Tuesday 9 September 2014

வைதேகி காத்திருந்தாள்...

பழைய படங்களை திரும்ப எடுக்கும் தமிழ் சினிமாவின் விதிப்படி நம்ம கேப்டனுக்காக ஒரு ரீ- மிக்ஸ் திரைப்படம்.... இனி படத்தின் கதை..!


புரட்சிகலைஞர் கேப்டன் பெருமையுடன் 

                      வழங்கும்

            வைதேகி காத்திருந்தாள் -II
                   (கேப்டனுக்காக)


வெள்ளைச்சாமி (விஜயகாந்த்-1) அந்த ஊரில் வீடு வீடாக மினரல் வாட்டர் சப்ளை செய்பவர்.. அந்த ஊரில் வசிக்கும் இளம் விதவை வைதேகி (ஹன்சிகா) அந்த ஊருக்கு வேலை தேடி வருகிறார் ராஜா (விஜயகாந்த்-2) அவருக்கு செல்போன் கடையில் வேலை வாங்கித் தருகிறார் ஆல் இன் ஆல் அழகு ராஜா (சந்தானம்) ராஜா வைதேகி வீட்டில் ஒரு போர்ஷனில் குடியேறுகிறார்.. ராஜாவை ஒரு தலையாக விரும்புகிறாள் வைதேகி.. ஆனால் ராஜா வைதேகியை விரும்பவில்லை..!

செல்போன் கடைக்கு ரீ-சார்ஜ் செய்ய அடிக்கடி வரும் உள்ளூரில் உள்ள செங்கமலத்தை (ஶ்ரீதிவ்யா) விரும்புகிறார் ராஜா.. செங்கமலமும் ராஜாவை விரும்புகிறாள்.. இதை அறிந்த செங்கமலத்தின் அண்ணன் வெள்ளிக்கிழமை ராமசாமி (பிரகாஷ்ராஜ்) அந்தக் காதலை பிரிக்கப்பார்க்கிறார்.. இடையில் ப்ளாஷ்பேக்..

வெள்ளைச்சாமி (விஜயகாந்த்-1) தனது முறைப்பெண் ராசாத்தியை (லட்சுமிமேனன்) சீண்டிக்கொண்டே இருப்பார்.. ஒரு நாள் பேஸ்புக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காட்டி (சமந்தா) இவளைத்தான் நான் திருமணம் செய்யப் போகிறேன் என விளையாட்டாக கூற ராசாத்தி விஷம் குடித்துவிடுகிறார்...

அப்போது வெள்ளைச்சாமி பரபரப்பாக ஓடி வந்து அவளுக்கு மினரல் வாட்டரில் உப்பு கரைத்துக்குடுக்க அது போலி மினரல் வாட்டர் என்பதால் விஷம் அதிகமாகி ராசாத்தி இறந்துவிடுகிறாள்.. அவள் ஞாபகமாகத்தான் ஊருக்கு மினரல் வாட்டர் கேன் சப்ளை செய்கிறார் வெள்ளைச்சாமி.. ஆனால் போலி மினரல் வாட்டர் கம்பெனிமேல் அவருக்கு தீராத கோபம் உண்டு..! இனி வைதேகி...

வீட்டில் பார்த்து வைத்த மாப்பிள்ளையை பல கனவுகளுடன் கைப்பிடிக்கும் வைதேகி திருமணம் முடிந்து ஊருக்கு செல்ல ரயில் ஏறுகிறாள் ரயிலில் வரும் நண்பர்கள் எல்லாம் மேகம் கருக்கையிலே பாடல் பாட ஜங்ஷனில் மினரல் வாட்டர் வாங்கப்போன வைதேகியின் கணவன் ரயிலை விட்டுவிட ரயில் கிளம்பும் போது ஓடி வந்து ஏற முற்பட்ட போது தண்டவாளத்தில் விழுந்து பலியாகிறார்..! 

கையில் மினரல் வாட்டர் பாட்டில் இருந்ததால் தான் வைதேகியின் கணவன் ரயிலில் பிடி நழுவி விழுந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.! ஆக வைதேகிக்கும் மினரல் வாட்டர் நிறுவனத்தின் மீது கோபமுண்டு..! இந்நிலையில் செங்கமலத்தின் அண்ணன் வெள்ளிக்கிழமை ராமசாமி ஒரு போலி மினரல் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க வெகுண்டு எழுகிறார்கள் வெள்ளைச்சாமியும் வைதேகியும்..!

ஊரை விட்டு ஓடும் செங்கமலத்தையும் ராஜாவையும் ஊர் எல்லையில் வழிமறிக்கிறார் வெள்ளிக்கிழமை ராமசாமி அவரை அடித்து துவம்சம் செய்கிறார் வெள்ளைச்சாமி.. அந்த நேரத்தில் ராமசாமியின் ஆட்கள் மினரல் வாட்டர் ஃபேக்டரியில்  வைதேகியை சிறைவைக்க அவரை காப்பாற்ற வருகிறார்கள் வெள்ளைச்சாமியும் ராஜாவும்..!

அங்கு நடக்கும் சண்டையில் ராஜாவை  கொல்லவரும் போது நடுவில் வந்து உயிரை விடுகிறார் வைதேகி.. ஆத்திரத்தில் வெள்ளைச்சாமி ராமசாமியைக் கொல்ல அவரை போலீஸ் கைது செய்கிறது...கட் பண்ணா இந்தக்கதையை இதுவரை ராஜாவும் செங்கமலமும் சமந்தாவிடம் (இவர் பேரும் வைதேகி) சொல்லி முடிக்கிறார்கள்..!

இந்தக்கதையை கேட்டு மனமுருகிய வைதேகி (சமந்தா) தன்னால் தானே வெள்ளைச்சாமியின் காதலி இறந்தாள் என அழுது தனது பேஸ் புக் ஐடியை டி-ஆக்டிவேட் செய்துவிட்டு ஊர் எல்லைக்கு போய் வெள்ளைச்சாமிக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறாள்..! பேக்கிரவுண்ட்டில் வாய்ஸ் 

"இந்த வைதேகி காத்திருப்பாள் வெள்ளைச்சாமி வரும் வரை அதுவரை இவளே இவ்வூரின் எல்லைச்சாமி".....


            சுபம்.


No comments:

Post a Comment