Monday, 19 May 2025

🚀நாஸா நார்மன் 🚀

“நாஸா நாடி ஜோதிடர் நார்மன் டேவிட்”

யாரிந்த நார்மன் டேவிட்? இவர் ஒரு அமெரிக்கர்! ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்ட்ரோனட் சயின்ஸ்’ படித்த போது பண்டைய இந்திய வானவியல் ஆராய்ச்சி அறிஞர்களான ஆரியபட்டர், பாஸ்கரர் பற்றி படித்து வியந்தார்! எந்த ஒரு அறிவியல் சாதனமும் இல்லாமல் அவர்கள் ஆராய்ந்ததை..

இவர் ஆராய இந்தியா வந்து, காசி முதல் இராமேஸ்வரம் வரை சந்நியாசம்.. அடச்சே..’ சரித்திரத்தைத் தேடினார். அப்போது இந்திய ஜோதிடக் கலையைப் பற்றி அறிந்து வியந்து போனார். சூரிய முதலாளியை நவக்கிரகங்களும் நாய்குட்டி போல சுற்றி வரும் சூட்சுமத்தை இந்தியர்கள் கண்டுபிடித்ததை..

அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்று அங்கிருந்து தவறி விழப் பார்த்து அருகில் இருந்த சேஃப்டி கைப்பிடியைப் பிடித்து விழாமல் தப்பித்தார்.! உடனடியாக அமெரிக்காவில் தான் படித்துக் கொண்டிருந்த அறிவியல் படிப்பை அன்றைக்கே டிஸ்கண்டினியூ செய்து விட்டு இந்தியாவில் ஜோதிடம் படிக்க முடிவெடுத்தார்.

இந்தியாவில் நல்ல முறையில் ஜோதிடம் படிக்க வேண்டும் என்றால் அதனை நாலாந்திர தரத்தில் சொல்லித் தரும் கல்லூரிகள் நாலு திசையிலும் நானுறுக்கும் மேல் இருந்தது! நாலு பக்கமும் பரவியிருந்த நாலாந்திர கல்லூரிகளுக்கு நடுவில் நாளந்தா என்னும் நவரத்தினத்தைக் கண்டார்!

ஆஹா! கிரகங்களும் ஒன்பது! நவரத்தினங்களும் ஒன்பது! நாம் ஜோதிடம் படிக்க நாளந்தாவே சிறந்தது என்று அவருக்கு தோன்றியது. அன்று சுக்ல பட்ச அமாவாசை என்று பண்டிட் ஒருவர் குறித்து கொடுக்க.. நள்ளிரவே நாளந்தாவிற்கு போய் க்யூவில் நின்று அமிட்மிஷனுக்கு அப்ளிகேஷன் போட்டார்.

நாளந்தாவில் அவ்வாண்டின் ஜோதிடப் படிப்புக்கான இடம் ஒன்று கூட இல்லாமல் அட்மிஷன் முடிந்திருந்தது. ஆனால் நார்மன் சற்றும் மனம் தளராமல் அங்கே காத்திருந்தார். ஜோதிட படிப்புக்காக இடம் கிடைத்த ஒரு மாணவர் நாஸாவில் வேலை கிடைத்து சென்றுவிட்டார் என்ற செய்தி வந்தது!

விதியின் விளையாட்டை நினைத்து நார்மன் மெய் மட்டுமல்ல கை,வாய் எல்லாம் சிலிர்த்தார்! நாஸாவே வேண்டாம் என இந்தியா வந்த நார்மனுக்கு வழி விடுவது போல ஒருவனை இங்கிருந்து நாஸாவுக்கு அனுப்பியது ஜோதிடமே என்பது அறிந்து மீண்டும் அரை மணிநேரம் மெய் சிலிர்த்தார்!

நாளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்த பின்பு, அங்கு ஜோதிட ஆராய்சியில் நாலு இளங் கலை பட்டங்களும், நாலு முதுகலைப் பட்டங்களும், நாலு டாக்ட ரேட்டுகளும் பெற்ற பின்பு, இதுக்கு மேல் கொடுக்க எங்களிடம் பட்டங்கள் இல்லை என நா’லந்தா’ துணைவேந்தர் சொன்ன பிறகே வெளியே வந்தார்!

ஆனாலும் அவரது ஜோதிட தாகம் குறையவே இல்லை. கை ஜோதிடம், எண் ஜோதிடம், சுவடி ஜோதிடம், மோடி அடச்சே.. நாடி ஜோதிடம், எலி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை தேடித் தேடிப் படித்தார். அப்பரசண்டியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 2 வருடம் கிளி ஜோதிடம் பார்த்தார்!

வைத்தீஸ்வரன் கோவிலில் சுவடி ஜோதிடம் படித்த போது தான் மீண்டும் வியப்பின் உச்சிக்..ப்,(ரிபீட்டு) நாடி ஜோதிடத்திலும் நான்கைந்து பட்டங்களைப் பெற்று அந்த ஊரிலேயே “நாடி ஜோதிடர் நார்மன்” என போர்டு மாட்டி கடை போட்டு 9 ஆண்டுகள் அங்கு ஜோதிட சேவை புரிந்து உலகப் புகழடைந்தார்.

நார்மன் இந்தியாவில் படித்து உலகப் புகழ் அடைந்ததை கேள்விப் பட்டது நாஸா! நாஸாவிற்கு ஜோதிடத்தில் துளியும் நம்பிக்கையில்லை. இருந்தாலும் நார்மனை கண்காணிக்க சி.ஐ.ஏவை அனுப்பி உளவு பார்த்தது. இந்நிலையில் கல்பனா சாவ்லா மரணம் அமெரிக்கா ஏவிய ராக்கெட்டுகளின் தொடர் தோல்விகள் என பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த நாஸா துவண்டது!

அதே நேரம் இந்தியா நாற்பது கால் பாய்ச்சலில் விண்வெளி ஆராய்ச்சியில் விரைவாக முன்னேறியது! ஒரே ராக்கெட்டில் 120 சாட்டிலைட்டுகளை அனுப்பும் அளவுக்கு திறமை வாய்ந்த நாடாக மாறியிருந்தது இந்தியா! இதற்குக் காரணம் நமது நார்மன் தான்! ஆம்! அவர் குறித்துக் கொடுத்த நேர காலப்படி ராக்கெட்டை அனுப்பி, அவர் குறித்துத் தந்த நல்ல நாட்களில்..

பலவிதமான விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்டே இந்த 100 சதவீத வெற்றிகளை இந்தியா பெற்றது எனும் அரிய தகவல்களை அமெரிக்க வாதகோடரிகள் துப்பறிந்து தகவல் அனுப்பினர். நார்மனைப் பரிசோதிக்க, சில ப்ராஜக்டுகளுக்கு நேரம் குறித்துத்தர கேட்டது நாஸா! சோதிடம் பார்க்கும் என்னிடமே சோதனையா என்று தன் ஞானக் கண்ணால் அறிந்து..

அலட்சியப் புன்னகையுடன் அவர் குறித்து கொடுத்த நேரத்தில் நாஸா துவங்கிய எல்லா பரிசோதனைகளும் 100% சதவீத வெற்றியைப் பெற்றன! அகமகிழ்ந்தது நாஸா! உடனடியாக நாஸா நாடி ஜோதிடப் பிரிவு என்ற ஒரு பிரிவை தொடங்கி அதற்கு சேர்மனாக நார்மனை நியமிக்க முடிவெடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதலைக் கூட வாங்கி விட்டனர்.

அந்தோ பரிதாபம் இதை எல்லாம் அவர்கள் முடிவு செய்தது ஒரு ராகு காலத்தில்!! அவர்களுக்கு இதை குறித்துக் கொடுக்க தான் அங்கு நார்மன் போன்ற ஒரு ஜோதிட வல்லுநர் இல்லையே! ஆனால் நார்மன் இதை வேறு விதமாக சமாளித்தார்! தான் ஒரு மாபெரும் நாடி ஜோதிட ஆராய்ச்சிப் புதினம் எழுதும் பணியில் இருப்பதாகக் கூறி அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.

அப்படி என்ன புத்தகம் அது! தெரிந்தால் நீங்களும் வியப்பின் (அட கீழே விழுந்துடாதிங்கப்பா) முன் ஜென்மங்களில் இந்திய அறிஞர்கள் மற்றும் வரலாற்று தலைவர்கள் தங்களது மறுபிறப்பில் எங்கு பிறந்தார்கள் என்ற அரிய ஆய்வில் ஈடுபட்டிருந்தார்! அந்த புத்தகத்தின் பெயர் THE 7 BIRTHS.. by NORMON

இந்திய நாட்டில் ஏழேழு ஜென்மங்கள் என்று நாம் சொல்வோம் அல்வா! அதே தான்! அவரது ஆராய்ச்சியில் பல்வேறு கொடும் உண்மைகள் வெளி வரத் துவங்கின! ஆம்! நமது ஆரிய பட்டர் தான் 7வது ஜென்மத்தில் அமெரிக்காவில் தாமஸ் ஆல்வா எடிஸனாகப் பிறந்தார் என்று அறிந்தார். வீர சிவாஜி தான் மறு பிறப்பில் ஜார்ஜ் வாஷிங்டன்..

தெனாலி ராமனே மறுப்பிறப்பில் ஹென்றி ஃபோர்டு, வால்மீகி தான் ஐன்ஸ்டீன் போன்ற அரிய உணமைகளை கண்டு அறிந்தார். இவை யாவுமே டிரம்புக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்நிலையில் செங்கிஸ்கான் தான் இந்த ஜென்மத்தில் டிரம்ப்பாக பிறந்துள்ளார் என்னும் அப்பட்டமான உண்மையையும் கண்டறிந்தார்!

நார்மனுக்கு இந்தியாவில் உயர் பதவி தந்தவர் ஒரு கர்ம வீரர், வாழும் வீர சிவாஜி என மக்கள் போற்றும் தலை சிறந்தப் பிதாமகர் என்றறிந்து நாஸாவும் வியப்பின் உச்சி.. (யெஸ் அதே தான்) ஆகவே தான் டிரம்ப் உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார். திறமை வாய்ந்த ஒரு அமெரிக்கரை அழைத்து பதவி தந்த அந்த மாவீரரின் பண்பு உலகில் யாருக்கு வரும்! நார்மனுக்கு இவ்வளவு அழுத்தம் தந்தும்..

அவர் அமெரிக்காவுக்கு நேரம் குறித்து தருவதில் நேர்மையாக செயல்பட்டார். தற்போது கூட சுனிதா வில்லியம்ஸ் சென்ற பயணம், அதில் ஏற்பட்ட சிக்கல் அனைத்தையும் களைந்தது அய்யா நார்மன் அவர்களே! மீண்டும் அவரை நாஸாவுக்கு வந்து பொறுப்பேற்கச் சொல்லி தினமும் 30 நிமிடங்கள்..

நார்மன் காலில் விழுந்து கெஞ்சுகிறது அமெரிக்கா! ஆனால் நார்மன் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்தியா தான் எனக்கு வாய்ப்பளித்தது! என்னால் இனி அமெரிக்கா வரமுடியாது! இனி இந்தியா தான் எனது தேசம், இது எனக்கு ஞானமளித்த மெய்ஞான பூமி, தெய்வீகம் நிறைந்த திருநாடு.

அறநெறிகள் வழுவாது ஆன்மீக வழி செல்லும் அற்புத மாமனிதர் ஒருவரின் ஆசியுடன் இங்கு நான் வாழ்கிறேன். உங்கள் சலுகைக்காக நான் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் ஆம் பின்னால் இருந்து குத்தும் பழக்கம் பிதாமகர் வளர்ப்பிலேயே கிடையாது. எங்களுக்கு சண்டை வராது..

சண்டை போடவும் தெரியாது.. நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் மீறி எங்களிடம் திரும்பத் திரும்ப மோதினால் உங்கள் டிரம்ப் என்ற முன்ஜென்ம செங்கிஸ்கானிடம் போய்ச் சொல்லுங்கள் அணு ஆயுதங்களை நீங்கள் குவித்து வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் செய்வினை வைத்தால்..

அமெரிக்கா உலக வரைபடத்தில் இருக்காது! இந்த நார்மன் நாள் குறித்துவிட்டான் என்றால் அந்த அமெரிக்க கண்டமே கண்ட மேனிக்கு கண்டமாகும்.! கன்னா பின்னான்னு சின்னாபின்னமாகும் இது என் மாமியா டென்வர் டெய்ஸி மீது சத்தியம் என்று ஆக்ரோஷ ஆவேசத்துடன் தெரிவித்தார்.

❌ நார்மனின் இந்த அப்நார்மல் அறிவிப்பால் ஐநா & நாஸா மட்டுமின்றி பெண்டகனும் அரண்டு போய் உள்ளது!! ❌

Sunday, 11 May 2025

அம்மா 💖

#பூமிக்கு_வந்த_தெய்வம்

நெடுநாட்களாக மழலைச் சத்தம் ஒலிக்காத வீட்டில் வந்து பிறந்த முதல் பிள்ளை நான்! அந்த ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி வெள்ளத்.. இல்லை சுனாமியில் ஆனந்தமாக மூழ்கினேன். எனக்குப் பிறகு மூன்று பிள்ளைகள் பிறந்தாலும் ‘தல’ நான் தான். இந்த ஸ்பெஷல் கேட்டகிரியே எனது தனி அடையாளம்!

எனக்கென்று சிறப்பு உணவுகள், எதை பங்கு பிரித்தாலும் அதில் என் பங்கு சற்று அதிகம். எல்லா விஷயங்களிலும், விசேஷங்களிலும் வீட்டில் எனக்கே முன்னுரிமை என்று கொண்டாடித் தீர்த்தனர். தல என்றாலே தமிழ்நாட்டில் எப்போதும் கொண்டாடி மகிழ்வது வழக்கம் அல்லவா.!

