Wednesday 8 October 2014

பாவாடை சட்டை..

#பாவாடை_சட்டை

பெண்களுக்கான ஆடை குறித்து கிளம்பும் சர்ச்சைகளை தவிர்த்து விட்டு நான் எனது டீன்-ஏஜ் காலத்தில் பார்த்த பெண்களின் ஆடைகளை சொல்லவே இப்பதிவு..

சீட்டிப்பாவாடை என ஒன்று அப்போது பெண்களின் விருப்ப உடையாகவும் பெற்றோர்களின் பொருளாதாரத்திற்கு உகந்ததாகவும் வலம் வந்தது.. காடா துணி போல கெட்டித்துணியில் இருக்கும் டார்க் கலர் பின்னணியில் ரோஜா, சாமந்தி, செம்பருத்தி போன்ற பூக்கள் பெரிது பெரிதாக பிரிண்ட் செய்யப்பட்டு அமர்க்களமாக இருக்கும்..!

வயதுக்கு வராத பெண்கள் பஃப் கை வைத்த பின் பக்கம் ஊக்குகள் உள்ள சட்டையும் பலூன் போல விரியும் முழுப்பாவாடையும் அணிவார்கள்.. தெருவில் விளையாடும் போது இரு கை விரித்து கிறு கிறுவென சுற்றி சட்டென்று தரையில் அமர்வார்கள்.. காற்று புகுந்த அப்பாவாடைத்துணி கவிழ்த்து வைத்த கிண்ணம் போல அவர்களை சுற்றி தரையில் நிற்கும்..! 

எனக்கு அதை பார்க்கும் போதெல்லாம் தாமரைப்பூவில் அமர்ந்திருக்கும் லட்சுமியோ சரஸ்வதியோ நினைவுக்கு வரும். இத் துணிகளின் நல்ல உழைப்பால்  சில வருடங்கள் இந்த துணி தாங்கும் என்பதை அணியும் பெண்களின் முழுப்பாவாடை முக்கால் பாவாடை ஆவதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.. கிழிந்து போனாலும் வீட்டில் அடுப்படியில் கரித்துணியாகவும்..சைக்கிள் & சுவேகா துடைக்கவும் இந்தத் துணி பயன்படும்.!

மென்மையான பெண்களுக்கு முரட்டுத்தனமான இத்துணி தன் மேல் பட்டுக் கொண்டே இருப்பது ஏதோ ஒரு வகையில் மனரீதியான பாதுகாப்பு உணர்வு அளித்திருக்கக்கூடும் என நினைக்கிறேன்.. நான் நினைத்தது சரியா என யாராவது பெண்கள் தான் பதில் தர வேண்டும்.. இதே அப்பெண்கள் வயதுக்கு வந்தபின்
பாவாடை ஜாக்கெட் சீட்டித்துணியிலும் காட்டன் அல்லது ஃபுல்வாயிலில் தாவணியும் அணிவார்கள்..!

அதிலும் எங்கள் தெருவில் இருந்த விஜி அதில் தேவதை..(பெயர் மாற்றியுள்ளேன்) அவளது ரசனை அபாரமானது.. கறுப்பு பின்னணியில் சூரியகாந்தி பூ தெளித்த பாவாடை ஜாக்கெட்டும் வெளிர் மஞ்சள் நிற தாவணியும் அணிவாள் காதோரம் மஞ்சள் ரோஜாவுடன் அவள் நடந்து வரும் போது தான் தேவதைகள் நடந்தும் வரும் என நான்(ங்கள்) அறிந்து கொண்டேன்(டோம்).

அதே உடையில் தாவணியை மட்டும் வெள்ளையாக அணிந்து வெள்ளை ரோஜாவுடன் வந்து மிகப்பெரிய சேஞ்ச் ஓவர் தருவாள்.. அடர் சிவப்பில் மஞ்சள் பூக்கள் உள்ள பாவாடை சட்டை அதற்கு மஞ்சள் தாவணி.. ஆகாய நீலத்தில் கருநீலப்பூக்கள் பாவாடை சட்டைக்கு கருநீல தாவணி என துவம்சம் செய்வாள்.!

அநேகமாக பலர் எழுதும் கவிதைகளுக்கு காரணமாகவோ அல்லது பல கவிஞர்கள் உருவாக காரணமாகவோ இருந்திருக்கிறாள் அவள்... என்பதை விட அவள் ஆடை என்பது பொருத்தமாக இருக்கும்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் என் கண் முன்னே விரிகிறது அவள் நடையும் அந்த உடையும்..!

அதன் பிறகு வந்தது சட்டை கலாச்சாரம்.! அதாவது பாவாடை மேலே அணிவது ஆண்களின் சட்டை.. இதில் ஒரு தகவல் ஒளிந்திருக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அண்ணன் இருக்கிறான் என்பதை சட்டையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.! ஓல்டாக இருந்தால் அப்பா..! லேட்டஸ்ட்டாக இருந்தால் சகோதரன் என இனம் கண்டு தைரியமாய் (!?!) சைட் அடிக்க முடிந்தது.!

என்னது ஜீன்ஸ் லெக்கின்ஸா..! ஒன்று சொல்ல விரும்புகிறேன் அவரவர் வாழும் காலகட்டங்களில் இருக்கும் ஆடைகள் அவரவர்க்கு பிடித்ததாய் அமையும்.. என் காலத்தில் இந்த ஜீன்சோ லெக்கின்சோ அணிந்திருந்தால் இவ்வளவு ரசிப்புடன் நான் எழுதியிருப்பேனா என தெரியாது. அதேபோல இப்போது இருக்கும் இளைய சமுதாயமும் அந்த காலத்து ஆடையை விரும்பியிருக்காது.

ஆடை அவரவர் செளகரியமும் அவரவர் விருப்பமுமே.. இதை அணி இதை அணியாதே என யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது.. ஆணோ பெண்ணோ அவரவர்க்கு பிடித்ததை அணியும் உரிமையுண்டு.. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வோம் அல்லது விமர்சிக்காமலாவது இருப்போம்..!

பாவாடை தாவணியை நான் எழுதியது போல எதிர்காலத்தில் ஜீன்ஸ் லெக்கின்ஸ் பற்றி யாரேனும் எழுதலாம் ஆனால் அப்போதும் இப்படி இதை அணியாதே அதை அணியாதே என்ற பிரச்சனை இல்லாமலிருக்குமா..!? தெரியவில்லை.......

No comments:

Post a Comment