Monday, 19 May 2025

🚀நாஸா நார்மன் 🚀

“நாஸா நாடி ஜோதிடர் நார்மன் டேவிட்”

யாரிந்த நார்மன் டேவிட்? இவர் ஒரு அமெரிக்கர்! ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்ட்ரோனட் சயின்ஸ்’ படித்த போது பண்டைய இந்திய வானவியல் ஆராய்ச்சி அறிஞர்களான ஆரியபட்டர், பாஸ்கரர் பற்றி படித்து வியந்தார்! எந்த ஒரு அறிவியல் சாதனமும் இல்லாமல் அவர்கள் ஆராய்ந்ததை..

இவர் ஆராய இந்தியா வந்து, காசி முதல் இராமேஸ்வரம் வரை சந்நியாசம்.. அடச்சே..’ சரித்திரத்தைத் தேடினார். அப்போது இந்திய ஜோதிடக் கலையைப் பற்றி அறிந்து வியந்து போனார். சூரிய முதலாளியை நவக்கிரகங்களும் நாய்குட்டி போல சுற்றி வரும் சூட்சுமத்தை இந்தியர்கள் கண்டுபிடித்ததை..

அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்று அங்கிருந்து தவறி விழப் பார்த்து அருகில் இருந்த சேஃப்டி கைப்பிடியைப் பிடித்து விழாமல் தப்பித்தார்.! உடனடியாக அமெரிக்காவில் தான் படித்துக் கொண்டிருந்த அறிவியல் படிப்பை அன்றைக்கே டிஸ்கண்டினியூ செய்து விட்டு இந்தியாவில் ஜோதிடம் படிக்க முடிவெடுத்தார்.

இந்தியாவில் நல்ல முறையில் ஜோதிடம் படிக்க வேண்டும் என்றால் அதனை நாலாந்திர தரத்தில் சொல்லித் தரும் கல்லூரிகள் நாலு திசையிலும் நானுறுக்கும் மேல் இருந்தது! நாலு பக்கமும் பரவியிருந்த நாலாந்திர கல்லூரிகளுக்கு நடுவில் நாளந்தா என்னும் நவரத்தினத்தைக் கண்டார்!

ஆஹா! கிரகங்களும் ஒன்பது! நவரத்தினங்களும் ஒன்பது! நாம் ஜோதிடம் படிக்க நாளந்தாவே சிறந்தது என்று அவருக்கு தோன்றியது. அன்று சுக்ல பட்ச அமாவாசை என்று பண்டிட் ஒருவர் குறித்து கொடுக்க.. நள்ளிரவே நாளந்தாவிற்கு போய் க்யூவில் நின்று அமிட்மிஷனுக்கு அப்ளிகேஷன் போட்டார்.

நாளந்தாவில் அவ்வாண்டின் ஜோதிடப் படிப்புக்கான இடம் ஒன்று கூட இல்லாமல் அட்மிஷன் முடிந்திருந்தது. ஆனால் நார்மன் சற்றும் மனம் தளராமல் அங்கே காத்திருந்தார். ஜோதிட படிப்புக்காக இடம் கிடைத்த ஒரு மாணவர் நாஸாவில் வேலை கிடைத்து சென்றுவிட்டார் என்ற செய்தி வந்தது!

விதியின் விளையாட்டை நினைத்து நார்மன் மெய் மட்டுமல்ல கை,வாய் எல்லாம் சிலிர்த்தார்! நாஸாவே வேண்டாம் என இந்தியா வந்த நார்மனுக்கு வழி விடுவது போல ஒருவனை இங்கிருந்து நாஸாவுக்கு அனுப்பியது ஜோதிடமே என்பது அறிந்து மீண்டும் அரை மணிநேரம் மெய் சிலிர்த்தார்!

நாளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின்பு, அங்கு ஜோதிட ஆராய்சியில் நாலு இளங் கலை பட்டங்களும், நாலு முதுகலைப் பட்டங்களும், நாலு டாக்ட ரேட்டுகளும் பெற்ற பின்பு, இதுக்கு மேல் கொடுக்க எங்களிடம் பட்டங்கள் இல்லை என நா’லந்தா’ துணைவேந்தர் சொன்ன பிறகே வெளியே வந்தார்!

ஆனாலும் அவரது ஜோதிட தாகம் குறையவே இல்லை. கை ஜோதிடம், எண் ஜோதிடம், சுவடி ஜோதிடம், மோடி அடச்சே.. நாடி ஜோதிடம், எலி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை தேடித் தேடிப் படித்தார். அப்பரசண்டியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 வருடம் கிளி ஜோதிடம் பார்த்தார்!

வைத்தீஸ்வரன் கோவிலில் சுவடி ஜோதிடம் படித்த போது தான் மீண்டும் வியப்பின் உச்சிக்..ப்,(ரிபீட்டு) நாடி ஜோதிடத்திலும் நான்கைந்து பட்டங்களைப் பெற்று அந்த ஊரிலேயே “நாடி ஜோதிடர் நார்மன்” என போர்டு மாட்டி கடை போட்டு 9 ஆண்டுகள் அங்கு ஜோதிட சேவை புரிந்து உலகப் புகழடைந்தார்.

நார்மன் இந்தியாவில் படித்து உலகப் புகழ் அடைந்ததை கேள்விப் பட்டது நாஸா! நாஸாவிற்கு ஜோதிடத்தில் துளியும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் நார்மனை கண்காணிக்க சி.ஐ.ஏவை அனுப்பி உளவு பார்த்தது. இந்நிலையில் கல்பனா சாவ்லா மரணம் அமெரிக்கா ஏவிய ராக்கெட்டுகளின் தொடர் தோல்விகள் என பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த நாஸா துவண்டது!

அதே நேரம் இந்தியா நாற்பது கால் பாய்ச்சலில் விண்வெளி ஆராய்ச்சியில் விரைவாக முன்னேறியது! ஒரே ராக்கெட்டில் 120 சாட்டிலைட்டுகளை அனுப்பும் அளவுக்கு திறமை வாய்ந்த நாடாக மாறியிருந்தது இந்தியா! இதற்குக் காரணம் நமது நார்மன் தான்! ஆம்! அவர் குறித்துக் கொடுத்த நேர காலப்படி ராக்கெட்டை அனுப்பி, அவர் குறித்துத் தந்த நல்ல நாட்களில்..

பலவிதமான விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டே இந்த 100 சதவீத வெற்றிகளை இந்தியா பெற்றது எனும் அரிய தகவல்களை அமெரிக்க வாதகோடரிகள் துப்பறிந்து தகவல் அனுப்பினர். நார்மனைப் பரிசோதிக்க, சில ப்ராஜக்டுகளுக்கு நேரம் குறித்துத்தர கேட்டது நாஸா! சோதிடம் பார்க்கும் என்னிடமே சோதனையா என்று தன் ஞானக் கண்ணால் அறிந்து..

அலட்சியப் புன்னகையுடன் அவர் குறித்து கொடுத்த நேரத்தில் நாஸா துவங்கிய எல்லா பரிசோதனைகளும் 100% சதவீத வெற்றியைப் பெற்றன! அகமகிழ்ந்தது நாஸா! உடனடியாக நாஸா நாடி ஜோதிடப் பிரிவு என்ற ஒரு பிரிவை தொடங்கி அதற்கு சேர்மனாக நார்மனை நியமிக்க முடிவெடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதலைக் கூட வாங்கி விட்டனர்.

அந்தோ பரிதாபம் இதை எல்லாம் அவர்கள் முடிவு செய்தது ஒரு ராகு காலத்தில்!! அவர்களுக்கு இதை குறித்துக் கொடுக்க தான் அங்கு நார்மன் போன்ற ஒரு ஜோதிட வல்லுநர் இல்லையே! ஆனால் நார்மன் இதை வேறு விதமாக சமாளித்தார்! தான் ஒரு மாபெரும் நாடி ஜோதிட ஆராய்ச்சிப் புதினம் எழுதும் பணியில் இருப்பதாகக் கூறி அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.