ஆமாங்க நெடுநாள் கழித்து பிறந்த பிள்ளை என்றால் தாய் மகிழ்வது இயல்பு தானே என்பவர்களுக்கு இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட்.. ஆம் என்னைப் பெற்றெடுத்த தாய் வேறு என்னை வளர்த்த தாய் வேறு! என்னை அன்புச் சுனாமியில் மூழ்கடித்த அன்னை எனும் பெருமை தனம் அம்மாவுக்கே!

என்னைப் பெற்ற அன்னையின் பெயர் ‘ரேணுகா’.. தனம் அம்மாவிற்கு ஒரு விபத்தில் கருப்பையை நீக்கியது அப்பா ரேணம்மாவை மணந்தது எல்லாம் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்துவிடலாம்.. எங்கள் வீட்டில் இரண்டு அம்மாக்களும் சேர்ந்தே வாழ்ந்தனர்! இது பலருக்கு வியப்பைத் தந்தது!

தனம் அம்மாவிற்கு குழந்தைகள் என்றால் அவ்வளவு ப்ரியம். அதனால் தான் ரேணம்மா கருவுற்ற போது தானே கருவுற்றது போல உணர்ந்தார். அவரை கண்ணாடிப் பொருள் போல கையாண்டார். வேளா வேளைக்கு சத்தான உணவு, மருந்து மாத்திரை என்று ஒரு செவிலியர் போல சேவை செய்தார்.

ரேணம்மா சுகப்பிரசவம் முடிந்து கண் விழித்த மறு நொடி பிறந்து சில மணி நேரங்களே ஆன என்னைத் தூக்கி தனம் அம்மாவின் கைகளில் இந்தாங்க உங்க மூத்த பிள்ளை என்று தந்த நெகிழ்வான கணத்தை தனம் அம்மா சாகும் வரை எங்களிடம் நன்றியோடு சொல்லிக் கொண்டே இருந்தாள்.

இதே தான் அடுத்த மூன்று பிள்ளைகளுக்கும்! நன்றாக ஆடும் பேட்ஸ்மேனுக்கு சிங்கிள் ரன் எடுத்து ஸ்டிரைக் தருவது போல ரேணம்மா சிங்கிள் ரன் எடுத்து எதிர் முனைக்குப் போய் தனம் அம்மாவை ஆடவைத்தார். அம்மா செஞ்சுரிகள் மட்டுமின்றி நாட் அவுட்டாகவும் இருந்தார்! ரேணம்மா தான் அவுட் ஆனார்.

இளமையின் உச்சமான 33 வயதில் புற்றுநோய் என்னும் மந்தி ரேணுகா என்ற மாலையை பிய்த்தெறிந்தது. அம்மா இறக்கும்போது எனக்கு வயது 10 தம்பிக்கு 7 தங்கைக்கு 5 கடைசி தம்பிக்கு ஒண்ணே கால் வயது! அப்பா நிலை குலைந்து போனார். எங்களுக்கு எந்த வலியும் இல்லை!

ஏனெனில் தனம் அம்மா இருக்கிறாரே! வாழ்க்கையில் அந்த இடத்தில் இருந்து நிலை குலையாது எங்களை கட்டிக் காக்க ஆரம்பித்தார் தனம் அம்மா! முன்பைக் காட்டிலும் அன்பாக, அதீத வைராக்கியமாக எங்களை வளர்க்க ஆரம்பித்தார். தனம் அம்மா எழுதப் படிக்கத் தெரியாதவர். படு சிக்கனமானவர்.

தரையில் சிறு கடுகு கிடந்தாலும் அதை பொறுக்கி தூர எறியும் வரை அவருக்கு பொறுக்காது! வீட்டை பளிச்சென்று வைத்திருப்பார். சமையலறைக்குள் வந்தால் அங்கு சமையல் நடந்த தடமே இருக்காது. பொருட்களை அடுக்கி வைப்பதில் துணிகளை மடித்து வைப்பதில் முதுகலை பட்டம் பெற்றவள்!

அம்மாவுக்கு சமையலில் அற்புதமான கை மணம்! எல்லா வீட்டு அம்மாவும் அப்படித்தானே என்பவர்களுக்கு.. என் அப்பா ஒரு நளமகராஜா, அந்த வசிஷ்டரின் வாயால் மாதந்தோறும் பிரம்மரிஷி பட்டம் வாங்குவது MA பொலிட்டிகல் சயின்ஸ் பட்டம் வாங்குவது போல மிகவும் எளிதானது அல்ல!

அப்பாவிற்கு ஒரு கல் உப்பு கூடினாலும். மசாலா கலவை சரியாக கலக்காவிட்டாலும், காரம் சிறிது குறைந்தாலும், இனிப்பு அளவாக இல்லாவிட்டாலும் தெரியும் ஷார்ப் நாக்கு! அவருக்கு சமைக்கும் சமையலை ருசி பார்த்து ஓகே செய்யும் டேஸ்ட் செக்கர் நான் தான்! எங்கள் பாட்டி பெயர் ருக்மிணி!

அவரும் சமையல் கலையில் வித்தகர்! அப்பா உணவினை விரும்பி ருசிப்பதை சொல்லி வியப்பவர். ஆனால் நான் பிறந்து வளர்ந்த பின்பு நீ உன் அப்பாவை தூக்கி சாப்பிட்டுட்டே என்பார். அந்தளவு அப்பாவின் கொடை எனக்கும் இருந்தது. இந்த ருசி பார்க்கும் குடும்பத்திற்கு அம்மா சமைத்தார்.

ஒரு இட்லிக்கு மூன்று சட்னி இரண்டு சாம்பார், கறிக்குழம்பும் இரண்டு வகை, ரசம் இரண்டு என எல்லார் ருசியையும் கவர் செய்துவிடுவார். தோசை வார்த்தாலும் எனக்கு மெத்தென்று, தம்பி பாலுவுக்கு மொய் மொய் தேசை (நெய் தோசை) உமாவுக்கு வீட்டு தோசை அப்பாவுக்கு முறுகல்னு வார்ப்பார்.

எல்லாரும் சாப்பிட்ட பிறகே சாப்பிடுவார். தன் வாழ்நாளில் எங்களுக்கு முன்பு அவர் சாப்பிட்டதாய் வரலாறு, புவியியல் எதுவுமே இல்லை! 98 சதவீதம் இரவிலும் பழைய சோறு (நிறைய சோறு இருக்குடா கண்ணு வேஸ்ட் ஆகிடும்) என்றபடி சுண்ட வைத்த குழம்பு, மட்டை ஊறுகாய் வைத்து..

அம்மா சாப்பிடுவதை கண்களில் நீர் வழிய பலமுறை பார்த்து இருக்கிறோம். வறுமை எங்கள் வீட்டில் ஒரு மாமாங்கம் குடி இருந்த காலத்திலும் அம்மா எங்களுக்கு செய்தது பெற்ற தாய் கூட செய்திருக்கமாட்டாள். போன ஜென்மத்தில் நீங்கள் ஏராளமான புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும்..

இப்படி சொல்வது எங்கள் எல்லா உறவினர்களும்! இந்த அம்மாவிடம் நாங்கள் மகிழ்ந்திருந்த காலம் எத்தனை அழகானது தெரியுமா! வீட்டில் மின்சார வசதியே இல்லை! சிம்னி விளக்குதான், மழை பெய்தால் ஒழுகும் ஓட்டு வீடு, அடுப்பு சில்லென்று இருக்கும் அடிக்கடி சமைக்காததால்!

ஆனால் எங்கள் மகிழ்ச்சிக்கும், உற்சாகத்திற்கும் அளவே இருக்காது! கூரையில் இருந்து மழை நீர் ஒழுக அதன் தாளத்திற்கு ஏற்ப பானையில் நான் தாளம் போட தம்பி தங்கைகள் பாட கடைசித் தம்பி ஆட.. வறுமையை எங்கள் வளமான குரலால் வெட்கித் தலைகுனிய செய்திருக்கிறோம்.

அம்மாவிற்கு தடித்த நாக்கு சில தமிழ் வார்த்தைகளை அவர் வேடிக்கையாக உச்சரிப்பார். தெனாலி படத்தில் தெனாலி என்ற பெயரை மாற்றி உச்சரிக்கும் ரமேஷ் கண்ணா போல லாடனேந்தல் என்னும் ஊர்ப் பெயரை லாடனந்தூரு, லாடனாந்து, லாடடனந்தலு என்று விதவிதமாக உச்சரிப்பார்.

அம்மாவிற்கு கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தோம்! அதில் தங்கை உமாவின் பங்கு தான் அதிகம்! அப்போது அவள் அறிவொளி இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்தாள்! தனம் என்ற மூன்றே எழுத்தை அம்மா வரிசை மாற்றி தம்ன, னதம், ம்தன என்று திணறுவதை ரசிப்போம்.

அம்மாவை ஆங்கிலத்தில் கையெழுத்து போட முயன்றது எல்லாம் வின்னர் படக் காமெடியை மிஞ்சும்” போங்கடா எனக்கிந்த இங்கிலிபீசே வேண்டாம் என்று அன்றைக்கே “இங்கிலீஷ் தெரியாது போடா” என்றவள். அம்மா சொல்லும் சில வார்த்தைகளின் அகராதி கீழே..

மிடிமிடிக்கி, மிடிக்கிரி (மிமிக்ரி) சர்டிபிட் (சர்டிபிகேட் கண்டினிட்டு (கண்டினியூட்டி) ப்ரேஸ் (ப்ரைஸ்) தஞ்சாலூர் (தஞ்சாவூர்) சிவசெங்க (சிவகங்கை) கொத்திக்கிறாஙக (அடிச்சிக்கிறாங்க) செருப்பு தொட்டுக்கிட்டு (போட்டுகிட்டு) இதுமட்டுமின்றி நடிகர் தேங்காய் சீனிவாசன ஸ்டைலில்..

அச்சினி புல்லோம்மா, முர்தாரி, {பாலி, குமரி என் தம்பிகளின் பெயர்கள்}என்று சொல்லும் பல வார்த்தைகள் இன்னும் எங்கள் நினைவுகளில். அம்மாவின் சமையல் பற்றி 10 மஹாபாரதம் அளவுக்கு எழுதலாம்! அசைவ சமையலுக்கு 10 இராமாயணம் அளவுக்கு எழுதலாம்! அப்படி ஒரு பக்குவம்!

அம்மா போடும் ஆம்லெட் ஒரு புலி சார்புக் குறியீடு தரும் லெவலுக்கு இருக்கும். அப்பா பிற்காலத்தில் இந்த அம்மாவை வளர்ப்பு பிள்ளைகளான நாங்கள் கைவிட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து எங்கள் வீட்டை அம்மா பெயருக்கு எழுதி வைத்துவிட்டார். எங்கள் யாருக்குமே பங்கு கிடையாது!

அப்பா இறந்த ஒரு வருடத்திலேயே தம்பி பாலு வாங்கிய கடனுக்கு அவனை கடன்காரர்கள் நெருக்க கொஞ்சமும் யோசிக்காமல் அந்த வீட்டை விற்கப் போகும் போது தான் அப்பா இப்படி எழுதி வைத்தது அம்மா உட்பட எங்கள் அனைவருக்கும் தெரியும்! அம்மா என்னைப் பார்த்தார்!

ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டார் “என்னடா சொல்ற பெரியவனே வீட்டை வித்துடட்டுமா” நான் பிரமிப்புடன் வார்த்தைகளின்றி சரியென்று தலையசைத்தேன். என்ன ஒரு பெண் இவள்! இன்னொருத்தி பெற்ற 4 பிள்ளைகளுக்காக தனது சுக, துக்கங்கள், சொந்த, பந்தங்களைத் துறந்து..

கணவனும் இறந்து அவர் அவள் பெயருக்கு எழுதிய சொத்தை வீட்டிற்கு மூத்தவன் என்பதால் என் அனுமதி கேட்டு நிற்கிறாளே! இவள் தியாகத்தை விடவா பெரிது ஒன்று இருக்கப் போகிறது.. நம் தம்பி பட்ட கடனுக்கு தானே விற்கிறார், இதில் போய் தடை சொல்வது நியாமில்லையே..

என பலவாறு எண்ணங்கள் கலைடாஸ் கோப் வண்ணங்கள் போல மனதிற்குள் சுழன்றன. ம்தன என்று குழப்பத்தில் அவள் இடும் கையெழுத்து அன்று தனம் என்று மிக அழகாக அந்த பத்திரத்தில் இடப்பட்டு இருந்தது. என் தலையைக் கோதி “விடுடா நீ நிறையா சம்பாதிப்பே பார்த்துக்கலாம்”

அன்று அந்த மந்திர வார்த்தைகள் அம்மாவின் விரல் வழியாக என் உடலுக்குள் புகுந்ததை நான் மட்டுமே உணர்வேன். பெரிய லெக்சர் இல்லை, அறிவுரைகள் இல்லை, அழுகாச்சி இல்லை, புலம்பல்கள் இல்லை அம்மாவின் வைராக்கியத்தை இம்மியும் பிசகாமல் எனக்குள் அப்படியே கடத்திவிட்டாள்!

அம்மாவின் கடைசி காலத்தில் ஆறு மாதங்கள் அவருடன் இருக்கும் வரத்தை இறைவன் எனக்களித்து இருந்தான்! ஆயினும் அவருக்கு செய்ய வேண்டிய சில கடமைகளை பல நிர்பந்தங்கள் காரணமாக நான் செய்ய முடியவில்லை! அதில் என் தவறு ஏதுமில்லை என்றாலும் உறுத்தல் உள்ளது!

