Wednesday, 18 June 2025

🏆 தெம்பா பவுமா

🏆கருப்பசாமிக்காக காத்திருந்த கப்” 🏆


தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்திலிருந்து லங்கா எனும் புறநகர்ப் பகுதி ஏழை கறுப்பின மக்கள் வாழும் பகுதி. கேப்டவுனிலேயே பணிபுரிந்தாலும் கறுப்பின மக்களுக்கு அங்கே தங்க அனுமதியில்லை! காரணம் நிறவெறி! அங்கு ஒரு சராசரி குடும்பத்தில் பிறக்கிறது ஓர் ஆண் குழந்தை.


சராசரி உயரம் கூட இல்லாத குள்ளமான உருவம். நிறம் கருப்பென்றாலே எள்ளி நகையாடும் வெள்ளையின ஆப்பிரிக்க மக்கள் அந்தக் கறுப்பின சிறுவனுக்கு அள்ளி அள்ளி வழங்கியது கேலி, கிண்டல்களைத் தான். ஆனால் அச்சிறுவனின் கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்தது.


அவன் தன்மீது வந்த கிண்டல்களுக்கு தன் காதுகளைக் கொடுக்கவில்லை. தன் கண் பார்வையை பந்துகளின் மீது கொடுத்தான்! அவன் அடித்த பந்துகள் கண்ணாடிக் கூரைகள் பலவற்றை உடைத்திருக்கிறது! அக்கூரைகளை மட்டுமின்றி மட்டுமல்ல நிறவெறி, அடக்குமுறை, இடஒதுக்கீடு என..


சமத்துவத்திற்கு தடையாக உள்ள எல்லாத் தடைகளையும் பின்னாளில் நொறுக்கும் என்பதற்கான முன்னுரையே அது. ஆம்! உலகக் கிரிக்கெட்டில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அணித் தலைவனும் செய்யாத சாதனையை செய்து காட்டி இருக்கிறான் கருப்பின மக்களின் நட்சத்திரம் தெம்பா பவுமா!


அதுவும் எப்படி!? தான் தலைமையேற்ற 10 டெஸ்டுகளில் 9இல் வெற்றி 1இல் டிரா என தோல்வியே காணாத கேப்டன் என்னும் அழியாப் புகழோடு இதனை நிகழ்த்தியிருக்கிறான். இந்த சாதனைக்கு அவ்வளவு எளிதாக வந்ததல்ல. ஏளனக் கற்கள், கிண்டல் சொற்கள், என பவுமா மீது விழுந்த..


அத்தனை கற்களையும் எடுத்து அவன் கட்டிய வெற்றிக் கோட்டை இது! பவுமாவின் இடத்தில் இருந்து இதை நிச்சயம் இன்னொருவர் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது! அணியில் 2014 இல் அறிமுகமான பவுமா சந்தித்த அளவு காயங்கள் எந்த ஆட்டக்காரரும் சந்தித்திருக்க முடியாது. 


செஞ்சுரிக்கு டெண்டுல்கர் போல இஞ்சுரிக்கு பவுமா!  ஒரு முழுத் தொடரும் பவுமா விளையாடியது கிடையாது 80 சதவீத தொடர்களில் அவர் காயம்பட்டு விலகிடுவார். ஒரு கட்டத்தில் பவுமாவை உடல் தகுதி காரணம் காட்டியே அவரை ஒதுக்கி வைத்திருந்தனர். IPL வாய்ப்புகளும் வரவில்லை.


ஏன் தெ.ஆவில் நடக்கும் T20 அணியில் கூட தாமதமாகத் தான் இடம் கிடைத்தது. ஆனால் கேலிக்குரிய கேள்விகளுக்கு பவுமாவின் பேட் பதில் சொன்னது. அறிமுக ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த சதம் அவரை அணியில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவை தள்ளியது!


