Monday, 17 February 2025

🍚 தயிர் சாதம்

#தாபா_ஸ்டைல்_தயிர்சாதம் 




தயிர் சாதம் என்றதும் என் நினைவுக்கு வருவது என் அப்பா செய்யும் தயிர் சாதம் தான்! சோற்றை நல்லா குழைய வடிச்சு அதை நன்கு ஆறவிட்டு, நீர் சேர்க்காமல் காய்ச்சிய ஒரு சொம்புப் பாலை சோற்றில் ஊற்றி அதை 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு ராசி புரம் எருமைத் தயிரை அதன் மீது தாராளமாக ஊற்றிப் பிசைந்து தாளிப்பில் கடுகு,உளுந்து,மிளகு, முந்திரி, வரமிளகாய் எல்லாம்..


போட்டு முதல் தாளிப்பும், சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி எண்ணெய்யில் தாளித்து இரண்டாவது தாளிப்பும் செய்து கொத்துமல்லி, பச்சை மிளகாய்,  இஞ்சியை அப்படியே சன்னமாக நறுக்கித் மேலே தூவி கடைசியாக உப்பு சரி பார்த்து சேர்ப்பார்! தயிர் சாதம் இருக்கும் பாத்திரத்தை மூடி ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து சுற்றிலும் ஐஸ் கட்டிகளை போட்டு வைத்துவிடுவார்! 


கை தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலை போல அப்பாவின் தயிர்சாத தயாரிப்பு இருக்கும்! மாங்காய் சீஸனில் இதில் கூடுதலாக புளிப்பு இல்லாத மாங்காய் துண்டுகள் இருக்கும்! இன்றைய ஸ்டைலில் மாதுளை முத்துகள், திராட்சை, அன்னாசி துண்டுகள் போடும் வழக்கம் அன்று கிடையாது! அதே போல ஊறுகாய் வகைகள் மட்டுமின்றி பருப்பு,புளி, பச்சை மிளகாய் கூட்டு ஒன்று வைப்பார்! 


பார்க்க புளியோதரை காய்ச்சல் போலவே இருக்கும் அந்த பருப்பு காய்ச்சலோடு தயிர்சாதத்தை ருசிப்பதே பேரின்பம்! ஆம்! உங்களுக்கு எவ்வளவு காய்ச்சல் அடித்தாலும் அந்த தயிர்சாதத்தை ரசித்து ருசிப்பீர்கள்! அந்தளவுக்கு ருசியாக இருக்கும்! அதிலேயே வெல்லம் போட்டு ஒரு இனிப்பு பச்சடியும் செய்வார்! இந்த இரண்டு காய்ச்சல்களுமே ருசியில் ட்வின்ஸ் என்றே சொல்லலாம்! 


இந்த தயிர்சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எத்தனையோ ஊறுகாய் இருந்தாலும் எலுமிச்சை & நார்த்தங்காய் ஊறுகாய் போல சிறந்த காம்போ வராது! ஆவக்காய், மாங்காய் எல்லாம் இரண்டாம் இடம் தான்! வத்தக் குழம்பு இருந்தால் இதற்கு இன்னும் ஒரு ஸ்டார் கூடும்! இந்தத் தயிர்சாதம் எந்த ஒரு அசைவ சைட்டிஷ்களுக்கும் ஏற்றது அல்ல என்பது என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து! 


இந்தத் தயிர்சாதம் ஒரு அம்பி தான்! ஆனால் அசைவ உணவோடு மட்டும் அந்நியன் ஆகிவிடும்! இதுவே காரா சேவு, காரா பூந்தி, முந்திரி பக்கோடா, சூடான மசால் வடை போன்ற காதலிகள் கிடைத்துவிட்டால் ரெமோ ஆகிவிடும்! இப்படிப்பட்ட தயிர்சாதம் சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தது! தற்செயலாக கோவை சென்றிருந்த போது ஒரு தாபாவில் இந்த அற்புதம் தென்பட்டது!


அப்பா காலத்து அதே ருசி இல்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட அதில் 70 மதிப்பெண்களை பெறும் அளவு இருந்தது! துடியலூர், காளப்பட்டி,  சாலைகளில் எல்லா தாபாகளிலும் இந்தத் தயிர் அமுதம் கிடைக்கிறது! இந்த மாதுளை, திராட்சை அட்ராசிட்டியை வேண்டாம் என்று சொல்லி வாங்கி விட்டால் ஃபினிஷிங்கில் அற்புதமான தயிர்சாதம் சாப்பிட்ட திருப்தியை அனுபவிக்கலாம்!


சின்ன வெங்காயம், முந்திரியை வதக்கியது இன்னும் சிறிது சிறப்பாக இருக்கலாம் என்பது மட்டுமே சிறு குறை! இதை முழு கத்திரிக்காய் போட்ட புளிக்குழம்புடன் சாப்பிட எல்லாம் பல பூர்வ ஜென்ம புண்ணியங்கள் செய்திருக்கணும்! அது எனக்கு வாய்த்தது! வெறும் தயிர்சாதம் தான் அதையும் பொறுப்புடன் நேர்த்தியாக செய்தால் நிச்சயம் உலகம் நம்மை வாழ்த்தும் என்பதே உண்மை! 

No comments:

Post a Comment