எங்கோ பிறந்து, அப்பாவை மணந்து அவர் சிரித்தால் சிரித்து அவர் அழுதால் அழுது அவருக்குப் பின் அதே இடத்தில் பிள்ளைகளுக்காக அதை தொடர்ந்து தனக்கென்று ஒரு வாழ்வு வாழாமல் எங்களுக்காகவே வாழ்ந்து மறைந்தாள்! தெய்வங்கள் பூமிக்கு வருவதில்லை என யார் சொன்னது!🩷

Tuesday, 8 April 2025

🍯 யூடியூப் ரிவ்யூஸ்

#வேற_லெவல்

தமிழ்நாடு முழுவதும் சின்ன சந்துகளில், தெரு திருப்பங்களில், சாலையோரங்களில், ஹைவேஸ்களில், ஏராளமான உணவகங்கள் ‘லொகேட்’ ஆகியிருக்கின்றன! அந்தக் கடைகளின் ‘ஆம்பியன்ஸ்’ செமையாக இருக்கிறது! எல்லா கடைகளிலும் சோறும் & குழம்பும் விதவிதமாக கிடைக்கின்றன!

கிட்டத்தட்ட 25 முதல் 100 வருட பாரம்பரியம் இருப்பதாக அனைத்து ஓட்டல் காரர்களுமே சொல்கிறார்கள்! 20 அயிட்டங்களுடன் (உணவு வகைகள் தாங்க) அன் லிமிடெட் சைவச் சாப்பாடு கிடைக்கிறது! 2 வகை சாம்பார், 2 வகை வத்தக் குழம்பு, 2வகை பொரிச்ச குழம்பு, கூட்டு, பொரியல், ரசம் எல்லாமே பிரமாதமாக இருக்கிறது!

பாகற்காய் கசக்கிறது! பாயாசம் இனிக்கிறது! இவையெல்லாம் ஜஸ்ட் ₹250க்கே கிடைக்கிறது! பிளாட்பாரங்களில் ₹50க்கு 5 வகை சாதங்கள் கிடைக்கிறது! ₹10 கூடுதலாக தந்தால் ஒரு அவிச்ச முட்டையும் கிடைக்கிறது! இந்தக் கடைகளையெல்லாம் ஒரு அக்காவோ, அம்மாவோ, அத்தையோ, பாட்டியோ நடத்துகிறார்கள்!

இதில் மட்டும் 100 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கே கிடைத்துள்ளது பெருமையாகும்! அசைவ உணவுகள் அனைத்துமே ‘அல்டிமேட்’டாக இருக்கின்றன! கறிகள் ‘டெண்டராகவும்’ ஜுஸியாகவும் வெந்து இருக்கிறது! டேஸ்ட் எல்லாம் ‘தட்டிக் காயப் போடுது! பிரியாணிகள் ‘கொலமாஸாக’ இருக்கிறது.

அதிகாலை 5 மணிக்கே இட்லியும் குடல் குழம்பும் கிடைக்கிற கடைகள் மொத்தம் 96 இருக்கின்றன! அதில் தொண்ணூற்றி ஐந்தே முக்கால் கடைகள் ஈரோட்டிலேயே இருக்கின்றன! அந்தக் குடல் கறியின் டெக்ச்சரே நமது நாக்கில் ரப்ச்சர் உண்டாக்குகிறது! அந்தக் குழம்பின் ஃப்ளேவரை நம் கண்ணில் நுகரமுடிகிறது!

ஒரு அன்லிமிடெட் சாப்பாடுக்கு ₹700 முதல் ₹1000 வரை வாங்கிக் கொண்டு படுக்கும் பாய் போல தலைவாழை இலை விரித்து அதில் நடப்பன, பறப்பன, நீந்துவன, ஊர்வன என எல்லா அசைவ வகை உணவுகளிலும் தலா 4 வகைகளை சமைத்து இலைமீது சமமாக படுக்கப்போடும் சமத்துவபுரமான மெஸ்களும், தோப்புகளும்..

கொங்கு மண்டலம் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன! தடுக்கி விழுந்தால் நாட்டுக் கோழி விருந்துக்கடைகளிலும் தடுமாறி விழுந்தால் குடில் போன்ற தாபாக்களிலும் விழலாம்! சூரியன் உதிக்கும் முன் அதிகாலை 4 மணிக்கு சுடச்சுட ஆயிலில் பொரிச்ச ஆயுள் தராத புரோட்டாவும் மட்டன் குழம்பும் கிடைக்கின்றன!

மதுரையிலும் சேலத்திலும் அர்னால்டு போன்ற ஜிம் பாடியில் யாரையேனும் பார்த்தால் 99% அவர் புரோட்டா மாஸ்டராக இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! தினமும் அவ்வளவு புரோட்டா மாவு பிசைஞ்சு, புரோட்டா வீசுனா எவரும் அர்னால்டு போன்ற பாடி ஆகிடலாம்! அடுத்து இரவு தள்ளுவண்டிக் கடைகள்!

அங்கே இட்லி கறிக் குழம்பு, சப்பாத்தி குருமா, முட்டை தோசை, எஸன்ஸ் தோசைகள் லட்சகணக்கிலும், புரோட்டா & சால்னா, ஆம்லெட், ஆஃபாயில் கோடிக்கணக்கிலும் விற்பனையாகின்றன! சேலைகளில் கூட இத்தனை ரகங்கள் இல்லை தோசைகளில் 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் இருக்கிறது!

அதற்கு 5 முதல் 8 சட்னிகள் தரப்படுகிறது! முட்டை / கறி தோசையே 22 வகைகளில் கிடைக்கிறது! மூளையோடு முட்டை மசாலா, மட்டன் மாங்காவோடு ஈரல், குடல் ஃப்ரையுடன் பிச்சு போட்ட கோழின்னு சாப்பிடுபவர்களின் தட்டு ஓவியர்களின் பேலட் பலகையில் கலைந்து கிடக்கும் வண்ணங்கள் போல காட்சியளிக்கிறது!

கடைகளில் விதவிதமான காம்போக்கள் கலந்து காணப்படுகின்றன! அவையெல்லாம் இங்கே ‘மஸ்ட் டிரை’ உணவாகவோ அல்லது அந்தக் கடையின் ‘சிக்னேச்சர்’ டிஷ்ஷாகவோ இருக்கிறது! திண்டுக்கல்லின் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் ஒரு பிரியாணிக் கடை இருக்கிறது! எல்லாருமே 50 வருடப் பாரம்பரியத்தை கடந்து இருக்கிறார்கள்!

அநேகமா திண்டுக்கல் பூட்டை வாங்காத கடைகள் இந்த பிரியாணிக் கடைகளாகவே இருக்கலாம்! ஏன்னா எந்நேரமும் திறந்திருக்கும் இந்தக் கடைகளுக்கு கதவுகளே இல்லை! கிராமத்து சந்தைகளில் அமைந்துள்ள சாப்பாட்டுக் கடைகளில் சந்தைக்கே வராதவர்களும் அங்கே வந்து சாப்பாட்டுக்கு காத்திருக்கின்றனர்!

காலை 6 மணி அய்யர் கடை, படி இட்லி அய்யங்கார் கடை, கோனார் மெஸ், முதலியார் இட்லிக் கடை, சவுராஷ்டிரா பொங்கல் கடை, செட்டியார் வடைக்கடை, ஆசீர்வாதம் வடைக் கடை, ஈவினிங் பஷீர் பாய் பிரியாணிக் கடைன்னு சில மணி நேரக் கடைகளிலும் கூட்டம் சாதி, மதங்களை மறந்து சமத்துவமாய் நிற்கிறது!

கென்யாவின் மாஸிமாரா காடுகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கில் இடம் பெயரும் காட்டு மாடுகள் போல மதுரையில் இருந்து நத்தம் சென்று பொரிச்ச புரோட்டா சாப்பிடுபவர்களும் சேலத்திலிருந்து ஓமலூர் சென்று களி & கறி சாப்பிடுபவர்களும் திண்டுக்கல் சென்று பிரியாணி சாப்பிடுபவர்களும் பெருகிவிட்டனர்!

இட்லி, பணியாரம், ஆப்பம், இடியாப்பம் துவங்கி உப்புமாவுக்கு கூட சிறந்த உணவுகள் ரிவ்யூ யூடியூபெங்கும் கொட்டிக் கிடக்கின்றன! வடை, பஜ்ஜி, சாட் அயிட்டங்களுக்கு கூட அமர்க்களமான ரிவ்யூ வீடியோக்கள் உலா வருகின்றன! களி & கறிக்குழம்பு, சோறு & மீன் குழம்பு, பிரியாணி & சிக்கன் குழம்புன்னு..

உலகத்தின் எல்லா கடைகளிலும் சாப்பிடும் ரிவ்யூவர்கள் சொல்லும் ஒரே யூனிஃபார்ம் வார்த்தை.. டேஸ்ட் ‘வேற லெவலில்’ இருக்கிறது! இங்கே உணவு ரிவ்யூ என்பதே பெரும் க்யூவில் இருக்கிறது! ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்லமுடியும்….

சுகாதாரத்துறை அதிகாரிகள் சற்று நேரம் ஒதுக்கி இந்த யூ டியூப் சானல்களை பார்த்து அந்த ஓட்டல்களுக்கு நேரில் ஆய்வுக்கு போனால் அபாரதமே பல கோடிகள் நம் அரசுக்கு வரலாம்! அப்போது தெரியும் இந்தக் கடைகளின் தரம் “வேற லெவல்” என்பது!

{குறிஞ்சி பூத்தாற் போல சில நல்ல கடைகளும் இந்தப் பட்டியலில் பெருங்கடலில் கரைத்த பெருங்காயமாக இருக்கின்றன}

Sunday, 6 April 2025

🍩 வடைக்காலம்

🍩 இது ஒரு வடைக் காலம் 🍩

மெதுவடை, உளுந்துவடை என்றும் செல்லமாக ஓட்டை வடை என்றும் அழைக்கப்படும் உளுந்தவடையைப் பற்றியே இப்பதிவு! கன்னடத்தில் உதின்ன வடே, தெலுங்கில் கரேலு, மலையாளத்தில் உளுனுவடா என்று அழைக்கப்படும் திராவிடப் பலகாரம் இந்த வடை! வட இந்தியாவில் பலப்பல வடை இந்தியர்கள் இருந்தாலும் இது தென்னிந்தியா அளவுக்கு அங்கு புகழிலும், புழக்கத்திலும் நஹிஹே!

இது நம்ம பிரவுடு கன்னடிகா உணவாகும்! பொதுவா உளுந்தில் செய்யப்படும் உணவு வகைகளுக்கு கர்நாடகா தனித்துவம் வாய்ந்தது. கர்நாடகாவின் மாதுர் பகுதியில் இது தோன்றியது (மாதுர் வடா இன்றும் ஃபேமஸ்) வரதராஜ முதலியார், மஸ்தான், பாட்ஷா இவர்களுக்கு முன்பே மும்பை வரை சென்று அங்கு கோலோச்சிய தென்னகத்து டான் தான் இந்த வடை நாயகன் & பாட்ஷா இரண்டுமே!

ஆரம்பகாலங்களில் (200 ஆண்டுகளுக்கு முன்பு) உளுந்து வடைகள் வைத்து செய்யப்பட்ட வடா பாவ் உளுந்தம் பருப்பு விலை ஏற்றத்தாலும், ஊற வைக்கும் நேரம் மிச்சம் என்பதாலும் வடா உருளைக் கிழங்குக்கு மாறியது! உளுந்து, உருளைக் கிழங்காக மாறினாலும் வடா என்னும் அந்தப் பெயர் மட்டும் மாறவேஇல்லை

இன்றைக்கும் மும்பையில் தினமும் சில கோடி ரூபாய்கள் டர்ன் ஓவர் கொடுக்கும் வணிகம் வடா பாவ் விற்பனையில் நடைபெறுகிறது! வெங்கடேஷ் கோலி வடா பாவ் என்னும் ஒரு நிறுவனமே ஆண்டுக்கு 200கோடி டர்ன் ஓவர் எடுக்கிறது! வாயைப் பிளக்காதீர்கள் அதில் 2 வடைகளை வைத்துவிடலாம்! டோர் லாக்! இப்படி மராத்தியர்களின் வாழ்வில் ஒன்றாகிப் போனது வடாபாவ்!

மகாராஷ்டிராவில் வடா பாவ் ராஜ்ஜியத்தை நிறுவிய மெதுவடை தமிழ்நாட்டுக்குள் உடுப்பி ஓட்டல்கள் வழியாக நுழைந்தது! பெயரில் மெது இருந்தாலும் அதிவேகமாக உணவு ரசனை மிகுந்த தமிழர்களின் வாய் வழியாக நுழைந்து அவர்கள் இதயத்தில் இடம் பிடித்தது! இது தமிழ்நாட்டிற்குள் வந்து கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிறது!

இட்லி, பொங்கல், உப்புமா, கிச்சடி என நம் எல்லா டிஃபன்களுக்கும் மியூச்சுவல் ஃபிரெண்டாக இருப்பது மெதுவடையே! அதிலும் புள்ளி வைத்தால் கோலம் என்ன கோலாகலமே போடும் தமிழர்கள் இதில் சாம்பார் வடை, ரசவடை, தயிர் & மோர்க்குழம்பு வடை, வடை கறி என்று பல அவதாரங்களை தமிழக கைப்பக்குவத்தில் உருவாக்கினர்.

