Wednesday, 7 September 2016

2 🐊🐊 முதலைகள் உலகில் சாகசப்பயணம் 🐊🐊 2


இந்த ஆற்றில் 15 இலட்சம் முதலைகள் வாழ்கிறது வாங்க படகில் போலாம் எனக்கூப்பிட்டால் எப்படி இருக்கும்? குலை நடுங்கிப் போய் நின்றிருந்தோம் ஆனால் அங்கு டூரிசமே அதுதான் எனப் போகப்போக தெரிந்தது. பெரிய மரவீட்டில் டிக்கெட் கவுன்ட்டர் இருந்தது அதையொட்டி ஸ்நாக்ஸ் கடை ஒன்றும் எவர் கிளேடின் பெருமை பீத்த கலயங்களைச் சொல்லும் டி- சர்ட், கீ -செயின், பீங்கான் கோப்பைகள் விற்கும் கிஃப்ட் ஷாப் ஒன்றும் இருந்தது.


சுந்தர் எங்களுக்கான டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்தார்..வழக்கம் போல கொய்யாப்பழ ஃப்ளேவர் ஃபேன்டா டின்னுடன் மரவீட்டுக்கு எதிரில் இருந்த குடிலில் அமர்ந்தோம்.. ஒரு படகில்  15 பேர் செல்லலாம் 15 நபர்கள் சேரும் வரை காத்திருக்க வேண்டும் எங்களையும் சேர்த்து 8 நபர்களே இருந்ததால் காத்திருக்க ஆரம்பித்தோம். பக்கத்தில் நடுவயது அமெரிக்கத் தம்பதியினர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள்.



தலா 13வயது, 8 வயது, 5 வயது என சரியான இடைவெளி விட்டு பெற்ற பிள்ளைகள் 5வயது குட்டி மட்டும் மகன்.. அந்த இரு பெண்குழந்தைகளில் 13 ஆப்பிள் ஐபேடிலும் 8 வயது செல்போனிலும் ஆழ்ந்து இருக்க 5 வயது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்..அவர்களின் தாயாரான அந்தப் பெண் தன் கைப்பையில் இருந்து வாக்கப்பட வந்தபோது வீட்டுக்கு விளக்கேற்ற தன் தாய்வீட்டு சீதனமாக கொண்டுவந்த லைட்டரை வெளியே எடுத்தார்.

இன்னொரு முறை பையில் கைவிட்டு பச்சைப்புல் நிற சிகரெட் பெட்டியை எடுத்தார் அதிலிருந்து தெர்மா மீட்டர் மெல்லிசில் ஒரு நீள சிகரெட்டை எடுத்து லைட்டரில் பற்றவைத்தார்.. அதே நேரம் அவர் கணவரும் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொள்ள அந்த சிகரெட்டின் தலையில் கொள்ளி வைத்து தான் அவரது பெட்டர் ஹாஃப் என்பதை நிரூபித்தார் அப்பெண். இருவரின் தலைமீதும் புகை மேகம் தவழ எங்கள் பக்கம் திரும்பி சிரித்தனர்.

கூட்டம் சேர்ந்தது படகுக்கு அழைக்கப்பட்டோம்.. க்யூவில் நின்று நுழையும் போதே நம்மை படம் எடுத்தார்கள்.. சவாரி முடிந்து வரும்போது உங்கள் புகைப்படம் தயாராக இருக்கும் 5 டாலர்கள் கட்டணம் தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.. படகுத் துறைக்கு நடந்தோம்.. ஏரிக்குள் அமைத்த மரப்பாலம் அது.. வரிசையாக வித்யாசமான படகுகள் காலடி நீரில்  கருப்பு முதலை ஒன்று குபுக்கென அமிழ்ந்து மறைய எங்களுக்கு பீதி தோன்றியது.



காலுக்கடியில் நீரில் குட்டிக்கரணம் அடித்த முதலையைப் பார்த்த பின்பு கவிஞர் வைரமுத்து சொன்னது போல் வயிற்றுக்கும் கழுத்துக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருண்டதடி.. படகுக்கு வந்தோம்.. இங்கே இந்த படகுகள் பற்றி.. இவை சாதாரண படகுகள் அல்ல மணிக்கு 60 மைல் வேகம் செல்லும் படகுகள் நீர் பரப்பின் மீது பறந்து செல்லும் படகுகள்.. விமான என்ஜின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட படகுகள்.

