Monday, 19 May 2025

🚀நாஸா நார்மன் 🚀

“நாஸா நாடி ஜோதிடர் நார்மன் டேவிட்”

யாரிந்த நார்மன் டேவிட்? இவர் ஒரு அமெரிக்கர்! ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்ட்ரோனட் சயின்ஸ்’ படித்த போது பண்டைய இந்திய வானவியல் ஆராய்ச்சி அறிஞர்களான ஆரியபட்டர், பாஸ்கரர் பற்றி படித்து வியந்தார்! எந்த ஒரு அறிவியல் சாதனமும் இல்லாமல் அவர்கள் ஆராய்ந்ததை..

இவர் ஆராய இந்தியா வந்து, காசி முதல் இராமேஸ்வரம் வரை சந்நியாசம்.. அடச்சே..’ சரித்திரத்தைத் தேடினார். அப்போது இந்திய ஜோதிடக் கலையைப் பற்றி அறிந்து வியந்து போனார். சூரிய முதலாளியை நவக்கிரகங்களும் நாய்குட்டி போல சுற்றி வரும் சூட்சுமத்தை இந்தியர்கள் கண்டுபிடித்ததை..

அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்று அங்கிருந்து தவறி விழப் பார்த்து அருகில் இருந்த சேஃப்டி கைப்பிடியைப் பிடித்து விழாமல் தப்பித்தார்.! உடனடியாக அமெரிக்காவில் தான் படித்துக் கொண்டிருந்த அறிவியல் படிப்பை அன்றைக்கே டிஸ்கண்டினியூ செய்து விட்டு இந்தியாவில் ஜோதிடம் படிக்க முடிவெடுத்தார்.

இந்தியாவில் நல்ல முறையில் ஜோதிடம் படிக்க வேண்டும் என்றால் அதனை நாலாந்திர தரத்தில் சொல்லித் தரும் கல்லூரிகள் நாலு திசையிலும் நானுறுக்கும் மேல் இருந்தது! நாலு பக்கமும் பரவியிருந்த நாலாந்திர கல்லூரிகளுக்கு நடுவில் நாளந்தா என்னும் நவரத்தினத்தைக் கண்டார்!

ஆஹா! கிரகங்களும் ஒன்பது! நவரத்தினங்களும் ஒன்பது! நாம் ஜோதிடம் படிக்க நாளந்தாவே சிறந்தது என்று அவருக்கு தோன்றியது. அன்று சுக்ல பட்ச அமாவாசை என்று பண்டிட் ஒருவர் குறித்து கொடுக்க.. நள்ளிரவே நாளந்தாவிற்கு போய் க்யூவில் நின்று அமிட்மிஷனுக்கு அப்ளிகேஷன் போட்டார்.

நாளந்தாவில் அவ்வாண்டின் ஜோதிடப் படிப்புக்கான இடம் ஒன்று கூட இல்லாமல் அட்மிஷன் முடிந்திருந்தது. ஆனால் நார்மன் சற்றும் மனம் தளராமல் அங்கே காத்திருந்தார். ஜோதிட படிப்புக்காக இடம் கிடைத்த ஒரு மாணவர் நாஸாவில் வேலை கிடைத்து சென்றுவிட்டார் என்ற செய்தி வந்தது!

விதியின் விளையாட்டை நினைத்து நார்மன் மெய் மட்டுமல்ல கை,வாய் எல்லாம் சிலிர்த்தார்! நாஸாவே வேண்டாம் என இந்தியா வந்த நார்மனுக்கு வழி விடுவது போல ஒருவனை இங்கிருந்து நாஸாவுக்கு அனுப்பியது ஜோதிடமே என்பது அறிந்து மீண்டும் அரை மணிநேரம் மெய் சிலிர்த்தார்!

நாளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின்பு, அங்கு ஜோதிட ஆராய்சியில் நாலு இளங் கலை பட்டங்களும், நாலு முதுகலைப் பட்டங்களும், நாலு டாக்ட ரேட்டுகளும் பெற்ற பின்பு, இதுக்கு மேல் கொடுக்க எங்களிடம் பட்டங்கள் இல்லை என நா’லந்தா’ துணைவேந்தர் சொன்ன பிறகே வெளியே வந்தார்!

ஆனாலும் அவரது ஜோதிட தாகம் குறையவே இல்லை. கை ஜோதிடம், எண் ஜோதிடம், சுவடி ஜோதிடம், மோடி அடச்சே.. நாடி ஜோதிடம், எலி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை தேடித் தேடிப் படித்தார். அப்பரசண்டியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 வருடம் கிளி ஜோதிடம் பார்த்தார்!

வைத்தீஸ்வரன் கோவிலில் சுவடி ஜோதிடம் படித்த போது தான் மீண்டும் வியப்பின் உச்சிக்..ப்,(ரிபீட்டு) நாடி ஜோதிடத்திலும் நான்கைந்து பட்டங்களைப் பெற்று அந்த ஊரிலேயே “நாடி ஜோதிடர் நார்மன்” என போர்டு மாட்டி கடை போட்டு 9 ஆண்டுகள் அங்கு ஜோதிட சேவை புரிந்து உலகப் புகழடைந்தார்.

நார்மன் இந்தியாவில் படித்து உலகப் புகழ் அடைந்ததை கேள்விப் பட்டது நாஸா! நாஸாவிற்கு ஜோதிடத்தில் துளியும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் நார்மனை கண்காணிக்க சி.ஐ.ஏவை அனுப்பி உளவு பார்த்தது. இந்நிலையில் கல்பனா சாவ்லா மரணம் அமெரிக்கா ஏவிய ராக்கெட்டுகளின் தொடர் தோல்விகள் என பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த நாஸா துவண்டது!

அதே நேரம் இந்தியா நாற்பது கால் பாய்ச்சலில் விண்வெளி ஆராய்ச்சியில் விரைவாக முன்னேறியது! ஒரே ராக்கெட்டில் 120 சாட்டிலைட்டுகளை அனுப்பும் அளவுக்கு திறமை வாய்ந்த நாடாக மாறியிருந்தது இந்தியா! இதற்குக் காரணம் நமது நார்மன் தான்! ஆம்! அவர் குறித்துக் கொடுத்த நேர காலப்படி ராக்கெட்டை அனுப்பி, அவர் குறித்துத் தந்த நல்ல நாட்களில்..

பலவிதமான விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டே இந்த 100 சதவீத வெற்றிகளை இந்தியா பெற்றது எனும் அரிய தகவல்களை அமெரிக்க வாதகோடரிகள் துப்பறிந்து தகவல் அனுப்பினர். நார்மனைப் பரிசோதிக்க, சில ப்ராஜக்டுகளுக்கு நேரம் குறித்துத்தர கேட்டது நாஸா! சோதிடம் பார்க்கும் என்னிடமே சோதனையா என்று தன் ஞானக் கண்ணால் அறிந்து..

அலட்சியப் புன்னகையுடன் அவர் குறித்து கொடுத்த நேரத்தில் நாஸா துவங்கிய எல்லா பரிசோதனைகளும் 100% சதவீத வெற்றியைப் பெற்றன! அகமகிழ்ந்தது நாஸா! உடனடியாக நாஸா நாடி ஜோதிடப் பிரிவு என்ற ஒரு பிரிவை தொடங்கி அதற்கு சேர்மனாக நார்மனை நியமிக்க முடிவெடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதலைக் கூட வாங்கி விட்டனர்.

அந்தோ பரிதாபம் இதை எல்லாம் அவர்கள் முடிவு செய்தது ஒரு ராகு காலத்தில்!! அவர்களுக்கு இதை குறித்துக் கொடுக்க தான் அங்கு நார்மன் போன்ற ஒரு ஜோதிட வல்லுநர் இல்லையே! ஆனால் நார்மன் இதை வேறு விதமாக சமாளித்தார்! தான் ஒரு மாபெரும் நாடி ஜோதிட ஆராய்ச்சிப் புதினம் எழுதும் பணியில் இருப்பதாகக் கூறி அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.

அப்படி என்ன புத்தகம் அது! தெரிந்தால் நீங்களும் வியப்பின் (அட கீழே விழுந்துடாதிங்கப்பா) முன் ஜென்மங்களில் இந்திய அறிஞர்கள் மற்றும் வரலாற்று தலைவர்கள் தங்களது மறுபிறப்பில் எங்கு பிறந்தார்கள் என்ற அரிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்! அந்த புத்தகத்தின் பெயர் THE 7 BIRTHS.. by NORMON

இந்திய நாட்டில் ஏழேழு ஜென்மங்கள் என்று நாம் சொல்வோம் அல்வா! அதே தான்! அவரது ஆராய்ச்சியில் பல்வேறு கொடும் உண்மைகள் வெளி வரத் துவங்கின! ஆம்! நமது ஆரிய பட்டர் தான் 7வது ஜென்மத்தில் அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிஸனாகப் பிறந்தார் என்று அறிந்தார். வீர சிவாஜி தான் மறு பிறப்பில் ஜார்ஜ் வாஷிங்டன்..