தென்னாப்பிரிக்கா அணியில் இடஒதுக்கீடு முறை உள்ளது. ஆடும் 15 வீரர்களில் 9 பேர் வெள்ளையினத்தவர் மீதி 6 பேர் கலர்டு எனப்படும் கலப்பினத்தவர் அதில் நிச்சயம் 2 கறுப்பின வீரர்கள் இருக்கவேண்டும் என்பது விதி. அந்த விதியை வைத்து தான் அவரை அணியில் சேர்த்தது தேர்வுக்குழு! 


டெஸ்ட் கிரிக்கெட்டில்  இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதம், இந்தியாவுக்கு எதிராக எடுத்த சதம் என அவரது மட்டை தொடர்ந்து பேசினாலும் காயங்கள் அவரை அதிகமாக முடக்கிவிட்டது. டெண்டுல்கருக்கு டென்னிஸ் எல்போ காயம் போல ஹாம்ஸ்டிரிங் என்னும் காயம் பவுமாவுக்கு உண்டு. 


அடிக்கடி காயங்களால் உள்ளே வெளியே என்று மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தது பவுமாவின் கேரியர். குயிண்டன் டி காக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் அணியில் அப்போது இருந்த சூழலில் கேப்டன் பதவியை பல வீரர்கள் ஏற்கத் தயங்க பவுமாவை கேப்டனாக்கியது தேர்வுக்குழு!


அப்படி அவர்கள் வேண்டாத பிள்ளையாக கொடுத்த இந்த காண்டாமிருகப் பதவியை பவுமா பணிவுடன் ஏற்றார். சவுத் ஆப்பிரிக்கா ஆடும் ஃபைனலை சவுதி பாலைவனத்தில் வைத்தால் கூட மழை வரும் என்று உலகமே கேலி பேசிய காலமது. ஆனால் பவுமா வந்த பின்பு அந்த நிலை மாறியது!


ஆடிய டெஸ்டுகளில் எல்லாம் வெற்றியே பரிசாக வந்தது. காலம் இதற்குத் தான் காத்திருந்தது என்பது போல பவுமா சந்தித்ததெல்லாம் வெற்றி. இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா பரிதாபமாக தோற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிக்கு தகுதி பெற்றது தென் ஆப்பிரிக்கா.


அவர்கள் சந்திக்க இருந்த எதிரணி ஆஸ்திரேலியா! உலகின் மிகுந்த வலுவான டெஸ்ட் அணி, டெஸ்ட் சாம்பியன் ஆட்டங்களில் அதிக தோல்வியை சந்திக்காத அணி என்றெல்லாம் புகழப்பட்ட அவ்வணிக்கு முன் பவுமாவின் வெற்றிப்பயணம் நிறைவடையும் என உலகம் எதிர்பார்த்தது.


அதன்படியே முதல் இன்னிங்ஸில் 138 ரன்களில் தெ.ஆ ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய உதடுகளில் கேலிப் புன்னகை குடியேறி பார்வைகளில் கிண்டல் தெறித்தது. 282 ரன்கள் என்னும் இலக்கை லார்ட்ஸில் யாரும் துரத்தியதில்லை எனும் புள்ளிவிவரம் பயமுறுத்த பவுமா முதலில் துரத்தியது..


அந்த புள்ளி விவரத்தை தான்! தன்னுடைய திட்டங்களால் அணிக்கு தளராத நம்பிக்கையை முதலில் தந்தார். அணியாக இணைந்து ஆடுவதின் அவசியத்தை டிரஸ்சிங் ரூமில் விளக்கினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் விரைவில் 2 விக்கெட்டுகள் விழுந்தவுடன் மார்க்ரம்முடன் இணைந்தார்.


அவரோடு இணைந்தது ஹாம்ஸ்டிரிங் காயமும். “செய் அல்லது செத்து மடி” என்று சொன்ன மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அல்லவா! அந்த காயத்தோடு நொண்டி, குதித்து, தள்ளாடி, தடுமாறி அணி தள்ளாடாமல் அன்றைய ஆட்டத்தை நிறைவு செய்தார் பவுமா!


