ்ச்சங்கத்தினர் ஒன்று கூடி ஒரு மெகா விருந்து என பர்மிங்காமில் ஒரே விருந்து மழை. ஊர் திரும்பும் கடைசி நாள் சாம்பியன் அண்ணன் வீட்டில் விருந்து.

அன்றிரவு அது இசை விருந்தானது.. அண்ணனும் சார்லசும் அருமையாக கிடார் வாசிக்க நான் கிறிஸ்டோபர் பர்மிங்காம் சங்கத் தலைவர் சதீஷ் முதலானவர்கள் இளையராஜாவின் எண்பதுகளின் ஹிட் பாடல்களை பாடி மகிழ்ந்தோம்.. நல்ல இசை அறுசுவை என நாவும் மனதும் நிரம்பியது. பர்மிங்காமில் நாங்கள் கண்ட ஒரு விஷயம் அங்கிருக்கும் 60 தமிழ்க் குடும்பங்களும் அவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறார்கள்.

நல்ல தகவல் தொடர்பு.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நன்கு தெரிந்து ஒரு யூனிட்டியாக வாழ்கிறார்கள் சிறிய அளவு மக்கள் வசிப்பதால் தான் இது சாத்தியம் என்றாலும் இப்படி அவர்கள் ஒன்று பட்டு வாழ்வது கொஞ்சம் பொறாமையாக இருந்தது.. ஆகவே இதைப் படித்து விட்டு ஒருமுறை அவர்களுக்கு திருஷ்டி சுத்திப் போடச்சொல்லுங்கள். இங்கு சாம்பியன் அண்ணன் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்.

அமெரிக்கா நாங்கள் வருகிறோம் என்றதும்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜய் மணிவேலிடம் பேசி நாங்கள் இருக்கும் செயின்ட்லூயிசில் இருந்து அவர் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துத்தந்து அழைத்தார். அவர் நினைத்திருந்தால் அவர் உறவினரான கிறிஸ்டோபரை மட்டும் கூட அழைத்து இருக்கலாம்.. அதுபற்றி கவலைப்படாது மனதாரச் செலவு செய்தார். மேலும் அண்ணி அவர்களும் அங்கு பெரிய பதவியில் பணிபுரிகிறார்கள்.

எங்களுக்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பிள்ளைகள் போல எங்களை கவனித்து சமைத்துப் போட்டார்கள்.. அதுமட்டுமின்றி அண்ணன் பல பாடங்களை எனக்குச் சொல்லித்தந்தார்.. நான் செய்த பல தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளவும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க மக்களின் குணநலன்கள் என்ன என்பது பற்றியும் அழகாக ஒரு பாடம் போல நடத்தி அதன்படி நடக்கச் சொன்னார். 

அது எனக்கு அடுத்த ஊர்களில் பேருதவியாக இருந்தது. அதன் பிறகு அவ்வாறான தவறுகள் நடக்கவே இல்லை.. இனி எப்போது அமெரிக்கா வந்தாலும் அப்படியே நடந்து கொள்வேன் தேங்ஸ் அண்ணே.. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அண்ணன் எங்களை விமான நிலையத்தில் ஏற்றிவிட்டுவிட்டு பிரிய மனமின்றி கண்கலங்கினார். எங்களுக்கு இப்பயணத்தில் இது ஹாட்ரிக் வெற்றி... நாங்களும் கண் கலங்கியபடியே விடை பெற்றோம். பை பை பர்மிங்காம்..!

Saturday 27 February 2016

மிசெளரி - செயின்ட் லூயிஸ்..

#மிசெளரியில்_மீண்டுமொரு_வெற்றி

டெட்ராய்ட் நகரில் இருந்து விடை பெற்றுக்கொண்டு நாங்கள் விமானம் ஏறியது மிசெளரி மாகாணத்தின் செயிண்ட் லூயிஸ் நகருக்கு. இந்த மொத்த  அமெரிக்கப் பயணத்தையும் ஏற்பாடு செய்த நண்பர் விஜய் மணிவேல் வசிக்கும் ஊர். மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அவரே. 

அதீத பனிப் புயலால் வாஷிங்டன் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பின்றி கொஞ்சம் ரிலாக்ஸாக கிளம்பினோம். இந்த பயணத்தில் நாங்கள் அதிக நாள் இருந்த ஊர் செயிண்ட் லூயிஸ். விமான நிலையத்திற்கே நண்பர் சுரேஷுடன் வந்து எங்களை வரவேற்றார் விஜய்.

செயிண்ட் லூயிசும் குளிர் மிகுந்த ஊர்.. மரங்கள் வீடுகள் எல்லாமே ஜகன்மோகினிப் பேய் போல வெள்ளை வெள்ளையாக பனி படர்ந்து நின்றது.. கைகிளவுசிற்குள்ளும் காது மடல்களிலும் வந்து கிச்சு கிச்சு மூட்டியது குளிர். 40 நிமிட பிரயாணத்திற்குப் பின் விஜய் வீடு வந்து சேர்ந்தோம் வந்தவுடன் டைனிங் டேபிளை பார்த்து மலைத்து நின்றோம்.!

சுடச்சுட மதுரை இட்லி, அருமையான மட்டன் குழம்பு சிக்கன் என இரவு உணவு... ஆரம்பமே அசத்தலாக இருந்தது.. அமெரிக்காவில் ஓட்டலை விட வீடுகளில் தங்குவது தான் பெஸ்ட் ஏனெனில் பெரிய விருந்தே காத்திருக்கும் பொருளாளர் வீட்டிலிருந்து சிக்கன் குழம்பு..செயலர் வீட்டிலிருந்து ஃபிஷ்..

இப்படி ஒவ்வொருவரும் ஒரு மெனு செய்து நம் டைனிங் டேபிளை நிறைத்து விடுவார்கள்.. இதை அமெரிக்கா முழுவதும் எல்லா ஊர்களிலும் கண்டோம். நல்ல ஓய்வு சாப்பிடுவது தான் எங்கள் வேலை. நாங்கள் அங்கு போனது திங்கள் இரவு அடுத்த 4 நாட்கள் முறை வைத்து விடுப்பு எடுத்துக் கொண்டு கவனித்தனர்.

அதிலும் விஜய் வீட்டில் விதவிதமாக சமைத்து போட்டு எங்களை கவனித்துக் கொண்டதை மறக்க இயலாது..விஜயின் திருமதி சுமதி மதுரைப் பெண் என்பதால் சமையலில் ஊர்மணம் இருந்தது.. அதிலும் எந்த நேரத்திலும்
கேட்கக் கேட்க ஆப்பாயிலும் முட்டை தோசையும் தங்கு தடையின்றி சப்ளை செய்வார்.. கொஞ்சமும் முகம் சுளிக்கமாட்டார்.

