Tuesday 17 March 2015

தீனா..2015

தீனா "கொரலு"©

இந்த எள்ளு கீதே அத்து தம்மாத்தூண்டு தான் இருக்கும் அதுல இர்க்குற பொளவு எவ்வளவு சிறுசா இர்க்குமோ அந்த அளவுக்கு கூட யாருமேலியும் நாம பகைய நெனிக்கக்கூடாது.. அப்டி நெனைக்க சொல்லோ அந்த தம்மாத்தூண்டு நெனப்பே ஒரு வம்சத்தியே அழிச்சிருமாம்..!

"எள் அளவு பகைதான் ஒரு வம்சத்துக்கு எள்ளு தெளிக்கிற பகை"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு.

[பொருட்பால் : அதிகாரம் : உட்பகை : குறளெண் :889]


தீனா "கொரலு"©

டைட்டா கட்டி புட்ச்சிகினு இர்க்க சொல்லோ எங்க இவுளுக்கு நோவுமேன்னு ஆம்பளை நெனிச்சுகினே கைய கொஞ்சம் லூசாக்குனா அந்தய சின்ன கேப்ப கூட தாங்காத பொம்பள நெனிப்பாளாம் இன்னாடா இது இந்த ஆளுக்கு நம்ம மேலே அன்பு குறஞ்சிட்ச்சா இல்ல நம்மள பிரிய போறானான்னு நெத்திய சுர்க்குவாளாம்..! 

"நீ கெட்டியா கட்டிப்புடிக்காத பொண்ணு.. அதுக்கு உடனே கலங்குமாம் கண்ணு"

குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

[இன்பத்துப்பால் : அதிகாரம்: உறுப்புநலனழிதல் : குறளெண்: 1238]


தீனா "கொரலு"©

கைல கத்திய வச்சிகினு குத்தவர்ற விரோதிய கண்டா கூட நீ மெர்சலாவாதே.. ஆனா உன் கூடவே  இர்ந்து நல்லவனா ஆக்ட் குட்த்து உனுக்கு குழி பறிக்காறான் பாரு பேமானி அவுன கூடவே வச்சிக்கினு இர்ந்தா நீ பயந்தே ஆவணும்.! "எதிரிய நம்பு..துரோகிய நம்பாதே" 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

வாள்போல பகைவரை அஞ்சற்க;அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு.

[பொருட்பால் : அதிகாரம்: உட்பகை : குறளெண் : 882]


தீனா "கொரலு"

உன்னிய மதிக்காத ஆளோட பின்னாலியே போயி அவுன தாஜா பண்ணிகினு உசுர் வாழ்றதவுட  அவுன் பின்னால போறதில்லன்னு வய்ராக்கியமா இர்ந்தேன்னு வய்யி.. அப்ப நீ அழிஞ்சா கூடொ அது நல்லது..! "மதிக்காதவன் பின்னால போறதவுட மண்டயவே போட்டுறலாம்"சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.

[பொருட்பால் : அதிகாரம்: மானம் : குறளெண்: 967]


தீனா "கொரலு"

ஒருத்தன் பொறாம பட்றதால அவுனுக்கு பெருமை வராது அத்த படலின்னாலும் கிடைக்கிறவனுக்கு கிடைக்காம போவாது. "கிடைக்கிறது கிடைக்காம இர்க்காது.. கிடைக்காம இர்க்குறது கிடைக்காது" அட 2ஆயிரம் வரதுக்கு மின்னாலயே சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதிலார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

[அறத்துப்பால் : அதிகாரம்: அழுக்காறாமை : குறளெண்: 170]

தீனா " கொரலு" 

உன்னிய பெத்து போட்ட மவராசி பசியால துடிச்சிக்கினு இர்க்குறத கூட நீ பாக்கலாம்.. ஆனா அதுக்காக பெர்ய  மன்சங்கோ கிட்ட வம்பு பண்ணி பார்க்கதே.

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

[பொருட்பால் : அதிகாரம்: வினைத்தூய்மை : குறளெண்: 656]

தீனா "கொரலு" 

பின்னாடி இன்னா நடக்குமுன்னு தெர்யாம இன்னொர்த்தரு கய்யில இர்க்குற பொருளுக்கு ஆசப்பட்டா நீ காலி..அப்படி ஆசைபடலைன்னா உன் வாழ்க்கை ஜாலி.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு.