மறுநாள் வெற்றிக்கு 69 ரன்களே இருந்தது! சரித்திரத்தின் அந்தப் பொன்னாள் விடிந்தது! அன்றைய தினம் பவுமா ஆட்டமிழந்தாலும் தன் அணிக்கு தன் வார்த்தைகளால் நம்பிக்கை தந்து கொண்டே இருந்தார். இன்னும் சொல்லப் போனால் தோனியை விட கூல் கேப்டன் பவுமா மட்டுமே!


கடந்த ஒரு தொடரில் மைதானத்தில் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்ட போது அந்த 15 நிமிடத்தில் கிரவுண்டிலேயே தூங்கி எழுந்து ஓய்வு எடுத்தவர் பவுமா! லார்ட்ஸின் அந்தப் புகழ் பெற்ற பால்கனியில் அவர் ஆட்டம் முடியும் வரை அமர்ந்திருந்ததையும் வெற்றிக்கு பின் ஆர்பரிக்காமல்..


உணர்வுப்பூர்வமாக அழாமல் உறுதியான ஒரு வீரன் போல கலங்காமல் நின்றார். லார்ட்ஸின் பால்கனியில் கபில்தேவ் வென்ற உலகக்கோப்பையின் கொண்டாட்டம், கங்கூலி தனது சட்டையைக் கழற்றி சுழட்டிய நாட்வெஸ்ட் கோப்பை கொண்டாட்டம் போன்றவற்றிற்கு ஈடானது அந்தத் தோரணை.


பவுமா அவரது கேரியர் முழுமைக்கும் பட்டிருந்த காயத்திற்கு அருமருந்து அந்தத் தருணம் என்றால் அது பொய்யில்லை! நிறவெறி, ஏளனம், இடஒதுக்கீடு,  எல்லாவற்றிற்கும் தனது தலைமையால் பதில் சொல்லியிருக்கிறார் பவுமா. தனது மகனோடு மகிழ்வுடன் மைதானத்தில் வலம் வந்தார்! 


“மகனே நன்றாகப் பார் கருப்பினத்தில் பிறந்து நிறவெறியால் கொத்திக் குதறப்பட்ட ஒருவன் தான் சோக்கர்ஸ் எனப்பட்ட தன் நாட்டு அணிக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கித் தந்தான் என்று அறிவிக்கும் செயல் அது. ஆம்  இந்த கருப்ப சாமிக்காக காத்திருந்ததே இந்த கப் என்பது தான் உண்மை! 


நிறைவு 🏆


Monday, 9 June 2025

💋 கடவுளும் கமல்ஹாசனும்

🤴கடவுளும் கமலஹாசனும்💋


கடவுள் : வணக்கம் கமல் நல்லா இருக்கிங்களா?


கமல் : வெல்! நான் நன்றாக இருக்கிறேனா என்பது இங்கு முக்கியமில்லை, இந்த உலகம் நன்றாக இருக்கிறதா என்பதே மிகமுக்கியம். ஒவ்வொரு மனிதனும் தனது சுயபுத்தியோடும் ஆத்ம சுத்தியோடும் தனது செயல்களை பரிசோதனை செய்தாலே எல்லாரும் நன்றாக இருப்பதற்கான விதையை போட்டதற்கு சமம்! அந்த விதையை என்றோ நான் விதைத்திருக்கிறேன், எனது தந்தை விதைத்திருக்கிறார். அந்த விதைகள் விருட்சமாகி நிற்கும் போது நன்றாக இருக்கிறது என்பதை எதிர்கால சந்ததியினர் சொல்வார்கள் அதுபோதும்! அந்த ஒன்றே உலகில் எல்லோரும் நன்றாக இருப்பதற்கு சமம்!


