Monday, 31 March 2025

🧊❄️ ஜில்லென்ற காலம்

#ஏப்ரல்_கூல் (ஐஸ் & சர்பத்)

80களில் எல்லா பள்ளி வாசலில்களிலும் ஒரு ஐஸ்வண்டி நிற்கும்! விதவிதமான வண்ணங்களில் பெரிய பெரிய சர்பத் பாட்டில்களில் திரவங்கள் இருக்கும்! ஈரச்சாக்கில் சுற்றப்பட்ட பெரிய ஐஸ் பார் ஒன்று இருக்கும்! அந்த ஐஸை மரவேலை செய்பவர்கள் மரத்தை இழைக்கும் கட்டை போன்ற ஒரு கட்டையில் ஐஸ்கட்டியை விருட் விருட்னு துகள்களாக சீவி அதை ஒரு டம்ளரில் கொட்டுவார்கள்!

அதை நன்கு டம்ளரின் உட்புறம் அழுத்தி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என வண்ணமயமான இனிப்புக் கலவைகளை அதில் ஊற்றி நடுவில் ஒரு குச்சி செருகித் தருவார். உறைந்த வானவில் போல நம் கையில் ஏந்திய அந்த ஐஸை நம்மால் மறக்கமுடியுமா! அந்த ஐஸில் ஊற்றிய வண்ண இனிப்புகளை நாம் அன்னப் பறவை போல பிரித்து உறிஞ்சி மீண்டும் அதை வெள்ளை ஐஸாகவே ஆக்கிவிடுவோம்!

இதிலும் சேமியா போட்டுத் தரும் ஐஸ் இன்னுமொரு அற்புதம்! அந்த சேமியாவோடு ஐஸை சில்லென உறிஞ்சுவது தனி சுகம்! கண்ணாடி கிளாஸில் ஜப்ஸா விதைகள் போட்டு தரும் கலர் சர்பத்தும் அப்போ ஃபேமஸ்! நமக்கு அறிவுரை சொல்லுற எல்லாரும் இந்த ஐஸை சாப்பிடாதிங்க! சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், இதில சாக்ரீன் இருக்கு, தொண்டையில் சதை வளரும், ஆபரேஷன் செய்வாங்க,..

இப்படியெல்லாம் நம்மை பயமுறுத்தினாலும் நாம் அந்த ஐஸை தேடித் தான் போவோம்! அந்த ஐஸை கட்டையால் சீவும் போது தெறிக்கும் துகள்கள் முகத்தில் வந்து படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்! ஒரு குற்றாலச் சாரல் போல அது நம்மை குளிர்விக்கும்! ஐஸில் ஊறிய சேமியாவையும், ஜப்ஸா விதைகளையும் கடித்து ருசிப்பது ஒரு அலாதியான இன்பம்! இந்த ஐஸை சாப்பிட்டால் நம் உதடுகளில்..

வானவில் போல வண்ணச் சாயம் தெரியும்! நம் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்களிடம் நாம் மாட்டிக் கொள்வோம்! தேவையில்லாத திட்டும் அடியும் கிடைக்கும்! பிற்பாடு பால் ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ்சு, க்ரேப் என குச்சி ஐஸ் வண்டிகளின் காலம் துவங்கியது! அப்போது கப் ஐஸ், ball ஐஸ் கொஞ்சம் காஸ்ட்லி! வீட்டில் நமக்குத் தரும் தினசரி பாக்கெட் மணிக்கு அது கட்டுப்படியாகாது!

இந்த பால் ஐசுக்கும் ball ஐசுக்கும் வித்தியாசம் தெரியவே எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது! பால், சர்க்கரை, ஐஸ் மூன்றும் சேர்ந்து குச்சியில் செருகித் தருவது பால் ஐஸ்! சின்ன டென்னிஸ் பந்து போன்ற ஒரு டப்பாவில் கப் ஐஸ்க்ரீமை வைத்திருப்பது ball ஐஸ்! இதன் பிறகு பெரிய பெட்டி போன்ற மேல் நோக்கித் திறக்கும் ஃபிரிட்ஜுகளில் ரஸ்னா கலக்கி வைத்து கிளாசில் விற்பார்கள்.