தெனாலி ராமனே மறுப்பிறப்பில் ஹென்றி ஃபோர்டு, வால்மீகி தான் ஐன்ஸ்டீன் போன்ற அரிய உணமைகளை கண்டு அறிந்தார். இவை யாவுமே டிரம்புக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்நிலையில் செங்கிஸ்கான் தான் இந்த ஜென்மத்தில் டிரம்ப்பாக பிறந்துள்ளார் என்னும் அப்பட்டமான உண்மையையும் கண்டறிந்தார்!

நார்மனுக்கு இந்தியாவில் உயர் பதவி தந்தவர் ஒரு கர்ம வீரர், வாழும் வீர சிவாஜி என மக்கள் போற்றும் தலை சிறந்தப் பிதாமகர் என்றறிந்து நாஸாவும் வியப்பின் உச்சி.. (யெஸ் அதே தான்) ஆகவே தான் டிரம்ப் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார். திறமை வாய்ந்த ஒரு அமெரிக்கரை அழைத்து பதவி தந்த அந்த மாவீரரின் பண்பு உலகில் யாருக்கு வரும்! நார்மனுக்கு இவ்வளவு அழுத்தம் தந்தும்..

அவர் அமெரிக்காவுக்கு நேரம் குறித்து தருவதில் நேர்மையாக செயல்பட்டார். தற்போது கூட சுனிதா வில்லியம்ஸ் சென்ற பயணம், அதில் ஏற்பட்ட சிக்கல் அனைத்தையும் களைந்தது அய்யா நார்மன் அவர்களே! மீண்டும் அவரை நாஸாவுக்கு வந்து பொறுப்பேற்கச் சொல்லி தினமும் 30 நிமிடங்கள்..

நார்மன் காலில் விழுந்து கெஞ்சுகிறது அமெரிக்கா! ஆனால் நார்மன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா தான் எனக்கு வாய்ப்பளித்தது! என்னால் இனி அமெரிக்கா வரமுடியாது! இனி இந்தியா தான் எனது தேசம், இது எனக்கு ஞானமளித்த மெய்ஞான பூமி, தெய்வீகம் நிறைந்த திருநாடு.

அறநெறிகள் வழுவாது ஆன்மீக வழி செல்லும் அற்புத மாமனிதர் ஒருவரின் ஆசியுடன் இங்கு நான் வாழ்கிறேன். உங்கள் சலுகைக்காக நான் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஆம் பின்னால் இருந்து குத்தும் பழக்கம் பிதாமகர் வளர்ப்பிலேயே கிடையாது. எங்களுக்கு சண்டை வராது..

சண்டை போடவும் தெரியாது.. நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் மீறி எங்களிடம் திரும்பத் திரும்ப மோதினால் உங்கள் டிரம்ப் என்ற முன்ஜென்ம செங்கிஸ்கானிடம் போய்ச் சொல்லுங்கள் அணு ஆயுதங்களை நீங்கள் குவித்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் செய்வினை வைத்தால்..

அமெரிக்கா உலக வரைபடத்தில் இருக்காது! இந்த நார்மன் நாள் குறித்துவிட்டான் என்றால் அந்த அமெரிக்க கண்டமே கண்ட மேனிக்கு கண்டமாகும்.! கன்னா பின்னான்னு சின்னாபின்னமாகும் இது என் மாமியா டென்வர் டெய்ஸி மீது சத்தியம் என்று ஆக்ரோஷ ஆவேசத்துடன் தெரிவித்தார்.

❌ நார்மனின் இந்த அப்நார்மல் அறிவிப்பால் ஐநா & நாஸா மட்டுமின்றி பெண்டகனும் அரண்டு போய் உள்ளது!! ❌

Sunday, 11 May 2025

அம்மா 💖

#பூமிக்கு_வந்த_தெய்வம்

நெடுநாட்களாக மழலைச் சத்தம் ஒலிக்காத வீட்டில் வந்து பிறந்த முதல் பிள்ளை நான்! அந்த ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்.. இல்லை சுனாமியில் ஆனந்தமாக மூழ்கினேன். எனக்குப் பிறகு மூன்று பிள்ளைகள் பிறந்தாலும் ‘தல’ நான் தான். இந்த ஸ்பெஷல் கேட்டகிரியே எனது தனி அடையாளம்!

எனக்கென்று சிறப்பு உணவுகள், எதை பங்கு பிரித்தாலும் அதில் என் பங்கு சற்று அதிகம். எல்லா விஷயங்களிலும், விசேஷங்களிலும் வீட்டில் எனக்கே முன்னுரிமை என்று கொண்டாடித் தீர்த்தனர். தல என்றாலே தமிழ்நாட்டில் எப்போதும் கொண்டாடி மகிழ்வது வழக்கம் அல்லவா.!

ஆமாங்க நெடுநாள் கழித்து பிறந்த பிள்ளை என்றால் தாய் மகிழ்வது இயல்பு தானே என்பவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்.. ஆம் என்னைப் பெற்றெடுத்த தாய் வேறு என்னை வளர்த்த தாய் வேறு! என்னை அன்புச் சுனாமியில் மூழ்கடித்த அன்னை எனும் பெருமை தனம் அம்மாவுக்கே!

என்னைப் பெற்ற அன்னையின் பெயர் ‘ரேணுகா’.. தனம் அம்மாவிற்கு ஒரு விபத்தில் கருப்பையை நீக்கியது அப்பா ரேணம்மாவை மணந்தது எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்துவிடலாம்.. எங்கள் வீட்டில் இரண்டு அம்மாக்களும் சேர்ந்தே வாழ்ந்தனர்! இது பலருக்கு வியப்பைத் தந்தது!

தனம் அம்மாவிற்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு ப்ரியம். அதனால் தான் ரேணம்மா கருவுற்ற போது தானே கருவுற்றது போல உணர்ந்தார். அவரை கண்ணாடிப் பொருள் போல கையாண்டார். வேளா வேளைக்கு சத்தான உணவு, மருந்து மாத்திரை என்று ஒரு செவிலியர் போல சேவை செய்தார்.

ரேணம்மா சுகப்பிரசவம் முடிந்து கண் விழித்த மறு நொடி பிறந்து சில மணி நேரங்களே ஆன என்னைத் தூக்கி தனம் அம்மாவின் கைகளில் இந்தாங்க உங்க மூத்த பிள்ளை என்று தந்த நெகிழ்வான கணத்தை தனம் அம்மா சாகும் வரை எங்களிடம் நன்றியோடு சொல்லிக் கொண்டே இருந்தாள்.

இதே தான் அடுத்த மூன்று பிள்ளைகளுக்கும்! நன்றாக ஆடும் பேட்ஸ்மேனுக்கு சிங்கிள் ரன் எடுத்து ஸ்டிரைக் தருவது போல ரேணம்மா சிங்கிள் ரன் எடுத்து எதிர் முனைக்குப் போய் தனம் அம்மாவை ஆடவைத்தார். அம்மா செஞ்சுரிகள் மட்டுமின்றி நாட் அவுட்டாகவும் இருந்தார்! ரேணம்மா தான் அவுட் ஆனார்.

இளமையின் உச்சமான 33 வயதில் புற்றுநோய் என்னும் மந்தி ரேணுகா என்ற மாலையை பிய்த்தெறிந்தது. அம்மா இறக்கும்போது எனக்கு வயது 10 தம்பிக்கு 7 தங்கைக்கு 5 கடைசி தம்பிக்கு ஒண்ணே கால் வயது! அப்பா நிலை குலைந்து போனார். எங்களுக்கு எந்த வலியும் இல்லை!

ஏனெனில் தனம் அம்மா இருக்கிறாரே! வாழ்க்கையில் அந்த இடத்தில் இருந்து நிலை குலையாது எங்களை கட்டிக் காக்க ஆரம்பித்தார் தனம் அம்மா! முன்பைக் காட்டிலும் அன்பாக, அதீத வைராக்கியமாக எங்களை வளர்க்க ஆரம்பித்தார். தனம் அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். படு சிக்கனமானவர்.