செவ்வாயன்று எங்கும் போகவில்லை விஜய் ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டார் நான் ஜெட் லாகில் இருந்து பரிபூரணமாக வெளி வந்து விட்டேன்.. கிறிஸ்டோபர் மட்டும் மதியம் மாலை வேளைகளில் தூங்கிவிட்டு இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்துக் கிடந்தார். புதன்கிழமை விடிந்தது.

இன்று மெராமெக் என்னும் குகைக்கு நண்பர் கணபதி அழைத்துச் சென்றார் மதுரைக்காரர்.. அருமையான அனுபவம்.. அடுத்த நாள் லிங்கன் நினைவிடம் இதற்கு விஜயே வந்திருந்தார்..ஆபிரகாம் லிங்கனை நேரில் பார்த்த உணர்வு இரவு பஃபல்லோ விங்சில் அருமையான டின்னர் கொடுத்தார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை ஈரோடு மகேஷ் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.. மதியம் எங்களை மெராமெக் அழைத்துச் சென்ற மதுரைக் காரர் கணபதி சார் வீட்டில் ஒரு சேஞ்சுக்காக சுத்த சைவ விருந்து.. வீட்டில் ஒரு பெரும் சரவணபவனே திறந்திருந்தார் திருமதி கணபதி.

அசைவ உணவு சாப்பிட்டு பீடா சாப்பிடும் உணர்வு வருவது இயல்பு.. சைவ உணவு சாப்பிட்டு பீடா சாப்பிடும் உணர்வு எழுந்தால் சமையல் மிக மிகப் பிரமாதம்ன்னு அர்த்தம். பீடா தேவைப்பட்டது. விடை பெறும் போது சாக்லெட் உள்ளிட்ட சில பரிசுப்பொருட்களை எங்களுக்குஅளித்தனர்.

மறுநாள் நிகழ்ச்சி என்பதால் அன்று இரவு விருந்து தமிழ்ச்சங்கத்தின் குடும்பத்தினரோடு ஏற்பாடு.. அதுவும் களை கட்டியது. மறுநாள் மாலை நிகழ்ச்சி விழா அரங்கிற்கு சென்றோம்.. 600 பேர் அமரும் அரங்கு நிரம்பி வழிந்தது.. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்குபிறகு எங்கள் நிகழ்ச்சி.

டெட் ராய்ட்டில் கிறிஸ்டோபர், நான் சசி மூவரும் மட்டும் தான் நிகழ்ச்சி செய்தோம்...இம்முறை ஈரோடு மகேஷ் இணைந்து கொண்டதால் நிகழ்ச்சி இன்னும் மெருகேறியது அரங்கம் அதிர கைத்தட்டல்கள் ஒலிக்க, அலை அலையாய் சிரிப்பொலி எழுந்த வண்ணம் இருந்தது.

தமிழ்ச்சங்கத்துடன் அய்யா அப்துல் கலாம் நினைவு அமைப்பும் ஒரு அங்கமாக இருந்து சென்னை வெள்ள நிவாரணத்திற்கு  நிதி திரட்டப் பட்டது. எங்களுக்கு நினைவுப்பரிசும் பொன்னாடைகளும் வழங்கி கவுரவித்தனர்.. அடுத்த நாள் அலபாமாவில் நிகழ்ச்சி அதிகாலைப் பயணம் என்பதால் விரைந்து கொண்டிருந்தோம்.

நண்பர் விஜய் பெருமிதத்துடன் நிற்க அங்கிருந்த  முன்னாள் தலைவர் பாண்டியன், சுரேஷ், கார்த்திக், புவனா, உள்ளிட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் எங்களை வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருந்தனர்.. எங்களுக்கு நண்பர் விஜய்யின் அபார உழைப்பு அப்படியே பற்பல மாண்டாஜ் காட்சியாக கண் முன் விரிந்தது.

நான்கு மாதத்திற்கு முன் போனில் எங்களை அழைத்தது, யார் யார் அங்கு வரவேண்டும் என தேர்வு செய்தது, நிகழ்ச்சி தேதிகளை முடிவு செய்தது, மற்ற தமிழ்ச்சங்கங்களை ஒன்றிணைத்தது, எங்களுக்கு விசா அப்ளை செய்து விசா கிடைத்ததும் மகிழ்ந்தது, பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது எங்களுக்கு போதிய தகவல்கள் தந்தது...

பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வரச்சொன்னது.. குளிர் பற்றி கூறி தற்காப்பு உடைகள் அணியச் சொன்னது, பயண விவரங்களை எல்லா விமான டிக்கெட்டுகளை முறையாக புத்தகம் போல கொடுத்தது, எங்களது அதிக லக்கேஜ் பெட்டிகளுக்கு கட்டணம் கட்டியது, முக்கியமாக எங்கள் லூசுத்தனங்களை சகித்தது. 

அப்பப்பா இத்தனையும் இந்த ஒரு மனிதர் தான் ஏற்பாடு.. அந்த உழைப்பிற்கு பலன் கிடைத்த மகிழ்ச்சியும் அவர் முகத்தில் பிரதிபலித்தது. நாங்கள் அவரிடம் விடை பெறும் போது சொன்னார் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு விஸ்கான்சின் வருவேன் அப்போ விடை பெற்றுக் கொள்ளலாம் என எங்களை அன்போடு அணைத்து விடை தந்தார்.

அவர் முகத்தில் மிசெளரி நிகழ்ச்சி வெற்றிக் களிப்பும் அடுத்த ஊர் நிகழ்ச்சிகளும் இதே போல அமையவேண்டுமே என ஒரு எதிர்பார்ப்பும் கலவையாக தெரிந்தது.. ஆனால் அவர் நினைத்தபடியே அது அடுத்தடுத்து நிறைவேறியது.. எங்கள் அமெரிக்கப் பயணத்தில் மிசெளரியில் (செயின்ட் லூயிஸ்)சொந்தமானது மீண்டும் ஒரு வெற்றி. 

மிச்சிகன் - டெட்ராய்ட்..

