Wednesday, 19 February 2025

🥘 புரோட்டா கொத்து

#கொத்து_புரோட்டா

புரோட்டா சாப்பிடுவது உடல் நலனுக்கு கெடுதின்னு நினைக்கிற புரோட்டா ஹேட்டர்ஸ் இந்த வரிகளுக்கு மேல படிக்க வேண்டாம்! நீங்க தாராளமா கோ பேக் சொல்லிட்டு போகலாம்! புரோட்டா ஈட்டர்ஸ் என் கூட வாங்க! விதவிதமான புரோட்டா, சால்னா, குருமா, குழம்பு பற்றியெல்லாம் இங்கே இதிகாசங்கள் அளவுக்கு நிறைய எழுதியாச்சு! எழுதாதது கொத்து பரோட்டா பற்றிதான்!

மதுரையில மட்டும் தான் கொத்து புரோட்டான்னா அது முட்டை புரோட்டாவை குறிக்கும்! செட்டு, கொத்து, முட்டை கொத்துன்னு இந்த பாட்ஷாவுக்கு பல பெயர்கள் இருக்கு! முன்னாடி எல்லாம் முட்டை பரோட்டான்னா புரோட்டா மாவை பெருசா வீசி பேப்பர் போல கல்லில் விரிச்சு ஒரு முட்டையை உடைச்சு நடுவிலே ஊற்றி மாவின் நாலா பக்கங்களையும் மடிச்சுவிட்டு சதுரமாக சுடுவாங்க!

அதுக்கு சிலோன் பரோட்டான்னு பேரு! அதன் பிறகு அதிலே வெங்காயம் போட்டும், அப்டேட் ஆகி சிக்கன், மட்டன் போட்டும் சுட ஆரம்பிச்சாங்க! தம் புரோட்டா, லாப்பான்னு அதுக்கு பேரு! நாம் முட்டை புரோட்டாவுக்கு வருவோம்! சுடச்சுட சாப்பிட வேண்டிய உணவுகளில் முட்டை புரோட்டாவுக்கு முதலிடம் தரணும்! ஆறிய மு. புரோட்டாவை எவரது ஆன்மாவும் ஏற்காது!

முற்கால மாஸ்டர்கள் புரோட்டாவில் முட்டையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகத் தூள் மட்டும் தான் போட்டு கொத்துவாங்க! இதில் சிக்கன் குழம்பு மட்டன் சால்னா ஊத்தி கொத்துவது பிற்கால மாஸ்டர்களின் கண்டுபிடிப்பாகும்! சால்னா இல்லாத ப்ளைன் கொத்து ரகளையான ருசியில் இருக்கும்! இதுக்கு சூடான கறிக் குழம்பு தொட்டுகிட்டு சாப்பிட்டா, அடடா!

இப்போ குழம்போட கொத்துற புரோட்டாவை சால்னா இல்லாம கூட அப்படியே சாப்பிடலாம்! ஆனா ப்ளைன் கொத்து சால்னா இருந்தா தான் மாஸா இருக்கும்! சால்னா ஊத்தி கொத்துற புரோட்டாவுக்கு அதே சால்னா செட்டாகாது! இந்த உண்மையை அனுபவப்பூர்வமா உணர்ந்த ஓட்டல்கள் புரோட்டாவில் ஊற்ற தனி சால்னாவே சமைக்க ஆரம்பித்தனர்! அப்போ ஏறுன கிராஃப் தான்!

இன்னிக்கு வரைக்கும் கொத்து பரோட்டாவை டாப்ல வச்சிருக்கு! முதலில் கொத்துக்குன்னே கனமான இரண்டு இரும்பு குறுப்பிகள் இருந்தன! முக்காலடி உயரத்தில் இருக்கும்! குறுப்பில கொத்துற புரோட்டா ருசி மாதிரி இப்பவும் வராது! சவுண்ட் பொல்யூஷனில் அதை தடை பண்ணிட்டாங்க! அப்புறம் சில கடைகளில் டம்ளர், தட்டையா பிளேடு போன்ற மரக் கைப்பிடி வச்ச கரண்டி போன்ற..

சாதனங்களைக் கொண்டு இப்போது புரோட்டாவை கொத்து போடுகிறார்கள்! கொத்து புரோட்டாவை ரொம்ப நைஸாக கொத்து போட்டுவிடக் கூடாது! சில பேரு நைஸ் கொத்துன்னு பவுடர் மாதிரி ஆக்கிடுவாங்க! மைதாவை பிசைஞ்சு புரோட்டா செய்து அதை பவுடர் மாதிரி கொத்துறதுக்கு அந்த மைதா மாவையே சாப்பிடலாம்! அவ்வளவு நைஸில் கொத்தக்கூடாது!

நம்ம ஊரில் எப்பவும் சொல்லுவாங்களே ஒண்ணு ரெண்டா இடிச்சு அப்படின்னு அப்படித்தான் புரோட்டாவை கொஞ்சம் பெரிய பெரிய பீஸா பிய்த்து பிறகு முட்டை, வெங்காயம் தக்காளி, மிளகாய், குழம்பு எல்லாம் சேர்க்கணும்! முட்டை புரோட்டாவில் போடுற தக்காளி புளிப்பா இருந்துடக்கூடாது! இனிப்பாவும் இருக்கக் கூடாது! அதை கவனமா தேர்ந்தெடுத்து இதிலே சேர்க்கணும்!