அப்படி என்ன புத்தகம் அது! தெரிந்தால் நீங்களும் வியப்பின் (அட கீழே விழுந்துடாதிங்கப்பா) முன் ஜென்மங்களில் இந்திய அறிஞர்கள் மற்றும் வரலாற்று தலைவர்கள் தங்களது மறுபிறப்பில் எங்கு பிறந்தார்கள் என்ற அரிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்! அந்த புத்தகத்தின் பெயர் THE 7 BIRTHS.. by NORMON

இந்திய நாட்டில் ஏழேழு ஜென்மங்கள் என்று நாம் சொல்வோம் அல்வா! அதே தான்! அவரது ஆராய்ச்சியில் பல்வேறு கொடும் உண்மைகள் வெளி வரத் துவங்கின! ஆம்! நமது ஆரிய பட்டர் தான் 7வது ஜென்மத்தில் அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிஸனாகப் பிறந்தார் என்று அறிந்தார். வீர சிவாஜி தான் மறு பிறப்பில் ஜார்ஜ் வாஷிங்டன்..

தெனாலி ராமனே மறுப்பிறப்பில் ஹென்றி ஃபோர்டு, வால்மீகி தான் ஐன்ஸ்டீன் போன்ற அரிய உணமைகளை கண்டு அறிந்தார். இவை யாவுமே டிரம்புக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்நிலையில் செங்கிஸ்கான் தான் இந்த ஜென்மத்தில் டிரம்ப்பாக பிறந்துள்ளார் என்னும் அப்பட்டமான உண்மையையும் கண்டறிந்தார்!

நார்மனுக்கு இந்தியாவில் உயர் பதவி தந்தவர் ஒரு கர்ம வீரர், வாழும் வீர சிவாஜி என மக்கள் போற்றும் தலை சிறந்தப் பிதாமகர் என்றறிந்து நாஸாவும் வியப்பின் உச்சி.. (யெஸ் அதே தான்) ஆகவே தான் டிரம்ப் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார். திறமை வாய்ந்த ஒரு அமெரிக்கரை அழைத்து பதவி தந்த அந்த மாவீரரின் பண்பு உலகில் யாருக்கு வரும்! நார்மனுக்கு இவ்வளவு அழுத்தம் தந்தும்..

அவர் அமெரிக்காவுக்கு நேரம் குறித்து தருவதில் நேர்மையாக செயல்பட்டார். தற்போது கூட சுனிதா வில்லியம்ஸ் சென்ற பயணம், அதில் ஏற்பட்ட சிக்கல் அனைத்தையும் களைந்தது அய்யா நார்மன் அவர்களே! மீண்டும் அவரை நாஸாவுக்கு வந்து பொறுப்பேற்கச் சொல்லி தினமும் 30 நிமிடங்கள்..

நார்மன் காலில் விழுந்து கெஞ்சுகிறது அமெரிக்கா! ஆனால் நார்மன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா தான் எனக்கு வாய்ப்பளித்தது! என்னால் இனி அமெரிக்கா வரமுடியாது! இனி இந்தியா தான் எனது தேசம், இது எனக்கு ஞானமளித்த மெய்ஞான பூமி, தெய்வீகம் நிறைந்த திருநாடு.

அறநெறிகள் வழுவாது ஆன்மீக வழி செல்லும் அற்புத மாமனிதர் ஒருவரின் ஆசியுடன் இங்கு நான் வாழ்கிறேன். உங்கள் சலுகைக்காக நான் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஆம் பின்னால் இருந்து குத்தும் பழக்கம் பிதாமகர் வளர்ப்பிலேயே கிடையாது. எங்களுக்கு சண்டை வராது..