#ரெடி_ஸ்டார்ட்_கோ
(ஒரு வெற்றிப் பயணம்)

சிகாகோ..! ஸ்வாமி விவேகானந்தருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மறக்க முடியாத நகரம். யெஸ் எங்கள் முதல் அமெரிக்க பயணத்தில் நாங்கள் கால் பதித்த முதல் அமெரிக்க நகரம்.! பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என அனைவரையும் சகோதரத்துவத்துடன் அழைத்த வீரத்துறவியின் அதிர்வலைகள் எம்மீது மோத மெய்மறந்து நின்றோம்.எங்களை வந்து சந்தித்தார் நண்பர் வெற்றி. ஆம் அமெரிக்காவில் நாங்கள் முதன்முதலில் சந்தித்தது வெற்றியைத்தான்.!

அது அந்தப் பயணம் முழுவதும் தொடர்ந்தது. அமெரிக்காவில் எங்கள் முதல் நிகழ்ச்சி டெட்ராய்ட் நகரில்! மிச்சிகன் மாநில தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா. எங்களை சிகாகோவிலிருந்து டெட்ராய்ட்டுக்கு  வழியனுப்பத்தான் வெற்றி வந்திருந்தார். ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது. அவர் எங்களுக்காக சிகாகோ சர்வதேச டெர்மினலில் காத்திருந்தார் அது தெரியாமல் நாங்கள் டிரைன் ஏறி டொமஸ்டிக் டெர்மினல் வந்துவிட்டோம்.

வைபை சற்று தாமதமாக கனெக்ட் ஆக ஒரு வழியாக எங்களை அந்த டெர்மினலில் வந்து பிடித்தார். அமெரிக்க காபியை ஆளுக்கு ஒரு வாளியில் வாங்கித்தந்தார்.. (அம்மாம் பெருசு) 21 மணிநேரப் பிரயாணக் களைப்பை அந்த வாளியில் போட்டு கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். அங்கிருந்து டெட்ராய்ட் சங்கத் தலைவர் அண்ணாதுரையிடம் போனில் பேசினோம் அவர் கார்த்திக் என்பவர் உங்களை அழைத்துச் செல்ல வருவார் என்றார்.

வெற்றியிடம் விடை பெற்றுக் கொண்டு விமானம் ஏறினோம். மீண்டும் 1மணி நேரப் பயணம் வந்தது டெட்ராய்ட்... லக்கேஜுகளை கைப்பற்றிக் கொண்டு வெளியேறி உறைந்து நின்றோம். அவ்வளவு பனி பெய்து கொண்டிருந்தது அவசர அவசரமாக கையுறை குல்லாக்களை அணிந்து கொண்டு கார் ஏறினோம். வழியெங்கும் பனிதூவி எங்களை வரவேற்றது 40 நிமிட கார்ப் பயணம் தலைவர் அண்ணாதுரை அவர்களின் இல்லத்தில் முடிந்தது.

அவர் வீட்டில் தான் எங்களுக்கு தங்கும் வசதி செய்யப்பட்டு இருந்தது. நள்ளிரவு என்பதாலும் அமெரிக்காவில் அந்த வழக்கம் இல்லை என்பதாலும் யாரும் ஆரத்தி எடுக்காமலேயே அவரது வீட்டிற்குள் வலதுகாலை எடுத்து வைத்தோம். அந்த இரவிலும் சூடான உருளைக் கிழங்கு காரக்கறி லெமன் சாதம் வெள்ளை சாதம் ரசம் அப்பளம் என கிராண்ட் அண்ட் சிம்பிள் உணவு. முக்கியமாக வயிற்றுக்கு கெடுதல் தராத அருமையான உணவு.

அந்த இரவிலும் குளித்துவிட்டு தான் நான் சாப்பிடுவேன் என அவர்களை கிலியேற்றிவிட்டு குளிக்கப் போனேன். சசியும் கிறிஸ்டோபரும் நான் தலை துவட்டும் போதே சாப்பிட்டு தூங்கிவிட்டனர் என அவர்கள் அறையில் இருந்து வந்த மெல்லிய குறட்டை ஒலி என் காதில் சொல்லிப்போனது.. அடுத்த 10 நிமிடத்தில் அதே குறட்டை மொழியில் நானும் சாப்ட்டாச்சு என அவர்களுக்கு நான் பதில் தந்தேன். நிம்மதியாக உறங்கினோம்.( அவர்கள்?!)

காலை அவர் வீட்டுக்கு வெளியே வந்து மெய் மறந்தோம். சுற்றிலும் பனி படர்ந்திருந்தது மரம், புல்தரை,சாலை, வீட்டுக்கூரை என கடவுள் போல எங்கும் வியாபித்திருந்த  பனியை ரசித்தோம். சூடான காபியுடன் அதை ரசித்தது இன்னும் அருமை. காலையில் சூடான வெண்பொங்கல் இட்லி வடை என அருமையான சமையல் சுகுமாரி மேடத்தின் கோபிசெட்டி கொங்கு ஸ்டைல் குழம்பு வேறு. திருப்தியாக சாப்பிட்டு கிளம்பினோம்.

டெட்ராய்ட்டில் நடக்கும் கார் எக்ஸ்போ மிகப் பிரபலம். அங்கு செல்லும் அருமையான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. ஓடுகிற (கொஞ்சம் உறைந்த) டெட்ராய்ட் ஆற்றின் அந்தப்பக்கம் கனடாவின் ஆண்டாரியோவும் இந்தப்பக்கம் டெட்ராய்ட்டும் அதை வேடிக்கைபார்த்துக் கொண்டே கார் எக்ஸ்போவிற்குள் நுழைந்தோம். ஆகா உலகின் எல்லா பிராண்ட் கார்களும் அணிவகுத்து நின்றன. வண்ணமயமான கர்னிவலும் நடந்தது.ஆசை தீர கால் வலிக்க சுற்றிப் பார்த்தோம்..

 நண்பர் ப்ரகாஷ் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். இனிய நினைவுகளுடன் அடுத்த நாள் நிகழ்ச்சி என்பதால் விரைவில் கிளம்பினோம். ஜனவரி 23 சனிக்கிழமை மீண்டும் அருமையான காலை உணவு நல்ல ஓய்வு எங்கள் நிகழ்ச்சி குறித்த திட்டமிடுதல் என மதியம் வரை நேரம் போனது மீண்டும் மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டு நன்கு ஃபிரெஷ் ஆகி கிளம்பினோம். நிகழ்வு நடை பெறும் பேவர்லி ஹில்ஸ் பள்ளியை அடைந்தோம்.. 

அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் பெரியவர்கள் கலந்து கொண்ட பொங்கல் விழா போட்டிகள் நிறைவுற்று அனைவரும் அறுசுவை உணவை ருசித்து எங்கள் நகைச்சுவையை ரசிக்கக் காத்திருந்தனர். மேடையில் சசி முதலில் தன் நகைச்சுவையை ஆரம்பித்து கைத்தட்டல்கள் அள்ள மெல்ல மெல்ல பார்வையாளர்களை கிறிஸ்டோபர் ஆக்ரமிக்க நிகழ்ச்சி களை கட்டியது. 

பிறகு என் பணி மிகச் சுலபமாகிப் போக நிகழ்ச்சி முழுவதும் கரவொலியும் சிரிப்பொலியும் எழுந்து கொண்டே இருந்தது. நிறைவாக நிகழ்ச்சியை முடிக்கும் போது 2மணிநேரம் ஆகிவிட்டது என மேடையில் நாங்கள் சொன்ன போதுதான் பலர் கைக் கடிகாரத்தையே பார்த்தனர்.. அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி எங்களை பெருமை படுத்தினர். எங்கள் அனைவருக்கும் பொன்னாடை நினைவுப் பரிசுகளும் வழங்கி கவுரவித்தனர்.

இதை அப்படியே 6ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போலத்தான் அடுத்த 6 நிகழ்ச்சிகளும் பிறகு நடந்தன. ஆனால் இனி எங்கு நடந்தாலும் எத்தனை முறை அமெரிக்கா போனாலும் மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தையும் டெட்ராய்ட்டையும் மறக்க இயலாது. எங்கள் முதல் நிகழ்ச்சி அல்லவா.! தலைவர் அண்ணாதுரை முருகேசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்  மகேஷ் பாஸ்கரன், கார்த்திக் சாமிவேல், ஜகதீஷ் ஈரையன்,ராஜ் பழனிவேல், சாய்பிரபு, ஸ்ரீதர் லட்சுமிநாராயணன், சேதுராமலிங்கம் சுந்தரம்,கார்த்திக் லிங்கநாதன், ப்ரியா மகேஷ், வித்யா சதீஷ், அபர்ணா ஸ்ரீராம் உள்ளிட்ட அனைத்து தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கும்..

போர்டு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நண்பர் பிரகாஷ் அவர்களுக்கும் எங்கள் இதயங்கனிந்த நன்றி. டெட்ராய்ட்டை உலகக் கார்களின் நகரம் என்பார்கள்.. நாங்கள் இங்கு வெற்றிகரமாக ஸ்டார்ட் ஆனோம் இந்தப் பயணம் முழுவதும் அவ்வெற்றி எங்களுடன் இடையூறின்றி தொடர்ந்து கொண்டே இருந்தது. நாளையும் பல வெற்றிகளை குவிக்கும். எங்களால் என்றும் மறக்க முடியாது அமெரிக்காவில் எங்கள் முதல் காலடி பட்ட மிச்சிகன் மாகாண நினைவுகளை.

Tuesday 23 February 2016

ஹலோ அமெரிக்கா - 3

#அமெரிக்கவாழ்க்கையும்_தமிழர்களும்

பார்ட் - 3

வேலைக்காக யாரும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. வேலைக்குப் போகாத பெண்கள் கூட பிள்ளைகளை அழைத்து வருவது டாக்டரிடம் போவது போன்ற காரியங்களுக்குத் தன் கணவனை எதிர்பார்த்து இருக்கக்கூடாது என்பதற்காக டிரைவிங் அவசியம் கற்றுக் கொள்கிறார்கள். ஸ்கூல் பஸ் வசதியும் உண்டு.காலை 6 மணிக்கு எழுந்து குளித்து சமைத்து பிள்ளைகளை கிளப்பி 7:30க்குள் அவர்களை அனுப்பிவிட்டு கிளம்பினால்..

மீண்டும் வீடு வர 6:30 மணி ஆகிவிடும் திங்கள் முதல் வெள்ளி வரை ஓட்டம் சனி & ஞாயிறு விடுமுறை கொண்டாட்டம்.. தலை போகிற அவசரம் என்றாலும் சனி ஞாயிறு லீவு தான்.. டாக்டர் க்ளினிக்குகளே லீவுன்னா பார்த்துக்கோங்க. அவசரத்திற்கு எமெர்ஜென்சி மருத்துவமனைகளைத் தான் நாட வேண்டும். அந்தளவு விடுமுறை முக்கியம் ஒரு வருடத்திற்கே 10 நாட்கள் தான் அரசு விடுமுறை. அங்குள்ள நிறுவனங்களின் விதிகளுக்கேற்ப விடுமுறைகள் மாறுபடும்.

ஒருவருக்கு வருடத்திற்கு 20 நாட்கள் தான் அதிகபட்ச விடுமுறை.. இதை சேமித்துக் கொள்ளலாம்..அதனால் தான் நம் மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறையை குருவி போல சேமித்து தாயகம் வந்து செல்கிறார்கள் அதிலும் தாய்நாட்டில் ஒரு அசம்பாவிதமோ ஒரு மரணமோ நிகழ்ந்தால் உடனடியாக டிக்கெட் கிடைத்தாலும் அங்கிருந்து கிளம்பி வந்து சேர குறைந்தது 40 மணிநேரம் ஆகும்.. 2 நாட்களும் ஆகலாம்.. இதற்கு நண்பர் மதுரை முத்து வீட்டில் நடந்த துயரச் சம்பவம் ஒரு உதாரணம்..

ஒரு மனிதன் சோகத்தை சுமந்து கொண்டு உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பிரயாணிப்பதை விட ஒரு கொடூரம் என்ன இருக்க முடியும்.. இது போன்ற அவர்களின் பல இன்னல்களை அறியாமல் நாம் அவர்களை சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என சொன்னது எவ்வளவு தவறு என இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். மேலும் அலுவலகத்திற்கு தாமதமாக செல்வது 3 முறைக்கு மேல் ஆனால் மெமோ வழங்கப்படும் ப்ரொமோஷன் தாமதமாகும்.. அங்கு நேரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம்.

Work from home என்னும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது.. வீட்டிலிருந்தபடியே வேலை.. ஆனால் பெண்டு நிமிர்த்தி விடுவார்கள்.. சும்மா ஓ.பி அடிக்க முடியாது இதுக்கு ஆபீசே போயிருக்கலாம் என்பது போல தொடர்ந்து பணிச்சுமை இருக்கும் எங்கேயும் நகர முடியாது. அதை கண்கூடாக பல இடங்களில் கண்டேன்.

