எங்கள் படகை உரசி நெளிந்த அந்த முதலை ஒரு அலிகேட்டர் என்பது அதன் அகண்ட தாடையை வைத்து கணிக்க முடிந்தது.. அதன் ரம்பப் பற்களின் இடையில் கொழுத்த மீன் ஒன்றை கவ்வியிருந்தது.. சரேலென மீண்டும் நீருக்குள் அமிழ்ந்து மறைந்தது எங்கள் பயமும் பறந்தது முதலைகள் பொதுவாகவே கூச்சசுபாவிகள் அதனிடம் நாம் வாலாட்டினால் மட்டுமே அது வாயாட்டும் வேறு தொந்தரவுகள் தராது என்றார் கைடு / படகோட்டி.
இந்த எவர்க்ளேட் ஆற்றைப்பற்றி சில தகவல்கள் 100 சதுர மைல் பரப்பளவு நீளமும் 150 சதுர மைல் அகலமும் கொண்ட பெரும் நீர்ப்பகுதி ஆறெங்கும் கோரைப்புற்களும் எர்வாமேட்டின் கம்பெனி சொல்வது போல அரிய வகை நீர்த் தாவரங்களும் நிறைந்த ஏரியாகும்.. சதுப்பு நில திட்டுகளும் தாவரக் காடுகளும் ஆங்காங்கே குட்டித் தீவுகள் போல அமைந்திருக்கும்.. இந்தச் சூழல் தான் முதலைகள் வாழ்வதற்கு மிக மிகப் பொருத்தமானவை.
முதலைகள் சதுப்பு காடுகளில் தாங்கள் இட்ட முட்டையை அழகாக கூடு கட்டி பாதுகாக்கின்றன. குட்டி வைக்கோல் போர் போன்ற கோரைப்புல்லில் ஆன முதலை கூடுகளை ஆங்காங்கே கண்டோம்.. பச்சைப் புல்வெளியில் அது மட்டும் தவிட்டு நிறத்தில் தனித்து தெரிந்தது. அங்குள்ள ஒரு வகை கோரைப்புல்லை கைடு கத்தியால் அறுத்துத் தந்தார் கீழிருந்து மேலாக அந்த புல்லை உருவுவது போல தடவினால் வெல்வெட் போலிருந்தது.
இப்போது அதையே மேலிருந்து கீழாக தடவுங்கள் மிக மிக மெதுவாக என்றார் நானும் அதை மேலிருந்து கீழாக தடவிய அடுத்த விநாடியே சுருக்கென்று என் விரலை துளைத்தது அந்த புல்.. துணி தைக்கும் ஊசியால் கையைக் குத்திக் கொண்டால் எப்படி இருக்குமோ அது போல என் விரலில் ஒரு ரத்த முத்து துளிர்த்திருந்தது.. அந்தப்புல் கீழிருந்து மேலாக வெல்வெட் போலவும் மேலிருந்து கீழாக முட்களையும் இருமுகம் கொண்டது.
பிறகு அங்கிருந்த மூங்கில் தண்டு போன்ற ஒரு தாவரத்தின் தலையில் ஒரு பூ மஞ்சளில் சிரித்தது.. அதை உடைத்து உடைத்து ஒரு நெக்லெசாக மாற்றி ஒரு சின்னப்பெண்ணுக்கு பரிசளித்தார் படகோட்டி.. அந்த இலையில் இருந்த ஒரு புழுவை தின்னப் போவதாக போக்கு காட்டி அனைவரையும் சிரிக்கவும் வைத்தார்.. மீண்டும் ஏர் போட் புறப்பட அங்காங்கே டைவ் அடிக்கும் முதலைகளை பார்த்துக் கொண்டே கரைக்கு திரும்பினோம்.
40 நிமிடப் பயணம் திரில்லிங்காக முடிந்தது.. இந்த நதியில் ஏன் பறக்கும் ஏர்போட்டுகள் என்றால் தாவரங்கள் சேதமாகாமல் பயணம் செய்யவே என்பதும் பிறகு புரிந்தது.. நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெற்றுக் கொண்டோம்.. அடுத்து அங்கு டிஸ்கவரி சானலில் நாம் பார்த்து ரசித்த உலகப் புகழ் கேட்டர் பாய்ஸ் வழங்கும் அலிகேட்டர் ரெஸ்க்யூ என்னும் ஷோவிற்கு சென்றோம்.. அதென்ன அலிகேட்டர் ரெஸ்க்யூ..?