சண்டை போடவும் தெரியாது.. நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் மீறி எங்களிடம் திரும்பத் திரும்ப மோதினால் உங்கள் டிரம்ப் என்ற முன்ஜென்ம செங்கிஸ்கானிடம் போய்ச் சொல்லுங்கள் அணு ஆயுதங்களை நீங்கள் குவித்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் செய்வினை வைத்தால்..

அமெரிக்கா உலக வரைபடத்தில் இருக்காது! இந்த நார்மன் நாள் குறித்துவிட்டான் என்றால் அந்த அமெரிக்க கண்டமே கண்ட மேனிக்கு கண்டமாகும்.! கன்னா பின்னான்னு சின்னாபின்னமாகும் இது என் மாமியா டென்வர் டெய்ஸி மீது சத்தியம் என்று ஆக்ரோஷ ஆவேசத்துடன் தெரிவித்தார்.

❌ நார்மனின் இந்த அப்நார்மல் அறிவிப்பால் ஐநா & நாஸா மட்டுமின்றி பெண்டகனும் அரண்டு போய் உள்ளது!! ❌

Sunday, 11 May 2025

அம்மா 💖

#பூமிக்கு_வந்த_தெய்வம்

நெடுநாட்களாக மழலைச் சத்தம் ஒலிக்காத வீட்டில் வந்து பிறந்த முதல் பிள்ளை நான்! அந்த ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்.. இல்லை சுனாமியில் ஆனந்தமாக மூழ்கினேன். எனக்குப் பிறகு மூன்று பிள்ளைகள் பிறந்தாலும் ‘தல’ நான் தான். இந்த ஸ்பெஷல் கேட்டகிரியே எனது தனி அடையாளம்!

எனக்கென்று சிறப்பு உணவுகள், எதை பங்கு பிரித்தாலும் அதில் என் பங்கு சற்று அதிகம். எல்லா விஷயங்களிலும், விசேஷங்களிலும் வீட்டில் எனக்கே முன்னுரிமை என்று கொண்டாடித் தீர்த்தனர். தல என்றாலே தமிழ்நாட்டில் எப்போதும் கொண்டாடி மகிழ்வது வழக்கம் அல்லவா.!

ஆமாங்க நெடுநாள் கழித்து பிறந்த பிள்ளை என்றால் தாய் மகிழ்வது இயல்பு தானே என்பவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்.. ஆம் என்னைப் பெற்றெடுத்த தாய் வேறு என்னை வளர்த்த தாய் வேறு! என்னை அன்புச் சுனாமியில் மூழ்கடித்த அன்னை எனும் பெருமை தனம் அம்மாவுக்கே!

என்னைப் பெற்ற அன்னையின் பெயர் ‘ரேணுகா’.. தனம் அம்மாவிற்கு ஒரு விபத்தில் கருப்பையை நீக்கியது அப்பா ரேணம்மாவை மணந்தது எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்துவிடலாம்.. எங்கள் வீட்டில் இரண்டு அம்மாக்களும் சேர்ந்தே வாழ்ந்தனர்! இது பலருக்கு வியப்பைத் தந்தது!

தனம் அம்மாவிற்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு ப்ரியம். அதனால் தான் ரேணம்மா கருவுற்ற போது தானே கருவுற்றது போல உணர்ந்தார். அவரை கண்ணாடிப் பொருள் போல கையாண்டார். வேளா வேளைக்கு சத்தான உணவு, மருந்து மாத்திரை என்று ஒரு செவிலியர் போல சேவை செய்தார்.

ரேணம்மா சுகப்பிரசவம் முடிந்து கண் விழித்த மறு நொடி பிறந்து சில மணி நேரங்களே ஆன என்னைத் தூக்கி தனம் அம்மாவின் கைகளில் இந்தாங்க உங்க மூத்த பிள்ளை என்று தந்த நெகிழ்வான கணத்தை தனம் அம்மா சாகும் வரை எங்களிடம் நன்றியோடு சொல்லிக் கொண்டே இருந்தாள்.

