Tuesday, 5 May 2015

பூகம்பத்தில் 2 நிமிடம்

#என்_பூகம்ப_அனுபவம்

காலை 10 மணி தென் ஆப்பிரிக்காவில் லாஸ்ட் சிட்டி என்றும் அழைக்கப்படும் உலகின் சிறந்த பொழுது போக்கு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சன் சிட்டியில் அமைந்திருக்கும் அம்யூஸ்மென்ட் பார்க்கில் கூட்டம் அலை மோதுகிறது.. 

அங்கிருந்த இருவர் பேசியதி கேட்டோம்.. பூகம்பம் எத்தனை மணிக்கு..? அதுவா 10:30 க்கு விட்டா 12:30 அடுத்து 3:30 அடுத்த டவுன் பஸ்சுக்கு நேரம் சொல்வது போல சொல்லிக்கொண்டு போனார்கள் நாங்களும் அவர்களைத் தொடர்ந்தோம்.

எங்களோடு பலரும் பூகம்பம் பற்றி பேசிக் கொண்டும் கூட்டமாக கோக் குடித்துக்கொண்டும் காதலிகளை அணைத்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள்.. எனது ஆச்சரியம் எல்லாம் அதுவல்ல..!

எப்படி இவர்கள் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அதுவும் நேரத்தை குறிப்பிட்டு சொல்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தான்.! ஆனால் அதற்கு விடை அங்கு கிடைத்தது. நாங்கள் எல்லோரும் ஆவலாய் குவிந்த இடம் "எர்த்க்வேக் ஏரியா"..

இங்கு செயற்கையாக பூகம்பம் ஏற்படுத்துகிறார்கள் அதிக பட்சம் 8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் கிடைக்கும் அனுபவத்தை இங்கு பெறலாம்.. அந்த இடமும் குகை போல ஆங்காங்கே விரிசலுடன் காணப்பட்டது சுவர் எங்கும் கைப்பிடிகள்..!

கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள். எல்லோரும் காத்திருந்தோம் ஸ்பீக்கரில் அறிவிப்பு வந்தது என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்று.. சிவப்பு விளக்குகள் அந்த குகையில் பளிச்சிட...  மிகபெரிய சைரன் அடித்ததும் கவுண்ட்டவுன் ஆரம்பிக்க 0 வந்ததும் அதிரும் இசையுடன் பூமி அதிர ஆரம்பித்தது..!

காலடியில் திரெட் மில்லில் நடப்பது போல பூமி நழுவ ஆரம்பித்தது (4ரிக்டர்) அடுத்து சில வினாடிகளில் வல இடமாக ஆட (6 ரிக்டர்) அடுத்து நம்மை  தடுமாற வைத்து தள்ளுவது போல குலுங்க இப்போது பலர் அலற ஆரம்பித்து விட்டார்கள் (8ரிக்டர்)

சரியாக 2 நிமிட அனுபவம்..! மீண்டும் ஸைரன் ஒலிக்க பச்சை விளக்குகள் எரிய பூகம்பம் நிறுத்தப்பட்டது.. பலருக்கு முகத்தில் பீதி சிலருக்கு தலை சுற்றல் ஒவ்வாமையில் சிலர் வாந்தி எடுக்க ஓடினார்கள்.. எனக்கும் கொஞ்சம் தலை சுற்றல் இருந்தது.

பாதுகாப்பாக நேரம் அறிவித்து செயற்கையாக உருவாக்கிய பூகம்பமே நமக்கு இப்படி என்றால் நேரம் தெரியாது திடீரென இயற்கையாக வரும் பூகம்பம் ரொம்பக் கொடுமை என இப்போது தோன்றுகிறது.

No comments:

Post a Comment