50லிருந்து 60 இராட்சத முதலைகள் இருக்கும் ஒரு கூண்டு வேலி தெரிந்தது.. கரும் பாறைகளாக முதலைகள் அசைவின்றி குவிந்து கிடந்தன 8 அடி நீளம் முதல் 15 அடிவரை வித விதமான முதலைகள்.. கூண்டைச் சுற்றி நாங்கள் எல்லாரும் நிற்க சினிமா காட்சிக்கு பெல் அடிப்பது போல மணி ஒலிக்க அந்த கூண்டுவேலியின் பக்கவாட்டு கதவை திறந்து கொண்டு கெளபாய் தொப்பியணிந்த இளைஞன் தனியாளாக கொஞ்சமும் அச்சமின்றி படுத்திருந்த முதலைகளை கடந்து உள்ளே நுழைந்தான்...
அந்த கூண்டு அரங்கில் 60க்கும் மேற்பட்ட ராட்சத முதலைகள் அவை அனைத்தையும் பொருட்படுத்தாது அவற்றிற்கு நடுவே அவன் நடந்து வந்ததே ஒரு சாதனையாக தெரிந்தது.. ஆனால் முதலைகள் அசைவின்றி அப்படியே கிடந்தன.. முதலைகளை எல்லாம் அவ்வளவு எளிதில் பழக்க முடியாது அவற்றின் குணம் அப்படி மிகச் சிறந்த பயிற்சியும் துணிவும் முதலைகளின் உடல்மொழியும் தெரிந்து இருந்தால் தான் இது முடியும்.
அரங்கின் நடுப்பகுதிக்கு வந்து நின்ற அந்த இளைஞனுக்கு கேட்டர் பாய்ஸ் எனப்பெயர்.. அனைவருக்கும் அமெரிக்க ஆங்கிலத்தில் வந்தனம் சொல்லிவிட்டு காலடியில் கிடந்த முதலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓரத்தில் குவிந்து கிடந்த பெரிய முதலைகள் பக்கம் சென்றான் அது வரை அசைவற்று கிடந்த முதலைகள் இப்போது கலைந்தன அதில் சில அவனைக் கடிக்கப் பாய்ந்தன..அவன் மிக மிக அழகாக அதை சமாளித்தான்.
பயப்படாமல் தன் கால் கை அசைவுகளிலேயே அவற்றின் கவனத்தை திசை திருப்பினான்.. ரவுடித்தனம் செய்த முதலைகள் பாய்ந்து அங்கிருந்த தொட்டிக்குள் இறங்கி மீண்டும் அசைவற்ற நிலைக்கு திரும்பின.. சாதுவாக படுத்திருந்த முதலைகளில் ஒன்றை ஏதோ ஒரு துணி மூட்டையை தூக்குவது போல தூக்கினான்.. அதன் எடை எப்படியும் 300 கிலோ இருக்கும் அப்படியென்றால் அந்த இளைஞனின் வலிமையை பாருங்கள்.!
அதை அரங்கின் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து போட்டான் முதலை அவ்வளவாக மனிதர்களுக்கு நட்பான பிராணி அல்ல அதற்கு கோபம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. ஒரு முதலை தாக்க ஆரம்பித்தால் அனைத்தும் ஒன்றும் சேர்ந்துவிடும்.. இப்படியெல்லாம் அவன் சொல்ல சொல்ல அவனது பணி எவ்வளவு அபாயகரமானது எனப்புரிந்தது.. இப்போது என்ன செய்யப்போகிறான் அவன் சொன்னதை கேட்டு உறைந்து போனோம்.