இதிலேயே ஆரஞ்சு, பைனாப்பிள், லெமன், க்ரேப் போன்ற க்ரஷ் வகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன! இதில் தனியிடம் பிடித்தது ரோஸ்மில்க்! அந்தக் கலரே அதை அருந்தச் சொல்லும்! அதன் ருசியும் வாசமும் எளிதில் எவரையும் வசப்படுத்தும்! பிறகு வந்தது பாதாம் மில்க் / கீர்.இதன் ருசியும் தனித்துவம் வாய்ந்தது! இப்படி ஐஸ் வண்டிகளில் துவங்கி க்ரஷ் வகைகள் வரை ஜில் காலமே!

இடையில் டியூப் ஐஸ் காலம் ஒன்று பேஜர் காலம் போல வந்து போனது! 25 பைசாவுக்கு மேங்கோ, க்ரேப் எல்லாம் ஒரு சாண் நீளத்தில் டியூப் போன்ற சாஷேவில் வந்தன! இது படிப்படியாக 50 பைசா 1 ரூபாய்னு வந்து அதன் பின்னே வழக்கொழிந்து போனது! அடுத்தது சர்பத் காலம்! சர்பத் கொஞ்சம் பெரியவர்களுக்கானது என்றாலும் அதை குடித்த பின்பு அதற்கும் ரசிகனாகிப் போனேன்!

அதிலும் நன்னாரி, ரோஸ், லெமன் போன்ற சர்பத்துகள் மிகவும் ருசியானவை! ஐசுக்கும், க்ரஷுக்கும் நடுவில் தனது தனித்த ருசியால் தாகம் தீர்த்தவை! 2 எலுமிச்சையை பிழிந்து ஐஸை நொறுக்கிப் போட்டு நன்னாரி எஸன்ஸ் 2 ஸ்பூன் ஊற்றிப் பிறகு மண்பானையின் நீர்விட்டு கலந்து தரும் சர்பத் தரும் இன்பம் இருக்கே அதெல்லாம் சொல்லில் அடங்காது! அதிலும் மதுரை ஜனதா, ஒண்டிப்புலி..

தஞ்சை குணங்குடி தாசன், சிவகாசி கண் மார்க் போன்றவை சர்பத் உலகில் தனித்துவமானவை! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் துவங்கி மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுற்றுப்புறங்களில் புகழ் பெற்ற பல சர்பத் கடைகள் இருந்தன! நல்ல வெயிலில் வாடி வந்து “ஐஸ் அதிகமா போட்டு ஒரு சர்பத் போடுண்ணே” எனும் பலரது குரல்களை பரவலாகவும் பரவசமாகவும் காதில் கேட்க முடியும்!

இதிலேயே தண்ணீருக்கு பதில் சோடா ஊற்றி சோடா சர்பத்னு அஜீரணத்துக்கு ஒரு மருந்தை கண்டுபிடித்தவர்கள் பாண்டியர்கள்! ஒரு இட்லிக்கே 10 வகை சட்னிகள் கண்டுபிடித்த சிட்னியன்ஸ் சர்பத்திலும், இளநீர் சர்பத், நுங்கு சர்பத், ஜிஞ்சர் லெமன் சர்பத்துனு சர்பத்தில் பல வெரைட்டிகளை கண்டறிந்த எடிசன் ஆனார்கள்! எலுமிச்சையௌ இரண்டாக நறுக்கி நாரதர் கையில் இருக்கும்..

சப்ளா கட்டை போன்ற கட்டையின் தாடையை திறந்து அறுத்த எலுமிச்சையை அதில் வைத்து பிழிவது, சர்பத்தில் ஊற்ற மண் பானையில் நீர், எஸன்ஸ் ஊற்றிக் கலக்க பெரிய ஸ்பூன் பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டியை உடைத்துப் போடுவது இதெல்லாமே இன்றும் நம் நினைவில் பசுமையாய் வந்து போகும்! இன்று கோக், பெப்ஸி போன்ற பிராண்டுகள் பாட்டில்களிலும், டின்களிலும் மலிந்து கிடக்க..