கடவுள் : அடடா! உங்களைப் பத்தி தெரிஞ்சி தான் இந்தக் கேள்வியை கேட்டுட்டு போய் ஒரு ஃபுல் மீல்ஸை பொறுமையா ரசித்து ருசித்து சாப்பிட்டு வந்துட்டேன்! 


கமல் : ஆஹ்.. பொறுமையாய் ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிந்த உங்களுக்கு ஏன் கேள்விகளால் வேள்விகள் செய்ய முடியவில்லை என்று கேட்க விழைகிறேன். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தை அழித்துவிடுவேன் என்றானே எங்கள் சந்தான பாரதி.. ஆ.. மன்னிக்கவும் மகாகவி பாரதி.. அவனது ரெளத்திர குணம் ஏன் வரவில்..


கடவுள் : கமல் இருங்க.. இருங்க.. இப்படி ஒவ்வொரு முறையும் இடைவெளி விடாம நீங்களே பேசினா நான் எப்போ பேசறது சொல்லுங்க?


கமல் : எந்த இடைவெளி? பொதுவாக இடைவெளி என்பது இந்தப் பிரபஞ்சத்தில் வானுக்கா, பூமிக்கா, கடலுக்கா கிரகங்களுக்கா, நட்சத்திரங்களுக்கா, என்பதே தெரியாமல் நான் எப்படி இந்தக் கேள்விக்கு விடை சொல்…


கடவுள் : அட இருங்க கமல்.. நான் யார்னு நீங்க கேட்கவே இல்லயே! அதைக் கேட்கவே மாட்டிங்களா? 


கமல் : ஹா.. யாரும் யாரையும் யாரென்று கேட்பதன் மூலம் அனைவரும் சமஉரிமைகள் பெற்றவராவோம்.. இருப்பினும் யார் நீ..? அதை உன்னையே கேள் நீஎனச் சொல்லித் தந்தவன் எங்கள் கிரேக்கத்து கிழவன்! அவர் வழி தொடரும் என்போன்றோர்கள் யார் நீ.? நீ யார்? என கணக்கிலடங்கா முறை எங்களையேஅனுதினமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை விடை தெரியாஅக்கேள்விக்கு தெரியாது என ஒரு வரியில் என்னால் நேர்மையாக விடைசொல்ல முடியும் என்றாலும் அவ்வாறு சொல்லாதது என் புத்தியில் மையம் கொண்டுள்ள அறச்சீற்றத்தின் மாண்பாகும்.


கடவுள் : யப்பா கமல் இருப்பா.. நானே சொல்லிடுறேன், நான் தான் கடவுள் அதாவது ஆண்டவன். நீங்க கொஞ்சம் உவமை இல்லாம பேசுனா நல்லா இருக்கும். 


கமல் : (சிரிக்கிறார்) ஓ அப்படி சொல்றிங்களா! அடிக்கடி பாலச்சந்தர் சார் என்கிட்ட இப்படித்தான் சொல்லுவார்! கடவுள் நம்பிக்கை இல்லாத என்னிடமே வந்து நான் கடவுள் என்றால் என்னால சிரிக்காமல் இருக்க முடியலை! சொல்லப் போனால் நானே ஆண்டவர் தான்! ஆனா நான் கடவுள் அல்ல என்பது எந்தக் கொம்பனுக்கும் புரியாது, அது எனக்கு மட்டுமே தெரிந்த விடயம்! வேண்டுமெனில் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்.. என்றும்  சொல்லலாம்.


கடவுள் : உஸ்ஸ்.. சிரமம் தான்.. நான் சக்தி மிகுந்த கடவுள் என்பதை நீங்க ஒப்புக் கொள்ள என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க செய்கிறேன்.


