23
இந்த 23 எனும் எண்ணுக்கும் எங்கள் RISE ADVERTISING நிறுவனத்துக்கும் ஒரு அபூர்வ பந்தமுள்ளது! ஆம் 2 வது மாதமான பிப்ரவரியின் 3 ஆம் தேதி துவங்கப்பட்டது! எந்த ஆண்டு தெரியுமா 2003!! இதெல்லாம் தானாக அமைந்தது! எந்த ஒரு திட்டமும் நாங்கள் வகுக்கவில்லை! அப்படியே ஒரு ப்ளாஷ்பேக் போலாமா! கோவை சசி அட்வர்டைசிங் தான் எங்களை விளம்பரத் துறையில் வளர்த்த நிறுவனம்!
அதன் மதுரைக் கிளையில் கிறிஸ்டோபர், ஶ்ரீசைலம் இருவரும் என்னுடன் பணியாற்றியவர்கள்! அங்கு அவர்களுக்கு சீனியர் நான் என்றாலும் நாங்கள் அப்படி எந்த பாகுபாடும் பார்க்காது ஒன்றாக இணைந்து பணியாற்றினோம்! தனியாக விளம்பர நிறுவனம் துவங்கும் ஆசையெல்லாம் அப்போது இல்லை! ஆனால் வாழ்க்கை நாம் எதிர்பாராத ஒரு சூழலை உருவாக்கி அந்தச் சுழலுக்குள் நம்மை இழுக்கும்!
அப்படி ஒரு சூழல் அமைந்தது! 7 வருடங்கள் பணியாற்றிய நிறுவனம் உடனே ராஜினாமா தந்தால் ஏற்க மாட்டார்கள் என நம்ப்ப்பி ஜனவரி 27 ஆம் தேதி ராஜினாமா கடிதம் அளித்தோம்! நாங்கள் ஹேண்டில் செய்த க்ளையண்டுகளுக்கு எங்களுக்கு பதில் வரும் புதிய ஆட்களுக்கு டிரெயினிங் தரணும், நிறுவனத்திற்கு வர வேண்டிய பேமெண்ட் எல்லாம் வசூலிக்கணும். ராஜினாமாவை ஏற்க எப்படியும் 3 மாதங்களாவது ஆகும் என்றே நினைத்தோம்!
மூன்றே நாளில் (ஜனவரி30) உங்க 3 பேருடைய ராஜினாமாவும் ஏற்கப்பட்டதென முகத்தில் சப்பென்று ஓங்கி அறைந்தது போல சொல்லிவிட்டனர்! சற்று முன் வரை சொந்தவீடு போல நாங்கள் வளைய வந்த அலுவலகம் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே போகச் சொல்லிவிட்டது! திகைத்து போய் நின்றோம்! சொந்த வீட்டை விட்டு வெளியேறும் கெளரவம் பட சிவாஜி போல, முத்து பட ரஜினி போல எங்கள் நிலை!
நாங்கள் சொந்த நிறுவனம் துவங்கும் யோசனை கூட கால் திருக் குறள் அளவு தான் இருந்தது! இப்படி திடீர்னு அனுப்புவாங்க என்றெல்லாம் நினைக்கவில்லை! அது அலுவலகமாக இருந்ததால் நாங்கள் கதறி அழவில்லை! இயல்பு நிலைக்கு வரமுடியாமல் போனாலும் சமாளித்து முகத்தை சிரிச்சா போல வைத்துக் கொண்டு ரிலீவிங் ஆர்டரை கையால் பெற்ற விநாடி செல்போன் ஒலித்தது! என் தங்கையின் கணவர் தான்!
தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சொன்னார்! இதுவரை மனதில் கவ்வியிருந்த இருள் விலகி வெளிச்சம் வந்தது! மருமகன் பிறந்திருக்கிறான்! அப்ப புது நிறுவனமும் பிறக்கட்டும் எனது சொல்லாமல் சொல்லியது போல மகிழ்ச்சியைத் தந்தது அந்த சேதி! அடுத்த நாள் இரவே சென்னைக்கு பஸ்ஸில் டிக்கெட் போட்டோம்! எங்கள் வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை சில நல்ல உள்ளங்கள் சென்னையில் இருக்கிறார்கள்!