தரையில் சிறு கடுகு கிடந்தாலும் அதை பொறுக்கி தூர எறியும் வரை அவருக்கு பொறுக்காது! வீட்டை பளிச்சென்று வைத்திருப்பார். சமையலறைக்குள் வந்தால் அங்கு சமையல் நடந்த தடமே இருக்காது. பொருட்களை அடுக்கி வைப்பதில் துணிகளை மடித்து வைப்பதில் முதுகலை பட்டம் பெற்றவள்!

அம்மாவுக்கு சமையலில் அற்புதமான கை மணம்! எல்லா வீட்டு அம்மாவும் அப்படித்தானே என்பவர்களுக்கு.. என் அப்பா ஒரு நளமகராஜா, அந்த வசிஷ்டரின் வாயால் மாதந்தோறும் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது MA பொலிட்டிகல் சயின்ஸ் பட்டம் வாங்குவது போல மிகவும் எளிதானது அல்ல!

அப்பாவிற்கு ஒரு கல் உப்பு கூடினாலும். மசாலா கலவை சரியாக கலக்காவிட்டாலும், காரம் சிறிது குறைந்தாலும், இனிப்பு அளவாக இல்லாவிட்டாலும் தெரியும் ஷார்ப் நாக்கு! அவருக்கு சமைக்கும் சமையலை ருசி பார்த்து ஓகே செய்யும் டேஸ்ட் செக்கர் நான் தான்! எங்கள் பாட்டி பெயர் ருக்மிணி!

அவரும் சமையல் கலையில் வித்தகர்! அப்பா உணவினை விரும்பி ருசிப்பதை சொல்லி வியப்பவர். ஆனால் நான் பிறந்து வளர்ந்த பின்பு நீ உன் அப்பாவை தூக்கி சாப்பிட்டுட்டே என்பார். அந்தளவு அப்பாவின் கொடை எனக்கும் இருந்தது. இந்த ருசி பார்க்கும் குடும்பத்திற்கு அம்மா சமைத்தார்.

ஒரு இட்லிக்கு மூன்று சட்னி இரண்டு சாம்பார், கறிக்குழம்பும் இரண்டு வகை, ரசம் இரண்டு என எல்லார் ருசியையும் கவர் செய்துவிடுவார். தோசை வார்த்தாலும் எனக்கு மெத்தென்று, தம்பி பாலுவுக்கு மொய் மொய் தேசை (நெய் தோசை) உமாவுக்கு வீட்டு தோசை அப்பாவுக்கு முறுகல்னு வார்ப்பார்.

எல்லாரும் சாப்பிட்ட பிறகே சாப்பிடுவார். தன் வாழ்நாளில் எங்களுக்கு முன்பு அவர் சாப்பிட்டதாய் வரலாறு, புவியியல் எதுவுமே இல்லை! 98 சதவீதம் இரவிலும் பழைய சோறு (நிறைய சோறு இருக்குடா கண்ணு வேஸ்ட் ஆகிடும்) என்றபடி சுண்ட வைத்த குழம்பு, மட்டை ஊறுகாய் வைத்து..

அம்மா சாப்பிடுவதை கண்களில் நீர் வழிய பலமுறை பார்த்து இருக்கிறோம். வறுமை எங்கள் வீட்டில் ஒரு மாமாங்கம் குடி இருந்த காலத்திலும் அம்மா எங்களுக்கு செய்தது பெற்ற தாய் கூட செய்திருக்கமாட்டாள். போன ஜென்மத்தில் நீங்கள் ஏராளமான புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்..

இப்படி சொல்வது எங்கள் எல்லா உறவினர்களும்! இந்த அம்மாவிடம் நாங்கள் மகிழ்ந்திருந்த காலம் எத்தனை அழகானது தெரியுமா! வீட்டில் மின்சார வசதியே இல்லை! சிம்னி விளக்குதான், மழை பெய்தால் ஒழுகும் ஓட்டு வீடு, அடுப்பு சில்லென்று இருக்கும் அடிக்கடி சமைக்காததால்!

ஆனால் எங்கள் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது! கூரையில் இருந்து மழை நீர் ஒழுக அதன் தாளத்திற்கு ஏற்ப பானையில் நான் தாளம் போட தம்பி தங்கைகள் பாட கடைசித் தம்பி ஆட.. வறுமையை எங்கள் வளமான குரலால் வெட்கித் தலைகுனிய செய்திருக்கிறோம்.

அம்மாவிற்கு தடித்த நாக்கு சில தமிழ் வார்த்தைகளை அவர் வேடிக்கையாக உச்சரிப்பார். தெனாலி படத்தில் தெனாலி என்ற பெயரை மாற்றி உச்சரிக்கும் ரமேஷ் கண்ணா போல லாடனேந்தல் என்னும் ஊர்ப் பெயரை லாடனந்தூரு, லாடனாந்து, லாடடனந்தலு என்று விதவிதமாக உச்சரிப்பார்.

அம்மாவிற்கு கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தோம்! அதில் தங்கை உமாவின் பங்கு தான் அதிகம்! அப்போது அவள் அறிவொளி இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தாள்! தனம் என்ற மூன்றே எழுத்தை அம்மா வரிசை மாற்றி தம்ன, னதம், ம்தன என்று திணறுவதை ரசிப்போம்.

அம்மாவை ஆங்கிலத்தில் கையெழுத்து போட முயன்றது எல்லாம் வின்னர் படக் காமெடியை மிஞ்சும்” போங்கடா எனக்கிந்த இங்கிலிபீசே வேண்டாம் என்று அன்றைக்கே “இங்கிலீஷ் தெரியாது போடா” என்றவள். அம்மா சொல்லும் சில வார்த்தைகளின் அகராதி கீழே..

மிடிமிடிக்கி, மிடிக்கிரி (மிமிக்ரி) சர்டிபிட் (சர்டிபிகேட் கண்டினிட்டு (கண்டினியூட்டி) ப்ரேஸ் (ப்ரைஸ்) தஞ்சாலூர் (தஞ்சாவூர்) சிவசெங்க (சிவகங்கை) கொத்திக்கிறாஙக (அடிச்சிக்கிறாங்க) செருப்பு தொட்டுக்கிட்டு (போட்டுகிட்டு) இதுமட்டுமின்றி நடிகர் தேங்காய் சீனிவாசன ஸ்டைலில்..

அச்சினி புல்லோம்மா, முர்தாரி, {பாலி, குமரி என் தம்பிகளின் பெயர்கள்}என்று சொல்லும் பல வார்த்தைகள் இன்னும் எங்கள் நினைவுகளில். அம்மாவின் சமையல் பற்றி 10 மஹாபாரதம் அளவுக்கு எழுதலாம்! அசைவ சமையலுக்கு 10 இராமாயணம் அளவுக்கு எழுதலாம்! அப்படி ஒரு பக்குவம்!

அம்மா போடும் ஆம்லெட் ஒரு புலி சார்புக் குறியீடு தரும் லெவலுக்கு இருக்கும். அப்பா பிற்காலத்தில் இந்த அம்மாவை வளர்ப்பு பிள்ளைகளான நாங்கள் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து எங்கள் வீட்டை அம்மா பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். எங்கள் யாருக்குமே பங்கு கிடையாது!

அப்பா இறந்த ஒரு வருடத்திலேயே தம்பி பாலு வாங்கிய கடனுக்கு அவனை கடன்காரர்கள் நெருக்க கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வீட்டை விற்கப் போகும் போது தான் அப்பா இப்படி எழுதி வைத்தது அம்மா உட்பட எங்கள் அனைவருக்கும் தெரியும்! அம்மா என்னைப் பார்த்தார்!

ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டார் “என்னடா சொல்ற பெரியவனே வீட்டை வித்துடட்டுமா” நான் பிரமிப்புடன் வார்த்தைகளின்றி சரியென்று தலையசைத்தேன். என்ன ஒரு பெண் இவள்! இன்னொருத்தி பெற்ற 4 பிள்ளைகளுக்காக தனது சுக, துக்கங்கள், சொந்த, பந்தங்களைத் துறந்து..

கணவனும் இறந்து அவர் அவள் பெயருக்கு எழுதிய சொத்தை வீட்டிற்கு மூத்தவன் என்பதால் என் அனுமதி கேட்டு நிற்கிறாளே! இவள் தியாகத்தை விடவா பெரிது ஒன்று இருக்கப் போகிறது.. நம் தம்பி பட்ட கடனுக்கு தானே விற்கிறார், இதில் போய் தடை சொல்வது நியாமில்லையே..