கமல் : வெல்! நீங்கள் அதை மந்திர தந்திரங்கள் செய்துதான் நிரூபிப்பீர்கள் என்றால் ஹாலிவுட்டில் மேக்கப் கற்றுக் கொள்ளச் சென்ற போது நான் அதையும் கற்றுத் தேர்ந்து வந்திருக்கிறேன். கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று எம் பகுத்தறிவுத் தந்தை ஈரோட்டாரிடம் கேட்ட போது அவர் சொன்னாராம் கடவுள் இருக்கிறார் என ஒப்புக் கொள்வேனென்று. அதை அப்படியே உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். மந்திர தந்திரங்கள் இல்லாமல் உங்களால் கடவுள் என்று நிரூபிக்க முடியுமா?


கடவுள் : அப்படி உங்களுக்கு நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க.


கமல் : ஹாஹ்ஹா என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டீர்கள்! ஹேராம் ரீரெகார்டிங் சமயத்தில் இளையராஜா கூட ஒருமுறை இப்படி என்கிட்ட கேட்டு இருக்கார். இப்போ நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், எங்கே நான் பேசுற ஒவ்வொரு வரியும் அப்படியே தெளிவாக மற்றவர்களுக்கு புரியும்படி உங்களால் வரம் தரமுடியுமா! 


(திடுக்கிடுறார்) கடவுள் : மிஸ்டர் கமல் அப்படி வரம் அருள என்னாலும் முடியாது!! இது கூடவா அறிவு ஜீவியான உங்களுக்குத் தெரியாது?


(இப்போது கமல் திடுக்கிடுகிறார்) ஓ மனைவி, ஓ காதலி, ஓ தமையா, என் அச்சகத்தின் புத்தகம் நீ என்றேன் இப்போது ஓ கடவுளே நீயும் இருக்கிறாய் என்றால் இந்த அச்சகத்தின் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் உங்களுக்கும் இடம் தருகிறேன். சுஜாதா சார் சொல்லுவார்  infinite னு ஒரு தியரி இருக்கு கமல் அது உங்களுக்கு புரிஞ்சா போதும் என்று  வெல்.. உலகில் கடவுள் இருக்கிறார் என்பதை இப்போது நான் எனது உளமார சமரசமின்றி ஏற்கிறேன்.


கடவுள் : அப்பாடா! மிகுந்த மகிழ்ச்சி உலக நாயகனாக இருந்து கழக நாயகனாக மாறி எம்.பி ஆகியவுடன், உங்கள் நிலைப்பாட்டிலிருந்து எம்பி குதித்து கடவுள் உண்டுன்னு ஒப்புக் கொண்டதற்கு நன்றி! இனி மேல் இந்தத் தவறு நிகழாதல்லவா? 


கமல் : ஆஹ்ங்! ராஜா கைய வச்சா அது ராங்கா போகாது என்று அன்றே எனக்கு வாலி எழுதிவிட்டார்! ஒ.கே.. வரம் கொடுப்பவரை நேரில் சந்தித்தபின்னும் வரம் கேட்காமல் இருந்தேன் என்றால் அந்தப் பிழை என் வாழ்நாள் பிழையாகிவிடாதா? அந்த அவச்சொல் எனக்கு வராதிருக்க உங்களிடம் நான் சில வரங்களை கேட்கலாமா?


கடவுள் : அடடே! புரியற மாதிரி நீங்க எங்கிட்ட இப்போது பேசியதற்கே ஒரு வரம் தனியாக தரவேண்டும். நீங்கள் இரண்டு வரங்களைக் கேளுங்கள் தருகிறேன். 


கமல் : நாகேஷ் அடிக்கடிச் சொல்லுவார் உன்னை நம்பி முயற்சி எடு.. இன்னொருத்தனை நம்பி முடிவு என்ன, உன் முடியைக் கூட எடுக்காதேன்னு.. அதைத் தான் இன்று வரை கடைபிடித்து வருகிறேன். நீங்க கடவுள் தானே எனக்கு என்ன 2 வரம் தரவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா! அதை நீங்களே முடிவெடுங்கள்.