கார்ப்பரேட்டான இன்றைய ஜுஸ் கடைகளில் 100 விதமான பழரசங்களும், ஐஸ்க்ரீம் பார்லர்களில் 500 வெரைட்டிகளும் கிடைக்கின்றன! ஆனால் அன்று ஒரு குச்சிஐஸ், ஒரு ரோஸ்மில்க், ஒரு நன்னாரி சர்பத் தந்த நிறைவு இவை எதிலுமே இல்லை!

Sunday, 30 March 2025

🍖 தெலுங்கு ருசி

#ஆந்திர_விருந்து




என் உச்சி மண்டையில் சுர்ர்ருங்குது போல ஆந்திரக் காரமானது அதி’காரம்’ மிக்கது! ஆனால் ரசித்து ருசிக்கலாம்! தென்னிந்திய மக்களின் சைவ / அசைவ உணவுகளில் மிகப் பெரிய வித்யாசத்தை காண முடியாது! நல்ல காரத்திற்கு ஆந்திரா, தேங்காய் சேர்ப்புக்கு கேரளா, மெல்லிய இனிப்புக்கு கர்நாடகா என்று எல்லாமே தமிழக ருசிக்கு வெகு அருகில் ஒரு சில சிறு மாறுபாடுகளுடன் இருக்கும்!


சமீபத்தில் வைசாக் சென்று திரும்பிய போது பாரம்பரிய தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் பம்பரம் ஆடுவது, பட்டம் விடுவது போன்ற நமது பழைய விளையாட்டுகள் அங்கும் இருந்தது! முன்னாள் பம்பரச் சாம்பியனான எனக்கு பம்பரத்தைக் கண்டதுமே பரவசம்! நீள சாட்டையின் இறுதியில் முடிச்சிட்டு இறுக்கி அதை பம்பரத்தின் மீது நன்கு சுற்றி காற்றில் சுழற்றி கைக்கு இழுத்தேன்!


முதலிரண்டு முறையும் ஷிவம் துபே போல சொதப்பினாலும் 3வது முறை ஸ்ரேயாஸ் அய்யர் போல ஜம்மென்று என் உள்ளங்கையில் அழகாக ஒரு குருவி பறந்து வந்து அமர்ந்தது போல அமர்ந்தது! நண்பர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்! அடுத்து பட்டம் விடுமிடத்தில் பட்டதாரிகள் குவிந்திருக்க பட்டமே படிக்காத நான் கையில் பட்டத்தை ஏந்தி ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்!


இந்த பாரம்பரியத் திருவிழாவின் மதிய விருந்தில் ஆந்திர மாநில பாரம்பரிய சைவ/அசைவ உணவு வகைகள் எங்களுக்காக காத்து இருந்தன! சைவம் பக்கம் டிராகன் படம் ரிலீசான தியேட்டர் போல கூட்டம் அலை மோதியது! அசைவம் பக்கம் Neek பட தியேட்டர் போல காற்றாடியது! டேபிளில் ரோஜா, சாமந்தி பூவிதழ்களைத் தூவி மேலே லேமினிட் போல பிளாஸ்டிக் ஷீட் விரித்திருந்தனர்!


ரசனையான அழகுடன் இருந்த டேபிளில் நம்ம ஊரு ஸ்டைலில் தலை வாழையிலை விரித்து.. பால தெலிகலு, (அல்டிமேட்டான அரிசி மாவு நூடுல்ஸ் பாயாசம்) நெல்லூர் மலாய் ஜாமூன், மட்கா பாதாம் ஜுன்னு என்று 3 ஸ்வீட்ஸ் (பால் கோவா போல பானையில் பாதாம் கோவா) சிக்கன் கைமா வடை, சுறா புட்டு, இறா வறுவல்னு மூன்று ஸ்டார்ட்டர்ஸ்! அத்தனையும் அனல் பறக்க பரிமாறினர்! 