இதே தான் அடுத்த மூன்று பிள்ளைகளுக்கும்! நன்றாக ஆடும் பேட்ஸ்மேனுக்கு சிங்கிள் ரன் எடுத்து ஸ்டிரைக் தருவது போல ரேணம்மா சிங்கிள் ரன் எடுத்து எதிர் முனைக்குப் போய் தனம் அம்மாவை ஆடவைத்தார். அம்மா செஞ்சுரிகள் மட்டுமின்றி நாட் அவுட்டாகவும் இருந்தார்! ரேணம்மா தான் அவுட் ஆனார்.

இளமையின் உச்சமான 33 வயதில் புற்றுநோய் என்னும் மந்தி ரேணுகா என்ற மாலையை பிய்த்தெறிந்தது. அம்மா இறக்கும்போது எனக்கு வயது 10 தம்பிக்கு 7 தங்கைக்கு 5 கடைசி தம்பிக்கு ஒண்ணே கால் வயது! அப்பா நிலை குலைந்து போனார். எங்களுக்கு எந்த வலியும் இல்லை!

ஏனெனில் தனம் அம்மா இருக்கிறாரே! வாழ்க்கையில் அந்த இடத்தில் இருந்து நிலை குலையாது எங்களை கட்டிக் காக்க ஆரம்பித்தார் தனம் அம்மா! முன்பைக் காட்டிலும் அன்பாக, அதீத வைராக்கியமாக எங்களை வளர்க்க ஆரம்பித்தார். தனம் அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். படு சிக்கனமானவர்.

தரையில் சிறு கடுகு கிடந்தாலும் அதை பொறுக்கி தூர எறியும் வரை அவருக்கு பொறுக்காது! வீட்டை பளிச்சென்று வைத்திருப்பார். சமையலறைக்குள் வந்தால் அங்கு சமையல் நடந்த தடமே இருக்காது. பொருட்களை அடுக்கி வைப்பதில் துணிகளை மடித்து வைப்பதில் முதுகலை பட்டம் பெற்றவள்!

அம்மாவுக்கு சமையலில் அற்புதமான கை மணம்! எல்லா வீட்டு அம்மாவும் அப்படித்தானே என்பவர்களுக்கு.. என் அப்பா ஒரு நளமகராஜா, அந்த வசிஷ்டரின் வாயால் மாதந்தோறும் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது MA பொலிட்டிகல் சயின்ஸ் பட்டம் வாங்குவது போல மிகவும் எளிதானது அல்ல!

அப்பாவிற்கு ஒரு கல் உப்பு கூடினாலும். மசாலா கலவை சரியாக கலக்காவிட்டாலும், காரம் சிறிது குறைந்தாலும், இனிப்பு அளவாக இல்லாவிட்டாலும் தெரியும் ஷார்ப் நாக்கு! அவருக்கு சமைக்கும் சமையலை ருசி பார்த்து ஓகே செய்யும் டேஸ்ட் செக்கர் நான் தான்! எங்கள் பாட்டி பெயர் ருக்மிணி!

அவரும் சமையல் கலையில் வித்தகர்! அப்பா உணவினை விரும்பி ருசிப்பதை சொல்லி வியப்பவர். ஆனால் நான் பிறந்து வளர்ந்த பின்பு நீ உன் அப்பாவை தூக்கி சாப்பிட்டுட்டே என்பார். அந்தளவு அப்பாவின் கொடை எனக்கும் இருந்தது. இந்த ருசி பார்க்கும் குடும்பத்திற்கு அம்மா சமைத்தார்.

ஒரு இட்லிக்கு மூன்று சட்னி இரண்டு சாம்பார், கறிக்குழம்பும் இரண்டு வகை, ரசம் இரண்டு என எல்லார் ருசியையும் கவர் செய்துவிடுவார். தோசை வார்த்தாலும் எனக்கு மெத்தென்று, தம்பி பாலுவுக்கு மொய் மொய் தேசை (நெய் தோசை) உமாவுக்கு வீட்டு தோசை அப்பாவுக்கு முறுகல்னு வார்ப்பார்.

