Thursday 12 November 2015

காதல் வேட்டை பார்ட் -1

#வேட்டைக்காரன்

பார்ட் - 1

நான், ஆஸ்டின், மகேஷ் மூன்று பேர் தான்... எங்கள் வேட்டையாடு விளையாடு பிரசித்தமானது அல்ல... ஆனால் எங்களுக்கு அது ஒரு நேஷனல் ஜியாகிராபி அனுபவம் தந்தது... மதுரை முத்துப்பட்டி..! பழங்காநத்தம் தாண்டி திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடது புறம் ரெயில்வே டிராக் தாண்டி செல்லவேண்டும்.!

அங்கிருந்து அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டரில் ஒரு பாரம்பரிய கிராம அனுபவம் (அன்று) முத்துப்பட்டி இன்று வளர்ந்து நகராகிவிட்டது ஆனால் அப்போது அது கிராமம் தான். இராமநாதபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க என் தாத்தா காலத்தில் எனது உறவினர்கள் கூட்டம் குடியேறிய ஊர்.

தெருவுக்கு நாலு சித்தப்பா அஞ்சு மாமா ரெண்டு பெரியப்பா என என் உறவுக் கூட்டம் இருந்த.. இருக்கும் ஊர். ஊரின் மந்தையைக் கடந்து நேராக சென்றால் இருபக்கமும் வயல்கள் பம்புசெட் என பாரதிராஜா படம் போல இருக்கும் அந்தப்பாதையின் இறுதியில் இடது புறம் அவனியாபுரம் வலதுபுறம் திருப்பரங்குன்றம்..!

எங்கள் வேட்டைக் காடு இங்கு தான் ஆரம்பம்.. பச்சைப் பாம்புகள் கட்டுவீரியன் சில சமயம் நல்ல பாம்புகளை ஸ்டீவ் இர்வினாக மாறி பிடித்தும் அடித்தும் இருக்கிறோம்.. பயமறியா வயது அது..அதிலும் பச்சைப் பாம்பு.. பறக்கும் செடிக்குக் செடி மரத்துக்கு மரம் அதன் வேகம் அபாரமானது ஆபத்து என்றால்கண்களை குறிவைத்து தாக்கும் பாம்பு இது இதை விரட்டி பிடிப்பது என்பது எங்களுக்கு மிகப் பெரிய சவால்.!

10 வேட்டைகளில் 7 வேட்டைகளை கச்சிதமாக முடித்த ரெகார்டு சச்சினின் 100சதத்திற்கு கொஞ்சமும் குறைந்ததில்லை.. என் கனவு தேவதையான (அந்த ஊருக்கே தேவதை) ப்ளஸ் டூ (ஜுவாலஜிகிளாசுக்கு) படிக்கும் நான்ஸி  கேட்டாள்
வெங்கி ஒரு பாம்பு வேணுண்டா பிராக்டிகல் க்ளாசுக்கு.. 

மானசீக காதலியின் மயக்கும் குரல் செவிகளில் ஒலித்த பின் சினங்கொண்ட சிறுத்தையாய் புயலென புறப்பட்டேன் வேட்டைக்கு.. அன்று தான் முதன் முதலாக கண்டேன்...ஒரு கரு நாகத்தை... கிட்டத்தட்ட 6 அடி நீளம் ஒரு இட்லியின் சுற்றளவில் தேகம் கருகருவென வெல்வெட் பளபளப்பில்..

வழக்கம் போல ஓடும் பாம்புகள் போல் இல்லாது திரும்பி நின்று எதிர்த்தது.. தரையில் இருந்து நான்கடி..உயரத்தில் நின்று சீறியது.. கொஞ்சம் அடி வயிற்றில் கலங்கியது. தளராது.. அதைப் பிடிக்க தயாரானோம்.. சத்தியமாக அப்போதெல்லாம் டிஸ்கவரி சானல்கள் இல்லை இருந்திருந்தால் நான் இப்போது அதில் பணி புரிந்து இருக்கலாம்.. 