பெரிய ஓட்டல்களில் மட்டுமே கிடைத்த இந்த வடை ரோட்டுக்கு வந்தது! பொதுவா ரோட்டுக்கு வந்துட்டான்னு சொன்னா அவன் தோத்துட்டான்னு அர்த்தம்! ஆனால் சாலையோர கடைகளுக்கு வந்த பின்பு தான் வென்றது மெதுவடை! கமல் விஸ்வரூபம் எடுக்கும் முன்பே தமிழகத்தில் மிக பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்தது மெதுவடை!

இன்றும் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாலையோரக் கடைகளில் மட்டும் தினசரி தயாரிக்கும் வடைகளின் எண்ணிக்கை நிச்சயம் 2 இலட்சத்தை தாண்டும்! இந்தளவு எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு வடை சுட தற்போது போட்டிக்கு சிலர் வந்துவிடாலும் முதன் முதலில் இந்த சாதனையைச் செய்தவன் நம்ம மெதுவடையே!

எலந்தைப் பழம் முதல் மாம்பழம் வரையான சைஸில் மக்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப ₹1 முதல் ₹12 வரை வடைகள் இன்றும் மதுரையில் உண்டு! கர்நாடகாவில் மட்டுமே சாலையோரக் கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உளுந்துடன் எந்தவித மாவையும் கலப்படம் செய்யாமல் அற்புதமாக வடை சுட்டுத் தருகிறார்கள்!

தமிழ்நாட்டில் எல்லாம் அசால்டாக மைதா, கார்ன், அரிசி மாவுகளை உளுந்துடன் கலந்து விடுவார்கள்! இது உளுந்துவடை பரம்பரைக்கு செய்யும் குலத் துரோகமாகும்! FTV மாடல்கள் போல கர்நாடக வடைகளை எல்லாம் பார்த்தவுடன் பிடித்துவிடும்! அந்த அளவுக்கு பஞ்சு போன்ற மென்மையும், மொறு மொறுப்பும் கலந்திருக்கும்!

நம்ம ஊரில் அப்படித் தேடினால் கூட கிடைக்காது! சில கர்நாடகக் கடைகளில் எல்லாம் ஹாலோ மெதுவடை கிடைக்கும்! வடை பார்க்க buffயாக இருக்கும் உட்புறம் அதிக மாவு இருக்காது! கடித்தால் வடகம் போல நாவில் கரையும்! மெதுவடை என்றால் அந்த மாவில் நிச்சயம் வெங்காயம், மிளகு, பச்சை மிளகாய் இருக்கவேண்டும்!

அதிலும் சின்ன வெங்காயம் இருப்பது சாலச் சிறந்தது பெங்களூரில் வெஜிடபிள் மெதுவடை என்னும் ஒரு வகை இருக்கிறது! சன்னமாக வெட்டப்பட்ட,இஞ்சி, தேங்காய் துண்டுகள், கேரட், கொத்தமல்லித் தழை எல்லாம் போட்டு அட்டகாசமாக டோநட் அளவில் இருக்கும்! நித்தியானந்தா ஆசிரம் இருக்கும் பிடதியில் இதை ருசித்துள்ளேன்.

பொதுவா இந்த மெதுவடைக்கு தேங்காய் சட்னி தான் சிறந்த காம்பினேஷன் என்றாலும் தக்காளி வெங்காயம் கார சட்னி, இஞ்சி மிளகாய் சட்னி, மல்லி புதினா சட்னி என பலவகை சட்னிகளை ஜோடியாக தந்த பெருமை மதுரைக்கு உண்டு! திண்டுக்கல் மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு கார குருமாவை கண்டுபிடித்து தந்துள்ளனர்.

அரைத்துவிட்ட சாம்பார், கோசுமல்லி, கொத்சு போன்ற குழம்பு வகைகள் இதற்கு சிறந்த ஜோடிகளாகும்! இதில் ஸ்பெசல் உளுந்து வடைன்னு ஒண்ணு இருக்கு உளுந்து மாவை கொஞ்சம் நறநறப்பா இறுக்கமா அரைச்சு வெஜிடபிள்ஸ் போட்டு அதிரசம் மாதிரி அகலமாக தட்டி மசால் வடை போன்ற ஸ்டெக்ச்சரில் போடுவாங்க!

அதை சூடாக ருசிப்பது தெய்வ லெவல்! கேரளாவில் பெரிய ஓட்டல்களில் வடை நன்றாக இருக்கும், சாலைக்கடைகளில் அதில் மைதா மாவைக் கலந்து சேட்டன்கள் சேட்டை செய்திருப்பார்கள்! ஒரு முறை ஆந்திராவில் மெதுவடையை கண்டதும் திகிலானேன் ஒரே ஒரு வடைக்குள் கரையோரத்தில் படுத்திருக்கும் முதலைகள் போல..

ஆறேழு சிவப்பு மிளகாய்கள் பொதிந்து கிடந்தன! “பின்னால்” வரும் விளைவுகள் என் கண்களிலேயே (தெ)எரிந்தது! உளுந்துவடை சூடாகவே சாப்பிட வேண்டிய ஒரு பொருளாகும்! அதை லேசாக சட்னியில் ஊறவிட்டு சூடு ஆறும்முன் சாப்பிடவேண்டும்! நம்ம திண்டுக்கல் குருமாவுடன் சூடான வடைகள் சாப்பிடுவது என்றால்..

அசால்டாக 1 டஜன் வடைகள் சாப்பிட்ட காலமெல்லாம் கண் முன் வந்து போகிறது! யானைக்கல் ஆசீர்வாதம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் சங்கர், பெரியார் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் வாசல் கேபிஎஸ் எதிரில், முனிச்சாலை, மேலமாசி/ வடக்கு மாசி வீதி சந்திப்பு என வடைகளை நாங்கள் வேட்டையாடி விளையாடியது எல்லாம் பரவசமே!

இந்த உளுந்திலேயே போண்டா, சீயம், கார போண்டா என மரு வைத்து மெதுவடை வகைகள் மதுரை பக்கம் கிடைக்கும்! சூடானஇட்லி/ சூடான குழைவான கிச்சடி/ சூடான உப்புமா/சூடான நெய் வெண் பொங்கலோடு, சூடான சாம்பாரில் ஊறிய மெதுவடையை சூடாகவே சாப்பிடுவதை நினைத்தாலே.. ஆஹா இதல்லவோ…🍩

Saturday, 5 April 2025

♠️♥️சூதாட்டம்

20 - 20

ஐபில் தொடர் என்பது ஒரு அப்பட்டமான அம்யூஸ்மெண்ட் & எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வாகும்! டாஸ், முதல் பேட்டிங், சேஸிங் இங்கு ஆடுகின்ற ஆட்டங்கள், ப்ளேயர்களுக்குள் நடக்கும் ஈகோக்கள், கேப்டன்கள் மாற்றம், அணி பயிற்சியாளர்களின் ஆக்டிங் ஆலோசனைகள், அணி உரிமையாளர்களின் நடத்தை..

கருத்து மோதல்கள், பேட்டிகள், மக்களிடம் பரப்பப்படும் செய்திகள், சோஷியல் மீடியா சப்போர்ட் என மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் அத்தனையும் பக்காவாக கதை, திரைக்கதை, வசனம் என திட்டமிட்டு எழுதப்பட்டவை! இந்தியாவில் IPL ஒரு பணம் காய்ச்சி மரம்! இந்த 18 ஆண்டுகளில் அது செழித்து வளர்ந்துள்ளது!

டிரீம்11, போக்கோ, சுபி போன்ற இணைய சூதாட்ட வணிகர்கள் தான் இப்போது ஐபிஎல்லின் மெயின் ஸ்பான்ஸர்கள்! எந்த ஐபிஎல்லை சூதாட்டம் என்றார்களோ இப்போது அதை சூதாட்ட கார்ப்பரேட்டுகள் தான் இதை கட்டி ஆளுகின்றனர்! இதன் ஆணிவேரை தேடினால் அகப்படும் நபர்கள் நாம் ஆச்சரியப்படும் அளவு புதியவர்கள் இல்லை!

இந்த ஆட்டம் உங்களை அடிமையாக்கலாம், இதில் நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம் பொறுப்புடன் விளையாடுங்கள் என்ற அறிவிப்பு வேறு! நாங்க ஏண்டா நடுராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும்? இதை இப்போ மின்னல் வேகத்தில் சொல்கின்றனர்! வாய்ஸை fast forward செய்த ஸ்பீடில் சொல்கிறார்கள் (suppi)

சூதாட்டம் மட்டுமின்றி இதன் வணிகம் மாநில வாரியாக விளம்பர தாரர்களை குறி வைத்து இழுக்கிறது! வறுத்த கடலை முதல் வாட்ச் வரை 4 வருடங்களுக்கு முன்பு தமிழக அளவில் டிவியில் வரும் விளம்பரங்கள் இப்போ IPL ஆட்டங்களிலும் வருகிறது! அந்தளவிற்கு IPL இந்தியாவில் மிக ஆழமாக வேர்விட்டு வளர்ந்து இருக்கிறது!

இதன் வணிகம் ஆதார கிரிக்கெட் ஆட்டத்தின் விதிகளையே மாற்றி பல புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது! ஸ்டார்டிஜிக் டைம், இம்பாக்ட் ப்ளேயர், வைடு பால் ரிவ்யூ, ஆடிக் கொண்டிருக்கும் வீரரை வெளியே அனுப்புவது போன்ற பல புதிய விதிகளை உருவாக்கியது IPL தான்! ஆட்டத்தின் சுவாரஸ்யத்திற்கு இங்கு எதுவும் நடக்கலாம்!

டென்னிஸில் மிக்ஸ்டு டபுள்ஸ் எனும் ஆண் & பெண் இரட்டையர் ஆட்டம் போல நாளை மிக்ஸ்டு லெவன்ஸ் அணிகள் வரலாம். ஆண் பெண் ஜோடி ஓபனர்களாக வரலாம்! ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தால் 10 ரன்கள் போனஸ் தரலாம்! ஆண்கள் வீசும் பந்தில் பெண் பேட்டர் சிக்ஸ் அடித்தால் அதற்கு 8 ரன்கள் தரலாம்!

செஸ் ஆட்டத்தில் ஒருபுறமிருக்கும் சிப்பாய் வெட்டுப்படாமல் எதிர் புறம் ராஜாவின் வரிசையைத் தொட்டுவிட்டால் மீண்டும் ஏற்கனவே வெட்டப்பட்ட பவர் உள்ள ஒரு காயை திரும்ப கொண்டு வருவது போல பவர் ப்ளேவில் ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை என்றால் அவுட் ஆன ப்ளேயரை ஒரு முறை திரும்ப அழைத்துக் கொள்ளலாம்!

மெய்டன் ஓவர்கள் வீசினால் 4 ரன்கள் போனஸ், பந்து மிடில் ஸ்டம்பை வீழ்த்தினால் 2 ரன்கள் போனஸ், ஒற்றைக் கை கேட்சுக்கு 3 ரன்கள் போனஸ் இப்படி எது வேண்டுமானாலும் நாளை நடக்கலாம்! மேன் ஆஃப் தி மேட்ச், உமன் ஆஃப் தி மேட்ச் பரிசுடன் ஜுவல்லரிகள் தரும் பிரேஸ்லெட், நெக்லஸ், செயின், பரிசாக வழங்கப்படலாம்!

சிக்ஸ் அடித்தால் சில்க் சாரி என்று உமன் பேட்டர்களுக்கு பட்டுப் புடவைகளை கூட பரிசாக வழங்கலாம்! டிவி ஆடியன்ஸுக்கு கேள்வி கேட்டு பரிசுகள் வழங்கும் நம் பண்டைய காலத்து சானல் பண்பாடும் காலங்காலமாக நடைமுறையில் உள்ளதால் பெண்கள் சீரியலைத் துறந்து விட்டு கிரிக்கெட் பார்த்து கதறிக் கதறி அழுது மகிழலாம்!

நான் இங்கு எழுதிய கற்பனைகளை காட்டிலும் வேறு ஐடியாக்களும் நாளை இதில் வரலாம்! அந்தளவுக்கு கிரிக்கெட்டை மாற்றுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை! ஒரு விளையாட்டு வணிகமானால் ப்ளேயர்களை விட ஓனர்கள் தான் அதனை தங்கள் விருப்பத்திற்கு ஆட்டுவிப்பார்கள்! இங்கே முதல் பேட்டிங், சேஸிங் விஷயமே அல்ல!

20 ஓவர்களும் இவர்களுக்கு டர்ன் ஓவர்களே! திட்டமிட்டு அதை செயல்படுத்துகிறார்கள்! பார்வையாளர்களான நாம் அதை ரசிக்க வேண்டுமே ஒழிய, IPLஐ தூக்கி தலையில் வைத்து கொண்டாடுவதோ அல்லது அந்த ஆட்ட நுணுக்கங்களை ஆராய்வதோ, மெனக்கெட்டு இந்த நாடகங்களை சிலாகிப்பதோ நம் கிட்னிக்கு டேஞ்சரானது👹

மஹான் கவுண்டமணி “பெரிய இடத்து மாப்பிள்ளை” படத்தில் ஜெயராமிடம் சொல்வாரே.. நீ டிரைவர்.. டிரைவர்.. டிரைவர்..