அவர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்யத் தான் கிளம்பினோம்! அப்போதும் உடனே நிறுவனம் துவங்கும் யோசனை இல்லை! சென்னை வந்து நண்பர் இயக்குநர் ராம் குமார் அவர்களை முதலில் சந்தித்தோம்! அவர் சுப்ரமணியன் எனும் நண்பரிடம் அழைத்து போனார்! அங்கு 30 நிமிடத்தில் எங்கள் கம்பெனி துவங்கியது!ஆம்! கம்பெனிக்கு என்ன பேருன்னு சுப்பிரமணியன் கேட்டார்!
அலோ சார்! ஒரு கம்பெனி துவக்க இடத்தின் அட்வான்ஸ், பேசிக் பர்னிச்சர்ஸ், மினிமம் ஒரு கம்ப்யூட்டர், பெயர்ப் பலகை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுன்னு ஒரு சிறிய பட்ஜெட் போட்டிருந்தோம்! அதுவே கையில் இல்லை! அதுக்குள்ள கம்பெனிக்கு பேரா?இங்க பாருங்க பணமெல்லாம் பின்னாடி ஏற்பாடு பண்ணிக்கலாம்! என்னென்ன பேரு நினைச்சு வச்சிருக்கிங்க சொல்லுங்க! பிப்ரவரி 3 ஆம் தேதி மிக நல்ல நாள்!
அன்று ஒரு பெயர் சூட்டுங்கள் பிறகு பணம் வந்தும் ஆரம்பிக்கலாம் என்றார்! நாங்க SUCCESS, SPARK, ORANGE & LEMON, RISE, ANTZ. என பெயர்களைச் சொல்ல சுப்பிரமணியன் RISE இந்தப் பேர் நல்லாருக்குப்பா! உங்க 3 பேருக்கும் செட்டாகும்! கம்பெனி நல்லா வளரும் என்றார்! 10 நொடிகளுக்கு முன்பு கம்பெனி, கம்பெனின்னு சொன்னது இப்போ RISE ADVERTISING என்று நாமகரணம் சூட்டப்பட்டு ரைஸ் ஆனது!
பிப்ரவரி 3 அன்று திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு அதிகாலை 5 மணிக்கே போயிடுங்க! ஒரு அக்கவுண்ட் லெட்ஜர் வாங்கி அதுல கம்பெனி பேரை கோவிலில் உட்கார்ந்து எழுதுங்க பிறகு சாமிகிட்ட வச்சி ஒரு அர்ச்சனை செய்துட்டு வந்துடுங்க! அவர் சொன்னதை இம்மி பிசகாமல் அப்படியே செய்தோம்! அன்று எங்கள் கையில் பணம் சில ஆயிரங்கள் தான் இருந்தன! ஆனால் கோடிக் கணக்கில் நம்பிக்கை இருந்தது!
பணம் ஒன்றைத் தவிர எங்களிடம் கோடிக் கணக்கில் உழைப்பும், கோடிக் கணக்கில் வணிக சிந்தனையும், கோடிக் கணக்கில் க்ரியேட்டிவிட்டியும் கொட்டிக் இருந்தது! அன்று நம்பிக்கையுடன் எங்கள் நிறுவனத்திற்கு பெயர் சூட்டினோம்! இயக்குநர் ஜி.பி. விஜய் (கமல் நடித்த கலைஞன் படத்தின் இயக்குநர்) எங்கள் வெல்விஷர்களில் ஒருவர்! எங்கள் அலுவலகம் ஆரம்பிக்க போட்டு வைத்த பட்ஜெட்டை நீட்டினோம்!
ஓ இவ்வளவு ஆகுமா என்னால் முடிஞ்சது இதுதான்னு ஒரு சின்ன தொகையை அவர் தந்திருந்தா கூட மகிழ்ந்திருப்போம்! ஆனால்.. மொத்தத் தொகையையும் தந்து எங்களை வாழ்நாள் நன்றிக் கடனுக்கு ஆட்படுத்தினார்! நண்பர் ராம்குமார் ஒரு படி மேலே போய் முதல் சில மாதங்கள் வியாபாரம் இல்லைன்னா என்ன பண்ணுவிங்க? இதை வச்சுக்கோங்கன்னு ஒரு தொகையை தந்து எங்கள் நன்றிக் கடன் லிஸ்டில் இணைந்தார்!
