#யாம்_பெற்ற_இன்பம்
அசைவ உணவுப் பிரியனான நான் சைவத்திற்கு மாறியது எனக்கே ஆச்சரியமாக இருந்தாலும் இந்தப்பதிவு அதைப்பற்றி அல்ல.! கடந்த சனிக் கிழமை மதுரை செல்ல எக்மோர் வந்தேன்.
இதுபோன்ற பயணங்களில் எப்போதும் எக்மோர் புகாரியில் தான் உணவு என்னும் பழங்கதைகள் பல்லிடுக்கில் மாட்டிய கறித்துணுக்குகளாக நினைவிடுக்கில் வந்து போனாலும்.. புத்தன் வழியில் ஆசைகளை அடக்கிக் கொண்டு சைவ கடையான நம்ம வீடு வசந்த பவனில் நுழைந்தேன். 4 இட்லி சாப்பிட்டு கம்யூசனித்தை நிலை நாட்ட கை கழுவ எழுந்தேன்.
சூபர்வைசர் கேட்டார் "டிபன் போதுமா சார்" என்று.. சைவக்கடையில் புதிதாக வேறு என்ன உணவு இருக்க முடியும் என்ற அலட்சியக் கேள்வி என் வாயில் இருந்து விழுந்தது. சூபர்வைசரின் தன்மானம் எழுந்தது.. கறிதோசை சாப்பிடுறிங்களா.? என்றார்.. கை கழுவப்போன என் கம்யூனிசத்தை உடைத்தெறிந்தது அந்த முதலாளித்துவமான உணவின் பெயர்..!
என்ன கறிதோசையா.? அதுவும் சைவக்கடையிலா அவர் சொன்னது தவறாக எதும் காதில் விழுந்து விட்டதா என்ற சந்தேகம் கூட எழுந்தது.அதை உறுதிப்படுத்திக் கொள்ள அவரிடம் மீண்டும் பாஸ் என்கிற பாஸ்கரன் பட ஆர்யா போல நான் பாடேன் என்றேன் அவரும் பார்டன் என்ற அர்த்தத்தில் புரிந்து கொண்டது போலவே பதிலளித்தார். ஆமா ஸார் கறிதோசையே தான்.
நான் சைவமுங்க என்றேன்.. யோசிக்காது.. சார் இது சைவக்கடைதானே நான் சொன்னதும் வெஜ் கறி தான் ஆனால் அசைவ கறி தோசை போலவே இருக்கும் என்றார். ஆர்டர் செய்தேன். கரம் மசாலா மணக்க வெஜ் குருமா 3 சட்னிகள் சகிதம் காளான், பனீர், தக்காளி துண்டுகள் இறைச்சித் துண்டுகள் போல வெட்டப்பட்டு மிளகு தூள் தூவப்பட்ட கறி தோசை சூடாக வந்தது..!
ஆஹா அப்படி ஒரு ருசி.! மிக அற்புதமாக இருந்தது. அப்படியே அசைவக் கறி தோசையின் சுவை மாறாது இருந்தது அசைவ பிரியர்களுக்கும் இது நிச்சயமாக ரொம்பப் பிடிக்கும்.!
நான் மகாராஜாவாக இருந்தால் நம்ம வீடு வசந்த பவனுக்கு பாதி ராஜ்யத்தை எழுதி தந்திருப்பேன்.. ஆனால் சாதாரணன் தானே எனவே தான் இதை பதிவாகத் தருகிறேன்..!
நண்பர்களே..! ஒரு முறை அந்தப்பக்கம் சாப்பிடப் போனால் நிச்சயமா இந்தக் கறி தோசையை சுவைத்துப் பார்க்க மறந்துடாதிங்க..! ஓகே.
No comments:
Post a Comment