என பலவாறு எண்ணங்கள் கலைடாஸ் கோப் வண்ணங்கள் போல மனதிற்குள் சுழன்றன. ம்தன என்று குழப்பத்தில் அவள் இடும் கையெழுத்து அன்று தனம் என்று மிக அழகாக அந்த பத்திரத்தில் இடப்பட்டு இருந்தது. என் தலையைக் கோதி “விடுடா நீ நிறையா சம்பாதிப்பே பார்த்துக்கலாம்”

அன்று அந்த மந்திர வார்த்தைகள் அம்மாவின் விரல் வழியாக என் உடலுக்குள் புகுந்ததை நான் மட்டுமே உணர்வேன். பெரிய லெக்சர் இல்லை, அறிவுரைகள் இல்லை, அழுகாச்சி இல்லை, புலம்பல்கள் இல்லை அம்மாவின் வைராக்கியத்தை இம்மியும் பிசகாமல் எனக்குள் அப்படியே கடத்திவிட்டாள்!

அம்மாவின் கடைசி காலத்தில் ஆறு மாதங்கள் அவருடன் இருக்கும் வரத்தை இறைவன் எனக்களித்து இருந்தான்! ஆயினும் அவருக்கு செய்ய வேண்டிய சில கடமைகளை பல நிர்பந்தங்கள் காரணமாக நான் செய்ய முடியவில்லை! அதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் உறுத்தல் உள்ளது!

எங்கோ பிறந்து, அப்பாவை மணந்து அவர் சிரித்தால் சிரித்து அவர் அழுதால் அழுது அவருக்குப் பின் அதே இடத்தில் பிள்ளைகளுக்காக அதை தொடர்ந்து தனக்கென்று ஒரு வாழ்வு வாழாமல் எங்களுக்காகவே வாழ்ந்து மறைந்தாள்! தெய்வங்கள் பூமிக்கு வருவதில்லை என யார் சொன்னது!🩷

Tuesday, 8 April 2025

🍯 யூடியூப் ரிவ்யூஸ்

#வேற_லெவல்

தமிழ்நாடு முழுவதும் சின்ன சந்துகளில், தெரு திருப்பங்களில், சாலையோரங்களில், ஹைவேஸ்களில், ஏராளமான உணவகங்கள் ‘லொகேட்’ ஆகியிருக்கின்றன! அந்தக் கடைகளின் ‘ஆம்பியன்ஸ்’ செமையாக இருக்கிறது! எல்லா கடைகளிலும் சோறும் & குழம்பும் விதவிதமாக கிடைக்கின்றன!

கிட்டத்தட்ட 25 முதல் 100 வருட பாரம்பரியம் இருப்பதாக அனைத்து ஓட்டல் காரர்களுமே சொல்கிறார்கள்! 20 அயிட்டங்களுடன் (உணவு வகைகள் தாங்க) அன் லிமிடெட் சைவச் சாப்பாடு கிடைக்கிறது! 2 வகை சாம்பார், 2 வகை வத்தக் குழம்பு, 2வகை பொரிச்ச குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் எல்லாமே பிரமாதமாக இருக்கிறது!

பாகற்காய் கசக்கிறது! பாயாசம் இனிக்கிறது! இவையெல்லாம் ஜஸ்ட் ₹250க்கே கிடைக்கிறது! பிளாட்பாரங்களில் ₹50க்கு 5 வகை சாதங்கள் கிடைக்கிறது! ₹10 கூடுதலாக தந்தால் ஒரு அவிச்ச முட்டையும் கிடைக்கிறது! இந்தக் கடைகளையெல்லாம் ஒரு அக்காவோ, அம்மாவோ, அத்தையோ, பாட்டியோ நடத்துகிறார்கள்!

இதில் மட்டும் 100 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கே கிடைத்துள்ளது பெருமையாகும்! அசைவ உணவுகள் அனைத்துமே ‘அல்டிமேட்’டாக இருக்கின்றன! கறிகள் ‘டெண்டராகவும்’ ஜுஸியாகவும் வெந்து இருக்கிறது! டேஸ்ட் எல்லாம் ‘தட்டிக் காயப் போடுது! பிரியாணிகள் ‘கொலமாஸாக’ இருக்கிறது.

அதிகாலை 5 மணிக்கே இட்லியும் குடல் குழம்பும் கிடைக்கிற கடைகள் மொத்தம் 96 இருக்கின்றன! அதில் தொண்ணூற்றி ஐந்தே முக்கால் கடைகள் ஈரோட்டிலேயே இருக்கின்றன! அந்தக் குடல் கறியின் டெக்ச்சரே நமது நாக்கில் ரப்ச்சர் உண்டாக்குகிறது! அந்தக் குழம்பின் ஃப்ளேவரை நம் கண்ணில் நுகரமுடிகிறது!

ஒரு அன்லிமிடெட் சாப்பாடுக்கு ₹700 முதல் ₹1000 வரை வாங்கிக் கொண்டு படுக்கும் பாய் போல தலைவாழை இலை விரித்து அதில் நடப்பன, பறப்பன, நீந்துவன, ஊர்வன என எல்லா அசைவ வகை உணவுகளிலும் தலா 4 வகைகளை சமைத்து இலைமீது சமமாக படுக்கப்போடும் சமத்துவபுரமான மெஸ்களும், தோப்புகளும்..

கொங்கு மண்டலம் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன! தடுக்கி விழுந்தால் நாட்டுக் கோழி விருந்துக்கடைகளிலும் தடுமாறி விழுந்தால் குடில் போன்ற தாபாக்களிலும் விழலாம்! சூரியன் உதிக்கும் முன் அதிகாலை 4 மணிக்கு சுடச்சுட ஆயிலில் பொரிச்ச ஆயுள் தராத புரோட்டாவும் மட்டன் குழம்பும் கிடைக்கின்றன!

மதுரையிலும் சேலத்திலும் அர்னால்டு போன்ற ஜிம் பாடியில் யாரையேனும் பார்த்தால் 99% அவர் புரோட்டா மாஸ்டராக இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! தினமும் அவ்வளவு புரோட்டா மாவு பிசைஞ்சு, புரோட்டா வீசுனா எவரும் அர்னால்டு போன்ற பாடி ஆகிடலாம்! அடுத்து இரவு தள்ளுவண்டிக் கடைகள்!

அங்கே இட்லி கறிக் குழம்பு, சப்பாத்தி குருமா, முட்டை தோசை, எஸன்ஸ் தோசைகள் லட்சகணக்கிலும், புரோட்டா & சால்னா, ஆம்லெட், ஆஃபாயில் கோடிக்கணக்கிலும் விற்பனையாகின்றன! சேலைகளில் கூட இத்தனை ரகங்கள் இல்லை தோசைகளில் 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கிறது!

அதற்கு 5 முதல் 8 சட்னிகள் தரப்படுகிறது! முட்டை / கறி தோசையே 22 வகைகளில் கிடைக்கிறது! மூளையோடு முட்டை மசாலா, மட்டன் மாங்காவோடு ஈரல், குடல் ஃப்ரையுடன் பிச்சு போட்ட கோழின்னு சாப்பிடுபவர்களின் தட்டு ஓவியர்களின் பேலட் பலகையில் கலைந்து கிடக்கும் வண்ணங்கள் போல காட்சியளிக்கிறது!

கடைகளில் விதவிதமான காம்போக்கள் கலந்து காணப்படுகின்றன! அவையெல்லாம் இங்கே ‘மஸ்ட் டிரை’ உணவாகவோ அல்லது அந்தக் கடையின் ‘சிக்னேச்சர்’ டிஷ்ஷாகவோ இருக்கிறது! திண்டுக்கல்லின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் ஒரு பிரியாணிக் கடை இருக்கிறது! எல்லாருமே 50 வருடப் பாரம்பரியத்தை கடந்து இருக்கிறார்கள்!

அநேகமா திண்டுக்கல் பூட்டை வாங்காத கடைகள் இந்த பிரியாணிக் கடைகளாகவே இருக்கலாம்! ஏன்னா எந்நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடைகளுக்கு கதவுகளே இல்லை! கிராமத்து சந்தைகளில் அமைந்துள்ள சாப்பாட்டுக் கடைகளில் சந்தைக்கே வராதவர்களும் அங்கே வந்து சாப்பாட்டுக்கு காத்திருக்கின்றனர்!

காலை 6 மணி அய்யர் கடை, படி இட்லி அய்யங்கார் கடை, கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை, சவுராஷ்டிரா பொங்கல் கடை, செட்டியார் வடைக்கடை, ஆசீர்வாதம் வடைக் கடை, ஈவினிங் பஷீர் பாய் பிரியாணிக் கடைன்னு சில மணி நேரக் கடைகளிலும் கூட்டம் சாதி, மதங்களை மறந்து சமத்துவமாய் நிற்கிறது!

