#ஆந்திர_விருந்து
என் உச்சி மண்டையில் சுர்ர்ருங்குது போல ஆந்திரக் காரமானது அதி’காரம்’ மிக்கது! ஆனால் ரசித்து ருசிக்கலாம்! தென்னிந்திய மக்களின் சைவ / அசைவ உணவுகளில் மிகப் பெரிய வித்யாசத்தை காண முடியாது! நல்ல காரத்திற்கு ஆந்திரா, தேங்காய் சேர்ப்புக்கு கேரளா, மெல்லிய இனிப்புக்கு கர்நாடகா என்று எல்லாமே தமிழக ருசிக்கு வெகு அருகில் ஒரு சில சிறு மாறுபாடுகளுடன் இருக்கும்!
சமீபத்தில் வைசாக் சென்று திரும்பிய போது பாரம்பரிய தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் பம்பரம் ஆடுவது, பட்டம் விடுவது போன்ற நமது பழைய விளையாட்டுகள் அங்கும் இருந்தது! முன்னாள் பம்பரச் சாம்பியனான எனக்கு பம்பரத்தைக் கண்டதுமே பரவசம்! நீள சாட்டையின் இறுதியில் முடிச்சிட்டு இறுக்கி அதை பம்பரத்தின் மீது நன்கு சுற்றி காற்றில் சுழற்றி கைக்கு இழுத்தேன்!
முதலிரண்டு முறையும் ஷிவம் துபே போல சொதப்பினாலும் 3வது முறை ஸ்ரேயாஸ் அய்யர் போல ஜம்மென்று என் உள்ளங்கையில் அழகாக ஒரு குருவி பறந்து வந்து அமர்ந்தது போல அமர்ந்தது! நண்பர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்! அடுத்து பட்டம் விடுமிடத்தில் பட்டதாரிகள் குவிந்திருக்க பட்டமே படிக்காத நான் கையில் பட்டத்தை ஏந்தி ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்!
இந்த பாரம்பரியத் திருவிழாவின் மதிய விருந்தில் ஆந்திர மாநில பாரம்பரிய சைவ/அசைவ உணவு வகைகள் எங்களுக்காக காத்து இருந்தன! சைவம் பக்கம் டிராகன் படம் ரிலீசான தியேட்டர் போல கூட்டம் அலை மோதியது! அசைவம் பக்கம் Neek பட தியேட்டர் போல காற்றாடியது! டேபிளில் ரோஜா, சாமந்தி பூவிதழ்களைத் தூவி மேலே லேமினிட் போல பிளாஸ்டிக் ஷீட் விரித்திருந்தனர்!
ரசனையான அழகுடன் இருந்த டேபிளில் நம்ம ஊரு ஸ்டைலில் தலை வாழையிலை விரித்து.. பால தெலிகலு, (அல்டிமேட்டான அரிசி மாவு நூடுல்ஸ் பாயாசம்) நெல்லூர் மலாய் ஜாமூன், மட்கா பாதாம் ஜுன்னு என்று 3 ஸ்வீட்ஸ் (பால் கோவா போல பானையில் பாதாம் கோவா) சிக்கன் கைமா வடை, சுறா புட்டு, இறா வறுவல்னு மூன்று ஸ்டார்ட்டர்ஸ்! அத்தனையும் அனல் பறக்க பரிமாறினர்!
முதல் உணவாக இலையில் ராகி களி பரிமாறப்பட்டது! என்னடா இது சிறையில் கைதிகளுக்கு தர்ற மாதிரி களி போடுறாங்கன்னு ஒரு விநாடி திகைத்தேன்! ஆந்திர உணவு பாரம்பரியத்தில் ராகி சங்கட்டி என்கிற களி ஒரு முக்கிய உணவு! நம்ம ஊரில் பருப்பு போல ராகி அங்கு தலையாய உணவு. அதற்கு தொட்டுக் கொள்ள அற்புதமான நாட்டுக் கோழி குழம்பினை சுடச்சுட ஊற்றினார்கள்!
இரண்டு வகையான நாட்டுக்கோழி குழம்புகள் ஒன்று நாட்டுக் கோழி புலுசு, இன்னொன்று மாஜ்ஜிகா புலுசு இரண்டும் களியோடு சாப்பிட அமிர்தமாக இருந்தது! மட்டனில் காரசார கோங்குரா & மட்டன் பாலக்குரா(கீரையில் செய்த மட்டன்) பரிமாறினார்கள்! இவை அனைத்துமே களியோடு உண்ண களிப்போடு இருந்தது! அடுத்து விருந்தில் சிக்கன் புட்டா பிரியாணி பரிமாறப்பட்டது!
2 ஆந்திர மாநிலங்களிலும் கோனசீமா பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, உலவுசாறு பிரியாணி, ராயலசீமா பிரியாணி, கல்யாணி பிரியாணி, கோங்குரா பிரியாணி, பீமாவரம் பிரியாணின்னு பல வகை பிரியாணி வகைகள் உண்டு! புட்டா பிரியாணி என்பது பிரியாணி தனியாகவும் பொரித்த சிக்கனுடன் அவித்த முட்டை சேர்த்து சமைப்பதாகும்! இந்த பிரியாணியில் சிக்கனுக்கு பதில்..
மீன், இறால் வகைகளை சேர்த்தும் சமைப்பார்கள்! இந்த பிரியாணியை தொன்னை, பனை ஓலை பெட்டியில் வைத்து பரிமாறுவாறுகள்! எங்களுக்கு புரசை இலையில் பரிமாறப்பட்டது! சூடான வெள்ளை சோற்றுடன் பண்டுகப்பா இகுரு என்கிற கார சார மீன் குழம்பும், சீப்பலு கொடிகுட்டு எனும் அயிலை மீனும் பரிமாறப்பட்டது! அருமையான ரசமும் எருமைத் தயிரும் நிறைவு!
இதில் முக்கியமாக சொல்லப்போனால் பாலதெலிகலு என்கிற பாயாசம்! தமிழக பால் பாயாசம், கேரள அடை பிரதமன், கன்னட ரவை பாயாசம் எல்லாவற்றிற்கும் சவால் விட்டது! அரிசிமாவை அவித்து முறுக்கு போல பிழிந்து கொதிக்கும் பாலில் வெல்லப் பாகு முந்திரி திராட்சையுடன் செய்யும் அமிர்தம் அந்தப் பாயாசம்! சுந்தர தெலுங்கர்கள் சுவையிலும் சுந்தரர்கள் என்பதே நெய்..
அடச்சே.. மெய்..
No comments:
Post a Comment