கடவுள் : ஓ அப்படியா! சரி உங்களுக்கு 2 வரங்கள் தருகிறேன். முதல் வரம் : நான் சொல்லும் இரண்டு இயக்குநர்களின் படங்களில் நீங்கள் மறுப்பு சொல்லாமல் நடிக்க வேண்டும்!


கமல் : வெல்! அப்போ இரண்டாவது வரம்?


கடவுள் : நீங்க அதுக்கு மறுப்பு சொன்னால் நீங்கள் பேசுவது உலகுக்கே நன்கு புரிவது போல பேசவேண்டும்.


கமல் : தகிட தக்தீம் தா.. தீம்த.. ம்ம்.. ஆரம்பிக்கலாமா.. நடிப்பதற்கு மறுப்பா!! டோண்ட் பி ஸ்டுப்பிட்.. சொல்லுங்க நடிப்பு என்பது என் சுவாசம்! எந்த இரண்டு இயக்குநர் படங்களில் நான் நடிக்க வேண்டும்? 


கடவுள் : ஒருவர் ஷங்கர்.. இன்னொருத்தர் மணிரத்னம்.. என்ன நடிக்கத் தயார் தானே கமல்? 


கமல் (சில நொடிகள் யோசிக்கிறார்) : வெல்! நான் எப்போதிலிருந்து புரியறா மாதிரி பேசணும் மை காட்..


(சட்டென கமல் திருந்திய அதிர்ச்சியில் கடவுள் நாயகன் ஸ்டைலில் அழுகிறார்) ஹா.. ஹாங்.. ஹாங்ஹா.. ஹாஹ்ஹாங்..ஹ்ஹா.. ஹாங்.. 


கமல் : லெளகீக லைஃப் என்பது அந்தக் காலம்.. தக் லைஃப் என்பது ஆண்டவர் காலம்… என்னை மாற்றியதற்கு நன்றி கடவுளே. {விடை பெறுகிறார்…}


கற்பனை - வெங்கடேஷ் ஆறுமுகம் 🖌️


🥘நெய்ச்சோறு 🐐

🥘 பக்ரீத் விருந்து 🐐

பக்ரீத் தினத்தில் நமது ஓட்டுநர் அண்ணன் விடுமுறை என்றாலும் பக்ரீத் அன்று அவர் வீட்டில் இருந்து எனக்கு பிரத்யேக விருந்து தயாரிப்பதாக சொன்னார்! வழக்கம் போல பிரியாணி தானே என்றேன் அலட்சியமாக. ஆண்டு முழுவதும் நம்முடனே பயணிப்பவர் அல்லவா! அவருக்கு என்னுடைய உணவு ரசனை அப்பட்டமாகத் தெரியும்!

ஹாலிவுட் சஸ்பென்ஸ் படக்கதை போல என்ன மெனு என்பதை பக்ரீத் அன்று தெரிந்துஞ்சிங்கோங்க என்றார். அவர் விருப்பப்படியே விட்டுவிட்டேன். பக்ரீத் முதல் நாள் கமுதி போயிருந்தேன் அங்கு எனது மாமா முறை உறவினர் ஒருவர் மாப்ள நாளைக்கு மதுரையில் தானே இருப்பே நாளைக்கு உனக்கு பக்ரீத் விருந்து அனுப்பறேன் என்றார்.

எங்க அனுப்பணும் சொல்லு அந்த இடத்துக்கு விருந்து சாப்பாட்டை கேரியரில் அனுப்பறேன்னார். பொதுவா இப்படி வாலண்டியரா வந்து சொல்றவங்க அடுத்த நாள் வேறு ஏதோ காரணம் சொல்லி அனுப்பமாட்டார்கள். ஆகவே ஆபிஸ் முகவரிக்கு அனுப்புங்க மாமான்னு சொல்லிட்டு மதுரைக்கு வந்துட்டேன். ஈகையுடன் மறுநாள் விடிந்தது!