கென்யாவின் மாஸிமாரா காடுகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கில் இடம் பெயரும் காட்டு மாடுகள் போல மதுரையில் இருந்து நத்தம் சென்று பொரிச்ச புரோட்டா சாப்பிடுபவர்களும் சேலத்திலிருந்து ஓமலூர் சென்று களி & கறி சாப்பிடுபவர்களும் திண்டுக்கல் சென்று பிரியாணி சாப்பிடுபவர்களும் பெருகிவிட்டனர்!

இட்லி, பணியாரம், ஆப்பம், இடியாப்பம் துவங்கி உப்புமாவுக்கு கூட சிறந்த உணவுகள் ரிவ்யூ யூடியூபெங்கும் கொட்டிக் கிடக்கின்றன! வடை, பஜ்ஜி, சாட் அயிட்டங்களுக்கு கூட அமர்க்களமான ரிவ்யூ வீடியோக்கள் உலா வருகின்றன! களி & கறிக்குழம்பு, சோறு & மீன் குழம்பு, பிரியாணி & சிக்கன் குழம்புன்னு..

உலகத்தின் எல்லா கடைகளிலும் சாப்பிடும் ரிவ்யூவர்கள் சொல்லும் ஒரே யூனிஃபார்ம் வார்த்தை.. டேஸ்ட் ‘வேற லெவலில்’ இருக்கிறது! இங்கே உணவு ரிவ்யூ என்பதே பெரும் க்யூவில் இருக்கிறது! ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்லமுடியும்….

சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்று நேரம் ஒதுக்கி இந்த யூ டியூப் சானல்களை பார்த்து அந்த ஓட்டல்களுக்கு நேரில் ஆய்வுக்கு போனால் அபாரதமே பல கோடிகள் நம் அரசுக்கு வரலாம்! அப்போது தெரியும் இந்தக் கடைகளின் தரம் “வேற லெவல்” என்பது!

{குறிஞ்சி பூத்தாற் போல சில நல்ல கடைகளும் இந்தப் பட்டியலில் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாக இருக்கின்றன}

Sunday, 6 April 2025

🍩 வடைக்காலம்

🍩 இது ஒரு வடைக் காலம் 🍩

மெதுவடை, உளுந்துவடை என்றும் செல்லமாக ஓட்டை வடை என்றும் அழைக்கப்படும் உளுந்தவடையைப் பற்றியே இப்பதிவு! கன்னடத்தில் உதின்ன வடே, தெலுங்கில் கரேலு, மலையாளத்தில் உளுனுவடா என்று அழைக்கப்படும் திராவிடப் பலகாரம் இந்த வடை! வட இந்தியாவில் பலப்பல வடை இந்தியர்கள் இருந்தாலும் இது தென்னிந்தியா அளவுக்கு அங்கு புகழிலும், புழக்கத்திலும் நஹிஹே!

இது நம்ம பிரவுடு கன்னடிகா உணவாகும்! பொதுவா உளுந்தில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு கர்நாடகா தனித்துவம் வாய்ந்தது. கர்நாடகாவின் மாதுர் பகுதியில் இது தோன்றியது (மாதுர் வடா இன்றும் ஃபேமஸ்) வரதராஜ முதலியார், மஸ்தான், பாட்ஷா இவர்களுக்கு முன்பே மும்பை வரை சென்று அங்கு கோலோச்சிய தென்னகத்து டான் தான் இந்த வடை நாயகன் & பாட்ஷா இரண்டுமே!

ஆரம்பகாலங்களில் (200 ஆண்டுகளுக்கு முன்பு) உளுந்து வடைகள் வைத்து செய்யப்பட்ட வடா பாவ் உளுந்தம் பருப்பு விலை ஏற்றத்தாலும், ஊற வைக்கும் நேரம் மிச்சம் என்பதாலும் வடா உருளைக் கிழங்குக்கு மாறியது! உளுந்து, உருளைக் கிழங்காக மாறினாலும் வடா என்னும் அந்தப் பெயர் மட்டும் மாறவேஇல்லை

இன்றைக்கும் மும்பையில் தினமும் சில கோடி ரூபாய்கள் டர்ன் ஓவர் கொடுக்கும் வணிகம் வடா பாவ் விற்பனையில் நடைபெறுகிறது! வெங்கடேஷ் கோலி வடா பாவ் என்னும் ஒரு நிறுவனமே ஆண்டுக்கு 200கோடி டர்ன் ஓவர் எடுக்கிறது! வாயைப் பிளக்காதீர்கள் அதில் 2 வடைகளை வைத்துவிடலாம்! டோர் லாக்! இப்படி மராத்தியர்களின் வாழ்வில் ஒன்றாகிப் போனது வடாபாவ்!

மகாராஷ்டிராவில் வடா பாவ் ராஜ்ஜியத்தை நிறுவிய மெதுவடை தமிழ்நாட்டுக்குள் உடுப்பி ஓட்டல்கள் வழியாக நுழைந்தது! பெயரில் மெது இருந்தாலும் அதிவேகமாக உணவு ரசனை மிகுந்த தமிழர்களின் வாய் வழியாக நுழைந்து அவர்கள் இதயத்தில் இடம் பிடித்தது! இது தமிழ்நாட்டிற்குள் வந்து கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிறது!

இட்லி, பொங்கல், உப்புமா, கிச்சடி என நம் எல்லா டிஃபன்களுக்கும் மியூச்சுவல் ஃபிரெண்டாக இருப்பது மெதுவடையே! அதிலும் புள்ளி வைத்தால் கோலம் என்ன கோலாகலமே போடும் தமிழர்கள் இதில் சாம்பார் வடை, ரசவடை, தயிர் & மோர்க்குழம்பு வடை, வடை கறி என்று பல அவதாரங்களை தமிழக கைப்பக்குவத்தில் உருவாக்கினர்.

பெரிய ஓட்டல்களில் மட்டுமே கிடைத்த இந்த வடை ரோட்டுக்கு வந்தது! பொதுவா ரோட்டுக்கு வந்துட்டான்னு சொன்னா அவன் தோத்துட்டான்னு அர்த்தம்! ஆனால் சாலையோர கடைகளுக்கு வந்த பின்பு தான் வென்றது மெதுவடை! கமல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பே தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது மெதுவடை!

இன்றும் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாலையோரக் கடைகளில் மட்டும் தினசரி தயாரிக்கும் வடைகளின் எண்ணிக்கை நிச்சயம் 2 இலட்சத்தை தாண்டும்! இந்தளவு எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு வடை சுட தற்போது போட்டிக்கு சிலர் வந்துவிடாலும் முதன் முதலில் இந்த சாதனையைச் செய்தவன் நம்ம மெதுவடையே!

எலந்தைப் பழம் முதல் மாம்பழம் வரையான சைஸில் மக்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப ₹1 முதல் ₹12 வரை வடைகள் இன்றும் மதுரையில் உண்டு! கர்நாடகாவில் மட்டுமே சாலையோரக் கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உளுந்துடன் எந்தவித மாவையும் கலப்படம் செய்யாமல் அற்புதமாக வடை சுட்டுத் தருகிறார்கள்!

தமிழ்நாட்டில் எல்லாம் அசால்டாக மைதா, கார்ன், அரிசி மாவுகளை உளுந்துடன் கலந்து விடுவார்கள்! இது உளுந்துவடை பரம்பரைக்கு செய்யும் குலத் துரோகமாகும்! FTV மாடல்கள் போல கர்நாடக வடைகளை எல்லாம் பார்த்தவுடன் பிடித்துவிடும்! அந்த அளவுக்கு பஞ்சு போன்ற மென்மையும், மொறு மொறுப்பும் கலந்திருக்கும்!

நம்ம ஊரில் அப்படித் தேடினால் கூட கிடைக்காது! சில கர்நாடகக் கடைகளில் எல்லாம் ஹாலோ மெதுவடை கிடைக்கும்! வடை பார்க்க buffயாக இருக்கும் உட்புறம் அதிக மாவு இருக்காது! கடித்தால் வடகம் போல நாவில் கரையும்! மெதுவடை என்றால் அந்த மாவில் நிச்சயம் வெங்காயம், மிளகு, பச்சை மிளகாய் இருக்கவேண்டும்!

அதிலும் சின்ன வெங்காயம் இருப்பது சாலச் சிறந்தது பெங்களூரில் வெஜிடபிள் மெதுவடை என்னும் ஒரு வகை இருக்கிறது! சன்னமாக வெட்டப்பட்ட,இஞ்சி, தேங்காய் துண்டுகள், கேரட், கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டு அட்டகாசமாக டோநட் அளவில் இருக்கும்! நித்தியானந்தா ஆசிரம் இருக்கும் பிடதியில் இதை ருசித்துள்ளேன்.