முதல் உணவாக இலையில் ராகி களி பரிமாறப்பட்டது! என்னடா இது சிறையில் கைதிகளுக்கு தர்ற மாதிரி களி போடுறாங்கன்னு ஒரு விநாடி திகைத்தேன்! ஆந்திர உணவு பாரம்பரியத்தில் ராகி சங்கட்டி என்கிற களி ஒரு முக்கிய உணவு! நம்ம ஊரில் பருப்பு போல ராகி அங்கு தலையாய உணவு. அதற்கு தொட்டுக் கொள்ள அற்புதமான நாட்டுக் கோழி குழம்பினை சுடச்சுட ஊற்றினார்கள்! 


இரண்டு வகையான நாட்டுக்கோழி குழம்புகள் ஒன்று நாட்டுக் கோழி புலுசு, இன்னொன்று மாஜ்ஜிகா புலுசு இரண்டும் களியோடு சாப்பிட அமிர்தமாக இருந்தது! மட்டனில் காரசார கோங்குரா & மட்டன் பாலக்குரா(கீரையில் செய்த மட்டன்) பரிமாறினார்கள்! இவை அனைத்துமே களியோடு உண்ண களிப்போடு இருந்தது! அடுத்து விருந்தில் சிக்கன் புட்டா பிரியாணி பரிமாறப்பட்டது! 


2 ஆந்திர மாநிலங்களிலும் கோனசீமா பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, உலவுசாறு பிரியாணி, ராயலசீமா பிரியாணி, கல்யாணி பிரியாணி, கோங்குரா பிரியாணி, பீமாவரம் பிரியாணின்னு பல வகை பிரியாணி வகைகள் உண்டு! புட்டா பிரியாணி என்பது பிரியாணி தனியாகவும் பொரித்த சிக்கனுடன் அவித்த முட்டை சேர்த்து சமைப்பதாகும்! இந்த பிரியாணியில் சிக்கனுக்கு பதில்.. 


மீன், இறால் வகைகளை சேர்த்தும் சமைப்பார்கள்! இந்த பிரியாணியை தொன்னை, பனை ஓலை பெட்டியில் வைத்து பரிமாறுவாறுகள்! எங்களுக்கு புரசை இலையில் பரிமாறப்பட்டது! சூடான வெள்ளை சோற்றுடன் பண்டுகப்பா இகுரு என்கிற கார சார மீன் குழம்பும், சீப்பலு கொடிகுட்டு எனும் அயிலை மீனும் பரிமாறப்பட்டது! அருமையான ரசமும் எருமைத் தயிரும் நிறைவு!


இதில் முக்கியமாக சொல்லப்போனால் பாலதெலிகலு என்கிற பாயாசம்! தமிழக பால் பாயாசம், கேரள அடை பிரதமன், கன்னட ரவை பாயாசம் எல்லாவற்றிற்கும் சவால் விட்டது! அரிசிமாவை அவித்து முறுக்கு போல பிழிந்து கொதிக்கும் பாலில் வெல்லப் பாகு முந்திரி திராட்சையுடன் செய்யும் அமிர்தம் அந்தப் பாயாசம்! சுந்தர தெலுங்கர்கள் சுவையிலும் சுந்தரர்கள் என்பதே நெய்.. 


அடச்சே.. மெய்..

Monday, 10 March 2025

🐟 மீனாயணம் 🐟 🐠 🎏

#மீனாயணம் 🐟 🐠




பொதுவாக ஞாயிறு மீன் வாங்கி வருவதோடு என் வேலை முடிந்தது சமையல் எல்லாம்தம்பி தான்என்னிக்காவது ஒரு தவிர்க்க முடியாத வேளையில் அந்த டிபார்ட்மெண்ட்நம்ம கைக்கு வரும் அதுவும் அவர் விரும்பினால் மட்டுமேஞாயிறுகளில் சங்கராசீலாவாவல்ஊளி பாறைகட்டிக் காள இதில் ஏதாவது ஒன்று வாங்குவோம்


நண்டு வாங்கவே மாட்டேன்ஏன்னா எனக்கு நண்டு பிடிக்கவே பிடிக்காதுகடந்த 6 மாதங்களில் பொரித்த மீனுக்கும் குட்பை சொல்லியாச்சு ஆக இப்படி தென்றலாய்போய்க் கொண்டிருந்த வாழ்வில் சமைக்கும் வேலையும் வந்ததுநேற்றுக் காலையில்அயிரைவிரால்கணவாய் எல்லாம் வாங்கச் சொல்லி லிஸ்ட்..


