#பூமிக்கு_வந்த_தெய்வம்
நெடுநாட்களாக மழலைச் சத்தம் ஒலிக்காத வீட்டில் வந்து பிறந்த முதல் பிள்ளை நான்! அந்த ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்.. இல்லை சுனாமியில் ஆனந்தமாக மூழ்கினேன். எனக்குப் பிறகு மூன்று பிள்ளைகள் பிறந்தாலும் ‘தல’ நான் தான். இந்த ஸ்பெஷல் கேட்டகிரியே எனது தனி அடையாளம்!
எனக்கென்று சிறப்பு உணவுகள், எதை பங்கு பிரித்தாலும் அதில் என் பங்கு சற்று அதிகம். எல்லா விஷயங்களிலும், விசேஷங்களிலும் வீட்டில் எனக்கே முன்னுரிமை என்று கொண்டாடித் தீர்த்தனர். தல என்றாலே தமிழ்நாட்டில் எப்போதும் கொண்டாடி மகிழ்வது வழக்கம் அல்லவா.!
ஆமாங்க நெடுநாள் கழித்து பிறந்த பிள்ளை என்றால் தாய் மகிழ்வது இயல்பு தானே என்பவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்.. ஆம் என்னைப் பெற்றெடுத்த தாய் வேறு என்னை வளர்த்த தாய் வேறு! என்னை அன்புச் சுனாமியில் மூழ்கடித்த அன்னை எனும் பெருமை தனம் அம்மாவுக்கே!
என்னைப் பெற்ற அன்னையின் பெயர் ‘ரேணுகா’.. தனம் அம்மாவிற்கு ஒரு விபத்தில் கருப்பையை நீக்கியது அப்பா ரேணம்மாவை மணந்தது எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்துவிடலாம்.. எங்கள் வீட்டில் இரண்டு அம்மாக்களும் சேர்ந்தே வாழ்ந்தனர்! இது பலருக்கு வியப்பைத் தந்தது!
தனம் அம்மாவிற்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு ப்ரியம். அதனால் தான் ரேணம்மா கருவுற்ற போது தானே கருவுற்றது போல உணர்ந்தார். அவரை கண்ணாடிப் பொருள் போல கையாண்டார். வேளா வேளைக்கு சத்தான உணவு, மருந்து மாத்திரை என்று ஒரு செவிலியர் போல சேவை செய்தார்.
ரேணம்மா சுகப்பிரசவம் முடிந்து கண் விழித்த மறு நொடி பிறந்து சில மணி நேரங்களே ஆன என்னைத் தூக்கி தனம் அம்மாவின் கைகளில் இந்தாங்க உங்க மூத்த பிள்ளை என்று தந்த நெகிழ்வான கணத்தை தனம் அம்மா சாகும் வரை எங்களிடம் நன்றியோடு சொல்லிக் கொண்டே இருந்தாள்.
இதே தான் அடுத்த மூன்று பிள்ளைகளுக்கும்! நன்றாக ஆடும் பேட்ஸ்மேனுக்கு சிங்கிள் ரன் எடுத்து ஸ்டிரைக் தருவது போல ரேணம்மா சிங்கிள் ரன் எடுத்து எதிர் முனைக்குப் போய் தனம் அம்மாவை ஆடவைத்தார். அம்மா செஞ்சுரிகள் மட்டுமின்றி நாட் அவுட்டாகவும் இருந்தார்! ரேணம்மா தான் அவுட் ஆனார்.
இளமையின் உச்சமான 33 வயதில் புற்றுநோய் என்னும் மந்தி ரேணுகா என்ற மாலையை பிய்த்தெறிந்தது. அம்மா இறக்கும்போது எனக்கு வயது 10 தம்பிக்கு 7 தங்கைக்கு 5 கடைசி தம்பிக்கு ஒண்ணே கால் வயது! அப்பா நிலை குலைந்து போனார். எங்களுக்கு எந்த வலியும் இல்லை!
ஏனெனில் தனம் அம்மா இருக்கிறாரே! வாழ்க்கையில் அந்த இடத்தில் இருந்து நிலை குலையாது எங்களை கட்டிக் காக்க ஆரம்பித்தார் தனம் அம்மா! முன்பைக் காட்டிலும் அன்பாக, அதீத வைராக்கியமாக எங்களை வளர்க்க ஆரம்பித்தார். தனம் அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். படு சிக்கனமானவர்.
தரையில் சிறு கடுகு கிடந்தாலும் அதை பொறுக்கி தூர எறியும் வரை அவருக்கு பொறுக்காது! வீட்டை பளிச்சென்று வைத்திருப்பார். சமையலறைக்குள் வந்தால் அங்கு சமையல் நடந்த தடமே இருக்காது. பொருட்களை அடுக்கி வைப்பதில் துணிகளை மடித்து வைப்பதில் முதுகலை பட்டம் பெற்றவள்!