பொதுவா இந்த மெதுவடைக்கு தேங்காய் சட்னி தான் சிறந்த காம்பினேஷன் என்றாலும் தக்காளி வெங்காயம் கார சட்னி, இஞ்சி மிளகாய் சட்னி, மல்லி புதினா சட்னி என பலவகை சட்னிகளை ஜோடியாக தந்த பெருமை மதுரைக்கு உண்டு! திண்டுக்கல் மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு கார குருமாவை கண்டுபிடித்து தந்துள்ளனர்.

அரைத்துவிட்ட சாம்பார், கோசுமல்லி, கொத்சு போன்ற குழம்பு வகைகள் இதற்கு சிறந்த ஜோடிகளாகும்! இதில் ஸ்பெசல் உளுந்து வடைன்னு ஒண்ணு இருக்கு உளுந்து மாவை கொஞ்சம் நறநறப்பா இறுக்கமா அரைச்சு வெஜிடபிள்ஸ் போட்டு அதிரசம் மாதிரி அகலமாக தட்டி மசால் வடை போன்ற ஸ்டெக்ச்சரில் போடுவாங்க!

அதை சூடாக ருசிப்பது தெய்வ லெவல்! கேரளாவில் பெரிய ஓட்டல்களில் வடை நன்றாக இருக்கும், சாலைக்கடைகளில் அதில் மைதா மாவைக் கலந்து சேட்டன்கள் சேட்டை செய்திருப்பார்கள்! ஒரு முறை ஆந்திராவில் மெதுவடையை கண்டதும் திகிலானேன் ஒரே ஒரு வடைக்குள் கரையோரத்தில் படுத்திருக்கும் முதலைகள் போல..

ஆறேழு சிவப்பு மிளகாய்கள் பொதிந்து கிடந்தன! “பின்னால்” வரும் விளைவுகள் என் கண்களிலேயே (தெ)எரிந்தது! உளுந்துவடை சூடாகவே சாப்பிட வேண்டிய ஒரு பொருளாகும்! அதை லேசாக சட்னியில் ஊறவிட்டு சூடு ஆறும்முன் சாப்பிடவேண்டும்! நம்ம திண்டுக்கல் குருமாவுடன் சூடான வடைகள் சாப்பிடுவது என்றால்..

அசால்டாக 1 டஜன் வடைகள் சாப்பிட்ட காலமெல்லாம் கண் முன் வந்து போகிறது! யானைக்கல் ஆசீர்வாதம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர், பெரியார் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வாசல் கேபிஎஸ் எதிரில், முனிச்சாலை, மேலமாசி/ வடக்கு மாசி வீதி சந்திப்பு என வடைகளை நாங்கள் வேட்டையாடி விளையாடியது எல்லாம் பரவசமே!

இந்த உளுந்திலேயே போண்டா, சீயம், கார போண்டா என மரு வைத்து மெதுவடை வகைகள் மதுரை பக்கம் கிடைக்கும்! சூடானஇட்லி/ சூடான குழைவான கிச்சடி/ சூடான உப்புமா/சூடான நெய் வெண் பொங்கலோடு, சூடான சாம்பாரில் ஊறிய மெதுவடையை சூடாகவே சாப்பிடுவதை நினைத்தாலே.. ஆஹா இதல்லவோ…🍩

Saturday, 5 April 2025

♠️♥️சூதாட்டம்

20 - 20

ஐபில் தொடர் என்பது ஒரு அப்பட்டமான அம்யூஸ்மெண்ட் & எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வாகும்! டாஸ், முதல் பேட்டிங், சேஸிங் இங்கு ஆடுகின்ற ஆட்டங்கள், ப்ளேயர்களுக்குள் நடக்கும் ஈகோக்கள், கேப்டன்கள் மாற்றம், அணி பயிற்சியாளர்களின் ஆக்டிங் ஆலோசனைகள், அணி உரிமையாளர்களின் நடத்தை..

கருத்து மோதல்கள், பேட்டிகள், மக்களிடம் பரப்பப்படும் செய்திகள், சோஷியல் மீடியா சப்போர்ட் என மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் அத்தனையும் பக்காவாக கதை, திரைக்கதை, வசனம் என திட்டமிட்டு எழுதப்பட்டவை! இந்தியாவில் IPL ஒரு பணம் காய்ச்சி மரம்! இந்த 18 ஆண்டுகளில் அது செழித்து வளர்ந்துள்ளது!

டிரீம்11, போக்கோ, சுபி போன்ற இணைய சூதாட்ட வணிகர்கள் தான் இப்போது ஐபிஎல்லின் மெயின் ஸ்பான்ஸர்கள்! எந்த ஐபிஎல்லை சூதாட்டம் என்றார்களோ இப்போது அதை சூதாட்ட கார்ப்பரேட்டுகள் தான் இதை கட்டி ஆளுகின்றனர்! இதன் ஆணிவேரை தேடினால் அகப்படும் நபர்கள் நாம் ஆச்சரியப்படும் அளவு புதியவர்கள் இல்லை!

இந்த ஆட்டம் உங்களை அடிமையாக்கலாம், இதில் நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம் பொறுப்புடன் விளையாடுங்கள் என்ற அறிவிப்பு வேறு! நாங்க ஏண்டா நடுராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும்? இதை இப்போ மின்னல் வேகத்தில் சொல்கின்றனர்! வாய்ஸை fast forward செய்த ஸ்பீடில் சொல்கிறார்கள் (suppi)

சூதாட்டம் மட்டுமின்றி இதன் வணிகம் மாநில வாரியாக விளம்பர தாரர்களை குறி வைத்து இழுக்கிறது! வறுத்த கடலை முதல் வாட்ச் வரை 4 வருடங்களுக்கு முன்பு தமிழக அளவில் டிவியில் வரும் விளம்பரங்கள் இப்போ IPL ஆட்டங்களிலும் வருகிறது! அந்தளவிற்கு IPL இந்தியாவில் மிக ஆழமாக வேர்விட்டு வளர்ந்து இருக்கிறது!

இதன் வணிகம் ஆதார கிரிக்கெட் ஆட்டத்தின் விதிகளையே மாற்றி பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது! ஸ்டார்டிஜிக் டைம், இம்பாக்ட் ப்ளேயர், வைடு பால் ரிவ்யூ, ஆடிக் கொண்டிருக்கும் வீரரை வெளியே அனுப்புவது போன்ற பல புதிய விதிகளை உருவாக்கியது IPL தான்! ஆட்டத்தின் சுவாரஸ்யத்திற்கு இங்கு எதுவும் நடக்கலாம்!

டென்னிஸில் மிக்ஸ்டு டபுள்ஸ் எனும் ஆண் & பெண் இரட்டையர் ஆட்டம் போல நாளை மிக்ஸ்டு லெவன்ஸ் அணிகள் வரலாம். ஆண் பெண் ஜோடி ஓபனர்களாக வரலாம்! ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தால் 10 ரன்கள் போனஸ் தரலாம்! ஆண்கள் வீசும் பந்தில் பெண் பேட்டர் சிக்ஸ் அடித்தால் அதற்கு 8 ரன்கள் தரலாம்!

செஸ் ஆட்டத்தில் ஒருபுறமிருக்கும் சிப்பாய் வெட்டுப்படாமல் எதிர் புறம் ராஜாவின் வரிசையைத் தொட்டுவிட்டால் மீண்டும் ஏற்கனவே வெட்டப்பட்ட பவர் உள்ள ஒரு காயை திரும்ப கொண்டு வருவது போல பவர் ப்ளேவில் ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்றால் அவுட் ஆன ப்ளேயரை ஒரு முறை திரும்ப அழைத்துக் கொள்ளலாம்!

மெய்டன் ஓவர்கள் வீசினால் 4 ரன்கள் போனஸ், பந்து மிடில் ஸ்டம்பை வீழ்த்தினால் 2 ரன்கள் போனஸ், ஒற்றைக் கை கேட்சுக்கு 3 ரன்கள் போனஸ் இப்படி எது வேண்டுமானாலும் நாளை நடக்கலாம்! மேன் ஆஃப் தி மேட்ச், உமன் ஆஃப் தி மேட்ச் பரிசுடன் ஜுவல்லரிகள் தரும் பிரேஸ்லெட், நெக்லஸ், செயின், பரிசாக வழங்கப்படலாம்!