கொடுத்தார் தம்பிஎன்னப்பா யாரும் விருந்துக்கு வர்றாங்களாஆமாம் நம்ம பள்ளிநண்பர்கள் தான் வர்றாங்க என்றார்நீ சமைக்கலியா என்றேன்இன்னிக்கு எனக்கொருசமையல் ஆர்டர் எப்படியும் அதை முடிச்சிட்டு வர மதியம் 12 ஆகிடும்சோறுரசம்எல்லாம் நான் கடையிலிருந்து கொண்டு வரச் சொல்லிட்டேன்


இந்த மீன்களை தான் சமைக்கணும் நீ அதைப் பார்த்துக்கோ என்றார்!  அப்புறம் எனக்குவேலை இருக்காதா என்னசில கஷ்டமான வேளையில் சமைக்கும் பணி எனக்குவருமுன்னு சொன்னேனே அது என்ன தெரியுமாஅயிரை & விரால் மீன்கள் வாங்குறஅன்று தான்!  ஏன்னா அதை கழுவுவதில் பொறுமையும்பக்குவமும் வேணும்


கணவாய் மீன் ரப்பர் பேண்ட் மாதிரி கட் பண்ணியே தந்துடுவாங்க பிரச்சனை இல்லைஅயிரை மீனுக்கு ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு மீன் மார்க்கெட் போய் எல்லாம்வாங்கிட்டேன்ஏன் அயிரைக்கு பாத்திரமுன்னா வரும் போதே 1 பாக்கெட் பாலை மீன்இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி விடுவேன்.! வீடு வந்ததும் அந்தப்..


பால் குடித்த மீன்கள் வயிற்றிலிருக்கும் மணல் துகள்களை கக்கிவிடும் அதை நீக்கி பிறகுமீனைக் கழுவ வேண்டும்ஒரு முறை இரு முறை அல்ல ஏழெட்டு முறைகடைசியாகஅதில் உப்பு போட்டு நுரை வர தேய்த்து மூன்று முறை கழுவ வேண்டும்எங்கள் வீட்டில்இதுக்குன்னே ஒரு மண்சட்டி உண்டு அதில் தான் மீன் கழுவுவோம்


குழம்பு வைக்கவும் ஒரு ஒரு மண்சட்டி இருக்கிறதுமண் சட்டியில் வைக்கும் மீன்குழம்புஒரு பங்ஷனுக்கு நாம் BMW காரில் போய் இறங்குவதற்குச் சமம்அடுத்து விரால் மீன்ஜெல்லி போல எப்பவும் வழவழன்னே இருக்கும்இதற்கும் கல் உப்பு போட்டு சட்டியின்உட்புறங்களில் கரகரவென அழுத்தாமல் உரசி எடுக்க வேண்டும்


கையெல்லாம் பிசு பிசுக்கும் இதுவும் ஒரு நான்கு முறைபெண்டு நிமிர்த்தும் வேலைகணவாய் மீன் கவலை இல்லை கட் செய்து வந்துவிட்டதுஅதுக்குன்னே கறிவேப்பிலைபுதினாபச்சை மிளகாய் சேர்த்து அரைச்ச மசாலா ஒண்ணு இருக்கு அதில் நன்குகணவாயை போட்டு பிரட்டி 15 நிமிடம் மேரினேட் செய்தாச்சு


அயிரை & விரால் மீன்களை ஒன்றரை மணி நேரத்தில் கழுவிவிட்டு  அடுத்த 10 நிமிடத்தில் சமையலும் துவக்கிவிட்டேன்மீன் குழம்பில் சேர்த்த விரால் மீன்கள் போகநண்பர்கள் வந்த பின்பு பொரிக்க மீதி மீன்களை ஃபீரிசரில் உறை நீச்சலில் வைத்தாச்சுஅயிரைவிரால் மீன் குழம்புவிரால் ரோஸ்ட்கணவாய் தொக்கு எனது சமையல்