காலையில் சேவல் கூவும் முன் என் மொபைல் கூவியது போனில் புதிய எண் ஒன்று! புதிய எண்களை எடுப்பது இல்லை என்றாலும் தூக்கத்தில் எழுந்து அனிச்சையாக மொபைலை அட்டெண்ட் செய்து, ஹலோவினேன். அண்ணாச்சி எழுந்துட்டியளா? ஒறங்கும் போது தொல்ல பண்ணிட்டோனோ? ஏதும் தப்பா நினைச்சுகிடலல்ல?

படபடவென கேள்வித் தொனியாகவே பேசுகின்ற நெல்லை வட்டார வண்ணத்தை பூசிய தமிழ் என்பது கேட்டதும் புரிந்தது. ‘அண்ணாச்சி நீங்க யாரு’ன்னு.. பாத்தியளா நான் அதச் சொல்லல பாருங்க, கமுதி பாஸ்கர் அண்ணாச்சி இருக்காவுள்ளா, அவரு தான் உங்க நம்பர் தந்தாவே தம்பி உங்கச் ச்சாப்பாடு மதியம் எத்தன மணிக்கு வேணும்?

எனக்கு முழு தூக்கமும் தொலைந்தது! அட நம்ம மாமா சொன்னபடியே செஞ்சிட்டாரே. ‘அண்ணாச்சி என்ன சாப்பாடு’ என்றேன். அதெல்லாம் பாஸ்கரு அண்ணாச்சி சொல்லிட்டாவ அத நேர்ல கொண்டுவரும் போது நீங்களே தெரிஞ்சிகிடுங்க. என்ன ஒரு 4 பேர் திருப்தியா சாப்பிடற அளவுக்கு கெட்டிட்டு வந்தா போதும் தானே? என்றார்.

ஆபிஸில் 18 ஊழியர்கள் இருக்காங்க அதில் நம்ம டிரைவர் அண்ணன் இஸ்லாமியர் அவரும் வீட்டில் சமைத்து வருவதாக சொல்லியிருந்தார். அவரை தவிர்த்துஅன்று என்னையும் சேர்த்து 15 பேர் இருந்தோம். அவருக்கு போன் செய்தேன் எடுத்தவுடன் “சார் நான் 12 மணிக்கே சமைச்சு எடுத்துட்டு வந்துடுவேன்னார்! அட இருங்க பாய் என்றேன்.

உங்களால எத்தனை பேருக்கு சமைச்சு எடுத்துட்டு வரமுடியும் என்றேன். சார் இப்போ சொன்னா நிச்சயம் நீங்க இல்லாம இன்னும் 5 பேருக்கு முடியும் என்றார். செய்யுங்க என்றேன். அண்ணாச்சிக்கு போன் செய்து 10 பேருக்கு செய்துதர முடியுமா என்றேன். அட 10 பேருக்கு செஞ்சு அனுப்புறேன் நிச்சயம் 12 பேர் சாப்பிடலாம் பாத்துகிடுங்க..

ஆக மொத்தம் இன்று மதியம் அலுவலகத்தில் பக்ரீத் விருந்துன்னு முடிவாகி அனைவருக்கும் இன்னிக்கு மதிய விருந்து இருக்குன்னு ஆபிஸ் வாட்ஸப் தகவல் அனுப்ப, அத்தனை பேரும் மெனு என்னன்னு கேட்டு பதில் அனுப்பி இருந்தனர். அவங்களுக்கும் நம்ம உணவு ரசனை தெரியும். ஆனா மதிய மெனு என்னான்னு எனக்கே தெரியாதே?

