🏆கருப்பசாமிக்காக காத்திருந்த கப்” 🏆
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்திலிருந்து லங்கா எனும் புறநகர்ப் பகுதி ஏழை கறுப்பின மக்கள் வாழும் பகுதி. கேப்டவுனிலேயே பணிபுரிந்தாலும் கறுப்பின மக்களுக்கு அங்கே தங்க அனுமதியில்லை! காரணம் நிறவெறி! அங்கு ஒரு சராசரி குடும்பத்தில் பிறக்கிறது ஓர் ஆண் குழந்தை.
சராசரி உயரம் கூட இல்லாத குள்ளமான உருவம். நிறம் கருப்பென்றாலே எள்ளி நகையாடும் வெள்ளையின ஆப்பிரிக்க மக்கள் அந்தக் கறுப்பின சிறுவனுக்கு அள்ளி அள்ளி வழங்கியது கேலி, கிண்டல்களைத் தான். ஆனால் அச்சிறுவனின் கவனம் முழுவதும் கிரிக்கெட்டில் இருந்தது.
அவன் தன்மீது வந்த கிண்டல்களுக்கு தன் காதுகளைக் கொடுக்கவில்லை. தன் கண் பார்வையை பந்துகளின் மீது கொடுத்தான்! அவன் அடித்த பந்துகள் கண்ணாடிக் கூரைகள் பலவற்றை உடைத்திருக்கிறது! அக்கூரைகளை மட்டுமின்றி மட்டுமல்ல நிறவெறி, அடக்குமுறை, இடஒதுக்கீடு என..
சமத்துவத்திற்கு தடையாக உள்ள எல்லாத் தடைகளையும் பின்னாளில் நொறுக்கும் என்பதற்கான முன்னுரையே அது. ஆம்! உலகக் கிரிக்கெட்டில் கடந்த 100 ஆண்டுகளாக எந்த அணித் தலைவனும் செய்யாத சாதனையை செய்து காட்டி இருக்கிறான் கருப்பின மக்களின் நட்சத்திரம் தெம்பா பவுமா!
அதுவும் எப்படி!? தான் தலைமையேற்ற 10 டெஸ்டுகளில் 9இல் வெற்றி 1இல் டிரா என தோல்வியே காணாத கேப்டன் என்னும் அழியாப் புகழோடு இதனை நிகழ்த்தியிருக்கிறான். இந்த சாதனைக்கு அவ்வளவு எளிதாக வந்ததல்ல. ஏளனக் கற்கள், கிண்டல் சொற்கள், என பவுமா மீது விழுந்த..
அத்தனை கற்களையும் எடுத்து அவன் கட்டிய வெற்றிக் கோட்டை இது! பவுமாவின் இடத்தில் இருந்து இதை நிச்சயம் இன்னொருவர் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது! அணியில் 2014 இல் அறிமுகமான பவுமா சந்தித்த அளவு காயங்கள் எந்த ஆட்டக்காரரும் சந்தித்திருக்க முடியாது.
செஞ்சுரிக்கு டெண்டுல்கர் போல இஞ்சுரிக்கு பவுமா! ஒரு முழுத் தொடரும் பவுமா விளையாடியது கிடையாது 80 சதவீத தொடர்களில் அவர் காயம்பட்டு விலகிடுவார். ஒரு கட்டத்தில் பவுமாவை உடல் தகுதி காரணம் காட்டியே அவரை ஒதுக்கி வைத்திருந்தனர். IPL வாய்ப்புகளும் வரவில்லை.
ஏன் தெ.ஆவில் நடக்கும் T20 அணியில் கூட தாமதமாகத் தான் இடம் கிடைத்தது. ஆனால் கேலிக்குரிய கேள்விகளுக்கு பவுமாவின் பேட் பதில் சொன்னது. அறிமுக ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த சதம் அவரை அணியில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவை தள்ளியது!
தென்னாப்பிரிக்கா அணியில் இடஒதுக்கீடு முறை உள்ளது. ஆடும் 15 வீரர்களில் 9 பேர் வெள்ளையினத்தவர் மீதி 6 பேர் கலர்டு எனப்படும் கலப்பினத்தவர் அதில் நிச்சயம் 2 கறுப்பின வீரர்கள் இருக்கவேண்டும் என்பது விதி. அந்த விதியை வைத்து தான் அவரை அணியில் சேர்த்தது தேர்வுக்குழு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த சதம், இந்தியாவுக்கு எதிராக எடுத்த சதம் என அவரது மட்டை தொடர்ந்து பேசினாலும் காயங்கள் அவரை அதிகமாக முடக்கிவிட்டது. டெண்டுல்கருக்கு டென்னிஸ் எல்போ காயம் போல ஹாம்ஸ்டிரிங் என்னும் காயம் பவுமாவுக்கு உண்டு.
அடிக்கடி காயங்களால் உள்ளே வெளியே என்று மங்காத்தா ஆடிக் கொண்டிருந்தது பவுமாவின் கேரியர். குயிண்டன் டி காக் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் அணியில் அப்போது இருந்த சூழலில் கேப்டன் பதவியை பல வீரர்கள் ஏற்கத் தயங்க பவுமாவை கேப்டனாக்கியது தேர்வுக்குழு!