சிக்ஸ் அடித்தால் சில்க் சாரி என்று உமன் பேட்டர்களுக்கு பட்டுப் புடவைகளை கூட பரிசாக வழங்கலாம்! டிவி ஆடியன்ஸுக்கு கேள்வி கேட்டு பரிசுகள் வழங்கும் நம் பண்டைய காலத்து சானல் பண்பாடும் காலங்காலமாக நடைமுறையில் உள்ளதால் பெண்கள் சீரியலைத் துறந்து விட்டு கிரிக்கெட் பார்த்து கதறிக் கதறி அழுது மகிழலாம்!

நான் இங்கு எழுதிய கற்பனைகளை காட்டிலும் வேறு ஐடியாக்களும் நாளை இதில் வரலாம்! அந்தளவுக்கு கிரிக்கெட்டை மாற்றுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை! ஒரு விளையாட்டு வணிகமானால் ப்ளேயர்களை விட ஓனர்கள் தான் அதனை தங்கள் விருப்பத்திற்கு ஆட்டுவிப்பார்கள்! இங்கே முதல் பேட்டிங், சேஸிங் விஷயமே அல்ல!

20 ஓவர்களும் இவர்களுக்கு டர்ன் ஓவர்களே! திட்டமிட்டு அதை செயல்படுத்துகிறார்கள்! பார்வையாளர்களான நாம் அதை ரசிக்க வேண்டுமே ஒழிய, IPLஐ தூக்கி தலையில் வைத்து கொண்டாடுவதோ அல்லது அந்த ஆட்ட நுணுக்கங்களை ஆராய்வதோ, மெனக்கெட்டு இந்த நாடகங்களை சிலாகிப்பதோ நம் கிட்னிக்கு டேஞ்சரானது👹

மஹான் கவுண்டமணி “பெரிய இடத்து மாப்பிள்ளை” படத்தில் ஜெயராமிடம் சொல்வாரே.. நீ டிரைவர்.. டிரைவர்.. டிரைவர்..

அதே போலத் தான் ஐபிஎல்லுக்கும் சொல்லலாம்.. நீ சூதாடி.. சூதாடி.. சூதாடி.. ♠️ ♥️ ♣️ ♦️

அம்புட்டுதேங்ங்… 💔

Monday, 31 March 2025

🧊❄️ ஜில்லென்ற காலம்

#ஏப்ரல்_கூல் (ஐஸ் & சர்பத்)

80களில் எல்லா பள்ளி வாசலில்களிலும் ஒரு ஐஸ்வண்டி நிற்கும்! விதவிதமான வண்ணங்களில் பெரிய பெரிய சர்பத் பாட்டில்களில் திரவங்கள் இருக்கும்! ஈரச்சாக்கில் சுற்றப்பட்ட பெரிய ஐஸ் பார் ஒன்று இருக்கும்! அந்த ஐஸை மரவேலை செய்பவர்கள் மரத்தை இழைக்கும் கட்டை போன்ற ஒரு கட்டையில் ஐஸ்கட்டியை விருட் விருட்னு துகள்களாக சீவி அதை ஒரு டம்ளரில் கொட்டுவார்கள்!

அதை நன்கு டம்ளரின் உட்புறம் அழுத்தி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என வண்ணமயமான இனிப்புக் கலவைகளை அதில் ஊற்றி நடுவில் ஒரு குச்சி செருகித் தருவார். உறைந்த வானவில் போல நம் கையில் ஏந்திய அந்த ஐஸை நம்மால் மறக்கமுடியுமா! அந்த ஐஸில் ஊற்றிய வண்ண இனிப்புகளை நாம் அன்னப் பறவை போல பிரித்து உறிஞ்சி மீண்டும் அதை வெள்ளை ஐஸாகவே ஆக்கிவிடுவோம்!

இதிலும் சேமியா போட்டுத் தரும் ஐஸ் இன்னுமொரு அற்புதம்! அந்த சேமியாவோடு ஐஸை சில்லென உறிஞ்சுவது தனி சுகம்! கண்ணாடி கிளாஸில் ஜப்ஸா விதைகள் போட்டு தரும் கலர் சர்பத்தும் அப்போ ஃபேமஸ்! நமக்கு அறிவுரை சொல்லுற எல்லாரும் இந்த ஐஸை சாப்பிடாதிங்க! சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், இதில சாக்ரீன் இருக்கு, தொண்டையில் சதை வளரும், ஆபரேஷன் செய்வாங்க,..

இப்படியெல்லாம் நம்மை பயமுறுத்தினாலும் நாம் அந்த ஐஸை தேடித் தான் போவோம்! அந்த ஐஸை கட்டையால் சீவும் போது தெறிக்கும் துகள்கள் முகத்தில் வந்து படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்! ஒரு குற்றாலச் சாரல் போல அது நம்மை குளிர்விக்கும்! ஐஸில் ஊறிய சேமியாவையும், ஜப்ஸா விதைகளையும் கடித்து ருசிப்பது ஒரு அலாதியான இன்பம்! இந்த ஐஸை சாப்பிட்டால் நம் உதடுகளில்..

வானவில் போல வண்ணச் சாயம் தெரியும்! நம் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்களிடம் நாம் மாட்டிக் கொள்வோம்! தேவையில்லாத திட்டும் அடியும் கிடைக்கும்! பிற்பாடு பால் ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ்சு, க்ரேப் என குச்சி ஐஸ் வண்டிகளின் காலம் துவங்கியது! அப்போது கப் ஐஸ், ball ஐஸ் கொஞ்சம் காஸ்ட்லி! வீட்டில் நமக்குத் தரும் தினசரி பாக்கெட் மணிக்கு அது கட்டுப்படியாகாது!

இந்த பால் ஐசுக்கும் ball ஐசுக்கும் வித்தியாசம் தெரியவே எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது! பால், சர்க்கரை, ஐஸ் மூன்றும் சேர்ந்து குச்சியில் செருகித் தருவது பால் ஐஸ்! சின்ன டென்னிஸ் பந்து போன்ற ஒரு டப்பாவில் கப் ஐஸ்க்ரீமை வைத்திருப்பது ball ஐஸ்! இதன் பிறகு பெரிய பெட்டி போன்ற மேல் நோக்கித் திறக்கும் ஃபிரிட்ஜுகளில் ரஸ்னா கலக்கி வைத்து கிளாசில் விற்பார்கள்.

இதிலேயே ஆரஞ்சு, பைனாப்பிள், லெமன், க்ரேப் போன்ற க்ரஷ் வகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன! இதில் தனியிடம் பிடித்தது ரோஸ்மில்க்! அந்தக் கலரே அதை அருந்தச் சொல்லும்! அதன் ருசியும் வாசமும் எளிதில் எவரையும் வசப்படுத்தும்! பிறகு வந்தது பாதாம் மில்க் / கீர்.இதன் ருசியும் தனித்துவம் வாய்ந்தது! இப்படி ஐஸ் வண்டிகளில் துவங்கி க்ரஷ் வகைகள் வரை ஜில் காலமே!

இடையில் டியூப் ஐஸ் காலம் ஒன்று பேஜர் காலம் போல வந்து போனது! 25 பைசாவுக்கு மேங்கோ, க்ரேப் எல்லாம் ஒரு சாண் நீளத்தில் டியூப் போன்ற சாஷேவில் வந்தன! இது படிப்படியாக 50 பைசா 1 ரூபாய்னு வந்து அதன் பின்னே வழக்கொழிந்து போனது! அடுத்தது சர்பத் காலம்! சர்பத் கொஞ்சம் பெரியவர்களுக்கானது என்றாலும் அதை குடித்த பின்பு அதற்கும் ரசிகனாகிப் போனேன்!

அதிலும் நன்னாரி, ரோஸ், லெமன் போன்ற சர்பத்துகள் மிகவும் ருசியானவை! ஐசுக்கும், க்ரஷுக்கும் நடுவில் தனது தனித்த ருசியால் தாகம் தீர்த்தவை! 2 எலுமிச்சையை பிழிந்து ஐஸை நொறுக்கிப் போட்டு நன்னாரி எஸன்ஸ் 2 ஸ்பூன் ஊற்றிப் பிறகு மண்பானையின் நீர்விட்டு கலந்து தரும் சர்பத் தரும் இன்பம் இருக்கே அதெல்லாம் சொல்லில் அடங்காது! அதிலும் மதுரை ஜனதா, ஒண்டிப்புலி..

தஞ்சை குணங்குடி தாசன், சிவகாசி கண் மார்க் போன்றவை சர்பத் உலகில் தனித்துவமானவை! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் துவங்கி மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுற்றுப்புறங்களில் புகழ் பெற்ற பல சர்பத் கடைகள் இருந்தன! நல்ல வெயிலில் வாடி வந்து “ஐஸ் அதிகமா போட்டு ஒரு சர்பத் போடுண்ணே” எனும் பலரது குரல்களை பரவலாகவும் பரவசமாகவும் காதில் கேட்க முடியும்!