அமெரிக்க கல்வி முறையையும் நம் பிள்ளைகளின் கல்வியையும் பற்றி அடுத்த பதிவில்

வரும்...

Sunday 21 February 2016

ஹலோ அமெரிக்கா - 8

#அமெரிக்கவாழ்க்கையும்_தமிழர்களும்

பார்ட் - 8

அமெரிக்காவில் நம்ம ஊரு போல.. நந்தனம் சிக்னல் தாண்டி சைதாபேட்டை பிரிட்ஜ் வழியா ராஜ்பவன் வந்து அப்படியே ரைட்டுல திரும்பி வேளச்சேரி மெயின் ரோட்டை பிடிச்சு இப்படியெல்லாம் வழி சொல்ல முடியாது. அங்கு எப்படி தெரியுமா.? சுரேஷ் எங்க இருக்கிங்க.? ஏர்போர்ட்டுல இருந்து கிளம்பிட்டிங்களா.. ஓ.கே நைன்ட்டி போர்ல வந்துட்டே இருங்க.. அதுல இருந்து எக்ஸிட் 9 எடுத்து எய்ட்டி டூக்கு மாறுங்க அதுல வரும் போது எக்ஸிட் டென் ஏ டென் பி விட்டுட்டு டென் சியில் எக்ஸிட் எடுங்க ரைட்ல கேஸ்ஸ்டேஷன் பக்கத்துல வாங்க அங்க வால்க்ரீன்ஸ் கிட்ட நிக்குறேன்.

அங்கு சாலைகளுக்கு எல்லாம் எண்கள் அதே போல எக்ஸிட்டுகளில் சரியாக வெளியேற வேண்டும்.. ஒரு எக்ஸிட் விட்டாலும் சர்க்கஸ் கூண்டுக்குள் சுற்றும் சாகச வீரனைப் போல சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். சாலை விதிகளில் அவ்வளவு துல்லியம்.. ஒரு தவறு செய்தாலும் போச்சு..அமெரிக்கர்கள் பயப்படும் ஒரு சொல் டிக்கெட்..! போலீசாரால் கொடுக்கப்படும் இந்த டிக்கெட்டை மூன்று முறை பெற்றுவிட்டால் போச்சு.

லைசென்ஸ் பறிமுதல் சிறிது காலம் வண்டி ஓட்டத்தடை மீண்டும் புதிதாக விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்று மறுபடியும் முதல் புரோட்டாவில் இருந்து வரணும்..ஆகவே எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஸ்டாப் போர்டு என்னும் ஒரு போர்டு இருக்கிறது ரெசிடன்சியல் ஏரியாவில் 100 அடிக்கு ஒன்று என்னும் வீதம் அந்த பலகை இருக்கும் சிவப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துகள் உள்ள போர்டு இதன் அருகே வந்து சில நொடிகள் வண்டியை நிறுத்திவிட்டு பிறகு மெல்ல மெல்ல நகர வேண்டும்  பகலில் மட்டுமல்ல..

இரவு 12 மணிக்கு சாலையில் யாரும் இல்லாதபோதும் அதை கடை பிடிக்கிறார்கள்.. அவ்வளவு துல்லியம் நீங்கள் அதிவேகமாக ஓட்டினாலும் விரட்டி வந்து டிக்கெட் தந்துவிடுவார்கள்..கிரிக்கெட்டில் விக்கெட் விழாதது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இங்கு டிக்கெட் விழாதது மிக முக்கியம். இங்கு எல்லா கார்களுக்கும் நம்பர் ப்ளேட்டில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பர். அதை ஸ்கேன் செய்தால் உங்கள் ஜாதகம் அப்படியே வந்துவிடும்.
 
சாலையில் ஒரு விபத்து என்றால் சைடில் உள்ள எமெர்ஜென்சி ரோட்டில் ஆம்புலன்ஸ் போலீஸ் வரும் அந்த நேரத்தில் அந்த ரோட்டை அடைத்து விடாமல் எல்லாரும் வரிசையாக நிற்கிறார்கள் அந்த ஒழுங்கு நம் ஊரில் எல்லாம் சாத்தியமே இல்லை.. ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரும் இருப்பதால் துரித கதியில் முதலுதவியும் கிடைக்கிறது போக்குவரத்தும் சில நிமிடங்களில் சீர்படுத்தப்படுகிறது.. இது போன்ற தாமதங்களை அலுவலகங்கள் மறு கேள்வி கேட்காது ஏற்றுக் கொள்வதால் யாருக்கும் அவசரம் இல்லை.. ரிலாக்சாக இருக்கிறார்கள்.

மேலும் காரில் எலக்ட்ரானிக் சிப்புகள் பொருத்தப்பட்டு இருக்கும்.. அது நீங்கள் வண்டி ஓட்டும் முறையை பதிவு செய்து கொண்டே இருக்கும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் சென்று ஓட்டி விபத்தாகி விட்டால் தவறு எதுவென்று துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும்.. தவறு நம் மீது என்றால் இன்சூரன்ஸ் கிடைக்காது. அமெரிக்காவில் இன்சூரன்ஸ் மிக மிக முக்கியம்.

அதுபற்றி அடுத்த பதிவில்...

வரும்...

ஹலோ அமெரிக்கா - 7

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 7

பீரோ உயரத்தில் டபுள் டோர் ரெஃப்ரிஜிரேட்டர் மைக்ரோவேவ் ஓவன் இது இரண்டும் இல்லாத ஒரு அமெரிக்கத் தமிழரின் வீட்டைக் காட்டினால் அவர்களுக்கு ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் பரிசு தருகிறேன் என தாராளமாக அறிவிக்கலாம். பரிசு யாருக்கும் போகாது.. மெகா சைஸ் டிவி ஹோம் தியேட்டர்... சிட் அவுட்டில் க்ரில் சிக்கன் அடுப்பு, பியானோ, பில்லியர்ட்ஸ் & டேபிள் டென்னிஸ் இதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் நாங்கள் பார்த்தவை.

சகல வசதிகளுடன் அழகான மாடுலர் கிச்சன்.. வீட்டில் மல்டிபர்ப்பஸ் சீலிங் ஃபேன்.. இது இரண்டு விதமாகவும் சுற்றும் அதாவது நம்ம ஊர் போல சுற்றி காற்றை வீசும் எதிர்புறமாக சுற்றி காற்றை உறிஞ்சும்.. அதேபோல கேஸில் எரியும் கணகண அடுப்பு.. முக்கியமாக வீட்டு சீதோஷ்ண நிலையை குளிரவோ வெப்பமூட்டவோ செய்யும் சாதனம் இவெயெல்லாம் உண்டு. அமெரிக்கர்களுக்கு தின வாழ்வில் மிக மிக முக்கியமானது எது தெரியுமா.? 