மீன் குழம்பை அடுப்பில் வைத்துவிட்டு அது கொதிக்க காத்திருந்த போது தம்பி வீடுதிரும்பி என் டூட்டியை இன்சார்ஜ் எடுத்து என் ஷிஃப்ட்டை முடித்துக் கொள்ளச்சொன்னார்கணவாய் தொக்கை அடுப்பில் வைத்துவிட்டு போய் நல்லதொரு குளியல்போட்டு வந்து  சூடான ரசத்தை உறிஞ்சியபடி இப்பதிவை டைப் செய்கிறேன்!


அடுத்த 10 நிமிடத்தில் கணவாய் தொக்கின் நெடியும்அயிரைமீன் குழம்பு கொதிக்கும்நறுமணமும் நாசியைத் தாக்கியதுநண்பர்கள் வந்ததும் ஜில்லுன்னு நன்னாரி சர்பத்தந்துவிட்டு அரட்டையை துவக்கினோம்தம்பி ஃப்ரீசரிலிருந்து மீனை எடுத்து பொரிக்கதுவங்கியதும் அனைவரும் உணவு மேசைக்கு படையெடுத்தோம்!


மணக்க மணக்க அயிரை மீன் குழம்புபக்குவமான கணவாய் தொக்குபொரித்த விரால்மீன்தக்காளி ரசம் இதற்கெல்லாம் தனித்தனி காண்டங்கள் எழுதினால் படிப்பவர்கள்காண்டாகி விடக் கூடாது என்பதற்காக இந்த மீனாயணத்தை இத்தோடு நிறைவுசெய்கிறேன்ஆம் அன்று நாங்கள் எல்லாம் அயிரையோடு ஐவரானோம்!


ஏவ்வ்வ்வ்வ்

Saturday, 1 March 2025

🐐கடா வெட்டு 🐐

#காதுகுத்தும்_கடாவெட்டும்

பார்ட்-1

காது குத்தும் சடங்கையும் அங்கு விருந்தாக பரிமாறப்படும் கடாக் கறி விருந்தையும் பற்றி எழுதினா 20 இராமாயணம் 20 மகா பாரதம் அளவுக்கு எழுதலாம். நல்ல கண்டெண்ட் தேடுபவர்களுக்கு கண்டெண்ட்டின் உலகமாக.. இல்லையில்லை கண்டெண்ட்டின் ஊற்றாக இருப்பது இந்தச் சடங்குகளாகும்! வழக்கம் போல கடாக் கறியை பத்தி ரசிச்சு எழுதப் போற அதானே! No மிஸ்டர் காளிங்..

இந்தப் பதிவில் நான் கே.எல். ராகுல்! வழக்கமா ஆடுற ஓபனிங்கை விட்டுட்டு 3 வது டவுனில் இறங்கறேன்! வீட்டில் காது குத்து விழா முடிவானதுக்கு பிறகு எடுக்கும் முதல் முடிவு எத்தனை கெடா வாங்குறது என்பதாகத் தான் இருக்கும்! மதுரையில் பாண்டி கோவில் தான் கடா வெட்டின் ஜெருசலம், மெக்கா, காசி எல்லாமே பாண்டிக் கோவில் அருகே மண்டபம் எடுத்தும் நடத்துவார்கள்!

இந்த விழாவுக்கு எத்தனை பேரை அழைக்கலாம், எத்தனை பேரு வருவாங்க என்பதைக் கணக்கிட்டு தான் கடா வாங்குவார்கள்! 15 கிலோ எடையில் கிடா வாங்கினா 10 கிலோ தனிக்கறி, எலும்பு, குடல் எல்லாம் 3 கிலோ வரும் மீதி 2 கிலோ சேதாரம் தான்! கடா வெட்டுக்கு வெள்ளாட்டை விட செம்மறியாடு தான் சிறப்பு! அதிலும் கோங்கு எனப்படும் ஆட்டு இனம் தான் முதல் தரமான ஆடாகும்!