இதிலேயே தண்ணீருக்கு பதில் சோடா ஊற்றி சோடா சர்பத்னு அஜீரணத்துக்கு ஒரு மருந்தை கண்டுபிடித்தவர்கள் பாண்டியர்கள்! ஒரு இட்லிக்கே 10 வகை சட்னிகள் கண்டுபிடித்த சிட்னியன்ஸ் சர்பத்திலும், இளநீர் சர்பத், நுங்கு சர்பத், ஜிஞ்சர் லெமன் சர்பத்துனு சர்பத்தில் பல வெரைட்டிகளை கண்டறிந்த எடிசன் ஆனார்கள்! எலுமிச்சையௌ இரண்டாக நறுக்கி நாரதர் கையில் இருக்கும்..

சப்ளா கட்டை போன்ற கட்டையின் தாடையை திறந்து அறுத்த எலுமிச்சையை அதில் வைத்து பிழிவது, சர்பத்தில் ஊற்ற மண் பானையில் நீர், எஸன்ஸ் ஊற்றிக் கலக்க பெரிய ஸ்பூன் பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டியை உடைத்துப் போடுவது இதெல்லாமே இன்றும் நம் நினைவில் பசுமையாய் வந்து போகும்! இன்று கோக், பெப்ஸி போன்ற பிராண்டுகள் பாட்டில்களிலும், டின்களிலும் மலிந்து கிடக்க..

கார்ப்பரேட்டான இன்றைய ஜுஸ் கடைகளில் 100 விதமான பழரசங்களும், ஐஸ்க்ரீம் பார்லர்களில் 500 வெரைட்டிகளும் கிடைக்கின்றன! ஆனால் அன்று ஒரு குச்சிஐஸ், ஒரு ரோஸ்மில்க், ஒரு நன்னாரி சர்பத் தந்த நிறைவு இவை எதிலுமே இல்லை!

Sunday, 30 March 2025

🍖 தெலுங்கு ருசி

#ஆந்திர_விருந்து




என் உச்சி மண்டையில் சுர்ர்ருங்குது போல ஆந்திரக் காரமானது அதி’காரம்’ மிக்கது! ஆனால் ரசித்து ருசிக்கலாம்! தென்னிந்திய மக்களின் சைவ / அசைவ உணவுகளில் மிகப் பெரிய வித்யாசத்தை காண முடியாது! நல்ல காரத்திற்கு ஆந்திரா, தேங்காய் சேர்ப்புக்கு கேரளா, மெல்லிய இனிப்புக்கு கர்நாடகா என்று எல்லாமே தமிழக ருசிக்கு வெகு அருகில் ஒரு சில சிறு மாறுபாடுகளுடன் இருக்கும்!


சமீபத்தில் வைசாக் சென்று திரும்பிய போது பாரம்பரிய தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் பம்பரம் ஆடுவது, பட்டம் விடுவது போன்ற நமது பழைய விளையாட்டுகள் அங்கும் இருந்தது! முன்னாள் பம்பரச் சாம்பியனான எனக்கு பம்பரத்தைக் கண்டதுமே பரவசம்! நீள சாட்டையின் இறுதியில் முடிச்சிட்டு இறுக்கி அதை பம்பரத்தின் மீது நன்கு சுற்றி காற்றில் சுழற்றி கைக்கு இழுத்தேன்!


முதலிரண்டு முறையும் ஷிவம் துபே போல சொதப்பினாலும் 3வது முறை ஸ்ரேயாஸ் அய்யர் போல ஜம்மென்று என் உள்ளங்கையில் அழகாக ஒரு குருவி பறந்து வந்து அமர்ந்தது போல அமர்ந்தது! நண்பர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்! அடுத்து பட்டம் விடுமிடத்தில் பட்டதாரிகள் குவிந்திருக்க பட்டமே படிக்காத நான் கையில் பட்டத்தை ஏந்தி ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்!


இந்த பாரம்பரியத் திருவிழாவின் மதிய விருந்தில் ஆந்திர மாநில பாரம்பரிய சைவ/அசைவ உணவு வகைகள் எங்களுக்காக காத்து இருந்தன! சைவம் பக்கம் டிராகன் படம் ரிலீசான தியேட்டர் போல கூட்டம் அலை மோதியது! அசைவம் பக்கம் Neek பட தியேட்டர் போல காற்றாடியது! டேபிளில் ரோஜா, சாமந்தி பூவிதழ்களைத் தூவி மேலே லேமினிட் போல பிளாஸ்டிக் ஷீட் விரித்திருந்தனர்!


ரசனையான அழகுடன் இருந்த டேபிளில் நம்ம ஊரு ஸ்டைலில் தலை வாழையிலை விரித்து.. பால தெலிகலு, (அல்டிமேட்டான அரிசி மாவு நூடுல்ஸ் பாயாசம்) நெல்லூர் மலாய் ஜாமூன், மட்கா பாதாம் ஜுன்னு என்று 3 ஸ்வீட்ஸ் (பால் கோவா போல பானையில் பாதாம் கோவா) சிக்கன் கைமா வடை, சுறா புட்டு, இறா வறுவல்னு மூன்று ஸ்டார்ட்டர்ஸ்! அத்தனையும் அனல் பறக்க பரிமாறினர்! 


முதல் உணவாக இலையில் ராகி களி பரிமாறப்பட்டது! என்னடா இது சிறையில் கைதிகளுக்கு தர்ற மாதிரி களி போடுறாங்கன்னு ஒரு விநாடி திகைத்தேன்! ஆந்திர உணவு பாரம்பரியத்தில் ராகி சங்கட்டி என்கிற களி ஒரு முக்கிய உணவு! நம்ம ஊரில் பருப்பு போல ராகி அங்கு தலையாய உணவு. அதற்கு தொட்டுக் கொள்ள அற்புதமான நாட்டுக் கோழி குழம்பினை சுடச்சுட ஊற்றினார்கள்! 


இரண்டு வகையான நாட்டுக்கோழி குழம்புகள் ஒன்று நாட்டுக் கோழி புலுசு, இன்னொன்று மாஜ்ஜிகா புலுசு இரண்டும் களியோடு சாப்பிட அமிர்தமாக இருந்தது! மட்டனில் காரசார கோங்குரா & மட்டன் பாலக்குரா(கீரையில் செய்த மட்டன்) பரிமாறினார்கள்! இவை அனைத்துமே களியோடு உண்ண களிப்போடு இருந்தது! அடுத்து விருந்தில் சிக்கன் புட்டா பிரியாணி பரிமாறப்பட்டது! 


2 ஆந்திர மாநிலங்களிலும் கோனசீமா பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, உலவுசாறு பிரியாணி, ராயலசீமா பிரியாணி, கல்யாணி பிரியாணி, கோங்குரா பிரியாணி, பீமாவரம் பிரியாணின்னு பல வகை பிரியாணி வகைகள் உண்டு! புட்டா பிரியாணி என்பது பிரியாணி தனியாகவும் பொரித்த சிக்கனுடன் அவித்த முட்டை சேர்த்து சமைப்பதாகும்! இந்த பிரியாணியில் சிக்கனுக்கு பதில்.. 


மீன், இறால் வகைகளை சேர்த்தும் சமைப்பார்கள்! இந்த பிரியாணியை தொன்னை, பனை ஓலை பெட்டியில் வைத்து பரிமாறுவாறுகள்! எங்களுக்கு புரசை இலையில் பரிமாறப்பட்டது! சூடான வெள்ளை சோற்றுடன் பண்டுகப்பா இகுரு என்கிற கார சார மீன் குழம்பும், சீப்பலு கொடிகுட்டு எனும் அயிலை மீனும் பரிமாறப்பட்டது! அருமையான ரசமும் எருமைத் தயிரும் நிறைவு!


இதில் முக்கியமாக சொல்லப்போனால் பாலதெலிகலு என்கிற பாயாசம்! தமிழக பால் பாயாசம், கேரள அடை பிரதமன், கன்னட ரவை பாயாசம் எல்லாவற்றிற்கும் சவால் விட்டது! அரிசிமாவை அவித்து முறுக்கு போல பிழிந்து கொதிக்கும் பாலில் வெல்லப் பாகு முந்திரி திராட்சையுடன் செய்யும் அமிர்தம் அந்தப் பாயாசம்! சுந்தர தெலுங்கர்கள் சுவையிலும் சுந்தரர்கள் என்பதே நெய்.. 


அடச்சே.. மெய்..