வானிலை அறிக்கைதான்.! ஆமாம் தினமும் சாட்டிலைட்டுகள் கண்காணித்து துல்லியமாக கூறும் வானிலை அறிக்கைக்கு ஏற்றபடி தான் ஆடைகள் அணிகிறார்கள்.. வீட்டு சீதோஷணத்தை கட்டுப்படுத்துகிறார்கள், தங்கள் போக்குவரத்தை தீர்மானிக்கிறார்கள். நம்ம ஊர் போல மழை பெய்தாலும் பெய்யலாம் போன்ற வழ வழ விளக்கெண்ணெய் வெண்டைக்காய் அறிவிப்பு அங்கு ஆகாது.. ஒரு சிலரையாவது சாலையில் குடையுடன் பார்த்துவிட்டால்..நிச்சயம் மழை பெய்யும் என அறிந்து கொள்ளலாம். மழையும் பெய்யெனப் பெய்கிறது.

வானிலை அறிவிப்புக்கு ஏற்ப வாழும்  வகையில் அவர்களது வாழ்க்கை பழகி விட்டிருக்கிறது.. அதே போல வெளியே அலுவலகம் செல்ல காரில் ஏறியதும் இக்னீஷியனை ஆன் செய்கிறார்களோ இல்லையோ அதற்கு முன்  ஜி.பி.எஸ். கருவியை ஆன் செய்து விடுகிறார்கள்.. அது துல்லியமாக வழி காட்டுகிறது.. தினமும் போகும் அதே பாதை தானே இதுக்கு எதுக்கு ஜி.பி.எஸ்.? உங்கள் கேள்வி நியாயம் தான் ஆனால் அமெரிக்க சாலைப் போக்குவரத்து கொஞ்சம் கடுமையானது சிக்கலானது ஆனால் கட்டுக்கோப்பானது.

அது பற்றி தெரிந்து கொள்ளலாம் அடுத்த பதிவில்...

வரும்...


ஹலோ அமெரிக்கா - 6

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 6

முதலில் ஒரு ரிசப்ஷன் அறை, பெரிய ஹால் அதனை ஒட்டி டைனிங் ஹால்  அப்படியே எதிரே ஒரு பெரிய மரபால்கனி அல்லது சிட் அவுட்.. டைனிங் ஹால் முடியும் இடத்தில் மாடுலர் கிச்சன் கிச்சனுக்கு இடது புறம் ஸ்டோர் ரூம், வாஷிங்மெஷின் ரூம் எதிர்புறம் டாய்லெட் அப்படியே கார் ஷெட்டுக்கு போக ஒரு கதவு.. மாடியில் 4 படுக்கையறைகள்.. விருந்தினருக்கென்றே 2 அவர்கள் உபயோகத்திற்கு 2 இதுதான் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் உள்ள அமைப்பு.

வீட்டு அமைப்பில் கொஞ்சம் அளவுகள் வேண்டுமானால் மாறுபடலாம் மற்றபடி வீட்டை சுற்றி வேலி அழகான புல்வெளி விளையாட வசதி என ஸ்பேஸ் விட்டு கட்டப் பட்டிருக்கும்.அபார்ட்மெண்ட் வீடுகளில் இந்த வசதி இல்லை இருப்பினும் முதலில் அங்கு வாழ்ந்தவர்கள் தான் இது போல வீடு வாங்கி வரிகட்டி இன்சூரன்ஸ் கட்டி டொர்னாடோவை விட சக்தி வாய்ந்த அமெரிக்க வாழ்க்கை என்னும் சுழலுக்குள் அமுங்குகிறார்கள். மின்சாரம் நெட் இரண்டும் அளவில்லாத அளவு தங்கு தடையின்றி கிடைக்கிறது.

கார் காரேஜில் ஸ்டோர்ரூம் உண்டு. அண்டர் கிரவுண்ட் இருக்கும் வீடுகளில் கீழேயும் இருக்கும். காரை எடுக்கும் போதே டிரைவர் சீட்டுக்கு மேலே இருக்கும் ரியர் வியூ மிரரில் உள்ள ரிமோட்டை அழுத்தினால் அலிபாபா குகை போல கதவு மேலேறுகிறது.. இரண்டு கார்கள் நிற்கும் அளவு பெரிய காரேஜ்.. அதன் வழியாக வீட்டிற்குள் போகவும் வசதி இருக்கிறது. தனிக்கதவும் உண்டு.பனிக்காலத்தில் பெரும்பாலும் வாசல் கதவு  இதுவே.மெயின் வாசலை பயன்படுத்துவது குறைவு. 

வெளியே உறைபனி பெய்ய அதற்குள் கால் வைத்து வீட்டிற்குள் புழங்காது காரேஜ் வழியாக உள்ளே செல்வதே உகந்தது. வீட்டுக்கு எதிரே புல்வெளி பல வீடுகளில் உண்டு சில வீடுகளில் பேஸ்கட் பால் போஸ்ட்டும் இருக்கும்.. இங்கெல்லாம் பெய்யும் பனியை நாம் தான் சுத்தப்படுத்த வேண்டும் சாலையில் உள்ள பனியை மட்டும் தான் நகராட்சி எடுக்கும். வீட்டின் வெளிப் புறத்தை அவ்வளவு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

வீட்டில் திராஷ் என்னும் மெகா குப்பைத்தொட்டிகள் உண்டு அவற்றிற்குள் குப்பைகளை கொட்டி வாரா வாரம் குறிப்பிட்ட நாளில் வரும் குப்பை வண்டியில் போடவேண்டும் அல்லது அவர்கள் எடுத்துச் செல்வார்கள்.. குப்பையை கண்ட இடங்களில் போட முடியாது.. குப்பைத் தொட்டியும் மட்கும் மட்காத என இருவகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். அதற்கு ஏற்றபடி பிரித்து போடவேண்டும். குப்பைகளைக் கொட்ட வேறுவழியே இல்லை.

அமெரிக்கா வாழ் தமிழர்களின் வீட்டில் காணப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வானிலை அறிக்கை பற்றி அடுத்த பதிவில்..

வரும்..