முதலையின் வாயை நன்கு திறந்து அதன் முனையில் தனது தாடை நாடியை வைக்கப் போகிறேன் அதுவும் என்இரு கைகளையும் விரித்துக் கொண்டே என்றான்.. இங்கு ஒரு செய்தி முதலை வாயை அதுவாக திறந்து மூடும் போது எந்தப் பிரச்சனையுமில்லை.. அதை வேறு ஒருவர் வலுக்கட்டாயமாகத் திறந்தால் லாக் செய்தது போல ஒரு க்ளிக் கேட்கும்.. அந்த கிளிக்கை ரீலிஸ் செய்ய முதலையின் வாயை அதிவேகத்தில் அறைந்து மூடுமாம்.
இந்த அதிவேக மூடலின் எடை என்ன தெரியுமா நண்பர்களே..அதிகமில்லை 5 டன் எடை மோதும் வேகம்.. அதாவது தானாக முதலை வாய் மூடும் நேரத்தில் அதன் வாய்க்குள் நமது கையோ காலோ இருந்தால் அது அப்படியே துண்டாகி பத்தடி தூரம் அந்தத் துண்டம் சுழற்றி வீசப்படுமாம். அவன் செய்யப்போகும் சாகசம் எவ்வளவு ரிஸ்க்கானது என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தோம்.. அவன் முதலையின் மீது நன்கு அமர்ந்தான்.
அதன் தாடையை விரித்து மெல்ல மெல்ல பேசிக்கொண்டே தன் நாடியை அதன் பிளந்த வாய் நோக்கி வைத்தான்.. இதில் புத்திசாலித்தனம் முதலையின் தலையை 90 டிகிரி செங்குத்தாக பிடித்தது இந்த கோணத்தில் முதலைக்கு தன் மூக்கு கண்களுக்கு தெரியாதாம்.. வெறும் பக்கவாட்டு பார்வை தான் அவன் நாடியை வைத்தது முதலைக்குத் தெரியாது.. மெல்ல தன் இரு கைகளையும் விரித்தான்.. கூட்டம் மெய்மறந்து நின்றது.
அண்ணாந்திருக்கும் முதலை அதன் மீது யேசுநாதர் போல கைவிரித்து தன் தாடையை பிளந்த முதலை வாயில் வைத்த காட்சி அங்கே உறைந்து நிறைந்து இருந்தது.. 20 விநாடிகள் ஆனதும் அவன் செய்தான் பாருங்கள் ஒரு ரிஸ்க்கான செயல்.. ஆம் விரித்த இரு கைகளை மடக்கி அதில் ஒருகையை முதலை வாய்க்கு நடுவில் சடாரென கொண்டு சென்றான் சென்ற வேகத்திலேயே கையை வெளியே எடுத்து அதன் வாயை மூடினான்.
ஆம் அவன் கையை விட்ட விநாடி முதலை தன் தாடை லாக்கை ரிலீஸ் செய்திருந்தால் அவன் கை இரண்டு துண்டாகி இருக்கும்.. திரில்லான ஷோ அனைவரும் கைதட்டி ரசிக்க அனைவருக்கும் வணக்கம் கூறி அந்த அரங்கிலிருந்து வெளியேறினான்.. வெளியே அவனுக்கு பணம் தருவதற்கு ஒரு பெட்டி வைத்திருந்தார்கள் நம் விருப்பப்படி கொடுக்கலாம் நாங்கள் மனமுவந்து 50 டாலர்கள் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்தோம்.
வாசலில் 5 டாலருக்கு உயிருள்ள முதலையோடு போட்டோ எடுக்கலாம் என்றார்கள்.. ஆவலாக போய் பார்த்தால் ஒரு புடலங்காய் சைசில் குட்டியூண்டு முதலை வைத்து இருந்தார்கள்.. அதற்கே வாய் டேப் போடப் பட்டு இருந்தது.. இதுவே நம் விரலை துண்டாக்கும் அளவில் கடிக்கும் என்றதும் அங்கிருந்து வேகமாக கிளம்பி காருக்கு வந்தோம்.. தூரத்தில் ஏர் போட் கிளம்பும் ஓசை கேட்க மனம் மீண்டும் எவர்க்ளேட் நதியில் படகேறியது ஆம் மறக்க இயலாது இந்த திரு முதலையாற்று பயணத்தை.!
🐊 நிறைந்தது 🙏
No comments:
Post a Comment