வெங்காயத்தை முதலில் ஒரு நிமிடம் வதக்கணும், பிறகு பச்சை மிளகாய் அப்புறமா தக்காளி சேர்த்து வதக்கிட்டு தான் பிறகு முட்டை சேர்க்கணும்! அதே போல முட்டையை கல்லில் உடைச்சு போட்டுட்டு பிறகு புரோட்டாவை பிச்சு போடக் கூடாது! அது தாமரையிலை தண்ணீர் போல புரோட்டா பீஸில் நன்கு ஒட்டாது! முட்டையை ஆம்லேட்டுக்கு கலக்குவது போல கலக்கிட்டு பிறகு..

புரோட்டாவை பிச்சி போட்டு அபிஷேகம் பண்றது போல அதன் தலை மேல அடிச்சு வச்ச முட்டையை ஊற்றணும்! முட்டையும் புரோட்டாவும் நன்கு பின்னிப்பிணைந்ததும் வெங்காய, தக்காளி வதக்கலை சேர்த்து பிரட்டணும்! இப்போ தான் குழம்பு சேர்க்குற நேரம்! அதையும் ஊற்றி நன்கு கலந்து பிரட்டியபின் கொத்துக் கரண்டி எனும் வெப்பன்ஸை எடுக்கணும்! முக்கியமான ஒண்ணு..

புரோட்டா கொத்துறவர் அதை கொத்தும் போது அவரு மனசுக்கு பிடிக்காதவங்களை நினைச்சிடவே கூடாது! மகிழ்ச்சியான மன நிலையில், சிரித்த முகத்துடன் டென்ஷனே இல்லாமல் பூப்போல, பிரட்டுனது போல ஒன்றிரண்டா கொத்த ஆரம்பிக்கணும்! இதுவே கொத்தை நைஸா கேட்டா அவருக்கு பிடிக்காத முகத்தை கூட நினைச்சுக்கலாம்! (எதேஏஏ..மாஸ்டரின் மனைவி முகமா??)

சில கடைகளில் எல்லாம் மல்லி, மிளகாய் போடி போடுறாங்க அது ஓவர் மசாலாவாகிவிடும்! சீரகத்தூள், மற்றும் மிளகுத் துளை நம்ம வடிவேலு சொல்ற மாதிரி மழைச்சாரல் போல தூவி ஒரு பிரட்டு பிரட்டிட்டி எடுக்கணும்! இங்க ஒரு சீக்ரெட் சொல்றேன் கடைசியா கல்லில் இருந்து கொத்தை தட்டுக்கு மாற்றும் போது ஒரே ஒரு சிட்டிகை கரம்மசாலாதூள் சேர்த்து கிளறி தட்டுல எடுத்துடணும்!

ஒண்ணு ரெண்டா கொத்துன புரோட்டாவும், முட்டையும் பிறகு வதக்கிய வெங்காயம், தக்காளி, குழம்பு கலவை மிளகு சீரகத் தூள் இறக்கும் போது சேர்த்த கரம் மசாலா எல்லாம் சேர்த்து கமகமனு நாசிக்குள் வாசம் நுழையும்! இப்போ சூடான குழம்பு வாங்கி தொட்டுகிட்டு சாப்பிடணும்! முட்டை புரோட்டாவில் குழம்பு ஊத்தி குழப்பி சாப்பிடுவது அதை கற்பழிப்பதற்கு சமமான குற்றமாகும்!

இதிலேயே காய்கறிகள் போட்ட சைவ கொத்து புரோட்டா இலங்கையில் ஃபேமஸ்! இன்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கை மக்களின் விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது கொத்து புரோட்டா! சிக்கன் கொத்து, மட்டன் கொத்துன்னு அசைவ கொத்தும் அங்கே கிடைக்கும்! முட்டை புரோட்டாவுக்கு புகழ் பெற்ற ஊர் மதுரை தான்!

ஆனாலும் தென் மாவட்டங்கள் எங்கும் மதுரைக்கு இணையான ருசியில் கொத்து புரோட்டா கிடைக்கும்! திருச்சி, சேலம், ஈரோடு, கோவையிலும் கொத்து புரோட்டாவின் சாம்ராஜ்யம் களை கட்டியிருக்கிறது! புரோட்டா வாங்கி ருசிக்கவே கூடாது என்னும் ஊர்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது! திண்டிவனம் தாண்டி வந்தால் தான் ஒரு நல்ல கொத்து புரோட்டாவையே ருசிக்கலாம்!

பிறந்த ஊருல பிறந்த மேனியா திரியறா மாதிரி சொல்லுவாங்களே அதுபோல முட்டை புரோட்டா கூட சாப்பிடக்கூடிய முட்டை வகை ஆஃப்பாயில் தான்! ஆஃப்பாயிலுக்கு நடுவே இருக்கும் மஞ்சள் கருவை மடை மாற்றி புரோட்டாவில் பாயவிட்டு கொஞ்சம் சால்னா கொஞ்சம் மஞ்சள் கருன்னு தொட்டுகிட்டு சாப்பிடுறது இருக்கே! அதெல்லாம் சொன்னா புரியாது! ரசிச்சு ருசிச்சு அனுபவிக்கணும்!

அதிலும் கொத்து புரோட்டா கொத்துற அந்த சத்தமே நமக்கு ஒரு சிறந்த சங்கீதம் தான் 🎶 🎶 🎵 சரிதானே..

(கமெண்ட்டில் உங்களுக்கு பிடித்த கொத்து புரோட்டா அனுபவங்களை சொல்லலாம்)

No comments:

Post a Comment