அதே போலத் தான் ஐபிஎல்லுக்கும் சொல்லலாம்.. நீ சூதாடி.. சூதாடி.. சூதாடி.. ♠️ ♥️ ♣️ ♦️

அம்புட்டுதேங்ங்… 💔

Monday, 31 March 2025

🧊❄️ ஜில்லென்ற காலம்

#ஏப்ரல்_கூல் (ஐஸ் & சர்பத்)

80களில் எல்லா பள்ளி வாசலில்களிலும் ஒரு ஐஸ்வண்டி நிற்கும்! விதவிதமான வண்ணங்களில் பெரிய பெரிய சர்பத் பாட்டில்களில் திரவங்கள் இருக்கும்! ஈரச்சாக்கில் சுற்றப்பட்ட பெரிய ஐஸ் பார் ஒன்று இருக்கும்! அந்த ஐஸை மரவேலை செய்பவர்கள் மரத்தை இழைக்கும் கட்டை போன்ற ஒரு கட்டையில் ஐஸ்கட்டியை விருட் விருட்னு துகள்களாக சீவி அதை ஒரு டம்ளரில் கொட்டுவார்கள்!

அதை நன்கு டம்ளரின் உட்புறம் அழுத்தி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என வண்ணமயமான இனிப்புக் கலவைகளை அதில் ஊற்றி நடுவில் ஒரு குச்சி செருகித் தருவார். உறைந்த வானவில் போல நம் கையில் ஏந்திய அந்த ஐஸை நம்மால் மறக்கமுடியுமா! அந்த ஐஸில் ஊற்றிய வண்ண இனிப்புகளை நாம் அன்னப் பறவை போல பிரித்து உறிஞ்சி மீண்டும் அதை வெள்ளை ஐஸாகவே ஆக்கிவிடுவோம்!

இதிலும் சேமியா போட்டுத் தரும் ஐஸ் இன்னுமொரு அற்புதம்! அந்த சேமியாவோடு ஐஸை சில்லென உறிஞ்சுவது தனி சுகம்! கண்ணாடி கிளாஸில் ஜப்ஸா விதைகள் போட்டு தரும் கலர் சர்பத்தும் அப்போ ஃபேமஸ்! நமக்கு அறிவுரை சொல்லுற எல்லாரும் இந்த ஐஸை சாப்பிடாதிங்க! சளி பிடிக்கும், காய்ச்சல் வரும், இதில சாக்ரீன் இருக்கு, தொண்டையில் சதை வளரும், ஆபரேஷன் செய்வாங்க,..

இப்படியெல்லாம் நம்மை பயமுறுத்தினாலும் நாம் அந்த ஐஸை தேடித் தான் போவோம்! அந்த ஐஸை கட்டையால் சீவும் போது தெறிக்கும் துகள்கள் முகத்தில் வந்து படுவது எனக்கு மிகவும் பிடிக்கும்! ஒரு குற்றாலச் சாரல் போல அது நம்மை குளிர்விக்கும்! ஐஸில் ஊறிய சேமியாவையும், ஜப்ஸா விதைகளையும் கடித்து ருசிப்பது ஒரு அலாதியான இன்பம்! இந்த ஐஸை சாப்பிட்டால் நம் உதடுகளில்..

வானவில் போல வண்ணச் சாயம் தெரியும்! நம் நலனில் அக்கறை உள்ள ஆசிரியர்களிடம் நாம் மாட்டிக் கொள்வோம்! தேவையில்லாத திட்டும் அடியும் கிடைக்கும்! பிற்பாடு பால் ஐஸ், மேங்கோ ஐஸ், ஆரஞ்சு, க்ரேப் என குச்சி ஐஸ் வண்டிகளின் காலம் துவங்கியது! அப்போது கப் ஐஸ், ball ஐஸ் கொஞ்சம் காஸ்ட்லி! வீட்டில் நமக்குத் தரும் தினசரி பாக்கெட் மணிக்கு அது கட்டுப்படியாகாது!

இந்த பால் ஐசுக்கும் ball ஐசுக்கும் வித்தியாசம் தெரியவே எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது! பால், சர்க்கரை, ஐஸ் மூன்றும் சேர்ந்து குச்சியில் செருகித் தருவது பால் ஐஸ்! சின்ன டென்னிஸ் பந்து போன்ற ஒரு டப்பாவில் கப் ஐஸ்க்ரீமை வைத்திருப்பது ball ஐஸ்! இதன் பிறகு பெரிய பெட்டி போன்ற மேல் நோக்கித் திறக்கும் ஃபிரிட்ஜுகளில் ரஸ்னா கலக்கி வைத்து கிளாசில் விற்பார்கள்.

இதிலேயே ஆரஞ்சு, பைனாப்பிள், லெமன், க்ரேப் போன்ற க்ரஷ் வகைகள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன! இதில் தனியிடம் பிடித்தது ரோஸ்மில்க்! அந்தக் கலரே அதை அருந்தச் சொல்லும்! அதன் ருசியும் வாசமும் எளிதில் எவரையும் வசப்படுத்தும்! பிறகு வந்தது பாதாம் மில்க் / கீர்.இதன் ருசியும் தனித்துவம் வாய்ந்தது! இப்படி ஐஸ் வண்டிகளில் துவங்கி க்ரஷ் வகைகள் வரை ஜில் காலமே!

இடையில் டியூப் ஐஸ் காலம் ஒன்று பேஜர் காலம் போல வந்து போனது! 25 பைசாவுக்கு மேங்கோ, க்ரேப் எல்லாம் ஒரு சாண் நீளத்தில் டியூப் போன்ற சாஷேவில் வந்தன! இது படிப்படியாக 50 பைசா 1 ரூபாய்னு வந்து அதன் பின்னே வழக்கொழிந்து போனது! அடுத்தது சர்பத் காலம்! சர்பத் கொஞ்சம் பெரியவர்களுக்கானது என்றாலும் அதை குடித்த பின்பு அதற்கும் ரசிகனாகிப் போனேன்!

அதிலும் நன்னாரி, ரோஸ், லெமன் போன்ற சர்பத்துகள் மிகவும் ருசியானவை! ஐசுக்கும், க்ரஷுக்கும் நடுவில் தனது தனித்த ருசியால் தாகம் தீர்த்தவை! 2 எலுமிச்சையை பிழிந்து ஐஸை நொறுக்கிப் போட்டு நன்னாரி எஸன்ஸ் 2 ஸ்பூன் ஊற்றிப் பிறகு மண்பானையின் நீர்விட்டு கலந்து தரும் சர்பத் தரும் இன்பம் இருக்கே அதெல்லாம் சொல்லில் அடங்காது! அதிலும் மதுரை ஜனதா, ஒண்டிப்புலி..

தஞ்சை குணங்குடி தாசன், சிவகாசி கண் மார்க் போன்றவை சர்பத் உலகில் தனித்துவமானவை! மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் துவங்கி மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுற்றுப்புறங்களில் புகழ் பெற்ற பல சர்பத் கடைகள் இருந்தன! நல்ல வெயிலில் வாடி வந்து “ஐஸ் அதிகமா போட்டு ஒரு சர்பத் போடுண்ணே” எனும் பலரது குரல்களை பரவலாகவும் பரவசமாகவும் காதில் கேட்க முடியும்!

இதிலேயே தண்ணீருக்கு பதில் சோடா ஊற்றி சோடா சர்பத்னு அஜீரணத்துக்கு ஒரு மருந்தை கண்டுபிடித்தவர்கள் பாண்டியர்கள்! ஒரு இட்லிக்கே 10 வகை சட்னிகள் கண்டுபிடித்த சிட்னியன்ஸ் சர்பத்திலும், இளநீர் சர்பத், நுங்கு சர்பத், ஜிஞ்சர் லெமன் சர்பத்துனு சர்பத்தில் பல வெரைட்டிகளை கண்டறிந்த எடிசன் ஆனார்கள்! எலுமிச்சையௌ இரண்டாக நறுக்கி நாரதர் கையில் இருக்கும்..

சப்ளா கட்டை போன்ற கட்டையின் தாடையை திறந்து அறுத்த எலுமிச்சையை அதில் வைத்து பிழிவது, சர்பத்தில் ஊற்ற மண் பானையில் நீர், எஸன்ஸ் ஊற்றிக் கலக்க பெரிய ஸ்பூன் பெட்டியில் இருக்கும் ஐஸ்கட்டியை உடைத்துப் போடுவது இதெல்லாமே இன்றும் நம் நினைவில் பசுமையாய் வந்து போகும்! இன்று கோக், பெப்ஸி போன்ற பிராண்டுகள் பாட்டில்களிலும், டின்களிலும் மலிந்து கிடக்க..

கார்ப்பரேட்டான இன்றைய ஜுஸ் கடைகளில் 100 விதமான பழரசங்களும், ஐஸ்க்ரீம் பார்லர்களில் 500 வெரைட்டிகளும் கிடைக்கின்றன! ஆனால் அன்று ஒரு குச்சிஐஸ், ஒரு ரோஸ்மில்க், ஒரு நன்னாரி சர்பத் தந்த நிறைவு இவை எதிலுமே இல்லை!

Sunday, 30 March 2025

🍖 தெலுங்கு ருசி

#ஆந்திர_விருந்து




என் உச்சி மண்டையில் சுர்ர்ருங்குது போல ஆந்திரக் காரமானது அதி’காரம்’ மிக்கது! ஆனால் ரசித்து ருசிக்கலாம்! தென்னிந்திய மக்களின் சைவ / அசைவ உணவுகளில் மிகப் பெரிய வித்யாசத்தை காண முடியாது! நல்ல காரத்திற்கு ஆந்திரா, தேங்காய் சேர்ப்புக்கு கேரளா, மெல்லிய இனிப்புக்கு கர்நாடகா என்று எல்லாமே தமிழக ருசிக்கு வெகு அருகில் ஒரு சில சிறு மாறுபாடுகளுடன் இருக்கும்!


சமீபத்தில் வைசாக் சென்று திரும்பிய போது பாரம்பரிய தினக் கொண்டாட்டம் என்ற பெயரில் பம்பரம் ஆடுவது, பட்டம் விடுவது போன்ற நமது பழைய விளையாட்டுகள் அங்கும் இருந்தது! முன்னாள் பம்பரச் சாம்பியனான எனக்கு பம்பரத்தைக் கண்டதுமே பரவசம்! நீள சாட்டையின் இறுதியில் முடிச்சிட்டு இறுக்கி அதை பம்பரத்தின் மீது நன்கு சுற்றி காற்றில் சுழற்றி கைக்கு இழுத்தேன்!


முதலிரண்டு முறையும் ஷிவம் துபே போல சொதப்பினாலும் 3வது முறை ஸ்ரேயாஸ் அய்யர் போல ஜம்மென்று என் உள்ளங்கையில் அழகாக ஒரு குருவி பறந்து வந்து அமர்ந்தது போல அமர்ந்தது! நண்பர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்! அடுத்து பட்டம் விடுமிடத்தில் பட்டதாரிகள் குவிந்திருக்க பட்டமே படிக்காத நான் கையில் பட்டத்தை ஏந்தி ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன்!


இந்த பாரம்பரியத் திருவிழாவின் மதிய விருந்தில் ஆந்திர மாநில பாரம்பரிய சைவ/அசைவ உணவு வகைகள் எங்களுக்காக காத்து இருந்தன! சைவம் பக்கம் டிராகன் படம் ரிலீசான தியேட்டர் போல கூட்டம் அலை மோதியது! அசைவம் பக்கம் Neek பட தியேட்டர் போல காற்றாடியது! டேபிளில் ரோஜா, சாமந்தி பூவிதழ்களைத் தூவி மேலே லேமினிட் போல பிளாஸ்டிக் ஷீட் விரித்திருந்தனர்!


ரசனையான அழகுடன் இருந்த டேபிளில் நம்ம ஊரு ஸ்டைலில் தலை வாழையிலை விரித்து.. பால தெலிகலு, (அல்டிமேட்டான அரிசி மாவு நூடுல்ஸ் பாயாசம்) நெல்லூர் மலாய் ஜாமூன், மட்கா பாதாம் ஜுன்னு என்று 3 ஸ்வீட்ஸ் (பால் கோவா போல பானையில் பாதாம் கோவா) சிக்கன் கைமா வடை, சுறா புட்டு, இறா வறுவல்னு மூன்று ஸ்டார்ட்டர்ஸ்! அத்தனையும் அனல் பறக்க பரிமாறினர்! 


முதல் உணவாக இலையில் ராகி களி பரிமாறப்பட்டது! என்னடா இது சிறையில் கைதிகளுக்கு தர்ற மாதிரி களி போடுறாங்கன்னு ஒரு விநாடி திகைத்தேன்! ஆந்திர உணவு பாரம்பரியத்தில் ராகி சங்கட்டி என்கிற களி ஒரு முக்கிய உணவு! நம்ம ஊரில் பருப்பு போல ராகி அங்கு தலையாய உணவு. அதற்கு தொட்டுக் கொள்ள அற்புதமான நாட்டுக் கோழி குழம்பினை சுடச்சுட ஊற்றினார்கள்! 


இரண்டு வகையான நாட்டுக்கோழி குழம்புகள் ஒன்று நாட்டுக் கோழி புலுசு, இன்னொன்று மாஜ்ஜிகா புலுசு இரண்டும் களியோடு சாப்பிட அமிர்தமாக இருந்தது! மட்டனில் காரசார கோங்குரா & மட்டன் பாலக்குரா(கீரையில் செய்த மட்டன்) பரிமாறினார்கள்! இவை அனைத்துமே களியோடு உண்ண களிப்போடு இருந்தது! அடுத்து விருந்தில் சிக்கன் புட்டா பிரியாணி பரிமாறப்பட்டது! 