ஒரு வழியாக ஆஸ்டினின் துப்பாக்கியை வைத்து அதன் படமெடுக்கும் தலையை நசுக்கினோம்..மகேஷ் அதன் உடலை பிடிக்க நான் அதனை ஒரு பாலிதீன் கவரில் அடக்கினேன். இவ்வளவு நேரம் சீறிக் கொண்டிருந்த அந்த பாம்பு இப்போது பானுமதியைக் கண்ட வெங்கடேஷாக அடங்கிக் கிடந்தது.

ஒரு வழியாக அதை நான்ஸி வசம் சேர்க்க அடுத்த நாள் அவள் பள்ளியே அல்லோலகல்லோலப் பட்டிருக்கிறது அந்த பாம்பின் சீற்றத்தால்.. அதன்பின் ஒரு வாரம் நான்சி என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. ஒரு பாம்பு சீறியதற்காக அதை விட என்னிடம் அதிகம் சீறிவிட்டாள் அவள்.

ஒரு வழியாக கிறிஸ்துமஸ் வர கேக் கொடுத்து பழம் விட்டுக் கொண்டாள்.. ஒரு நாள் ஆஸ்டினின் துப்பாக்கியோடு அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன் ஊரின் ஒதுக்குப்புறத்தில் அவள் வீடு அமைந்திருந்தது.. அவள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது ஓடி வந்தது ஒரு செம்போத்து..!

செம்போத்து என்பது ஒரு கோழி போல.. அதன் கறி அவ்வளவு ருசியாக இருக்கும்.. நான் பெரிய வேட்டைக்காரன் என்னும் நினைப்பில் வெங்கி அதை பிடிச்சு தர்றியா என்றாள் அதே கொஞ்சும் குரலில்.. வேட்டையில் ஆஸ்டினும் மகேஷும் கில்லி குறிபார்ப்பது சுடுவது எல்லாம் அவர்கள் தான்.

நான் விறு விறுவென ஓடி.. மரமேறி அவர்கள் சுட்டதால் விழும் உயிர்களைப் பிடிப்பது தான் என் வேலை (அப்ப அவ்ளோ ஒல்லி நான்) துப்பாக்கியை கையாள்வதெல்லாம் அப்போ கேள்வி ஞானம் தான்.. இப்போ நான் என்னை ஃப்ரூப் பண்ணியாகணும் நான்ஸி என்னைக் காதலிக்க வேண்டும்.

ஆஸ்டினும் மகேஷும் சொல்லிக் கொடுத்த... துப்பாக்கியை கையாண்ட விதங்களை நெஞ்சில் ப்ளாஷ் பேக்கில் நினைத்து துப்பாக்கியை எடுத்துப் பார்த்தேன்.. ரைபிளின் முனையில் எழும்பி இருக்கும் i போன்ற குறியை துப்பாக்கியில் குண்டை லோடு செய்து லாக் செய்யும் இடத்தில் இருக்கும் v யில் நிறுத்தி...

இதை எந்த மிருகத்தை குறிபார்க்கிறோமோ அதன் உடலில் குறி வைக்க வேண்டும்... ஆஸ்டின் என் காதுகளில் சொன்னான்.. அதாவது v வழியாக i அதன் வழியாக சுட வேண்டிய மிருகத்தின் உடல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும்.. இப்போ மகேஷ் சொன்னான்.. இந்தப் பாடம் நினைவுக்கு வர அதையே மனக்கண்முன் நிறுத்தி குறி வைத்தேன்.

புதரில் மறைந்திருந்த செம்போத்தின் சிவப்பு வெல்வெட் சிறகுகளில் கண் பதிந்தது.. V வழியாக i  அதன் வழியாக சிவப்பு சிறகு.. மூன்றும் ஒரே நேர்க்கோடு.. என்ன அசைக்காமல் சுடவேண்டும் இந்த இடத்தில் நான்ஸி எனக்கு தேவையில்லாத கிளுகிளுப்பை தரவா வேண்டும்..? நான் டிரிக்கரை சுண்டும் வினாடியில் வந்து என் தோளில் சாய்ந்தாள்... டுமீல்...

அய்யோ.. என்ற குரல் டூமிலுக்கு பதிலாக எதிரொலித்தது...!

வரும்...

No comments:

Post a Comment