Wednesday 26 March 2014

பாரதத் தாய்...!


அம்மா பிரதமரானால்... (கற்பனை)

புது தில்லி மே 27 ( கூட்டுத் தொகை 9 ) விழாக் கோலம் பூண்டிருக்கிறது...! எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகள்,பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள், அமைச்சர்கள் தண்ணீர்பந்தல் அமைத்து அம்மா குடிநீர் வினியோகித்து கொண்டிருந்தனர்..டெல்லி முழுவதும் ஆங்காங்கே நடமாடும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தன.. 

ஓ.பி.எஸ் ஏற்பாடு செய்த 10 சிறப்பு ரயில்களில் தமிழக மக்கள் அழைத்து வரப்பட்டனர் ரயில் நிலையத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ்..! புரட்சி தலைவி வாழ்க, பாரதத் தாய் வாழ்க கோஷம் டெல்லியை பிளந்தது..! அதிமுக பேனர்கள் தான் பட்டையை கிளப்பியது..! தப்பான தமிழிலும் தப்பு தப்பான இந்தியிலும் வாசகங்கள்..!

நேற்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ...! இன்று செங்கோட்டை..!  காவிரித் தாயே ...! இனி கங்கை நீயே...! இந்தியாவின் நிரந்தரப் பிரதமரே..! இதய தெய்வத்தின் காலடி... ! இனி இமயத்திலும் பறக்கும் இலைக்கொடி...! உன் பாதம் பட்டால் பாகிஸ்தான் பதை பதைக்கும்..! சீனா கிடுகிடுக்கும்..! டெல்லி வாசிகள் செங்கிஸ்கான் வந்த போது கூட இப்படி பயந்து இருப்பார்களா தெரியவில்லை..! அவ்வளவு பீதி அவர்கள் முகத்தில் தெரிந்தது...!

10 ஜன்பத் ரோடு இன்னும் விமரிசையாக இருந்தது..! நேற்றே ஹெலிகாப்டரில் வந்திறங்கி இருந்தார் அம்மா..! பதவி ஏற்க ஜனாதிபதி மாளிகை போக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..! அம்மாவை என் காரில் கொண்டு போய் தான் அங்கு இறக்கிவிடுவேன் என இன்னோவாவை பளபளப்பாக துடைத்து வைத்து காத்திருந்தார் சம்பத்..!

தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதல்வராக அம்மா இருக்கும் போது தான் அவர்கள் வரும் போது விழுந்து வணங்குவோம்... இப்போ அம்மா பிரதமர்..!  மரியாதை அதிகமாக தர வேண்டும் என்பதால் அம்மா வரும் வழியில் இரு புறமும் குப்புற படுத்தே கிடந்தார்கள்.. அவ்வப்போது அம்மா வருகிறார்களா என அவர்கள் தலையை தூக்கி பார்த்தது பீச்சில் சன்பாத் எடுப்பது போலவே இருந்தது..!

ஓபிஎஸ்,நத்தம் விஸ்வனாதன் போன்றோர் ஓடி ஒடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்..!சரியாக நல்ல நேரம் துவங்கியதும் அம்மா வீட்டு வாசலில் பச்சை புடவை தெரிய.. திருப்பதியில் திரை விலகியதும் பக்தர்கள் குரலெழுப்புவதைப் போல அமைச்சர்கள் அனைவரும் அம்மா தாயே பராசக்தி என கோஷமிட..உணர்ச்சிவசப்பட்ட பரிதி கைகளால் தன் கன்னத்தில் போட்டுக் கொண்டார்..!

வந்தது அம்மா அல்ல பச்சை சேலை கட்டிய வேறு ஒரு பெண்..! அனைவரும் அசடு வழிய அந்தப் பெண் அங்கு வழிய வழிய இருந்த நீர்க்குடத்தை தூக்கி நிற்க..இப்போது தான் அவர்களுக்கு புரிந்தது அம்மா வெளியே வரும் போது நிறை குடத்தோடு அந்தப் பெண் எதிரே போவார்..! நல்ல சகுனம்...! இந்த கேப்பில் கெடா வெட்ட நினைத்த சரத்குமார்..

இந்தியாவின் இரும்பு மங்கைக்கு நிறை குடம் கொண்டு வந்த நங்கையே வாழ்க வாழ்க..! என கோஷமிட அனைவரும் வாழ்க எனக்கத்த... இதோ நிறைகுடப் பெண் நடக்க வீட்டு வாசலில் பளீர் புன்னகையுடன் இரு விரல் காட்டி அம்மா வெளியே வர மீண்டும் திருப்பதி திரை..!

அம்மா நடக்க நடக்க இரு புறமும் அமைச்சர்கள் அங்கபிரதட்சணம் போல் உருண்டு வந்து கொண்டே இருந்தார்கள்..! பத்திரிக்கையாளர்கள் தொலைக்காட்சி காரர்களிடம் பதவியேற்பு மண்டபத்தில் பேட்டி தருகிறேன் என சிரித்துக் கொண்டே அம்மா ஆங்கிலத்தில் சொன்னதும்..யாரோ ஒரு பாறை பன்மொழித் தாயே வாழ்க என எடுத்துவிட,வாழ்க..வாழ்க..

அம்மா கார் ஏறி புறப்பட்டுவிட கார் கிளம்பிபோனது தெரியாமல் ஜன்பத் ரோடில் இருந்து மெயின் ரோடு வரை அவர்கள் உருண்டு போய்க் கொண்டிருந்ததை டெல்லி மக்கள் அதிசயமாக பார்த்தனர்..! வழியெங்கும் டெல்லி வாசிகளுடன் தமிழக மக்கள் நின்று கையசைக்க அம்மாவும் கையசைத்து கொண்டே ஜனாதிபதி மாளிகை சென்றார்..!

No comments:

Post a Comment