படகு கிளம்புவதே விமானம் கிளம்புவது போல பெரும் இரைச்சலை கிளப்பும் தண்ணீர் மட்டத்திற்கு மேல் பறந்து நிற்கும் போது தண்ணீரில் இறங்கும் ஏறி அமர்ந்தோம்.. முதலில் கொடைக்கானல் ஏரி படகு சவாரி போல மெல்ல அசைந்தாடி கிளம்பியது 5 நிமிட பிரயாணத்திற்கு பின் ஒரு திருப்பத்தில் திரும்பியதும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு நேர்கோடு இழுத்தது போல ஏரி ஒரு ரன்வே போல நீண்டிருக்க படகு உறும ஆரம்பித்தது.. ரெடி 1..2..3..

 


ஹியர் வீ கோ என்ற படகோட்டியின் உற்சாக குரல் படகு கிளம்பும் சத்தத்தை மீறி கேட்க ஜிவ் என கிளம்பியது அந்த போட்.. நிஜத்தில் அசுர வேகம் தான் 2 நிமிடத்தில் ஒரு கிலோ மீட்டர் கடந்திருந்தோம்.. நடு ஆற்றில் நின்றது படகு.. ஆற்று நீருக்கும் எங்களுக்கும் 3 அடி தான் இடை வெளி.. என் பயம் எல்லாம் நீருக்குள் இருந்து முதலை பாய்ந்து வந்து கடித்து விடுமோ என்று தான்..தோதாக நான் ஓரத்தில் உட்கார்ந்து இருந்தேன்.


அதோ முதலை என ஒரு வெள்ளைக்கார அம்மணி கூவ பலர் ஆவலுடனும் நான் அச்சத்துடனும் நீர்பரப்பை நோக்க ஒன்றல்ல இரண்டல்ல நான்கைந்து முதலைகள் நீரில் பல்டியடித்து விளையாடிக் கொண்டு இருந்தன.. இவையெல்லாம் அலிகேட்டர்கள்.. க்ரோகடைல்ஸ் அல்ல என்றார் படகோட்டி.. அவர்தான் இந்த பயணத்தின் கைடும்.. அதென்ன அலிகேட்டர் க்ரோகடைல் இரண்டும் முதலைகள் தானே என்றோம்.



படகோட்டி சிரித்தபடி சொன்னார்.. அகண்ட தாடை இருப்பது அலிகேட்டர் குறுகிய தாடை இருப்பது க்ரோகடைல்.. அலிகேட்டர் நல்ல தண்ணீரில் மட்டுமே வாழும்.. க்ரோகடைல் உப்பு மற்றும் நல்ல தண்ணீர் இரண்டிலும் வாழும் என்றார்.. ஓ இதுல இம்புட்டு விஷயம் இருக்கா என வியந்தபோது மீண்டும் போட் கிளம்பியது.. இன்னும் 2 கி.மீ வந்தோம் படகு நிற்க சுற்றிலும் தண்ணீர் தண்ணீர்.. இந்த இடம் 30 மீட்டர் ஆழம் உள்ள பகுதி இங்குதான்...

20அடி நீளமுள்ள ஜெயண்ட் அலிகேட்டர்கள் வாழ்கிறது என்றார்.. என் வயிற்றுக்குள் ஒரு ஐஸ் கத்தி இறங்கியது.. பொதுவாக ஜெயண்ட் அலிகேட்டர்கள் நீர்பரப்புக்கு மேல் தென்படாது கரையோரங்களில் சன்பாத் எடுக்கும்.. அப்படி நீர்பரப்புக்கு மேல் வந்தால் அது வேட்டையாடத் தான் வரும் என அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே படகு குலுங்கியது.. நீர் பரப்பில் எங்கள் படகை இடித்தபடி ஒரு 20 அடி அலிகேட்டர் நெளிந்தது...

வரும்...

No comments:

Post a Comment