மதுரை வந்து ஆடிட்டர் ஒருவரை சந்தித்து முறைப்படி இன்கம் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ் எண்கள் வாங்கி, பார்ட்னர்ஷிப் டீட் போட்டு அலுவலகம் இல்லாததால் வீட்டு விலாசத்திலேயே கம்பெனியின் பெயர் பதிந்து நிமிர்ந்தபோது கை கொடுத்த தெய்வம் எங்கள் ந.க. லிஸ்டில் வந்தார் மேலமாசி வீதி VVB ஜோதிப்பிரகாசம் அண்ணாச்சி!அவர் தான் எங்கள் அலுவலகத்திற்கு இடம் தந்த பெருமகனார்! அட்வான்ஸ் & வாடகைக்கு இடமும்..
(இன்றுவரை 23 வருஷமா அதான் ஆபிஸ்) அவ்வப்போது நல்ல ஆலோசனையும் தந்தவர்! முதல் இருமாதங்கள் ஒரு வியாபாரமும் இல்லை! சென்ற இடம் எல்லாம் சுவரில் அடித்த பந்து போல திருப்பிவிடப்பட்டோம்! எங்கள் விசிட்டிங் கார்டை மட்டும் வைத்து முதலில் வணிகம் தந்தவர் மதுரை விநாயகா ஃபர்னிச்சர் சுரேந்திரன் அண்ணாச்சி தான்! அதன் பிறகு எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை தந்தது போத்தீஸ் தான்!
போத்தீஸ் முருகேஷ் அவர்கள் இல்லாமல் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை எண்ணிக்கூட பார்க்க முடியாது! தங்கமயில், ராஜ்மஹால் இந்த இரு நிறுவனங்கள் தான் எங்களது முன்னாள் சசியின் க்ளையண்டுகள்! தனித்து நாங்கள் வந்தது அவர்களுக்கு தெரியும் என்றாலும் சசியுடன் இருந்த ஒப்பந்தம் காரணமாக எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை! வெளியே வந்து நாங்கள் நன்கு இயங்கி வருவது தெரிந்து எங்களை அழைத்தனர்!
அதன் பிறகு துவங்கியது எங்கள் காலம்! கடின உழைப்பு, வித்யாச சிந்தனைகள் எல்லா இடங்களிலும் எங்களை மேலே தூக்கி நிறுத்தியது! அனைவரையும் மதித்தோம், எவரையும் பாராட்டத் தவறாமல் இருந்தோம், திறமைக்கு வாய்ப்பளித்தோம், கால்களில் நடக்கப் பழகினோம் சாதனைகள் எல்லாம் அதுவாக நிகழ்ந்தது! விளம்பர உலகம் எங்களைப் புகழ்ந்தது! அதனை தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை!
அடுத்த வேலைக்கு ஆயத்தமானோம்! எங்கள் உழைப்பின் மூலமே நாங்கள் பதில் தந்து கொண்டிருந்தோம்! மதுரையை தொடர்ந்து சென்னையில் கிளை துவக்கினோம்! 23 வருடங்களுக்கு முன்பு சென்னையில் அலுவலகமே இன்றி எந்தச் சாலையில் நின்று செய்வதறியாமல் திகைத்தோமோ பின்னாளில் அதே சாலையில் சென்னைக் கிளையை திறந்தோம். பிறகு கோவை! எங்கள் வணிகம் வளர்ந்தது நாங்களும் அதோடு வளர்ந்தோம்!
இதோ இன்று போத்தீஸ், தங்கமயில் இரு நிறுவனங்கள் மட்டும் கிட்டத்தட்ட 100 கிளைகள் வந்துவிட்டது! அவர்களோடு சேர்ந்து நாங்களும் வளர்ந்திருக்கிறோம்! இதெல்லாம் போக ஈவண்ட்/ வெட்டிங் மேனேஜ்மெண்ட் துவக்கி அதிலும் சாதித்தோம்! சாதிக்க இருக்கிறோம்! 22 வருடங்களுக்கு முன் அதிகாலை இருளில் வடிவுடையம்மன் கோவிலுக்கு போனது இன்றும் நினைவிலுள்ளது! ஆம் நாங்கள் ஏறி வந்த ஏணியை மறக்கவில்லை!
23 கடந்து இன்னும் சாதிப்போம் 💖💖
No comments:
Post a Comment