ஹலோ அமெரிக்கா - 5

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 5

அமெரிக்காவில் வீடுகள்.. பெரும்பாலும் நம் ஆட்களை அங்கேயே கட்டிப் போடுவது இந்த சொந்த வீடுகள் தான்.. இங்கு வீடு வாங்கிவிட்டால்  அந்த ஈ.எம்.ஐக்காவே வாழ்ந்து கடினமாக  உழைத்து அதை அடைத்து முடியும் போது இதை விட்டுட்டு எப்படி போக என அவர்கள் வாழ்க்கை அங்கேயே பிடித்து வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் இடம் வாங்குவது பெரிய விஷயமே இல்லை ஒரு ஏக்கர் இடமே 30 இலட்சத்துக்கு கிடைக்கிறது.

நிலம் விலை உயரும் என்பது போல கான்செப்டுகள் ஒரு சில இடத்தில் தான் மற்றபடி 30 இலட்சரூபாய் இடத்தை 10 வருடம் கழித்தும் அதே விலைக்குதான் விற்கமுடியும். சரி இடம் வாங்கியாச்சு வீடு கட்டுவது.. அமெரிக்காவில் வீடு கட்டுவதற்கு பதில் ஐந்து பெண்டாட்டிகளை கட்டி விடலாம். சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்ன்னு ஒரு பழமொழி கேள்விப் பட்டு இருப்பிங்க அது இதுக்கு சரியாகப் பொருந்தும்.

30 இலட்சரூபாய்க்கு இடம்.. 1 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பொருட்கள் சரி அவ்ளோ தானேன்னு கேட்டா கட்டுமான கூலி இருக்கே அது 1.5 கோடி ரூபாய்.. அதாவது 1 கோடி ரூபாய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் கூலி. இது பட்ஜெட்டுக்கு ஏற்றபடி மாறுபடும்.. வீடுகள் பெரும்பாலும் மரத்தில் தான் கட்டப்படுகின்றன 3 அல்லது 4 மாதத்தில் வீடு கட்டப்படுகிறது. வேறிடத்தில் வீட்டை செய்து கொண்டு வந்து பொருத்தும் சிஸ்டமும் இருக்கிறது.

அமெரிக்காவின் சில பகுதிகளில் டொர்னாடோ எனும் சுழல் காற்று அபாயம் உண்டு மணிக்கு 70 மைல் வேகத்தில் சுழல் காற்று சர்வசாதாரணமாக அடிக்கும்.. தொப்பியை கழட்டுவது போல கூரைகளை அடித்து போய்விடும் அந்த ஊர்களில் மட்டும் மரவீடுகளின் அண்டர்கிரவுண்ட் காங்க்ரீட் சுவர்களால் எழுப்பப்பட்டிருக்கும். குளிர் தாங்க வேண்டும் பெய்கின்ற பனிப் பொழிவைத் தாங்கவேண்டும் சரி பனியில் நனைந்தால் மரம் ஊறிவிடாதா? நியாயமான கேள்வி ஆனால் இங்கிருக்கும் மரங்கள் அப்படிப்பட்டதல்ல.

கெமிக்கல் கோட் கொடுத்து பனி, வெயில், பூச்சிகள் அரிக்காத சேஃப்டி ஃப்ரூப் மரங்கள். 25 வருடங்கள் வரை தாங்கும் உறுதியுடன் தயாரித்த மரங்கள் அவை.. ஒவ்வொரு வீட்டிலும் கீழே நான்கு பக்கமும் காங்கீரிட் சுவர் உள்ள அண்டர் கிரவுண்ட் கட்டப்பட்டு அதன் மேலே மரத்தில் வீடு எழுப்பப்படுகிறது. அதாவது சுழல் காற்று வந்தால் பாதுகாப்பாக குடும்பம் பதுங்கிக் கொள்ள அந்த அறை. அதன் பிறகு தரையிலும் மரங்கள் அதன் மீது மெத்தென்ற விரிப்பு போடப்படுகிறது.. அது சப்தம் வராதும் காக்கிறது.

அமெரிக்க வீட்டு அமைப்பு பற்றி அடுத்த பதிவில்.. 

வரும்...

ஹலோ அமெரிக்கா - 4

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 4

அமெரிக்காவில் பட்டப்படிப்பு வரை கல்வி இலவசம். அதுவும் வீடு இருக்கும் இடத்திற்கு அருகிலேயே ஸ்கூல் இருக்கும்.. வேறு பகுதியில் போய் சேர்க்க முடியாது.. உதாரணமாக மேற்கு மாம்பலத்தில் வசிப்பவர் அண்ணாநகரில் உள்ள பள்ளியில் சேர முடியாது..  பள்ளிப் பேருந்து, நோட்டுப் புத்தகங்கள் எல்லாமே இலவசம்.. தேர்வுகள், பாடங்கள், சீருடை, ரேங்க் கார்டுகள் என எதுவுமே இல்லை. அரசு பள்ளிகளில் தான் பெரும்பாலானோர் படிக்கின்றனர்.

தனியாரில் படிக்கத் தான் கட்டணம்.. இருப்பினும் அரசுப்பள்ளிகள் தான் பலரது சாய்ஸ். இங்கும் நம் தமிழர்களை பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்.. தனியாக இலவசமாக தமிழ்ப்பள்ளிகள் நடத்துகிறார்கள்.. பலர் என்.ஜி.ஓக்களாக இருந்து தமிழ்ப் பாடம் சொல்லித்தருகிறார்கள். இதற்காக ஒரு தொகையை சொந்தமாக செலவழித்தும் புரவலர்களிடம் நிதி திரட்டியும் தமிழ் வளர்க்கிறார்கள்.. பல தமிழ்ச் சங்கங்களும் இதற்கு பேருதவி செய்கின்றன. இதில் ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் பணிகள் அளப்பரியது.. பாராட்டத்தக்கது.

அமெரிக்கப் பள்ளியில் கற்றுக் கொண்டு நுனிநாக்கில் அமெரிக்க  அசெண்ட் ஆங்கிலம் மட்டுமே பேசும்படி தமிழ்க் குழந்தைகளை விட்டு விடாமல் தமிழ் மொழியை அவர்களுக்கு நன்கு பயிற்றுவித்து தமிழை அழியாது பாதுகாக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பாதங்கள் தொட்டு வணங்கலாம். எல்லா வீடுகளிலும் நாங்கள் நுழைந்ததும் அங்குள்ள பிள்ளைகள் இருகரம் கூப்பி வணக்கம் எனச் சொன்னது நெகிழ வைத்தது.