2 ஆந்திர மாநிலங்களிலும் கோனசீமா பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, உலவுசாறு பிரியாணி, ராயலசீமா பிரியாணி, கல்யாணி பிரியாணி, கோங்குரா பிரியாணி, பீமாவரம் பிரியாணின்னு பல வகை பிரியாணி வகைகள் உண்டு! புட்டா பிரியாணி என்பது பிரியாணி தனியாகவும் பொரித்த சிக்கனுடன் அவித்த முட்டை சேர்த்து சமைப்பதாகும்! இந்த பிரியாணியில் சிக்கனுக்கு பதில்.. 


மீன், இறால் வகைகளை சேர்த்தும் சமைப்பார்கள்! இந்த பிரியாணியை தொன்னை, பனை ஓலை பெட்டியில் வைத்து பரிமாறுவாறுகள்! எங்களுக்கு புரசை இலையில் பரிமாறப்பட்டது! சூடான வெள்ளை சோற்றுடன் பண்டுகப்பா இகுரு என்கிற கார சார மீன் குழம்பும், சீப்பலு கொடிகுட்டு எனும் அயிலை மீனும் பரிமாறப்பட்டது! அருமையான ரசமும் எருமைத் தயிரும் நிறைவு!


இதில் முக்கியமாக சொல்லப்போனால் பாலதெலிகலு என்கிற பாயாசம்! தமிழக பால் பாயாசம், கேரள அடை பிரதமன், கன்னட ரவை பாயாசம் எல்லாவற்றிற்கும் சவால் விட்டது! அரிசிமாவை அவித்து முறுக்கு போல பிழிந்து கொதிக்கும் பாலில் வெல்லப் பாகு முந்திரி திராட்சையுடன் செய்யும் அமிர்தம் அந்தப் பாயாசம்! சுந்தர தெலுங்கர்கள் சுவையிலும் சுந்தரர்கள் என்பதே நெய்.. 


அடச்சே.. மெய்..

Monday, 10 March 2025

🐟 மீனாயணம் 🐟 🐠 🎏

#மீனாயணம் 🐟 🐠




பொதுவாக ஞாயிறு மீன் வாங்கி வருவதோடு என் வேலை முடிந்தது சமையல் எல்லாம்தம்பி தான்என்னிக்காவது ஒரு தவிர்க்க முடியாத வேளையில் அந்த டிபார்ட்மெண்ட்நம்ம கைக்கு வரும் அதுவும் அவர் விரும்பினால் மட்டுமேஞாயிறுகளில் சங்கராசீலாவாவல்ஊளி பாறைகட்டிக் காள இதில் ஏதாவது ஒன்று வாங்குவோம்


நண்டு வாங்கவே மாட்டேன்ஏன்னா எனக்கு நண்டு பிடிக்கவே பிடிக்காதுகடந்த 6 மாதங்களில் பொரித்த மீனுக்கும் குட்பை சொல்லியாச்சு ஆக இப்படி தென்றலாய்போய்க் கொண்டிருந்த வாழ்வில் சமைக்கும் வேலையும் வந்ததுநேற்றுக் காலையில்அயிரைவிரால்கணவாய் எல்லாம் வாங்கச் சொல்லி லிஸ்ட்..


கொடுத்தார் தம்பிஎன்னப்பா யாரும் விருந்துக்கு வர்றாங்களாஆமாம் நம்ம பள்ளிநண்பர்கள் தான் வர்றாங்க என்றார்நீ சமைக்கலியா என்றேன்இன்னிக்கு எனக்கொருசமையல் ஆர்டர் எப்படியும் அதை முடிச்சிட்டு வர மதியம் 12 ஆகிடும்சோறுரசம்எல்லாம் நான் கடையிலிருந்து கொண்டு வரச் சொல்லிட்டேன்


இந்த மீன்களை தான் சமைக்கணும் நீ அதைப் பார்த்துக்கோ என்றார்!  அப்புறம் எனக்குவேலை இருக்காதா என்னசில கஷ்டமான வேளையில் சமைக்கும் பணி எனக்குவருமுன்னு சொன்னேனே அது என்ன தெரியுமாஅயிரை & விரால் மீன்கள் வாங்குறஅன்று தான்!  ஏன்னா அதை கழுவுவதில் பொறுமையும்பக்குவமும் வேணும்


கணவாய் மீன் ரப்பர் பேண்ட் மாதிரி கட் பண்ணியே தந்துடுவாங்க பிரச்சனை இல்லைஅயிரை மீனுக்கு ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு மீன் மார்க்கெட் போய் எல்லாம்வாங்கிட்டேன்ஏன் அயிரைக்கு பாத்திரமுன்னா வரும் போதே 1 பாக்கெட் பாலை மீன்இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி விடுவேன்.! வீடு வந்ததும் அந்தப்..


பால் குடித்த மீன்கள் வயிற்றிலிருக்கும் மணல் துகள்களை கக்கிவிடும் அதை நீக்கி பிறகுமீனைக் கழுவ வேண்டும்ஒரு முறை இரு முறை அல்ல ஏழெட்டு முறைகடைசியாகஅதில் உப்பு போட்டு நுரை வர தேய்த்து மூன்று முறை கழுவ வேண்டும்எங்கள் வீட்டில்இதுக்குன்னே ஒரு மண்சட்டி உண்டு அதில் தான் மீன் கழுவுவோம்


குழம்பு வைக்கவும் ஒரு ஒரு மண்சட்டி இருக்கிறதுமண் சட்டியில் வைக்கும் மீன்குழம்புஒரு பங்ஷனுக்கு நாம் BMW காரில் போய் இறங்குவதற்குச் சமம்அடுத்து விரால் மீன்ஜெல்லி போல எப்பவும் வழவழன்னே இருக்கும்இதற்கும் கல் உப்பு போட்டு சட்டியின்உட்புறங்களில் கரகரவென அழுத்தாமல் உரசி எடுக்க வேண்டும்


கையெல்லாம் பிசு பிசுக்கும் இதுவும் ஒரு நான்கு முறைபெண்டு நிமிர்த்தும் வேலைகணவாய் மீன் கவலை இல்லை கட் செய்து வந்துவிட்டதுஅதுக்குன்னே கறிவேப்பிலைபுதினாபச்சை மிளகாய் சேர்த்து அரைச்ச மசாலா ஒண்ணு இருக்கு அதில் நன்குகணவாயை போட்டு பிரட்டி 15 நிமிடம் மேரினேட் செய்தாச்சு


அயிரை & விரால் மீன்களை ஒன்றரை மணி நேரத்தில் கழுவிவிட்டு  அடுத்த 10 நிமிடத்தில் சமையலும் துவக்கிவிட்டேன்மீன் குழம்பில் சேர்த்த விரால் மீன்கள் போகநண்பர்கள் வந்த பின்பு பொரிக்க மீதி மீன்களை ஃபீரிசரில் உறை நீச்சலில் வைத்தாச்சுஅயிரைவிரால் மீன் குழம்புவிரால் ரோஸ்ட்கணவாய் தொக்கு எனது சமையல்


மீன் குழம்பை அடுப்பில் வைத்துவிட்டு அது கொதிக்க காத்திருந்த போது தம்பி வீடுதிரும்பி என் டூட்டியை இன்சார்ஜ் எடுத்து என் ஷிஃப்ட்டை முடித்துக் கொள்ளச்சொன்னார்கணவாய் தொக்கை அடுப்பில் வைத்துவிட்டு போய் நல்லதொரு குளியல்போட்டு வந்து  சூடான ரசத்தை உறிஞ்சியபடி இப்பதிவை டைப் செய்கிறேன்!


அடுத்த 10 நிமிடத்தில் கணவாய் தொக்கின் நெடியும்அயிரைமீன் குழம்பு கொதிக்கும்நறுமணமும் நாசியைத் தாக்கியதுநண்பர்கள் வந்ததும் ஜில்லுன்னு நன்னாரி சர்பத்தந்துவிட்டு அரட்டையை துவக்கினோம்தம்பி ஃப்ரீசரிலிருந்து மீனை எடுத்து பொரிக்கதுவங்கியதும் அனைவரும் உணவு மேசைக்கு படையெடுத்தோம்!


மணக்க மணக்க அயிரை மீன் குழம்புபக்குவமான கணவாய் தொக்குபொரித்த விரால்மீன்தக்காளி ரசம் இதற்கெல்லாம் தனித்தனி காண்டங்கள் எழுதினால் படிப்பவர்கள்காண்டாகி விடக் கூடாது என்பதற்காக இந்த மீனாயணத்தை இத்தோடு நிறைவுசெய்கிறேன்ஆம் அன்று நாங்கள் எல்லாம் அயிரையோடு ஐவரானோம்!


ஏவ்வ்வ்வ்வ்

Saturday, 1 March 2025

🐐கடா வெட்டு 🐐

#காதுகுத்தும்_கடாவெட்டும்

பார்ட்-1

காது குத்தும் சடங்கையும் அங்கு விருந்தாக பரிமாறப்படும் கடாக் கறி விருந்தையும் பற்றி எழுதினா 20 இராமாயணம் 20 மகா பாரதம் அளவுக்கு எழுதலாம். நல்ல கண்டெண்ட் தேடுபவர்களுக்கு கண்டெண்ட்டின் உலகமாக.. இல்லையில்லை கண்டெண்ட்டின் ஊற்றாக இருப்பது இந்தச் சடங்குகளாகும்! வழக்கம் போல கடாக் கறியை பத்தி ரசிச்சு எழுதப் போற அதானே! No மிஸ்டர் காளிங்..

இந்தப் பதிவில் நான் கே.எல். ராகுல்! வழக்கமா ஆடுற ஓபனிங்கை விட்டுட்டு 3 வது டவுனில் இறங்கறேன்! வீட்டில் காது குத்து விழா முடிவானதுக்கு பிறகு எடுக்கும் முதல் முடிவு எத்தனை கெடா வாங்குறது என்பதாகத் தான் இருக்கும்! மதுரையில் பாண்டி கோவில் தான் கடா வெட்டின் ஜெருசலம், மெக்கா, காசி எல்லாமே பாண்டிக் கோவில் அருகே மண்டபம் எடுத்தும் நடத்துவார்கள்!

இந்த விழாவுக்கு எத்தனை பேரை அழைக்கலாம், எத்தனை பேரு வருவாங்க என்பதைக் கணக்கிட்டு தான் கடா வாங்குவார்கள்! 15 கிலோ எடையில் கிடா வாங்கினா 10 கிலோ தனிக்கறி, எலும்பு, குடல் எல்லாம் 3 கிலோ வரும் மீதி 2 கிலோ சேதாரம் தான்! கடா வெட்டுக்கு வெள்ளாட்டை விட செம்மறியாடு தான் சிறப்பு! அதிலும் கோங்கு எனப்படும் ஆட்டு இனம் தான் முதல் தரமான ஆடாகும்!

கோங்கு ஆட்டினை எப்படி வாங்குவாங்கன்னா 2 பல்லு கோங்கு ஆடுன்னு சொல்லுவாங்க! அதாவது அந்த ஆட்டுக்கு 2 பற்கள் தான் முளைச்சு இருக்கணும்! (ஆட்டின் வயது 12-14 மாதங்கள்) இது தான் கிலோ 900 முதல் 1000 வரை விற்கும் கறியாகும்! 4 பற்கள் 6 பற்கள் ஆடெல்லாம் கறி கொஞ்சம் கடினமாக இருக்கும்! இந்த கடின இறைச்சியை (₹500) பாதி விலையில் வாங்கலாம்!

ஆடுகளை உயிருடன் எடை போட்டு வாங்கும் முறையும் இருக்கு ஆனா அதன் கறியை கணிப்பது சிறிது கடினம்! உரித்த ஆடு வாங்குவது சிறந்தது! சரி அப்போ எப்படி கடா வெட்டுறது? ஒரு 15 கிலோ ஆடு வெட்டி சமைத்தால் 80 பேர் நன்கு சிறப்பாகவும் 100 பேர் வரை திருப்தியாகவும் சாப்பிடலாம்! 1000 விருந்தினர்கள் வரும் விருந்துக்கு கிட்டத்தட்ட 10 - 12 ஆடுகள் தேவைப்படும்.

பெரும்பாலும் இதில் ஒரு ஆடு மட்டுமே உயிருடன் வாங்கி வெட்டி தங்களது நேர்த்தி கடனை முடித்துவிட்டு மீதி ஆடுகளை உரித்த ஆடுகளாகவே வாங்கி விடுவார்கள்! இதில் இரட்டை கடா வேண்டுதலும் இருக்கு! இரட்டை கடா வெட்டும் +2 வேண்டுதல் ஸ்பெஷல் வேண்டுதல்களாகும்! எனவே 2 ஆடுகளை மட்டும் வெட்டி படையலிட்டு உரித்த ஆட்டுக் கறியில் விருந்துக்கு சமைப்பார்கள்!

கடா வெட்டி அவ்வளவு ரத்தம் பார்த்த சிலர் ரத்தத்தை விருந்தில் சேர்ப்பதில்லை! மற்ற இடங்களில் ரத்தப் பொரியலும் உண்டு! சில கோவில்களில் ஆட்டின் தலையும் ஆட்டின் முன்னங்காலில் வலது காலையும் கோவில் பூசாரிக்கு கொடுக்கவேண்டும்! பிற ஊர்களில் தலைக்கறியும் சமையலில் சேரும்! மூளையை மட்டும் தனியாக வீட்டுக்கு வாங்கிக் கொள்ளும் மூளைக்காரர்களும் இதில் உண்டு!

