Thursday, 13 February 2025

🐓சேவல்கறி 🐔

“சண்டைச் சேவல் கறிக் குழம்பு”

பொதுவா நாட்டுக்கோழிக் குழம்புக்கு நாட்டுக்கோழி அடிப்பது வேறு! சண்டைச் சேவல் நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்டு இருக்கிங்களா? சேவற் சண்டையில் ஒரு கண் போனது, இறக்கை அடி வாங்கியது, நிறைய அலகு குத்து வாங்கியது, காலில் அடிபட்டது போன்ற சேவல்களை பலர் கறிக்கு விற்றுவிடுவார்கள். இந்தச் சேவல்கள் எல்லாம் ஆட்டுக்கறியை விட கடினமானவை!

குக்கரில் வேக வைத்தால் கூட 10 - 12 விசில்கள் வைத்தால் மட்டுமே ஓரளவு நன்கு வேகும்! உசிலம்பட்டி செல்லும் வழியில் செக்கானூரணி அருகே இதை அற்புதமாக சமைப்பார்கள்! நல்ல கொதிக்கும் நீரில் 2 மணிநேரம் ஊறவைத்து இறக்கை மற்றும் மயிர்களை அகற்றி சுத்தம் செய்து பிறகு மீண்டும் கொதிக்கும் நீரில் 3 மணிநேரம் மூழ்க வைத்து அதன் பின்பே சமைப்பார்கள்!

சமையலிலும் கறி கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேல் குழம்பில் வேகும்! இப்படி சமைத்தால் தான் அப்படியே திருநெல்வேலி அல்வா போன்ற பதத்தில் அந்தக் கறி வெந்திருக்கும்! ரோஜா இதழ்களை பறித்தது போல கறி எலும்பில் இருந்து கழன்று வரும்! கசகசா, தேங்காய், முந்திரி அரைத்த மசாலாவுடன் கிராம்பு, ஏலம், பட்டை மசாலா வாசத்துடன் அதை ருசிப்பதே பேரானந்தம்!

அதிலும் செக்கிலாட்டிய நல்லெண்ணெய் சொட்டச் சொட்ட அந்தக் குழம்பை சுடு சோற்றில் போட்டு பிசைந்து கூடவே அவித்த நாட்டுக் கோழி முட்டையோடு உண்பதே பூலோக சொர்க்கம் எனப்படும். கார் டயரைப் போன்ற கறியை பஞ்சு மிட்டாய் போல வேகவைத்து தருவது பெரிய பக்குவம் ஆகும்! கிட்டத்தட்ட ஓர் இரவு முழுக்க இந்தக் கறி வெந்தால் மட்டுமே இந்த பக்குவம் கிடைக்கும்!

இன்றும் மதுரையில் இந்த சண்டை சேவல் கறி மிக மிக பிரபலம்! மிக மிக டிமாண்ட்!! ஏனெனில் பாக்யராஜின் முருங்கையை விட இது முந்நூறு மடங்கு வீரியம் உடையது என்ற நம்பிக்கையே! இன்றும் புது மாப்பிள்ளைக்களுக்கு மறுவீட்டில் தருகின்ற விருந்தில் சேவல் கறி முதலிடம் பிடித்து இருக்கிறது! உருளைக்கிழங்கு, சோயா பீன்சுடன் முக்கால் கிலோ சேவல் கறியுடன்..

சாஃப்டான பிராய்லர் கோழி 1/4 கிலோ சேர்த்து சமைப்பது மதுரைப் பக்கத்து விருந்து வழக்கமாகும்! சேவலின் அந்தரங்கப் பகுதி, ஈரல், மாங்கா, கழுத்து, மண்டை, கால் போன்றவை நிச்சயம் நாம் ருசிக்க வேண்டிய ஒன்றாகும்! இந்த பாகங்கள் இதன் ருசியை மட்டுமின்றி ருசிகரமான தாம்பத்ய உறவுக்கும் காரணம் என நம்புகின்றனர்! இந்தக் குழம்பை சோற்றுக்கு மட்டுமின்றி..

இட்லி, தோசை, ஆப்பத்திற்கும் ஆபத்தில்லாத அல்டிமேட் தொடுகறி ஆகும்! இந்தக் கறியில் பிரியாணியும் செய்யலாம்! எலும்புக் கறி, பருப்பு, சுரைக்காய், மாங்காய் போட்ட தால்ஸாவும், தயிர் வெங்காயமும் உங்களை ஒரு சட்டி பிரியாணியை ருசிக்க வைக்கும்! இதிலும் அவித்த முட்டை தனி! சூடான கோதுமை புரோட்டா, சப்பாத்தி, ரொட்டி வகைகளுக்கும் இந்த சேவல் கறிக்குழம்பு..

ஒரு நல்ல இணையாகும். புலாவ், ஃப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளுக்கும் பிரட், பன் போன்ற ரொட்டிகளுக்கும் சிறந்த தொடுகறி இந்த சண்டைச் சேவல் கறிக்குழம்பாகும்!

No comments:

Post a Comment