எல்லாரும் சாப்பிட்ட பிறகே சாப்பிடுவார். தன் வாழ்நாளில் எங்களுக்கு முன்பு அவர் சாப்பிட்டதாய் வரலாறு, புவியியல் எதுவுமே இல்லை! 98 சதவீதம் இரவிலும் பழைய சோறு (நிறைய சோறு இருக்குடா கண்ணு வேஸ்ட் ஆகிடும்) என்றபடி சுண்ட வைத்த குழம்பு, மட்டை ஊறுகாய் வைத்து..

அம்மா சாப்பிடுவதை கண்களில் நீர் வழிய பலமுறை பார்த்து இருக்கிறோம். வறுமை எங்கள் வீட்டில் ஒரு மாமாங்கம் குடி இருந்த காலத்திலும் அம்மா எங்களுக்கு செய்தது பெற்ற தாய் கூட செய்திருக்கமாட்டாள். போன ஜென்மத்தில் நீங்கள் ஏராளமான புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்..

இப்படி சொல்வது எங்கள் எல்லா உறவினர்களும்! இந்த அம்மாவிடம் நாங்கள் மகிழ்ந்திருந்த காலம் எத்தனை அழகானது தெரியுமா! வீட்டில் மின்சார வசதியே இல்லை! சிம்னி விளக்குதான், மழை பெய்தால் ஒழுகும் ஓட்டு வீடு, அடுப்பு சில்லென்று இருக்கும் அடிக்கடி சமைக்காததால்!

ஆனால் எங்கள் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது! கூரையில் இருந்து மழை நீர் ஒழுக அதன் தாளத்திற்கு ஏற்ப பானையில் நான் தாளம் போட தம்பி தங்கைகள் பாட கடைசித் தம்பி ஆட.. வறுமையை எங்கள் வளமான குரலால் வெட்கித் தலைகுனிய செய்திருக்கிறோம்.

அம்மாவிற்கு தடித்த நாக்கு சில தமிழ் வார்த்தைகளை அவர் வேடிக்கையாக உச்சரிப்பார். தெனாலி படத்தில் தெனாலி என்ற பெயரை மாற்றி உச்சரிக்கும் ரமேஷ் கண்ணா போல லாடனேந்தல் என்னும் ஊர்ப் பெயரை லாடனந்தூரு, லாடனாந்து, லாடடனந்தலு என்று விதவிதமாக உச்சரிப்பார்.

அம்மாவிற்கு கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தோம்! அதில் தங்கை உமாவின் பங்கு தான் அதிகம்! அப்போது அவள் அறிவொளி இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தாள்! தனம் என்ற மூன்றே எழுத்தை அம்மா வரிசை மாற்றி தம்ன, னதம், ம்தன என்று திணறுவதை ரசிப்போம்.

அம்மாவை ஆங்கிலத்தில் கையெழுத்து போட முயன்றது எல்லாம் வின்னர் படக் காமெடியை மிஞ்சும்” போங்கடா எனக்கிந்த இங்கிலிபீசே வேண்டாம் என்று அன்றைக்கே “இங்கிலீஷ் தெரியாது போடா” என்றவள். அம்மா சொல்லும் சில வார்த்தைகளின் அகராதி கீழே..

மிடிமிடிக்கி, மிடிக்கிரி (மிமிக்ரி) சர்டிபிட் (சர்டிபிகேட் கண்டினிட்டு (கண்டினியூட்டி) ப்ரேஸ் (ப்ரைஸ்) தஞ்சாலூர் (தஞ்சாவூர்) சிவசெங்க (சிவகங்கை) கொத்திக்கிறாஙக (அடிச்சிக்கிறாங்க) செருப்பு தொட்டுக்கிட்டு (போட்டுகிட்டு) இதுமட்டுமின்றி நடிகர் தேங்காய் சீனிவாசன ஸ்டைலில்..