கோங்கு ஆட்டினை எப்படி வாங்குவாங்கன்னா 2 பல்லு கோங்கு ஆடுன்னு சொல்லுவாங்க! அதாவது அந்த ஆட்டுக்கு 2 பற்கள் தான் முளைச்சு இருக்கணும்! (ஆட்டின் வயது 12-14 மாதங்கள்) இது தான் கிலோ 900 முதல் 1000 வரை விற்கும் கறியாகும்! 4 பற்கள் 6 பற்கள் ஆடெல்லாம் கறி கொஞ்சம் கடினமாக இருக்கும்! இந்த கடின இறைச்சியை (₹500) பாதி விலையில் வாங்கலாம்!

ஆடுகளை உயிருடன் எடை போட்டு வாங்கும் முறையும் இருக்கு ஆனா அதன் கறியை கணிப்பது சிறிது கடினம்! உரித்த ஆடு வாங்குவது சிறந்தது! சரி அப்போ எப்படி கடா வெட்டுறது? ஒரு 15 கிலோ ஆடு வெட்டி சமைத்தால் 80 பேர் நன்கு சிறப்பாகவும் 100 பேர் வரை திருப்தியாகவும் சாப்பிடலாம்! 1000 விருந்தினர்கள் வரும் விருந்துக்கு கிட்டத்தட்ட 10 - 12 ஆடுகள் தேவைப்படும்.

பெரும்பாலும் இதில் ஒரு ஆடு மட்டுமே உயிருடன் வாங்கி வெட்டி தங்களது நேர்த்தி கடனை முடித்துவிட்டு மீதி ஆடுகளை உரித்த ஆடுகளாகவே வாங்கி விடுவார்கள்! இதில் இரட்டை கடா வேண்டுதலும் இருக்கு! இரட்டை கடா வெட்டும் +2 வேண்டுதல் ஸ்பெஷல் வேண்டுதல்களாகும்! எனவே 2 ஆடுகளை மட்டும் வெட்டி படையலிட்டு உரித்த ஆட்டுக் கறியில் விருந்துக்கு சமைப்பார்கள்!

கடா வெட்டி அவ்வளவு ரத்தம் பார்த்த சிலர் ரத்தத்தை விருந்தில் சேர்ப்பதில்லை! மற்ற இடங்களில் ரத்தப் பொரியலும் உண்டு! சில கோவில்களில் ஆட்டின் தலையும் ஆட்டின் முன்னங்காலில் வலது காலையும் கோவில் பூசாரிக்கு கொடுக்கவேண்டும்! பிற ஊர்களில் தலைக்கறியும் சமையலில் சேரும்! மூளையை மட்டும் தனியாக வீட்டுக்கு வாங்கிக் கொள்ளும் மூளைக்காரர்களும் இதில் உண்டு!

பெரும்பாலும் விருந்துகளில் எலும்பு மட்டும் போட்ட தண்ணிக் குழம்பு, கறியும் கொழுப்பும் போட்ட இன்னொரு கெட்டிக் குழம்பு, குடல் & கடலை பருப்பு கூட்டு, போன்லெஸ் சுக்கா, ரசம், தயிர் இது தான் மெனுவாக இருக்கும்! இப்போ இதில் பிரியாணியும் சேர்ந்துடுச்சு! நெய் குஸ்கா & போன்லெஸ் மட்டனும் இப்போ ஹிட்டான மெனு! சூப் பாயா, ரத்தப் பொரியல் எல்லாம் கூடுதல்!

கடந்த வருடம் விருதுநகரில் ஒரு கடா விருந்தில், மட்டன் பிரியாணியும், சுக்கா வருவல், சுக்கா குழம்பு, எலும்பு சால்னா, சிக்கன் குழம்புடன் ஆயில் புரோட்டாவும் பரிமாறினார்கள்! இப்படி மெனுக்கள் பல உண்டு. காதணி விழா கடா விருந்துகளில் நடக்கும் உறவினர் சண்டைகள் பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம்! அத்தனையும் அநேகமாக கறிக்காக தான் இருக்கும்!