அண்ணாச்சியும் சரி டிரைவர் அண்ணனும் சரி என்னிடம் அதெல்லாம் சஸ்பென்ஸ்னு சொன்னதை திருப்பி அவ்வை சண்முகி பட ஸ்டைலில் அதெல்லாம் சஸ்பென்ஸ்னு நானும் பதில் அனுப்பினேன். அன்று மதியம் வரை எனது ஆபிஸில் ‘வெங்கடேஷ் சாரே சஸ்பென்ஸ் வைக்கிறார்னா இன்னிக்கு எதாவது ஸ்பெஷல் நான் வெஜ்ஜா இருக்கும்..

‘ஒருவேளை ஒட்டக பிரியாணியாஇதுக்குமோ! ‘இல்லப்பா ஆப்கன் ஆடு கறிச்சோறு இல்ல மந்தி பிரியாணி? ‘அட பீஃப், மட்டன், சிக்கன், மீன் எல்லாமே இருக்கும் பாரேன்’ என்று அதன் எச்சில் 2கோடி போகும் எலும்பு 3 கோடி போகும் ரேஞ்சுக்கு எதிர்பார்ப்பில் இருந்தனர். இத்தனை பேரின் எதிர்பார்ப்பு எனக்கு கொஞ்சம் உதறலாகவே இருந்தது.

மதியம் சரியாக மணி 12 :19 ஆகும் போது நமது டிரைவர் அண்ணன் ஆபிஸில் காலடி வைத்ததும் முதல் மரியாதை படத்தில் ராதா காலடி வைத்ததும் சிலிர்க்கும் சிவாஜி கை போல கடிகார முள் சிலிர்த்து சட்டென 12:20ஆனது. அடுத்த விநாடியே அண்ணாச்சியின் போன்! என்ன இன்னிக்கு எல்லாரும் பக்கா பங்சுவாலிட்டியா இருக்காங்களேன்னு..

வியந்து, ‘சொல்லுங்க அண்ணாச்சி என்றேன், எலே தம்பி தப்பா நினைக்காதிய இன்னும் ஒரு கால் மணி நேரம் ஆகும் பாத்துகிடுங்க என்றார். 12: 45க்குள் அவரும் வர பக்ரீத் பிரியாணி பாத்திரங்கள் திறக்கப்பட மடை திறந்த வெள்ளம் போல அவற்றிலிருந்து ஆவி கிளம்பியது. புராணப் படங்கள் போல புகை மண்டலம் இல்லை ஆனால்..

அங்கு அசைவ உணவுகளின் கம கம மணம் ரூம் ஸ்பிரேயர் அடித்தது போல பரவியது. டிரைவர் அண்ணன் நெய் சோறும், மட்டன் சுக்காவும் புதினா சட்னியும் கொண்டு வந்திருந்தார். அண்ணாச்சியும் அதே நெய் சோறும் காயல் களரிக்கறி மற்றும் நல்லி மசாலா கொண்டு வந்திருந்தார். முட்டைகளும் இரண்டு முழுக்கோழி தந்துரியும் இருந்தது.

முந்திரி,பிஸ்தா, கிராம்பு குத்தப்பட்ட உலர் திராட்சை என நெய் கமகமக்க நெய்ச் சோறு, டிரைவர் அண்ணன் வீட்டு நெய் சோற்றில் தக்காளி சேர்க்கவில்லை அவரது புதினா சட்னி அன்றைய டாப் நாச். அண்ணாச்சியின் களரிக்கறியும் ருசியில் அலறவிட்டது. விருந்து முடிந்து 2 நாட்களாகியும் அந்த உணவின் மணம் இன்னும் எங்களது கைகளில்..!

இந்த பக்ரீத் விருந்து முடிந்ததும் தரப்பட்ட பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீமை ருசித்துக் கொண்டிருந்தபோது, வருடத்தில் ஒரு சில தினங்களாவது இப்படி ஒரு விருந்து அது அசைவமோ அல்லது சைவமோ அனைவருக்கும் தரவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது! ஈகை என்றாலே அது உவகை தானே!

🩷 ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ் 🥘