அச்சினி புல்லோம்மா, முர்தாரி, {பாலி, குமரி என் தம்பிகளின் பெயர்கள்}என்று சொல்லும் பல வார்த்தைகள் இன்னும் எங்கள் நினைவுகளில். அம்மாவின் சமையல் பற்றி 10 மஹாபாரதம் அளவுக்கு எழுதலாம்! அசைவ சமையலுக்கு 10 இராமாயணம் அளவுக்கு எழுதலாம்! அப்படி ஒரு பக்குவம்!

அம்மா போடும் ஆம்லெட் ஒரு புலி சார்புக் குறியீடு தரும் லெவலுக்கு இருக்கும். அப்பா பிற்காலத்தில் இந்த அம்மாவை வளர்ப்பு பிள்ளைகளான நாங்கள் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து எங்கள் வீட்டை அம்மா பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். எங்கள் யாருக்குமே பங்கு கிடையாது!

அப்பா இறந்த ஒரு வருடத்திலேயே தம்பி பாலு வாங்கிய கடனுக்கு அவனை கடன்காரர்கள் நெருக்க கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வீட்டை விற்கப் போகும் போது தான் அப்பா இப்படி எழுதி வைத்தது அம்மா உட்பட எங்கள் அனைவருக்கும் தெரியும்! அம்மா என்னைப் பார்த்தார்!

ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டார் “என்னடா சொல்ற பெரியவனே வீட்டை வித்துடட்டுமா” நான் பிரமிப்புடன் வார்த்தைகளின்றி சரியென்று தலையசைத்தேன். என்ன ஒரு பெண் இவள்! இன்னொருத்தி பெற்ற 4 பிள்ளைகளுக்காக தனது சுக, துக்கங்கள், சொந்த, பந்தங்களைத் துறந்து..

கணவனும் இறந்து அவர் அவள் பெயருக்கு எழுதிய சொத்தை வீட்டிற்கு மூத்தவன் என்பதால் என் அனுமதி கேட்டு நிற்கிறாளே! இவள் தியாகத்தை விடவா பெரிது ஒன்று இருக்கப் போகிறது.. நம் தம்பி பட்ட கடனுக்கு தானே விற்கிறார், இதில் போய் தடை சொல்வது நியாமில்லையே..

என பலவாறு எண்ணங்கள் கலைடாஸ் கோப் வண்ணங்கள் போல மனதிற்குள் சுழன்றன. ம்தன என்று குழப்பத்தில் அவள் இடும் கையெழுத்து அன்று தனம் என்று மிக அழகாக அந்த பத்திரத்தில் இடப்பட்டு இருந்தது. என் தலையைக் கோதி “விடுடா நீ நிறையா சம்பாதிப்பே பார்த்துக்கலாம்”

அன்று அந்த மந்திர வார்த்தைகள் அம்மாவின் விரல் வழியாக என் உடலுக்குள் புகுந்ததை நான் மட்டுமே உணர்வேன். பெரிய லெக்சர் இல்லை, அறிவுரைகள் இல்லை, அழுகாச்சி இல்லை, புலம்பல்கள் இல்லை அம்மாவின் வைராக்கியத்தை இம்மியும் பிசகாமல் எனக்குள் அப்படியே கடத்திவிட்டாள்!

அம்மாவின் கடைசி காலத்தில் ஆறு மாதங்கள் அவருடன் இருக்கும் வரத்தை இறைவன் எனக்களித்து இருந்தான்! ஆயினும் அவருக்கு செய்ய வேண்டிய சில கடமைகளை பல நிர்பந்தங்கள் காரணமாக நான் செய்ய முடியவில்லை! அதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் உறுத்தல் உள்ளது!

எங்கோ பிறந்து, அப்பாவை மணந்து அவர் சிரித்தால் சிரித்து அவர் அழுதால் அழுது அவருக்குப் பின் அதே இடத்தில் பிள்ளைகளுக்காக அதை தொடர்ந்து தனக்கென்று ஒரு வாழ்வு வாழாமல் எங்களுக்காகவே வாழ்ந்து மறைந்தாள்! தெய்வங்கள் பூமிக்கு வருவதில்லை என யார் சொன்னது!🩷