அம்மாவுக்கு சமையலில் அற்புதமான கை மணம்! எல்லா வீட்டு அம்மாவும் அப்படித்தானே என்பவர்களுக்கு.. என் அப்பா ஒரு நளமகராஜா, அந்த வசிஷ்டரின் வாயால் மாதந்தோறும் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது MA பொலிட்டிகல் சயின்ஸ் பட்டம் வாங்குவது போல மிகவும் எளிதானது அல்ல!
அப்பாவிற்கு ஒரு கல் உப்பு கூடினாலும். மசாலா கலவை சரியாக கலக்காவிட்டாலும், காரம் சிறிது குறைந்தாலும், இனிப்பு அளவாக இல்லாவிட்டாலும் தெரியும் ஷார்ப் நாக்கு! அவருக்கு சமைக்கும் சமையலை ருசி பார்த்து ஓகே செய்யும் டேஸ்ட் செக்கர் நான் தான்! எங்கள் பாட்டி பெயர் ருக்மிணி!
அவரும் சமையல் கலையில் வித்தகர்! அப்பா உணவினை விரும்பி ருசிப்பதை சொல்லி வியப்பவர். ஆனால் நான் பிறந்து வளர்ந்த பின்பு நீ உன் அப்பாவை தூக்கி சாப்பிட்டுட்டே என்பார். அந்தளவு அப்பாவின் கொடை எனக்கும் இருந்தது. இந்த ருசி பார்க்கும் குடும்பத்திற்கு அம்மா சமைத்தார்.
ஒரு இட்லிக்கு மூன்று சட்னி இரண்டு சாம்பார், கறிக்குழம்பும் இரண்டு வகை, ரசம் இரண்டு என எல்லார் ருசியையும் கவர் செய்துவிடுவார். தோசை வார்த்தாலும் எனக்கு மெத்தென்று, தம்பி பாலுவுக்கு மொய் மொய் தேசை (நெய் தோசை) உமாவுக்கு வீட்டு தோசை அப்பாவுக்கு முறுகல்னு வார்ப்பார்.
எல்லாரும் சாப்பிட்ட பிறகே சாப்பிடுவார். தன் வாழ்நாளில் எங்களுக்கு முன்பு அவர் சாப்பிட்டதாய் வரலாறு, புவியியல் எதுவுமே இல்லை! 98 சதவீதம் இரவிலும் பழைய சோறு (நிறைய சோறு இருக்குடா கண்ணு வேஸ்ட் ஆகிடும்) என்றபடி சுண்ட வைத்த குழம்பு, மட்டை ஊறுகாய் வைத்து..
அம்மா சாப்பிடுவதை கண்களில் நீர் வழிய பலமுறை பார்த்து இருக்கிறோம். வறுமை எங்கள் வீட்டில் ஒரு மாமாங்கம் குடி இருந்த காலத்திலும் அம்மா எங்களுக்கு செய்தது பெற்ற தாய் கூட செய்திருக்கமாட்டாள். போன ஜென்மத்தில் நீங்கள் ஏராளமான புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்..
இப்படி சொல்வது எங்கள் எல்லா உறவினர்களும்! இந்த அம்மாவிடம் நாங்கள் மகிழ்ந்திருந்த காலம் எத்தனை அழகானது தெரியுமா! வீட்டில் மின்சார வசதியே இல்லை! சிம்னி விளக்குதான், மழை பெய்தால் ஒழுகும் ஓட்டு வீடு, அடுப்பு சில்லென்று இருக்கும் அடிக்கடி சமைக்காததால்!
ஆனால் எங்கள் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது! கூரையில் இருந்து மழை நீர் ஒழுக அதன் தாளத்திற்கு ஏற்ப பானையில் நான் தாளம் போட தம்பி தங்கைகள் பாட கடைசித் தம்பி ஆட.. வறுமையை எங்கள் வளமான குரலால் வெட்கித் தலைகுனிய செய்திருக்கிறோம்.
அம்மாவிற்கு தடித்த நாக்கு சில தமிழ் வார்த்தைகளை அவர் வேடிக்கையாக உச்சரிப்பார். தெனாலி படத்தில் தெனாலி என்ற பெயரை மாற்றி உச்சரிக்கும் ரமேஷ் கண்ணா போல லாடனேந்தல் என்னும் ஊர்ப் பெயரை லாடனந்தூரு, லாடனாந்து, லாடடனந்தலு என்று விதவிதமாக உச்சரிப்பார்.
அம்மாவிற்கு கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தோம்! அதில் தங்கை உமாவின் பங்கு தான் அதிகம்! அப்போது அவள் அறிவொளி இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தாள்! தனம் என்ற மூன்றே எழுத்தை அம்மா வரிசை மாற்றி தம்ன, னதம், ம்தன என்று திணறுவதை ரசிப்போம்.
அம்மாவை ஆங்கிலத்தில் கையெழுத்து போட முயன்றது எல்லாம் வின்னர் படக் காமெடியை மிஞ்சும்” போங்கடா எனக்கிந்த இங்கிலிபீசே வேண்டாம் என்று அன்றைக்கே “இங்கிலீஷ் தெரியாது போடா” என்றவள். அம்மா சொல்லும் சில வார்த்தைகளின் அகராதி கீழே..