பெரும்பாலும் விருந்துகளில் எலும்பு மட்டும் போட்ட தண்ணிக் குழம்பு, கறியும் கொழுப்பும் போட்ட இன்னொரு கெட்டிக் குழம்பு, குடல் & கடலை பருப்பு கூட்டு, போன்லெஸ் சுக்கா, ரசம், தயிர் இது தான் மெனுவாக இருக்கும்! இப்போ இதில் பிரியாணியும் சேர்ந்துடுச்சு! நெய் குஸ்கா & போன்லெஸ் மட்டனும் இப்போ ஹிட்டான மெனு! சூப் பாயா, ரத்தப் பொரியல் எல்லாம் கூடுதல்!

கடந்த வருடம் விருதுநகரில் ஒரு கடா விருந்தில், மட்டன் பிரியாணியும், சுக்கா வருவல், சுக்கா குழம்பு, எலும்பு சால்னா, சிக்கன் குழம்புடன் ஆயில் புரோட்டாவும் பரிமாறினார்கள்! இப்படி மெனுக்கள் பல உண்டு. காதணி விழா கடா விருந்துகளில் நடக்கும் உறவினர் சண்டைகள் பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம்! அத்தனையும் அநேகமாக கறிக்காக தான் இருக்கும்!

அது என்னய்யா வெறும் எலும்பா போடற நல்ல பெரிய பீஸா போட மாட்டியா? என பரிமாறுபவரிடம் ஆரம்பிக்கும் புயல் அப்படியே விருந்துக்கு அழைத்த உறவினரிடம் போய் ஏன் மாப்ள ஒரு காக்கிலோ கறிக்கு இந்த மாமன் வக்கத்து போயிட்டேனா? எங்கிட்டயே கறி தீர்ந்திடுச்சுன்னு சொல்றான் என்று மையம் கொண்டு அதன் பிறகு அடிதடி நடந்து கரையைக் கடக்கும்!

இனி செத்தாலும் உங்க உறவு வேண்டாம்யானு முறுக்கிகிட்டு போன கதைகள் அதிகம்! செத்த ஒரு ஆட்டுக்காக சாகும் வரை சண்டை போட்ட வீம்புப் பரம்பரைகளின் கதைகள் கன்னித்தீவு கதை போல முடிவில்லாதது. இப்ப கடா விருந்துன்னா பந்தியில் சொந்த மாமன் மச்சினனே கறி வாளியை ஏந்தி திருப்தியாக பரிமாறுவது ஒரு ஆறுதல்! ஆனா பெருங் கோபம் வந்துச்சின்னா..

அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு போல நேருக்கு நேர் கண்டால் தீப்பொறி பறக்க முறைத்துக் கொண்டே பல ஆண்டுகளாக தீராப் பகையோடு திரியும் பல குடும்பங்கள் உண்டு! அவர்களெல்லாம் மதுரையில் ப்ளக்ஸ் பேனர் வைத்து போர் புரிந்து கொள்வதை மதுரைக்குள் கொஞ்சம் சுற்றிவந்தால் அறியலாம்! இந்தக் கடா விருந்தில் குடி போதையில் வந்து செய்யும் அளப்பறைகள் தனி!

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாமா அல்லது ஒரு சித்தப்பா நிச்சயம் இந்த லிஸ்டில் இருப்பார்கள்! நல்ல போதையில் சமைக்கும் இடத்திற்கு போய் சிக்கன் பொரிக்கும் போது கொதிக்கும் சட்டியில் கைவிட்டு யோவ் பாரதியே நீ என்னய்யா தீக்குள் விரலை விடுவது நான் தீச்சட்டியிலேயே விரல் விடுவேன்னு அக்னி பரிட்சையில் இறங்கிய எங்க முனியசாமி சித்தப்பா போல..

பல நூறு சித்தப்பாக்கள் தமிழ்நாடெங்கும் ஏராளம்! தென்னந் தோப்பு ஒன்றில் நடந்த கடாவெட்டில் நண்பர் ஒருவரின் மாமா போதையில் பாதி தென்னைமரம் ஏறி அங்கேயே மரத்தை கட்டிப் பிடித்து தூங்கியது முதல், சூப் வாங்கி சரக்கில் மிக்ஸ் செய்வது, நல்லி எலும்பில் அதைக் கலக்குவது, விழாவில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஆடுவது என தனி காமெடிச் சானலே இங்குண்டு!

இதில் குலதெய்வத்திற்கு கடா வெட்டுவது பற்றி எழுதினால் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு! உதாரணத்துக்கு ஒன்று அய்யனார் என்பவர் சைவச்சாமி! கருப்பணசாமி, 18 படி கருப்பு, சோணைச்சாமி, முனீஸ்வரர், சுடலை மாடன் இவங்க எல்லாம் அசைவச் சாமி! அது குறித்து ஒரு தனிப்பதிவு விரைவில்..

ஒரு ருசிகரத் தகவல்: கடா வெட்டு விருந்துக்கு புகழ் பெற்ற கோங்கு ஆடு என்பதன் தாயகம் கரூர் மாவட்டமாம்!! சத்தியமாக இது அரசியல் இல்லிங்கண்ணா 🤪

Tuesday, 25 February 2025

✍️நோட் பண்ணுங்கப்பா..

#பின்குறிப்புகள்




திருச்சியில் திருமண வீட்டு விருந்தொன்றுக்கு சென்றிருந்தோம்! மணமக்கள் இருவரின் வீட்டாரும் உணவு சம்பந்தமான ஓட்டல் & ரிஸார்ட் துறையில் இருப்பவர்கள்! எனவே திருமண விருந்து களை கட்டியது! சைவ அசைவ 2 விருந்துப் பந்திகளும் தனித் தனியே எதிரெதிர் திசையில் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு!


அசைவத்தில் மட்டன் எலும்பு சூப்சீரகச் சம்பா மட்டன் பிரியாணிகீழக்கரைநெய்ச்சோறுகுரும்பாடு நெஞ்சு சாப்ஸ், மிளகு மட்டன் சுக்கா, துபருப்பு & சுரைக்காய் எலும்பு மட்டன் தால்ஸாதயிர் வெங்காயம்,  வெள்ளைச் சோறு, ரசம், சிக்கன் லெக்பீஸ்விரால் மீன் ரோஸ்ட், இறால் க்ரேவி, பெப்பர் முட்டைன்னு தரமான மெனு! 


சைவம் அசைவம் இரண்டுக்கும் பொதுவான மெனுவாக இருந்தது தக்காளி ரசமும், கெட்டி மோரும்! கடைசியாக ஒரு அற்புதமான முந்திரி பால் பாயாசமும், சூடான குலாப் ஜாமூன், வெனிலா ஐஸ் க்ரீமும் ஃபைனல் டச்சாக பரிமாறினார்கள்! நமக்குத் தான் சைவம் என்றாலே குமட்டிக் கொண்டு வரும் என்று உலகமே அறியுமே! 


ஒரு வழியாக மூக்கைப் பொத்திக் கொண்டு சைவ உணவுப் பந்தியை கடப்பதற்குள் மயக்கமே வந்துவிட்டது! தடுமாறி ஒரு சேரில் அமர்ந்ததும் பெப்பர் தூக்கலாகப் போட்ட மட்டன் சூப் ஒரு கிளாஸ் தந்தனர் அதைக் குடித்த பின்பு தான் மயக்கம் தணிந்தது! பந்தி துவங்கும் நேரத்தை அறிய ஒற்றர் படை வைத்திருக்கும்..


உலகின் ஒரே தனிமனிதனான எனக்கு தகவல் தெரிந்தது.. முதல் ஆளாக பந்திக்கு வந்து அமர்ந்தது எல்லாம் பெரிய விஷயமல்ல! பந்தி நிறைந்த அடுத்த நொடி இன்னொரு பந்திக்கு அமரும் அளவு ஆட்களும் பந்திக்குள் நுழைந்தனர்! அவர்களும் நமக்கு நேர் பின்னே VVIPகளோடு நிற்கும் செக்யூரிட்டி போல நின்றனர்! 


நமக்கு இலை விரித்த போதே சீக்கிரம் சாருக்கு பரிமாறுங்கப்பா என்று அவர்கள் பேச்சில் வலை விரித்தனர்.! பந்தி பரிமாறுபவர் பிரியாணியோடு கறி எடுக்கும் போது பார்த்து பார்த்து எலும்பு இல்லாத கறியா போடுங்கப்பா என்றார் ஒரு பின்னணிக் காவலர்! எலும்புன்னா நாம் சாப்பிட லேட்டாகுமாம் அதான் இந்த அக்கறை! 


இன்னொருத்தர் யப்பா சாருக்கு சுக்கா வறுவல் இன்னும் வரலை என்றார்! இன்னும் மீனை இவர் தொடவே இல்லை பார்த்தியா? சார் முட்டை மசாலா உங்களுக்கு வைக்காம போயிட்டாங்க.. லெக் பீஸ் கடிச்சிட்டு வச்சிட்டார் நல்லா இல்ல போல.. வெள்ள சோறு குறைவா வாங்கிருக்கார் அதிகம் சோறு சாப்பிடமாட்டாரோ..


என தமது பின்னணிக் குரலில்  SPB யைவிட அதிகப் பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர்! அதில் ஒருவர் பாயாசம், ஜாமூன் எல்லாம் ஸ்வீட்! சாருக்கு சுகர் இருக்கும் அதெல்லாம் வாங்க மாட்டார் என்றார்! நான் இவர்களுக்கு சிறிது ஆட்டம் காட்டலாம் என்று நினைத்தேன்! பிரியாணி, சோறு, ரசம் வாங்கிட்டு இப்போ..


பாயாசத்தை வாங்கப் போன போது மணவீட்டு நண்பர் வந்து அட வெங்கி நீங்களா! பிரியாணி எப்படி இருந்துச்சு திரும்ப தரவா என்றதும் “ யோவ் அந்தாளு தான் பாயாசத்துக்கே வந்துட்டானே இப்ப அவன்ட்ட போய் எதுக்கு பிரியாணி வேணுமான்னு கேக்குற” என்ற பின்னணியினரின் மைண்ட் வாய்ஸ் என் காதில் கேட்டது! 


அதுக்கென்ன நல்லா நாலு நல்லி எலும்புடன் பிரியாணி என்றேன்! பின்னால் மளுக்கென எலும்பு முறிந்தது போல ஒலி கேட்டது! அது பலகீன இதயங்கள் உடைந்த ஒலின்னு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது! பிரியாணியையும் கறியையும் எவ்வளவு மெதுவாக ரசித்து ருசிக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக ருசித்தேன்!


பின்குறிப்பர்களின் சலசல சப்தமும் கூடிய போதுநல்லி எலும்பை எடுத்து மேசையில் நீதிபதி ஆர்டர் ஆர்டர் எனத் தட்டுவது போல தட்டினேன்! அவர்களும் தமது அப்ஜெக்‌ஷனை இது ஓவர் ரூல்யா என்பது போல வெளிப்படுத்தினர்! பொரிச்ச விரால் மீனை சூடா கொண்டு வந்து இப்ப பரிமாறவா என்றார் மணவீட்டு நண்பர்! 


பின்னால் ப்யூஜியாமா எரிமலையே வெடித்தது! சார் அவரு முதல்ல வாங்கின மீனையே இன்னும் சாப்பிடலை என்றார் ஒரு SPB.. அப்ப இறால் க்ரேவி கொண்டு வர்றேன் தயிர் வாங்கி சாப்பிட்டு பாருங்க என்றார் நண்பர்! என் பின்னே நின்றவர் தனது போனில் ங்கோத்.. ங்கொ.. எனத் திட்டுவது போல திட்டிக் கொண்டே கிளம்பினார்!


நான் தயிரும் இறாலும் சாப்பிட்டு, பாயாசமும் சாப்பிட்டு விட்டே கை கழுவ எழுந்தேன்! நான் ஐஸ்க்ரீம் வாங்கும் போது தூரத்தில் என் பின்னே நின்ற அதே நபர் 2 வது பந்தியிலும் ஒருவர் பின்னே நின்றிருந்தார்! அவரிடம் போய் நீங்க இலங்கையா தம்பி? என்றேன்! எதுக்குணே அப்படி கேட்டிங்க என்றார் புரியாமல்…


நிறைந்தது.. 




 


Friday, 21 February 2025

🥸காந்தி மியூசியம்

#மதுரை_காந்தி_மியூசியம்

மதுரையில் மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகமாக இருக்கும் கட்டிடம் நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க தமுக்கம் அரண்மனை ஆகும்! இந்த அரண்மனையானது, கி.பி 1670ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டது!

தமுக்கம் என்றால் யானைகள் மோதி சண்டையிடும் இடம்! அதனால் தான் இதன் எதிரே அமைந்திருக்கும் யானைச் சண்டை மைதானம் தமுக்கம் என்று அழைக்கப்பட்டது! இந்த மாளிகையின் உப்பரிகையில் இருந்து ராஜ குடும்பத்தினர் யானைச் சண்டையை கண்டு களிப்பார்களாம்! நாயக்கர்களுக்கு பின்னர் இது..

கர்நாடக நவாப், கிழக்கிந்திய கம்பெனி மற்றும் சிலரின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இறுதியாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்த அரண்மனை பல ஆண்டுகளாக மதுரை பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. பிறகு தான் இது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது!

மதுரைக்கும் காந்தியடிகளுக்கும் பிரிக்கவே முடியாத ஒரு பிணைப்பு இருக்கின்றது. காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிகழ்வான மீனாட்சி திருக்கோவிலின் உள்ளே ஹரிஜன மக்களை அனுமதிக்கும் படலம் மதுரையில் தான் நிகழ்ந்தது.

மேலும் காந்தி அரையாடை உடுத்தும் வைராக்கிய முடிவை எடுத்ததும் இதே மதுரையில் தான்! காந்தியின் வாழ்வில் முக்கிய திருப்புமுனை ஏற்படுத்திய நகரம் மதுரையாகும்! ஆகவே அவர் நினைவைப் போற்றும் வகையில் 1955 ஆம் ஆண்டு சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த அரண்மனையையும்..