அது என்னய்யா வெறும் எலும்பா போடற நல்ல பெரிய பீஸா போட மாட்டியா? என பரிமாறுபவரிடம் ஆரம்பிக்கும் புயல் அப்படியே விருந்துக்கு அழைத்த உறவினரிடம் போய் ஏன் மாப்ள ஒரு காக்கிலோ கறிக்கு இந்த மாமன் வக்கத்து போயிட்டேனா? எங்கிட்டயே கறி தீர்ந்திடுச்சுன்னு சொல்றான் என்று மையம் கொண்டு அதன் பிறகு அடிதடி நடந்து கரையைக் கடக்கும்!

இனி செத்தாலும் உங்க உறவு வேண்டாம்யானு முறுக்கிகிட்டு போன கதைகள் அதிகம்! செத்த ஒரு ஆட்டுக்காக சாகும் வரை சண்டை போட்ட வீம்புப் பரம்பரைகளின் கதைகள் கன்னித்தீவு கதை போல முடிவில்லாதது. இப்ப கடா விருந்துன்னா பந்தியில் சொந்த மாமன் மச்சினனே கறி வாளியை ஏந்தி திருப்தியாக பரிமாறுவது ஒரு ஆறுதல்! ஆனா பெருங் கோபம் வந்துச்சின்னா..

அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு போல நேருக்கு நேர் கண்டால் தீப்பொறி பறக்க முறைத்துக் கொண்டே பல ஆண்டுகளாக தீராப் பகையோடு திரியும் பல குடும்பங்கள் உண்டு! அவர்களெல்லாம் மதுரையில் ப்ளக்ஸ் பேனர் வைத்து போர் புரிந்து கொள்வதை மதுரைக்குள் கொஞ்சம் சுற்றிவந்தால் அறியலாம்! இந்தக் கடா விருந்தில் குடி போதையில் வந்து செய்யும் அளப்பறைகள் தனி!

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாமா அல்லது ஒரு சித்தப்பா நிச்சயம் இந்த லிஸ்டில் இருப்பார்கள்! நல்ல போதையில் சமைக்கும் இடத்திற்கு போய் சிக்கன் பொரிக்கும் போது கொதிக்கும் சட்டியில் கைவிட்டு யோவ் பாரதியே நீ என்னய்யா தீக்குள் விரலை விடுவது நான் தீச்சட்டியிலேயே விரல் விடுவேன்னு அக்னி பரிட்சையில் இறங்கிய எங்க முனியசாமி சித்தப்பா போல..

பல நூறு சித்தப்பாக்கள் தமிழ்நாடெங்கும் ஏராளம்! தென்னந் தோப்பு ஒன்றில் நடந்த கடாவெட்டில் நண்பர் ஒருவரின் மாமா போதையில் பாதி தென்னைமரம் ஏறி அங்கேயே மரத்தை கட்டிப் பிடித்து தூங்கியது முதல், சூப் வாங்கி சரக்கில் மிக்ஸ் செய்வது, நல்லி எலும்பில் அதைக் கலக்குவது, விழாவில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஆடுவது என தனி காமெடிச் சானலே இங்குண்டு!

இதில் குலதெய்வத்திற்கு கடா வெட்டுவது பற்றி எழுதினால் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு! உதாரணத்துக்கு ஒன்று அய்யனார் என்பவர் சைவச்சாமி! கருப்பணசாமி, 18 படி கருப்பு, சோணைச்சாமி, முனீஸ்வரர், சுடலை மாடன் இவங்க எல்லாம் அசைவச் சாமி! அது குறித்து ஒரு தனிப்பதிவு விரைவில்..

ஒரு ருசிகரத் தகவல்: கடா வெட்டு விருந்துக்கு புகழ் பெற்ற கோங்கு ஆடு என்பதன் தாயகம் கரூர் மாவட்டமாம்!! சத்தியமாக இது அரசியல் இல்லிங்கண்ணா 🤪