பொதுவாக பாடங்கள் ப்ளே ஸ்கூல் போலத்தான் சொல்லித்தரப்படுகின்றது விளையாட்டு ரொம்ப முக்கியம். பிள்ளைகளுக்கு ரேங்க் இல்லை ஆனால் க்ரேடு உண்டு ஒரு குழந்தை என்ன ஆகவேண்டும் என்பதை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள்.. பள்ளி இறுதியில் 54 சப்ஜெக்டுகளில் படிக்க வேண்டுமாம்.. அதில் நாம் எடுக்கும் க்ரேடுக்கு ஏற்றபடி நம் விருப்பப் பாடத்தை நாமே தேர்ந்தெடுத்து மேற்படிப்பு படிக்கலாம்.

ஃப்ர்ஸ்ட் க்ரூப் செகண்ட் க்ரூப் குழப்பங்கள் இல்லை. எக்ஸ்டிரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளுக்கு தனியிடம் தருகிறார்கள்.. பள்ளியில் பேண்ட் குழுவில் சேரலாம் ஸ்கவுட் இருக்கிறது.. முக்கியமாக பள்ளியில் ஏதாவது ஒரு விளையாட்டு அணியில் பிள்ளைகள் இருக்க வேண்டுமாம்.. அது மட்டுமின்றி அங்கு பிள்ளைகளுக்கு LKGயில் முதல் பால பாடமே மஞ்சள், சிவப்பு, பச்சை டிராபிக் லைட்டுகள் தான் இவற்றை மதிக்க சொல்லித் தருகிறார்கள்.

அதற்கடுத்த பாடம் 911க்கு போன் செய்வது அதென்ன 911?அமெரிக்காவின் அவசர உதவி எண்.. அங்கு பிள்ளைகளை அடிக்கக்கூடாது துன்புறுத்தக் கூடாது.. ஏன் சத்தமாக அதட்டக் கூடாது.. அப்படி செய்வதை பக்கத்து வீட்டில் ஒருவர் பார்த்தால் உடனே 911க்கு போன் செய்து விடுவார்.. நீங்கள் விசாரிக்கப்பட்டு குற்றம் இருந்தால் தண்டிக்கப்படுவீர்கள். அங்குள்ள பிள்ளைகளே 911க்கு போன் செய்யவா அப்பா என செல்லமாக மிரட்டுவார்களாம்.

பிள்ளைகளும் நன்கு படிக்கிறார்கள் நடனம் கராத்தே என தனித்தனி திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். நான் பார்க்க நிறைய பிள்ளைகள் கூடைப்பந்து ஆர்வலர்களாக இருந்தனர். இன்னும் 10வருடங்களில் ஆதவன்,ஆதித்யா, தமிழ்வாணன், அமுதன் போன்ற தமிழ்பெயர்களை ஸ்போர்ட்ஸ் சானலில் அமெரிக்க NBA தொடரில் பார்க்க நேரிட்டால் அது ஆச்சரியம் இல்லை.. அவ்வளவு நேர்த்தியாக பிள்ளைகள் ஆடுகிறார்கள். நிற்க..

அமெரிக்க வீடுகள் பற்றி அடுத்த பதிவில்...

வரும்....

ஹலோ அமெரிக்கா - 2

#அமெரிக்க_வாழ்_தமிழர்கள்

பார்ட் - 2

அமெரிக்காவில் வீடுகள் அமைந்திருக்கும் பகுதியை ரெசிடென்சியல் ஏரியா என்கிறார்கள்... சிட்டியை டவுண்டவுன் (Down Town) என்று அழைக்கிறார்கள். டவுனிலேயே வீடு என்பது அபூர்வம்.. வேலை பார்க்க சிட்டிக்கு வந்துவிட்டு பிறகு வீடு திரும்பவேண்டும் குறைந்தது 30 கிலோ மீட்டர் முதல் 80 கிலோ மீட்டர் தூரம் வீட்டுக்கும் ஆபிசுக்கும் தூரம் இருக்கும். டவுன் பஸ், டிராம், டிரெயின் போன்ற வசதிகள் டவுனில் மட்டுமே.

நகருக்கு வெளியே வர பஸ் டிரைன் வசதிகள் குறைவு.. அமெரிக்காவை பொறுத்தவரை கார் அத்யாவசியம்... அங்கு காரின்றி அமையாது உலகு.. மேலூர், சின்னாளப்பட்டி போன்ற சிறு கிராமங்களில் பிறந்து வளர்ந்து இங்கு வாக்கப்பட்டு வந்திருக்கும் நம் தமிழ்ப் பெண்கள் அநாசியமாக லெக்சஸ், பென்ஸ்களை ஓட்டுவது நமக்கு மிகுந்த வியப்பாக இருக்கும்..ஆண் பெண் இருவருக்கும் கட்டாயம் டிரைவிங் தெரிந்து இருத்தல் அவசியம்.

அமெரிக்காவில் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் தமிழர்கள் தான் அதிகம் என்றாலும் ஆட்டோ மொபைல், பேங்க், இன்சூரன்ஸ், ஆடிட்டிங் துறையிலும் பரவலாக வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் மனைவி கணவன் இருவருமே வேலைக்குப் போகிறார்கள். அமெரிக்காவில் நம் தமிழர் இல்லங்களில் இன்னொரு பாராட்டப்பட வேண்டிய விஷயம்.. கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது.

மனைவி சமைப்பார் கணவன் பாத்திரங்கள் கழுவி வீடு துடைத்து கழிவறை சுத்தம் செய்வார்..அல்லது கணவன் சமைக்க பிற வேலைகளை மனைவி செய்வார்.. மார்க்கெட் போவது பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது எல்லாமே மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.. நாங்கள் தங்கியிருந்த பல வீடுகளில் ஆண்களே அற்புதமாக சமைத்து எங்களுக்கு பரிமாறினர். அங்கு அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும்.

ஏனெனில் இங்கு வேலைக்காரர்கள் கிடைப்பது அரிது..அல்லது காஸ்ட்லி உதாரணமாக 4 ஆயிரம் டாலர்கள் சம்பளம் வாங்கும் ஒருவர் டிரைவர் வேலைக்கு ஆள் வைத்தால் குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் தர வேண்டும்.! அமெரிக்காவில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமம் அதிக செலவும் கூட வீட்டுவேலை, தோட்டவேலை, முதற்கொண்டு நாம் தான் பார்க்கவேண்டும் வேலைக்கு ஆட்களை எதிர்பார்க்க முடியாது.

வரும்..