Wednesday 4 June 2014

ஒரு துளி காமம்...

நீ உதடு குவித்து ஊதும் அழகை

காண்பதற்கென்றே திரும்பத் திரும்ப

முன்னால் வந்து விழுகிறது உன் 

கற்றைக்கூந்தல்.!


ஒரு குடை க்குள் இருவரும் 

இருந்த போது

வந்த மழை வரம்

நின்ற மழை சாபம்..!


நான் தேநீர் அருந்திய அதே கோப்பையில்

நீயும் அருந்துகிறாய்... அட இதுவும் முத்தம் தான்.!


முத்தத்தை நெற்றியோடு நிறுத்திக்

கொள்ளலாம் என்ற என் முடிவு 

ஒவ்வொரு முறையும் வெற்றி 

பெறுவதே இல்லை.!


என் அருகில் அமர்ந்து கொண்டு

எந்த இனிப்பு உங்களுக்கு பிடிக்கும்

என்று கேட்கிறாய்.... இது உனக்கு 

அபத்தமாக தெரியவில்லை..?


உன்னுடனான எந்த போட்டியிலும்

வெற்றியோ தோல்வியோ... நான் 

நிச்சயிக்கும் ஒரே பரிசு..!முத்தம்.


உன் பத்து விரலிலும் காயாத மருதாணி 

இருந்ததால் தடை இருக்காதென நான்

துணிச்சலுடன் முத்தமிட முனைந்தேன்

இப்போது என் முகமெல்லாம் மருதாணி.


உன் வீடு செல்ல நீ ஏறும் பேருந்தை

மிகத்தாமதமாக ஓட்டி வந்த ஒட்டுனர்

தான் எனக்கான காதல் தெய்வம்..!


மழை வரும் அடையாளம்.. மாடியில் 

உலர்ந்த துணிகளோடு உன்னையும் 

காணவில்லை..!


உன்னை மறக்க முயன்று 

உன்னையே நினைத்துக்

கொண்டிருக்கிறேன்..!

No comments:

Post a Comment