#பின்குறிப்புகள்
திருச்சியில் திருமண வீட்டு விருந்தொன்றுக்கு சென்றிருந்தோம்! மணமக்கள் இருவரின் வீட்டாரும் உணவு சம்பந்தமான ஓட்டல் & ரிஸார்ட் துறையில் இருப்பவர்கள்! எனவே திருமண விருந்து களை கட்டியது! சைவ அசைவ 2 விருந்துப் பந்திகளும் தனித் தனியே எதிரெதிர் திசையில் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு!
அசைவத்தில் மட்டன் எலும்பு சூப், சீரகச் சம்பா மட்டன் பிரியாணி, கீழக்கரைநெய்ச்சோறு, குரும்பாடு நெஞ்சு சாப்ஸ், மிளகு மட்டன் சுக்கா, து. பருப்பு & சுரைக்காய் எலும்பு மட்டன் தால்ஸா, தயிர் வெங்காயம், வெள்ளைச் சோறு, ரசம், சிக்கன் லெக்பீஸ், விரால் மீன் ரோஸ்ட், இறால் க்ரேவி, பெப்பர் முட்டைன்னு தரமான மெனு!
சைவம் அசைவம் இரண்டுக்கும் பொதுவான மெனுவாக இருந்தது தக்காளி ரசமும், கெட்டி மோரும்! கடைசியாக ஒரு அற்புதமான முந்திரி பால் பாயாசமும், சூடான குலாப் ஜாமூன், வெனிலா ஐஸ் க்ரீமும் ஃபைனல் டச்சாக பரிமாறினார்கள்! நமக்குத் தான் சைவம் என்றாலே குமட்டிக் கொண்டு வரும் என்று உலகமே அறியுமே!
ஒரு வழியாக மூக்கைப் பொத்திக் கொண்டு சைவ உணவுப் பந்தியை கடப்பதற்குள் மயக்கமே வந்துவிட்டது! தடுமாறி ஒரு சேரில் அமர்ந்ததும் பெப்பர் தூக்கலாகப் போட்ட மட்டன் சூப் ஒரு கிளாஸ் தந்தனர் அதைக் குடித்த பின்பு தான் மயக்கம் தணிந்தது! பந்தி துவங்கும் நேரத்தை அறிய ஒற்றர் படை வைத்திருக்கும்..
உலகின் ஒரே தனிமனிதனான எனக்கு தகவல் தெரிந்தது.. முதல் ஆளாக பந்திக்கு வந்து அமர்ந்தது எல்லாம் பெரிய விஷயமல்ல! பந்தி நிறைந்த அடுத்த நொடி இன்னொரு பந்திக்கு அமரும் அளவு ஆட்களும் பந்திக்குள் நுழைந்தனர்! அவர்களும் நமக்கு நேர் பின்னே VVIPகளோடு நிற்கும் செக்யூரிட்டி போல நின்றனர்!
நமக்கு இலை விரித்த போதே சீக்கிரம் சாருக்கு பரிமாறுங்கப்பா என்று அவர்கள் பேச்சில் வலை விரித்தனர்.! பந்தி பரிமாறுபவர் பிரியாணியோடு கறி எடுக்கும் போது பார்த்து பார்த்து எலும்பு இல்லாத கறியா போடுங்கப்பா என்றார் ஒரு பின்னணிக் காவலர்! எலும்புன்னா நாம் சாப்பிட லேட்டாகுமாம் அதான் இந்த அக்கறை!
இன்னொருத்தர் யப்பா சாருக்கு சுக்கா வறுவல் இன்னும் வரலை என்றார்! இன்னும் மீனை இவர் தொடவே இல்லை பார்த்தியா? சார் முட்டை மசாலா உங்களுக்கு வைக்காம போயிட்டாங்க.. லெக் பீஸ் கடிச்சிட்டு வச்சிட்டார் நல்லா இல்ல போல.. வெள்ள சோறு குறைவா வாங்கிருக்கார் அதிகம் சோறு சாப்பிடமாட்டாரோ..
என தமது பின்னணிக் குரலில் SPB யைவிட அதிகப் பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர்! அதில் ஒருவர் பாயாசம், ஜாமூன் எல்லாம் ஸ்வீட்! சாருக்கு சுகர் இருக்கும் அதெல்லாம் வாங்க மாட்டார் என்றார்! நான் இவர்களுக்கு சிறிது ஆட்டம் காட்டலாம் என்று நினைத்தேன்! பிரியாணி, சோறு, ரசம் வாங்கிட்டு இப்போ..
பாயாசத்தை வாங்கப் போன போது மணவீட்டு நண்பர் வந்து அட வெங்கி நீங்களா! பிரியாணி எப்படி இருந்துச்சு திரும்ப தரவா என்றதும் “ யோவ் அந்தாளு தான் பாயாசத்துக்கே வந்துட்டானே இப்ப அவன்ட்ட போய் எதுக்கு பிரியாணி வேணுமான்னு கேக்குற” என்ற பின்னணியினரின் மைண்ட் வாய்ஸ் என் காதில் கேட்டது!
அதுக்கென்ன நல்லா நாலு நல்லி எலும்புடன் பிரியாணி என்றேன்! பின்னால் மளுக்கென எலும்பு முறிந்தது போல ஒலி கேட்டது! அது பலகீன இதயங்கள் உடைந்த ஒலின்னு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது! பிரியாணியையும் கறியையும் எவ்வளவு மெதுவாக ரசித்து ருசிக்க முடியுமோ அவ்வளவு மெதுவாக ருசித்தேன்!
பின்குறிப்பர்களின் சலசல சப்தமும் கூடிய போதுநல்லி எலும்பை எடுத்து மேசையில் நீதிபதி ஆர்டர் ஆர்டர் எனத் தட்டுவது போல தட்டினேன்! அவர்களும் தமது அப்ஜெக்ஷனை இது ஓவர் ரூல்யா என்பது போல வெளிப்படுத்தினர்! பொரிச்ச விரால் மீனை சூடா கொண்டு வந்து இப்ப பரிமாறவா என்றார் மணவீட்டு நண்பர்!
பின்னால் ப்யூஜியாமா எரிமலையே வெடித்தது! சார் அவரு முதல்ல வாங்கின மீனையே இன்னும் சாப்பிடலை என்றார் ஒரு SPB.. அப்ப இறால் க்ரேவி கொண்டு வர்றேன் தயிர் வாங்கி சாப்பிட்டு பாருங்க என்றார் நண்பர்! என் பின்னே நின்றவர் தனது போனில் ங்கோத்.. ங்கொ.. எனத் திட்டுவது போல திட்டிக் கொண்டே கிளம்பினார்!
நான் தயிரும் இறாலும் சாப்பிட்டு, பாயாசமும் சாப்பிட்டு விட்டே கை கழுவ எழுந்தேன்! நான் ஐஸ்க்ரீம் வாங்கும் போது தூரத்தில் என் பின்னே நின்ற அதே நபர் 2 வது பந்தியிலும் ஒருவர் பின்னே நின்றிருந்தார்! அவரிடம் போய் நீங்க இலங்கையா தம்பி? என்றேன்! எதுக்குணே அப்படி கேட்டிங்க என்றார் புரியாமல்…
நிறைந்தது..