[அறத்துப்பால் : அதிகாரம்: வெஃகாமை : குறளெண்: 180]


தீனா "கொரலு" 

எம்மாம் பெர்ய கஸ்டம் வந்தாலும் நியாயமா உழச்சிகினே இர்க்கணும்.! அப்டி உழச்சி வந்த துட்டுல  நீ  தெளிஞ்ச  தண்ணி மேறி கூழு காச்சி குட்ச்சாலும் அத்து வட பாயசத்தோட விருந்து துண்ணதுக்கு சமானம்..!

"உழச்சு குடிக்கிற கூழு... அது உனுக்கு விருந்து சோறு"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள் தந்தது

உண்ணலினூங்கினியது இல்.

[பொருட்பால் : அதிகாரம்: இரவச்சம் : குறளெண்: 1065]


தீனா "கொரலு" 

மன்சனுக்கு சாவுன்னாலே சோகம் தான் ஆனாஅந்த சாவே எப்ப தெரிமா சந்தோஸ்மா மாறும்.. ரொம்ப கஸ்டத்துல இர்க்க ஒரு ஏழை உன்னாண்ட வந்து ஒதவி கேக்க சொல்லோ அத செய்ய மிடியாத நெலயில வர்ற சாவு இர்க்கே அதான் நல்ல சந்தோஸ்மான சாவாம்..! பிரிறாமேறி சொன்னா... 

"ஒதவி செஞ்சு வாழு..மிடியாட்டி சந்தோஸ்மா சாவு"....

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்

ஈதல் இயையாக் கடை.

[அறத்துப்பால் : அதிகாரம்: ஈகை : குறளெண்: 231]


தீனா "கொரலு" 

மன்சனுக்கு காத கொட்த்து இர்க்கிறதே நல்லத கேக்கத்தான்.! அத்த செய்யாம எப்பயுமே வக்கிணியா துண்ணுகிட்டே இர்ந்தா நீ வாழ்றதும் ஒண்ணு தான் சாவறதும் ஒண்ணு தான் "காதுக்கும் வோணும் டேஸ்ட்டு... இல்ல நீ வாழ்றதே வேஸ்ட்டு" சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

[பொருட்பால் : அதிகாரம்: கேள்வி : குறளெண்: 420]


தீனா "கொரலு" 

பூ மேறி சிர்ச்ச மூஞ்சி, சந்தோஸ்மான மன்சு இப்டி இர்க்குவறங்கோ காண்டானா இன்னாகும்?சிர்ச்ச மூஞ்சி கோரமாகி மன்செல்லாம் வெறியாகும் அந்த நிம்சம் நீ மன்சனாவே இர்க்க மாட்ட. மன்சனுக்கு கோவத்த வுட பெர்ய எதிரி வேற ஏதும் இல்லபா.! "சிர்ச்சு வாய்ந்தா லாபம்... உனுக்கு பெர்ய எதிரி கோவம்"

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.

[அறத்துப்பால் : அதிகாரம்: வெகுளாமை : குறளெண்: 304]

தீனா "கொரலு" 

"லேட்டா செய்றத லேட்டஸ்ட்டா செய்யி".. பாஸ்ட்டா செய்றத ஜுட்டா செய்யி" அட! இத்த 2ஆயிரம் வர்சத்துக்கு மின்னாடியே சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

எந்த கார்யத்த உட்னே செய்யணுமோ அத்த தள்ளி போடாம அப்யே செய்ணும், அத்தே மேறி அப்பால செஞ்சுக்கிலாம்ன்னு இர்க்குற வேலய இப்பவே செய்றதும் தப்பு.. அத்த ஒயுங்கா நிதானமா செஞ்சாலே போதும்.! 

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க

தூங்காது செய்யும் வினை.

[பொருட்பால் : அதிகாரம்: வினை செயல்வகை : குறளெண்: 672]


தீனா "கொரலு" 

தவமிர்க்குற சாமி கண்க்கா வேசங் கட்டிக்கினு அதுக்கு சம்பந்தமே இல்லாத வேலய செஞ்சுனுக்கிற டுபாக்கூரு சாமியாரு... பொதர்ல மர்ஞ்சி நின்னு பறவய வல வீசி புடிக்கிற வேடன் மேறி அவுனாண்ட நீ உஷாரா இரு..! பிரியற மேறி சொன்னா...

"வேசம் கட்ன சாமியாரும்.. வேடன் விர்ச்ச வலையும் ரெண்டுமே ஒண்ணுதாங்"

ரண்டாயிரம் வர்சத்துக்கு மின்னாடியே நம்ம தல சோக்கா சொல்லிக்கீரார்பா

தவம்மறைந்து அல்லது செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

[அறத்துப்பால் : அதிகாரம்: கூடாவொழுக்கம் : குறளெண்: 274]

No comments:

Post a Comment