மிடிமிடிக்கி, மிடிக்கிரி (மிமிக்ரி) சர்டிபிட் (சர்டிபிகேட் கண்டினிட்டு (கண்டினியூட்டி) ப்ரேஸ் (ப்ரைஸ்) தஞ்சாலூர் (தஞ்சாவூர்) சிவசெங்க (சிவகங்கை) கொத்திக்கிறாஙக (அடிச்சிக்கிறாங்க) செருப்பு தொட்டுக்கிட்டு (போட்டுகிட்டு) இதுமட்டுமின்றி நடிகர் தேங்காய் சீனிவாசன ஸ்டைலில்..
அச்சினி புல்லோம்மா, முர்தாரி, {பாலி, குமரி என் தம்பிகளின் பெயர்கள்}என்று சொல்லும் பல வார்த்தைகள் இன்னும் எங்கள் நினைவுகளில். அம்மாவின் சமையல் பற்றி 10 மஹாபாரதம் அளவுக்கு எழுதலாம்! அசைவ சமையலுக்கு 10 இராமாயணம் அளவுக்கு எழுதலாம்! அப்படி ஒரு பக்குவம்!
அம்மா போடும் ஆம்லெட் ஒரு புலி சார்புக் குறியீடு தரும் லெவலுக்கு இருக்கும். அப்பா பிற்காலத்தில் இந்த அம்மாவை வளர்ப்பு பிள்ளைகளான நாங்கள் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து எங்கள் வீட்டை அம்மா பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். எங்கள் யாருக்குமே பங்கு கிடையாது!
அப்பா இறந்த ஒரு வருடத்திலேயே தம்பி பாலு வாங்கிய கடனுக்கு அவனை கடன்காரர்கள் நெருக்க கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வீட்டை விற்கப் போகும் போது தான் அப்பா இப்படி எழுதி வைத்தது அம்மா உட்பட எங்கள் அனைவருக்கும் தெரியும்! அம்மா என்னைப் பார்த்தார்!
ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டார் “என்னடா சொல்ற பெரியவனே வீட்டை வித்துடட்டுமா” நான் பிரமிப்புடன் வார்த்தைகளின்றி சரியென்று தலையசைத்தேன். என்ன ஒரு பெண் இவள்! இன்னொருத்தி பெற்ற 4 பிள்ளைகளுக்காக தனது சுக, துக்கங்கள், சொந்த, பந்தங்களைத் துறந்து..
கணவனும் இறந்து அவர் அவள் பெயருக்கு எழுதிய சொத்தை வீட்டிற்கு மூத்தவன் என்பதால் என் அனுமதி கேட்டு நிற்கிறாளே! இவள் தியாகத்தை விடவா பெரிது ஒன்று இருக்கப் போகிறது.. நம் தம்பி பட்ட கடனுக்கு தானே விற்கிறார், இதில் போய் தடை சொல்வது நியாமில்லையே..
என பலவாறு எண்ணங்கள் கலைடாஸ் கோப் வண்ணங்கள் போல மனதிற்குள் சுழன்றன. ம்தன என்று குழப்பத்தில் அவள் இடும் கையெழுத்து அன்று தனம் என்று மிக அழகாக அந்த பத்திரத்தில் இடப்பட்டு இருந்தது. என் தலையைக் கோதி “விடுடா நீ நிறையா சம்பாதிப்பே பார்த்துக்கலாம்”
அன்று அந்த மந்திர வார்த்தைகள் அம்மாவின் விரல் வழியாக என் உடலுக்குள் புகுந்ததை நான் மட்டுமே உணர்வேன். பெரிய லெக்சர் இல்லை, அறிவுரைகள் இல்லை, அழுகாச்சி இல்லை, புலம்பல்கள் இல்லை அம்மாவின் வைராக்கியத்தை இம்மியும் பிசகாமல் எனக்குள் அப்படியே கடத்திவிட்டாள்!
அம்மாவின் கடைசி காலத்தில் ஆறு மாதங்கள் அவருடன் இருக்கும் வரத்தை இறைவன் எனக்களித்து இருந்தான்! ஆயினும் அவருக்கு செய்ய வேண்டிய சில கடமைகளை பல நிர்பந்தங்கள் காரணமாக நான் செய்ய முடியவில்லை! அதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் உறுத்தல் உள்ளது!
எங்கோ பிறந்து, அப்பாவை மணந்து அவர் சிரித்தால் சிரித்து அவர் அழுதால் அழுது அவருக்குப் பின் அதே இடத்தில் பிள்ளைகளுக்காக அதை தொடர்ந்து தனக்கென்று ஒரு வாழ்வு வாழாமல் எங்களுக்காகவே வாழ்ந்து மறைந்தாள்! தெய்வங்கள் பூமிக்கு வருவதில்லை என யார் சொன்னது!🩷
No comments:
Post a Comment