அப்படி அவர்கள் வேண்டாத பிள்ளையாக கொடுத்த இந்த காண்டாமிருகப் பதவியை பவுமா பணிவுடன் ஏற்றார். சவுத் ஆப்பிரிக்கா ஆடும் ஃபைனலை சவுதி பாலைவனத்தில் வைத்தால் கூட மழை வரும் என்று உலகமே கேலி பேசிய காலமது. ஆனால் பவுமா வந்த பின்பு அந்த நிலை மாறியது!
ஆடிய டெஸ்டுகளில் எல்லாம் வெற்றியே பரிசாக வந்தது. காலம் இதற்குத் தான் காத்திருந்தது என்பது போல பவுமா சந்தித்ததெல்லாம் வெற்றி. இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா பரிதாபமாக தோற்றதால் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிக்கு தகுதி பெற்றது தென் ஆப்பிரிக்கா.
அவர்கள் சந்திக்க இருந்த எதிரணி ஆஸ்திரேலியா! உலகின் மிகுந்த வலுவான டெஸ்ட் அணி, டெஸ்ட் சாம்பியன் ஆட்டங்களில் அதிக தோல்வியை சந்திக்காத அணி என்றெல்லாம் புகழப்பட்ட அவ்வணிக்கு முன் பவுமாவின் வெற்றிப்பயணம் நிறைவடையும் என உலகம் எதிர்பார்த்தது.
அதன்படியே முதல் இன்னிங்ஸில் 138 ரன்களில் தெ.ஆ ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய உதடுகளில் கேலிப் புன்னகை குடியேறி பார்வைகளில் கிண்டல் தெறித்தது. 282 ரன்கள் என்னும் இலக்கை லார்ட்ஸில் யாரும் துரத்தியதில்லை எனும் புள்ளிவிவரம் பயமுறுத்த பவுமா முதலில் துரத்தியது..
அந்த புள்ளி விவரத்தை தான்! தன்னுடைய திட்டங்களால் அணிக்கு தளராத நம்பிக்கையை முதலில் தந்தார். அணியாக இணைந்து ஆடுவதின் அவசியத்தை டிரஸ்சிங் ரூமில் விளக்கினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் விரைவில் 2 விக்கெட்டுகள் விழுந்தவுடன் மார்க்ரம்முடன் இணைந்தார்.
அவரோடு இணைந்தது ஹாம்ஸ்டிரிங் காயமும். “செய் அல்லது செத்து மடி” என்று சொன்ன மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அல்லவா! அந்த காயத்தோடு நொண்டி, குதித்து, தள்ளாடி, தடுமாறி அணி தள்ளாடாமல் அன்றைய ஆட்டத்தை நிறைவு செய்தார் பவுமா!
மறுநாள் வெற்றிக்கு 69 ரன்களே இருந்தது! சரித்திரத்தின் அந்தப் பொன்னாள் விடிந்தது! அன்றைய தினம் பவுமா ஆட்டமிழந்தாலும் தன் அணிக்கு தன் வார்த்தைகளால் நம்பிக்கை தந்து கொண்டே இருந்தார். இன்னும் சொல்லப் போனால் தோனியை விட கூல் கேப்டன் பவுமா மட்டுமே!
கடந்த ஒரு தொடரில் மைதானத்தில் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்ட போது அந்த 15 நிமிடத்தில் கிரவுண்டிலேயே தூங்கி எழுந்து ஓய்வு எடுத்தவர் பவுமா! லார்ட்ஸின் அந்தப் புகழ் பெற்ற பால்கனியில் அவர் ஆட்டம் முடியும் வரை அமர்ந்திருந்ததையும் வெற்றிக்கு பின் ஆர்பரிக்காமல்..
உணர்வுப்பூர்வமாக அழாமல் உறுதியான ஒரு வீரன் போல கலங்காமல் நின்றார். லார்ட்ஸின் பால்கனியில் கபில்தேவ் வென்ற உலகக்கோப்பையின் கொண்டாட்டம், கங்கூலி தனது சட்டையைக் கழற்றி சுழட்டிய நாட்வெஸ்ட் கோப்பை கொண்டாட்டம் போன்றவற்றிற்கு ஈடானது அந்தத் தோரணை.
பவுமா அவரது கேரியர் முழுமைக்கும் பட்டிருந்த காயத்திற்கு அருமருந்து அந்தத் தருணம் என்றால் அது பொய்யில்லை! நிறவெறி, ஏளனம், இடஒதுக்கீடு, எல்லாவற்றிற்கும் தனது தலைமையால் பதில் சொல்லியிருக்கிறார் பவுமா. தனது மகனோடு மகிழ்வுடன் மைதானத்தில் வலம் வந்தார்!
“மகனே நன்றாகப் பார் கருப்பினத்தில் பிறந்து நிறவெறியால் கொத்திக் குதறப்பட்ட ஒருவன் தான் சோக்கர்ஸ் எனப்பட்ட தன் நாட்டு அணிக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கித் தந்தான் என்று அறிவிக்கும் செயல் அது. ஆம் இந்த கருப்ப சாமிக்காக காத்திருந்ததே இந்த கப் என்பது தான் உண்மை!
நிறைவு 🏆