அதனைச் சுற்றியுள்ள நிலத்தையும் மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அமைக்க அகில இந்திய காந்தி ஸ்மாரக் நிதிக்கு தமிழ்நாடு மாநில அரசால் பரிசாக வழங்கப்பட்டது. அசல் கட்டிடத்தின் பெரிய புதுப்பித்தலுக்கு மேலதிகமாக, நூலகம், திறந்தவெளி அரங்கம் மற்றும் பல கட்டிடங்களுக்காக..

வடக்குப் பகுதியில் ஒரு முழுமையான புதிய பிரிவு கட்டப்பட்டது. சேவா கிராமத்தில் உள்ள ஒரு குடிசையின் மாதிரி இந்த அருங் காட்சியகத்தின் முக்கிய கட்டிடத்தின் முகப்பில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள நூலகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

அவற்றை பார்க்கும் பொழுது காந்தியடிகள் எழுதிய பழைய கடிதங்களையும் பல ஆவணக்குறும்படங்களின் தொகுப்பையும் நாம் காண முடியும். பிரதான கட்டிடத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி திரையரங்கமானது, பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளை நடத்த அமைக்கப்பட்டது!

இங்கே ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தியின் பொழுது ஐந்து நாட்கள் நடக்கும் விழா பிரசித்தி பெற்றது. அருங்காட்சியகத்தில் ஒரு பிரத்தியேகப் பகுதி காந்தியின் வாழ்க்கையின் சிறப்பான சில அத்தியாயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. "இந்தியா தனது சுதந்திரத்திற்காக போராடுகிறது" என்று குறிப்பிட்ட பகுதியில்..

சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆணி வேர்களை சில அழகான படங்கள் & ஓவியங்கள் விவரிக்கின்றன. இந்த படக் காட்சிக்காக அரண்மனையின் தர்பார் மண்டபமானது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது காந்தியின் குழந்தை பருவத்தில் இருந்து அவரது இறப்பு வரை பல்வேறு அரிய புகைப் படங்களைக் கொண்ட ஒரு புகைப்பட..

சுயசரிதை கண்காட்சியும் இங்குள்ளது! காந்தியைப் பற்றிய எழுத்துக்கள், ஓவியங்கள் & சிற்பங்களும் இங்கு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் மூன்றாவது பகுதி மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் பயன்படுத்திய நூறு அன்றாட பொருட்களை கண்காட்சிக்கு வைத்துள்ளது.

இப்பொருட்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுபவை ஹிட்லருக்கு காந்தி எழுதிய ஒரு கடிதமும், அவர் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று அவர் உடுத்தி இருந்த ரத்தம் தோய்ந்த ஒரு துணியும் அடங்கும்.! காந்தி மியூசியம் மதுரைக்கும் காந்திக்கும் இருக்கும் ஆத்மார்த்தமான அடையாளச் சின்னம்!

Wednesday, 19 February 2025

🥘 புரோட்டா கொத்து

#கொத்து_புரோட்டா

புரோட்டா சாப்பிடுவது உடல் நலனுக்கு கெடுதின்னு நினைக்கிற புரோட்டா ஹேட்டர்ஸ் இந்த வரிகளுக்கு மேல படிக்க வேண்டாம்! நீங்க தாராளமா கோ பேக் சொல்லிட்டு போகலாம்! புரோட்டா ஈட்டர்ஸ் என் கூட வாங்க! விதவிதமான புரோட்டா, சால்னா, குருமா, குழம்பு பற்றியெல்லாம் இங்கே இதிகாசங்கள் அளவுக்கு நிறைய எழுதியாச்சு! எழுதாதது கொத்து பரோட்டா பற்றிதான்!

மதுரையில மட்டும் தான் கொத்து புரோட்டான்னா அது முட்டை புரோட்டாவை குறிக்கும்! செட்டு, கொத்து, முட்டை கொத்துன்னு இந்த பாட்ஷாவுக்கு பல பெயர்கள் இருக்கு! முன்னாடி எல்லாம் முட்டை பரோட்டான்னா புரோட்டா மாவை பெருசா வீசி பேப்பர் போல கல்லில் விரிச்சு ஒரு முட்டையை உடைச்சு நடுவிலே ஊற்றி மாவின் நாலா பக்கங்களையும் மடிச்சுவிட்டு சதுரமாக சுடுவாங்க!

அதுக்கு சிலோன் பரோட்டான்னு பேரு! அதன் பிறகு அதிலே வெங்காயம் போட்டும், அப்டேட் ஆகி சிக்கன், மட்டன் போட்டும் சுட ஆரம்பிச்சாங்க! தம் புரோட்டா, லாப்பான்னு அதுக்கு பேரு! நாம் முட்டை புரோட்டாவுக்கு வருவோம்! சுடச்சுட சாப்பிட வேண்டிய உணவுகளில் முட்டை புரோட்டாவுக்கு முதலிடம் தரணும்! ஆறிய மு. புரோட்டாவை எவரது ஆன்மாவும் ஏற்காது!

முற்கால மாஸ்டர்கள் புரோட்டாவில் முட்டையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகத் தூள் மட்டும் தான் போட்டு கொத்துவாங்க! இதில் சிக்கன் குழம்பு மட்டன் சால்னா ஊத்தி கொத்துவது பிற்கால மாஸ்டர்களின் கண்டுபிடிப்பாகும்! சால்னா இல்லாத ப்ளைன் கொத்து ரகளையான ருசியில் இருக்கும்! இதுக்கு சூடான கறிக் குழம்பு தொட்டுகிட்டு சாப்பிட்டா, அடடா!

இப்போ குழம்போட கொத்துற புரோட்டாவை சால்னா இல்லாம கூட அப்படியே சாப்பிடலாம்! ஆனா ப்ளைன் கொத்து சால்னா இருந்தா தான் மாஸா இருக்கும்! சால்னா ஊத்தி கொத்துற புரோட்டாவுக்கு அதே சால்னா செட்டாகாது! இந்த உண்மையை அனுபவப்பூர்வமா உணர்ந்த ஓட்டல்கள் புரோட்டாவில் ஊற்ற தனி சால்னாவே சமைக்க ஆரம்பித்தனர்! அப்போ ஏறுன கிராஃப் தான்!

இன்னிக்கு வரைக்கும் கொத்து பரோட்டாவை டாப்ல வச்சிருக்கு! முதலில் கொத்துக்குன்னே கனமான இரண்டு இரும்பு குறுப்பிகள் இருந்தன! முக்காலடி உயரத்தில் இருக்கும்! குறுப்பில கொத்துற புரோட்டா ருசி மாதிரி இப்பவும் வராது! சவுண்ட் பொல்யூஷனில் அதை தடை பண்ணிட்டாங்க! அப்புறம் சில கடைகளில் டம்ளர், தட்டையா பிளேடு போன்ற மரக் கைப்பிடி வச்ச கரண்டி போன்ற..

சாதனங்களைக் கொண்டு இப்போது புரோட்டாவை கொத்து போடுகிறார்கள்! கொத்து புரோட்டாவை ரொம்ப நைஸாக கொத்து போட்டுவிடக் கூடாது! சில பேரு நைஸ் கொத்துன்னு பவுடர் மாதிரி ஆக்கிடுவாங்க! மைதாவை பிசைஞ்சு புரோட்டா செய்து அதை பவுடர் மாதிரி கொத்துறதுக்கு அந்த மைதா மாவையே சாப்பிடலாம்! அவ்வளவு நைஸில் கொத்தக்கூடாது!

நம்ம ஊரில் எப்பவும் சொல்லுவாங்களே ஒண்ணு ரெண்டா இடிச்சு அப்படின்னு அப்படித்தான் புரோட்டாவை கொஞ்சம் பெரிய பெரிய பீஸா பிய்த்து பிறகு முட்டை, வெங்காயம் தக்காளி, மிளகாய், குழம்பு எல்லாம் சேர்க்கணும்! முட்டை புரோட்டாவில் போடுற தக்காளி புளிப்பா இருந்துடக்கூடாது! இனிப்பாவும் இருக்கக் கூடாது! அதை கவனமா தேர்ந்தெடுத்து இதிலே சேர்க்கணும்!

வெங்காயத்தை முதலில் ஒரு நிமிடம் வதக்கணும், பிறகு பச்சை மிளகாய் அப்புறமா தக்காளி சேர்த்து வதக்கிட்டு தான் பிறகு முட்டை சேர்க்கணும்! அதே போல முட்டையை கல்லில் உடைச்சு போட்டுட்டு பிறகு புரோட்டாவை பிச்சு போடக் கூடாது! அது தாமரையிலை தண்ணீர் போல புரோட்டா பீஸில் நன்கு ஒட்டாது! முட்டையை ஆம்லேட்டுக்கு கலக்குவது போல கலக்கிட்டு பிறகு..

புரோட்டாவை பிச்சி போட்டு அபிஷேகம் பண்றது போல அதன் தலை மேல அடிச்சு வச்ச முட்டையை ஊற்றணும்! முட்டையும் புரோட்டாவும் நன்கு பின்னிப்பிணைந்ததும் வெங்காய, தக்காளி வதக்கலை சேர்த்து பிரட்டணும்! இப்போ தான் குழம்பு சேர்க்குற நேரம்! அதையும் ஊற்றி நன்கு கலந்து பிரட்டியபின் கொத்துக் கரண்டி எனும் வெப்பன்ஸை எடுக்கணும்! முக்கியமான ஒண்ணு..

புரோட்டா கொத்துறவர் அதை கொத்தும் போது அவரு மனசுக்கு பிடிக்காதவங்களை நினைச்சிடவே கூடாது! மகிழ்ச்சியான மன நிலையில், சிரித்த முகத்துடன் டென்ஷனே இல்லாமல் பூப்போல, பிரட்டுனது போல ஒன்றிரண்டா கொத்த ஆரம்பிக்கணும்! இதுவே கொத்தை நைஸா கேட்டா அவருக்கு பிடிக்காத முகத்தை கூட நினைச்சுக்கலாம்! (எதேஏஏ..மாஸ்டரின் மனைவி முகமா??)

சில கடைகளில் எல்லாம் மல்லி, மிளகாய் போடி போடுறாங்க அது ஓவர் மசாலாவாகிவிடும்! சீரகத்தூள், மற்றும் மிளகுத் துளை நம்ம வடிவேலு சொல்ற மாதிரி மழைச்சாரல் போல தூவி ஒரு பிரட்டு பிரட்டிட்டி எடுக்கணும்! இங்க ஒரு சீக்ரெட் சொல்றேன் கடைசியா கல்லில் இருந்து கொத்தை தட்டுக்கு மாற்றும் போது ஒரே ஒரு சிட்டிகை கரம்மசாலாதூள் சேர்த்து கிளறி தட்டுல எடுத்துடணும்!

ஒண்ணு ரெண்டா கொத்துன புரோட்டாவும், முட்டையும் பிறகு வதக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு கலவை மிளகு சீரகத் தூள் இறக்கும் போது சேர்த்த கரம் மசாலா எல்லாம் சேர்த்து கமகமனு நாசிக்குள் வாசம் நுழையும்! இப்போ சூடான குழம்பு வாங்கி தொட்டுகிட்டு சாப்பிடணும்! முட்டை புரோட்டாவில் குழம்பு ஊத்தி குழப்பி சாப்பிடுவது அதை கற்பழிப்பதற்கு சமமான குற்றமாகும்!

இதிலேயே காய்கறிகள் போட்ட சைவ கொத்து புரோட்டா இலங்கையில் ஃபேமஸ்! இன்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களின் விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது கொத்து புரோட்டா! சிக்கன் கொத்து, மட்டன் கொத்துன்னு அசைவ கொத்தும் அங்கே கிடைக்கும்! முட்டை புரோட்டாவுக்கு புகழ் பெற்ற ஊர் மதுரை தான்!

ஆனாலும் தென் மாவட்டங்கள் எங்கும் மதுரைக்கு இணையான ருசியில் கொத்து புரோட்டா கிடைக்கும்! திருச்சி, சேலம், ஈரோடு, கோவையிலும் கொத்து புரோட்டாவின் சாம்ராஜ்யம் களை கட்டியிருக்கிறது! புரோட்டா வாங்கி ருசிக்கவே கூடாது என்னும் ஊர்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது! திண்டிவனம் தாண்டி வந்தால் தான் ஒரு நல்ல கொத்து புரோட்டாவையே ருசிக்கலாம்!

பிறந்த ஊருல பிறந்த மேனியா திரியறா மாதிரி சொல்லுவாங்களே அதுபோல முட்டை புரோட்டா கூட சாப்பிடக்கூடிய முட்டை வகை ஆஃப்பாயில் தான்! ஆஃப்பாயிலுக்கு நடுவே இருக்கும் மஞ்சள் கருவை மடை மாற்றி புரோட்டாவில் பாயவிட்டு கொஞ்சம் சால்னா கொஞ்சம் மஞ்சள் கருன்னு தொட்டுகிட்டு சாப்பிடுறது இருக்கே! அதெல்லாம் சொன்னா புரியாது! ரசிச்சு ருசிச்சு அனுபவிக்கணும்!

அதிலும் கொத்து புரோட்டா கொத்துற அந்த சத்தமே நமக்கு ஒரு சிறந்த சங்கீதம் தான் 🎶 🎶 🎵 சரிதானே..

(கமெண்ட்டில் உங்களுக்கு பிடித்த கொத்து புரோட்டா அனுபவங்களை சொல்லலாம்)